தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 244 திருமால்பூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 244 வது தேவாரத்தலம் திருமால்பூர். புராணபெயர் ஹரிசக்கரபும், திருமாற்பேறு. மூலவர் மணிகண்டேஸ்வரர், தயாநிதீஸ்வரர், பிரவாளேஸ்வரர், சாதரூபர், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், மால்வணங்கீசர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவர் தீண்டாத் திருமேனி ஆவார். அம்பாள் அஞ்சனாட்சி, கருணாம்பிகை. தலமரம் வில்வம். தீர்த்தம். சக்கர தீர்த்தம். இக்கோயில் 1.20 ஏக்கர் அளவில் சுற்று மதில் சுவர்களுடன் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம் இரண்டு பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நேரே உயரமான பீடத்தின் மீது பலிபீடம், கவசமிட்ட கொடிமரம், நந்தி தனித்தனியே உள்ளனர். உட்பிராகாரத்தில் நந்திகேசுவரர் நின்ற திருக்கோலத்திலும் செந்தாமரைக்கண்ணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கூப்பிய கரங்களுடன் மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரே காட்சி தருகின்றனர். உட்பிராகாரத்தில் விநாயகர், சிதம்பரேசுவரர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், சண்ட்கேசுவரர், நடராஜர், கஜலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

மூலவர் மணிகண்டேஸ்வரர் தீண்டாத் திருமேனி ஆதலால் இத்தலத்திலுள்ள சிதம்பரேஸ்வரர் சந்நிதியில் தான் ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. வல்லபை விநாயகர் பத்துக்கரங்களுடன் காட்சி தருகின்றார். மறுபுறம் சண்முகர் உள்ளார். நடராஜர் தெற்கு நோக்கியுள்ளார். நடராஜ சபையில் மாணிக்கவாசகரும் சிவகாமியும் உடன் எழுந்தருளியுள்ளனர். நேரே மூலவர் தரிசனம். கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்க்கை அஷ்டபுஜங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி அழகாகக் காட்சி தருகின்ற திருமேனி. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. மூலவருக்கு எதிரில் உள்ள மகாவிஷ்ணுவுக்குத் தீபாராதனை முடிந்த பின்பு சடாரி சார்த்தி தீர்த்தம் தரும் மரபு உள்ளது.

ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூட அதனால் உலகமே இருண்டு போயிற்று. உலக இயக்கமே தடைபட தனது தவறை உணர்ந்த பார்வதி இப்பூவுலகம் வந்து விருத்தக்ஷீர நதிக்கரையில் மணலால் ஒரு லிங்கம் அமைத்து இறைவனை பூஜித்து தன் தவறை போக்கிக் கொண்டாள். விருத்தக்ஷீர நதி என்ற பழைய பாலாறு இத்தலத்திற்கு வடக்குத் திசையில் இப்போது உள்ளது. பார்வதிதேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது செம்பால் செய்யப்பட்ட கவசம் சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது. மூலவரின் அருகே அதிகார நந்தி நின்ற நிலையில் உள்ளார். இக்கோயிலில் பிரம்மோற்ஸவ காலத்தில் பெருமாளுக்குரிய கருடசேவை நடக்கிறது. பராந்தக சோழன் நினைவாக அமைக்கப்பட்ட சோளீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். எட்டு கரத்துடன் துர்க்கை நளினமாக காட்சி தருகிறாள். வாயிலின் வெளித் தூண்களில் பசுவொன்று சிவலிங்கத் திருமேனிக்கு பால்சுரந்து வழிபடும் சிற்பம் உள்ளது.

குபன் என்ற அரசனுக்காக திருமால் துதீசி முனிவர் மீது தனது சக்கரத்தை வீசினார். அது முனிவரின் தெய்வீக உடம்பில் பட்டு முனை மழுங்கி விட்டது. கவலையடைந்தார் திருமால். என்ன செய்வதென்று தேவர்களுடன் கலந்தாலோசித்து சலந்தராசுரனை அழிப்பதற்காக உண்டாக்கிய சுதர்சன சக்கரம் சிவனிடம் உள்ளதை அறிந்தார். உடனே இத்தலம் வந்து அம்பிகை பூஜித்த இந்த லிங்கத்தை தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்தார். ஒரு நாள் சிவன் திருமாலின் பக்தியை சோதிக்க பூஜைக்கான ஆயிரம் மலர்களில் ஒன்றை மறைத்து விட்டார். திருமால் பூஜை செய்யும் போது மலர் ஒன்று குறைய தனது கண்ணைப்பறித்து இறைவனின் திருவடியில் அர்ப்பணித்தார். இந்த பூஜைக்கு மகிழ்ந்த சிவன் தாமரை மலருக்காக உனது கண்ணை எடுத்து பூஜித்ததால் தாமரை போலவே உனக்கு கண் கொடுக்கிறேன். இதனால் உன்னை பதுமாஷன் என அழைப்பார்கள். இத்தலமும் திருமாற்பேறு என அழைக்கப்படும் எனக்கூறி திருமால் வேண்டிய சக்கரத்தை கொடுத்தருளினார். மேலும் அவர் திருமாலிடம் நீ கூறி வழிபட்ட ஆயிரம் நாமங்களால் என்னை பூஜிப்பவர்களுக்கு முக்தியை கொடுப்பேன். அதைச் சொல்ல இயலாதவர்கள் என்னை தீண்டச்சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், சாகிசனர் ஆகிய திருநாமங்கள் சொல்லி பூஜித்தால் வேண்டிய வரம் தருவேன் என்று அருளினார். இத்தலத்தில் ஒரு கண நேரம் தங்கியவர்களுக்கும் முக்தியளிக்க வேண்டும் எனவும் இங்கு வழிபட்டால் அனைத்துக் கோயில்களிலுள்ள லிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்க வேண்டும் எனவும் திருமால் வரம் பெற்றார். சிவன் மகிழ்ந்து திருமால் கேட்ட வரம் தந்தருளினார். சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டதாக சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் அருளிய திருப்பதிகம் கிடைக்கவில்லை. திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 243 திருவல்லம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 243 வது தேவாரத்தலம் திருவல்லம். புராணபெயர் திருவலம். மூலவர் வில்வநாதேஸ்வரர், வல்லநாதர். இறைவன் இத்தலத்தில் கிழக்கு நோக்கி சதுர பீடஆவுடையாராக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை அகழி அமைப்புடையது. அம்பாள் தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை. தல மரம் வில்வம். தீர்த்தம். நீவாநதி, கவுரி தீர்த்தம். நீவா நதியின் கரையில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரளவில் ஒரு முகப்பு வாயில் மற்றும் முன் மண்டபம் அதையடுத்து தெற்கு நோக்கிய 4 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. இறைவன் தூரத்தில் இருந்த நதியை நீ வா என்றழைக்க இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் நீவா நதி எனப்பெயர் பெற்றது. இன்று பொன்னை ஆறு என்ற பெயரும் கொண்டுள்ளது. இந்நதியிலிருந்துதான் பண்டைநாளில் சுவாமிக்குத் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. கோயிலுள் கௌரி தீர்த்தம் என்ற தீர்த்த கிணறும் உள்ளது. இராஜகோபுரம் வாயில் வழியே உள்ள நுழைந்தால் வலபுறம் நீராழி மண்டபத்துடன் உள்ள கெளரி தீர்த்தம் இருக்கிறது. உள் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. இக்கோபுரம் கல் மண்டபத்தின் மீது கட்டப்பட்டதாகும். உள் நுழைந்து பிராகாரத்தில் வலமாக வரும்போது உற்சவர் மண்டபம் உள்ளது. பக்கத்தில் காசிவிசுவநாதர் சந்நிதியும் அடுத்து சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. இவ்விரு சந்நிதிகளும் சந்நிதிகளிலும் உள்ள சிவலிங்கத் திருமேனிகள் மிகச் சிறியன.

அடுத்துள்ள அருணாசலேஸ்வரர் சந்நிதியிலுள்ள சிவலிங்க திருமேனி சற்றுப் பெரியது. இதற்குப் பக்கத்தில் சதாசிவர், அனந்தர், ஸ்ரீகண்டர், அம்பிகேஸ்வரர் என்னும் பெயர்களில் சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. இதனை அடுத்து சஹஸ்ரலிங்கம் உள்ளது. ஆறுமுகர் சந்நிதியில் இருபுறமும் வள்ளி தெய்வயானையும், நாகப்பிரதிஷ்டையும், மூலையில் அருணகிரிநாதர் உருவமும் உள்ளன. இதன் பக்கத்தில் குருஈஸ்வரர், விஷ்ணுஈஸ்வரர், விதாதா ஈஸ்வரர் என்னும் பெயர்களைக் கொண்ட சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. இதற்கு எதிர்புறம் கிழக்கு நோக்கிய ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. இச்சந்நிதிக்கு எதிரே நெடுங்காலமாக பலாமரம் ஒன்றுள்ளது. சிவானந்த மவுன குரு சுவாமி இந்த பலா மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து இறைவனின் அருள் பெற்றுள்ளார். வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தி மேற்கு நோக்கி சுவாமியைப் பார்க்காமல் கிழக்கு நோக்கி உள்ளது. இதற்குப் பின்னால் நின்ற நிலையில் அதிகார நந்தி சுவாமியைப் பார்த்தபடியுள்ளது. சுவாமி சந்நிதி அர்த்த மண்டபத்தில் உள்ள நந்தியும் கிழக்கு நோக்கியே திரும்பி உள்ளது. இவைகளுக்கு இடையில் திருவலம் மௌனசுவாமிகள் கட்டுவித்த சுதையாலான பெரிய நந்தியும் கிழக்கு நோக்கியே உள்ளது. நேரே நின்று மூலவரைத் தரிசிக்க முடியாதவாறு மறைக்கின்றது. கருவறைச்சுவரில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேசுவரர் சந்நிதி, 63 மூவரின் உற்சவ, மூலத்திருமேனிகள் மேலும் கீழுமாக இருவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன. கருவறை மண்டபத்தில் சங்கரநாராயணர் திருவுருவம் உள்ளது. சுவாமி சந்நிதிக்கு அருகே தொட்டி போன்ற அமைப்பிலான பள்ளத்தில் பாதாளேஸ்வரர் சந்நிதி உள்ளது. இதில் சிவலிங்கம் நந்தி, விநாயகர் மூலத்திருமேனிகள் உள்ளன. பஞ்சம் நேரின் இப்பெருமானுக்கு ஒரு மண்டலகாலம் அபிஷேகம் செய்யின் மழை பெய்யும். இங்குள்ள மூலவருக்கு நேர் எதிரில் நந்தீஸ்வரருக்கும், சுவாமிக்கும் இடையில் தட்சிணாமூர்த்தியின் சீடர்களில் ஒருவரான சனகரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. மூலஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே திருவுருவங்கள் அமைந்துள்ளன. மேற்குப் பிராகாரத்தில் சகஸ்ரலிங்கம் அருகில் வள்ளி தெய்வானை உடனாய சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. அருணகிரிநாதர் இந்த முருகப் பெருமான் மீது திருப்புகழ் பாடியுள்ளார். அம்பிகை சந்நிதியில் அம்பிகைக்கு இருபுறமும் மகாவிஷ்ணு நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.

ஒரு காலத்தில் வில்வக்காடாக இருந்த இப்பகுதியில் ஒரு பாம்புப் புற்றில் நாள்தோறும் பசு ஒன்று வந்து இப்புற்றில் பாலை சொரிந்தது வழிபட்டது. அதனால் புற்று சிறிது சிறிதாக கரைந்து நாளடைவில் சிவலிங்கம் வெளிப்பட்டது. இவரே வில்வநாதேஸ்வரர். தெய்வீகத் தன்மை வாய்ந்த நெல்லிக்கனியை இத்தலத்தில் தான் ஒளவையார் பெற்றார். விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து அற்புத மாங்கனியை இத்தலத்தில் பெற்றார். தலத்திலுள்ள சனிபகவான் சந்நிதிக்குப் பக்கத்திலுள்ள விநாயகர் சந்நிதியில் சதுரபீடத்தின்மேல் பத்மபீடம் அமைய அதன்மீது அமர்ந்த நிலையில் இறைவனிடம் கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில் துதிக்கையில் மாங்கனியுடன் விநாயகர் காட்சி தருகிறார். விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இவ்வூருக்கு திருவலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது.

நந்தியெம்பெருமான் இத்தலத்தில் சுவாமியை நோக்கியிராமல் வெளி நோக்கி இருப்பதற்குரிய காரணத்தை தலபுராணம் விவரிக்கிறது. அடியவர் ஒருவர் இத்தலத்திலிருந்து சுமார் 5 கி.மி. தொலைவலுள்ள கஞ்சனகிரி மலையிலுள்ள திருக்குளத்திலிருந்து இறைவன் அபிஷேகத்திற்கு தினமும் நீர் எடுத்து வருவது வழக்கம். கஞ்சன் எனும் அசுரன் அடியவரை நீர் எடுக்கவிடாமல் துன்புறுத்தவே மனம் வருந்திய அவர் இறைவனிடம் முறையிட்டார். சிவபிரான் நந்திதேவரை அனுப்பினார். நந்தியெம்பெருமான் அசுரனை தன் கொம்புகளால் குத்தி எட்டு பாகங்களாக கிழித்து போட்டார். சிவனிடம் சாகா வரம் பெற்றிருந்த அந்த அசுரன் நந்தியின் தாக்குதலில் இருந்து தப்பி விட்டான். கஞ்சனகிரியில் அசுரனின் குருதி பட்ட இடத்திலெல்லாம் இறைவனருளால் அவ்விடத்தைப் புனிதப்படுத்த சிவலிங்கங்கள் உண்டாயின. இன்றும் இம்மலையில் குளக்கரையில் எண்ணற்ற சிவலிங்கங்கள் இருப்பதையும் பூமியை தோண்டினால் சிவலிங்கங்கள் கிடைக்கின்றது.

கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க வில்வநாதேஸ்வரர் தைப்பொங்கல் கழித்த 3ம் நாள் கஞ்சனின் உடலுறுப்புகள் விழுந்த எட்டு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்கு எழுந்தருளி கஞ்சனுக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கஞ்சனால் மீண்டும் இன்னல் வராமல் தடுக்கவே நந்தி சிவனை நோக்கி இராமல் கோயில் வாசலை நோக்கி திரும்பி இருக்கின்றார். காஞ்சனகிரி மலையில் ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஜோதி ஒன்று பிரகாசமாகத் தோன்றுகிறது. சித்திரை, தை மாதங்களில் இந்த ஜோதி நன்கு தெரியும். சிவனின் பெயர் வில்வநாதேஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது. இங்குள்ள அம்பாளுக்கு ஆதியில் தீக்காலி அம்பாள், ஜடாகலாபாம்பாள் என்ற பெயருடன் உக்கிர வடிவிலிருந்த இந்த அம்பாளை ஆதி சங்கரர் சாந்தப்படுத்தினார். இங்குள்ள இறைவனை விஷ்ணு வழிபட்டதால் விஷ்ணுவின் பாதம் பத்மபீடத்தில் கொடிமரத்தின் முன்பு உள்ளது. கோயிலுள் நாகலிங்கப் பூக்கள் பூக்கும் நாகலிங்க மரம் உள்ளது. கருவறைச் சுவர்களில் கல்வெட்டுக்கள் நிறைய உள்ளது. திருஞானசம்பந்தர் பதிகத்தில் திருவல்லம் என்றும் அருணகிரிநாதரின் திருப்புகழில் திருவலம் என்றும் இத்தலம் குறிக்கப்படுகின்றது.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 242 திருப்பனங்காடு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 242 வது தேவாரத்தலம் திருப்பனங்காடு. புராணபெயர் வன்பார்த்தான் பனங்காட்டூர், திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனங்காடு. மூலவர் தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர் என இரண்டு மூலவர்களும் கிழக்கு நோக்கி உள்ளார்கள். இரு சுவாமி சந்நிதிகளும் கஜப்பிரஷ்ட விமான அமைப்புடன் மூன்று கலசங்களுடன்உ ற்சவர் சோமஸ்கந்தர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் கிருபாநாயகி, அமிர்தவல்லி என இரண்டு அம்பாள்கள் உள்ளார்கள். அமிர்த வல்லி உயரமாகவும், கிருபாபுரியம்பாள் சற்று உயரம் குறைந்தவளாகவும் இருக்கின்றனர். தலமரம் பனைமரம். தீர்த்தம் ஜடாகங்கை, சுந்தரர் தீர்த்தம், ஊற்று தீர்த்தம். கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் வெளிப் பிரகாரமும் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மற்றும் அதைத் தொடர்ந்து 3 நிலை கோபுரத்துடன் உள்ள இரண்டாவது நுழைவு வாயில். இதன் வழியாக உள்ளே சென்றவுடன் நாம் எதிரில் காண்பது கிருபாநாதேஸ்வரர் சந்நிதி. வெளிப் பிரகாரத்தில் உள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றின் இடதுபுறம் மற்றுமொரு பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளது. இந்த இரண்டாவது கொடிமரத்தின் எதிரே ஆலயத்தின் உள் மதிலில் ஒரு சாளரம் உள்ளது. உள் பிரகாரத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் தாலபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது.

கயிலை மலையில் சிவன் பார்வதி கல்யாணம் நடைபெறும் சமயம் தேவர்கள் எல்லோரும் அங்கு கூடியதால் பாரம் அதிகரித்து வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை நோக்கிச் செல்லும் படி சிவபெருமான் பணித்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ஈசன் தாலபுரீஸ்வரர் என்ற பெயரில் இஙகு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இச்சந்நிதி துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் அகத்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. தாலபுரீசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இச்சந்நிதியில் சண்டேசுவரர் இல்லை. அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்த போது தாளபுரீஸ்வரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று போற்றப்படுகிறார்.

கிருபாநாதேஸ்வரர் சந்நிதியிலும் துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் புலஸ்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் உள்ளன. கிருபாநாதேசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். சண்டேசுவரர் தனி விமானத்துடன் உள்ளார். கிருபாநாதேசுவரர் கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு இடக்காலை மேலே உயர்த்திக் குத்துக்காலிட்டு சின்முத்திரை பாவத்தில் அபயகரத்துடன் வரதகரமும் கூடி காட்சி தருகின்றார். அகத்தியர் தான் ஸ்தாபித்த இறைவன் தாலபுரீஸ்வரருக்கு பனம்பழம் படைத்து வழிபட்டதால் பனைமரமே தலமரமாக உள்ளது. இதனாலேயே இறைவன் பனங்காட்டீசர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உயிருள்ள பனைமரங்களை வெட்டுபவர்கள் தண்டனைக்கும், தோஷத்திற்கும் உள்ளாவார்கள் என்று இத்தலத்திலுள்ள கலவெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதானத் தல விருட்சமாகிய ஆதி பனை மரங்கள் இரண்டும் கோயிலுக்கு வெளியில் உள்ள கோட்டை முனீஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ளன.

அமிர்தவல்லி அம்பாள் சந்நிதியின் முன்புள்ள கல்தூணில் நாகலிங்கச் சிற்பம் உள்ளது. உள் வாயிலுக்கு வெளியில் உள்ள ஒரு தூணில் இராமருடைய சிற்பம் உள்ளது. உள்மண்டபத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்புள்ள ஒரு தூணில் வாலி, சுக்ரீவர் போரிடும் சிற்பம் உள்ளது. இராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவ போர்ச்சிற்பம் தெரிகிறது. ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்திடம் நின்று பார்த்தால் பார்வைக்கு இராமர் சிற்பம் தெரியவில்லை. கிருபாபுரீஸ்வரர் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்கள் தாமரை பீடங்களின் மீது நின்றிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. சூரியனின் உடலில் நந்தி போன்றும் சந்திரனின் தலையில் பிறைச்சந்திரன் இருப்பதும் யானை மீது ஐயப்பன் அமர்ந்திருக்கின்றார்.

அகத்தியர் தெற்கு நோக்கி வரும்போது இவ்விடத்தில் சிவனை வழிபட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. சிவனை மானசீகமாக எண்ணி வழிபட்டார். அப்போது அருகிலுள்ள ஒரு வேம்பு மரத்தின் அடியில் தான் சுயம்பு லிங்கமாக இருப்பதாக சிவன் அசரீரியாக ஒலித்தார். அகத்தியர் அங்கு சென்று பார்த்தபோது வேம்பு மரத்தின் அடியில் முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அகத்தியரைக் கண்ட முனிவர் அவரிடம் வேம்பு மரத்தின் அடியில் இருந்த சுயம்பு லிங்கத்தை காண்பித்து விட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்து விட்டார். அகத்தியர் லிங்கத்திற்கு பூஜை செய்ய எண்ணினார். ஆனால் அங்கு தண்ணீர் இல்லை. அகத்தியரின் மனதை அறிந்த சிவன் தன் தலையில் இருந்து கங்கை நீரை இவ்விடத்தில் பாய விட்டார். அந்நீர் தீர்த்தமாக அருகில் தேங்கியது. இப்போது இந்த தீர்த்தம் ஜடாகங்கை தீர்த்தம் என்ற பெயரில் கோயிலுக்கு அருகில் இருக்கிறது. அதில் இருந்து நீரை எடுத்த அகத்தியர் சிவனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினார். பின் சிவனுக்கு படைக்க பழங்கள் இல்லாததால் அருகில் பழம் இருக்கிறதா என்று தேடினார் அகத்தியர். சிவன் அருகில் இருந்த பனை மரத்தில் இருந்து கனிகளை உதிரச்செய்தார். அகத்தியர் அதனை சுவாமிக்கு படைத்து வணங்கினார். அகத்தியரின் பூஜையில் மகிழ்ந்த சிவன் அவருக்கு காட்சி தந்தருளினார். பனங்காட்டில் எழுந்தருளியவர் என்பதால் தாளபுரீஸ்வரர் (தாளம் என்றால் பனை என்று பொருள்) என்று பெயர் பெற்றார்.

சிவதலயாத்திரை வந்த சுந்தரர் காஞ்சிபுரத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து கொண்டிருந்தார். வரும்போது நண்பகல் பொழுதாகி விடவே சுந்தரரும் அவருடன் வந்தவர்களும் பசியால் களைப்படைந்தனர். சிவன் ஒரு முதியவர் வடிவில் சென்று வழியில் ஓரிடத்தில் பசியாற உணவு கொடுத்தார். அவரிடம் சுந்தரர் உண்ண உணவு கொடுத்த நீங்கள் பருகுவதற்கு நீர் தரவேண்டாமா என்றார். அம்முதியவர் உங்களுக்கு நீர் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு சற்று நகர்ந்தார். அவர் நின்றிருந்த இடத்தில் நீர் ஊற்றாக பொங்கியது. வியந்த சுந்தரர் முதியவரிடம் தாங்கள் யார் என்றார். அதற்கு முதியவர் உன் திருமணத்தில் வம்பு செய்த நான் பனங்காட்டில் குடியிருப்பவன் என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். தனக்கு உணவு படைத்து பசியை போக்கியது சிவன் என அறிந்த சுந்தரர் மகிழ்ச்சி கொண்டார். அவ்விடத்தில் நந்தியின் கால் தடம் மட்டும் தெரிந்தது. அதனை பின்தொடர்ந்து வந்த சுந்தரர் இத்தலத்திற்கு வந்து சிவனை வணங்கி வம்பு செய்பவன் கள்ளன் என்று அவரை உரிமையுடன் திட்டி பதிகம் பாடினார். சுந்தரருக்காக சிவன் பாதத்திற்கு அடியில் உருவான தீர்த்தம் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது. எப்போதும் நீர் வற்றாத இந்த தீர்த்தம் சுந்தரர் தீர்த்தம் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. வடலூர் வள்ளளார் பாடலிலும், பட்டினத்தடிகளின் திருவேகம்பர் திருவந்தாதியிலும் இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது. விஜயநகர மன்னர்கள், முதலாம் இராசேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்து 22 கல்வெட்டுக்கள் உள்ளது. கல்வெட்டில் இறைவன் திருப்பனங்காடுடைய நாயனார் என்றும் ஊர்ப்பெயர் காலியூர்க் கோட்டத்து கழுமலநாட்டுத் திருப்பனங்காடு என்றும் குறிக்கப்படுகிறது. சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 241 செய்யாறு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 241 வது தேவாரத்தலம் செய்யாறு. புராணபெயர் திருவோத்தூர், திருஓத்தூர். மூலவர் வேதபுரீஸ்வரர், வேதநாதர்.. இறைவன் இத்தலத்தில் சதுர ஆவுடை வடிவத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தினந்தோறும் இறைவன் மீது சூரியஒளிக்கதிர் படும். அம்பாள் பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி. அம்பாள் கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரை மொட்டும், அபய அஸ்தம், வரத அஸ்தம் ஆகியவற்றோடு காட்சி தருகிறார். தலமரம் பனைமரம். தீர்த்தம் மானச தீர்த்தம், கல்யாண கோடி, திருகுளம், சேயாறு. சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. இதனால் இந்த ஊர் செய்யாறு என அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் 9 வாயில்களை கடந்து மூலவரை தரிசிக்க முடியும். சேயாற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வாலயம் 5 ஏக்கர் நிலப்பரளவில் கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. இராஜகோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நீண்ட முன் மண்டபம் உள்ளது. அதையடுத்து 2வது கோபுரம் 5 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. முன் மண்டபத்திற்கும் 2வது கோபுர வாயிலுக்கும் இடையே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. நந்தி சுவாமியை நோக்கியில்லாமல் முன் கோபுரத்தைப் பார்த்தபடி கிழக்கு நோக்கி காட்சியளிக்கறது.

இறைவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை ஓதுவிக்கும் போது தக்கவர் தவிர வேறு யாரும் உள்ளே வராமல் தடுக்கவே இவ்வாறு நந்தி திரும்பி இருந்தார். வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குப் பிராகாரத்தில் தலமரம் பனை ஓங்கி வளர்ந்துள்ளதைக் காணலாம். பனையைத் தலமரமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள் ஐந்தினுள் இத்தலமும் ஒன்று. கோயிலின் மகாமண்டபத்தில் நின்றால் சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவகிரகங்கள், தலமரம் என்று இவை எல்லாவற்றையும் காணலாம். ஒரே இடத்தில் நின்று இவர்கள் அனைவரையும் தரிசிக்கலாம். சண்டேஸ்வரர் ஒரு காலை மடக்கி ஒரு காலைத் தொங்கவிட்டு ஒருகையில் மழுவுடன் ஒரு கையை மடக்கிய காலின் தொடை மீது வைத்தவாறு காட்சி தருகிறார். சிவபெருமான் வீரநடனம் புரிந்த தலம் இதுவாகும். சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதப்பொருளை விளக்கி அருளிய காரணத்தால் இத்தலம் திருவோத்தூர் எனப்பட்டது. இத்தலவிநாயகர் நர்த்தனவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு வேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை திருஞானசம்பந்தர் மீது ஏவினர். திருஞானசம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப்பாம்பினை பிடித்து மறைந்தார். இதனால் இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நாகலிங்கத்தில் கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதற்கு மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானை, அதற்கு மேல் 11 சர்ப்பம், அதற்கு மேல் லிங்கம் அதற்கு மேல் 11 சர்ப்பத் தலைகள் உள்ளது. பஞ்சபூத தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கின்றது. கோவிலில் உள்ள 8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும். சிவாலயத்துள்ளேயே ஆதிகேசவப்பெருமாள் சந்நிதியும் இருக்கிறது. முருகப் பெருமான் இறைவனை பூஜித்த தலங்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமான் சந்நிதிக்கு வாயு மூலையில் ஆறுமுகர் சந்நிதி உள்ளது. இங்கு முருகர் 12 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி காட்சி கொடுக்கின்றார். இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார்.

ஒத்து என்றால் வேதம் மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை ஈண்டு இறைவன் ஓதுவித்தான். நமது நிரந்தரத் தாய் தந்தையாகிய சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலால் ஓத்தூர் என அழைக்கப்படுகிறது. அதில் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருவோத்தூர் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சேயாற்றின் கரையில் உள்ளது. ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு அதனால் கோயிலின் சுவர்கள் பாழானது. இதனால் வருத்தமடைந்த சிவனடியார் ஒருவர் ஆற்றின் கரையை உயர்த்தி கரை கரைந்து போகாமல் இருக்க பனங்கொட்டைகளை நட்டு பனைமரங்களை வளர்த்து வந்தார். பனைமரங்கள் அனைத்தும் ஆண்பனைகளாக இருந்தன. இதனால் நுங்கு முதலிய பயன்கள் கிடைக்கவில்லை. இதைக்கண்ட சிலர் சிவனடியார்களிடம் எல்லாம் ஆண் பனையாக இருக்கிறது. ஒரு பெண் பனை கூட இல்லை. உமது சிவனின் அருள் இது தானோ? என கேலி செய்தனர். இதனால் வருத்தமடைந்த சிவனடியார் திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது இது பற்றி கூறினர். உடனே திருஞானசம்பந்தர் பதிகம் பாடினார். இறுதிப்பாடலில் குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர் என முடித்தார். அப்போது ஆண்பனைகள் பெண் பனைகளாக மாறி குலை தள்ளின. இந்த அதிசயத்தை கண்டவர்கள் சைவர்களாக மாறினர். தேவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தினால் இத்தலத்தில் பனை மரங்களாக பிறந்து சாப விடுதலைக்காக காத்திருந்தனர். அப்போது திருஞானசம்பந்தர் இறையருளால் ஆண்பனையை பெண்பனையாக்கினார். இவை அனைத்தும் ஒரு காலகட்டத்தில் சிவபதம் பெற்றன என தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக அம்மன் சன்னதிக்கு முன் கருங்கல் பனைமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

தலவிருட்சமாகிய அப்பனைகள் இன்றும் காய்த்து கனிந்து குலுங்குகின்றன. தந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம் கேட்டு வர புறப்பட்டாள். இதற்கு சிவன் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அவரது சொல்லை மீறி யாகத்திற்கு சென்று அவமானத்துடன் திரும்பினாள் பார்வதி. இந்த பாவச் செயல் தீர இத்தலத்தில் தங்கி தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள். விசுவாவசு என்னும் மன்னனிடம்தோற்று ஓடி காட்டில் திரிந்த தொண்டைமான் என்னும் மன்னன் வேதபுரீஸ்வரரைத் துதித்து வழங்கினான். இறைவன் காட்சி தந்து அவனுக்கு அதிக பலத்தையும் சேனைகளையும் அருளி விசுவாவசுவுடன் போரிட்டு வெற்றி பெருமாறு பணித்தார். இதனை கேட்ட மன்னன் எங்ஙனம் போரிடுவேன் என்று அஞ்சியபோது நந்தி உனக்கு படைத் துணையாக வருவார் நீ அதற்கு முன்பாக யாம் கொடுத்த சேனைகளோடு சென்று போரிடுவாயாக என்றார். மேலும் நாம் கூறியதில் உன் மனத்திற்கு சந்தேகமிருப்பின் சாட்சி காட்டுகின்றேன் நீ போய்ப்பார் அந்த நந்திதேவன் கீழ்த்திசை நோக்கியிருக்கின்றார் என்றார். அவ்வாறே தொண்டைமான் வந்து பார்க்க அவனுக்கு படைத்துணையாகும் நிலையில் மேற்கு நோக்கியிருந்த நந்திதேவர் கீழ்த்திசையில் திரும்பியிருப்பதைக் கண்டு பயம் நீங்கினான். இறைவன் நந்தியைத் தளபதியாக்கி சிவகணங்களைக் குதிரைகள் யானைகள் தேர்களைச் சேனைகளாகச் செய்து தந்து தொண்டடைமானைப் போர்க்கு அனுப்ப அவனும் அவ்வாறே சென்று விசுவாவசுவை வென்றான்.

ராஜாதிராஜன், குலோத்துங்கன், ராஜேந்திரன், விக்ரமசோழன் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. கல்வெட்டில் இறைவன் ஓத்தூர் உடைய நாயனார் என்று குறிக்கப்படுகின்றார். மேலும் வழிபாட்டிற்கும் நிவேதனத்திற்கும் அர்ச்சகர்க்கும் நிலம் விடப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களால் தெரியவருகின்றன. திருவோத்தூர்த் தலபுராணம் இயற்றியவர் கருணாகரக் கவிராயர். விநாயகர், முருகன், வயிரவர், திருமால், பிரமன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வேதபுரீஸ்வரரை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் பாடியுள்ளார்கள்.

உருவ வழிபாடு

ஒரு முறை சுவாமி விவேகானந்தர் ஆல்வார் சமஸ்தானத்து அரசனைச் சந்தித்தார். சுவாமி எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. மண்ணையும் மரத்தையும் கல்லையும் கட்டையையும் ஏன் வணங்க வேண்டும் என்று ஏளனக் குரலில் கேட்டார் அங்கிருந்த திவான். இந்த கேள்விக்குப் பதில் சொல்லாமல் சுவரில் தொங்கிய ஒரு படத்தை எடுத்து வரும்படி திவானிடம் சொன்னார் விவேகானந்தர்.

படத்தைக் கொண்டு வந்த திவானிடம் இது யாருடைய படம் என்றார். அரசரின் படம் என்றார் திவான். அவரிடம் இந்தப் படத்தின் மேல் எச்சில் துப்புங்கள் என்றார் விவேகானந்தர். அரசரும் திவானும் அதிர்ந்தனர். இது அரசரின் படம்தானே அரசர் இல்லையே. எலும்பும் சதையும் ரத்தமும் இல்லாத வெறும் காகிதப் படத்தின் மீது ஏன் காறி உமிழத் தயங்குகிறீர்கள் இந்தப் படத்தில் அரசரை நீங்கள் தரிசிக்கிறீர்கள். ஆனால் இந்தப் படமே அரசர் இல்லை என்பதை அறிவீர்கள். ஆனாலும் அரசருக்கு உரிய மரியதையை கொடுப்பீர்கள்

மக்களும் அப்படித்தான் மண்ணிலும் கல்லிலும் வெவ்வேறு வடிவங்களில் அவர்கள் கடவுளைக் கண்டு வழிபடுகின்றனர் என்று விளக்கினார் சுவாமி விவேகானந்தர்.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -17

பீஷ்மர் துரியோதனனை அருகில் அழைத்தார். அர்ஜூனனின் ஆற்றலைப் பார்த்தாயா தெய்வ பலம் பெற்றவன் இவன். இவனிடம் சிவனின் பாசுபத அஸ்திரம் உள்ளது. விஷ்ணுவின் நாராயண அஸ்திரம் உள்ளது. அது மட்டுமின்றி அனுமனின் ஆற்றலைப் பெற்ற பீமனின் வல்லமையும் உனக்குத் தெரியும். இப்போழுதாவது நீ சமாதானமாய் போய் விடு. அவர்கள் நாட்டை அவர்களிடம் ஒப்படைத்து விடு. இப்போர் என்னுடன் முடியட்டும் என்றார். இல்லையென்றால் நீயும் உன் சகோதரர்கள் உனது சேனைகள் அனைத்தும் துடைத்து தள்ளப்படுவீர்கள் என்று எச்சரித்தார்.

துரியோதனன் சிறிது நேரம் மௌனமாக இருந்தான். பீஷ்மர் அவ்வாறு கூறியது அவனுக்கு பிடிக்கவில்லை. தனக்கு ஒரு உதவி புரிவதற்கு பதிலாக பாட்டனார் தான் விஷயத்தில் ஏனோ தானோ என்று இருந்து விட்டார் என்று அவன் எண்ணினான். அந்த சூழ்நிலையிலும் பீஷ்மரின் அறிவுரையை துரியோதனன் ஏற்கவில்லை.

பீஷ்மர் யோக சாதனங்களும் தாரணை என்னும் சாதனையை கையாண்டார். காயப்பட்டு இருக்கும் தம் உடம்பிலிருந்து அவர் இப்பொழுது தம்முடைய மனதை பிரித்துக் கொண்டு ஆத்மா தியானத்தில் மூழ்கினார். பத்தாம் நாள் யுத்தம் பீஷ்மரின் வீழ்ச்சியுடன் குருக்ஷேத்திர போரில் மிகப்பெரிய இழப்பாக முடிந்தது. அனைவரும் பிரிந்து சென்றனர்.

நள்ளிரவில் பீஷ்மரின் அருகில் யாரும் இல்லை. அப்போது கர்ணன் ஓடிவந்து அவர் பாதங்களில் வீழ்ந்து அழுதான். ராதையின் மைந்தனான நான் சில சமயங்களில் தங்களுக்கு உண்டான மரியாதையை தர தவறிவிட்டேன். மரியாதை குறைவாக நடந்து கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கதறி அழுதான். அது கேட்ட பீஷ்மர் கர்ணா நீ ராதையின் மகன் அல்ல. குந்தியின் மைந்தன் என்று எனக்கு முன்பே தெரியும். சூரிய குமரன் நீ. இதை நாரதர் எனக்கும் விதுரருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். தக்க காலம் வரும் வரை இதனை மறைத்து வைக்கும்படியும் கூறினார். பாண்டவர்கள் உனக்கு எந்தவித தீங்கும் செய்யவில்லை. காரணமின்றி நீ பாண்டவர்களை பகைத்ததால் நானும் உன்னிடம் கோபமாக நடந்துக் கொண்டேன். பாண்டவர்கள் உன் தம்பியர்கள். நீ யார் என்பதை விளக்கி சொல்வதன் மூலம் இந்த யுத்தத்தை நிறுத்த முடியும். உன்னை வெளிப்படுத்திக்கொண்டு பாண்டவர்களுடன் சேர்ந்து தருமத்தைப் போற்று என்றார்.

நான் குந்தியின் மைந்தன் என்பதை கிருஷ்ணன் எனக்கு அஸ்தினாபுரத்திலேயே தெரிவித்தார். நான் துரியோதனனை மிகவும் நேசிக்கின்றேன். என்னை முழுவதுமாக துரியோதனனுக்கே ஒப்படைக்க விரதம் பூண்டிருக்கின்றேன். அவனுக்காக உயிர் துறக்கவும் தயாராக இருக்கின்றேன். துரியோதனனுக்கு எதிராகப் போர் புரிவதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. துரியோதனனை மகிழ்வூட்டும் பொருட்டு பாண்டவர்கள் மீது அவதூறு கூறினேன். என்னை மன்னியுங்கள் என்றான். கர்ணா அறம் வெல்லும் நீ விரும்பியப்படியே செய் என்று கூறிவிட்டு நித்திரையில் ஆழ்ந்தார் பீஷ்மர்.

பீஷ்ம பருவம் இந்த பகுதியுடன் முடிவடைந்தது அடுத்தது துரோண பருவம்.

கோடிலிங்கேஸ்வரர் கோவில்

கோடிலிங்கேஸ்வரர் 108 அடி உயரம் கொண்ட இந்த சிவலிங்கம் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கமாக கருதப்படுகிறது. இது கர்நாடகத்தின் கோலார் நகரத்தில் உள்ள கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளது.

கடவுள் என்ன செய்வார்

ஒரு கோயிலில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயின. ஆலயக் காப்பாளர் என்ன கடவுள் நீ உன் நகைகளையே உன்னால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே நீ எப்படி உலகத்தைக் காப்பாய் என்று புலம்பி அழுதார்.

அப்போது அங்கே வந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னார். நகைகள் உனக்குத்தான் உயர்வானவையே தவிர கடவுளுக்கு அல்ல. ஒரு பக்தன் தந்தபோது அமைதியாய் ஏற்றுக் கொண்ட தெய்வம் இன்னொருவன் எடுத்துக் கொண்டபோது அமைதியாய் விட்டுக் கொடுத்துவிட்டது. உயர்வாக அதை நினைக்கும் நீதான் காப்பாற்றியிருக்க வேண்டுமே தவிர எதையும் பெரிதாக எண்ணாத பரம்பொருள் அல்ல என்றார்.

Image result for ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -16

அர்ஜூனன் தனது மனதை ஒருமுகப்படுத்தி தைரியத்தை வரவழைத்து தன் முழு பலத்தோடும் ஆற்றலோடும் அம்பை செலுத்தினான். அம்பு காற்றை கிழித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் பீஷ்மரின் கவசத்தைப் பிளந்தது. வாழ்த்துக்கள் அர்ஜுனா உன்னிடம் தோற்பதில் பெருமை அடைகிறேன் என்று போர்க்களம் முழுவதும் கேட்க்குமாறு வாழ்த்தினார் பீஷ்மர். அடுத்த அம்பும் சீறியது. பீஷ்மரின் நெஞ்சு கூட்டை பதம் பார்த்தது. அடுத்தது ஏழு அம்புகள் பீஷ்மரின் மார்பில் பாய்ந்தது. அர்ஜுனன் ஏககாலத்தில் பீஷ்மர் மீது அம்பு மழை பொழிந்தான். அர்ஜூனனின் அம்புகள் பீஷ்மரின் உடலெங்கும் தைத்தன. பீஷ்மர் நிலை குலைந்தார். மாவீரரான பீஷ்மரின் உடல் அர்ஜுனனின் அம்புகளால் துளைக்கப்படுவதை கண்டு துரியோதனன் திகைத்து நின்றான். தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேரிலிருந்து பீஷ்மர் சாய்ந்த போது மலர் மழை பொழிந்தனர்.

கிருஷ்ணனும் அர்ஜுனனும் தவிர வேறு எந்த போர் வீரனாலும் தன் மீது பாணம் செய்ய இயலாது என்று துச்சாதனனிடம் பீஷ்மர் ஏற்கனவே சொல்லி இருந்தார். அவர் சொல்லியபடியே இப்பொழுது நடந்தது. இதை பார்த்த இருகட்சி போர் வீரர்களும் திகைத்துப் போயினர். சிறிது நேரம் யுத்தம் நின்று போனது. பரசுராமரை தோற்கடித்த பீஷ்மர் இப்போது அர்ஜுனன் கையில் தோல்வியடைந்து வீழ்ந்தார். ஆனால் மடிந்து போகவில்லை. சூரியனின் தட்சிணாயண காலம் முடிய சில நாட்கள் பாக்கி இருந்தது. பிறகு சூரியனுடைய உத்தராயண புண்ணிய காலம் துவங்கும். அதுவரையில் உயிரை பிடித்து வைத்திருக்க பீஷ்மர் தீர்மானித்தார். நினைக்கும் போது மரணம் என்னும் இச்சாமிருத்யு என்னும் வரத்தை பீஷ்மர் தன் தந்தையாகிய சாந்தனு மன்னனிடமிருந்து பெற்றிருந்தார். அந்த வரத்தின் படி அவர் அனுமதித்தால் ஒழிய அவரையும் மரணம் அணுகாது. அந்த வரத்தை அவர் இப்போது பயன்படுத்திக்கொண்டார்.

சிவனிடம் வரம் பெற்று பீஷ்மரின் மரணத்திற்கு நானே காரணமாக இருப்பேன் என்று கடந்த பிறவியில் அம்பையாக சபதம் செய்த சிகண்டியின் சபதம் நிறைவேறியது. கீழே வீழ்ந்த பீஷ்மரின் உடல் தரையில் படவில்லை. உடம்பில் தைத்திருந்த அம்புகள் உடல் பூமியில் படாது தடுத்தன. அவர் உடல் பூமியில் படவில்லை என்பதால் தலை தொங்கி கொண்டிருந்தது. அருகில் இருந்தோர் தலயணைக் கொண்டு வந்தனர். ஆனால் அவற்றை விரும்பாத பீஷ்மர் அர்ஜூனனைப் பார்த்தார். புரிந்து கொண்ட அர்ஜூனன் மூன்று அம்புகளை வில்லில் பொருத்தி வானத்தில் செலுத்தினான். அவை நுனிப்பகுதி மேலாகவும் கூர்மையான பகுதி தரையில் பொருந்துமாறும் பூமிக்குள் புதைந்து நின்றன. அத்தகைய அமைப்பு பீஷ்மரின் தலைக்கு பொருத்தமான தலயணையாக அமைந்தன. பீஷ்மர் புன்னகை பூத்தார். கடும் போர் புரிந்த பீஷ்மருக்கு தாகம் எடுத்தது. தனக்கு நீர் வேண்டும் என கேட்டார். பல மன்னர்கள் தண்ணீர் கொண்டு வந்தனர். ஆனால் பீஷ்மர் மறுத்து விட்டார். மீண்டும் ஒரு முறை அர்ஜூனனை நோக்கினார். குறிப்புணர்ந்த அர்ஜூனன் அம்பு ஒன்றை பூமியில் செலுத்தினான். தன் தாயாகிய கங்கா தேவியின் அருளால் கங்கை மேலே பீரிட்டு வந்தது. கங்கை மைந்தன் அந்த நீரைப் பருகினார்.