ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 13

அனுமன் அசோகவனத்து மதில் சுவற்றின் மேல் அமர்ந்திருப்பதை கண்ட ராட்சசர்கள் அனுமனை தாக்க முற்பட்டார்கள். அனுமன் ராட்சசர்களை கண்டதும் அசோகவனத்தின் வாயில் கதவில் இருந்த பெரிய இரும்பு கட்டையை பிடுங்கி எதிர்கொண்ட ராட்சசர்கள் அத்தனை பேரையும் எதிர்த்து யுத்தம் செய்தார். மரங்களை வேரோடு பிடுங்கி அவர்களின் மீது எறிந்தார். வந்திருந்த ராட்சசர்களை ஒருவர் பின் ஒருவராக அழித்து விட்டு மீண்டும் அசோகவனத்தின் மதில் சுவற்றின் மேல் அமர்ந்து கொண்டு வாழ்க ராமர் வாழ்க லட்சுமணன் வாழ்க சுக்ரீவன் என்று கர்ஜனை செய்த அனுமன் ராட்சசர்களை உங்களுக்கு அழிவு காலம் வந்து விட்டது. எங்களது பகைவர்களான உங்களை அழிக்க வந்திருக்கின்றேன். ஆயிரம் ராவணன்கள் இருந்தாலும் இப்போது என்னிடம் யுத்தம் செய்ய வரலாம். என்னை எதிர்க்க வரும் அனைவரையும் அழிக்க நான் தயாராக நிற்கின்றேன். உங்கள் நகரத்தை இப்பொழுது அழிக்க போகின்றேன் என்று இலங்கை நடுங்கும்படி அனுமன் கர்ஜித்தார். வானரத்தை பிடிக்கச் சென்ற ராட்சசர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை கேட்ட ராவணன் மிகுந்த கோபத்துடன் கொதித்து எழுந்து கர்ஜனை செய்ய ஆரம்பித்தான். ராட்சசர்களின் நிகரற்ற வீரனான பிரகஸ்தனுடைய மகனான ஜம்புமாலி என்பவனை அழைத்து அந்த வானரத்தின் கொட்டத்தை அடக்கிவிட்டு வா என்று உத்தரவிட்டான் ராவணன். ஜம்புமாலி ராட்சசன் கவசம் அணிந்து கொண்டு தனது கொடூரமான ஆயுதங்களுடன் அசோகவனம் கிளம்பினான்.

அனுமன் அருகில் இருக்கும் பெரிய மண்டபத்தின் மேலே ஏறி நின்றார். பெரிய உருவத்தில் இருந்த அனுமன் நிற்பது இலங்கையின் மேல் ஆகாயத்தில் ஒரு பொன்மயமான மலைத்தொடர் இருப்பது போல் இருந்தது. இலங்கையை அழிக்க வந்திருக்கிறேன் என்று கர்ஜனை செய்த அனுமனின் சத்தம் நகரத்தின் எட்டு திசைகளிலும் எதிரொலித்தது. அனுமனின் சத்தத்தை கேட்ட பல ராட்சசர்களின் உள்ளம் நடுங்கியது. அந்த பெரிய மண்டபத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த ராட்சசர்கள் அனுமன் மீது பல பயங்கர ஆயுதங்களை தூக்கி எறிந்து தாக்கினார்கள். அனுமன் மண்டபத்தின் தூணாக இருந்த தங்கத்தினால் செய்யப்பட்டு வைரத்தினால் அலங்கரிக்கப்பட்ட தூணை பிடுங்கி எதிர்த்த ராட்சசர்களின் மீது எறிந்தான். தூணை எடுத்ததும் பெரிய மண்டபம் கீழே இடிந்து விழுந்தது. தாக்கிய ராட்சசர்கள் அனைவரும் அழிந்தனர். இஷ்வாகு குலத்தின் ராஜ குமாரன் ராமரின் பகையை ராவணன் சம்பாரித்துக் கொண்டான். அதன் விளைவாக என்னைக் காட்டிலும் வலிமையான வானரர்கள் சுக்ரீவன் தலைமையில் வரப் போகின்றார்கள் உங்களையும் உங்கள் நகரத்தையும் அழிக்கப் போகின்றார்கள் என்று அனுமன் கர்ஜனை செய்தார். அனுமனின் சத்தத்தில் பல ராட்சசர்கள் ஓடி ஒளிந்தனர்

அனுமன் இருக்கும் இடத்திற்கு ஜம்புமாலி தனது படைகளோடு வந்து சேர்ந்தான். பெரிய கோவேறு கழுதைகள் பூட்டிய தேரில் ஆயுதங்களுடன் வந்திருக்கும் ராட்சசனை பார்த்த அனுமன் தாக்குதலுக்கு தயாரானார். தேரிலிருந்த ஜம்புமாலி அனுமன் மீது அம்புகளை எய்தான். ஒரு அம்பு அனுமனின் உடம்பை தாக்கி லேசாக ரத்தம் வந்தது இதனால் கோபமடைந்த அனுமன் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து ஜம்புமாலி மீது எறிந்தார். அதிலிருந்த ஜம்புமாலி மீண்டு வருவதற்குள் ஒரு பெரிய ஆச்சா மரத்தை வேரோடு பிடுங்கி தேரின் மீது வீசினார். தேர் இருந்த இடம் தெரியாமல் பொடிப் பொடியாய் போனது. உடன் வந்த ராட்சச வீரர்கள் அனைவரையும் அழித்தார் அனுமன். ஜம்புமாலியின் பெரிய ராட்சச உடம்பு நசுங்கி கை கால் தலை என அடையாளம் தெரியாமல் அனைத்தும் தரையோடு தரையாக பிண்டமானது. யுத்தத்தின் முடிவில் ஜம்புமாலி இறந்த செய்தி ராவணனுக்கு தெரிவிக்கப்பட்டது. வலிமையான வீரன் ஜம்புமாலி இறந்த செய்தியை கேட்ட ராவணன் திகைத்தான். வந்திருக்கும் வானரம் ஒரு மிருகம் போல் தெரியவில்லை. ஏதோ புதிதாக தெரிகின்றது. என்னுடைய பழைய பகைவர்களான தேவர்களின் சதியாக இருக்க வேண்டும் ஒரு புது வகையான பிராணியை உருவாக்கி இங்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்த வானரத்தை கட்டாயம் பிடித்து என் முன் கொண்டு வர வேண்டும் என்று தனது வலிமையான ராட்சச வீரர்களையும் அவர்களுக்கு துணையாக பெரும் சேனையையும் அனுப்பினான் ராவணன். பெரிய ராட்சசர்களின் கூட்டம் பெரும் படைகளாக அசோக வனம் நோக்கி சென்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.