உண்மை ஞானம்

ஒரு குரு இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர் .அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டான். இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான் .குருவுயும் அவனிடம் தனிப்பட்ட அன்பும் கவனமும் செலுத்தினார். சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக பார்க்க ஆரம்பித்தான்.

தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை. பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான். குருவின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை. அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார். நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையேகூட எதிர்த்துப் பேசக் கூடும். வேறொரு வழியை யோசித்தார்.

மறுநாள் அவனை அழைத்தார். இன்று அதிகாலையில் பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் குரு ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை நமது அரசரால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப் படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் என்றார். கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்திவிட்டன. இதோ உடனே விரைந்து செய்து முடிக்கிறேன் குருவே என்று சொல்லிவிட்டு தச்சு ஆசாரி வீட்டுக்கு விரைந்தான்.

தச்சு ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான். தச்சு ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார். அவனும் ஆசிரியர் சொன்னபடியே, அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசரால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பலஅயல்நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் தச்சு ஆசாரி சூடாகி விட்டார். ஏன்டா இன்னிக்கு நீ பொழுது போக்க நான் தான் கிடைச்சேனா செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே நீ படிச்சவன்தானா என்றார்.

இந்தக் கேள்வி அவனை ஆத்திர மூட்டியது. அவரைப் பத்தி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள் என்றான். தச்சுஆசாரி அடேய் அறிவு கெட்டவனே என்னதான் படிச்சிருந்தாலும் விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது அதோட உயரம் மற்றும் அகலம் மட்டும்தான் என்றார். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா என்றார். எங்கோ பளீரென்று அடி விழுந்தது அவனுக்கு. மனித அறிவு இவ்வளவுதானா இதுக்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன் அவமானம் பொங்கியது .கூனிக் குறுகியபடியே குருவின் முன்னால் போய் நின்றான் .

குரு சிரித்துக் கொண்டே கேட்டார் என்னப்பா சவப்பெட்டி அடிச்சாச்சா அவன் பதில் சொன்னான் அடிச்சாச்சு என்னோட தலை கனத்துக்கு என்றான். குரு சொன்னார் என்னதான் படித்து பல பதக்கங்கள் பரிசுகள் வாங்கி இருந்தாலும் பெரிய பதவியில் இருந்தாலும் பெரிய பணக்காரராக இருந்தாலும் இது அழியப் போகிற சரீரந்தான். இதை உணர்ந்து பணிவுடனும் மனித நேயத்துடனும் நடப்பதே உண்மையான ஞானம் என்றார்.

கர்ம யோகம் என்றால் என்ன ? - வில்லங்க ...

மகாபாரதம் 8. கர்ண பருவம் பகுதி -1

பாண்டவர்களுக்கு வெற்றியடையும் அறிகுறி தென்பட்டது. கௌரவர்கள் பக்கம் சேதம் மிகப்பெரியதாக இருந்தது. தெய்வீக இயல்புடன் மண்ணுலகிற்கு வந்திருந்த பீஷ்மர் குருவான துரோணர் மற்றும் கௌரவ சகோதரர்கள் உற்றார் உறவினர்கள் வேந்தர்கள் பலர் துரியோதனனுக்காக உயிர் விட்டார்கள். துரியோதனனுடைய படையின் பெரும் பகுதி அழிந்தது. துரியோதனன் வெற்றி அடையும் அறிகுறி ஏதும் தென்படவில்லை. எப்படியாவது இந்த யுத்தத்தில் வெற்றியடைய வேண்டும் என்னும் பேராசை துரியோதனனை விட்டு அகலவில்லை அழிவு அதிகரிக்க அவனுடைய ஆசையும் அதிகரித்தது. பாண்டவர்களை எப்படியாவது வென்றாக வேண்டும் என்று துரியோதனன் விரும்பினான். அதற்குரிய வழிமுறைகளை பற்றி அன்றிரவு சகவீரர்களுடன் ஆலோசனை செய்தான். சபையினர் அவரவருக்கு தெரிந்த கருத்துக்களை பலவிதமாக தெரிவித்தார்கள்.

சபையினர் முன்னிலையில் அஸ்வத்தாமன் பேசினான். நம் பக்கமுள்ள மகாவீரர்கள் அழிந்து போகவில்லை. இங்கு கூடியுள்ள அனைவரும் சேனாதிபதி பொறுப்பை ஏற்க தகுதி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் முதன்மை வகிப்பவன் கர்ணன். பிறவியிலேயே அவன் பெற்றுள்ள பயிற்சியும் அதன்பிறகு இவன் பெற்றுள்ள பயிற்சியும் ஒன்று சேர்த்து கர்ணனை பீஷ்மருடனும் துரோணருடனும் ஒப்பிட்டு பேசலாம். பீஷ்மரும் துரோணரும் பாண்டவர்களிடம் ஓரளவு அன்பு வைத்திருந்தார்கள். கர்ணனோ பாண்டவர்களை அறவே வெறுப்பவன். துரியோதனுக்கு தன் உயிரையும் தர தயாராய் இருப்பவன். கர்ணனை சேனாதிபதியாக நியமிக்கலாம். கர்ணனை சேனாதிபதியாக நியமித்தால் இனி நடக்கும் யுத்தம் நமக்கு அனுகூலமாக இருக்கும் என்று தனது கருத்தை சொன்னான். அஸ்வத்தாமன் கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனை கேட்ட துரியோதனன் அகமகிழ்வு அடைந்தான். அஸ்வத்தாமன் சொற்படியே நடந்து கொள்ள சம்மதித்தான். கர்ணனிடம் சேனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டான். கர்ணனும் அதற்கு முழுமனதுடன் சம்மதித்தான். கர்ணன் கௌரவர்களின் மூன்றாவது சேனாதிபதியாக நியமிக்கப்பட்டான். கர்ணனால் தான் அதிவிரைவில் போட்டியில்லாத சக்கரவர்த்தி ஆகக்கூடும் என்று துரியோதனன் ஆசை கொண்டிருந்தான்.

பதினாறாம் நாள் யுத்தம் துவங்கியது. தன்னுடைய சேனேகளை கர்ணன் மகர வியூகத்தில் அமைத்தான். இரண்டு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட மகர வியூத்திற்கு முன்பு இப்பொழுது அமைக்கப்பட்ட மகர வியூகம் மிகச்சிறியதாக காணப்பட்டது. இதை எதிர்த்து பாண்டவர்களின் சேனை தலைவன் திருஷ்டத்யும்னன் தனது சேனேகளை சந்திர வியூகத்தில் அமைத்தான். பார்ப்பதற்கு அதுவும் சிறியதாக இருந்தது. இரண்டு பக்கங்களும் இருந்த சேனைகள் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டன. மோதுகின்ற முறையில் முதலில் ஒழுங்கு தென்பட்டது. வீரியம் உடையவனாக முன்னேறி வந்த கர்ணன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். அவனிடத்தில் ராஜரீதி தென்பட்டது. கர்ணனுடைய பங்கை பார்த்த கௌரவ கூட்டத்தினர் தாங்கள் பீஷ்மரையும் துரோணரையும் இழந்ததை மறந்து விட்டனர்.

சூர்தாசர் பக்தி

சூர்தாசர் பிறவியிலே கண்பார்வையை இழந்தவர். கண்பார்வை தெரியாததால் குடும்பம் இவரை ஒதுக்கி வைத்தது. ஒரு நாள் அவர் வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருந்தபோது தெரு வீதியில் கிருஷ்ண பஜனை பாடிக்கொண்டு சென்றனர் சிலர். அவர்கள் பாடிய பாடல்களை கேட்டு பரவசமடைந்த சூர்தாசர் அதில் ஒருவரை அழைத்து அய்யா நீங்கள் இப்பொழுது பாடிய பாடல்கள் யாரை பற்றியது மிகவும் நன்றாக இருக்கிறதே என்று கேட்டார். அதற்கு அவர் அய்யா இந்த பாடல்கள் கண்ணனை போற்றி பாடும் பாடல்கள் அவனது திருநாமம் சொல்லும் பாடல்கள் என்றார். உடனே சூர்தாசர் நீங்கள் போற்றி பாடிய கண்ணன் எப்படி இருப்பார் என்று கேட்டார். அதற்கு அவர் கண்ணன் சிறு குழந்தை கருநீல நிறம் உடையவன் அவன் புன்னகை முகத்தை பார்த்தால் பரவசம் அடையும் நம் மனது அவன் வசம் போய்விடும் கையில் புல்லாங்குழல் வைத்து இசையால் இந்த உலகத்தை இயங்க செய்பவன் என்று கண்ணனை வர்ணித்து விட்டு அவர் கிளம்பி விட்டார்.

இதை கேட்ட சூர்தாசர் கண்ணனை தன மனக்கண்ணில் பார்க்கலானார் அப்படியே கண்ணனை தன மனதில் நினைத்து பாடினார். பின் தன் வீட்டை விட்டு சென்று ஒரு ஆற்றங்கரையில் மரத்தின் அடியில் அமர்ந்து தினமும் கண்ணனின் வடிவத்தை எண்ணி பல பாடல்கள் பாடலானார். இவரது பாடல்களை கேட்க கூட்டம் கூடியது தினம் அவர் பாடல்களை கேட்கும் மக்கள் கூட்டம் அவர் பசியாற ஏதாவது உணவு பொருள் கொண்டு வந்து கொடுப்பர்கள். அதை அன்போடு ஏற்று கொண்டு சூர்தாசர் கண்ணனின் கீர்த்தனைகளை பாடி வந்தார். ஒரு நாள் துளசி தாசர் என்னும் ராம பக்தர் அங்கே விஜயம் செய்தார். இவர் கம்பரை போல் ராமாயணம் எழுதியவர். அதுவே துளசி ராமாயணம் என்று போற்றபட்டது. சூர்தாசர் இருக்கும் இடத்திற்கு வந்த துளசிதாசர் அவரது கீர்த்தனைகளை கேட்டு தன்னையே மறந்தார். பின் சூர்தாசர் பாடி முடிக்கும் வரை அமைதி காத்த துளசிதாசர் பின் சூர்தாசரை அழைத்து ஆற தழுவி இனி நாம் நண்பர்களா இருந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து கண்ணனின் கீர்த்தனைகளை பாடுவோம் என்றார். இதை சூர்தாசரும் ஏற்று கொண்டு துளசிதாசருடன் அவரது இல்லம் சென்றார்.

தினமும் கண்ணன் கோயிலுக்கு சென்று அவனது கீர்த்தனைகளை பாடி வந்தனர் இருவரும். ஒருநாள் இருவரும் கண்ணன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் எதிரில் ஊர் மக்கள் சில பேர் தலை தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவரை தடுத்து நிறுத்திய துளசிதாசர் அய்யா ஏன் இந்த பதட்ட ஓட்டம் ஏதும் ஆபத்தா என்று கேட்டார். ஓடி வந்தவர் ஆம் அய்யா எதிரே ஒரு மதம் பிடித்த யானை ஒன்று எல்லோரையும் துரத்தி வருகிறது அதன் பிடியில் அகப்பட்டால் மிதித்தே கொன்று விடும் அதான் எல்லோரும் ஓடுகிறோம் நீங்களும் தகுந்த பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டார். அப்போது சூர்தாசர் துளசிதாசரை பார்த்து அன்பரே யானை எப்படி இருக்கும் அதற்கு மதம் என்கிறாரே இவர் அப்படி என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு துளசிதாசர் யானை என்பது மிக பெரிய மிருகம் அதற்கு கோபம் என்கிற மதம் பிடித்துவிட்டால் பார்க்கும் யாவையும் மிதித்து அழித்தே விடும் அதான் எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள். நம்முள் கண்ணன் இருக்கும்போது நமக்கு என்ன கவலை என்று கூறி கண்ணனை நினைத்து தியானித்து நின்றார் துளசிதாசர்.

மதம் கொண்ட யானை அவர் அருகே வந்து நின்றது. தியானத்தில் இருந்த துளசி தாசரை பார்த்தது பின் அப்படியே பணிந்து வணங்கி அவரை ஆசிர்வதித்து விட்டு வந்த வழியே சாந்தமாக சென்றது. இதை வியப்புடன் பார்த்த மக்கள் துளசிதாசரை வணங்கி நின்றனர். துளசிதாசர் தியானம் கலைந்து கண் திறந்து பார்த்தார். மக்கள் எல்லோரும் அவரை வணங்கி நடந்ததை கூறினார். அதை கேட்ட துளசிதாசர் எல்லாம் கண்ணன் செயல் அவனை வணங்குங்கள் என்று கூறிவிட்டு சூர்தாசரை தேடினார். சூர்தாசர் ஒரு கடையின் மறைவில் இரண்டு கைகளையும் தன் நெஞ்சில் வைத்து நடுக்கத்துடன் நிற்பதை பார்த்தார் துளசிதாசர். இப்பொழுது துளசி தாசருக்கு ஒரு சந்தேகம் வந்தது நம்மை போலவே சூர்தாசரும் ஒரு கிருஷ்ண பக்தர் தானே பின் ஏன் யானையை நினைத்து அவர் பயப்படவேண்டும் என்று நினைத்து சூர்தாசரை அழைத்து வந்து தன் சந்தேகத்தை கேட்டார். அதற்கு சூர்தாசர் துளசிதாசரே நீங்கள் மிக பெரிய கிருஷ்ண பக்தர் உங்கள் மனதில் இருக்கும் கண்ணனோ இளமை தேகம் பொருந்தியவன். அதனால் நீங்கள் தியானத்தில் இருந்த போது வந்த யானையை கண்ணன் விரட்டி விடுவான். ஆனால் கண்ணில்லாத குருடனான எனக்கு என் மனக்கண்ணில் உள்ள கண்ணனோ சிறு குழந்தை வடிவானவன் இதுவரை அவனது சிரித்த முகத்தை வைத்தே பல பாடல்கள் பாடியுள்ளேன். யானை மிக பெரிய மிருகம் என்று நீங்கள் சொன்னதால் என் மனதில் உள்ள கண்ணன் சிறு குழந்தையானவன் யானையை பார்த்து பயந்து அழுதுவிட்டால் நான் எப்படி கண்ணனை சமாதானம் செய்வது இதுவரை அவன் சிரித்த முகத்தை நினைத்தே பல பாடல்கள் பாடிய எனக்கு அவன் அழுத முகத்தை கண்டால் என்னால் தாள முடியாது அதனால்தான் என் இரு கைகளையும் என் நெஞ்சில் வைத்து யானையை அவன் பார்ப்பதை மறைத்து கொண்டேன். ஏதும் தவறு இருந்தால் மன்னியுங்கள் என்று பணிந்து நின்றார். இதை கேட்டதும் துளசிதாசர் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. சூர்தாசரே உமது நட்பு கிடைத்தது நான் எத்தனையோ பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனால் கிடைத்திருக்க வேண்டும் மறுபிறப்பு என்று ஒன்று இருந்தாலும் நீங்களே எமது நண்பராக வரவேண்டும் என்று அவரை ஆற தழுவி கோயிலுக்கு அழைத்து சென்றார்.

Image result for சூர்தாசர்

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -19

திருஷ்டத்தும்னனை விட்டு அஸ்வத்தாமன் அர்ஜூனனிடம் போர் புரிய துவங்கினான். இருவரும் அவரவர் திறமையை வெளிப்படுத்தினார். இரு கட்சியிலிருந்த போர்வீரர்களும் இருவரும் போர் செய்ததை கவனித்து பார்த்தார்கள். அர்ஜுனனை அழித்து தள்ள அஸ்வத்தாமன் தீர்மானித்தான். மந்திர சக்தி வாய்ந்த அஸ்திரத்தை ஒன்றன் பின் ஒன்றாக அர்ஜுனன் மீது பிரயோகித்தான். அதே மந்திர அஸ்திரங்களை கொண்டு சேனைகளையும் எதிர்த்தான். இதனை கண்ட அர்ஜுனன் அஸ்வத்தாமன் செய்த முறையில்லாத போர் முறையை எதிர்த்தான். தன்னை மந்திர அஸ்திரம் கொண்டு எதிர்ப்பது முறையே. சேனைகளை எதிர்ப்பது முறையல்ல என்று கூறிவிட்டு அனைத்து அஸ்திரங்களையும் அர்ஜுனன் முறியடித்தான். அஸ்வத்தாமனுடைய போர் திறமைகளை அனைத்தும் தோல்வியடைந்தபடி முடிவுக்கு வந்தது. துயரத்துடன் பின்வாங்கினான்.

துயரத்தில் மூழ்கியிருந்த அஸ்வத்தாமனிடம் வியாச பகவான் பிரசன்னமானார். வியாசரிடம் தன்னுடைய நாராயண அஸ்திரம் செயலற்று போனதற்கு காரணம் என்ன என்று கேட்டான். அதற்கு வியாசர் நாராயணனும் நாராயண அஸ்திரமும் ஒன்று தான். நாராயண அஸ்திரம் தனது எதிரியை விடாது. எதிரிகள் அதை எதிர்ப்பதற்க்கு ஏற்ப அதன் வலிமை அதிகரிக்கிறது. கெட்டவர்களை அழிப்பதில் அதற்கு நிகரான ஆயுதம் எதுவும் இல்லை. அதே சமயம் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு கீழே விழுந்து வணங்குகிறவர்களுக்கு நாராயண அஸ்திரம் அனுக்கரகம் செய்யும். கிருஷ்ணனும் அர்ஜுனனும் நாராயணனாகவும் நரனாகவும் உலகுக்கு வந்திருக்கிறார்கள். கேட்டவர்களை தண்டிப்பதும் தர்மத்தை காப்பதும் அவ்விருவருடைய செயலாகும். நாராயண அஸ்திரத்தின் சூட்சுமங்கள் அனைத்தையும் கிருஷ்ணன் அறிந்திருந்தான். ஆகையால் அந்த அஸ்திரத்தின் முன்னிலையில் அடிபணியும்படி பாண்டவர்களுக்கு அவன் உத்தரவிட்டான். பாண்டவர்களே பாதுகாக்க கிருஷ்ணன் முன்வந்திருக்கிறான். அவர்களை அழிக்க யாராலும் இயலாது. உன் தந்தை துரோணர் மேலான சொர்க்கத்திற்கு சென்றுள்ளார். சொர்க்கத்திற்கு சென்றவரை குறித்து வருந்தாதே. உன்னுடைய பாசறைக்கு சென்று ஓய்வு எடுத்துக்கொள் என்று வியாசர் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். வியாசர் கூறியது அஸ்வத்தாமனுக்கு ஒருவிதத்தில் ஆறுதல் அளித்தது.

சூரியன் மறைய 15 ம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது. 15 ஆம் நாளில் துரோணர் இழந்ததை குறித்து கௌரவர்களுக்கு வருத்தமாக இருக்கிறது. போர் வீரர்கள் பெரும் துயரத்தில் மூழ்கி இருந்தார்கள். 15 ஆம் நாளில் தங்களுக்கு அனுகூலமாக அமைந்தது குறித்து பாண்டவர்கள் மகிழ்ச்சி அடைந்தவர்களாக ஓய்வெடுக்க தங்கள் பாசறைக்கு திரும்பினார்கள்.

துரோண பருவம் இந்த பகுதியுடன் முடிவடைந்தது. அடுத்தது கர்ண பருவம்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 257 திருமயிலை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 257 வது தேவாரத்தலம் திருமயிலை (சென்னை). புராணபெயர் கபாலீச்சரம், திருமயிலாப்பூர். மூலவர் கபாலீஸ்வரர். இத்தலத்தில் இறைவன் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் கற்பகாம்பாள் தெற்கு நோக்கி இருக்கிறாள். தேவலோகத்து கற்பக மரம் கேட்டதை கொடுப்பதைப்போல இத்தலத்து அம்பிகையும் கேட்கும் வரங்களை தருவதால் கற்பகாம்பிகை எனப்பட்டாள். தலவிருட்சம் புன்னை மரம். தீர்த்தம் கபாலீ தீர்த்தம். சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார். அவரின் ஆணவத்தை அளிக்க நினைத்த சிவபெருமான் அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார். எனவே இவர் கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர் ஆனார். தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது. 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த கிரேக்க ஆசிரியர் தாலமி என்பவர் இவ்வூரை மல்லியார்பா என குறிப்பிடுகிறார். மயில்கள் மிகுதியாக இருந்து ஆர்த்தெழுந்திருந்த காரணத்தால் இத்தலம் மயில் ஆர்ப்பு எனப் பெயர் பெற்றது. பின்னர் வழக்கில் மயிலாப்பு என்றாகி பின்பு மயிலாப்பூர் ஆகிவிட்டது. கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் கோபுரஙகளைக் கொண்ட இவ்வாலயம் சென்னை நகரின் மையப் பகுதியான மைலாப்பூரில் அமைந்திருக்கிறது.

கிழக்கில் உள்ள கோபுரமே இராஜகோபுரமாகும். 7 நிலைகளும் சுமார் 120 அடி உயரமும் உடையது. ஒரு விசாலமான வெளிப் பிரகாரமும் முக்கிய சந்நிதிகளைச் சுற்றி பிரகாரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காண்பது கிழக்கு வெளிப் பிரகாரம். இதில் வரிசையாக அண்ணாமலையார், நர்த்தன விநாயகர், ஜகதீசுவரர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. தெற்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய நவராத்திரி மண்டபமும், மேற்கு நோக்கிய சிங்காரவேலர் சந்நிதியும் அமைந்துள்ளன. மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் மேற்கு வெளிப் பிரகாரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். கருவறைச் சுற்றில் நாம் பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகியோர் உள்ளனர். மேற்கு வேளிப் பிரகாரத்தில் அருணகிரிநாதரின் திருவுருவம் ஒரு சிறிய சந்நிதியில் சிங்காரவேலர் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வடக்கு வேளிப் பிரகாரத்தில் தலவிருட்சம் புன்னை மரமும் அதன் அருகில் புன்னைவனநாதர் சந்நிதியும் உள்ளது. அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தபோது சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார். புன்னைவனநாதர் சந்நிதிக்குப் பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறது. இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது. வடக்கு வேளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சனி பகவான் அருள் புரிகிறார். இங்குள்ள வடக்கு பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் நின்றுபார்த்தால் கிழக்கு ராஜகோபுரம், அம்மன் கோபுரம், சிவன் கோபுரம், முருகன் கோபுரம், மேற்கு கோபுரம் என அனைத்து கோபுரங்களும் தெரியும். இந்த இடத்தில் தான் கோயிலுக்கான மிகப்பெரிய மணி அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தின் மேல்புறமும், வடபுறமும் யானை, யாழி, மயில், நாகர்,ஆட்டுக்கிடா, நந்தி, காமதேனு, குதிரை போன்ற வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள மண்டபம் அமைந்துள்ளது.

உமையவள் சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும் திருநீற்றின் மகிமைகளையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க சிவபெருமான் அவ்விளக்கம் அளித்தார் அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் நீ பூதலத்தில் மயில் உருப்பெற்றிடுவாய் என சாபமிட்டார். சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய் எனக் கூறினார். அவ்வாறே இத்தலத்தில் அமைந்துள்ள புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பூஜித்து தேவியார் வழிபட்டார். அவர் தவத்தின் மகிமையால் சிவபெருமான் தேவியின் முன் தோன்றி மயிலாய் இருந்த பழி உன்னை விட்டகன்றது. கற்பகவல்லி என்பதான பெயர் உனக்காகுக என வரம் அருளினார். அச்சமயம் தேவியார் பரமனை நோக்கி அடியேன் இங்கு தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதி மயிலை என பெயர் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பரமனும் அவ்வாறே அருளியதாக புராண வரலாறு கூறுகிறது.

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அறுபத்துமூவர் விழா தனித்துவம் வாய்ந்தது. பங்குனித் திருவிழாவின் 8-ம் நாளில் வெள்ளி வாகனத்தில் சிவனார், அம்பாள், சண்டிகேஸ்வரர், முருகர் திருவீதியுலா வர அவருடன் அறுபத்து மூன்று நாயன்மார்களும் வாகனத்தில் பவனி வருவார்கள். சிவ பார்வதி தரிசனம் ஒருபக்கம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவீதியுலா இன்னொரு பக்கம் என விழாக்கோலம் பூண்டிருக்கும். மனிதனாகப் பிறந்தவர் மகா கும்பமேளா, மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை தீபம் முதலான பத்து விழாக்களைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்கிறது புராணங்கள் அதில் மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவும் ஒன்று. இது வரலாற்றின் படி எட்டாம் நூற்றாண்டில் இருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. சூரனை வதம் செய்யும் முன்பு முருகப்பெருமான் இக்கோயிலில் சிவனை வேண்டி தவமிருந்தார். சிவனும் அம்பிகையும் அவருக்கு காட்சி தந்து வேலாயுதம் கொடுத்தனுப்பினர். அதன்பின் முருகன் சூரனை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டார். இவர் சிங்காரவேலராக அசுர மயிலுடன் ஒரு சன்னதியில் இருக்கிறார். அசுரனை வென்றதால் இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அப்போது அவரது வாகனமான ஐராவதம் தெய்வானையைப் பிரிய முடியாமல் அவளுடனேயே தங்கிவிட்டது. வள்ளியும் தெய்வானையும் யானை மீது அமர்ந்த கோலத்தில் இங்கு இருக்கின்றனர். தெற்குப் பிரகாரத்தில் இத்தலத்தில் முருகப்பெருமான் 6 திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மேற்கு நோக்கி மயில் மீது எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் யானை மீது அமர்ந்து காட்சி தருகின்றனர். இந்த சன்னதியில் 16 கால் மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், துவாரபாலகர்கள், பிரமாண்டமான விமானத்துடன் கூடிய இந்த சன்னதியில் இவருக்கென தனி கொடி மரம் உள்ளது. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 10 பாடல்கள் பாடியுள்ளார். இவருக்கான தனி சன்னதி முருகனுக்கு எதிரில் அமைந்துள்ளது. இந்த பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவத்திற்காக, நான்கு கால் மண்டபம் அமைந்துள்ளது.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம். இவருக்கும் தனிசன்னதி இருக்கிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் தோன்றிய தலம். திருவள்ளுவர் தோன்றிய வாழ்ந்த தலம். உமையம்மையார் மயில் உருவம் கொண்டு கபாலீசுவரரைப் பூஜித்த தலம். முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். இராமபிரான் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். சிவபெருமான் உமையவளோடு சேர்ந்து திருமால், பிரம்மா, வியாக்ரபாதர், பதஞ்சலி மற்றும் தில்லைவாழ் அந்தணர்களுக்கு நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூச திருநாளாகும். இந்நாளில் சிவபெருமானை தரிசித்தால் பரமானந்த நிலை என்னும் பிறப்பற்ற நிலை பெறலாம். இவ்விழா இக்கோயிலில் ஒருகாலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தரும் இவ்விழாவை குறிப்பிட்டு பதிகம் பாடியிருக்கிறார். இங்கு தைப்பூசத்தை ஒட்டிய பவுர்ணமியன்று நடக்கும் தெப்பத்திருவிழாவில் சிவபார்வதியுடன் சிங்காரவேலரும் எழுந்தருளுகின்றார். அன்று கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.

திருமயிலையைப் பற்றியும் கபாலீசுவரரை பற்றியும் எழுந்த முதல் இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடிய மட்டிட்ட புன்னையங் கானல் எனத் தொடங்கும் பதிகமாகும். இந்த பாடலில் வரலாற்று பதிவுகள் பல உள்ளன. திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிகர் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். இவரது மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க முடிவு செய்தார். இந்நேரத்தில் மலர் பறிக்கச்சென்ற பூம்பாவை பாம்பு தீண்டி உயிர் இழந்தாள். அவளை தகனம் செய்த சிவநேசர் அவள் திருஞானசம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார். திருஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு வந்ததை அறிந்து சிவனேசன் அங்கு சென்று நடந்ததை கூறினார். நடந்ததை அறிந்து சாம்பல் வைத்திருக்கும் குடத்தை கொண்டு வரக் கூறினார். அப்போது திருஞானசம்பந்தர் சிவனை வேண்டி மண்ணில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு நடத்தப்படும் தைப்பூசம் என்னும் நல்விழாவை காண்பதே பிறவிப்பயனாகும். அவ்விழாவைக் காணாமல் நீ சென்றுவிட்டது உனக்குத்தானே நஷ்டம் என்ற பொருளில் பாடல் பாடினார். அவர் பாடியதும் பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். அவளை திருமணம் செய்து கொள்ளும்படி சிவநேசர் திருஞானசம்பந்தரிடம் வேண்டினார். உயிர் இழந்தவளுக்கு மீண்டும் உயிர் அளித்ததால் அவள் எனக்கு மகளாகிறாள் எனச்சொல்லி திருஞானசம்பந்தர் மறுத்து விட்டார். பூம்பாவையும் இறுதிவரை சிவப்பணியே செய்து சிவனடி சேர்ந்தாள். இவர் பாடிய 11 பாடல்களில் முதல் 10 பாடல்கள் பூம்பாவையை அழைக்கும் முறையில் உள்ளன. இப்பதிகத்தில் இத்தலத்து ஈசனையும் கோயில் பற்றியும் மயிலாப்பூர் பற்றியும் அழகுறக் கூறுகிறார். இத்தலத்தின் புராணம் குன்றக்குடி ஆதீனத்தின் மயிலைக் கிளை மடத்தின் ஸ்ரீமத் அமிர்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய தலபுராணம் 1894 ல் வெளிடப்பட்டது. வடமொழியில் சைவ மகாபுராணத்து கோடி ருத்ர ஸம்ஹிதையில் உத்க்ருஷ்ட ச்வக்ஷேத ப்ரகரணத்தில் 11 அத்யாயம் கொண்ட கபாலீச ஸ்தல மாஹாத்ம்யம் 1922 ம் ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது. திருமயிலைத் தலபுராணம் எனும் நூல் 150 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கயிலாயப் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீஅமுர்தலிங்கத் தம்பிரான் இயற்றினார். இந்த நூல் இரண்டாம் பதிப்பாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூல் பல அரிய தகவல்களை உள்ளடக்கியது. சமீப காலத்தில் திருமயிலைத் தலபுராணம் என்ற பெயரால் மயிலை நாதமுனி என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

இக்கோவில் முதன் முதலில் சாந்தோம் சர்ச் இருக்கும் பகுதியில் 6ம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது. திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் 6-வது பாடலில் கடலாட்டு விழாவைப் பற்றியும் பக்தர்கள் கடலாடுவதை இறைவன் பார்த்தபடி இருப்பதையும் குறிப்பிடுவதால் தேவார காலத்தில் இத்தலம் கடலருகே இருந்துள்ளது தெரிய வருகிறது. திருஞானசம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கிய இடமும் கடற்கரை சாந்தோமிலிருந்த கோயில் என்பது அவர் அங்கம் பூம்பாவைப் பாடலிருந்து தெரிகிறது. பழைய கோயில் இப்போது உள்ள சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் இருந்தது. இதனை அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களின் மூலமாக அறியலாம். கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் அவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக் கோட்டையும் தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள். போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558 ல் சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையிட்டு இருப்பது கல்வெட்டின் மூலம் அறியலாம்.

சாந்தோம் சர்ச்சில் பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம். 1923 ல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் சர்ச்சில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால் கல்வெட்டுகளும் தூண்களும் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. கல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கல் தூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. 1921 ல் திரு ஹோஸ்டன் என்பவரல் சாந்தோம் சர்ச்சில் கண்டெடுக்கப்பட்ட வடமொழிக் கல்வெட்டுக்களில் கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும் என்று குறிப்பிடுகிறது. மேலும் கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப்பட்டதையும் கூறுகிறது. கி.பி. பதினாறாம் நுற்றாண்டில் கி.பி.1672-க்கு இடைப்பட்ட காலத்தில் மைலாப்பூரில் இப்போதுள்ள இடத்தில் புதிய கோயில் மற்றும் குளம் மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது. இடித்த பழைய கோயிலின் கற்களைக்கொண்டு புதுக்கோயில் தற்போது இருக்கும் இடத்தில் கட்டப்பட்டது. அப்போது கல்வெட்டுக்களின் அருமையை உணராது அவைகளைத் தாறுமாறாக இணைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட கல்வெட்டுக்கள் அம்மன் கோயிலில் ஐம்பது வரை இருக்கின்றன. அலங்கார மண்டபத்து முன்வாசல் தளத்தில் டச்சு எழுத்துக்கள் கொண்ட சில கற்கள் உள்ளன.

புன்னைவனம், வேதநகர், சுக்கிரபுரி, பிரம்புரம், சுந்தரபுரி, கபாலீச்சரம், கபாலி மாநகர் போன்ற வேறு பெயர்களால் இக்கோவில் பாடப்பட்டுள்ளது. பிரமாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது. மூவேந்தர்கள் காலத்தில் புலியூர் கோட்டத்துப் புலியூர் நாட்டைச் சேர்ந்ததாக விளங்கிய மயிலை வடமொழியில் கேகயபுரி எனப்பட்டது. மயிலாப்பி என்றும் இந்தத் தலம் அழைக்கப்பட்டதை திருநாவுக்கரசரின் பாடல்களிலிருந்து அறியலாம். கி.பி.9-ஆம் நூற்றாண்டில் மயிலாபுரி என்று வழங்கப்பட்டதை நந்திக் கலம்பகம் என்னும் நூல் தெரிவிக்கிறது. சமணர்கள் இந்தத் தலத்தை பத்மநாதபுரம் வாமநாதபுரம் எனும் பெயர்களால் அழைத்தனர். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் ஜயங் கொண்டாரால் பாடப் பெற்ற கலிங்கத்துப்பரணி பண்டை மயிலை என்று குறிப்பிடுகிறது. 6ம் ஊற்றாண்டில் வாழ்ந்த ஐயட்ட்கள் காடவர் கோன் என்னும் பல்லவ அரசர் பாடிய சிவத்தளி வெண்பாவில் இக்கோயிலைப் பற்றி பாடியுள்ளார். மூவரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களில் சுவாமி மற்றும் தலத்தின் பெருமைகளை குறிப்பிட்டுத்தான் பெரும்பாலும் பதிகம் பாடப்பட்டுள்ளது. ஆனால் இத்தலம் திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பிக்க இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்களின் சிறப்புக்களை குறிப்பிட்டு 11 பதிகங்கள் பாடியுள்ளார்.

சிவபெருமானைப் போற்றி திருமயிலை உலா, திருமயிலைக் கலம்பகம், திரு மயிலை யமக அந்தாதி, கபாலீசர் பதிகங்கள், திருமயிலைக் கபாலீசர் இரட்டை மணிமாலை, திருமயிலைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருமயிலாப்பூர் பதிகங்கள், கங்காதர நாவலர் இலக்கியங்கள், ஸ்ரீகபாலீச்சரர் தோத்திரம், சென்னைத் திருமயிலை ஸ்ரீகபாலீச்சரர் துதிப்பா மாலை, கபாலீசர் குறுங்கழி நெடில், திருமயிலை நான்மணிமாலை, பாபநாசம் சிவன் கீர்த்தனைகள், திருமயிலைக் குறவஞ்சி, திருமயிலைக் கபாலீசன் மாலை, திருமயிலை வெண்பா அந்தாதி, திருமயிலை ஸ்ரீகபாலீசுவரர் துதி, ஆகியன கபாலீஸ்வரரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள். அம்பாளைப் போற்றி கற்பகவல்லியம்மை பதிகம், திருமயிலைக் கற்பகவல்லி அஷ்டகம், கற்பகவல்லி மாலை, கற்பகவல்லியார் பஞ்சரத்தினம், ஸ்ரீகற்பகாம்பாள் பாடல்கள், கற்பகாம்பிகை அந்தாதிப் பதிகம், திருமயிலாபுரிக் கற்பகாம்பிகை மாலை, திருமயிலைக் கற்பகாம்பிகை பிள்ளைத் தமிழ் ஆகியன ஸ்ரீகற்பகாம்பாள் மீது பாடப்பட்ட இலக்கியங்கள். முருகரைப் போற்றி திருமயிலை சிங்காரவேலர் பிள்ளைத் தமிழ், திருமயிலைக் கோவை, சிங்கார வேலர் மாலை, திருமயிலைக் குகன் பதிகங்கள், மயிலைச் சண்முகப் பஞ்சரத்தின மாலை, அருட்புகழ், மயிலைச் சிங்காரவேலர், இரட்டை மணிமாலை, திரு மயிலைச் சிங்கார வேலர் பதிகம் ஆகியன மயிலை சிங்காரவேலரை போற்றிப் பாடப்பட்டவை. இது தவிர திருமயிலைப் பிள்ளைத் தமிழ், திரு மயிலைக் கோவை, திருமயிலை உவமை வெண்பா, திருமயிலை வெண்பா, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பதிகங்கள், திருக்குருகூர் ஞானசித்த சுவாமிகளின் பதிகங்கள், தாச்சி அருணாசல முதலியார் பதிகங்கள், கி.ஊ.பா. கங்காதர நாவலரின் நூல்கள் ஆகியனவும் மயிலைவாழ் தெய்வங்களைப் போற்றும் நூல்கள் ஆகும். இராமபிரான் இறைவனை வழிபட்டு ஐப்பசி ஓணநாளில் பிரமோற்சவம் திருவிழாவை நடத்துவித்தார். அம்பாள், பிரம்மன், முருகர், இராமர் இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், சேக்கிழார், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 256 திருவேற்காடு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 256 வது தேவாரத்தலம் திருவேற்காடு. மூலவர் வேதபுரீஸ்வரர், வேற்காட்டீசர். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். லிங்க உருவின் பின்புறம் சுவற்றில் சிவன் பார்வதி திருமணக் காட்சி புடைப்பு சிற்பமாக உள்ளார் அம்பாள் பாலாம்பிகை, வேற்கண்ணி அம்மை. தலவிருட்சம் வெள்வேலமரம். தீர்த்தம் வேததீர்த்தம், பாலிநதி, வேலாயுத தீர்த்தம். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள யானையின் பின்பகுதி போன்ற கஜப்பிருஷ்ட அமைப்புடையது. கிழக்கு நோக்கி உள்ள ஆலய முகப்பு கோபுரம் ஐந்து நிலைகளை உடையதாகும். கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே துழைந்தவுடன் உள்ள விசாலமான வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். ஆலய உட்பிரகாரத்தின் இடது புறம் அகத்தியர் மற்றும் சூரியன் திருமேனிகள் காட்சி தருகின்றன. தெற்கு உட்பிரகாரத்தில் நால்வர் சந்நிதி மற்றும் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகளைக் காணலாம். மேற்கு உட்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாயச் சோழன் ஆகியோரின் உருவச் சிலைகளைக் காணலாம். மேலும் உட்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், கணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் கோஷ்ட தெய்வங்களாக காணப்படுகின்றனர். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் மேற்கு நோக்கிய சனீஸ்வர பகவான் தனி சந்நிதி இருக்கிறது. அவர் அருகில் மூர்க்க நாயனாரும் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இத்தலத்தில் உள்ள நவக்கிரக சந்நிதி பத்ம பீடத்தில் எண்கோண வடிவில் அமைந்துள்ளது.

பிரளய காலத்தில் இந்த உலகம் மூடப்பட்ட பின் சிவன் மீண்டும் இந்த உலகை படைக்க விரும்பினார். முதலில் வெள்ளத்தை வற்றச்செய்து பின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை இத்தலத்தில் வெள்ளெருக்கு மரங்களாக வடிவெடுக்குமாறு கட்டளையிட்டிருந்தார். அதன் படி இத்தலத்தில் வேதங்கள் வெள்வேல மரங்களாக மாறி இறைவனை வழிபட்டு வந்தன. நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை இங்கு வழிபட்டதால் இத்தலம் வேற்காடு என்று பெயர் பெற்றது. இத்தலத்திலுள்ள முருகன் தன் கையில் வேல் இல்லாமல் வில்லும் அம்பும் ஏந்தியவாறு ஒரு காலை மயிலின் மீது வைத்துக்கொண்டு நின்றபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இத்தலம் முருகப் பெருமானின் வாழ்க்கையோடு சம்பந்தம் உடையதாகும். பிரணவத்திற்கு பொருள் கூற முடியாத பிரம்மாவை முருகப் பெருமான் கைது செய்துவிட்டார். அதனால் படைப்புத் தொழில் தடைபட்டது. சிவபெருமான் நந்தியை முருகனிடம் அனுப்பி பிரம்மாவை விடுதலை செய்யும்படி கூறச் செய்தார். ஆனால் முருகன் அதற்கு சம்மதிக்கவில்லை. இதைத் தெரிந்து கொண்ட சிவபெருமான் தானே நேரில் வந்து முருகனிடம் பிரம்மாவின் படைப்புத் தொழில் தடைபடுவதால் ஏற்படும் சிக்கல்களை விளக்கி பிரம்மாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார். நந்தி மூலம் சொல்லி அனுப்பியும் தன் சொல்லிறகு கட்டுப்படாத முருகனை தண்டிக்கும் பொருட்டு திருவேற்காட்டிற்குச் சென்று அங்கு தன்னை வழிபட்டு வரும்படி ஆணையிட்டார். அதன்படி முருகனும் திருவேற்காடு வந்து ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி சிவனை வழிபட்டார். முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சூரபத்மனைக் கொன்ற பாவம் நீங்க இத்தலத்தில் உள்ள வேதபுரீஸ்வரரை வழிபட்டார். முருகர் வழிபட்ட அந்த ஸ்கந்த லிங்கம் முருகனுக்கு முன்பாகவே வைக்கப்பட்டுள்ளது. கருவறை மேற்குப் பிரகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியில் முருகனுக்கு முன்னால் இப்போதும் அந்த சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். இத்தலத்திலுள்ள முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன.

பாற்கடலை விநாயகர் பருகி விளையாடும் போது திருமால் தன் கையில் இருந்த வலம்புரி சங்கை தவற விட்டார். பின் இத்தல சிவனை வழிபட்டு பெற்றார். திருமால் சுதர்சன சக்கரத்தை பெறுவதற்காக இத்தலத்தை அடைந்து பூஜை செய்த போது உடனிருந்து ஆதிசேஷனும் இங்கு வழிபட்டு இத்தலத்தின் எல்லை வரை வாசம் செய்பவர்களை தீண்டமாட்டேன் என கூறியிருக்கிறார். அன்றிலிருந்து இத்தலத்தில் யாரும் பாம்பு கடித்து இறந்தது கிடையது. இதனால் இத்தலத்திற்கு விடந்தீண்டாப்பதி என்ற பெயரும் உண்டு. இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம். இவர் தினமும் அடியார்களுக்கு உணவு அளித்துவிட்டு, தான் உண்பதை கடமையாக கொண்டிருந்தார். ஒரு முறை இவருக்கு வறுமை ஏற்பட்டது. இதனால் தனக்கு தெரிந்த சூதாட்டத்தால் பலரிடம் வென்று வென்றதை மறுத்தவர்களை குத்தி, அதில் கிடைத்த பணத்தை வைத்து அடியவர்களுக்கு உணவளித்து வந்தார். இவரது மூர்க்க செயலால் இவரை மூர்க்க நாயனார் என்றழைத்தார்கள். இறைவன் திருவருளால் இவரது குற்றங்கள் நீங்கின. பின் சிவபதவியடைந்தார். இவர் அவதரித்த கார்த்திகை மூலம் நட்சத்திரத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருக்கு கோயில் வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது. பிருகு முனிவரின் சாபத்தால் திருமால் ஜமத்கனி முனிவருக்கும் ரேணுகைக்கும் மகனாக அவதரித்தார். பரசுராமர் என பெயர் பெற்றார். அகத்தியர் திருவேற்காடு அடைந்த போது இறைவன் பார்வதியுடனான திருமணக்கோலத்தை காட்டி அருளினார்.

திருவேற்காடு பாலாம்பிகையையும், திருவலிதாயம் ஜகதாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவாம்பிகையையும் ஒரே நாளில் வழிபடுவோர் இம்மையிலும் மறுமையிலும் அனைத்து நலன்களையும் பெறுவர் என தல புராணம் கூறுகிறது. சிவன் ஒரு முறை பார்வதியிடம் இத்தலத்தை மனதால் நினைத்தாலும் ஒரு பொழுதாவது இங்கு தங்கியிருந்தாலும் இத்தலம் வழியாக சென்றாலும் முக்தியடைவர் என்று கூறியுள்ளார் எனவும் தல புராணம் கூறுகிறது. இத்தலத்தில் பராசர முனிவர் இறைவனை வழிபட்டுள்ளார். இம்முனிவர் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் புலமை பெற்றவர். பராசரர், அத்திரி, பிருகு, குச்சரர், ஆங்கீரசர், வசிட்டர், கவுதமர், காசிபர், திண்டி, முண்டி, வாலகில்லியர், விரதாக்னி ஆகிய முனிவர்கள், பஞ்சபாண்டவர்கள், சிபி சோழன், வாணன், ஒன்பது கோள்கள், அஷ்டதிக்பாலகர்கள் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளனர். இக்கோயில் சோழ அரசனால் கட்டப்பட்டது. கருவறைச் சுவரில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 255 திருமுல்லைவாயில்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 255 வது தேவாரத்தலம் திருமுல்லைவாயில். புராணபெயர் திருவடமுல்லைவாயல். மூலவர் மாசிலாமணீஸ்வரர், நிர்மலமணீஸ்வரர். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பாள் கொடியிடை நாயகி, லதாமத்யாம்பாள். அம்பாள் கொடி போன்ற அழகிய இடையுடன் இருப்பதால் கொடியிடைநாயகி எனப்படுகிறாள். தலவிருட்சம் முல்லை. கொன்றை. தீர்த்தம் அக்னி தீர்த்தம், கல்யாண தீர்த்தம். இத்தலத்தில் உள்ள உயரமான சுயம்புலிங்கம் சதுரபீட ஆவுடையார் தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் காட்சி தருகிறார். வெட்டுப்பட்ட காயத்தை குளிர்விக்கும் வகையில் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அருளும் இவர் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் இரண்டு தினங்கள் மட்டும் சந்தனக்காப்பு இல்லாமல் நிஜ திருமேனியுடன் காட்சி தருகிறார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும். இவருக்கு அபிஷேகம் இல்லாததால் ஒரு பாதரசலிங்கத்தை தனிச்சன்னதியில் வைத்து பூஜிக்கிறார்கள். ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் உண்டு. மூலவரின் விமானம் யானையின் பின்பகுதி போன்ற கஜப்பிருஷ்ட அமைப்புடையது.

இத்தலம் கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும் திரேதாயுகத்தில் வில்வ வனமாகவும் துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும் கலியுகத்தில் முல்லை வனமாகத் திகழ்ந்தது. தெற்கில் உள்ள இராஜ கோபுரம் இவ்வாலயத்தின் பிரதான நுழைவு வாயிலாகும். கிழக்கு திசையில் ஒரு நுழைவாயில் இருந்தும் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு கோபுரத்திற்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் பிரசன்ன கணபதி உள்ளார். அவருக்குப் பின்னால் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மற்றொரு நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் முதலில் இறைவி கொடியிடை நாயகி சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. அதைக் கடந்து மேலும் சென்றால் இறைவன் மாசிலாமணி ஈஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. ஆலய தீர்த்தமான கல்யாண தீர்த்தம் கோவிலுக்கு வெளியே தெற்கு கோபுரத்திறகு வலதுபுறம் அமைந்துள்ளது. இங்குள்ள நந்தி அசுரர்களை அழிப்பதற்காக தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில் மன்னருக்கு துணையாகச் சென்றதால் நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது. இறைவன் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் மேற்குச் சுற்றில் நால்வர் திரு உருவங்கள் உள்ளன. மேலும் மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாக காட்சி அளிக்கின்றன. கருவறையின் வடக்குச் சுற்றில் நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் பிற்காலப் பிரதிஷ்டையான பாதரசம் வெள்ளி இவற்றின் கலப்பினால் ஆன ரசலிங்கம் உள்ளது.

இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன. சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. சூரியனுக்கு மட்டும் தனி சன்னதி உண்டு. பிரகாரத்தில் சோழபுரீஸ்வரர் ராமரின் பிள்ளைகள் லவ குசர்கள் வணங்கிய குசலபுரேஸ்வரர் உள்ளனர். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் பைரவர் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காணப்படுகிறார். வசிஷ்ட முனிவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு காமதேனுவை பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

பல்லாண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்த இப்பகுதியில் தங்கியிருந்த வாணன் ஓணன் எனும் இரண்டு அசுரர்கள் முனிவர்களை துன்புறுத்தினர். எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்ட புழல்கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் ஆட்சி செய்து வந்தனர். இந்த ஓணன், காந்தன் ஆகிய இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றவர்கள். அவர்கள் பூஜித்த திருக்கோவிலே திருஓணகாந்தன்தளி ஆகும். அவர்களை விரட்ட வந்த தொண்டைமான் மன்னன் போரிட்டும் வெல்ல முடியாமல் திரும்பினான். அப்போது பட்டத்து யானையின் கால் ஒரு முல்லைக்கொடியில் சிக்கிக் கொண்டது. மன்னன் யானையின் மீது இருந்தபடியே முல்லைக் கொடிகளை வெட்டினான். வெட்டப்பட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. அவன் பயந்து போய் கீழே இறங்கி பார்த்தபோது மண்ணிற்கு அடியில் இருந்த லிங்கத்தை பார்த்தான். லிங்கத்தின் மீதிருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டான். சிவபெருமானின் வடிவமான லிங்கத்தை வெட்டிய வருத்தத்தில் உயிரையே மாய்க்கச் சென்றான். அப்போது சிவன் அவனைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மன்னனுக்கு காட்சி தந்தார் வெட்டுப்பட்டதற்காக வருந்த வேண்டாம் என்றும் வெட்டுப்பட்டாலும் மாசு இல்லாத தூய மணியாகவே விளங்குவோம் என்றும் கூறி அருள் செய்து நந்தியை மன்னனுடன் அனுப்பி அசுரர்களை வெல்லும்படி செய்தார். மன்னன் அசுரர்கள் வைத்திருந்த இரண்டு வெள்ளெருக்கம் தூண்களை எடுத்து வந்து இவ்விடத்தில் வைத்து மாசிலாமணீஸ்வரருக்கு கோயில் கட்டினான். இவ்விரு தூண்களும் சிவன் கருவறைக்கு முன்பு தற்போதும் உள்ளதைக் காணலாம். மேலூரில் வீற்றிருக்கும் திருவுடையம்மன், திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மன், இத்தலத்து கொடியிடையம்மன் மூன்று திருவுருவங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை. இத்தலத்து வரலாற்றை கேட்டாலே முக்தி கிடைக்கும் என்கிறது தலவரலாறு. சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 254 பாடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 254 வது தேவாரத்தலம் பாடி. புராணபெயர் திருவலிதாயம். மூலவர் திருவல்லீஸ்வரர், வலிதாயநாதர், திருவலிதமுடையநாயனார். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்குப் நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பாள் ஜகதாம்பாள், தாயம்மை. தலவிருட்சம் பாதிரி, கொன்றை. தீர்த்தம் பரத்வாஜ தீர்த்தம். இறைவன் கருவறையின் உள்ளேயும் ஒரு அம்பாள் திருவுருவம் உள்ளது. அம்பாள் திருவுருவம் ஒரு காலத்தில் பின்னப்பட புதிய திருவுருவம் செய்து அதை வெளியே தெற்கு நோக்கி இருக்குமாறு பிரதிஷ்டை செய்து பின்னமான திருவுருவத்தை இறைவன் கருவறைக்கு உள்ளே வைக்கப்பட்டுள்ளது. கோவில் 3 நிலைகளை உடைய கிழக்கு வாசல் கோபுரம். கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. அதில் கொடிமரம் நந்தி சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது.

வலது புறத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றி இருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தே சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு தனி சிறப்புண்டு. சுவாமி சந்நிதி கருவறை கஜப்பிரஷ்ட விமான அமைப்புடையது. உள் பிரகாரத்தில் சூரியன், விநாயகர், தட்சினாமூர்த்தி, மஹாவிஷ்னு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறையின் பின்புறம் கோஷ்டத்தில் அநேக தலங்களில் லிங்கோத்பவர் தான் இருப்பார். ஆனால் இங்கு மகாவிஷ்ணு காணப்படுகிறார். மகாவிஷ்ணு அவரின் அம்சமான பரசுராமர், ராமர் ஆகியோர் சிவபெருமானை வழிபட்ட தலங்களில் எல்லாம் லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு இருப்பார். அவ்வகையில் இத்தல இறைவனை இராமர் வழிபட்டுள்ளார். மேலும் சோமஸ்கந்தர் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், அனுமன் பூஜித்த அனுமலிங்கம், இந்திரன் சாபம் நீக்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. பாரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிரகாரத்தில் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சுப்பிரமணியராக ஒரு திருமுகத்துடனும் 4 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. கோவிலில் உள்ள தூண்களில் நடராஜர், முருகர், கோதண்டராமர், மச்சாவதாரமூர்த்தி, கூர்மாவதாரமூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிவலிங்கத்தை வழிபட்ட நிலையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. இத்தலத்திற்கு வந்தாலே முக்தி கிடைக்கும்.

பிரம்மாவின் இரண்டு பெண்கள் கமலி, வல்லி என்பவர்கள் இத்தலத்து இறைவனை பூஜித்து விநாயகரை இறைவன் ஆணைப்படி திருமணம் புரிந்து கொண்டனர் என்று தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக இங்கு கமலை, வல்லிகளுடன் இருக்கும்படியான விநாயகரின் உற்சவர் சிலை உள்ளது. இத்தலம் நடுநாயகமாக இருக்க சுற்றிலும் மாலையிட்டது போல 11 திருத்தலங்கள் அமைந்திருக்கின்றது. வியாழன் தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால் பாவம் நீங்கும் என்றார். அதன்படி இங்கு வந்த வியாழன் புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார். வியாழபகவானின் மகனான பரத்வாஜர் சாபம் காரணமாக கரிக்குருவியின் பிள்ளையாக வலியன் என்னும் கருங்குருவியாக பிறந்தார். தான் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தமடைந்த பரத்வாஜர் பல புண்ணிய தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன் விமோசனம் கொடுத்து பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். எனவேதான் இத்தலம் திருவலிதாயம் என்றும் சிவன் வலியநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறு அவரால் உருவாக்கப்பட்ட பாரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பரத்வாஜர், இராமர், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன், கருங்குருவி ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.