கேள்வி: எல்லாம் வல்ல இறைவனாம், அனைத்தும் படைத்தவனாம், நல் எண்ணம் படைத்தவனாம், என்றெல்லாம் புகழ்த்தும் போது ஏன் நலத்துடன் தீயதும் படைத்தான்? என வினாவக் கண்டோம்.
இதற்கான விடை தீயது இல்லையேல் நலமறிய இயலாது என்பதேயாகும். நிழலின் அருமை தெரிதல் வேண்டுமென்றால் வெயிலின் கொடுமையும் காணுதல் வேண்டும் அறிதல் வேண்டும் என்றும் கூறுவோம். உங்களுக்கு யாம் ஒரு நாணயம் அளித்தோம் என்றால் அதில் இரு பக்கம் இருத்தல் வேண்டும் என்பது இயற்கையின் விதியாகின்றது. இவ்விதம் இருக்க நல்லது எனக் கூறிக்கொண்டால் தீமையும் இருத்தல் வேண்டும். தீமையே இல்லாவிடின் தீயவன் இல்லாவிடின் எவனை நல்லவன் என அழைப்பீர்கள்? இத்தகைய நிலையில் ஒருவனுக்குச் சர்வாங்க சூலத்தால் (உடல் முழுவதும் சூலத்தால் குத்துவது போன்ற வலி) பாதிக்கப்பாட்டால் அது இல்லா நிலையில் ஆனந்தம் கொள்ள இயலாது. இது இறைவனின் விதியாகின்றது. இவ்விதம் இருக்க நலம் இருந்தால் தீமையும் காணும். தீமையை அறிந்து அதிலிருந்து விலகி வருதல் வேண்டும் என்பது மனிதனின் சுய அறிவு ஆற்றலின் விளைவாகின்றது. இத்தகைய நிலையில் நமக்குத் துன்பம் தரும் அனைத்தும் நாம் விட்டு நீங்குகின்றோம். உதாரணமாக அக்னியில் கையை விடுவதில்லை. ஏனெனில் அது சுட்டு விடும். துன்பம் தரும் காரியங்களில் ஈடுபடுவதில்லை ஏனெனில் அது துன்பத்தை தரும். இவ்விதம் இவற்றையெல்லாம் விட்டு நீங்குகின்றோம். ஆயினும் ஆனந்தம் கொடுக்கும் பலவற்றை விட நாம் எண்ணுவதில்லை. அதுபோல் இதுவும் தீமையென தீயவற்றை உணர்ந்து படிப்படியாக இவைகளிலிருந்து விடுதலை பெற நல்வழியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மூலவர் சிங்கீஸ்வரர். உற்சவர் பஞ்சமூர்த்திகள், நடராஜர், சிவகாமி அம்பாள், பிரதோஷநாயர், சந்திரசேகர். அம்பாள் புஷ்பகுஜாம்பாள். மூலவர் மற்றும் அம்பாள் கோபுரம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. தல விருட்சம் இலந்தை மரம். தீர்த்தம் ஸ்வேத பத்ம புஷ்கரிணி கமல தீர்த்தம். ஊர் திருவள்ளுவர் மாவட்டம் மப்பேடு. ஶ்ரீதேவி பூதேவி ஆதிகேசவபெருமாள் சன்னதி உள்ளது. சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் அவதரிதவர். கலைமகளாகிய சரஸ்வதிக்குரிய நட்சத்திரம் மூலம் நட்சத்திரம். சரஸ்வதி ஒரு மூல நட்சத்திரத்தனறு ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரைத் தண்டினால் சிங்க நாத பீஜாட்சர சக்திகளை பொறித்தாள். இதனால் இவரது பேச்சு தெளிவானதாகவும் உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும் சமயோசிதமாகவும் இருந்தது. சொல்லின் செல்வர் என்ற பட்டமும் கிடைத்தது.
சிவபெருமான் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடிய போது சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது இசை பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால் சிவனின் நடனத்தைக் காண முடியாமல் போய்விட்டது. இசை ரசனையில் சிவ நடனத்தைக் காண முடியாமல் போனதால் அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது இசை பக்தியை பாராட்டிய சிவன் பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார். நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால் இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பகுஜாம்பாள் என்றும் பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தனது மெய்யான ரூபத்தை பெற இங்கு சிவனை வழிபட்டார். இதனால் இந்த ஊர் ஆரம்ப காலத்தில் திருமால்பேடு (பேடு=பெண்) என்று அழைக்கப்பட்டத. பின்னர் மெய்ப்பேடு என்று அழைக்கப்பட்டு தற்போது மப்பேடு என அழைக்கப்படுகிறது.
கோயில் 5 ஏக்கரில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. கோயிலின் வட கிழக்கு மூலையில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீர பாலீஸ்வரர் மற்றும் வையாழி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. வீரபாண்டியன் தலை கொண்டவன் என்ற பெயர் கொண்ட சோழ மன்னனான இரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கிபி 976 இல் இக்கோயில் கட்டப்பட்டது. இவர் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் சகோதரர். பின்னர் இதே கிராமத்தில் பிறந்த அரியநாத முதலியார் கிருஷ்ண தேவராயர் மதுரையை ஆண்ட காலத்தில் தளவாயாக இருந்ததால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி கிபி 1501 இல் கோவில் ராஜ கோபுரம் மதில் சுவர் மற்றும் 16 கால் மண்டபத்தை கட்டி வைத்தார். மேலும் வடகிழக்கு மூலையில் உள்ள பாலீஸ்வர மரகத பச்சைக் கல்லால் ஆன சன்னதியை புதுப்பித்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு குகஸ்ரீ சுந்தரேச சுவாமிகள்(ஆத்தூர்-சேலம்) முன்னிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் சத் சங்கம் பெயரில்,நால்வர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த ஆலயத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வின் போது ஆலயத்தின் பிரதான கோபுர உச்சியில் கிபி 1947 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையில் இரண்டாம் ஆதித்திய கரிகால சோழனால் கட்டப்பட்டதையும் உறுதி செய்கின்றது. கோயிலில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சம்ஸ்கிருத மொழி மற்றும் நந்திநாகரி எழுத்து வடிவில் தகவல்கள் எழுதப்பட்டிருந்தது. செப்பேடுகளை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறை சிங்கீஸ்வரர் கோயிலில் கண்டெ டுக்கப்பட்டுள்ள செப்பேடுகள் 1513 ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த கிருஷ்ண தேவராய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. பல பிராமணர்களுக்கு அரசரால் கிருஷ்ணராயபுரா என மறு பெயரிடப்பட்ட வாசல பட்டகா கிராமத்தை பரிசாக அளித்துள்ளதை இந்த செப்பெடுகள் குறிப்பிடுகின்றன.
பலரும் மோட்சம் என்பதைப் பலவகையில் சிந்தனை செய்கின்றனர். உதாரணமாக மோட்சத்தின் விளக்கத்தை ஒருவர் கூறும்போது கேட்டோம். மோட்சம் என்பது சொர்க்கவாசம் என்றும் அங்கு பேரானந்தம் காண்போம் என்றும் வேண்டியது கிடைக்கும் என்றும் ஓர் விளக்கத்தைக் கேட்டு வியப்படைந்தோம். இது குழந்தைகள் கூறுவது போல் எமக்குத் தோன்றியது. மற்றொருவர் மோட்சம் என்றால் பிறவி இல்லாமல் சொர்க்கவாசம் பிறவி இல்லாமை தெய்வ நிலை என்று கூறினார். இதுவும் தவறானது. உண்மையான மோட்ச நிலை என்னவென்றால் இதற்கு ஆங்கில வார்த்தையை யாம் உபயோகித்தல் வேண்டும். மோட்சம் என்பதற்கு எளிதாக யாம் கூறும் ஆங்கில வார்த்தை LIBERATION என்பதாகும். இதற்குச் சரியான தமிழாக்கம் விடுதலை என்கின்றதாகும். விடுதலை என்றால் எதிலிருந்து விடுபடுதல் என்று சிந்தித்தல் வேண்டும். விடுதலை என்றால் பொதுவாக உடலில் இருந்து விடுதலை பெறுதல் வேண்டும் என்கிற தவறான தத்துவம் உண்டு. உடலில் இருந்து விடுதலை கண்ட போதிலும் இந்த ஜென்மத்தில் கொண்ட ஆசாபாசங்களினால் மறு பிறவி எடுத்தல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. அப்பொழுது உடலில் இருந்து விடுபடுதல் மோட்சம் அல்ல.
மோட்சம் என்பது இந்த ஜென்மத்தில் தத்தளிக்கும் காரணங்களை நீக்குதல் வேண்டும் என்பதாகும். இவை யாவை என்றால் முதன்மையில் ஆசாபாசங்களாகும். இரண்டாவது பற்றுதல் (பந்தங்கள்) ஆகும். பற்றுதல் நீங்கிடவே மற்ற அனைத்தும் குறையும். சிந்தித்தோம் என்றால் நாம் பிறவி எடுத்தல் வேண்டும் ஏனெனில் இவையாவும் அனுபவித்தல் வேண்டும். இவ்வாறு விட்ட குறையும் நீக்குதல் வேண்டும் என்றெல்லாம் மானிடர்கள் எண்ணுவதுண்டு. இவை யாவும் மோட்ச நிலை அளிப்பதில்லை. யாதும் வேண்டாம் என்கின்றது மட்டும் மோட்ச நிலையை அளிக்குமா என்றால் அதுவும் இல்லை என்பதே எமது கருத்தாகின்றது. ஆத்மாவிற்கும் நமக்கும் இருக்கும் தொடர்பை நன்கு உணர்ந்தால் அதுவே மோட்சநிலை அளிக்கும் என்பது பொது கருத்தாகின்றது. ஆத்மாவிற்கும் நமக்கும் என்ன தொடர்பு என சிந்தித்து ஆழ்நிலை சென்று விட்டால் நம் ஆத்மாவே நாம் என்கிற ஒரு விளக்கம் கிடைக்கும். அகம் பிரம்மாஸ்மி என்கின்ற முழு விளக்கம் கிடைக்கும். இது சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது கிரியைகள் செய்வது வேள்விகள் செய்வதினால் அனைத்தும் கிடைக்கப் போவதில்லை. ஆத்ம விசாரம் (நான் யார்) என்பது செய்தல் வேண்டும். இவ்விதம் செய்து வர ஆத்மாவுடன் ஒன்றிப் போகும். அதுவே உண்மையான விடுதலை. அத்தகைய நிலை நமக்குக் கிட்டினால் மோட்ச நிலை அடைந்தோம் என எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவ்வினாடி முதல் நமக்குப் பிறவியில்லா பெரும் வழி கிடைக்கும் என உறுதியாக எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி: வானம் போல் தியானம் செய் என்று கூறுகின்றனர் அதன் பொருள் என்ன?
பொதுவாக மானிடன் வழிபடும் போது வானத்தை நோக்கி கை கூப்புகின்றான். இதற்குக் காரணம் என்ன என அறிதல் வேண்டும். மற்ற மதத்தோர் வானகத் தந்தை என்றும் அழைக்கின்றனர். இறைவன் வானத்திலிருந்து இறங்கி வருகின்றவனா என்றெல்லாம் குழப்பம் காண்பது நியாயமே. இதற்கு யோக நெறியில் விளக்கம் கண்டால் எளிதாகப் புரியும் என்று கூறுகின்றோம். மனித உடல் எனக் கண்டு கொண்டால் வானமானது சகஸ்ரரத்தின் மேலாகும். எப்பொழுது மனிதனின் எண்ணங்கள் அச்சகஸ்ரர நிலையை எட்டுகின்றதோ அன்று அவன் இறைவனை அடைந்தான் எனக் கூற இயலும். இத்தகைய நிலையில் வானத்தில் இறைவன் இருக்கின்றான் என்றும் அவ்வானத்தை நோக்கி மக்கள் வழிபடுகின்றனர் என்றும் எடுத்துரைத்தோம். இதற்கு மற்றொரு காரணம் உண்டாம் ஆதி காலங்களில் வெளிச்சம் தரும் சூரியனே தெய்வம் என்று மக்கள் எண்ணிட மேல் நோக்கியே வணங்கினர். இச்சம்பிரதாயமானது இக்காலத்தில் தொடங்கியது என்றும் கூறுகின்றோமே. இன்று யாம் இதை மட்டும் கூறுவோம். இருப்பினும் இங்கு கூடியுள்ளோர் இதற்கு மேலான விளக்கங்களை சிந்தித்தல் வேண்டும் என்றென ஆர்வமாக இருக்கின்றோம்.
கேள்வி: கர்ம வினை என்று சொல்கிறார்கள். கர்மம் என்றால் செயல். செயலுக்கு உண்டான வினை அதற்குரிய விளைவு உடனடியாக இருக்கிறது இந்தக் கலிகாலத்தில். இருந்த போதிலும் வேதங்கள் சொல்லுவதாவது நீங்கள் போன ஜென்மத்தில் செய்தது தான் இந்த ஜென்மத்தில் கஷ்டப்படுகிறீர்கள் என்று அது ஏன்? வேதம் சொல்வது சரியா? அல்லது நாம் பார்ப்பது சரியா?
ஒரே நேரத்தில் மூன்று விதைகள் விதைக்கின்றோம். ஒன்று கீரை இரண்டாவது நெல் மூன்றாவது பனை. மூன்றும் ஒரே நேரத்தில் தான் விதைக்கின்றோம். கீரையானது பதினைந்து நாட்களிலிருந்து ஒரு மாதத்திற்குள் அதனுடைய பலனைக் கொடுக்கிறது. நெல்லானது அதனுடைய பலனை ஆறு மாதத்தில் கொடுக்கிறது. ஆனால் பனையானது மூன்று தலைமுறைகள் கழித்துத் தான் அதனுடைய பலனைக் கொடுக்கிறது. அதனால் நாம் என்ன வினையைச் செய்கின்றோமோ அதனைப் பொறுத்துத்தான் அதனுடைய விளைவுகள் இருக்கும். ஆதலால் இந்த ஜென்மத்தில் செய்வது உடனடியாக கிடைக்கின்றது. ஜென்மாந்திரமாக வருவது பெரிய வினை. இக்காலத்தில் கிடைப்பது உடனடியாக மாற்றக்கூடிய வினைகள். இதை வைத்துத்தான் அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று வினையை வைத்துப் பொதுவாகச் சொல்லியிருக்கின்றார்கள். பெரும் வினையென்றால் தாமதித்துத்தான் விளைவுகள் இருக்கும்.
கேள்வி: நமக்குள் இறைவன் குடிகொண்டிருக்கிறான் எனில் நாம் எதற்கு ஆலயங்களிலிலும் உருவங்களிலிலும் இறைவனை நாட வேண்டும்?
இறைவன் அனைவருக்குள்ளும் உள்ளான் என்பது உறுதியானது. எந்த அளவிற்கு உள்ளான் என்பதே வினாவாகும். இதனை யாம் நன்கு ஆராய்ந்த பின் இவ்விடையையும் இங்கு அளிக்க சித்தம் கண்டோம். தூய்மை வேண்டும் நல்வழியில் பல ரூபங்கள் வேண்டும் என்கிறது மானிடனின் நிலை. ஏனெனில் அகக்கண் திறக்கும் வரை புறக்கண்ணே மேலானது என்கின்ற நிலைதான். தமது கண்களில் காண்பதே உண்மை என எண்ணுகின்றான் மானிடன். இவ்விதமே வேள்விகள் ஹோமங்கள் என்பதெல்லாம் துவங்கின. கண்ணால் காணும் சூரிய பகவானைத் தெய்வமாகக் கண்டு அவன் உண்ணும் வகைகளை அவனுக்கும் படைத்தான். சிறிது நேரம் சென்ற பின் பார்க்கும் போது படைத்தது அங்கேயே இருக்கக்கண்டு திகைத்தனர். அச்சூரிய பகவானின் அனல் தரும் வடிவத்திற்கு இங்கு ஈடானது அக்னி எனக் கண்டு அக்கினியை வளர்த்து அதில் படைத்ததை இட்டனர். இதன் வழியாக தெய்வம் ஏற்றுக் கொண்டது என ஓர் கணக்கு கண்டு வேள்விகள் துவங்கின. இதுவே உண்மை நிலையாகும். இதற்குப் பிறகு பலப்பல வடிவங்கள் மனதில் தோன்ற அவ்வித வடிவங்களை உருவாக்கிப் பிரதிஷ்டை என்கின்ற ஒரு சக்தியையும் அளித்து வணங்கத் துவங்கினர். இவ்விதம் இருக்க மனதில் பலப்பல உருவங்களைக் குறைத்து ஒன்று அல்லது இரு உருவமாக்கிப் பின் அதுவும் மறைந்து மனிதன் தனக்குள் சென்று அவன் ஆத்மாவுடன் கலந்து ஆனந்தம் காணுதல் வேண்டும். இதுவே இறைநிலை என்பது உண்மை நிலையாகும். அந்த உண்மை நிலை வர பல காலங்கள் பல ஜென்மங்கள் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. அக்காலம் வரும் வரை உறுதியாக மனிதனும் மூர்த்திகளை வணங்கிப் படிப்படியாக அம்மூர்த்திகளை விட்டு விலகுதல் வேண்டும்.
இது பாசம் கொடுத்து பின்பு பாசத்தை அறுத்தல் வேண்டும் என்கின்ற தத்துவமாகின்றது. அதாவது மனிதன் பிறக்கும் பொழுதே சிறு நாட்களிலேயே பாசமதன் உணர்வை அறிகின்றான். பிறவியில் அன்னையின் நாமத்தைக் கூறுகின்றான் பின்பு அன்னையுடன் ஒட்டுகின்றான் பின்பு பெற்றவரை அறிகின்றான் பின்பு சகோதரர்கள் பெற்றவர்களின் தாய் தந்தையர் என அனைவரையும் அறிந்து அப்பாசத்தில் தழுவுகின்றான். சிறிது காலம் செல்ல தெய்வம் என்கின்ற ஓர் நிலையை அறிந்து தெய்வத்துடன் பாசத்தைக் காட்டுகின்றான். இப்பாசமதை அறுத்து வெளி பூசைகள் அனைத்தையும் அகற்றி உள் செல்லுதல் வேண்டும் என்பது எளிதான காரியம் அல்ல. அந்நிலை அடைந்தோர்க்கு சீராகும் அனைத்தும். அந்நிலை அடையும் வரை வெளி பூஜைகள் அவசியம் என்றும் இங்கு செப்புவோம். ஆலயங்கள் என்பது முன்பு கூறியது போல் குருடர்களுக்கு உள்ள கொம்பைப் போல ஆன்மீகத்தில் சில குருடு நிலை உள்ளோர்க்கு ஆலயங்கள் அவசியம் என்றும் இங்கு யாம் உறுதியாகக் கூறிக் கொண்டோமே.
மேலாக முன்பு ஒன்று கூறியுள்ளோம் ஆலயங்கள் ஆகமவிதியில் கட்டப்படுவதால் அங்கு சில விசேஷமான கதிர் ஒளிகள் பரவும் இதில் அமர்ந்தால் பல வகையில் நமக்கு ரோக மாற்றங்கள் மனநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றது. இதை மறுக்க இயலாது. இதன் காரணமாகவே கிராமத்தில் அனைவரும் ஆலயத்தில் சிறிது நேரம் போய் அமர்ந்து கொண்டு வருவது உண்டு. இக்காலத்தில் இதை யாம் காணவில்லை இருப்பினும் விசித்திரமாக இக்கால இளைஞர்கள் படிப்படியாக மீண்டும் இறைவனை நாடத் துவங்கி உள்ளனர். இவர்களுக்கு யாம் கூறுவது மெதுவாக படிப்படியாக முதலில் ஓர் மூர்த்தி என்கின்றதை அடையச் செய்து அதனை ஆராதனை புரிந்து அதற்குரியதை அளித்துச் சிறப்பாக பூசித்து வர நன்மைகள் உண்டாகும் என்றும் இங்கு விளக்கினோம். அதனை விட்டு விட்டு இது ஏன்? எதற்கு? என வினா கேட்டுக் கொண்டிருந்தால் காலங்கள் செல்லுமே தவிர ஞானம் கிட்டாது என்கின்ற ஓர் நிலையும் உண்டு.
சாஸ்திரங்கள் கூறுவது போல ரூபத்திலிருந்து அரூபம் செல்லுதல் வேண்டும். ஸ்தூலத்தை முதலில் அறிந்து பின்பு சூட்சுமத்தை அறிதல் வேண்டும். முதலில் உன் உடலை அறிந்து பின்பு உள்ளிருக்கும் இறைவனை அறிதல் வேண்டும். மண்ணை அறிந்து அதனுள் உள்ள சத்தை அறிதல் வேண்டும். இந்த தத்துவம் விளக்கிடவே மசானம் என்பது நம் புராணங்களிலும் இக்காலத்திலும் மகத்துவம் காண்கிறது. மண்ணால் படைக்கப்பட்டது மீண்டும் மண்ணாகிறது என்கின்றது ஒரு தத்துவம். இதில் எதுவும் நித்யம் இல்லை. அவ்விதம் இருக்கும் போது அம் மண் கல் என்கின்றதால் தீட்டப்பட்ட மூர்த்திகள் எவ்விதம் நித்யமாக இருத்தல் கூடும்? மனிதன் பூசிக்கும் வரை நித்யம் பின்பு அநித்யம். இதை நிரூபிக்கும் வகையில் பல பாழடைந்த ஆலயங்கள் நம் நாட்டில் உள்ளன. இது இத்தத்துவத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ளது. இந்நிலையில் யாம் கூறும் பூஜைகள் வீணாகுவதில்லை இவை அனைத்தும் நம் மனம் ஒருநிலைப்படுத்த உபயோகிக்கப்படும் பல வழிகள் முழுமையான நம்பிக்கையுடன் செய்தவர்களுக்கு எவ்வித குறைகளும் நேரிடாது நன்மைகள் பெரிதாகும் என்றும் இங்கு எடுத்துரைத்தோம்.
கேள்வி: குடிக்க நீர் அல்லவா கேட்டோம் ஏன் இவ்விதம் வெள்ளப் பெருக்கு உண்டாகிறது?
குடிக்க நீர் கேட்டது உண்மை இதை யாம் மறுக்கவில்லை. இருப்பினும் மானிடர்கள் இயற்கையிடம் பெருமளவில் விளையாட்டு காட்டுகின்றனர். காரணமின்றி மரங்களை அழிப்பத. பூமியிலிருக்கும் கால்வாய்கள் நீர் செல்லும் வழிகள் அடைத்து வீடுகள் கட்டுவது. இவையாவும் பூமிக்கும் அதாவது பஞ்ச பூதங்களுக்கும் பொறுக்கவில்லை என அறிந்து கொள்ளுங்கள். இக்காலம் வரை பொறுமை கண்ட அவர்கள் திருப்பி அவர்களின் வலிமையை காட்டத் துவங்கினர். இதன்வழி உலகெங்கும் இந்நாட்டில் மட்டுமல்ல பூமியால் அக்கினியால் வெள்ளத்தால் ஏன் இனி வருங்காலங்களில் ஆகாயம் வாயு வழியாகவும் பல தீமைகள் உண்டாக உள்ளது. இயற்கையின் விதி என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
அனைவரும் பிரார்த்தனை செய்திருந்தால் இயற்கையின் வலிமையை குறைத்திருக்கலாம். இதன் முக்கியத்துவத்தை எவரும் அறியாது இதற்கென பிரார்த்தனை செய்ததாக யாம் காணவில்லை. மக்களை காக்குங்கள் என்கின்ற ஓர் அலறலோ யாம் இன்று வரை கேட்கவில்லை. இது வருந்துதலுக்குரிய ஒர் காரியமாகிறது. ஏனெனில் நாம் மிருகங்களை பார்த்துக் கொண்டாலும் பூச்சிகளை பார்த்துக் கொண்டாலும் இவை மற்றொன்றுக்கு ஆபத்து என்றால் உடனடியாக சேர்ந்து காக்க முயற்சிக்கின்றது. தீனி கிடைத்திட அனைவரையும் அழைத்து பங்கிடுகிறது. இறைவன் படைப்பில் மானிடன் மட்டும் மாறிவிட்டான். இவன் பங்கிடுவதில்லை ஏனெனில் இன்று பங்கிட்டால் மீண்டும் பங்கிற்கு வருவானோ என்கின்ற அச்சம். இதுவும் உண்மை தான் கலிகால தன்மை அவ்விதமே உதவி செய்தால் உதவி செய்கின்றவன் ஏமாளி எனக்கருதி அவனிடம் எவ்வளவிற்கு வசூல் செய்யலாம் என பார்க்கின்றனர்.
இத்தகைய நிலையில் எவரை யாம் குற்றம் சூட்டுவது என எமக்கே அறியவில்லை. எல்லாம் இறைவனின் விளையாட்டு என்றே எடுத்துக் கொண்டோம்.
கேள்வி: நாகம் ஒன்றில் தவக்களையை வாயில் இருப்பதைக் கண்டால் தவக்களையை காப்பாற்றினால் நாகத்தின் உணவை பறித்த பாவமும் அப்படியே விட்டு விட்டால் தவக்களையின் உயிரை போக்கிய பாவமும் உண்டு இந்நிலையில் பாவ புண்ணிய நிலைகளை எவ்விதம் அறிவது?
இயற்கையின் வழியில் ஓர் ஜீவனுக்கு மற்றோர் ஜீவன் இரையாகின்றது. நாம் உண்ணும் போது செடி கொடி கீரை வகைகள் பழ வகைகள் மரக்கறி வகைகள் நமக்கு உணவாகின்றன. பெரும் மிருகங்களுக்கு சிறு மிருகங்கள் இரையாகின்றது. இது இயற்கையின் விதி என்பதால் அவ்விதம் நடக்கட்டும். இதில் நமது குறிக்கீடு தேவையற்றதாம். நாம் செய்யும் பணிகள் சீராகவும் நலம் தரும் வகையிலும் செய்வதே போதுமானது. இதுவே எமது விளக்கம் ஆகின்றது.
கேள்வி: குருவாக்கு சில சமயங்களில் தவறுகின்றதே இது ஏன்?
முதலாவதாக குருவென ஏற்றுக் கொண்டால் அக்கேள்வியை கேட்க எவ்வித அதிகாரமும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஏற்றபின் சந்தேகங்கள் கூடாது என்பதே விதி. ஏற்கும் முன் சந்தேகங்கள் தோன்றுவது சகஜம்.
இரண்டாவதாக குருவின் வாக்கு தெய்வ வாக்கு என செப்பக் கண்டால் இங்கு சாட்சாத் குருவானவரே தொட்டும் உரைக்க அவர் காரணமின்றி எவ்வாக்கும் உரைப்பதில்லை. இக்காலங்களில் வாக்கு தவறி விட்டதே என சிலர் துக்கம் காண்பது சகஜ நிலையே. பிற்காலத்தில் எதற்கு செப்பினர் ஏது செப்பினர் என தெளிவாகும். மற்ற ஒன்றும் யாம் இங்கு செப்ப விரும்புகின்றோம். குருவை நாடும் காலத்தில் வினாக்களை கேட்கும் காலத்தில் எப்பொழுதும் குரு உங்களுக்கு சாதகமாக விடை அளித்தல் வேண்டும் அருள் புரிதல் வேண்டும் என்பதே தவறாகின்றது. யாருக்கு என்ன தேவையோ அதனை குரு வழங்குவார் இதில் எக்குறையும் இல்லை. உதாரணமாக சிறுவன் ஒருவனுக்கு வயிற்றுப் போக்கு நிலவி வர அன்னை அவள் அவனுக்கு காரம் கொடுப்பதில்லை. இதைப்போல் காலம் சீர் இல்லையேல் குரு எதையும் அருள மாட்டார். இது வெறுப்பாகவோ விருப்பாகவோ அல்ல இதுவே நீதி என்றும் இங்கு எடுத்துரைப்போம்.
மேலும் குருவை நாட எத்தகைய வினாக்கள் கேட்க வேண்டும் என்கின்ற வினாவுக்கும் ஒன்றை செப்புவோம். நன்றாக இறைவன் அளித்த சுய புத்திகளை உபயோகித்த பின் விடை கிட்டாமல் நிற்கவே அந்நிலையில் குருவை நாடுதல் வேண்டும் என்கின்ற விதி உண்டு. ஏனெனில் இறைவனின் படைப்பில் சுயபுத்தி உள்ள படைப்பு மனிதப் படைப்பே. இவை பூரணமாக உபயோகித்த பின் வழி தெரியாது நிற்க குருவின் அருளை நாட உறுதியாக உங்களுக்கும் தெளிவு கிட்டும்.
திரிலோக சஞ்சாரியான நாரதருக்கு வீணை இசைப்பதில் தனக்கு நிகர் எவரும் இல்லை என்ற கர்வம். தேவலோகத்தில் வீணை இசை வாசிப்பதில் சிறந்தவர்கள் நாரதர் மற்றும் தும்புரு. தும்புரு கைலாயத்திலும் நாரதர் வைகுண்டத்திலும் தம்முடைய திறமையை வெளிப்படுத்தி வந்தனர். ஒரு சமயம் இவர்களுக்குள் தம்முள் யார் சிறந்தவர் என்ற சர்ச்சை வந்தது. இருவரும் தீர்மானித்து கைலாயம் நோக்கி புறப்பட்டனர். அப்படி செல்லும் வழியில் ஓர் அடர்ந்த வனம் குறுக்கிட்டது. அந்த வனத்தில் இருந்து ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்ற ராம நாமம் ஒலித்தது. இது என்ன இந்த வனத்தில் ராமநாம ஜெபம் கேட்கிறதே? உள்ளே சென்று பார்ப்போம் என்று இருவரும் வனத்தினுள் நுழைந்தனர். அங்கே ஆஞ்சநேயர் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து ராமநாம ஜெபம் செய்து கொண்டிருந்தார். இருவரும் அனுமனை வணங்கினர். யாழிசை வல்லுனர்களே இருவரும் சேர்ந்து எங்கே பயணிக்கிறீர்கள்? என்று கேட்டார் அனுமன். உடனே நாரதரும் தும்புருவும் தங்களுக்குள் ஏற்பட்ட போட்டியையும் சிவனை தரிசித்து தீர்வு காண இருப்பதையும் கூறினர். யாழ் இசை வல்லுநர்களுக்குள் யார் இசை சிறந்தது என்ற போட்டியா? சரியான போட்டிதான் எனக்காக உங்கள் இசையை கொஞ்சம் வாசித்துக் காட்ட முடியுமா? என்று கேட்டார் அனுமன். இருவரும் தங்கள் யாழில் இசை மீட்டிக் காட்டினர். அருமையாக வாசிக்கிறீர்கள் நானும் கொஞ்சம் உங்கள் யாழை மீட்டட்டுமா? என்று அவர்களிடமிருந்த வீணையை வாங்கி வாசிக்கத் தொடங்கினார் அனுமன்.
அனுமன் வாசிக்க துவங்கியதும் அண்ட சராசரமும் அப்படியே உறைந்து நின்றுவிட்டது. நதிகளில் தண்ணீர் ஓடவில்லை. மரங்கள் கிளைகளை அசைக்கவில்லை. பறவைகள் அப்படியே பறந்தபடி நின்றன. உலகமே அந்த இசையில் மயங்கி அப்படியே நின்றுவிட்டது. அனுமன் அமர்ந்திருந்த அந்தப் பாறை அப்படியே உருகி வழிந்து ஓடத் துவங்கியது. நாரதரும் தும்புருவும் வெட்கம் அடைந்தனர். ஏதோ வாசித்து இதில் யார் சிறந்தவர் என்று போட்டியிட்டு கொள்கிறோமே? கல்லையும் கரைய வைக்கிறதே அனுமனின் இசை இவரல்லவோ சிறந்தவர். இவர் இசையல்லவோ சிறந்தது. இத்தனை திறமை இருந்தும் அடக்கமுடன் வாழும் இவரை பார்த்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். சிறிது நேரத்தில் அனுமன் இசைப்பதை நிறுத்தி யாழை பாறையில் வைத்தார். உறுகிய பாறைக்குழம்பு கெட்டிபட்டு அதில் யாழ் ஒட்டிக்கொண்டது. இப்போது அனுமன் சொன்னார். நாரத தும்புரு முனிவர்களே இதோ இந்த பாறையில் உங்கள் யாழ் ஒட்டிக் கொண்டு விட்டது. நீங்கள் மீண்டும் இசை வாசியுங்கள். உங்களில் யார் இசைக்கு இந்த பாறை உருகுகிறதோ அவரே சிறந்தவர். அவர் இந்த வீணையை எடுத்துக் கொள்ளலாம். இதற்குப் போய் எதற்கு சிவனை தொந்தரவு செய்ய வேண்டும் என்றார். இரு முனிவர்களும் அனுமனின் பாதம் பணிந்தனர். சுவாமி உங்கள் இசை எங்கள் கண்களை திறந்து விட்டது. கல்லையும் கரைய வைக்கும் திறமை எங்களுக்கு இல்லை. எல்லாம் இறைவன் அருள். இறைவனே எல்லாவற்றையும் தருகிறார். எங்கள் இருவருக்குள்ளும் இருப்பது இறைவனே. இனி எங்களுக்குள் போட்டி வராது. எங்கள் கர்வம் ஒழிந்தது என்று வணங்கி நின்றனர். அனுமன் மீண்டும் இசைக்க பாறை இளகி யாழ் கிடைத்தது. அதை இருவரிடம் கொடுத்த அனுமன் முனிவர்களே வித்யா கர்வம் கூடாது. கர்வம் நானே பெரியவன் என்ற பெருமையை கொடுப்பது போல் தெரியும். ஆனால் இறுதியில் அழித்து விடும். அடக்கமே சிறந்த குணம். இதை உணர்ந்து இறைவனை பாடி வாருங்கள் என்று கூறினார்.
அனுமன் வாசிப்பில் ஒவ்வொரு ஸ்வரமும் ராம் ராம் என்று சொல்லும். அவர் வீணையுடன் ஒன்றி வாசிக்க அந்த நாதத்தில் ஸ்ரீ ராமனும் ஒன்றி விடுவார். இவருக்குப் பிடித்த ராகத்தின் பெயர் ஹனுமத்தோடி என்று புராண வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இடம் குடந்தை ராமஸ்வாமி கோவிலில் ஸ்ரீ அனுமான் வீணையுடன் காட்சி தருகின்றார்.