தீட்சை

அரசன் ஒருவனுக்கு தீட்சை பெற வேண்டும் என்ற ஆசை உண்டானது. தீட்சை பெற வேண்டுமானால் அதற்கு குரு ஒருவரை அனுகி மந்திரதீட்சை பெறுவது முற்றிலும் அவசியம் என்று சாஸ்திரங்கள் கூறுவதை அவன் அறிந்திருந்தான். தொலைதூத்தில் இருக்கும் அந்த பிரம்மஞானியிடம் சென்று மந்திரதீட்சை பெற முடிவு செய்தான். பிரம்ம ஞானியின் ஆஸ்ரமம் இருந்த மலைச்சாரலுக்கிடையே இருந்த குடிலுக்கு சென்றான். முதலில் அவரைப் பணிந்து வணங்கிக் கொண்டவன் எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான். மன்னனை உற்று நோக்கிய பிரம்மஞானி இவன் மந்திரதீட்சை பெறும் போதிய மனப்பக்குவம் இல்லாதவனாத் தெரிகிறான். இவனுக்கு மந்திரதீட்சை கொடுக்கும் தகுதி இப்போது இல்லை என்பதைப் புரிந்து கொண்டுவிட்டார். எனவே அரசனிடம் அரசே நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு உரிய நேரம் இன்னும் வரவில்லை. அதற்கு சில மேலும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நான் இப்போது உங்களுக்கு மந்திரதீட்சை தருவதற்கில்லை என்று கூறினார். அரசன் தனக்கு மந்திரதீட்சை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தனால் ஞானி தீட்சை தராததால் மிகவும் ஏமாற்றத்துடன் அரண்மனைக்குத் திரும்பினான்.

தன் அமைச்சரிடம், எனக்கு பிரம்மஞானி மந்திர உபதேசம் தர மறுத்துவிட்டார். எப்படியும் நான் மந்திரதீட்சை பெற்றாக வேண்டும். அதற்கு வேறு என்ன வழி? கூறுங்கள் என்று கேட்டான். மன்னர் பெருமானே நமது நாட்டில் சாஸ்திரங்களை மிகவும் நன்கு கற்றறிந்த பெரிய சமஸ்கிருத பண்டிதர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரிடம் நீங்கள் தீட்சை பெற்றுக் கொள்ளலாமே என்றார். தாங்கள் விரும்பினால் உடனே அவரிடம் நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு நான் உரிய ஏற்பாடுகள் செய்கிறேன் என்றார் அமைச்சர். மன்னனும் அமைச்சர் சொன்னபடி மந்திர தீட்சை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்தான். அமைச்சர் பண்டிதருடன் தொடர்புகொண்டு உரிய ஏற்பாடுகள் செய்தார். பண்டிதர் ஒரு நல்ல நாளில் அரண்மனைக்கு வந்தார். அவர் மன்னனுக்கு மந்திரோபதேசம் செய்து வைத்தார்.
அவருக்கு அரசன் நிறைய வெகுமதிகள் வழங்கி அனுப்பி வைத்தான். அரசன் தந்த பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொண்ட பண்டிதர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். இப்போது தனக்கு மந்திர தீட்சை கிடைத்துவிட்டது. தனக்கு தீட்சை தர மறுத்த பிரம்மஞானிக்கு இப்போது நான் பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்தான். தன் வீரர்களை அழைத்தான். எனக்கு மந்திரதீட்சை தர மறுத்த பிரம்மஞானியைப் பிடித்து வர கட்டளையிட்டு அனுப்பினான்.

அரசன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள் பிரமஞானியை வீரர்கள். சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அரசன் ஞானியை ஏளனத்துடன் பார்த்து உங்களிடம் எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொண்டேன். எனக்கு உபதேசம் செய்ய மறுத்துவிட்டீர்களே இப்போது என்ன ஆயிற்று தெரியுமா? நான் என்ன மந்திரத்தை உங்களிடம் உபதேசம் பெற வேண்டும் என்று விரும்பினேனோ அதே மந்திரத்தை நான் இப்போது ஒரு பண்டிதரிடம் பெற்றுக்கொண்டேன் என்றான். பிரம்மஞானி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். மன்னன் தொடர்ந்தான். ஓம் நமச்சிவாய இது தானே மந்திரம் இந்த மந்திரத்தை தருவதற்குத் தானே நீங்கள் மறுத்தீர்கள்? இப்போது நான் விரும்பியபடி எனக்கு மந்திரதீட்சை கிடைத்து விட்டது என்றான் ஆணவமாக. அது கேட்ட பிரம்மஞானி அரசே இப்போது நான் சொல்வதுபோல் நீங்கள் சிறிது நேரம் நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார். ஏதும் புரியாத அரசனும் அதையும் பார்க்கலாம் என சம்மதித்தான். பிரம்மஞானி அரசனிடம் அரசே நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தில் நான் சிறிது நேரம் அமர்வதற்கு என்னை அனுமதியுங்கள். அதே சமயம் நீங்கள் நான் இப்போது நின்று கொண்டிருக்கும் இந்த இடத்திற்கு வந்து சிறிது நேரம் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அரசன் பிரம்மஞானி நின்று கொண்டிருந்த இடத்தில் வந்து நின்று கொண்டான். ஞானியோ சென்று சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார்.

பிரம்மஞானி அரியணையில் அமர்ந்தவுடன் அவர் அரசனைச் சுட்டிக்காட்டி அருகில் இருந்த வீரர்களிடம் இவரை உடனே கைது செய்யுங்கள் என்று கட்டளையிட்டார். இவ்விதம் பிரம்மஞானி கூறியதைக் கேட்டு அரசவையில் இருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டார்கள். வீரர்களுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியாது அதிர்ச்சியாக அசையாது நின்றார்கள். இந்த நிலையில் பிரம்மஞானி தன்னைக் கைது செய்யும்படி கூறியதைக் கேட்டு கோபம் கொண்ட அரசன் அரியணையில் உட்கார்ந்திருந்த பிரம்மஞானியை வீரர்களுக்குச் சுட்டிக்காட்டி இவரை உடனே கைது செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். இவ்விதம் அரசன் சொன்னவுடன் வீரர்கள் உடனே சென்று பிரம்மஞானியைக் கைது செய்தார்கள். அப்போது பிரம்மஞானி அரசனைப் பார்த்து சிரித்தபடியே கூறினார். அரசே இப்போது இங்கு நடந்த சம்பவத்தில் உங்கள் கேள்விக்கு உரிய பதில் இருக்கிறது. இதுதான் மெய்ஞ்ஞானி ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவதற்கும் பண்டிதர் ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவதற்கும் உள்ள வேறுபாடு என்றார்.

நான் உங்களைக் கைது செய்யும்படி இங்கிருந்த வீரர்களுக்குக் கட்டளை இட்டேன். ஆனால் என் கட்டளையை அவர்கள் நிறைவேற்றவில்லை. நான் அரசனுக்குரிய அரியணையிலிருந்துதான் உத்தரவு பிறப்பித்தேன் என்றாலும் என் உத்தரவை இங்கு யாரும் பொருட்படுத்தவில்லை நிறைவேற்றவில்லை. மாறாக நீங்கள் அரியணையில் அமராமல் அங்கு நின்றுகொண்டு என்னைக் கைது செய்யும்படி உத்தரவு பிறப்பித்தீர்கள். உடனே உங்கள் கட்டளையை வீரர்கள் நிறைவேற்றத் துணிந்தார்கள். எனவே நான் கூறிய அதே சொற்களை நீங்கள் சொன்னபோது தான் அதற்கு இங்கு பலன் ஏற்பட்டது. நீங்கள் கூறிய அதே சொற்களை நான் இங்கு சொன்னபோதிலும் அதற்கு மதிப்பில்லாமல் போனது. இது போல்தான் அரசே மந்திரோபதேசம் செய்யும்போது குருமார்கள் சீடர்களுக்கு வழங்கும் மந்திரம் ஒரே மந்திரமாக இருக்கலாம். ஆனால் மெய்ஞ்ஞானி ஒருவர் அந்த மந்திரத்தை மந்திர தீட்சையின்போது உரிய முறையில் வழங்கினால்தான் அந்த மந்திரம் உயிர் பெற்று தனக்கு உரிய உண்மையான உயர்ந்த பலனைத் தரும். இறையனுபூதி பெறாத ஒருவர் சாஸ்திரங்களை ஏராளமாகப் படித்தவராக இருக்கலாம். ஆனால்,அவர் ஞானிகள் சொல்லும் அதே மந்திரத்தை உபதேசம் செய்தாலும் அதற்குரிய உயர்ந்த பலன் இருக்காது. தகுதியானவர்கள் உபதேசம் செய்தால் தான் மந்திரம் பலிக்கும் மல மாசு நீங்கும் என்று கூறி முடித்தார்.

உண்மையையுணர்ந்த அரசன் ஞானியை கைது நிலையைத் தவிர்த்து தன் தவறுக்கு வருந்தி இனி திருத்தமாக இருந்து கொள்வதாக அறிவித்தான். தீ என்றால் மலம். ஷை என்றால் ஒழித்தல். மலமாகிய அழுக்கை ஒழிப்பதே தீட்சையாகும். தீட்சைகள் பல வகைப்படும்.

பரிச தீட்சை: ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில் புருவ மத்தியிலும் தலை உச்சியிலும் நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும். உதாரணம் ஒரு பறவை முட்டையிட்டு அதன் மேல் உட்கார்ந்து அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது பரிச தீட்சையாகும்.

நயன தீட்சை: ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும். உதாரணம் ஒரு மீன் முட்டையிட்டு அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை.

பாவானா தீட்சை: ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து சகஜத்திலேயே வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான எண்ணமற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை. உதாரணம் ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும்.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -9

ஐந்தாம் நாள் யுத்தம் தொடங்கியது. பீஷ்மர் தனது சேனையை மகர வியூகத்தில் அமைத்தார். வியூகம் வடிவத்தில் முதலை போன்று இருந்தது. அதை எதிர்த்து திருஷ்டத்யும்னன் தனது சேனேயை சியேன வியூகத்தில் அமைத்தான். வியூகம் வடிவத்தில் பருந்து போன்று இருந்தது. அன்றைக்கு நிகழ்ந்த யுத்தத்திற்கு சங்குல யுத்தம் என்று பெயர். அத்தனை பேரும் அவனவனுக்கு ஏற்ற எதிரியைத் தாக்கி போர் புரிவது சங்குல யுத்தம் ஆகும். யுத்தம் ஆரம்பிக்கும் போது துரியோதனன் துரோணரைப் பார்த்து குருவே நீங்கள் பாண்டவர்களைக் கொல்லும் செயலில் ஈடுபடுங்கள். உம்மையும் பீஷ்மரையுமே நான் நம்பியுள்ளேன் என்றான். அதற்கு துரோணர் பாண்டவரிடம் பகை வேண்டாம் என ஏற்கனவே பலமுறை சொல்லியும் நீ கேட்கவில்லை. ஆயினும் என்னால் இயன்ற அளவு போரிடுவேன் என்றார்.

அர்ஜுனன் ஆயிரக்கணக்கான வீரர்களை வீழ்த்தினார் அவனை எதிர்த்து பயந்தவர்கள் சுடர்விட்டு எரியும் தீயில் பாய்ந்து விட்டில் பூச்சிகள் போன்று மடிந்தார்கள். யுத்தத்தில் பல ஆயிரம் பேர் மாண்டனர். சாத்யகியும் பீமனும் துரோணருடன் சண்டையிட அர்ஜூனன் அஸ்வத்தாமனுடன் போரிட்டான். அபிமன்யூ துரியோதனனின் மகன் லட்சுமணனுடன் போரிட்டான். சூரியன் மறைய அன்றைய போர் முடிந்தது. பாண்டவ மற்றும் கௌரவர்களின் சகோதர இழப்பின்றி யுத்தம் முடிந்தது.

ஆறாம் நாள் போரில் திருஷ்டத்துய்மன் னது சேனையை மகர வியூகத்தில் அமைத்தான். பீஷ்மர் கிரௌஞ்ச வியூகத்தில் அமைத்தார். ஒருவருடன் ஒருவர் போர் புரிந்தனர். பீமன் அன்று சிறப்பாக போரிட்டான். பகைவர்களைக் கொன்று குவித்தான். யானை படைகள் இவன் ஆற்றல் கண்டு மிரண்டது. குதிரை படைகள் தெறித்து ஓடின. பீமன் தன் கையில் இருக்கும் கதாயுதத்தை சுழற்றும் வேகமும் அதில் இருந்து எழுந்த ஓசையும் பலராமனின் சீடன் என்பதை நிருபித்தான். பீமனின் கதாயுதம் இவ்வொரு முறை நிலத்தில் மோதும் போதும் நிலம் அதிர்ந்தது. இதை கண்ட கௌரவ படைகள் அச்சத்தின் உச்சியில் இருந்தனர். அவன் ஆற்றலும் போர் வெறியும் அன்று எல்லை அற்று இருந்தது. பீமனை பார்த்த பீஷ்மர், துரோணர், கிருபர் அனைவரும் இப்படியும் ஒருவர் போர் செய்ய முடியுமா என்று மனதிற்குள் பீமனை பற்றி பெருமை கொண்டனர். துரோணர் இவன் என் சிஷ்யன் என்று கூற அதற்க்கு பீஷ்மர் அவன் என் பேரன் என்று பெருமை கொண்டார். இடையில் கிருபரோ உங்கள் அனைவருக்கும் முன்பு நான் தான் குல குரு ஆதலால் அந்த பெருமை என்னை சேரும் என்று போர்களத்தில் கூற மூவரும் நகைத்து கொண்டனர். பின்பு அவனும் தங்கள் எதிர் அணியில் ஒருவன் என்பதை உணர்ந்து மீண்டும் ஆயுதம் ஏந்தி போரினை தொடர்ந்தார்கள்.

துரியோதனன் பீமனுடன் போர் புரிய நெருங்கினான். அதைக் கண்ட பீமன் துரியோதனா நீ இங்குத்தான் இருக்கிறாயா உன்னைப் போர்க்களம் எங்கும் தேடி அலைந்தேன். இன்றுடன் உன் வாழ்வு முடிந்தது என்று கூறி அவன் தேர்க்கொடியை அறுத்துத் தள்ளினான். இருவருக்கும் பெரும் போர் மூண்டது. இருவரும் தங்களின் கதாயுதத்தால் சண்டை போட்டனர். கதாயுதங்களின் சத்தம் இடியன ஒலித்தது. இருவரின் கதாயுதங்களில் இருந்து வந்த நெருப்பு பொறிகள் பகலில் மின்னல் போல் தெரித்தது.

வைத்தீஸ்வரன் கோவில்

டில்லியை நவாப்கள் ஆண்ட கால சமயத்தில் அங்கிருந்து பெரும் படைகளுடன் புறப்பட்டு வழிநெடுக ஆங்காங்கே கோயில்களில் இருக்கும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை கொள்ளையடித்துக் கொண்டே வந்தனர். அப்படி வரும்பொழுது தமிழகத்திலும் புகுந்து சிதம்பரத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலை நெருங்கியது. அப்போது படைத்தளபதிக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. பல்வேறு வைத்தியம் செய்தும் வலி குறையவில்லை. இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியுள்ள செல்வ முத்துக்குமார சுவாமியின் ஆபரணங்களை பாதுகாத்து வந்த சரவணபிள்ளை முத்துக்குமரா கொடியவன் நெருங்கி விட்டார்களே அருள் வடிவான உன் மகிமை அறியாமல் உன் ஆபரணங்களை அள்ளிக் கொண்டு போய் விடுவார்களே என்று முறையிட்டு அழுதார். அப்படியே தரையில் படுத்து தூங்கி விட்டார். அவர் கனவில் முருகப்பெருமான் எழுந்தருளி சரவணா வருத்தங்கொள்ளாதே அத்தளபதிக்கு கடுமையான வயிற்று வலியை உண்டாக்கியுள்ளது. நாளை காலை இப்பொட்டலத்திலுள்ள மருந்தை அவருக்கு கொடுத்து அவனை விழுங்கச் செய் என்று கூறி மறைந்தார்.

கண்விழித்துப் பார்த்த சரவணப்பிள்ளையின் கையில் ஒரு பொட்டலம் இருந்தது. விடிந்ததும் தளபதி இருந்த முகாமிற்கு சென்று காவலர்களிடம் உங்கள் தளபதியின் வயிற்று வலியை தீர்க்க என்னிடம் மருந்து உள்ளது என்றார். அவரை அழைத்துச் சென்று தளபதியிடம் விஷயத்தை கூறினர். ஐயா என் வயிற்று வலியை உங்கள் மருந்து தீர்த்து வைத்தால் உங்களுக்கு தகுந்த சன்மானம் அளிப்பேன் என்றார் தளபதி. தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பிரித்தார் சரவணப்பிள்ளை. அதில் வைத்தீஸ்வரன் கோவில் பிரசாதமான திருச்சாந்து உருண்டை இருந்தது. அதை தளபதியிடம் கொடுத்து உண்ண சொன்னார். சாப்பிட்ட மறுநொடி தளபதியின் வயிற்றுவலி காணாமல் போனது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த தளபதி வேண்டியதைக் கேளுங்கள் என்றார். சரவணபிள்ளையும் முருகப்பெருமான் தன் கனவில் சொன்னதை விவரித்துக் கூறினார். இதைக் கேட்டதும் மெய் சிலிர்த்தான் தளபதி தன்னிடம் இருந்த முத்துப்பந்தல், ஆலவட்டம், தண்டு, குடை, கொடி மற்றும் சாமரம் ஆகியவற்றுடன் ஏராளமான செல்வத்தையும் முருகப்பெருமானுக்கு சமர்ப்பித்தார். இதை நினைவுறுத்தும் விதமாக இன்றும் செல்வ முத்துக் குமார சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும் காலங்களில் தண்டு, குடை, கொடி, ஆல வட்டம் மற்றும் சாமரம் ஆகியவற்றைக் கொண்டு உபச்சாரம் நடைபெறுகிறது.

Image result for வைத்தீஸ்வரன் கோயில் செல்வ முத்துக்குமாரசுவாமி

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -8

அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் நாள்தோறும் நீ எனக்கு யுத்ததில் நடக்கும் செய்திகளை எடுத்துக் கூறுகின்றாய். யுத்தம் செல்லும் போக்கில் போனால் என் மகன் எவ்வாறு வெற்றி பெறப்போகிறான். இன்று எனது மகன்கள் 8 பேரை பீமன் கொன்று விட்டான். இது எனக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது என்றான். அதற்கு சஞ்சயன் உண்மையை எடுத்துரைக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த விபத்தை நீங்களாகவே வரவழைத்துக் கொண்டார்கள் என்றான்.

நான்காம் நாள் போரின் முடிவில் இரவில் துரியோதனன் மிகவும் துன்பத்தில் மூழ்கியவனாக இருந்தான் அவனால் தூங்க முடியவில்லை பீஷ்மருடைய கூடாரத்திற்கு மெதுவாக நடந்து சென்றான். பீஷ்மரிடம் சென்ற துரியோதனன் நீங்களும் துரோணரும் கிருபரும் இருந்தும் என் தம்பியர் 8 பேர் மாண்டார்கள். பல வீரர்கள் உயிர் இழந்தனர். பாண்டவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று வருத்தத்துடன் கேட்டான். அதற்கு பீஷ்மர் இது குறித்து பலமுறை உன்னிடம் எச்சரிக்கை பண்ணியிருக்கிறேன். போரில் பாண்டவர்களே வெற்றி பெருவார்கள். நீ தோல்வியடைவாய். பாண்டவர்களுடன் சமாதானமாகப் போவதே நன்று என பலமுறை வற்புறுத்தியும் இருக்கிறேன்.

பாண்டவர்களிடம் நீ வைத்திருக்கும் பகைமையும் அநீதியுமே உன்னை கீழ்நிலைக்கு இழுத்துச் செல்கின்றன. பாவி ஒருவனை மண்ணுலகும் விண்ணுலகும் ஒன்று கூடினாலும் காப்பாற்ற முடியாது. பாண்டவர்கள் தர்மத்திலிருந்து இம்மியளவும் பிசகாதவர்கள். ஆகையால் கிருஷ்ணன் அவர்களை காப்பாற்றி வருகின்றான். எங்கு கிருஷ்ணர் உள்ளாரோ அங்கு தர்மம் இருக்கிறது. எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கிறது. கிருஷ்ணனோ நாராயணனுடைய அவதார மூர்த்தி. உலகிலுள்ள கயவர்களை எல்லாம் அழித்துத்தள்ள அவன் தீர்மானிக்கின்றான். நீ புரிந்துள்ள பாவச்செயலின் விளைவிலிருந்து நீ தப்பித்துக் கொள்ளமாட்டாய் இது உண்மை. பாண்டவர்களுடன் நீ சமாதானம் செய்து கொள். இல்லையேல் நீயும் அழிந்து போவாய். இப்பொழுதும் கூட நிலைமை தலைக்கு மேல் போய்விடவில்லை. நீ தீர்மானித்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவகாசம் இருக்கிறது என்றார். துரியோதனன் சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தான். பிறகு அவருடைய கூடாரத்தை விட்டு அவன் கிளம்பி சென்றான். இரவெல்லாம் அவனுக்கு உறக்கம் இல்லை. ஆனால் தன்னை தானே திருத்தி அமைத்துக் கொள்ளும் எண்ணம் அவனுக்கு வரவில்லை.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 240 திருமாகறல்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 240 வது தேவாரத்தலம் திருமாகறல். உற்சவர் சோமாஸ்கந்தர், நடராஜர். மூலவர் திருமாகறலீஸ்வரர், அடைக்கலங்காத்த நாதர், உடும்பீசர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மகம்வாழ்வித்தவர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு. இறைவன் உடும்பின் வால் போன்று காட்சி அளிக்கிறார். அம்பாள் திரிபுவனநாயகி, புவனநாயகி. தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் தலமரம் எலுமிச்சை. தீர்த்தம் அக்னி. செய்யாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகரங்களுடனும் இவ்வாலயம் உள்ளது. பிராகாரத்தில் பொய்யாவிநாயகர், ஆறுமுகர், 63 நாயன்மார்கள், நால்வர், நவக்கிரகங்கள் சந்நிதிகள் உள்ளன. கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், சிறிய தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. விசாலமான வெளிப்பிரகாரம் வலமாக வந்து படிக்கட்டுகளையேறி விநாயகர் மறுபுறம் சுப்பிரமணியர், துவாரபாலகர்கள் உள்ளனர்.

இராஜேந்திர சோழ மன்னருக்கு பென்னுடும்பின் வால் வடிவில் இவ்வாலயத்தின் இறைவன் காட்சியளித்துள்ளார். மூலவரின் விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின் பகுதி) அமைப்பில் அமைந்துள்ளது. விமானத்தில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தி உள்ளார். இத்தலத்தில் முருகப்பெருமான் மயில்மீது ஆறு திருமுகங்களுடன் இருதேவியர் உடனிருக்க வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். முருகப்பெருமான் சூரபத்மன் முதலிய அரக்கர்களை அழிக்க போர் செய்த போது தப்பிப் பிழைத்த மாக்கிரகன் என்ற அசுரன் சிவபூஜை செய்து வந்தான். அவன் இத்தலம் வந்த போது இங்குள்ள இறைவனுக்கு தன் பெயரால் மாக்கிரன் என பெயர் சூட்டினான். இப்பெயர் மருவி மாகறலீசர் என்று மாறியது. திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப்பரிசாக வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத்தம்பதிகளை வெள்ளையானையில் அமரச்செய்து அக்காட்சியை கண்ணாற கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப முருகன் இத்தலத்தில் வெள்ளையானை மீது அமர்ந்து காட்சி தந்தார்.

மும்மூர்த்திகளில் தானே சிறந்தவன் என்று செருக்குற்று இருந்த பிரம்மாவை சிவபெருமான் சபித்தார். தனது சாபம் நீங்க பிரம்மா இத்தலம் வந்து ஒரு லிங்கம் பிரதிஷடை செய்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார். பின்பு சத்தியலோகம் செல்லும் போது ஆண்டு முழுவதும் காய்க்கும் அதிசயப்பலாமரம் ஒன்றை நட்டார். அப்பலாமரம் நாள்தோறும் கனி கொடுத்து வந்தது. ராஜேந்திர சோழ மன்னன் இந்த அதிசய பலாமரத்தைக் கண்டு வியந்து அந்த ஊரிலிருந்து தினமும் ஒருவர் இந்த பழத்தை எடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டான். நடராஜருக்கு இப்பழத்தை மதிய வேளையில் நைவேத்தியம் செய்து அதை மன்னருக்கு கொடுப்பது வழக்கம். தினந்தோறும் வீட்டுக்கு ஒருவர் என்ற முறையில் மன்னனுக்கு சென்று கொடுத்து வந்தனர்.

ஒருமுறை அந்தண சிறுவனின் முறை வந்தது. இந்த மரத்தில் இருந்து தினமும் பழம் பறித்துப் போக மக்களை ஏவும் மன்னன் வேலைக்காரர்களை இதற்கென நியமித்திருக்கலாமே என எண்ணிய அவன் ஒரு தந்திரம் செய்தான். அந்த ஊர் மக்களிடம் நான் சிறுவன் பழத்தை சுமக்க சிரமப்படுவேன் நீங்கள் எல்லோரும் போய் இந்த பழத்தை கொடுத்து வாருங்கள். நான் இங்கிருந்து உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன் என்று கூற அனைவரும் சிதம்பரம் சென்று விட்டனர். இந்த மரம் இருந்தால் தானே பிரச்னை வரும். இதை அழித்து விட்டால் நம் ஊர் மக்கள் தினமும் பழம் சுமக்கும் தொல்லை இருக்காதே எனக் கருதியவன் அந்த மரத்தை எரித்து விட்டான். ஊர் திரும்பிய மக்களிடம் பலாமரத்தில் தானாக தீப்பிடித்து சாம்பலாகி விட்டதாக தெரிவித்தான். ஊராரும் நம்பிவிட்டனர். மறுநாள் பலாப்பழம் சிதம்பரம் செல்லவில்லை. அந்த சிறுவனை அழைத்து மன்னர் விசாரித்தார். அப்போது அவன் பலாப்பழத்தை சிதம்பரம் கொண்டு வருவதற்கு தாங்கள் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எனவே தான் மரத்தை எரித்தேன் என்றான்.அதற்கு மன்னன் தகுந்த வசதி வேண்டும் என நீ இதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதை நீ செய்யாததால் உனது கண்களை கட்டி நாடு கடத்த உத்தரவிடுகிறேன் என்றான்.

காவலர்கள் சிறுவனை அழைத்துச் சென்ற போது மன்னனும் கூடச் சென்று தண்டனை நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்துகொண்டு திரும்பினான். அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விடப்பட்ட ஊர் திருத்தணிக்கும் திருவள்ளுருக்கும் இடையில் விடிமாகறல் என்று வழங்கப்படுகிறது. அரண்மனைக்கு வரும் வழியில் ஓரிடத்தில் பொன்னிற உடும்பு ஒன்று தென்பட்டது. அதை பிடிக்க காவலாளிகள் சென்ற போது அது ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. மன்னன் ஆட்கள் சிலரை அழைத்து புற்றைச் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டான். காவலாளிகள் அந்த புற்றை ஆயுதங்களால் அந்த புற்றை கலைத்த போது உடும்பின் வாலிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது அசரீரி தோன்றி சிறுவன் என்றும் பாராமல் நாடு கடத்தியதற்காக கண்டனக்குரல் எழுந்தது. மன்னன் மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்த மன்னனிடம் மீண்டும் அசரீரி தோன்றி சிவபெருமானே உடும்பாக வந்ததாகவும் அவ்விடத்தில் ஓர் சிவாலயம் கட்டி வழிபாடு செய்யும்படியும் ஆணையிட்டார். மன்னனும் அதன்படியே செய்தான். இன்றும் கூட உடும்பின் வால் அளவிலுள்ள லிங்கம் தான் மூலஸ்தானத்தில் உள்ளது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், விசயகண்ட கோபாலதேவர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளது. கல்வெட்டுக்களில் இத்தலம் சயங்கொண்ட சோழமண்டலத்துப் பொற்கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல் என்றும் கோயிலுக்கு நிலங்கள் விடப்பட்டச் செய்திகளும் குறிக்கப்பட்டுள்ளன. திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை போற்றிப்பாடிய பதிகத்தை உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 239 திருகுரங்கனில் முட்டம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 239 வது தேவாரத்தலம் திருகுரங்கனில் முட்டம். புராணபெயர் திருக்குரங்கணின் முட்டம். மூலவர் வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர். இறைவன் இத்தலத்தில் சிறிய லிங்க உருவில் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை மிகச் சிறியதாக உள்ளது. சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் இறையார் வளையம்மை. இவள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். வாலி, இந்திரன், எமன் ஆகியோர் சிவனை வணங்கும் முன்பு அம்பாளை வணங்கினார்கள். அவர்களுக்கு அருள் செய்யும்படி சிவனிடம் அம்பாள் பரிந்துரை செய்தாள். எனவே அம்பாளுக்கு இப்பெயர் வந்தது. தன்னை வணங்குபவர்களுக்கு வளைந்து கொடுத்துச் செல்பவள் என்ற பொருளில் இப்பெயரால் அழைக்கப்படுகிறாள். திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியிருக்கிறார். தலமரம் இலந்தை. தீர்த்தம் வாயசை தீர்த்தம், காக்கைமடு தீர்த்தம். இந்த தீர்த்தம் எமன் சிவபூஜை செய்வதற்காக காக்கை உருவில் இருந்தபோது தன் அலகினால் பூமியைக் குத்தி உண்டாக்கிய தீர்த்தம்.

இக்கோயில் பாலாற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. மதிற்சுவருடன் கூடிய ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்திருக்கிறது. வாயிலைக் கடந்தவுடன் பலிபீடமும், நந்தி மண்டபமும் இருக்கக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள்வாயிலைக் கடந்து சென்றால் நேரே மூலவர் வாலீஸ்வரர் சந்நிதி உள்ளது. இறைவன் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். உள்பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், காசிவிஸ்வநாதர், பைரவர், சூரியன், நவக்கிரகம், துர்க்கை, சப்தமாதர்கள், நால்வர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள விநாயகர் தாமரை மலர் பீடத்தின் மேல் இருக்கிறார். இந்த பீடத்திற்கு கீழே ஆவுடையாரும் இருக்கிறது. இந்த அமைப்பு விநாயகரை சக்தி தாங்கிக் கொண்டிருக்கும் வடிவம் ஆகும். இங்கு சாந்த முகத்துடன் இருக்கும் விஷ்ணு துர்க்கையின் வலது கையில் பிரயோகச் சக்கரம் இருப்பதுடன் இடக்கையில் சக்கர முத்திரையும் இருக்கிறது. இவள் காலுக்கு கீழே மகிஷாசுரன் இல்லை.

தனது பதினாறாவது வயதில் இறக்கும்படியான வரம் பெற்றிருந்த மார்க்கண்டேயர் சிவதல யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு பதினாறு வயதாகியபோது எமதர்மன் அவரைப் பிடிக்க வந்தான். அவனிடம் இருந்து தப்பிச் சென்ற மார்க்கண்டேயர் சிவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அப்போது எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது. தன் பணியை சரியாக செய்யாததால் சிவன் அவரது பதவியை பறித்தார். தன் பதவியை இழந்த எமதர்மன் சிவனை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் சிவன் பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தன் தரிசனம் கிடைக்கப்பெற்று இழந்த பதவி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகம் வந்த எமன் காகம் வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார். கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால் தன் உடல் முழுவதும் கண்களாக தெரியும்படி முனிவரிடம் சாபம் பெற்றான் இந்திரன். அவன் தன் தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான். சிவன் அவனிடம், தகுந்த காலத்தில் பூலோகத்தில் தான் சாபவிமோசனம் தருவதாகவும் அதுவரையில் பூமியில் சிவதலயாத்திரை மேற்கொள்ளும்படியும் கூறினார். அவரது சொல்கேட்ட இந்திரன் அணில் வடிவில் பூலோகம் வந்தான். இவ்விருவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது சிவபக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார். இதனைக்கண்ட எமன் இந்திரன் இருவரும் வாலியுடன் சேர்ந்து சிவனை வணங்கினர். சிவன் இம்மூவருக்கும் காட்சி தந்ததோடு எமன் இந்திரன் இருவருக்கும் சாபவிமோசனமும் கொடுத்தார். பின் அவர்களது வேண்டுதலுக்காக இவ்விடத்திலேயே சுயம்புவாக எழுந்தருளினார். தலமும் குரங்கு அணில் முட்டம் என்றானது. (முட்டம் என்றால் காகம் என்று பொருள்).

கோயில் முன்மண்டப சுவர்களில் இம்மூவரும் வழிபட்ட சிற்பங்கள் இருக்கிறது. சிவனை வழிபடும் முன்பு காக வடிவில் இருந்த எமதர்மன் தன் அலகால் நிலத்தில் கீறி தீர்த்தம் உண்டாக்கினார். பின் அதில் மூவரும் நீராடி சிவனை வணங்கினர். இந்த தீர்த்தம் பிறைச்சந்திர வடிவில் கோயிலின் மூன்று புறங்களிலும் சூழ்ந்திருக்க நடுவில் சிறிய பாறையின் மீது சிவன் வீற்றிருக்கிறார். கல்வெட்டில் இத்தலம் காலியூர்க் கோட்டத்து இருகழி நாட்டு மாமண்டூர்ப் பற்றத்துப் பல்லவபுரமான குரங்கணில்முட்டம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார் என்றும் கொய்யாமலர் ஈசுவரதேவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் சகம் 1451-ல் பூஜைக்காக கிருஷ்ணதேவராயர் பல்லவபுரம் கிராமத்தை இக்கோயிலுக்கு அளித்ததாக குறிப்புள்ளது. திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இத்தலத்தை குரங்கணின்முட்டம் என்றும் பறவாவகைவீடு (முக்தி கிடைக்கும் தலம்) என்றும் சொல்லி பதிகம் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 238 காஞ்சிபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 238 வது தேவாரத்தலம் காஞ்சிபுரம். புராணபெயர் கச்சிநெறிக்காரைக்காடு. மூலவர் சத்தியநாதசுவாமி, சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர், காரை திருநாதேஸ்வரர், சத்யநாதர், திருக்காலீஸ்வரர், காரைத்திருநாதர். இறைவன் இத்தலத்தில் இறைவன் மேற்கு பார்த்து சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சத்யநாதசுவாமி சற்றே சிவந்த நிறத்தில் காட்சியளிக்கிறார். உற்சவஅம்பாள் பிரமராம்பிகை. காஞ்சிபுரத்து சிவதலங்களில் உள்ள சிவனுக்கு, காஞ்சி காமாட்சி அம்மனே பொதுவான அம்பாளாக இருப்பதால் இங்குள்ள கோயில்களில் அம்பாள் இல்லை. இங்கு கருவறையிலேயே சுவாமிக்கு அருகே தெற்கு பார்த்தபடி உற்சவ வடிவில் அம்பாள் இருக்கிறாள். உற்சவராக இருந்தாலும் மூலவருக்கு உரிய பூஜைகளே இவளுக்கு செய்யப்படுகிறது. விழாக் காலங்களில் இவளை வெளியே கொண்டு செல்வதில்லை. அம்பாளுக்கு காரார்குழலி என்ற பெயரும் உள்ளது. தலமரம் காரைச்செடி. தீர்த்தம் இந்திர, சத்யவிரத தீர்த்தம். இவ்வாலயம் இருக்கும் பகுதி முழுவதும் காரைச்செடி காடாக இருந்த காரணத்தால் காரைக்காடு என்று பெயர் பெற்றது. இக்காலத்தில் இப்பகுதி திருக்காலிமேடு என்ற பெயருடனும் இவ்வாலயம் திருக்காலீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. இந்திரன் வழிபட்ட காரணத்தால் இத்தலம் இந்திரபுரி என்றும் வழங்கப்பெறுகிறது.

ஆலயம் மேற்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும் அதையடுத்து 3 நிலை கோபுரத்துடனும் அமைந்திருக்கிறது. முகப்பு வாயில் வழியே கோபுரத்தை நோக்கிச் செல்லும் போது இடையில் நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். கோபுர வாயிலைக் கடந்து உள்சென்று வெளிப் பிராகாரத்தை வலம் வரலாம். உள் வாயிலைக் கடந்து சென்றால் கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிராகாரம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைச் சுற்றில் நால்வர், இந்திரன், புதன், பைரவர், விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள். அதையடுத்து கஜலட்சுமி ஆகிய மூலத் திருமேனிகள் உள்ளன. துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் தரிசித்து உள்ளே சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். மூலவர் செம்மண் நிறத்தில், கரகரப்பாக, சற்று உயர்ந்தும், பருத்தும் காணப்படுகிறார். அருகில் அம்பாள் உற்சவத் திருமேனி வைக்கப்பட்டுள்ளது. சூரியனின் மூலத் திருமேனியும் உள்ளேயே உள்ளது. நடராஜர் சபையும் இங்குள்ளது. இந்திரன் இங்குள்ள இறைவனை வழிபட உண்டாக்கிய தீர்த்தம் இந்திர தீர்த்தம். இது தற்போது வேப்பங்குளம் என வழங்கப் பெறுகிறது. தட்சிணாமூர்த்தி சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுக்கு ஞானம் போதித்த நிலையில்தான் காட்சிதருவார். இங்கு அவருக்கு கீழே 7 சீடர்கள் இருக்கின்றனர். நந்தியின் கழுத்து மட்டும் தெற்கு முகமாக திரும்பியிருக்கிறது.

தாய் தந்தையை பிரிந்திருந்த புதன் இத்தலத்திற்கு வந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டார். தனக்கு கிரகங்களில் ஒரு பதவி கிடைக்க அருளும்படி சத்யநாதரிடம் வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன் உரிய காலத்தில் கிரகப்பதவி கிடைக்கப்பெறும் என்று அருள்புரிந்தார். புதன் இத்தலத்தில் பிரகாரத்தில் சுவாமிக்கு வலதுபுறத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். தேவர்களின் தலைவனான இந்திரன் தனது தவத்தினால் விரும்பிய வடிவம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். ஒருசமயம் கவுதம மகரிஷியின் மனைவியான அகல்யா மீது அவனுக்கு ஆசை ஏற்பட்டது. எனவே அகல்யாவை கவுதமரிடம் இருந்து பிரித்து அவளிடம் செல்ல வஞ்சக எண்ணம் கொண்டான். இதற்காக ஒருநாள் அதிகாலையில் கவுதமரின் ஆசிரமத்திற்கு சென்று சேவல் போல கூவினான். பொழுது விடிந்தது என நினைத்த கவுதமர் வெளியில் சென்று விட்டார். இத்தருணத்திற்காக காத்திருந்த இந்திரன் அவர் சென்ற சிறிது நேரத்தில் அவரைப் போலவே உருவத்தை மாற்றிக் கொண்டு அகல்யாவிடம் சென்றான். இதனிடையே ஏதோ மாயையால் தான் கிளம்பி வந்திருப்பதை உணர்ந்த கவுதமர் ஆசிரமத்திற்கு திரும்பினார். அவரைக் கண்ட இந்திரன் பூனை போல வடிவத்தை மாற்றி தப்பிக்கப் பார்த்தான். அவனது வஞ்சக எண்ணத்தை ஞானதிருஷ்டியால் உணர்ந்த கவுதமர் அவனது உடல் முழுக்க கண்களைப் பெற்று திரியும்படி சபித்ததோடு அகல்யாவையும் கல்லாக மாற்றி விட்டார். சாபம்பெற்ற இந்திரன் பூலோகம் வந்து பல தலங்களிலும் சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். அவன் இத்தலத்திற்கு வந்தபோது, காரைச்செடிகளின் மத்தியில் சிவன் காட்சி தந்து அவனது சாபத்தை போக்கி காரைத்திருநாதர் என்ற பெயரும் பெற்றார். இந்திரன், புதன், திருஞானசம்பந்தர் வழிபட்டுள்ளனர். .திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 237 காஞ்சிபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 237 வது தேவாரத்தலம் காஞ்சிபுரம். புராணபெயர் திருக்கச்சி அனேகதங்காவதம். மூலவர் கச்சி அனேகதங்காவதேஸ்வரர், கச்சி அநேகதங்காபதம், அனேகதங்காவதேஸ்வரர், அனேகபேஸ்வரர். இறைவன் இத்தலத்தில் வட்டவடிவ ஆவுடையார் மீது பெரிய லிங்கத் திருமேனியுடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் காமாட்சி. தீர்த்தம் தாணு தீர்த்தம். அநேகதங்காபதம் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. ஒன்று வடநாட்டில் ஹரித்வார், கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள கெளரிகுண்டம் சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டும். மற்றொன்று காஞ்சிபுரத்திலுள்ள இத்தலம். வடநாட்டில் உள்ள அநேகதங்காபதம் சிவஸ்தலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட இத்தலம் கச்சி அநேகதங்காபதம் என்ற பெயரால் வழங்குகிறது.

இவ்வாலயம் வடக்கில் ஒரு சிறிய கோபுரத்துடன் கூடிய முகப்பு வாயிலுடனும் கிழக்கில் மற்றொரு முகப்பு வாயிலுடனும் காணப்படுகிறது. ராஜகோபுரமும் கிடையாது. இந்த வாயில்கள் வழியே நுழைந்தால் ஒரு விசாலமான வெளிச் சுற்று உள்ளது. கிழக்கு வாயிலின் உள்ளே சென்றவுடன் பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் தேவாரம் பாடிய மூவர் சந்நிதி உள்ளது. மேற்கு வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும், வடமேற்குப் பகுதியில் வள்ளி தெய்வானையுடன் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா மற்றும் துர்க்கை உள்ளனர். அனேகதம் என்றால் யானை. யானை முகத்தையுடைய விநாயகர் பிரதிஷ்டை செய்த லிங்கம் என்பதால் சுவாமி அநேகதங்காவதேஸ்வரர் எனப்படுகிறார். விநாயகருக்கு அநேகதங்காவதர் என்றும் பெயர் உண்டு. விநாயகப் பெருமானால் வழிபடப்பட்ட அநேகதங்காபதேஸ்வரரை வழிபடுவர்கள் கொடிய துன்பமாகிய பிறவித்துயர் தீர்ந்து இறைவனின் திருக்கயிலாயத்தை அடைவார்கள் என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது.

பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி தடாகத்தில் நீராடச்சென்றபோது நீரிலிருந்த தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தைக்கு வல்லபை என பெயரிட்டு வளர்த்து வந்தார். சிவபக்தையாக இருந்த அவளை இரண்ய அசுரனான கேசி பிடித்துச் சென்றான். வல்லபை தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். அப்போது அம்பிகை சிவனிடம் விநாயகன் அசுரர்களை அழித்து வெற்றி பெற அருள் செய்ய வேண்டும் என்றாள். சிவன் இத்தலத்தில் தன்னை வணங்கிவிட்டு சென்றிட அசுரர்களை வெற்றி கொள்ள வலிமை உண்டாகும் என்றார். விநாயகரும் அசுரர்களை அழிக்க செல்லும் முன்பு இவ்விடத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் வல்லபையை மீட்டு வந்தார். சிவன் அம்பாள் இருவரும் விநாயகருக்கு இத்தலத்திலேயே வல்லபையை மணம் முடித்து வைத்தனர். விநாயகர் வல்லபையை மணம் முடித்த தலம் என்றாலும் இங்கு தனிச்சன்னதியில் விநாயகர் மட்டுமே பெரிய மூர்த்தியாக இருக்கிறார். அவருடன் வல்லபை இல்லை. குபேரன் தன் முற்பிறவியில் செய்த புண்ணியபலனால் அருந்தமனின் மகனாப்பிறந்து அளகைக்கு அரசனானான். அசுரகுருவான சுக்கிரன் அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தான். எனவே இங்கு சிவனை வேண்டி தன்னை காக்கும்படி வேண்டினான் குபேரன். சிவன் அவனுக்காக சுக்கிரனை விழுங்கி அவனது கர்வத்தை அடக்கினார். இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. குபேரன், விநாயகர், சுந்தரர் வழிபட்டுள்ளனர். சுந்தரர் சிவனை கச்சி அநேகதங்காவதமே என்று பதிகம் பாடியுள்ளார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 236 திருஓணகாந்தன்தளி, ஓணகாந்தேஸ்வரர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 236 வது தேவாரத்தலம் திருக்கச்சிமேற்றளி. புராணபெயர் திருவோணகாந்தன் தளி. மூலவர் ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர், ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் காமாட்சி. தலவிருட்சம் வன்னியும், புளியமரமும். தீர்த்தம் ஓணகாந்த தீர்த்தம், தான் தோன்றி தீர்த்தம். கோவில் 3 நிலை இராஜ கோபுரத்துடன் காட்சி தருகிறது. ஆலயத்தினுள் மூன்று கருவறைகளும் மூன்று சிவலிங்கங்களும் உள்ள சிறப்பு மிக்க ஆலயம் இதுவாகும். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ஓணன், காந்தன் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன. முதல் சந்நிதியில் மூலவரின் பின்புறம் கருவறைச் சுற்றில் சிவன் உமையம்மையின் திருமணக் கோலத்தைக் காணலாம். ஓணேஸ்வரர் சந்நிதி அர்த்த மண்டபத்தில் சுந்தரர் மற்றும் இறைவனின் திருப்பாத தரிசனம் காணலாம்.

அடுத்து 2-வது சந்நிதியில் காந்தேஸ்வரர் தரிசனம் தருகிறார். 3-வது கருவறையில் சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே சிறு கோவிலாக உள்ளது. இது பிற்காலப் பிரதிஷ்டையாகும். இத்தலத்திலுள்ள வயிறுதாரிப் பிள்ளையார் சந்நிதியை திருஞானசம்பந்தர் தனது பதிகத்தின் 2 வது பாடலில் குறிப்பிடுகிறார். மற்றொரு விநாகயரான ஓங்கார கணபதியும் காந்தேஸ்வரர் சந்நிதியில் வெளியே காணப்படுகிறார். இவரின் சிலையில் பக்தியுடன் காது வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்கிறது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்கள் உடன் இருக்க வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். முருகர் தனது மயில் வாகனத்தில் அமர்ந்தபடி தனது இரு தேவியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மனே பிரதான அம்பாளாக வீற்றிருப்பதால் இத்தலத்திலுள்ள சிவன் ஆலயங்களில் அம்பாளுக்கு என்று தனி சந்நிதி இருப்பதில்லை. திருஓணகாந்தன்தளி ஆலயத்திலும் அம்பாள் சந்நிதி தனியாக இல்லை.

ஒரு காலத்தில் அசுர வேந்தனான வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்பவர்கள் புழல் என்ற பகுதியில் உள்ள கோட்டையின் பாதுகாவலர்களாக இருந்தனர். இவர்களில் ஓணன் என்பவன் அப்பகுதியில் சுயம்புவாய் எழுந்த லிங்கம் ஒன்றிற்கு தன் ரத்தத்தால் அபிஷேகம் செய்து கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்றான். இதே போல் காந்தனும் மற்றொரு லிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப் பெற்றான். இப்பகுதியில் வசித்த ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான். பிற்காலத்தில் சிவனின் தோழரான சுந்தரர் இப்பகுதிக்கு வந்தார். மூன்று லிங்கங்கள் வெட்ட வெளியில் பூமிக்குள் பதிந்து இருந்தன. அசுரர்களுக்கும் கூட பக்தி இருந்துள்ளது என்பதை வெளிக்காட்டவும் லிங்கங்களுக்கு பாதுகாப்பு தரவும் கோயில் எழுப்ப விருப்பம் கொண்டார். அதற்குரிய பொன் பொருள் வேண்டி சிவனைப் பாடினார். அவரது பாட்டில் மயங்கிய இறைவன் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும் போது பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டார். அதையறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க சுந்தரர் அவற்றைப் பெற்றார். பின்னர் லிங்கங்களை வெளியே எடுத்து கிடைத்த பணத்தில் கோயில் எழுப்பினார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 235 திருக்கச்சிமேற்றளி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 235 வது தேவாரத்தலம் திருக்கச்சிமேற்றளி. மூலவர் திருமேற்றளீஸ்வரர், திருமேற்றளிநாதர், இரண்டாவது மூலவர் ஓதவுருகீஸ்வரர். சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோயிலில் இரண்டு தனித்தனி மூலஸ்தானத்தில் இறைவன் அருள்புரிகிறார். அம்பாள் திருமேற்றளிநாயகி.. தலவிருட்சம் மா, தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம். இத்தலத்தின் தலவிநாயகர் சித்திவிநாயகர். கோயில் 3 நிலை ராஜகோபுரத்துடன் உள்ளது. மேற்கு நோக்கிய சிவதலம் ஆகையால் மேற்றளி எனவும் திருமால் சிவனை நோக்கி தவமிருந்ததால் (மேலான-தளி) மேற்றளி என அழைக்கப்படுகிறது.

திருமேற்றளீஸ்வரரே இங்கு பிரதானம். ஆனாலும் கோயிலின் ராஜகோபுரமும் பிரதான வாசலும் ஓதவுருகீஸ்வரருக்கே உள்ளது. இவருக்கு நேரே உள்ள நந்திக்குத்தான் பிரதோஷ வழிபாடுகளும் நடக்கிறது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியின் கீழ் இருக்கும் முயலகன் அவருக்கு இடது பக்கமாக திரும்பியிருக்கிறது. இக்கோவிலின் தெருக்கோடியில் நின்று பாடிய திருஞானசம்பந்தர் அவ்விடத்திலேயே தனிச்சன்னதியில் இருக்கிறார். அனைத்து கோவிலிலும் கையில் தாளத்துடன் காட்சி தரும் சம்பந்தர் இங்கு வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இவருக்கு ஆளுடைப்பிள்ளையார் சம்பந்த பிள்ளையார் என்ற பெயர்களும் உள்ளதால் இவரது பெயராலேயே இப்பகுதி பிள்ளையார் பாளையம் என்றழைக்கப்படுகிறது. இவ்வூருக்கு பச்சிமாலயம் என்றொரு பெயரும் வழங்கப்படுகிறது. திருநாவுக்கரசர் இத்தலத்தை கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால் என்று குறிப்பிட்டு பாடியுள்ளார்.

பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணுவிற்கு சிவனின் லிங்க வடிவம் பெற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. எனவே சிவசொரூபம் கிடைக்க அருளும்படி சிவனிடம் வேண்டினார். இறைவன் காட்சி தந்து நின்ற போது திருமால் சிவசாரூப நிலையை வேண்ட திருஞானசம்பந்தர் இங்கு வருகைதந்து பதிகம் பாடும்போது அது கிடைக்கும் என்றும் அதுவரை இங்கிருந்து தவம் செய்யுமாறும் இறைவன் வரமளித்தார். சிவதல யாத்திரையில் இக்கோவில் வந்த திருஞானசம்பந்தர் தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன்தான் என எண்ணிக்கொண்டு சிவனுக்கு பின்புறத்தில் தூரத்தில் நின்றவாறே பதிகம் பாடினார். அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு அப்படியே உருகினார். பாதம் வரையில் உருகிய விஷ்ணு லிங்க வடிவம் பெற்ற போது திருஞானசம்பந்தர் பாடலை முடித்தார். இறுதியில் அவரது பாதம் மட்டும் அப்படியே நின்று விட்டது. தற்போதும் கருவறையில் லிங்கமும் அதற்கு முன்பு பாதமும் இருப்பதை காணலாம். திருஞானசம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர் ஓதஉருகீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். கோயில் உள்ள இத்தெருவின் நடுவில் உற்றுக்கேட்ட முத்தீசர் ஆலயம் உள்ளது. திருஞானசம்பந்தர் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்து கேட்டதாக திருமேற்றளிக் கோயில் புராணவரலாறு உள்ளது. இக்கோயில் காஞ்சிபுரம் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. நூறு ருத்திரர்கள், சீகண்டர், வீரபத்திரர், குரோதர், மண்டலாதிபதிகள் உள்ளிட்ட 116 பேர், புதன் வழிபட்ட ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.