ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 26

ராம லட்சுமணர்கள் சாதாரண மானிடர்கள் என்று இது வரை எண்ணியிருந்த ராவணனுக்கு இப்போது அவர்களின் மேல் ஒரு பயம் வந்தது. அதனே வெளிக்காட்டிக் கொள்ளாமல் பிரஹஸ்தனிடம் பேச ஆரம்பித்தான் ராவணன். ராம லட்சுமணர்கள் சாதாரண மானிடர்கள் அவர்களுடன் வந்திருப்பது சாதாரண வானரங்கள் தானே என்று அவர்களை எதிர்த்து யுத்தம் செய்ய வேண்டாம் என்று எண்ணியிருந்தேன். எனவே அவர்களை நமது கோட்டைக்குள் நுழையாதவாறு பாதுகாத்தோம். அதனால் இப்போது பல ராட்சச வீர்ரகளை இழந்து விட்டோம். இனி நாமும் யுத்தம் செய்து நமது வலிமையை காட்ட வேண்டும். நான் இந்திரஜித் நிகும்பன் கும்பகர்ணன் பிரஹஸ்தனான நீயும் சேர்ந்து ஐவருமாக யுத்தத்திற்கு சென்றால் ராமரையும் லட்சுமணனையும் வானர வீரர்களையும் அழித்து நமது ராட்சச குலத்தின் பெருமையை நிலை நாட்ட வேண்டும். அதற்கான ஏற்பாட்டை உடனே செய்வாயாக என்று கட்டளையிட்ட ராவணன் உனக்கு இதில் ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதனை சொல் என்றான். அதற்கு பிரஹஸ்தன் அரசரே இது பற்றி அரசவையில் பல முறை விவாதித்து விட்டோம். ஆனால் சரியான முடிவுகளை எடுக்கவில்லை. தர்மம் தெரிந்தவர்கள் பெரியவர்கள் எதிர்காலத்தை பற்றி அறிந்தவர்கள் என அனைவரும் இந்த பிரச்சனைக்கு சொன்ன ஒரே தீர்வு மற்றும் அறிவுரை சீதையை திருப்பி அனுப்பி விட வேண்டும் என்பது தான். இதற்கு உடன்படாததால் விபீஷணனும் சென்று விட்டார். அனுபவசாலியான உங்கள் உறவினரான மால்யவான் முதியவரும் எச்சரிக்கை செய்துவிட்டு சென்று விட்டார்.

ராமரிடம் சீதையை திருப்பி அனுப்பி விடலாம் என்பது தான் என்னுடைய கருத்து. ஆனால் தாங்கள் எனக்கு நல்ல மதிப்பான பதவியை கொடுத்து மரியாதை செய்தும் பல பரிசுகளை கொடுத்தும் இனிய சொற்களாலும் என்னை கௌரவப்படுத்தி மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறீர்கள். எனவே தங்களுக்கு விருப்பமானதையே நான் செய்வேன். நம்முடைய ராட்சச குலத்தின் பெருமையை காப்பாற்றவும் தங்களுடைய பெருமையை காப்பாற்றவும் நானே இன்று எனது படைகளுடன் சென்று ராம லட்சுமணர்களுடன் யுத்தம் செய்கிறேன் என்று அங்கிருந்து பிரஹஸ்தன் கிளம்பி தன்னுடைய அனைத்து பிரிவு படைகளும் உடனடியாக வருமாறு உத்தரவிட்டான். சங்கு நாதம் பேரிமை முழங்க பிரஹஸ்தன் தன்னுடைய பெரும் படையுடன் யுத்தகளத்திற்கு கிளம்பினான். பிரஹஸ்தனுடைய ரதத்தை சுற்றி அவனுடைய ஆலோசகர்களான நராந்தன் கும்பஹனு மகாநாதன் ஸமுன்னதன் நால்வரும் பாதுகாப்பாக வந்தனர். அப்போது பிரஹஸ்தனுடைய தேர் கொடியின் மேல் அமர்ந்த கழுகு ஒன்று கொடியை கொத்தி உடைத்தது. யுத்த களத்தில் தேர் ஓட்டுவதில் சிறந்தவனான பிரஹஸ்தனின் சாரதி தன்னுடைய சவுக்கை தவர விட்டுக் கொண்டே இருந்தான். பிரஹஸ்தனை சுற்றி பல அபசகுனங்கள் நிகழ்ந்தது. மிகப்பெரிய படை ஒன்று தங்களை நோக்கி வருவதை அறிந்த வானர படை வீரர்கள் யுத்தத்திற்கு தயாரானார்கள்.

ராமர் விபீஷணனிடம் தோள் வலிமையுடன் மிகப்பெரிய உடலமைப்புடன் யுத்தம் செய்ய வந்து கொண்டிருப்பது யார் என்று கேட்டார். அதற்கு விபீஷணன் இவனது பெயர் பிரஹஸ்தன் ராவணனின் படைத்தலைவன். ராவணனிடம் இருக்கும் மொத்த ராட்சச படைகளில் மூன்றில் ஒரு பங்கு இவனது படைகள் இருக்கும். மிகவும் வலிமை உடைய இவன் மந்திர அஸ்திரங்களை நன்கு அறிந்தவன். இவனை வெற்றி பெற்றால் இலங்கையின் மூன்றில் ஒரு படைகளே வெற்றி பெற்றது போலாகும் என்றான் விபிஷணன். யுத்தம் ஆரம்பித்த்து. இரு படை வீரர்களுக்கும் கடுமையான சண்டை நடந்தது. பிரஹஸ்தனை நீலன் எதிர்த்தான். இருவருக்கும் கடுமையான சண்டை நடந்தது. இறுதியில் நீலன் பெரிய ஆச்சா மரத்தை பிடுங்கி பிரஹஸ்தன் மீது எறிந்தான். இதில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்ட பிரஹஸ்தன் அதிலிருந்து சுதாரிப்பதற்குள் நீலன் மிகப்பெரிய பாறையை அவன் மேல் போட்டான். பாறை பிரஹஸ்தனுடைய தலையை நசுக்கி அவனை கொன்றது. பிரஹஸ்தன் கொல்லப்பட்டதும் ராட்சச வீரர்கள் அலறி அடித்துக் கொண்டு திரும்பி ஓடினார்கள். நீலனை போற்றி வானர வீரர்கள் ஆர்ப்பரித்தார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.