ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 33

ராமருக்கும் கும்பகர்ணனுக்கும் நீண்ட நேரம் யுத்தம் நடந்தது. ராமரின் அம்புகளால் கும்பகர்ணனின் உடலை துளைக்க முடியவில்லை, இதனை உணர்ந்த ராமர் கூர்மையான அம்புகளால் கும்பகர்ணனின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமாக வெட்ட ஆரம்பித்தார். முதலில் கைகளை வெட்டிய ராமர் பின்பு கால்களை வெட்டி இறுதியாக தலையை வெட்டினார். ராமரின் அம்பின் வேகத்தில் கும்பகர்ணனின் தலை அம்புடன் பரந்து சென்று இலங்கை நகரத்திற்குள் ஒரு மலை விழுவதைப் போல் விழுந்தது. வானரப் படைகளை திணறடித்துக் கொண்டிருந்த கும்பகர்ணன் இறந்துவிட்டான். இதனைக் கண்ட ராட்சச படைகள் அலறியடித்துக் கொண்டு இலங்கை நகரத்திற்குள் ஓடினார்கள். வானர சேனைகள் ஆர்ப்பரித்து கோசங்கள் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்கள்.

ராமர் கும்பகர்ணனை அழித்துவிட்டார் என்ற செய்தியை கேட்ட ராவணனுக்கு தன் உயிர் செல்வதைப் போல் உணர்ந்து மயக்கமடைந்து விழுந்தான். சிறிது நேரம் கழித்து விழித்த ராவணன் கும்பகர்ணனை நினைத்து புலம்ப தொடங்கினான். யாராலும் வெற்றி பெற முடியாத உன்னை ராமர் எப்படி வெற்றி கொண்டார். உன்னுடைய பலம் எங்கே போனது. நீ இறந்த செய்தியை கேட்ட தேவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்களே. நீ இல்லாத இந்த உலகத்தில் நான் வாழ்ந்து பயன் இல்லை. உன்னைக் கொன்ற ராமரை சித்ரவதை செய்து கொன்ற பிறகு நீ இருக்கும் இடத்திற்கு நானும் வருவேன் கும்பகர்ணா என்று புலம்பினான் ராவணன். ஆரம்பத்தில் விபீஷணன் பேச்சை கேட்டிருக்கலாமோ அகங்காரத்தினால் அவசரப்பட்டு விட்டோமோ என்று சபையில் அனைவரின் முன்னிலையில் தனது புலம்பலை கொட்டித் தீர்த்தான் ராவணன். இதனைக் கேட்ட திரிசரன் என்ற ராட்சசன் இப்படி புலம்புவதில் எந்த பயனும் இல்லை. பிரம்மாவினால் கொடுக்கப்பட்ட சக்தியும் ஆயுதங்களும் நம்மை காக்கும் கவசங்களும் இருக்க ஏன் வருத்தப் படுகிறீர்கள் என்று ராவணனுக்கு தைரியம் சொல்லி தேற்றினார்கள். ஆனாலும் ராவணன் புலம்பியபடியே இருந்தான். இதனை கண்ட திரிசரன் நாராந்தகன் தேவந்தகன் அதிகாயன் என்ற நான்கு ராட்சசர்களும் ஒன்றாக யுத்தத்திற்கு செல்ல முடிவு செய்தார்கள். ராவணனிடம் சென்ற நால்வரும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து யுத்தம் செய்தால் எத்தனை வலிமையுடைய வீரனாக இருந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று உங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் நால்வரும் ஒன்றாக யுத்தத்திற்கு செல்ல அனுமதி கொடுங்கள் என்று ராவணனிடம் கேட்டுக் கொண்டார்கள். இதனைக் கேட்ட ராவணன் சிறிது ஆறுதல் அடைந்து அனுமதி கொடுத்தான்.

ராம லட்சுமணர்களை எங்களது அஸ்திரத்தினாலும் வலிமையினாலும் அழித்து விட்டு நாங்கள் உங்களை வந்து பார்க்கிறோம் என்று நால்வரும் அவர்களுடைய படைகளுடன் யுத்தகளத்திற்கு சென்றார்கள். நால்வரும் ஒன்றாக செல்வதால் இம்முறை வெற்றி அடைவோம் ராம லட்சுமணர்கள் அழிவார்கள் என்று ராவணன் நம்பினான். யுத்ததிற்கு வந்த நால்வரும் கடுமையாக போரிட்டு வானர வீரர்களை திணறடித்தார்கள். நால்வரும் பல வானர வீர்ர்களை கொன்று குவித்து தங்கள் வலிமையை காட்டினார்கள். அவர்களை லட்சுமணனும் சுக்ரீவனும் அனுமனும் எதிர்த்து யுத்தம் செய்தார்கள். இறுதியில் நாராந்தகனை சுக்ரீவன் கொன்றான். திரிசரனேயும் தேவந்தகனேயும் அனுமன் கொன்றார். அதிகாயனை லட்சுமணன் கொன்றான். நால்வரும் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை ராவணனுக்கு தெரிவித்தார்கள். ராவணன் கவலையின் உச்சத்திற்கு சென்று தடுமாற ஆரம்பித்தான். இதுவரை நடந்த யுத்தத்தில் யாராலும் வெல்ல முடியாத வலிமையுடன் இருந்த சேனாதிபதிகளும் வீரர்களும் ஒவ்வொருவராக இறந்து கொண்டே வருகின்றார்கள் என்று ராமரைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான் ராவணன். இந்திரனுக்கு நிகரான இந்திரஜித் அனுப்பிய நாக பாணத்தையும் எப்படியோ அறுத்து விட்டார் இந்த ராமர். மிகவும் பராக்கிரமம் நிறைந்தவராக இருக்கிறார். இவரது வலிமை புரிந்து கொள்ள முடியாத விந்தையாக உள்ளது. ராமர் நாராயணனின் சொரூபமாக இருக்குமோ என்று ராவணன் எண்ணினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.