அட்சய திருதியை

காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூரணி தேவி தான் பிட்சாடணராய் வந்த ஈசனுக்கு உணவளித்தால் தானே அன்னத்திற்கு அதிபதி என்று சிறு கர்வம் கொண்டாள். அந்த கர்வத்தை போக்குவதற்கு சிவபெருமான் ஒரு சிவயோகியாக தோற்றம் கொண்டு அன்னபூரணியம் வந்து தாயே பசி என்றார்இதை கேட்ட அன்னபூரணி தேவி இலையிட்டு தன்னால் இயன்ற வரை உணவுகள் அனைத்தையும் பரிமாறினார். சிவ யோகியோ இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்கி உட்கொண்டுக் கொண்டே இருந்தார். அன்னபூரணி உருவாக்கிய உணவுகள் அனைத்தும் பூர்த்தியாக அன்னபூரணி தேவிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே காசியில் பிந்து மாதவன் என்ற திருக்கோலத்தில் சேவை சாதிகின்ற தன்னுடைய அண்ணனாகிய மகா விஷ்ணுவை பிரார்த்தித்து அழைத்தார். நடந்தவற்றை அறிந்து கொண்ட மகா விஷ்ணுவாகிய மாதவன் ஒரு அந்தணர் கோலத்தில் அன்னம் தயார் செய்யும் இடத்திற்கு சென்றார். அங்கு அன்னம் தயார் செய்த பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்து வைக்கபட்டிருந்தது. சுத்தம் செய்து வைக்கபட்டிருந்த பாத்திரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பருக்கை அன்னத்தை சிவார்ப்பணம் என்று சொல்லிக் கொண்டு தன் திருவாயால் உட்கொண்டார். உடனடியாக மீண்டும் பாத்திரத்தில் அன்ன வகைகள் அனைத்தும் தோன்றின.

சிவயோகிக்கு அருகில் இலையிட்டு மகா விஷ்ணுவை அமர்த்தி உணவு பறிமாறினார் அன்னபூரணி தேவி. மகா விஷ்ணு உணவருந்த அமர்ந்த சிறிது நேரத்தில் திருப்தி என்று கூறி எழுந்து விட்டார். தமக்கு அருகில் உண்பவர் எழுந்து விட்டால் தாமும் எழ வேண்டும் என்ற முறையை பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தினால் சிவயோகியும் தமக்கும் திருப்தி என்று எழுந்து விட்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அப்போது உண்மையை உணர்ந்த அன்னபூரணி தேவி அந்த சிவயோகியை வணங்க சிவ யோகி சிவனாக மாறி காட்சியளித்தார். உனக்கு ஏற்பட்ட கர்வம் கொண்ட எண்ணத்தை மாற்றுவதற்கே நாங்கள் இங்கு வந்தோம். எங்களது கட்டளையின் பேரிலேயே நீ அன்ன பூரணியாய் இங்கு உன் கடமைகளை செய்கிறாய் என்று கூறினார். உடனே மகா விஷ்ணு இன்றைய தினம் பாத்திரத்தில் இருந்த உணவு தேவைக்காக எவ்வாறு வளர்ந்ததோ அது போல எவர் ஒருவர் நல்ல செயலுக்காக நல்ல மனதுடன் காரியங்களை தொடங்குகிறார்களோ அது இனிதே வளரும் என்று ஆசிர்வதித்தார். அன்று முதல் சித்தரை மாதம் சுக்ல பக்ச திரிதியை நாம் அட்சய திரிதியை திருநாளாக கொண்டாடுகின்றோம்.

புரந்தரதாசர்

பாண்டுரங்கனின் பரம பக்தரான புரந்தரதாசர் ஒருமுறை கிருஷ்ணரை தரிசிப்பதற்காக நீண்ட பயணத்துக்குப் பின் பண்டரிபுரம் வந்து சேர்ந்தார். காலையில் கண்ணனை தரிசிக்கலாம் என்று எண்ணம் கொண்டு சத்திரம் ஒன்றில் தங்கினார். நடுஇரவில் புரந்தரதாசர் கண்விழித்தார். கால் வலி தாங்காமல் அப்பண்ணா ஒத்தடம் கொடுக்க வெந்நீர் கொண்டு வா என்று சீடனை அழைத்தார். பலமுறை கூவியழைத்த பிறகே சீடன் அப்பண்ணா ஒரு பாத்திரத்தில் சுடச்சுட வெந்நீர் கொண்டு வந்தான். தாமதமாக வந்த சீடன் மீது கோபம் கொண்டு வெந்நீர்ப் பாத்திரத்தை வாங்கிய புரந்தரதாசர் வெந்நீரை அப்படியே அப்பண்ணாவின் முகத்தில் வீசிவிட்டார். அப்பண்ணா ஒன்றுடம் சொல்லாமல் படுக்கச் சென்று விட்டார். பின்பு தமது செயலைக் குறித்து வருந்தினார். நிம்மதியாகத் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்தார். பொழுது விடிந்தது. அப்பண்ணாவை படுத்திருக்கும் இடத்திற்குஞ் சென்று நள்ளிரவில் தான் நடந்து கொண்ட விதத்துக்காக வருத்தம் தெரிவித்தார். அப்பண்ணா ஆச்சரியமாகி நான் இரவு முழுவதும் கண்விழிக்கவே இல்லையே என்றார். புரந்தரதாசர் குழம்பினார். நீராடி விட்டுப் பாண்டுரங்கனைத் தரிசிக்கப் போனார். அங்கே பரபரப்பும் சலசலப்புமாக இருந்தது. விசாரித்ததில் கொதிக்கும் வெந்நீரை முகத்தில் கொட்டியது போல பாண்டுரங்க விக்கிரகத்தின் முகம் முழுதும் கொப்புளங்களாக இருப்பது தெரியவந்தது.

கிருஷ்ணரே தனக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இரவு வந்திருந்தான் என்று உணர்ந்ததும் புரந்தர தாசர் நெகிழ்ந்து போனார். அப்பண்ணா வடிவில் வெந்நீர் கொண்டு வந்தது நீதான் என்று அறியாத பாவியாகிவிட்டேனே நான் கோபத்தை விட்டொழிக்க வேண்டுமென்பதற்காக நீ செய்த விளையாட்டா இது? உன் அழகுத் திருமுகத்தை நான் மறுபடி காண வேண்டும் என்று கண்ணீர் சிந்தினார். கிருஷ்ணரின் முகம் முன்பு போல் அழகானது. அந்த அழகில் மயங்கிய அவர் பாண்டுரங்கனின் மீது ஏகப்பட்ட துதிப்பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடினார். புரந்தரதாசர் கோவிலில் இருக்கும் கருட கம்பம் என்ற ஒரு தூணின் கீழ் அமர்ந்து பாடினார். இந்தத் தூணின் அடியில் அமர்ந்துதான் பாண்டுரங்கனின் மீது பாடல்கள் இயற்றினார் என்பதால் இதற்குப் புரந்தரதாசர் தூண் என்றும் பெயர். அந்த தூணுக்கு வெள்ளியால் காப்பு போடப்பட்டிருக்கிறது.

உருவ வழிபாடு

சுவாமி விவேகானந்தர் ஒரு முறை ஆல்வார் சமஸ்தானத்திற்குச் சென்றார். அங்கு இருந்த மகாராஜா மங்கள்சிங் விவேகானந்தரை அன்புடன் வரவேற்றார். மகாராஜாவுக்கு இறைவழிபாட்டில் பல சந்தேகங்கள் இருந்தன. குறிப்பாக அவர் விக்ரக வழிபாட்டை ஏற்கவில்லை. எனவே விவேகானந்தரிடம் கேள்வி கேட்டார். கல்லாலும் உலோகத்தாலும் ஆன இந்த விக்ரகங்களில் என்ன சக்தி இருக்கிறது என்று இவற்றை நாம் வணங்க வேண்டும் அறியாமல் இவற்றை வணங்குவது முட்டாள்தனம் அல்லவா என்று கேட்டார். விவேகானந்தர் மகாராஜவின் கீழ் இருக்கும் ஒரு திவானை அழைத்தார். அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த மகாராஜாவின் உருவப் படத்தை கழற்றிக் கொண்டு வருமாறு பணித்தார். திவானும் அவ்வாறே கழற்றிக் கொண்டு வந்தார். பின் திவானைப் பார்த்து இதன் மீது துப்புங்கள் என்றார். திவான் திகைத்துப் போனார். அய்யோ இது மகாராஜாவின் உருவப்படம் ஆயிற்றே எப்படி இதில் துப்புவது என்றார் அச்சத்துடன். சரி உங்களுக்கு அச்சமாக இருந்தால் வேண்டாம் வேறு யாராவது வந்து துப்புங்கள் என்றார் விவேகானந்தர். அனைவரும் பேயறைந்தது போல் விழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனரே அன்றி அதைச் செய்வதற்கு யாரும் முன் வரவில்லை. உடனே விவேகானந்தர் நான் என்ன உங்கள் மகாராஜாவின் முகத்தின் மீதா எச்சில் துப்பச் சொன்னேன். இந்த சாதாரண படத்தின் மீது தானே துப்பச் சொன்னேன். அதற்கு ஏன் இத்தனை தயக்கம் என்றார். யாரும் பதில் பேச முடியாமல் திகைத்துப் போய் விவேகானந்தர் முகத்தையும் மன்னரின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர்.

விவேகானந்தரிடம் திவான் மட்டும் தயக்கத்துடன் சுவாமி மன்னிக்க வேண்டும். இது இந்த நாட்டைக் காக்கின்ற மகாராஜாவின் உருவப்படம். இதில் துப்புவது என்பது அவர் மேலேயே துப்பி அவமானம் செய்வது போலாகும். அதை எப்படி எங்களால் செய்ய முடியும்? ஆகவே எங்களை மன்னிக்க வேண்டும் எங்களால் முடியாது என்று கூறினார். மன்னரோ சுவாமிகள் வேண்டுமென்றே தன்னை அவமானப்படுத்துகிறாரோ என்று எண்ணி புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். விவேகானந்தர் மகாராஜாவிடம் இந்த உருவப்படம் மகாராஜாவைப் போல இருக்கிறது. ஆனால் இது மகாராஜாவாகி விட முடியாது. ஆனாலும் இதை நீங்கள் மகாராஜாவாகவே தான் கருதுகிறீர்கள். அது போலத் தான் இறைவனும் இறைவன் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருந்தாலும் விக்ரகங்களிலும் கற்களிலும் அவரது தெய்வீக அம்சம் இருப்பதாகவே கருதி மக்கள் வழிபடுகிறார்கள். ஆராதனை செய்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கூறி விளக்கினார். மகாராஜா விக்ரக ‌வழிபாட்டின் பெருமையையும் அதன் உண்மையை உணர்ந்து சுவாமிகளின் மேன்மையையும் புரிந்து கொண்டார். தனது தவறான கேள்விக்காக தன்னை மன்னிக்குமாறு வேண்டி விவேகானந்தரின் ஆசியைப் பெற்றார்.

பண்டரீபுரம்

மகாராஷ்டிராவில் வசித்து வந்த ஜானுதேவர் சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகர். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவர். திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சால் அவர்களை அவமதிக்கத் துவங்கினான். மனம் நொந்த பெற்றோர் காசி யாத்திரைக்குப் புறப்பட்டனர். அவர்கள் மட்டும் எப்படிப் போகலாம் நாமும் காசி போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள் புண்டரீகனின் மனைவி. காசி போகும் குழுவில் அவர்களும் சேர்ந்தனர். பெற்றோர் நடந்து வர புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரையில் சவாரி செய்தனர். பெற்றோரை அனைவர் எதிரிலும் சில நேரங்களில் அவமரியாதை செய்தான் புண்டரீகர். காசி செல்லும் வழியில் யாத்ரீகர்கள் அனைவரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தின் அருகே இரவு ஓய்வெடுத்தார்கள். அதிகாலை நேரத்தில் விழித்த புண்டரீகர் நைந்து போன ஆடைகளில் அழுக்கும் அருவருப்பான தோற்றமுமாக அழகான யுவதிகள் பலர் குக்குட முனிவரின் ஆசிரமத்துக்குள் நுழைவதைப் பார்த்தான். அவர்கள் அனைவரும் ஆசிரமத்தை சுத்தம் செய்தனர். முனிவரின் உடைகளைத் துவைத்தனர். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வைத்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு முனிவரின் ஆசிரமத்திலிருந்து வெளிப்பட்ட போது அவர்கள் மிகச் சுத்தமான உடைகளைத் தரித்து தூய்மையின் அம்சங்களாக அழகாக மாறி இருந்தார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் புண்டரீகருக்கு புரியவில்லை. மறுநாளும் அப்பெண்கள் அழுக்காக ஆசிரமத்துக்குள் வந்ததைக் கவனித்தவர் வேலைகளை முடித்துவிட்டுத் தூய்மையாக வெளியே வந்தபோது அவர்களின் பாதங்களில் விழுந்து நீங்கள் யார் அழுக்காக வரும் நீங்கள் அழகாக மாறுவது எப்படி என்று கேட்டார்.

கங்கை யமுனை சரஸ்வதி போன்ற பல புண்ணிய நதிகள் நாங்கள். எங்களிடம் வருபவர்கள் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களிடம் இறக்கி வைத்து விட்டுத் தூய்மை பெறுகிறார்கள். தினமும் அந்தப் பாவங்களுடன் நாங்கள் இந்த ஆசிரமத்துக்கு வருகிறோம். தன் பெற்றோரை தெய்வங்களாக எண்ணிப் பார்த்துக்கொள்ளும் இந்த குக்குட முனிவருக்கு சேவை செய்வதால் எங்கள் பாவங்கள் கழுவப்பட்டு மீண்டும் தூய்மையடைந்து திரும்புகிறோம் என்று கூறிவிட்டு அவர்கள் மறைந்தார்கள். அக்கணமே புண்டரீகர் மனம் திருந்தினார். பெற்றோருக்குச் சேவை செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டார். புண்டரீகர் தன் தாய் தந்தையின் மீது வைத்துள்ள பக்தியை அறிந்த கிருஷ்ணன் துவாரகையிலிருந்து ருக்மணியுடன் புண்டரீகனைப் பார்க்க வந்தார். இவர்கள் வந்த சமயம் புண்டரீகர் தன் தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கிறார். வாசலில் வந்து நின்ற கிருஷ்ணர் நான் கிருஷ்ணர் ருக்மணியுடன் வந்திருக்கிறேன் என்றார். இதனை கேட்ட புண்டரீகர் அங்கே இருந்த இரண்டு செங்கற்களை எடுத்துப் போட்டு சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள் நான் என் கடமையை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்றார். பணிவிடை செய்துவிட்டு வர நேரம் ஆகியதால் கிருஷ்ணரும் ருக்மணியும் இடுப்பில் கைவைத்துக் கொண்டு நின்றார்கள். தனது பெற்றோர் சேவையை முடித்துக்கொண்டு புண்டரீகர் அவர்களை காண சென்றார். வந்திருப்பது கிருஷ்ணர் ருக்மிணி தேவி என்பதை அறிந்த புண்டரீகன் காத்திருக்க வைத்ததற்காக அவர்களின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார். கிருஷ்ணர் புன்னகைத்தார். உன் தாய் தந்தைக்கு நீ செய்யும் சேவையில் மனம் மகிழ்ந்தேன் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். பாண்டுரங்கனே நீ எழுந்தருளியுள்ள இத்தலம் புண்ணியத் தலமாக விளங்கவேண்டும். உன் பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீ இங்கே விட்டலனாக சாந்நித்தியம் கொள்ள வேண்டும் என்று வேண்டினார் புண்டரீகர். அதற்கு கிருஷ்ணர் இங்கே ஓடும் பீமா நதியில் நீராடி என்னை தரிசிப்பவர்கள் தங்களது துன்பம் எல்லாம் நீங்கி சர்வ மங்கலங்களையும் பெற்று வாழ்வார்கள் என்று அருளினார்.

புண்டரீபுரம் என்னும் அப்புண்ணிய இடத்தில் அற்புதமான ஆலயம் ஒன்று நதிக்கரையில் எழுப்பப்பட்டது. பின்னாளில் புண்டரீகபுரம் என்பது மருவி பண்டரீபுரம் ஆகிவிட்டது. பண்டரீபுரத்தில் பீமா நதி சந்திர பிறையைப் போல வளைந்து செல்வதால் அந்த நதி இங்கு சந்திரபாகா நதி என அழைக்கப்படுகிறது. சந்திரபாகா என்றால் பிறைச் சந்திரன் என்று பொருள். இந்தச் சந்திரபாகா நதிக்கரையில் கிருஷ்ணர் பாண்டுரங்கன் என்ற திருநாமத்துடன் தனது மனைவி ருக்மிணியுடன் எழுந்தருளியிருக்கிறார்.

ஸ்ரீரங்கம் வெள்ளையம்மாள்

750 ஆண்டுகளுக்கு முன் அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்திய படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் முகமதியப் படைகளின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானது. ஸ்ரீரங்கத்தையும் ஸ்ரீஅரங்கன் திருக்கோவிலையும் காக்க ஸ்ரீரங்க படைகளும் மக்களும் பல நாள் துலுக்கர்களுடன் போரிட்டனர். கோயிலுக்குள் புகுந்து விட்ட முகமதியப் படைகள் கண்ணில் பட்ட அனைவரையும் வெட்டி சாய்த்தது. ஏராளமான பொன் வைர ஆபரணங்களைக் கொள்ளையடித்தனர். மதிப்பு மிக்க பொக்கிஷங்களைத் தேடி அங்கேயே சில காலம் தங்கி விட்டார்கள். நடந்துவிட்ட திடீர் விபரீதங்களை எண்ணிக் கண்ணீர் வடித்தனர் தப்பி பிழைத்த ஸ்ரீரங்கத்து மக்கள். அரங்கன் கோயில் தேவதாசியான வெள்ளையம்மாள் கோயில் கொள்ளைக்குத் தலைமை தாங்கி வந்த முகமதியப் படைத் தளபதிக்கு ஆசை நாயகியாக இருக்க சம்மதித்து தளபதிக்கு செய்தி சொல்லி அனுப்பினாள். அன்று வழக்கத்தை விட தன்னைக் கூடுதலாக அலங்கரித்துக் கொண்டாள். உடன் கிளம்பிய தோழியை இருக்கச் சொல்லிவிட்டு இருட்டில் தனியாகச் சென்றாள். ஸ்ரீரங்கம் முழுவதும் முகமதியர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் வீதிகளில் உள்ளூர் மக்களின் நடமாட்டம் சுத்தமாக இல்லை. முகமதியப் படை வீரர்கள் கோயிலைக் கைப்பற்ற கொடூரமாக போரிட்ட களைப்பில் அதிகமாக மது அருந்தி மயங்கிக் கிடந்தனர். இதனால் பலரை எளிதில் தாண்டிப் போனாள் வெள்ளையம்மாள்.

ஸ்ரீரங்கம் கோயில் மண்டபப் பகுதியில் கூடாரம் அமைத்துத் தூங்கிக் கொண்டிருந்த தளபதியின் குடிலுக்குள் நுழைந்தாள். அந்த நேரத்தில் சுதாரித்துக்கொண்டு எழுந்த தளபதி யாரது என்றபடி தீப்பந்தத்தை உயர்த்தினான். வணக்கம் தளபதியாரே கும்பிட்டாள் வெள்ளையம்மாள். நீயா? இங்கே ஏன் வந்தாய்? தகவல் அனுப்பி இருந்தால் நானே உன் இல்லம் வந்திருப்பேனே என்று அவளருகே வந்தான். தளபதியே இது அரங்கனின் வீடு. இங்கே என் அருகே நீங்கள் வராதீர்கள். என் இல்லம் வாருங்கள். இப்போது ஒரு முக்கியமான சங்கதி கேள்விப்பட்டேன். அதைச் சொல்லத்தான் ஓடோடி வந்தேன் என்றாள். என்ன செய்தி என்றான் தளபதி. இங்கே நீங்கள் எதற்காக படையெடுத்து வந்தீர்கள். என்று கேட்டாள். எதிரிகளை வெற்றிகொண்டு செல்வங்களையும் பெண்களையும் மற்றும் அழகிகளையும் அள்ளிச் செல்ல வேண்டும் என்பது தான் எங்கள் படையெடுப்பின் ஒரே நோக்கம் என்றான் தளபதி. வெற்றி அடைந்து விட்டீர்கள். செல்வங்களை எடுத்துக் கொண்டீர்கள். ஆனாலும் ஏன் இங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டாள். விலை மதிக்க முடியாத செல்வங்களைப் புதையலாக ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதை எடுக்கத்தான் காத்திருக்கிறோம் என்றான் தளபதி. நானும் அதற்காகவே வந்தேன். ஐம்பொன் சிலைகளும் வைர மாலைகளும் முத்து மணிகளும் பாதுகாப்பாக எங்கே இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். அதனை சொல்ல வேண்டுமானால் ஒரு நிபந்தனை அதை நிறை வேற்றுவதாக நீங்கள் சத்தியம் செய்து கொடுத்தால் அந்த இடத்தைக் காட்டுவேன் என்றாள் வெள்ளையம்மாள். எங்கே இருக்கிறது என்று சொல். உன்னை என் நாட்டுக்கு அழைத்துச் சென்று பொன்னாலேயே அலங்கரிக்கிறேன் என்றான் தளபதி.

புதையலை நான் தனியாக சென்று பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் நீங்களும் நானும் மட்டும் முதலில் சென்று பார்ப்போம். அதன் பிறகுதான் நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்றாள். இவ்வளவு தானா சரி வா நீயும் நானும் மட்டும் போய்ப் பார்ப்போம். நீ ஆசைப்பட்ட நகைகளைநீயே எடுத்துக் கொள். மீதி இருப்பதை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்று சந்தோஷமாக சிரித்தான். உங்கள் ஆட்கள் யாருக்கும் தெரியாதபடி மறைந்து வாருங்கள் என்று அழைத்துச் சென்றாள். ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு கோபுரம் அருகே வந்து நின்றாள் வெள்ளையம்மாள். இங்கே தான் இருக்கிறது. ஆனால் மேலே போக வேண்டும் என்று அண்ணாந்து பார்த்தாள். சீக்கிரம் வா போகலாம் உடனே நான் புதையலைப் பார்க்க வேண்டும் என்று அவசரப்பட்டான். சில நிமிடங்களில் இருவரும் கோபுரத்தின் உச்சியை அடைந்தனர். இரவின் நிசப்தத்தை கலைத்துக் கொண்டு சலசலத்தபடி தூரத்தில் ஓடிய காவிரி ஆற்றின் இரைச்சல் கேட்டது. கோபுரத்தின் உச்சியில் இருந்தபடி இரவு நேர ஸ்ரீரங்கத்து அழகை ரசித்துப் பார்த்த தளபதி அற்புத தரிசனம் வெள்ளையம்மா இந்தக் கோபுரத்தின் உச்சியில் இப்போது தான் முதன் முறையாக ஏறி இருக்கிறேன். இந்த இடத்தில் இருந்து உங்கள் ஊரை ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. அத்தனை அழகாக மின்னுகிறது எங்கே இருக்கிறது பொக்கிஷங்கள் என்று கேட்டான். அதோ அங்கே பாருங்கள் என்று கை நீட்டி ஸ்ரீரங்கநாதர் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தை காட்டினாள். அவனும் ஆர்வமாய் பார்த்தான். கீழே தான் பொக்கிஷம் இருக்கிறதா பிறகு ஏன் மேலே அழைத்து வந்தாய் என்று சொல்லி வாய் மூடுவதற்குள் சிணுங்கலாய் பேசிக்கொண்டிருந்த வெள்ளையம்மாள் திடீரென்று புயலாய் மாறினாள். கோபுரத்தின் உச்சியில் இருந்து தளபதியை கீழே தள்ளி விட்டாள். தளபதி எழுப்பிய அபயக் குரல் கேட்டு முகமதியப் படையினர் கிழக்குக் கோபுரம் பகுதிக்கு ஓடி வந்தனர். அங்கே தங்களது படைத் தளபதி இறந்துக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கோபுரத்தின் உச்சியைப் பார்த்தனர். அங்கே வெள்ளையம்மாள் வெற்றி தேவதையைப் போன்ற பெருமிதத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பிடிக்க வீரர்கள் சிலர் கோபுரத்தின் மீது வேகமாக ஏறினர். அதைக் கண்டு கொஞ்சமும் அச்சம் அடையாமல் ஸ்ரீரங்கநாதர் புகழை வாய்விட்டு பாடியபடி குவிந்த கரத்துடன் நினைத்ததை சாதித்த திருப்தியுடன் கோபுரத்தின் மேலே இருந்து கீழே குதித்தாள். அவளுடைய உயிர் பிரிந்தது.

தகவல் கேள்விப்பட்டு ஸ்ரீரங்கத்து மக்கள் ஓடோடி வந்தனர். வெள்ளையம்மாளின் பக்தியைக் குறைவாக மதிப்பிட்டதை எண்ணி தங்களைத் தாங்களே நொந்து கொண்டனர். ஒரு பெண்ணுக்கு இருக்கும் துணிச்சல் தங்களுக்கு இல்லாமல் போனதே என்று ஆண்கள் வீரம் வரப் பெற்றனர். மேலும் ஸ்ரீரங்கத்தை காக்க வெளியிலிருந்து வந்த படைகளும் சேர்ந்து கொண்டன. தலைவன் இல்லாத படையை சிதறடித்தனர். கொள்ளை அடித்து வைத்திருந்த நகைகள் பொன் பெண்களை அப்படியே விட்டு உயிர் பிழைத்த வீரர்கள் தப்பிஓடினர். ஸ்ரீரங்கமாநகரையும் கோவிலையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக தன் உயிரைக் கொடுத்த வெள்ளையம்மாளின் நினைவாக அந்தக் கோபுரம் இன்னமும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. வெள்ளையம்மாளின் தியாக வரலாறு செவிவழிக் கதையாகவே பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அவள் குதித்து உயிர்விட்ட கிழக்கு கோபுரம் இப்போது வெள்ளைக் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. வெள்ளைக் கோபுரத்தில் இருந்து குதித்து உயிருக்குப் போராடிய வெள்ளையம்மாள் தனது உயிர் பிரியும் தறுவாயில் இனிவரும் காலங்களில் என்னைப் போன்ற தேவதாசிகளில் யாரேனும் மரணம் அடையும் போது கோயில் திருமடப் பள்ளியில் இருந்து நெருப்பும் திருக்கொட்டாரத்தில் இருந்து தீர்த்தம் மலர் மாலைகள் திருப்பரிவட்டம் ஆகியவற்றைக் கொடுத்தனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அந்த வழக்கம் வெகுகாலத்துக்கு நடைமுறையில் இருந்தது. 1953-ல் தாசிகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்த பிறகுதான் இந்த வழக்கம் நின்று போயிற்று.

அமைதி

ஒரு முனிவரின் ஆசிரமத்திற்கு அரசர் ஒருவர் வந்து தங்கினார். அன்று இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த ஆசிரமத்தை சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. நாய்கள் வெறித்தனமாகக் குரைத்து இரவின் அமைதியைக் கெடுத்தன.
அரசரால் தூங்கவே முடியவில்லை. அரசருக்கு கோபம் வந்தது. நாய்களின் சத்தத்திற்கு நடுவில் முனிவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பிய அரசர் இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது என்று புலம்பினார்.

முனிவர் பொறுமையுடன் பதில் கூறினார். அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த நாய்கள் உங்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ இங்கு கூடவில்லை. இங்கு அரசர் தங்கி இருப்பது நாய்களுக்கு தெரியாது. அதற்கான அறிவும் அந்த நாய்களுக்கு கிடையாது. அவை தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள் தூங்குகிற வேலையைப் பாருங்கள் என்றார். நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால் நான் எப்படி தூங்க முடியும் என்றார் அரசர்

அதற்கு முனிவர் நீங்கள் அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அது போல் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல. உங்கள் எதிர்ப்பு உணர்வு மட்டுமே. நீங்கள் சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள். இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை. நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவதும் இல்லை. நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான். நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன பார்த்தீர்களா ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால் குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான் என்றார் முனிவர். உதவாக்கரை யோசனை என்று மனதுக்குள் பழித்தபடி போனார் அரசர். ஆனால் காலையில் மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து முனிவரைச் சந்தித்தார் அரசர். ஆச்சரியம் எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன் என்றார் அரசர்.

சுப்ரமண்ய புஜங்கம்

ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம் என்ற பாடல் ஆதிசங்கரரால் முருகனைப் போற்றி வடமொழியில் இயற்றப்பட்டது. இது முப்பத்தியிரண்டு பாடல்களால் ஆனது. முடிவில் முப்பத்தி மூன்றாவது பாடலாக நூலின் பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதிசங்கரர் அத்வைதக் கொள்கையை நாடெங்கிலும் பரப்புவதற்காக வடக்கே அபிநவகுப்தர் என்ற ஒரு வேதாந்த வித்வானுடன் தர்க்கம் செய்தார். ஆதிசங்கரரின் வேத ஞானத்தைக் கண்டு அபிநவகுப்தர் பொறாமை கொண்டார். அதனால் அவர் ஆதிசங்கரர் மீது தீய ஏவல் செய்தார். ஏவலுக்கு உட்பட்ட ஆதிசங்கரர் காசநோயால் பீடிக்கப்பட்டு அவதியுற்றார். உடல் நலிவுற்ற நிலையில் ஒரு நாள் காலையில் திருகோகர்ணம் என்ற தலத்தில் தங்கியிருந்த போது அவருடைய கனவில் சிவபெருமான் தனது விடை மீது காட்சியளித்தார். சூரபத்மன் முதலிய அசுரர்களை வதம் செய்தபின் அந்த உக்கிரம் தணிய ஜெயந்திபுரத்தில் (திருச்செந்தூருக்கு ஜெயந்திபுரம் என்ற பெயரும் உண்டு) என் குமாரன் சண்முகன் இருக்கிறான். அவனை தரிசித்தால் உன் பிணி நீங்கும் என்று சொல்லி ஆதிசங்கரரின் கையில் திருநீறும் வழங்கினார். தூக்கத்திலிருந்து விழித்த ஆதிசங்கரர் தன் கையில் திருநீறு இருப்பதைக் கண்டு அதைத் தன் நெற்றியிலும் கைகளிலும் அணிந்து கொண்டார். உடனே தன் சித்தியினால் தன் உடலை விட்டு சூட்சுமமாக பிரிந்து ஜெயந்திபுரம் அடைந்து சண்முகப் பெருமானை தரிசித்தார். அந்தக் கணமே தன் உடல் சுகமடையத் தொடங்குவதை உணர்ந்தார். அச்சமயம் சண்முகநாதனின் கமல பாதங்களை ஒரு பெரிய நாகபாம்பு பூஜை செய்து கொண்டிருப்பதையும் கண்டார். நாகபாம்புக்கு வடமொழியில் புஜங்கம் என்று பெயர். நெளிந்து வளைந்து பயமின்றிச் செல்லும் நாகப்பாம்பின் கம்பீரமான நடையையே தன் மனதில் நிறுத்தி சுப்பிரமணிய புஜங்கம் எனற பாடல்களை ஆதிசங்கரர் பாடினார்.

ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம் வட மொழி இசை வடிவில்

ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம் தமிழாக்கம்

  1. தீராத இடர் தீர

என்றும் இளமை எழிலன் எனினும் இடர்மா மலைக்கே இடராவன்
துன்றும் கரிமா முகத்தோன் எனினும் சிம்ம முகச்சிவன் மகிழ்நேயன்
நன்றே நாடி இந்திரன் பிரமன் நாடித் தேடும் கணேசனெனும்
ஒன்றே எனக்கு சுபம் திருவும் உதவும் மங்கள மூர்த்தமதே.

  1. புலமை ஏற்படும்

சொல்லு மறியேன்சுதி அறியேன் சொற்கள் சுமக்கும் பொருளரியேன்
சொல்லைச் சொல்லும்விதி யறிதேன் தோய்ந்து சொல்ல நானறியேன்
எல்லை யிலாதோர் ஞான வொளி இதயத் தமர்ந்து அறுமுகமாய்
சொல்லை வெள்ள மெனப் பெருக்கும் தோற்றம் கண்டேன் சுடர்கண்டேன்.

  1. திருவடி தரிசனம் கிட்டும்

மயில்மீது ஆர்த்து உயர்வாக்கிற் பொதிந்து மனதை கவரும் உடலான்
பயில்வோர்கள் உள்ளக் குகைக் ஆகாயில் தங்கி பார்ப்பவர் தெய்வ மானான்
உயிராகும் மறையின் பொருளாகி நின்று உலகைப் புரக்கும் பெருமான்
கயிலாய மேவும் அரனாரின் செல்வக் கந்தன் பதம் பணிகுவாம்.

  1. பிறவிப் பிணி தீரும்

என்றன் சந்நிதி யடையும் மனிதர் எப்போ தெனினு மப்போதே
இந்தப் பிறவியின் சாகரக் கரையை எய்திக் களித்தோ ராகின்றார்
மந்தரு மறிய மறையை விளக்கிச் செந்தில் சாகரக் கரையதனில்
சுந்தரன் சக்தி பாலன் அமர்ந்தான் தூயன் பாதம் துதிக்கின்றேன்.

  1. போகாத துன்பம் போகும்

கடலில் தோன்றும் அலையும் அழிந்து காட்சி மறைவது போல்
திடமாய்ச் சந்நிதி சேவித் திடுவார் தீமை யழிந்து படும்
படமாய் மனதில் பதியச் செய்ய பரவைக் கரையில் குகன்
இடமே யமர்ந்தான் இதயமலர் மேல் ஏற்றித் தியானம் செய்கின்றேன்.

  1. கயிலை தரிசன பலன் கிட்டும்

என்றன் இருக்கை யறிந்தே யெவரும் இம்மலை ஏறி வரின்
எந்தைக் கயிலை மலை மீதேறும் இனிய பலன் கொள்வார்
கந்தன் இதனைச் சுட்டிக் காட்டிக் கந்த மான கிரிமேல்
சிந்தை மகிழ மூவிரு முகமாய்த் திருக்கொலு வமர்ந்தே யிருக்கட்டும்.

  1. கரையாத பாவம் கரையும்

கொடிதாம் பாவக் குறை நீக்கிடவே பெரிதாம் கடற் கரையில்
அடியார் தவமே நிறைவே தருமோர் கந்த மான கிரிமேல்
குடியாம் குகையில் ஒளியின் வடிவாய் குலவி விளங்கு குகன்
அடியார் மிடிமை கெடவே செய்வான் அவனைச் சரண மடைகின்றேன்.

  1. மனம் சாந்தியுறும்

மன்னும் இளமை யாயிரம் ஆதவர் மலரும் காந்தி யுடன்
நன்மலர்க் கொத்துச் சூழ்ந்து மறைக்கும் இரத்தின மஞ்சமதில்
கன்னிய ரறுவர் போற்றி வளர்த்த கந்தன் கொலு காணப்
பொன்மயக் குகையில் புகுந்த மாந்தர் சித்தம் சாந்தி யுறும்.

  1. புகலிடம் கிட்டும்

மென்மை மிகுந்த கமலத் திருவடி மேலும் அசையச் சிவப்பாகும்
மன்னும் அழகு மனதைக் கவர்ந்து மலரின் மேலே குடியேற்றும்
சின்னம் சிறிய வண்டாம் மனது சிக்கல் பலவும் விட்டேகி
பொன்னால் பாதத் தாமரைச் சார்ந்து பொலிவு பெற்றே வாழட்டும்.

  1. அக இருள் நீங்கும்

பொன்னெனத் திகழும் பூந்துகி லாடை பொலிவுடன் இடையில் ஒளி துள்ள
மின்னென மணிகள் மெல்லிசை ஒலிக்க மேகலை இடையைப் பொன்னாத்த
தன்னிக ரில்லா இடையதன் காந்தித் தன்னொளி ஒன்றை ஏவிவிடும்
நின்னெழில் இடையின் அணியா அழகை நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

  1. ஆபத்து விலகும்

வேடவேந்தன் திருமகள் வள்ளி விரிந்த நகில்கள் மீதயர்ந்த
சேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து திகழும் நின்றன் தடமார்பு
நாடும் அடியர் துன்பம் துடைத்து நலமே பொங்கச் சிவந்துவிடும்
கோடிய தாரகன் தன்னைக் கடிந்த குமரன் மார்பைப் போற்றுகிறேன்.

  1. பிரம்ம ஞானம் கிட்டும்

வேதன் தலையில் குட்டிய கை விண்ணவர் கோனை வாழ்த்தும் கை
வாதனை போக்கும் யமதண்ட மதாய் வையம் தாங்கும் விளையாட்டாய்
சாதனைக் கரியின் கைபற்றி தன்மத மடக்கும் நின்னுடைய
காதல் கரங்கள் பன்னி ரெண்டும் கந்தா என்னைக் காத்திடுக.

  1. தாபங்கள் நீங்கும்

சந்திரர் அறுவர் வான் வெளியில் சற்றும் களங்க மில்லாமல்
சுந்தரச் சுடர்தான் வீசி யெங்கும் தோற்றக் குறைவு யேதின்றி
யந்திர மென்னச் சுழன் றாங்கு என்றும் உதயத் தோற்றமொடு
கந்தா அவைதான் விளங்கினும் நின் கருணை முகத்திற் கெதிராமோ.

  1. அமுத லாபம் ஏற்படும்

அன்னம் அசைதல் போல் நின் புன்னகை அழகின் அதரம் அமுதூர
சின்னஞ்சிறிய கொவ்வைப் பழமாய்ச் சிவந்த உதடும் அழகூர
பன்னிரு கண்கள் வண்டாய் ஊர்ந்து பவனி கடைசி ஒளியாக
நின்திரு முகங்கள் ஆறும் தாமரை நிகர்த்தே நிங்கக் காண்கிறேன்.

  1. கிருபா கடக்ஷம் கிட்டும்

விண்ணிலும் விரிந்த கருணை யதால் வியத்தகு தயவை அருளுகின்ற
பன்னிரு விழிகள் செவி வரைக்கும் படர்ந்து இடையீ டேதின்றி
மின்னென அருளைப் பெய் வனவாய விளங்கு குகனே மனதிறங்கி
என்மீது கடைக் கண் வைத்தால் ஏது குறைதாந் உனக்கெய்தும்.

  1. இஷ்டசித்தி ஏற்படும்

மறைகள் ஆறு முறை யோதி வாழ்க மகனே என மகிழும்
இறைவன் உடலில் இருந்தே பின் எழுந்த கந்தா முத்தாடும்
துறையாய் விளங்கும் நின் சிரங்கள் திகழும் மகுடத் தோ டுவகை
நிறைவாய்க் காக்கும், சிரங்களையே நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

  1. சத்ருபயம் போகும்

இரத்தினத் தோள் வளை ஒளிகதுவ நல்முத்து மாலை யசைந்தாட
வரத்தில் உயர்ந்த நின் குண்டலங்கள் வளைந்த கன்னத்தே முத்தாட
திரிபுரத்தை எரித்த சிவக் குமரா செந்தில் தலைவா வேல்தாங்கி
மரகதப் பட்டை இடை யுடுத்தி வருக என்றன் கண்முன்னே.

  1. ஆனந்தம் ஏற்படும்

வருக குமரா அரு கெனவே மகிழ்ந்தே இறைவன் கர மேந்த
பெருகும் சக்திமடி யிருந்தே பெம்மான் சிவனின் கரம் தாவும்
முருகே பரமன் மகிழ்ந் தணைக்கும் முத்தே இளமை வடிவுடைய
ஒரு சேவகனே கந்தா நின் உபய மலர்த்தாள் தொழுகின்றேன்.

  1. கர்மவினை தீரும்

குமரா பரமன் மகிழ் பாலா குகனே கந்தா சேனாபதியே
சமரில் சக்தி வேல் கரத்தில் தாங்கி மயில் மீதூர்பவனே
குமரி வள்ளிக் காதலா எம் குறைகள் தீர்க்கும் வேலவனே
அமரில் தாரகன் தனை யழித்தாய் அடியன் என்னைக் காத்திடுக.

  1. திவ்ய தரிசனம் கிட்டும்

தயவே காட்டும் தன்மை யனே தங்கக் குகையில் வாழ்பவனே
மயங்கி ஐந்து புலன் ஒடுங்கி வாயில் கபமே கக்கிடவும்
பயந்து நடுங்கிப் பயண மெனப் பாரை விட்டுப் புறப்படவே
அயர்ந்து கிடக்கும் போதென் முன் ஆறுமுகா நீ தோன்றுகவே.

  1. எமபயம் தீரும்

காலப் படர்கள் சினம்கொண்டு கட்டு வெட்டு குத்தென்று
ஓலமிட்டே அதட்டி என்முன் உயிரைக் கவர வரும்போது
கோல மயில் மேல் புறப்பட்டு குமரா சக்தி வேலோடு
பாலன் என்முன் நீ வந்து பயமேன் என்னத் தோன்றுகவே.

22 அபயம் கிட்டும்

கருணை மிகுமோர் பெருங் கடலே கந்தா நின்னைத் தொழுகின்றேன்
அருமைமிகு நின் பொன்னொளி சேர் அடியில் நானும் விழுகின்றேன்
எருமைக் காலன் வரும் போதென் எந்தப் புலனும் பேசாது
அருகே வந்து காத்திட நீ அசட்டை செய்ய லாகாது.

  1. கவலை தீரும்

அண்ட மனைத்தும் வென் நங்கே ஆண்ட சூர பதுமனையும்
மண்ணுள் மண்ணாய்த் தாரகனை மாயன் சிம்ம முகத்தனையும்
தண்டித் தவனும் நீ யான்றோ தமியேன் மனதில் புகந்திங்கே
ஒண்டிக் கிடக்கும் கவலையெனும் ஒருவனக் கொல்லுத லாகாதோ?

24.25. மனநோய் போகும்

துன்பச் சுமையால் தவிக்கிறேன் சொல்ல முடியா தழுகின்றேன்
அன்பைச் சொரியும் தீனருக் கிங்கருளும் கருணைப் பெருவாழ்வே
உன்னை நாடித் தொழு வதால் ஊமை நானோர் மாற்றறியேன்
நின்னைத் தொழவுடு தடை செய்யும் நெஞ்சின் நோவைப் போக்கிடுவாய்.

  1. நோய்கள் தீர

கொடிய பிணிகள் அபஸ் மாரம் குஷ்டம் க்ஷயமும் மூலமொடு
விடியா மேகம் சுரம் பைத்யம் வியாதி குன்மமென நோய்கள்
கொடிய பிசாசைப் போன்ற வைகள் குமரா உன்நன் திருநீறு
மடித்த இலையை பார்த்த வுடன் மாயம் போலப் பறந்திடுமே.

  1. சராணாகதி பலன் கிட்டும்

கண்கள் முருகன் தனைக் காணக் காதும் புகழைக் கேட்கட்டும்
பண்ணை வாயிங் கார்க் கட்டும் பாதத்தை கரமும் பற்றட்டும்
எண்சாண் உடலும் குற்றேவல் எல்லாம் செய்து வாழட்டும்
கண்ணாம் முருகைப் புலன்க ளெலாம் கலந்து மகிழ்ந்து குலவட்டும்.

  1. வரம் தரும் வள்ளல்

முனிவர் பக்தர் மனிதர்கட்கே முன்னே வந்து வரமளிக்கும்
தனித் தனி தேவர் பற் பலர்கள் தாரணி யெங்கும் இருக்கின்றார்
மனிதரில் ஈன மனி தருக்கும் மனம்போல் வரமே நல்கிடவே
கனிவுடைக் கடவுள் கந்த னன்று கருணை வடிவைக் காண்கிலனே.

  1. குடும்பம் இன்புறும்

மக்கள் மனைவி சுற்றம் பசு மற்ற உறவினர் அனை வோரும்
இக்கணத் தென்னுடன் வசித்திடு வோர் யாவரும் ஒன்றே லட்சியமாய்
சிக்கெனப் பற்றி நின் திருவடியைச் சேவிக்கும் தன்மை தருவாய் நீ
குக்குடக் கொடி யோய் செந்தில் வாழ் குமரா எமக்குக் கதிநீயே.

  1. விஷம் நோய் போகும்

கொடிய மிருகம் கடும் பறவை கொட்டும் பூச்சி போலென்றன்
கடிய உடலில் தோன்றி வுடன் கட்டி வருத்தும் நோயினையே
நெடிய உன்றன் வேல் கொண்டு நேராய் பிளந்து தூளாக்கு
முடியாம் க்ரெளஞ்ச கிரி பிளந்த முருகா வருக முன் வருக.

  1. குற்றம் குறை தீரும்

பெற்ற குழந்தை பிழை பொறுக்கும் பெற்றோர் உலகில் உண்டன்றோ
உற்ற தேவர் தம் தலைவா ஒப்பில் சக்தி யுடையானே
நற்ற வத்தின் தந்தாய் நீ நாயேன் நாளும் செய் கின்ற
குற்றம் யாவும் பொறுத் தென்னைக் குறை யில்லாமல் காத்தருள்க.

  1. ஆனந்தப் பெருமிதம்

இனிமை காட்டும் மயிலுக்கும் இறைவன் ஊர்ந்த ஆட்டிற்கும்
தனி மெய் ஒளிகொள் வேலுக்கும் தாங்கும் சேவற் கொடியுடனே
இனிதாம் கடலின் கரையினிலே இலங்குச் செந்தில் நகருக்கும்
கனியும் நின்றன் அடிகட்கும் கந்தா வணக்கம் வணக்கமதே.

  1. வெற்றி கூறுவோம்

ஆனந்த மூர்த்திக்கு வெற்றி கூறுவோம் அளவற்ற சோதிக்கு வெற்றி கூறுவோம்
வான்புகழ் மூர்த்திக்கு வெற்றி கூறுவோம் வையக நாயகர்க்கு வெற்றி கூறுவோம்
தீனரின் காவலர்க்கு வெற்றி கூறுவோம் திகழ்முத்தி தருபவர்க்கு வெற்றி கூறுவோம்
மோ னசிவன் புதல் வர்க்கு வெற்றி கூறுவோம் முருகனுக்கு என்றென்றும் வெற்றி கூறுவோம்

  1. வாழ்த்து

எந்த மனிதன் பக்தி யுடன் எழிலார் புஜங்க விருத்த மதை
சிந்தை கனிந்து படித் திடிலோ செல்வம் கீர்த்தி ஆயுளுடன்
சுந்தர மனைவி புத்தி ரர்கள் சூழ ஆண்டு பல வாழ்ந்து
கந்தன் பதத்தை அடைந் திடுவார்.

விளக்கம்

எப்போதும் குழந்தையென இருந்தாலும் மலை போல் விக்னங்கள் வந்தாலும் வேரோடு அழிப்பான். எத்திக்கும் சிங்கமும் பூஜிக்கும் வேதம் தும்பிக்கை முகத்தான் தொழுதிடக் காப்பான். இந்த்ராதி தேவரும் எண்ணியது நடக்க வந்திங்கு தேடும் வல்லபை கணேசன் மங்கள மூர்த்தி மகிமை பிரதாபன் என்றென்றும் சுபமே தந்திடத் துதித்தேன். வெல்லும் சொல் அறியேன் விழி பொருள் அறியேன். உள்ளிடும் சந்தம் தொடுக்கவும் அறியேன். நல்லதோர் கவிதை நயங்களும் அறியேன். உள்ளம் தோய்ந்தே உருகிடவும் அறியேன். எல்லையில்லாததோர் ஒளி வந்து நெஞ்சின் உள்ளே புகுந்தது ஒராறு முகமும் சொல் என்று சொல்ல தொடுக்கின்றேன். பாட்டு வெள்ளமாய் பொங்கி பெருகிட மயிலேறி வந்தான் மகாபாக்யப் பொருளாய் உயிரில் கலந்தான். உள்ளம் கவர்ந்தான். அழகுக்கு இவன் தான் அணியாக நின்றான். முனிவர்கள் நெஞ்சில் குடிகொண்ட பெருமான்யாருக்கும் எளியன் வேதப் பொருளாய் பாரெல்லாம் காப்பான். ஈசன் குமாரன் ஈடேற்றி அக்கரை சேர்ப்பேனே என்று கூறுவான் போல கடலோரம் நின்றான் செந்தில் வேலன். சிவசக்தி பாலன் கும்பிடும் மலைபோல் வந்திடும் துயரை வந்தது போலவே திரும்பிடச் செய்வான். கண்கண்ட தெய்வம் என் நெஞ்சுக்குள் வந்தான். கந்தமாகெனமெனும் விந்தையூரிலே வந்து கால் வைப்பர் கைலாயம் காண்பரே என்று நீ சொல்வதாய் சொல்வதோர் சண்முகம் சந்தோஷம் பொங்கவே தந்திடு நின்னருள் செந்தூர் கடற்கரை வந்துற்ற போதே பஞ்சமா பாதகம் பறந்திடும் கந்தனை.

சிந்தையில் வந்தனை செய்திடும் மங்கள கந்த மாமலைக் குகை வந்தன காணவே விழியெலாம் போற்றிடும் அறுமுகன் குகையிலே கதிரவன் ஆயிரம் செவ்வொளி குவிந்ததோர் மலர்ச்சரம் சூழ்ந்ததோர் மாணிக்கக் கட்டிலில் கிருத்திகைப் பெண்டிரால் வளர்ந்தவன் தோன்றுவான் கந்தமா கோயிலில் அன்னங்கள் குலவிடும் சண்முகன் சேவடி சதங்கைகள் கொஞ்சிடும் அமிர்தம் வழிந்திடும் அரவிந்த மலர்ப்பதம் நெஞ்சமாம் அதில் தோய்ந் திளைப்பாடுக பொன் வண்ணப்பட்டாடை இடையிலே கட்டி கிண்கிணி சலங்கையோடு மேகலை பொருத்தி தங்கமயப் பட்டமும் அணிந்துன்னைப் பார்த்தால் கண் கொள்ளாக் காட்சி தான். செந்தில் குமாரா எந்தவொரு அலங்காரம் இல்லாத போதும் இடையழகு பேரழகு எங்குமில்லா அழகு எங்கும் நிறைந்தோர் ஆகாயம் போல் கந்தா உன் இடை தோன்றும் வேண்டியதை நல்கும் வனக்குறத்தி வள்ளி அவள் கரங்களிலே தோய்ந்து உனது திருமார்பில் குங்கும மாமுருகா மனம் சிவந்து அடியவர்க்கு வழங்க வரும் அழகா எது என விளக்கிடுக.

தாரகனின் பகைவா ஒருகரம் நான்முகனைச் சிறை வைத்து அடக்கும் ஒருகரம் விளையாட்டாய் உலகங்கள் படைக்கும். ஒரு கரம் போரிலே யானைகளை வீழ்த்தும். ஒரு கரம் இந்திரனின் பகைவர்களை வாட்டும். எஞ்சிய கரங்களெல்லாம் எங்களைக் காக்கும் அஞ்சதே என்று சொல்லி ஆறுதல் வழங்கும் செந்திலான் கரங்களுக்கு சிரந்தாழ்ந்த வணக்கம். சிங்கார வேலனுக்கு நெஞ்சார்ந்த வணக்கம். மழை பொழியும் சரத்கால நிலவொளியில் களங்கம் பிறை முதலில் வைத்ததொரு திலகமாய் விளங்கும் திலகமில்லை அழிவதெனும் கரையில்லா நிலவே கருநிலவு கூடுகின்ற அதிசயமாம் அழகு அன்னங்கள் அசைவது போல் புன்னகையைக் கண்டேன். அமுதூறும் அதரங்கள் கனிகோவை என்றேன் கண்கள் பனிரெண்டும் பொன்வண்டு கூட்டம். கமலமலர் வரிசைகளும் கந்தர் முகத் தோற்றம் காதுவரை நீண்டிருக்கும் கண் சுழலும் கோலம் ஆகாயம் என விரிந்து அழகு மழை பொழியும். ஏதேனும் ஓர் விழியால் ஏழை எனைப் பார்த்தால் என்ன குறை வந்து விடும் செந்தில் வடிவேலோய். நான் அளித்த பிள்ளை நீ எனைப் போல உள்ளாய் வாழ்க என மந்திரங்கள் ஆறுமுறை சொல்லி ஆறுதலை முகந்து சிவன் அகம் மகிழ்த குமராராஜன் என மணிமுடிகள் ஒளிவிடும் அழகா ஏழ் உலகமும் காப்பதற்கு ஆறுமுகம் தோன்ற காது நிறை குண்டலங்கள் கன்னங்கள் கொஞ்ச போர் வலை மணிமாலை ஆரங்கள் சூழ ஏகாம்பரம் இடையில் பேரொளியை வீச பார்வதித்தாய் தந்த ஆயுதத்தை ஏந்தி பவழ இதழ் முத்து நகை அழகு முகம் காக்க நீலமயில் ஏறிடும் கோல எழில் குமரா தேரினிலே நீ வருக சீர் அலைவாய் முருகா தாயாரின் மடியினிலே நீயிருக்கப் பார்த்து வாவாவா இங்கே வா என ஈசன் அழைக்க வேகமாய் நீ எழுந்து ஓடிவரக் கண்டு ஆலிங்கனம் செய்யும் அரன் மகனே சரணம்.

கோலாகலக் குமரா சிவன் புதல்வா கந்தா வேலாயுதா தலைவா மயில் ஏறும் மைந்தா சேனாபதி வள்ளி நாயகனே குகனே தாரகனே அழித்தவனே சரணம் தாள் சரணம் கதி கலங்கி கண் கலங்கி பொறிகளெல்லாம் ஒடுங்கிப்பற்றி எனையிழந்து உயிர் பிரியும் நேரம் நடுநடுங்கி கிடக்கின்ற என்முன்னே வந்து நானிருக்க பயமில்லை எனக்கூறும் முருகா வெட்டு இவனை கூறுக்கு வெந்தணலில் பொசுக்கு கட்டிவா என்றெல்லாம் எமதூதர் கூறும் துட்ட மொழி கேட்பதற்குள் தோன்றுக நீ மயில் மேல் வெற்றி வேல் காட்டி எந்தன் வேதனைகள் நீக்கு வாய் பேச முடியாது வருந்துகிற நேரம் தாய் போல் நீ வந்து தழுவிட வேண்டும் ஏது பிழை என்றாலும் மன்னிக்க வேண்டும். என்னருகே நீ இருந்து காப்பாற்ற வேண்டும். சூரபத்மன் தாரகன் சிங்கமுகன் இவரை கூர் வேலால் பிளந்தெரிந்த குமரா நீ வருக தீராத கவலைகள் தீர்த்திடவே வருக. யாரிடத்தில் போய் சொல்வேன் உனையன்றி துணை யார்? மனக் கவலையெனும் ரோகம் சுமையாக அழுத்தும் உனைப்பாடும் பணியினையும் இடைபுகுந்து தடுக்கும்.

அருட்பிச்சை கேட்கின்றேன் தருக உன்கையால் எழியோரின் புகலிடமே வருக நீ வள்ளாய் காக்கை வலி நீரிழிவு சயம் குஷ்டம் மூலம் ஓயாத வயிற்றுவலி உன்மத்தம் காய்ச்சல் தீராதரோகங்கள் பிசாசு பூதங்கள் உந்தன் நீரணிந்த உடனே காதவழி ஓடும் கண்ணிரண்டும் கந்தா உன் வடிவழகு காண்க காதிரண்டும் முருகா உன் பேர் சொல்லக் கேட்க எண்ணமெலாம் உன்நினைவு இவ்வுடலாம் உனக்கே எந்நாளும் உன் பணியில் உன் புகழை பேச பண்பாடும் பக்தருக்கே பலனளிப்பார் தேவர் கொண்டாடும் முனிவருக்கும் கொடுப்பதற்கு வருவாய் அண்டி நின்று முருகா என்றழுகின்றவர் யார் சண்டாழ அவரனெனும் சண்முகனே தருவாய் மனைவி மக்கள் உற்றார் உயிரினங்கள் மற்றோர் அனைவருமே உனக்காக சேவை செய்ய வேண்டும் எனை வருத்தும் புள் விலங்கு ஜந்துக்கள் நோய்கள் எது எனினும் உன் வேலால் பொடி படவே வேண்டும் குற்றமெல்லாம் பொருத்தென்னை மன்னிப்பாய். பெற்றோர் உற்றவனே நீயும் இவ்வுலகிற்கே தந்தை முற்றுமெனை மன்னித்து முழுமையாய் ஏற்க முருகா. உன்முகம் கொண்டு கருணையால் பார்க்க கந்தனை சார்ந்திருக்கும் கடலுக்கும் வணக்கம். செந்தூர்க்கு வணக்கம் சேவலுக்கு வணக்கம் முந்தி வரும் வேலுக்கும் மயிலுக்கும் வணக்கம் முருகா உன் வாகனமாம் மாட்டுக்கும் வணக்கம் எல்லா உயிர்களுக்கும் நீ தானே உறவு எல்லையிலா மொழி அதனின் பேர் தானே முருகு சொல்லிலே முடியாத புகழுடையோய் சரணம் சுகமான முத்தி நிலை அருள்வாயே சரணம் ஆனந்த கடலாக அமைந்தாயே சரணம் ஆனந்த வடிவாக திகழ்வாயே சரணம் ஆனந்த மயமான அற்புதனே சரணம் ஆனந்த மயமாக்கி ஆட்கொள்வாய் சரணம் நல்மனை நல்ல மக்கள் செல்வங்கள் நீண்ட ஆயுள் இல்லறச் செழிப்பு பெற்று எதிலுமே வெற்றி கொள்வார் சொல்லுக சுப்ரமண்யன் புஜங்கத்தை நாளும் நாளும்.

நம்பிக்கை

ஒர் ஊரில் ஒரு கூலி தொழிலாளியும் ஒரு செல்வந்தரும் வாழ்ந்து இருந்தனர். கூலி தொழிலாளி தினமும் தன் வீட்டின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தார். செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோஷத்துடனும் மன அமைதியுடனும் இருந்தார். பல தலைமுறைக்கு செல்வம் சேர்த்து வைத்திருந்த செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். ஆனாலும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார். தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ ஏதாவது செய்யலாமே என்றார். விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்து அவரின் நம்பிக்கைக்கு ஏற்ப நீங்களே உங்களுக்கு விருப்பப்பட்டதை செய்யுங்கள். நீங்கள் கீழே சென்று நான் நாரயணனிடமிருந்து வருகிறேன் என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள். அவர் தற்பொழுது நாராயணன் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று கேள்வி கேட்பார். அதற்கு நீங்கள் நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார் என்று பதில் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அப்படியே அந்த தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள் என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதர் முதலில் செல்வந்தர் வீட்டுக்கு சென்றார். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வெளியே வந்த செல்வந்தர் நாரதரிடம் நீங்கள் யார் என்று கேட்டார் நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொன்னார். அதற்கு அந்தச் செல்வந்தர் தற்போது நாராயணன் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று கேட்டார். நாரதர் நாராயணன் ஒர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார் என்றார். அதற்கு அந்த செல்வந்தர் அது எப்படி முடியும் இது என்ன நடக்கிற காரியமா என்று கேட்டு விட்டு இவர் ஏதோ உளருகிறார் என்று எண்ணி மேலும் ஏதும் பேசாமல் வீட்டிற்குள் சென்று விட்டார்.

நாரதர் அடுத்தது அந்த தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே உரையாடல் நடைபெற்றது. இறுதி பதில் அளித்த தொழிலாளி இதில் என்ன விந்தை இருக்கிறது ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர் பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர் அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா நாராயணனால் செய்ய முடியாத செயல் என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்று பதில் சொன்னார். நாரதர் தொழிலாளிக்கு தனது ஆசிகளை அளித்து விட்டு அங்கிருந்து கிளம்பி நாராயணனிடம் வந்து நடந்தத்தை சொன்னார்.

நாராயணன் நாரதரிடம் கடவுள் பக்தி என்பது மணிக்கணக்கில் பூஜை புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன் நீயே சரணம் என்று பற்றுவதே உண்மையான பக்தி. உண்மையான பக்திக்கு ஏற்ப ஆசிகள் சென்று கொண்டே இருக்கிறது அதுவே அந்த ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.

கிருபானந்த வாரியார் சொன்ன கற்பூர கதை

பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம் தேங்காய் கற்பூரம் இருந்தது.

தேங்காய் பேச ஆரம்பித்தது நம் மூவரில் நானே கெட்டியானவன் பெரியவனும்கூட என்றது. அடுத்து வாழைப்பழம் நமது மூவரில் நானே இளமையானவன் இனிமையானவன் என்று பெருமைப்பட்டுக் கொண்டது. கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது. பக்தன் சந்நிதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் ஒளிவிசி பிரகாசித்து சிறிது நேரத்தில் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது. பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால் ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம். இனிமையாக இருந்தாலும் வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம். கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால் இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.

கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால் இருக்கும் வரை ஒளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.

மகிழ்ச்சி

புத்தர் தனது சீடர்களை மக்களுக்கு தனது உபதேசங்களை ஊர் ஊராக சென்று சொல்லுமாறு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லவில்லை. காஷ்யபர் நேரடியாய் கெளதமரிடமே சென்று கேட்டார். நான் எந்த ஊருக்கு செல்ல வேண்டும். புத்தர் சிரித்தபடி சொன்னார். உனது விருப்பம் நீயே தேர்வு செய் என்றார். ஒரு ஊரின் பெயரை சொல்லி அங்கு தான் செல்ல விரும்புவதாக சொன்னார் காஷ்யபர். சீடனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் கேட்டார் புத்தர். அங்கே வாழும் மனிதர்கள் மிகவும் முரடர்கள். கொஞ்சம் கூட பக்தியோ தியான உணர்வோ இல்லாதவர்கள் அந்த பொல்லாதவர்களிம் போக விரும்புகிறாயா என்று கேட்டார் புத்தர். ஆமாம் அங்கு செல்லவே விரும்புகின்றேன் என்றார் காஷ்யபர். உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம் என்றார் புத்தர்.

அந்த ஊருக்குள் சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில் அவமானப்படுத்தினால் என்ன செய்வாய் என்று கேட்டார் புத்தர். மிகவும் மகிழ்ச்சியடைவேன் ஏனென்றால் அவர்கள் என்னை அடிக்கவில்லை என்று. அவமரியாதையோடு நிறுத்திக் கொண்டார்களே என்று இறைவனுக்கு நன்றி சொல்லி எனது பணியை ஆரம்பிப்பேன் என்றார்.

ஒருவேளை அவர்கள் உன்னை அடித்தால் என்ன செய்வாய் என்று கேட்டார் புத்தர். என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். வெறுமனே அடித்ததோடு நிறுத்திக் கொண்டார்களே என்று இறைவனுக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சியடைவேன் என்றார்.

ஒருவேளை உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய் என்று கேட்டார். மேலும் மகிழ்ச்சியடைவேன். மொத்தமாக இந்த வாழ்க்கையில் இருந்தே எனக்கு சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லையே என்றார் காஷியபர்.

நீ எங்கும் செல்ல முழுத்தகுதி பெற்றவன். நீ போய்வா காஷியபா என்று ஆசிர்வதித்து அனுப்பினார் புத்தர். எந்தச் சூழலையும் மகிழ்ச்சியாக அணுகக் கற்றுக் கொண்டால் அனைத்தையும் மகிழ்ச்சியாகவே காண முடியும்.