திரிசூலநாதர் கோயில்

மூலவர் திரிசூலநாதர் வேறு பெயர் திரிச்சுரமுடையார். உற்சவர் சந்திரசேகரர். அம்பாள் திரிபுரசுந்தரி. தல விருட்சம் மரமல்லி. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். இத்தீர்த்தம் பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டது. தீர்த்தம் கோயிலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இந்த கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரே இறைவனின் பூஜைகள் வழிபாட்டுக்கு பயன் படுத்தப் படுகிறது. ஆகமம் காரணாகமம். ஊர் திரிசூலம் சென்னை. புராண பெயர் திருச்சுரம். இந்த திருத்தலத்துக்கு பல்லவபுரமான வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும் பழைய பெயர் உண்டு. இந்த பல்லவபுரம்தான் மருவி அருகில் உள்ள பல்லாவரம் பகுதி ஆனது. இதன் அடிப்படையில் முற்காலத்தில் பல்லவ மன்னர் ஒருவர் இங்கு முதலில் கோயில் கட்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனை இப்பகுதியில் கடந்த 1901 ஆம் ஆண்டு தொல்பொருள் துறையினர் நடத்திய ஆய்வில் கிடைத்த 14 கல்வெட்டுகளில் மிகப் பழைமையான முதலாம் குலோத்துங்க சோழன் (கிபி 1070 – 1120) காலத்திய கல்வெட்டு உறுதி செய்கிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இக்கோயிலுக்கு கடந்த 1960 ஆம் ஆண்டு கவியோகி சுத்தானந்த பாரதியார் உள்ளிட்ட பெரியோர் அடங்கிய குழுவினரால் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோயில் சென்னை விமான நிலையம் அருகே உள்ள திரிசூலத்தில் நான்கு மலைக் குன்றுகளுக்கு நடுவே உள்ளது. இந்த நான்கு மலைகளும் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. வேதத்தின் உட்பொருளாக அதன் நடுவே சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார். இந்த சிவ ஸ்தலத்தை தனது ஆணவம் அடங்கும் பொருட்டு பிரம்மா நிர்மாணித்து வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது. ஆகையால் இந்த ஸ்தலத்துக்கு பிரம்மபுரி என்றும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார். பிரம்மா தனது படைத்தல் பணி சிறப்பாக நடப்பதற்காக லிங்க பிரதிஷ்டை செய்து நான்கு வேதங்களையும் சுற்றிலும் வைத்து பூஜை செய்தார். சிவபெருமானும் அவ்வாறே அவருக்கு அருள் செய்தார். லிங்கத்தைச் சுற்றியிருந்த நான்கு வேதங்களும் மலைகளாக மாறின. மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை சுரம் என்பர். எனவே சிவன் திருச்சுரமுடைய நாயனார் என்றழைக்கப்பட்டு பிற்காலத்தில் திரிசூலநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கஜபிருஷ்டம் எனப்படுகிறது. பிரகாரத்தில் விநாயகர் சீனிவாசப் பெருமாள் காட்சி தருகின்றனர். வைகுண்ட ஏகாதசியின் போது சீனிவாசர் முத்தங்கி சேவையில் காட்சி தருவார். தனி சன்னதியிலுள்ள மார்க்கண்டேஸ்வரர் சோடச லிங்க (பதினாறு பட்டை லிங்கம்) வடிவில் காட்சி தருகிறார். காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகன் மற்றும் ஐயப்பன் ஆதிசங்கரர் சன்னதிகளும் உள்ளன. கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்த சன்னதிக்குள் சிவன் அருகில் சொர்ணாம்பிகை அருள்கிறார்கள். திரிசூலநாதர் கருவறையில் சொர்ணாம்பிகை எழுந்தருளி இருப்பதற்கு ஒரு வரலாறு உண்டு. ஆரம்பத்தில் பிரதான அம்பிகையாக இருந்த சொர்ணாம்பிகை அந்நியர் படையெடுப்பின் போது வலது கையில் கட்டை விரல் சேதமடைந்தது. அதனால் பின்னப்பட்ட சிலையை வழிபடக் கூடாது என்று கூறி தனியே வைத்து விட்டார்கள். அப்போது அர்ச்சகரின் கனவில் வந்து தனது பின்னத்தை சரி செய்து மீண்டும் திரிசூலநாதரின் அருகே வைக்குமாறு அம்பாள் அருள் கூற அதன்படி சிலையின் பின்னப்பட்ட விரலுக்கு பதிலாக தங்கத்தில் விரல் செய்து பின்னர் திரிசூலநாதரின் அருகிலேயே சொர்ணாம்பிகையை பிரதிஷ்டை செய்தார்கள். திரிசூலநாதரின் அருகே இடது புறத்தில் அவரை பார்த்தபடி நின்றபடி இருக்கிறார் சௌந்தராம்பிகை. இதனால் நேர்பார்வையில் சௌந்தராம்பிகையை தரிசிக்க முடியாது. அன்னையை முழுமையாக தரிசிக்க வேண்டும் என்றால் ஆண்கள் மேல்சட்டையின்றி கருவறைக்கு முன் உள்ள அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்தால் அன்னையின் தரிசனத்தை பெறலாம்.

பிரதான அம்பிகை திரிபுரசுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். அம்பாளின் திருக்கரங்களில் அட்சத மாலையும் தாமரைப் பூவும் திகழ்கின்றன. இதன் மூலம் ஞானத்தையும் செல்வத்தையும் ஒருசேர அருள் பிரசாதமாகத் தருகிறாள் அன்னை திரிபுரசுந்தரி. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரிபுரசுந்தரி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுரசுந்தரிக்கு வெள்ளிக் கிழமைகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கருவறைச் சுற்று மாடத்தின் மேல் பகுதிச் சுற்றில் பூத கண வரிசையும் அவற்றின் நடுவே சிவலிங்கத்தை பிரம்மன் வழிபடுதல், கண்ணப்ப நாயனார் பக்தி, சிவலிங்கத்தை அனுமார் வழிபடுதல், லிங்கத்தின் மேல் பால் சொரியும் பசுவின் சிற்பங்கள் போன்றவை செதுக்கப்பட்டுள்ளன. கருவறையை சுற்றியுள்ள தேவகோட்டங்களுக்கு மேலே மகரதோரண சிற்பங்களிலும் வாலி சுக்ரீவன் யுத்தம் போன்ற புராணக் கதைகளும் சோமாஸ்கந்தர் ரிஷபாரூட மூர்த்தி போன்ற இறை வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத் தூண்களிலும் காலசம்ஹார மூர்த்தி இருமுகம் கொண்ட சரபேஸ்வரர் காமாட்சி அம்மன் தவம் காளிங்க நர்த்தனம் உள்ளிட்ட அற்புத சிற்பங்களைக் காணலாம்.

கருவறைச் சுற்றுப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியரிடமும் தனிச் சிறப்புகள் உள்ளன. வழக்கமாக முருகனின் வாகனமான மயில் வலப்புறம் நோக்கி இருக்கும். ஆனால் இங்கு இடப்புறத்தை நோக்கியுள்ளது. அதோடு ஒரு காலை சற்றே தூக்கி பறக்கத் தயாராகும் நிலையிலும் காணப்படுகிறது. சிவன் கோஷ்டத்திலுள்ள விநாயகர் நாக யக்ஞோபவீத கணபதி என்றழைக்கப்படுகிறார். உடலிலுள்ள ஆறு ஆதாரங்களில் மூலாதார சக்தியான குண்டலினி நாக வடிவில் இருக்கிறது. இவரது சிலை சுவரைக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவன் சன்னதி கோஷ்டத்தில் வீராசன தட்சிணாமூர்த்தி ஒரு காலை மடித்தும் மற்றொரு காலை தொங்கவிட்டும் இருக்கும் தட்சிணாமூர்த்தி இந்த சிற்பத்தில் வலது காலை முயலகன் மீது ஊன்றி தனது இடது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். இக்கோலத்திற்கு வீராசன தட்சிணாமூர்த்தி என்று பெயர். வலது செவியில் மகர குண்டலமும் இடது செவியில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்திக்கு கீழே அமர்ந்துள்ள சீடர்கள் வழக்கமான அஞ்சலி முத்திரையுடன் அமர்ந்திருப்பார்கள். இந்த சிற்பத்தில் சின்முத்திரை காட்டியபடி இருக்கின்றனர். நரசிம்மரின் உக்கிரம் தணிக்க வந்த சரபேஸ்வரர் தன் சுயரூபத்துடன் ஒரு தூணில் காட்சி தருகிறார். சரபேஸ்வரருக்கு சரபம் என்ற பறவையின் இறக்கை இருக்கும். ஆனால் இங்கே இறக்கை இல்லை. இரண்டு முகங்கள் இரு கைகளில் மான் மழு ஏந்தியுள்ளார். மற்ற இரு கைகளாலும் நரசிம்மரை பிடித்த கோலத்தில் உள்ளார். இத்தகைய அமைப்பில் சரபேஸ்வரர் வேறு எங்கும் இல்லை.

நவராத்திரி விழாவின் போது விசேஷ ஹோமம் மற்றும் 18 சுமங்கலிகள் 18 குழந்தைகளை வைத்து சுமங்கலி கன்யா பூஜைகள் நடத்தப்படும். தை ஆடி வெள்ளி நாட்களில் பூப்பாவாடை என்னும் வைபவமும் நடக்கிறது. இக்கோயிலுக்கு திருப்பணி செய்து 41 வேலி நிலங்களை தேவதானமாக வழங்கிய பிற்காலச் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் இந்த ஊரின் பழைய பெயராகிய வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்பதனை தனது பெயரில் திருநீற்றுச் சோழநல்லூர் என்று மாற்றி ஆணையிட்டதாக இங்கு கிடைத்த கல்வெட்டு கூறுகிறது. பல சோழமன்னர்கள் இவ்வாலயத்துக்கு திருப்பணிகள் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. இவ்வூர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் கோட்டத்து குலோத்துங்க சோழ வளநாட்டு சாத்தூர் நாட்டு திருச்சுரம் என்று இருந்ததையும் அறிந்து கொள்ளலாம். சுரம் என்றால் வளம் நிறைந்த மலை என்று பொருள். இந்த மலையில் இறைவன் வீற்றிருப்பதால் இறைவனுக்கு திருச்சுரமுடையார் என்றும் பெயர். இந்த திருச்சுரம் என்பது மருவி பின்னர் திரிசூலம் என்று மருவி விட்டது.

துர்கை

வேணுகோபாலன்

கிருஷ்ணரின் மிக நுட்பமான சிற்பம். கூர்ந்து கவனித்தால் தெரியும். பிரபாவளியில் விஷ்ணுவின் அனைத்து 10 அவதாரங்களும் செதுக்கப்பட்டுள்ளன. 1000 ஆண்டுகள் பழமையான சிற்பம். இடம் லட்சுமி நரசிம்மர் கோவில் ஹரனஹள்ளி ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

எட்டு திக்குகளை ஆளும் சக்திகள்

  1. கிழக்கு – பிராம்மி
  2. தென்கிழக்கு – கௌமாரி
  3. தெற்கு – வராஹி
  4. தென்மேற்கு – சியாமளா
  5. மேற்கு – வைஷ்ணவி
  6. வடமேற்கு – இந்திராணி
  7. வடக்கு – சாமுண்டி
  8. வடகிழக்கு – மகேஸ்வரி

பிராம்மி: பிரம்ம தேவரின் அம்சமும் சக்தி வடிவமே பிராம்மி என்று அழைக்கப்படுகிறாள். கிழக்கு திசையின் சக்தி வடிவம். பிராமி சக்தியை வணங்குவதால் குழந்தைப் பேறும் கலை ஞானமும் உண்டாகும்.

கௌமாரி: சரவணனின் அம்சமாக அவதரித்தவள் கௌமாரி என்று அழைக்கப் படுகிறாள். தென் கிழக்கு திசையின் சக்தி வடிவம். கௌமாரி தேவியை வழிபடுவதால் பதவி உயர்வும் மனதில் இருக்கும் பயமும் அகலும்.

வராஹி: விஷ்ணுவின் அவதாரமான வராக மூர்த்தியின் அம்சமாக இருப்பவர் வராஹி. தெற்கு திசையின் சக்தி வடிவம். வராஹி தேவியை வணங்கி வருவதால் எதிரிகளை அழித்து வெற்றி கொள்ளலாம். மனதில் தைரியம் பிறக்கும்.

சியாமளா: மீனாட்சி அம்மனின் அவதாரமாக திகழ்பவள் சியாமளா தேவி. தென் மேற்கு திசையின் சக்தி வடிவம். சியாமளா தேவியை வழிபடுவதால் சகல கலைகளிலும் தேர்ச்சி மற்றும் அறிவுக் கூர்மை உண்டாகும்.

வைஷ்ணவி: விஷ்ணுவின் அம்சமாக தோன்றியவர். நாராயணி என்றும் அழைக்கப் படுபவள். மேற்கு திசையின் சக்தி வடிவம். வைஷ்ணவியை வழிபடுவதால் உடல் ஆரோக்கியமும் எண்ணங்களில் மேன்மையும் உண்டாகும்.

இந்திராணி: தேவலோகத்தின் அதிபதியான இந்திரனின் அம்சமாக தோன்றியவர் இந்திராணி. வடமேற்கு திசையின் சக்தி வடிவம். இந்திராணியை வழிபடுவதால் நல்ல வாழ்க்கை துணை அமைத்து தருவார். பணத் தட்டுப்பாடு குறையும்.

சாமுண்டி: ருத்தரனின் அம்சமாக தோன்றியவர். எந்த விதமான சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாதவர். வடக்கு திசையும் சக்தி வடிவம். சாமுண்டியை வணங்கி வருவதால் எடுத்த செயலில் எவ்விதமான இன்னலும் இன்றி வெற்றியும் பாதுகாப்பும் உண்டாகும்.

மகேஸ்வரி: சிவபெருமானின் அம்சமாக திகழக்கூடியவர் மகேஸ்வரி. வடகிழக்கு திசையின் சக்தி வடிவம். மகேஸ்வரியை வழிபடுவதால் ஐயங்கள் மற்றும் கோபம் நீங்கும். சகல பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக் கூடியவர்.

மகிஷாசுரமர்தினி

எருமை வடிவில் உள்ள அரக்கனை அழிக்கும் துர்கை. உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த இச்சிலை தற்போது அமெரிக்காவில் பிலடெல்பியா கலை அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 8 ஆம் நூற்றாண்டு.

முரண்பாடான சம்பவங்களும் யுதிஷ்டிரரின் விளக்கமும்

யுதிஷ்டிரரின் நாட்டை ஆட்சி செய்யும் போது நாட்டு மக்களின் பிரச்சனைகளை பீமன் தீர்த்து வைத்தார். எவருக்கேனும் கேள்விகளோ பிரச்சனைகளோ இருந்தால் பீமனிடம் முதலில் உதவி நாடி வந்தனர். ஒரு நாள் விசித்திரமான சம்பவம் ஒன்றை கவனித்ததாக ஒரு மனிதன் கூறினான். அவன் வீட்டு வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்திருப்பதாகவும் அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் கூறினான். சாதாரணமாக அரக்கர்களின் தொல்லைகளால் அவதிப்பட்ட மக்களை காப்பாற்றுவது பீமனுக்கு அவனது வலிமையினால் சாதாரணமாக இருந்தது. இந்த புதிய சிக்கலான விஷயமாக இருப்பதினால் பீமன் அவனை யுதிஷ்டிரரிடம் செல் என்று கூறினார்.

அதே தினத்தில் இன்னொரு மனிதன் வந்து தன்னுடைய பிரச்சணையை சொன்னான். ஒரு பானை நிறைய தண்ணீர் இருந்தது. அதனை நான்கு சிறிய பானைகளில் நிரப்பினால் நிரம்புகிறது. மீண்டும் நான்கு சிறிய பானை தண்ணீரை பெரிய பானைக்குள் நிரப்பிய போது பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருந்தது பெரிய பானை நிரம்பவில்லை. இதற்கும் பதில் ஒன்றுமே தெரியாமல் தவித்த பீமன் அம்மனிதனையும் யுதிஷ்டிரரிடம் சென்று கேட்குமாறு அனுப்பினார். மூன்றாவதாக ஒரு மனிதன் மற்றொரு விசித்திரமான சம்பவத்துடன் பீமனிடம் வந்தான். ஒரு யானையின் பெரிய உடம்பு ஊசியின் சிறிய துளை வழியாக செல்கிறது. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் யானையின் வால் அந்த ஊசியின் துளையில் சிக்கிக் கொண்டு விட்டது என்று அந்த மனிதன் புகார் கூறினான். பீமன் மறுபடியும் அம்மனிதனை யுதிஷ்டிரரிடம் அனுப்பி வைத்தார். நான்காவதாக ஒரு மனிதன் அங்கு வந்து தெருவில் ஒரு பெரிய பாறையைப் பார்த்ததாகக் கூறினான். அப்பாறையை வலிமையுள்ள சில மனிதர்களால் நகர்த்த முடியவில்லை. ஆனால் ஒரு சாது கோல் ஒன்றை அசைத்து அப்பாறையை நகர்த்தினார். இது எப்படி என்று காரணத்தை கேட்டான். இந்த மனிதனையும் யுதிஷ்டிரரிடம் அனுப்பினார் பீமன். இப்போது இந்த நான்கு பிரச்சனைகளுக்கும் விடை தெரிந்துகொள்ள பீமனிடம் ஆர்வம் வந்தது. யுதிஸ்டிரர் என்ன பதில் கொடுக்க போகிறார் என்று தெரிந்து கொள்ள அவைக்கு சென்றார்.

நால்வரும் சேர்ந்து யுதிஷ்டிரரிடம் சென்று இந்த சந்தேகங்களைப் பற்றி விசாரித்தனர். அதற்கு அவர் இந்த சம்பவங்கள் அனைவற்றும் வரப் போகின்ற கலியுகத்தை குறிப்பிடுகின்றன என்று கூறி கீழ்கண்டவாறு விளக்கினார்.

ஒருவனின் வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்த முதலாவது சம்பவத்தில் மற்றவர்களின் உடைமைகளின் மீது ஆசைப்படுவதை குறிக்கின்றது. மன வேதனைகள் மற்றும் கோபம் போன்ற உணர்வுகளுக்கு வழி வகுத்து மற்றவர்களைப் போல நம்மிடம் இல்லையே என்ற எண்ணங்கள் இருப்பதனால் அதை அடைவதற்கு தகாத வழிகளை தேர்ந்தெடுத்தனர்.

பெரிய பானையிலிருந்து சிறிய பானைகளுக்கு தண்ணீரை ஊற்றி பிறகு சிறிய பானைகளிலிருந்து பெரிய பானைக்கு ஊற்றும் போது பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும் இரண்டாவது சம்பவத்தில் தாயானவள் தனது குழந்தைக்கு செலுத்தும் அன்பு கருணையை ஒப்பிடும் போது மகன்கள் பெரியவர்கள் ஆனதும் நால்வரும் சேர்ந்து தாயிடம் காட்டும் அன்பு தாய் காட்டும் அன்பிற்கு நிகரானதாக இல்லை. கலியுகத்தில் தாய் கொடுக்கும் அன்பு குழந்தைகளை நிரப்புகிறது. குழந்தைகளை காட்டும் அன்பு தாயின் அன்புக்கு நிகரானதாக இல்லை.

ஒரு யானையின் பெரிய உடம்பு ஊசியின் சிறிய துளை வழியாக செல்கிறது ஆனால் ஆச்சரியப்படும் வகையில் யானையின் வால் அந்த ஊசியின் துளையில் சிக்கிக் கொண்டு விடுகிறது என்ற மூன்றாவது சம்பவத்தில் மனிதர்கள் தங்களின் வருமானம் வலிமை வளம் போன்றவற்றை குடும்பம் நண்பர்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்காக யானையின் உடம்பின் அளவிற்கு செலவழிக்க தயாராக இருக்கின்றனர். ஆனால் கடவுளுக்கோ கடவுளின் சேவைகளுக்கோ தான தர்மத்திற்கோ யானையின் வாலலவு கூட செலவழிக்க மனம் வருவதில்லை என்றார்.

ஒரு பெரிய பாறையை வலிமை மிகுந்த மனிதர்களால் நகர்த்த முடியாத நிலைமையில் ஒரு சாது தன் கோலால் சுலபமாக நகர்த்தி விட்டார். இந்த சம்பவம் எவ்வளவு வலிமையான வினைகள் ஆனாலும் நாம சங்கீர்த்தனத்தின் மகிமையால் பாவங்களை நிவர்த்தி செய்ய முடியும் என்பதைக் குறிக்கின்றது என்றார்.

யுதிஷ்டிரரின் இந்த பதிலைக் கேட்ட நால்வரும் பீமனும் திருப்தியுடன் திரும்பினார்கள்.

ருத்ர பாஸ்கரன்

சூரியனின் மேல் இரண்டு கைகளும் ஈசனின் ஆயுதங்களான திரிசூலமும் வாசுகியும் கீழ் இரு கைகளிலும் இரண்டு தாமரை மலர்களை ஏந்தியுள்ளார். கவசம் மற்றும் காலணிகளை அணிந்துள்ளார். அருகில் தனது தேரோட்டியான அருணா கால்களுக்கு இடையில் அமர்ந்துள்ளார். அவரது வலதுபுறம் எழுதுகோல் மற்றும் புத்தகத்தை பிங்கலாவும் இடதுபுறத்தில் தண்டி தண்டாவும் உள்ளனர். இந்த வடிவ சிற்பம் கோவில்களில் காணப்படுவது மிக அரிது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த சிவபெருமான் ருத்ர பாஸ்கரன் என்று அழைக்கப்படுகிறார். இடம் போபால் மண்ட்சூர் பகுதியில் உள்ள மாநில தொல்பொருள் அருங்காட்சியகம்.

இறைவனின் விருப்பம்

ஒரு துறவி ஒரு கிராமத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற வழியில் ஒரு குயவன் பானை செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள் சட்டிகள் குடங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த குயவனுக்கு அருகில் ஒரு ஆடு கட்டிப் போடப்பட்டிருந்தது. அது ஒரு நொடிகூட ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது. துறவி அந்த குயவன் இருந்த இடத்திற்குச் சென்று தரையில் அமர்ந்தார். அவரைக் கண்டதும் அவருக்கு வணக்கம் தெரிவித்த குயவன் சிறிய மண் சட்டியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். அதை வாங்கிப் பருகிய துறவி இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா? என்று கேட்டார். இல்லை சுவாமி இது ஒரு காட்டாடு. வழி தவறி வந்தது. நான் பிடித்து கட்டிப் போட்டேன் என்றான் குயவன். எதற்காக? என்று துறவி கேட்டார். அதற்கு குயவன் பண்டிகை வரப்போகிறது. அந்த நாளில் இறைவனுக்கு பலி கொடுக்கலாம் என்று வைத்திருக்கிறேன் என்றான். துறவி வியப்பு மேலிட பலியா? என்றார். ஆமாம் சுவாமி தெய்வத்துக்கு திருவிழா வரும்போது பலி கொடுப்பது இறைவன் விரும்புவார். இதனால் இறைவன் மகிழ்ந்து வரம் கொடுப்பார் என்றான். குயவன் இப்படிச் சொன்னதும் துறவி தன் கையில் வைத்திருந்த தண்ணீர் மண் சட்டியை ஓங்கி தரையில் போட்டார். அது துண்டு துண்டாகச் சிதறியது. பின்னர் சிதறிய பாகங்களை எடுத்து குயவனிடம் கொடுத்தார். குயவன் கோபத்தில் என்ன சுவாமி இது என்றான். உனக்குப் பிடிக்குமே என்றுதான் இப்படி உடைத்துக் கொடுக்கிறேன் என்றார் துறவி. உங்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா? இல்லை கேலி செய்கிறீர்களா? நான் செய்த பானையில் என் உழைப்பு இருக்கிறது. அதை உடைக்க நான் எப்படி சம்மதிப்பேன். இது எனக்கு பிடிக்கும் என்று யார் உங்களுக்குச் சென்னது? என்றான்.

துறவி மென்மையாக சிரித்தபடியே ஆண்டவன் படைத்த ஒரு உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு மட்டும் யார் சொன்னது? அதை ஏற்று மகிழ்ந்து இறைவன் வரம் தருவான் என்று எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதை விரும்புவாள்? எந்த தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்? இறைவன் படைத்த உலகில் அவனால் படைக்கப்பட்ட நீ அவன் படைத்த பொருளையே அவனுக்கு படைப்பாயா? என்று அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தார். அவரது வார்த்தைகளைக் கேட்ட குயவன் தெளிவு பெற்றவனாக ஆட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு துறவிக்கு தனது வணக்கத்தை செலுத்தினான்.

மண்டோதரியின் தத்துவம்

மண்டோதரி இலங்கையை ஆண்ட இராவணனின் மனைவி. இலங்கையின் இராணி. மண்டோதரி என்றால் மென்மையான இடையுடையவள் எனப் பொருள். மண்டோதரி மிகவும் அழகானவள். தூய பக்தியுடையவள் நேர்மையானவள். இலங்கைக்குச் சென்ற அனுமன் முதலில் இவளைப் பார்த்து சீதை என்றே நினைத்து விடுகிறார். அந்த அளவிற்கு இவளது அழகும் குணமும் தன்மையும் இருந்தது. சதா சர்வ காலமும் தன் கணவனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி நல்வழிக்குக் கொண்டு வர மண்டோதரி அரும்பாடுபட்டாள். தன் மனைவியின் நல்புத்தியைக் கேட்காத இராவணன் தனக்கு தானே அழிவைத் தேடிக் கொண்டான்.

கஷ்யப்ப முனிவரின் மகன் மாயாசுரன். மாயாசுரனுக்கு துந்துபி மற்றும் மாயாவி என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இந்த மாயாசுரனின் வளர்ப்பு மகள் மண்டோதரி ஆவாள். மாயாசுரனின் இல்லத்திற்கு வருகை புரிந்த இராவணன் மாயாசுரனின் வளர்ப்பு மகளான மண்டோதரியை திருமணம் புரிய விரும்பி வேதமுறைபடி அக்கினியை ஏழுமுறை வலம் வந்து திருமணம் புரிந்து கொண்டான்.

இராஜஸ்தானின் ஜோத்பூரில் அமைந்திருக்கும் மண்டூர் எனும் பட்டணம் மண்டோதரியின் பிறப்பிடமாகும். நெடுங்காலமாக இங்கு வாழும் குறிப்பிட்ட குலத்தை சேர்ந்த மக்கள் இராவணனை தங்களின் மருமகனாக பாவித்து வருகிறார்கள். இங்கு இராவணனுக்கு ஒரு கோயில் (நினைவிடம்) அமைந்துள்ளது. சீதையை அபகரித்து வந்த இராவணன் ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளைத் தீண்டினால் தலை வெடித்து மரணமடைவான் என இராவணனுக்கு சாபம் இருந்தது. இதனால் சீதையை சம்மதிக்க வைக்க அவளை பலமுறை முயன்றான். எனினும் சீதை ஒரு போதும் இராவணனின் இச்சைக்கு இணங்கவில்லை. ஒரு சமயம் மிகுந்த கோபமடைந்த இராவணன் சீதையின் தலையைத் துண்டிக்க தன் வாளை உயர்த்தினான். அப்போது மண்டோதரி அங்கு ஓடிவந்து இராவணனின் கையைப் பிடித்து இராவணனைத் தடுத்தாள். ஓர் ஆணின் மீது விருப்பமில்லாத ஒரு பெண்ணை சம்மதிக்க வைப்பதற்காக அவளைத் துன்புறுத்துவதும் கொலை செய்ய முயற்சிப்பதும் மகா பாதகம். இத்தகைய செயல் உம்மை மட்டுமல்ல உம்மைச் சார்ந்த அத்தனை பேரையும் உன் சாம்ராஜ்யத்தையும் சேர்த்து அழித்திடும் என மண்டோதரி இராவணனுக்கு அறிவுரை செய்தாள். அதன் பின்னர் இராவணன் சீதையைக் கொலை செய்யும் எண்ணத்தை விட்டான்.

மண்டோதரி சீதையின் தாய் என வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், அத்பூத இராமாயணம் தேவி பாகவத புராணம் மற்றும் சமண இலக்கியங்கள் மண்டோதரியை சீதையின் தாய் என குறிப்பிடுகின்றன. இராமாணயத்தில் சுவாரஸ்யத்தை ஏற்றுவதற்காக அவ்வாறு கூடுதலான கதையை உருவாக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இராமாயணத்தில் மண்டோதரி ஒரு துணை கதாபாத்திரமாக அமைந்திருந்தாலும் அவளின் பாத்திரம் மிகவும் முக்கியமானது. அவள் தன் கணவன் மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தாலும் ஒரு போதும் தன் கணவனின் தீய செயல்களுக்குத் துணை போகவில்லை. மாறாக இறுதி வரை அவள் நேர்மையானவளாகவே திகழ்ந்தாள்.

ஒரு பெண்ணின் அனுமதியும் சம்மதமும் இல்லாமல் எந்தவொரு ஆணும் அவளை நெருங்க கூடாது. ஒரு பெண்ணுக்கு சம்மதம் இல்லாவிட்டால் அவளை விட்டு விலகி விட வேண்டும் அவளைக் கட்டாயபடுத்தியோ மிரட்டியோ சம்மதிக்க வைப்பது மூடத்தனம். அன்புடைய மனைவியின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து கணவன் அவளின் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும். அனைவரும் நேர்மையின் உருவமாக திகழ்ந்து நேர்மையாக நடக்க வேண்டும் என்று உணர்த்தினாள். இதுவே மண்டோதரியின் பாத்திரம் உணர்த்தும் தத்துவம்.

இரட்டைக் கோயில்

ஸ்ரீ மல்லிகார்ஜுனா கோவில் மற்றும் ஸ்ரீ மல்ல கோவில் என்ற இரட்டைக் கோயில்கள் ஒன்றாக இருக்கிறது. இக்கோயில் அசலேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு முக்கிய கோவில்கள் மற்றும் மூன்று சிறிய மண்டபங்கள் உள்ளன. இந்த இரட்டைக் கோயிலின் இரண்டு கர்ப்ப கிரகங்களுக்கும் பொதுவான மண்டம் உள்ளது. மண்டபத்தின் வடக்கிலும் தெற்கிலும் நுழை வாயில்கள் உள்ளன. கிழக்கு சன்னதியின் உள்ளே சிவலிங்கம் உள்ளது. ஒரு பெரிய நந்தி கிழக்கு சன்னதிக்கு எதிரே உள்ளது. கிழக்கு சன்னதி இரண்டிலும் முதன்மையானதாக இருக்கிறது. மேற்கு சன்னதி தற்போது காலியாக உள்ளது. இந்தக் கோயில் கிபி 1054 இல் கட்டப்பட்டது. அனந்தசயனா விஷ்ணுவின் சிற்பம் உள்ளது. கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் சுடி. இக்கோயில் கல்வெட்டுகளில் சுண்டி என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

ஜைன யக்ஷினி சக்ரேஸ்வரி தேவி

ஸ்ரீ ரிஷவநாத தீர்த்தங்கரரின் தேவி ஷாஷனாதேவி ஆவார். பொன்னிறமான இவர் இருபது கரங்களுடன் ஒவ்வொரு கரத்திலும் ஒரு ஆயுதத்தை ஏந்திக் காட்சியளிப்பார். மேல் இரு கரங்களில் இரண்டு சக்கரங்களை ஏந்தியவாறும் திரிசூலம், வஜ்ரம், வாள், கோடரி, சக்கு, சக்கரம், மணி, வில், அம்பு, கயிறு, யானைத் தேகம் அக்ஷரமாலை மற்றும் கமண்டலம் ஆகியவற்றை ஏந்தியவாறு அருள்பாலிக்கிறாள். இத்தேவதையின் வாகனம் கழுகு.

கலிங்கத்தின் காந்திரஷ்ருங்கா என்பது அதிகம் அறியப்படாத ஜெயின் பாரம்பரிய பல பழங்கால பொருட்கள் உள்ள தளம். அங்கு தான் இத்தேவதை அமர்ந்துள்ளார்.