ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 1

ராமர் தலைமையில் லட்சுமணன் சுக்ரீவன் அனுமன் உட்பட அனைவரும் தென்திசை கடலை நோக்கி கிளம்பினார்கள். செல்லும் வழியில் இருக்கும் மக்களுக்கும் சிறு உயிர்களுக்கும் எந்த விதமான தொந்தரவும் தரக்கூடாது என்று ராமர் கட்டளையிட்டார். பத்து கோடி எண்ணிக்கையுடைய வானரப் படைகளை சதபலி என்ற வானரத் தலைவன் தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றான். வழி தெரிந்த வானரங்கள் வழிகாட்ட அவர்களை நோக்கி அனைவரும் சென்றார்கள். நீலனும் குமுதனும் முன் பகுதியில் சரியான பாதையில் செல்கிறோமா என்பதை உறுதிபடுத்திக் கொண்டே வந்தார்கள். பின் பகுதியில் எண்ணிக்கையில் இடங்காத கரடிகள் கூட்டம் ஜாம்பவான் தலைமையில் வந்தார்கள். ராமரையும் லட்சுமணனையும் மத்திய பாகத்தில் வானரங்கள் தூக்கிக்கொண்டு சென்றார்கள். சுக்ரீவன் உட்பட பெரிய வீரர்கள் ராமருடன் வந்தார்கள். வேகமாக மலைகளையும் காடுகளையும் தாண்டிச் சென்றார்கள். உணவும் தண்ணீரும் கிடைக்கும் வழியாக பார்த்துக் கொண்டே சென்றார்கள். வானரக்கூட்டம் வெற்றி பெருவோம் என்ற முழக்கத்தை கூச்சலிட்டுக் கொண்டே சென்ற சத்தம் எட்டு திசைகளிலும் எதிரோலித்தது. செல்லும் வழிகளில் எல்லாம் வானரக் கூட்டத்தினால் எழுந்த புழுதி வானத்தை மறைத்தது. ராம காரியமாக செல்வதால் எங்கும் யாரும் ஒய்வெடுக்கவில்லை. நிற்காமல் சென்று கொண்டே இருந்தார்கள். ராவணனை நானே கொல்வேன் நானே கொல்வேன் என்று வானர கூட்டம் பேசிக்கொண்டே சென்றதை பார்த்த ராமர் உற்சாகமடைந்து லட்சுமணனிடம் நாம் புறப்பட்டு விட்டோம் என்பதை சீதை அறிந்தால் தைரியம் அடைந்து மகிழ்ச்சி அடைவாள் என்றார்.

ராமர் கடற்கரையின் அருகில் இருக்கும் மகேந்திரகிரி மலையை பார்த்ததும் கடற்கரைக்கு வந்து விட்டோம் என்பதை உணர்ந்தார். மலைமீது ஏறி கடலை பார்த்தார். அனைத்து சேனைகளுடன் எப்படி இந்த கடலை தாண்டுவது என்று தீர்மானிக்க வேண்டும் அதுவரையில் அனைவரும் இங்கே ஒய்வெடுத்து தங்கலாம் என்று சுக்ரீவனுக்கு ராமர் உத்தரவிட்டார். சுக்ரீவனும் அவ்வாரே தனது படை வீரர்களுக்கு உத்தரவிட்டான். தங்கியிருக்கும் சேனைப் படைகளுக்கு எதிரிகளால் எந்த ஆபத்தும் வராத வகையில் நான்கு பக்கமும் பாதுகாப்பு செய்யப்பட்டது. அனைவருக்கும் அனைத்து விதமான சௌகர்யங்களும் இருக்கிறதா என்று ராமரும் லட்சுமணனும் பார்த்து திருப்தி அடைந்த பின் தனியாக சென்று அமர்ந்தார்கள். கடலை எப்படி தாண்டுவது என்பதை குறித்து சுக்ரீவன் ராமர் லட்சுமணனுடன் ஆலோசனை செய்தான்.

அனுமன் இலங்கையை எரித்து நாசம் செய்தது பற்றி விவாதிக்க ராவணன் தனது அரசவையை கூட்டி பேச ஆரம்பித்தான். இது வரையில் பகைவர்கள் யாரும் நமது நகரத்திற்குள் நுழைந்தது இல்லை. ராமனின் தூதுவனாக வந்த வானரம் சீதையை இரண்டு முறை பார்த்து பேசியிருக்கிறான். எனது மகன் உட்பட நமது பல வீரர்களை கொன்றிருக்கிறான். நகரத்தில் உள்ள அனைத்து மாட மாளிகைகளையும் எரித்து விட்டான். யாருக்கும் பயப்படாத நமது மக்களை பயத்தால் நடுங்கச் செய்து விட்டு இங்கிருந்து சென்றுவிட்டான். இத்துடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வராது. அந்த வானரம் தன்னுடைய கூட்டத்தை விரைவில் இங்கு அழைத்து வருவான். அப்போது இன்னும் பிரச்சனை வரும் அது பற்றி நாம் ஆலோசிக்க வேண்டும் என்று ராவணன் தலை குனிந்தபடியே பேசினான். ராமன் நமக்கு பகைவனாகி விட்டான். அவனை என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்ய வேண்டும். ராமன் மிகவும் பலமானவன். அவனது படையும் மிக பலமானது. அவர்கள் இலங்கையை தாக்குவது நிச்சயம் என்று தெரிந்து விட்டது. கடல் அரண் போல் நம்மை பாதுகாக்கிறது என்று எண்ணி நாம் சும்மா இருக்க முடியாது. இலங்கையை சுற்றி இருக்கும் கடலை எப்படியாவது தந்திரம் செய்து அவர்கள் தாண்டி இங்கு வந்து விடுவார்கள். நம்முடைய நகரத்தை எப்படி பாதுகாப்பது என்றும் நமது சேனைகளின் பலத்தை எப்படி அதிகரிக்கலாம் என்றும் நம் மக்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்றும் உங்களைடைய ஆலோசனைகளை சொல்லுங்கள் என்று ராவணன் அனைவரிடமும் பேசி முடித்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.