ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 16

அனுமன் மயக்கமடைந்தது போல் பாசாங்கு செய்கிறார். அப்படியே விட்டால் இந்த வானரம் திடீரென்று எழுந்து நம்மை தாக்கக் கூடும். அவரை உடனே கயிற்றால் கட்டி விடலாம் என்று ஒரு ராட்சசன் கூறினான். அருகில் இருந்த ராட்சசர்கள் அனைவரும் அமோதித்து ஒரு பெரிய கயிற்றை கொண்டு வந்து அனுமனை கட்டினார்கள். மந்திர பிரம்மாஸ்திரத்தினால் கட்டப்பட்டு இருப்பவர்களை தூலப்பொருளான கயிறு கொண்டு கட்டினால் பிரம்மாஸ்திரம் செயலற்றுப் போகும் என்பதை அறிந்திருந்த இந்திரஜித் வானரத்தை கயிரால் கட்டாதீர்கள் என்று கத்தினான். ராட்சசர்கள் வெற்றி முழக்கத்தில் போட்ட கூச்சலில் தூரத்தில் நின்றிருந்த இந்திரஜித் சொன்னது யார் காதிலும் விழவில்லை. ராட்சசர்கள் அனுமனை கட்டியதை தடுக்க முடியாமல் தவித்த இந்திரஜித் நம்முடைய பிரம்மாஸ்திரம் வீணாகப் போய் விட்டதே விரைவில் இந்த வானரம் எழுந்து யுத்தம் செய்ய வந்து விடுவான். மீண்டும் வானரத்தின் மீது பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்க முடியாதே என்று மிகவும் வருத்தப்பட்டான்.

அனுமன் தன்னை கட்டிய பிரம்மாஸ்திரம் அவிழ்ந்து போனதை உணர்ந்தார். சாதாரண கயிற்றினால் கட்டப்பட்டிருப்பதை பார்த்த அனுமன் தன் வலிமையால் ஒரு கனத்தில் இந்த கயிற்றை அறுத்து விடலாம். ஆனால் கயிற்றை அறுக்காமல் நாம் இப்படியே இருப்போம். இவர்கள் நம்மை ராவணனிடம் அழைத்துச் செல்வார்கள். அவனிடம் பேசுவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இதனை பயன்படுத்திக் கொண்டு ராவணனை சந்தித்து அவனை பயமுறுத்தி வைக்கலாம் என்று அனுமன் அமைதியாக இருந்தார். ராட்சசர்கள் தனது கைகளினால் அனுமனை அடித்தும் திட்டியும் பரிகாசம் செய்து கொண்டே ராவணனின் அரண்மனை வரை இழுத்துச் சென்றார்கள். ராவணனை பயமுறுத்தியே ஆக வேண்டும் என்று அனைத்தையும் அனுமன் பொறுத்துக் கொண்டார்.

அனுமனை ராவணன் முன்பு கொண்டு போய் நிறுத்தினார்கள். ராவணன் பட்டுப் பீதாம்பரமும் கண் கூசும் ஆபரணங்களுடன் ரத்தின கீரீடத்துடனும் அரசவையில் கம்பீரமாக ஒரு மலை போல் அமர்ந்திருந்தான். ராட்சசர்களின் இவ்வளவு நேரம் செய்த கொடுமைகளில் அமைதியாக இருந்த அனுமன் ராவணனை பார்த்ததும் சீதைக்கு அவன் செய்த கொடுமைகள் ஞாபகம் வந்தது பெருங்கோபம் கொண்டு சித்திக்க ஆரம்பித்தார் அனுமன். எழிலுடனும் பராக்கிரம சாலியாக இருக்கும் இந்த ராவணன் தர்மத்தில் இருந்து விலகாமல் இருந்து சத்தியத்தை கடைபிடித்திருந்தால் தேவலோகத்தில் இருப்பவர்கள் கூட இவனுக்கு ஈடாக மாட்டார்கள். ராவணன் தான் பெற்ற வரங்களையும் மேன்மையையும் தவறான காரியங்கள் செய்து அனைத்தையும் இழந்து விட்டானே என்று அவன் மீது பரிதாப்பட்டார் அனுமன். ராவணன் தன் மந்திரிகளிடம் யார் இந்த வானரம் இலங்கைக்குள் எதற்காக வந்தான் என்று விசாரியுங்கள் என்று உத்தரவிட்டான். மத்திரிகளில் ஒருவரான பிரஹஸ்தன் என்பவன் அனுமனிடம் வந்து வானரனே யார் நீ? எதற்காக இங்கே வந்தாய்? வானர வேடம் அணிந்து வந்திருக்கின்றாயா? உன்னை அனுப்பியது யார்? இந்திரனா இல்லை குபேரனா வேறு யாராவது உன்னை ஏவினார்களா? உண்மையை சொல்லி விட்டால் இங்கிருந்து நீ உயிரோடு தப்பிக்கலாம் மறைக்காலம் சொல் இல்லையென்றால் இங்கிருந்து உயிருடன் செல்ல முடியாது என்றான்.

அனுமன் பேச ஆரம்பித்தார். இந்திரனாவது குபேரனாவது யாரும் என்னை அனுப்பவில்லை. வேடம் அணிந்து கொண்டும் நான் இங்கு வரவில்லை. வானர அரசனான சுக்ரீவனின் தூதுவனாக நான் இங்கே வந்தேன். ராட்சச அரசனான ராவணனை பார்க்க விரும்பினேன். அதற்கு சரியான அனுமதி எனக்கு கிடைக்காது என்பதை அறிந்தேன். அதற்காக வனத்தை அழித்தேன். என்னை கொல்ல வந்தவர்களை நான் அழித்தேன். இப்போது உங்கள் முன்பு நின்கின்றேன். உங்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வானர அரசன் சுக்ரீவன் ராவணனை தன் சகோதரனாக பாவித்து உங்களின் நலத்தை விசாரிக்கச் சொன்னார் என்ற செய்தியை முதலில் உங்களிடம் சொல்லி விடுகின்றேன் என்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.