ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 14

அனுமன் பிடிக்க வந்த ராட்சசர்களின் கூட்டத்தை ராவணனின் ஐந்து சேனாதிபதிகள் வழி நடத்திக் கொண்டு வந்தார்கள். அனுமனை பல வகையான ஆயுதங்கள் கொண்டு தாக்கினார்கள். ராட்சசர்களின் எந்த ஆயுதத்தாலும் வஜ்ராயுதம் போல் இருந்த அனுமனை கட்டுப்படுத்த முடியவில்லை. அனுமன் வழக்கம் போல் மரங்களை வேரோடு பிடுங்கி அவர்கள் மீது எறிந்தும் பெரிய பாறைகளை தூக்கி வீசியும் சிலரை கால்களால் மிதித்தும் கொன்றார். சேனாதிபதிகள் வந்த தேரின் மீது குதித்து தேரை பொடிப் பொடியாக்கினார். ஐந்து சேனாதிபதிகளும் இறந்தனர். அவர்களுடன் வந்திருந்த ராட்சசர்களில் உயிர் பிழைத்தவர்கள் பயந்து ஓடி வீட்டார்கள். அனுமன் மீண்டும் அசோகவனத்தின் மதில் சுவற்றின் மீது அமர்ந்து கொண்டார்.

அனுமனை பிடிக்கச் சென்ற ஐந்து சேனாதிபதிகளும் இறந்து விட்டனர் என்ற செய்தி ராவணனுக்கு சிறிது பயத்தை கொடுத்தது. ஒரு தனி வானரம் எப்படி இவ்வளவு பலமுடனும் பராக்கிரமத்துடனும் இருக்கின்றான். தலை சிறந்த சேனாதிபதிகளையும் வீரர்களையும் கொன்றது சாரணமான நிகழ்வு அல்ல. தேவர்கள் ஏதோ சூழ்ச்சி செய்திருக்கின்றார்கள் என்று ராவணன் கவலையுடன் இருந்தாலும் தன் கவலையை முகத்தில் காட்டாமல் சிரித்த முகத்துடன் அனுமனை பரிகாசம் செய்து சிரித்தான். தன் சபையில் இருப்பவர்களை சுற்றிப் பார்த்தான். ராவணனின் மகன் அஷன் மிக உற்சாகமாக எழுந்து நின்றான். அந்த வானரத்தை நான் தனியாக சென்று பிடித்து வருகின்றேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் என்று ராவணனிடம் கேட்டான். யுத்தத்திற்க்கு பயப்படாமல் தைரியமாக முன் நின்ற தன் வீர மகனைப் பார்த்து பெருமை கொண்ட ராவணன் அனுமனை பிடித்து வர அனுமதி கொடுத்தான். தேவர்களுக்கு சமமான வாலிப வீரனான அஷன் தான் தவம் செய்து பெற்ற தன்னுடைய எட்டு குதிரைகள் பூட்டிய தங்க ரதத்தில் ஏறி அசோக வனத்தை நோக்கி சென்றான். சாதாரண வானரத்துடனே போர் புரியப்போகின்றோம் சில கனத்தில் அந்த வானரத்தை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தான் அஷன். அவனுடன் மிகப்பெரிய ராட்சச படைகள் பின்னே சென்றது.

அனுமனின் பெரிய உருவத்தையும் இவ்வளவு பெரிய ராட்சச படைகளை கண்டும் பயமில்லாமல் நின்ற அனுமனின் கம்பீரத்தையும் கண்ட அஷன் தன்னுடைய வீரத்திற்கு சரி சமமான விரோதியுடனே யுத்தம் செய்ய போகின்றோம் என்று மகிழ்ந்த அஷன் அந்த வானரத்தை பிடிக்க சிறிது நேரமாகும் போலிருக்கிறதே என்று எண்ணினான். இருவருக்கும் இடையில் கடும் யுத்தம் நடந்தது. அஷன் அனுமனின் மீது எய்த அம்புகள் மேகங்களின் கூட்டம் போல் கிளம்பி மலை மேல் மழை பொழிவது போல இருந்தது. அனுமனுடைய வஜ்ரம் போன்ற உடம்பை அஷனின் அம்புகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆகாயத்தில் மேகங்களுக்கு நடுவில் பறப்பது போல் அம்புகளுக்கு இடையில் சென்ற அனுமன் அஷனை தாக்கினார். ராட்சச படைகளை பறந்து தாக்கி சிதறடித்தார். ராவணனின் குமாரனாகிய அஷனின் சாமர்த்தியம் வீரம் பொறுமை ஆகிவற்றை கண்ட அனுமன் இவ்வளவு சிறிய வயதில் பெரிய வீரனாக இருக்கின்றானே இவனை கொல்ல வேண்டுமா என்று வருத்தப்பட்டு விளையாட்டாக யுத்தம் செய்து நேரத்தை கடத்தினார். ராட்சசர்களுடைய பலம் பெருகிக் கொண்டே சென்றது. இறுதியில் அனுமன் அஷனை கொன்று விடலாம் என்று மனதை உறுதிப்படுத்திக் கொண்டு அஷனுடைய தேரின் மேல் குதித்தார். தேர் பொடிப்பொடியானது. குதிரைகள் இறந்தது. தனியாக தரையில் நின்ற அஷன் தன்னுடைய வில்லுடனும் கத்தியுடனும் ஆகாயத்தில் கிளம்பி அனுமனை தாக்கினான். இருவருக்கும் இடையிலான போர் ஆகாயத்தில் நடந்தது. அஷனுடைய எலும்புகளை உடைத்து உடலை நசுக்கி கொன்றார் அனுமன். அஷன் வானரத்தால் கொல்லப்பட்டான் என்ற செய்தி அறிந்ததும் ராவணன் இதயம் துடித்தது. கோபத்தில் கத்தினான் தன் உள்ளத்தை ஒரு நிலையில் வைத்துக்கொள்ள முடியாமல் இந்திரனுக்கு சமமான வீரனான இந்திரஜித்தை அழைத்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.