ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 12

அனுமன் அசோகவனத்தின் மதில் மேல் அமர்ந்து சிறிது நேரம் யோசித்தார். ராமனிடம் சென்று சீதை இருப்பிடம் பற்றிய செய்தியைச் சொல்லி அனைத்து வானர படைகளுடன் இலங்கைக்கு வரும் வரை சீதை சுகமாக இருக்க வேண்டும். சீதையை யாரும் துன்புறுத்தக் கூடாது இதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்தார். செல்வத்திலும் சுக போகத்திலும் இருக்கும் ராட்சசர்களிடம் சமாதான வழியில் பேசிக் கொண்டிருக்க முடியாது. ராவணன் எப்பொழுதும் போல் கர்வம் கொண்டவனாக தினந்தோறும் வந்து சீதையை துன்புறுத்துவான். ராவணனுக்கும் அவனுடைய ராட்சசர்கள் கூட்டத்திற்கும் பயத்தை உண்டாக்கி விட வேண்டும். அப்படி செய்தால் ராவணனும் ராட்சசிகளும் சீதையை எந்த விதத்திலும் துன்புறுத்த மாட்டார்கள். சீதையை கண்டு பயப்படுவார்கள். நான் இப்போது இங்கு வந்தது கூட ராவணனுக்கு தெரியாது. நாம் வந்து சென்ற அடையாளத்தை ஏற்படுத்தி விட்டு பயத்தை உண்டாக்கி விடலாம் என்று எண்ணினார். இந்த காரியத்தை சிறிது நேரத்தில் முடித்து விட்டு விரைவில் ராமரிருக்கும் இடம் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தார் அனுமன். உடனே தனது உருவத்தை பெரிய வடிவமாக்கி கொண்டார். அசோகவனத்தை நாசம் செய்ய ஆரம்பித்தார். மரங்களை வெட்டி வீசினார். கொடிகளை நாசம் செய்து குவியல் போன்று வைத்தார். அலங்காரங்கள் அனைத்தையும் உடைத்து எறிந்தார். மிக ரம்மியமான அழகுடன் இருந்த அசோகவனம் இப்போது தன் அழகை முற்றிலும் இழந்தது. அங்கே இருந்த மான்களும் பறவைகளும் பயந்து ஓடி அசோகவனத்தை விட்டு வெளியேறின. தூங்கிக் கொண்டிருந்த ராட்சசிகள் சத்தம் கேட்டு எழுந்தார்கள். என்ன நடக்கிறது என்று காரணம் தெரியாமல் திகைத்தார்கள். அனுமன் நந்தவனத்தை அழித்து விட்டு மதில் மேல் ஏறி அமர்ந்தார்.

அனுமன் தன் உடலை மேலும் பெரிதாக்கி ராட்சசிகளை நிலைகுலைய வைத்தார். அனுமனின் பெரிய உடலைக் கண்ட ராட்சசிகள் பயந்து நடுங்கினார்கள். ராவணனிடம் சொல்வதற்காக சில ராட்சசிகள் ஓடினார்கள். சீதையிடம் சென்ற சில ராட்சசிகள் அசோகவனத்தை அழித்து விட்டு கோட்டையின் மதில் சுவரில் ஒரு பெரிய வானரம் அமர்ந்திருக்கிறது. இந்த வானரம் இங்கு எப்படி வந்தது. உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்த வானரம் உன்னிடம் ஏதாவது பேசியதா மறைக்காமல் உள்ளபடி சொல் பயப்படாதே என்றார்கள். ராட்சசிகள் சொல்லும் பெரிய உருவம் அனுமனாக இருக்குமோ என்று யோசித்த சீதை பார்க்காமல் நாம் ஒன்றும் சொல்ல முடியாது இவர்கள் நம்மை ஏமாற்றுவதற்காக எதாவது சொன்னாலும் சொல்லலாம் என்று முடிவுக்கு வந்து ராட்சசிகளிடம் பேச ஆரம்பித்தாள். இந்த ராட்சசர்கள் உலகத்தில் நடப்பவைகள் எல்லாம் மாய ஜாலமாக இருக்கிறது. இங்கு இருக்கும் ராட்சசர்கள் எல்லாம் அவர்கள் விருப்பம் போல் தங்கள் உருவத்தை மாற்றிக் கொள்கிறார்கள். வந்திருப்பது உங்கள் ராட்சச இனத்தை சேர்ந்தவனாக இருக்கலாம் உங்கள் நகரத்தில் உள்ளவர்களை பற்றி உங்களுக்கு தான் தெரியும் எனக்கு ஒன்றும் தெரியாது என்றாள்.

அனுமன் ராட்சசர்கள் வரட்டும் அவர்களை ஒரு வழி செய்து விடலாம் என்று மதில் சுவற்றில் சுகமாக அமர்ந்திருந்தார். ராவணனிடம் சென்ற ராட்சசிகள் அசோகவனத்தை ஒரு பெரிய வானரம் அழித்து விட்டு ராட்சசிகளை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சீதையை சுற்றி இருக்கும் மரங்கள் கொடிகளை மட்டும் அந்த வானரம் ஒன்றும் செய்யவில்லை. சீதையிடம் அந்த வானரம் ஏதாவது தகவல் சொல்ல வந்திருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது. சீதையிடம் கேட்டுப் பார்த்தோம் அவர் எனக்கு தெரியது என்று சொல்லி விட்டார். அந்த வானரத்தை அழிக்க தக்க ஆட்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். தன் சுகபோகத்திற்காக உருவாக்கப்பட்ட அசோகவனம் அழிந்து விட்டது என்ற செய்தியை கேட்ட ராவணன் மிகவும் கோபம் கொண்டான். தனது ராட்சச வீரர்களிடம் அந்த வானரத்தை பிடித்துக் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான் ராவணன். இரும்பு உலக்கைகள் கத்தி மற்றும் பலவிதமான கொடுர ஆயுதங்களுடன் ராட்சச வீரர்கள் அனுமனை பிடிக்க அசோகவனத்திற்கு விரைந்து சென்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.