ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 17

அனுமன் மேலும் பேச ஆரம்பித்தார். நான் வானர அரசன் சுக்ரீவனிடம் இருந்து வந்திருக்கும் தூதுவன் என்று சொல்லியும் என்னை கயிற்றால் கட்டி வைத்து எனக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்து பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தினால் நான் வீழ்ந்து விட்டேன் நான் கைதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். இந்திரஜித்துக்கு வரம் கொடுத்த பிரம்மா எனக்கும் சிரஞ்சீவி என்ற வரத்தை கொடுத்திருக்கின்றார். பிரம்மாவின் வரத்திற்கு கட்டுப்பட்டு நான் இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தேன். இப்போது எனக்குரிய ஆசனத்தை நானே ஏற்படுத்திக் கொள்கிறேன் என்று அனுமன் தன்னுடைய வாலை பெரியாக்கி சுருட்டி ஆசனம் செய்து அதன் மேல் அமர்ந்து பேச ஆரம்பித்தார். தசரதரின் மூத்த குமாரன் ராமர் தனது தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற வனவாசம் மேற்கொண்டார். அப்போது ஒரு ராட்சசன் வஞ்சகமாக ஏமாற்றி அவரது மனைவி சீதையை தர்மத்திற்கு விரோதமாக தூக்கிச் சென்று விட்டான். ராமர் சீதையை தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சுக்ரீவனிடம் நட்பு கொண்டார். யாராலும் அழிக்க முடியாத வலிமை பொருந்திய வாலியை ராமர் வதம் செய்து சுக்ரீவனுக்கு அரச பதவியை பெற்று தந்தார். ராமரின் கட்டளைப்படி சுக்ரீவன் சீதையை தேட உலகம் முழுவதும் தனது வானர படைகளை அனுப்பி வைத்தார். இந்த இலங்கையில் சீதையை தேடி நான் வந்தேன். இங்கு சீதையை கண்டேன். நீங்கள் சீதையை அபகரித்து வந்தது தர்மத்துக்கு விரோதமான செயல் என்று உங்களுக்கு தெரியும். உங்களின் இந்த செயலால் ராமர் மற்றும் வானர கூட்டத்தின் பகையை சம்பாதித்துக் கொண்டீர்கள். உடனடியாக ராமரிடம் மன்னிப்பு கேட்டு சீதையை அவரிடம் ஒப்படைத்து சரணடைந்து விடுங்கள். இல்லையென்றால் ராமர் மற்றும் அவரது தம்பி லட்சுமனணின் அம்புகள் மற்றும் வானர கூட்டத்தினால் இந்த ராட்சச கூட்டம் மொத்தமும் அழிந்து போகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்றார் அனுமன்.

அனுமனின் பேச்சினால் கோபமடைந்த ராவணன் இந்த வானரத்தை கொன்றே விட வேண்டும் என்று முடிவு செய்தான். அவனது கண்கள் கோபத்தில் துடித்தது. அனுமன் மேலும் பேச ஆரம்பித்தார். புத்திமான்கள் தர்மத்துக்கு எதிராக செயல்பட்டு தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள். தங்களின் இந்த செயலால் இத்தனை நாட்கள் நீங்கள் செய்த தவங்கள் எல்லாம் அழிந்து போகும். உங்களுடைய தவ பலன்களின் வலிமை எல்லாம் ராமரின் முன்பு தோற்றுப் போகும். நீங்கள் பிழைக்க இப்போது ஒரு வழி மட்டுமே உள்ளது. ராமரை சரணடைவதை தவிர வேறு வழி இல்லை. சிந்தித்துப் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். ராம தூதுவனான எனது சொல்லை மதித்து நல்வழியில் சென்று பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி முடித்தார் அனுமன்.

அனுமனிடம் நிறுத்து உனது பேச்சை என்று கர்ஜனை செய்த ராவணன் இந்த வானரத்தை முதலில் கொல்லுங்கள் என்று கத்தினான். தூதுவனை கொல்வது தவறாகும். இதுவே ராஜ நீதி எனவே இந்த வானரத்தை கொல்ல வேண்டாம் என்று சபையில் இருந்த ராவணனின் தம்பி விபீஷணன் கூறினான். அதற்கு ராவணன் எனது மகன் அஷன் உட்பட நம்முடைய சேனாதிபதிகள் மற்றும் ராட்சச சேனைகள் பலரை இந்த வானரம் கொன்றிருக்கிறான். பாப காரியத்தை செய்த இந்த வானரத்தை கொல்வதில் தவறு ஒன்றும் இல்லை என்றான். அதற்கு விபிஷணன் இந்த வானரம் குற்றம் செய்தவனாக இருந்தாலும் அனைத்தும் பிறருடைய ஏவலினால் செய்திருக்கிறான். ஏவியவர்களை விட்டுவிட்டு தூதுவனாக வந்தவனை தண்டிப்பதில் எந்த பயனும் இல்லை. அந்த வானரத்தை அனுப்பியவர்களை தண்டிப்பதற்கு ஏற்ற வழியை தேடுங்கள். இந்த வானரத்தை உயிருடன் அனுப்பினால் மட்டுமே அவர்களிடம் சென்று சீதை இங்கிருக்கும் செய்தியை சொல்லுவான் இந்த வானரம். செய்தி கேட்டதும் அவர்கள் அனைவரும் நம்மை தாக்க இங்கே வருவார்கள். அவர்களை நம்முடைய பலத்தினால் தண்டிக்கலாம். இப்போது தண்டிக்க எண்ணினால் இந்த வானரத்தின் அங்கம் எதையாவது ஊனப்படுத்தி விடுங்கள் என்று சொல்லி முடித்தான் விபிஷணன். இந்த யோசனைக்கு ஒப்புக் கொண்ட ராவணன் வானரத்தின் லட்சண உறுப்பான வாலில் நெருப்பை வைத்து வெளியே துரத்தி விடுங்கள். வால் எறிந்து வால் இல்லாமல் அவலட்சணமாக இருக்கட்டும் என்று தனது சேவகர்களுக்கு ராவணன் உத்தரவிட்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.