ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 21

ராமர் அனுமனை கட்டியணைத்து பரவசப்படுத்தினார். ராமர் வந்தவர்களிடம் பேச ஆரம்பித்தார். சீதையை எங்கே கண்டீர்கள் எப்படி இருக்கிறாள் பார்த்தவற்றை விவரமாக சொல்லுங்கள் என்னால் பொறுக்க முடியவில்லை சீக்கிரம் என்று அவசரப்படுத்தினார் ராமர். ஜாம்பவான் அனுமனிடம் நடந்தவற்றை நீயை முழுமையாக சொல் என்றார். அனுமன் பேச ஆரம்பித்தார். நூறு யோசனை தூரத்தில் உள்ள இலங்கையில் உள்ள அசோக வனத்தில் ராட்சசிகள் சுற்றிலும் காவலுக்கு நிற்க சீதை ராமா ராமா என்று உச்சரித்தபடி இருக்கிறாள். கொடூர ராட்சசிகள் வார்த்தைகளால் சீதையை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். தரையில் படுத்து ஒளி இழந்து கவலை படர்ந்த முகத்துடன் துக்கத்துடன் இருக்கிறாள் சீதை என்று கடற்கரையில் கிளம்பியதில் ஆரம்பித்து இலங்கையை எரித்தது வரை அனைத்தையும் விவரமாக கூறினார். சீதை ராமருக்கு சொன்ன செய்தியை சொல்லி அவள் கொடுத்த சூடாமணியை ராமரிடம் கொடுத்தார் அனுமன். சீதையிடம் விரைவாக தங்களுடன் வருவேன் என்று சமாதானம் சொல்லி விட்டு வந்திருக்கிறேன் என்று சொல்லி முடித்தார் அனுமன்.

ராமர் சூடாமணியை பார்த்து மகிழச்சியில் பரவசமடைந்தார். சுக்ரீவனிடம் பேச ஆரம்பித்தார் ராமர். யாராலும் செய்ய முடியாத காரியத்தை அனுமன் செய்து முடித்திருக்கின்றான். சீதைக்கு ஆறுதல் சொல்லி அவளின் உயிரை காப்பாற்றி விட்டு வந்திருக்கின்றான். இங்கே அவள் உயிருடன் இருக்கிறாள் என்ற செய்தியை என்னிடம் சொல்லி என் உயிரை காப்பாற்றி இருக்கின்றான். இதற்கு பிரதிபலனாக அனுமனுக்கு நான் என்ன செய்து திருப்திப்படுத்த முடியும் என்று தெரியவில்லை என்று சொல்லி ஆனந்த கண்ணீர் விட்டார் ராமர். ராவணனையும் அவனது ராட்சச கூட்டத்தையும் அழிக்க கடலைத் தாண்டி செல்ல வேண்டும். இது ஒர் பெரும் காரியம். இந்த கடலை எப்படி தாண்டப் போகிறோம். உன்னுடைய சேனைகள் எப்படி கடலைத் தாண்டும் என்று கவலையில் மூழ்கினார் ராமர்.

ராமரின் கவலையை பார்த்த சுக்ரீவன் பேச ஆரம்பித்தார். நீங்கள் மனத்தளர்ச்சி அடையாதீர்கள். சோகத்தை மறந்து சத்ரியனுக்குரிய தைரியத்துடன் இருங்கள். உங்களுக்கு ஏன் சந்தேகம் எனது வலிமை மிக்க வீரர்கள் இருக்கிறார்கள். உங்களுக்காக மகிழ்ச்சியுடன் உயிரையும் கொடுக்க காத்திருக்கிறார்கள். மனக்கவலையை தள்ளி வைத்து விட்டு வானர வீரர்களின் சக்தியை வைத்து எப்படி கடலை தாண்டலாம் என்று உங்களின் நுண்ணறிவை பயன்படுத்தி ஆராய்ந்து சொல்லுங்கள். உங்கள் உத்தரவு எதுவாக இருந்தாலும் அதனை சிற்ப்பாக செய்து முடிக்கிறோம். உங்களையும் லட்சுமனணையும் கடலைத் தாண்டி இலங்கை கொண்டு போய் சேர்ப்பது எங்களுடைய காரியம் அதனை சிறப்பாக செய்து முடிப்போம். நீங்கள் இலங்கை சென்று ராவணனை வென்று சீதையுடன் திரும்பி வருவீர்கள் இதனை உறுதியாக நம்புங்கள் என்று ராமரை உற்சாகப்படுத்தினான் சுக்ரீவன்.

ராமர் அனுமனிடம் இலங்கையின் அமைப்பையும் அங்கு உள்ள பாதுகாப்பு அமைப்பையும் சொல்லுமாறு கேட்டார். அதற்கு அனுமன் கடலை தாண்டி செல்லும் வழி, இலங்கை நகரத்தின் அமைப்பு, ராவணின் கோட்டையை சுற்றி இருக்கும் அகழியின் பாதுகாப்பு அமைப்பு, மக்கள் ராவணனின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அவர்களின் செல்வம், அங்கு உள்ள ராட்சசர்களின் வலிமை, சேனைகளின் பலம், இலங்கையின் பாதுகாப்புக்கு நிற்கும் ராட்சசர்கள் மற்றும் இலங்கை எதிரிகள் எளிதில் நுழைய முடியாதபடி அரண் அமைத்து ராவணன் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான் என்று அனைத்தையும் அனுமன் விவரமாக ராமரிடம் கூறினார். இவ்வளவு பெரிய பாதுகாப்பு அரணை அழித்து உள்ளே செல்லும் வல்லமை பெற்ற அங்கதன் ஜாம்பவான் பனஸன் நீலன் நளன் போன்ற நிகரற்ற வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கடலைத் தாண்டி அங்கு செல்லும் வல்லமை பெற்றவர்கள். பெரும் வானர படையும் தயாராக இருக்கிறது. தாங்கள் உத்தவு கொடுங்கள் அனைத்தையும் அழித்து நாசம் செய்து விடுகிறோம் என்றார் அனுமன். ராமர் சுக்ரீவனுடன் ஆலோசித்து யுத்தத்தில் வெற்றி தரும் முகுர்த்தமான உத்தர பங்குனி நட்சத்திரத்தன்று கடற்கரை நோக்கி அனைவரும் புறப்பட முடிவு செய்தார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.