சாருகர்

சாருகர் ஒரு மாமிச வியாபாரி. தன் கடையில் எடை கல்லாக சாளக்கிராம மூர்த்தியை உபயோகித்து வந்தார். சாளக்கிராமத்தின் மகிமையை பக்தர் ஒருவர் சொல்லக்கேட்டு நாளடைவில் அந்த மூர்த்தி மேல் அன்பு ஏற்பட்டு வியாபார நேரம் தவிரத்து மற்ற நேரங்களில் அந்த சாளக்கிராம கல்லை வணங்கி வந்தார். ஒரு நாள் இதை கவனித்த விஷ்ணு பக்தர் அவரை ஏம்பா இந்த அடாத செயல் செய்கிறாய் என சாளக்கிராமத்தின் மகிமையையும் கிருஷ்ண பரமாத்மாவின் புகழையும் எடுத்து கூறி பண்டரி மேன்மையையும் கூற இதை அறிந்த சாருகர் பண்டரி யாத்திரை செல்ல முடிவு செய்து கிளம்பினார். வழியெல்லாம் பண்டரி நாதா பண்டரிநாதா எனு கூறி என்றும் விட்டல் விட்டல் என்று பஜனை செய்து கொண்டே சென்றார். இரவு பகலாக பஜனை செய்தபடி நடந்து சென்றார். பொழுதுபோன ஊரில் பிட்சை எடுத்து உண்டு சத்திரங்களில் தங்கி பஜனை செய்வார்.

ஒருநாள் ஒரு நகரத்தில் தங்கினார். இரவில் ஒரு தனவந்தரின் வீட்டுத் திண்ணயில் அமர்ந்து ஜெபம் செய்து கொண்டிருந்தார். இரவு ஒரு மணி. நகரம் இருள் சூழ்ந்திருந்தது. ஒலியடங்கி இருந்தது. அங்கங்கே நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன. அந்த வீட்டுப் பெண் வேலை காரணமாக கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். சாருகரைக் கண்டாள். அவர் மீது மையல் கொண்டாள். அவரருகே சென்று தாங்கள் பூலோக மன்மதரைப் போல காட்சி தருகிறீரே தாங்கள் யார்? என்று கேட்டாள். அதற்கு சாருகர் அம்மா வணக்கம் நான் ஒரு யாத்ரீகன். என் பேர் சாருகன். நான் பண்டரிபுரம் போகின்றேன் என்றார். அந்த பெண்மணி இவரிடம் என் உள்ளததைக் கொள்ளை கொண்ட உத்தமரே இந்த விநாடி முதல் தாங்கள் என் இன்னுயிர்க் கணவர் என அவரை ஆசையுடன் நெருங்கினாள். அம்மா இந்த உலகம் கடுகளவு மட்டுமே. இந்த கடுகளவு உலகத்தில் தவறு செய்யும் பாவத்தால் வரும் துன்பம் மலையளவு. நான் மனத்தினாலும் பெண்களைத் தீண்டாதவன். நீங்கள் உங்களுடைய கணவருடன் வாழ்வதுதான் கண்ணியம். கற்பு நெறியில் நிற்பதுதான் புண்ணியம் என ஒழுக்கத்தை போதித்தார். அவள் காதுகளில் ஏதும் விழவில்லை. வெறி பிடித்தவளைப் போல ஓடி கத்தியை எடுத்து தூங்குகின்ற கணவனுடைய தலையை வெட்டித் துண்டித்தாள். என் உயிரினும் இனிய உத்தமரே என் கணவரைக் கொன்றுவிட்டேன். இனி நீர்தான் என் கணவர் என்று கூறி அவரைக் கட்டித் தழுவ வந்தாள். இந்தக் கொடுஞ் செயலைக் கண்டு சாருகர் நடுநடுங்கினார். கணவரைக் கொன்ற இவள் ஒரு பெண்ணா? பூதமா? பேயா? என்று எண்ணித் திண்ணையை விட்டுக் குதித்து ஓடினார். அந்தப் பெண் அவரைத் தொடர்ந்தாள். சாருகரைப் பற்ற முடியவில்லை. நான்கு தெரு கூடுமிடத்தில் நின்று அப்பெண் ஓவென்று கதறி ஓலமிட்டாள். அங்கு உறங்கியிருந்தவர்கள் கூடினார்கள். பெரியோர்களே இந்தப் பாவி எங்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். நான் சிறு வேலையாக கதவைத் திறந்து வெளியே வந்தேன். என் கணவரை வெட்டிவிட்டு என்னைக் கற்பழிக்க துரத்தி வந்தான் என்று கூறி கதறியழுதாள். ஊர்க்காரர்கள் சாருகரைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தினர். பின்னர் காவலர்களிடம் ஒப்படைத்து சிறையில் அடைத்தார்கள். பொழுது விடிந்தபின் அவ்வூர் சிற்றரசன் வழக்கை விசாரித்தான்.

பாண்டுரங்கன் அனைத்தும் அறிவான் நான் ஒரு குற்றமும் செய்யவில்லை என நடந்ததை உள்ளபடி சொன்னார் சாருகர். குற்றம் புரிந்தவன் ஒப்புக்கொள்வானா? என்று எல்லோரும் சொன்னார்கள். சாருகருடைய கரங்களைத் துண்டிக்குமாறு அரசன் ஆணையிட்டான். சாருகருடைய இரு கரங்களும் துண்டிக்கப்பட்டன. குற்றம் செய்யாத சாருகர் துடிதுடித்தார். கைகளில்லாமல் எங்கும் தங்காமல் பண்டரீபுரம் வந்து சேர்ந்தார். அன்றிரவில் கோயில் அர்ச்சகர்கள் அறங்காவலர்கள் தக்கார்களின் கனவில் பண்டரீநாதர் தோன்றி நமது பரம பக்தனான சாருகன் வருகிறான். கோயில் மேளம் குடை சுருட்டி பூரண கும்பம் வைத்து உபசரித்து அழைத்து வாருங்கள் என்று பணித்தருளினார். அனைவரும் சாருகருக்கு கோவில் பரிவட்டம் கட்டி கனவில் பாண்டுரங்கன் கூறியதைச் சொல்லி பேரன்பு காட்டினர். சாருகர் இதனைக் கேட்டு அழுதார். பாண்டுரங்கன் திருவுருவம் முன் நின்றார். கைகளில்லாமையால் தொழ முடிய வில்லையே என்று கதறினார். அப்பாேது வெட்டப்பட்ட கைகள் இரண்டும் விட்டலன் அருளால் முளைத்தன.

தேவ தேவா விட்டலா என்று அன்பின் வெளிப்பாட்டில் கதறி அழுதார். மேலும் அன்று அரசன் என் கரங்களை வெட்டுமாறு ஆனையிட்டானே. அப்போது இவன் குற்றமற்றவன் என்று அசரீரியாகவாது ஒரு குரல் கொடுத்திருக்கலாமே. அன்று என்னைக் கை நழுவவிட்டீரே. இது நியாயமா? இதுதான் உன் கருணையா? இது தருமமா? நான் இப்பிறவியில் எவருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லையே என்று புலம்பினார். அப்போது விட்டலன் பிரசன்னமாகி அவரை தேற்றி கூறினார். அன்பனே அழாதே. அவரவர் வினைகளை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும். அன்று ஒரு நாள் குளக்கரையில் ஓர் அந்தணன் காயத்ரி மந்திரம் ஜெபித்துக் கொண்டிருந்தான். அங்கு பசுவை வெட்ட வந்த புலையன் ஒருவன் பசு ஒடிப்போன வழியைக் கேட்டவுடன் இரு கரங்களையும் நீட்டி அது போன பக்கத்தைக் காட்டினான் அந்த அந்தணன். புலையனும் அவ்வழியே சென்று பூலோக காமதேனுவாகிய பசுவைக் கொன்று விட்டான். நீதான் அந்த காயத்ரி ஜபம் செய்த அந்தணன். பசுவின் கொலைக்குக் காரணமான உனது இரு கரங்களும் வெட்டப்பட்டன. கொலையுண்ட பசுதான் தனவந்தனின் மனைவி. பசுவைக் கொலை செய்த புலையன்தான் அவளுடைய கணவன். உன்னுடைய துன்பங்கள் அனைத்தும் முற்பிறப்பில் நீ செய்த தீவினையால் வந்தவை. உன்னுடைய அனைத்து தீய வினைகளும் இப்போது தீர்ந்தது. இப்பிறவியில் நீ வினைகளின் காரணமாக பெற்ற துன்பத்திலும் விடாமால் செய்த உன் பக்தியின் பலனால் இன்று எமது தரிசனமும் கிடைத்தது என்று அருளிச் சென்றார். பின் சாருகர் காலமெல்லாம் பண்டரியிலேயே தங்கி நாம செபம் செய்து இறுதியில் வைகுண்டம் எழுந்தருளினார்.

துணையாக இறைவன்

ஒரு இளம் சிறுவனை அவனது பெற்றோர் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். மீண்டும் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர்கள். சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும் அந்த சிறுவன் நான் இப்போது வளர்ந்திருக்கிறேன் இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான். சிறிது யோசனைக்குப் பிறகு அவனது தந்தை ஒப்புக்கொண்டார். ரயில் நிலைய நடைமேடையில் நின்று சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூறிவிட்டு மகனே வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால் இது உனக்கானது என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார். பயண சந்தோசத்தில் சிறுவன் சரி என்று காகிதத்தின் மீது கவனத்தை வைக்காமல் ரயிலில் கிளம்பினான். முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும் திரில்லாகவும் இருந்தது. ஓடும் ரயிலில் வேக வேகமாகப் பின்னோக்கி ஓடும் இயற்கையின் அழகை ஜன்னல் வழியாக ரசிக்கத் தொடங்கினான். சிறிது நேரத்தில் இரவு சூழ ஆம்பித்தது. அந்நியர்கள் வருவதும் போவதுமான இருக்க மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்கினான். எதிரே அமர்ந்தவரின் முரட்டுத் தோற்றமும் சிறுவனுக்கு மேலும் பயத்தை கொடுத்தது. ரயிலின் வேகத்தைப் போல தடதடவென இதயம் கொஞ்சம் வேகமாகத் துடித்தது. ஜன்னலோர இருக்கையில் தலையைத் தாழ்த்தி மூலையில் பதுங்கிக் கொண்டான். அவன் கண்களில் கண்ணீர் எழுந்தது. அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது தந்தை சட்டைப் பையில் காகிதம் வைத்தது நினைவுக்கு வந்தது. கையால் நடுங்கியபடியே அந்தக் காகிதத்தை எடுத்து பிரித்து படித்தான். அதில் பயப்படாதே மகனே நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன் என்று எழுதி இருந்தது. கற்பனை செய்ய முடியாத நம்பிக்கை அவன் மனதில் துளிர்த்தது. இப்போது அவனது மனதில் பயம் காணாமல் போய் இருந்தது. பயத்தில் குனிந்த தன் தலையை உயர்த்தி அதே அந்நியர்களுக்கு மத்தியில் மிகவும் வசதியாக நிமிர்ந்து கம்பீரத்துடன் அமர்ந்தான்.

இது போலவே நம்முடைய ஆசைகளை தீர்த்துக் கொள்ள நம்மை இறைவன் இந்த உலகத்திற்கு அனுப்பினார். அப்போது​ நம்முடன் நம்பிக்கை ஒரு காகிதத்தில் நான் உன்னுடன் இருக்கிறேன் உன்னோடு பயணம் செய்கிறேன் என்று எழுதி வைத்திருக்கிறார். சொன்னது போலவே நமது இதயக் கமலத்தில் வீற்றிருந்து நமக்கு துணையாகவும் வருகின்றார்.

மனிதர்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போது தன்னுடன் இருக்கும் இறைவனை மறந்து விடுகிறார்கள். தன்னுடைய ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போதும் இது இறைவன் கொடுத்தது என்பதையும் மறந்து விடுகிறார்கள். மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும் ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போதும் என்ன செய்கிறோம் என்று தெரியாமலும் தெரிந்தும் பல தவறுகளை செய்து விடுகின்றார்கள். செய்த தவறுக்கு தண்டனையாக துன்பம் என்று வரும் போது மட்டுமே இறைவனை நினைக்கிறார்கள். அந்த நினைப்பிலும் நான் என்ன தவறு செய்தேன் எனக்கு ஏன் இந்த துன்பம் கொடுத்தாய் இறைவா என்று நினைக்கிறார்கள். தவறு செய்யும் போது நம்முடன் இறைவன் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டால் யாரும் தவறு செய்ய மாட்டார்கள். தண்டனைகளும் இருக்காது. மகிழ்ச்சியாக இருக்கும் போதும் நம்முடன் இருக்கும் இறைவனை நினைத்துக் கொண்டால் துன்பம் என்ற ஒன்றே வராது.

இறைவனின் அருளாற்றல்

ஒரு முறை கிருஷ்ண பகவான் உதங்க முனிவரிடம் என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். ஒன்றும் வேண்டாம் என்றார் முனிவர். கிருஷ்ணர் வற்புறுத்தினார் நான் சுற்றிக் கொண்டே இருப்பவன். சில சமயம் தாகத்துக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. அதற்கு ஏற்பாடு செய்தால் நல்லது என்றார் உதங்கர் கிருஷ்ணர் அதை ஒப்புக்கொண்டார். அதே சமயம் ஒரு நிபந்தனையும் விதித்தார். தாகம் எடுக்கும்போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் கிடைக்கும். ஆனால் நான் எப்படித் தண்ணீரை அனுப்பினாலும் நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார் கிருஷ்ணர். உதங்கர் ஒப்புக் கொண்டார். நாட்கள் கடந்தன. உதங்கர் ஒரு முறை பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அவருக்குத் தாகம் எடுத்தது. பக்கத்தில் தண்ணீர் கிடைக்க வழி இல்லை. அப்போது கிருஷ்ணனை நினைத்தார்.

கிருஷ்ணரின் திருவுள்ளம் தொலை தூரத்தில் இருந்தாலும் உதங்கரின் எண்ணத்தை உணர்ந்த கிருஷ்ணர் உடனே தேவேந்திரனைத் தொடர்பு கொண்டார். உதங்கருக்கு தேவாமிர்தம் தரும்படி சொன்னார். தேவேந்திரன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை மனித ரூபத்தில் உள்ளவர்களுக்கு தேவாமிர்தம் தருவதில்லை. நீங்கள் சொன்னபடியால் கொடுக்கிறோம். ஆனால் என் விருப்பப்படிதான் செல்வேன் என்றான். கிருஷ்ணர் ஒப்புக் கொண்டார். இந்திரன் ஒரு புலையரின் வடிவத்தில் உதங்கரிடம் சென்றான். அழுக்கான உடல் அதைவிட அழுக்கான ஒற்றை ஆடை பஞ்சடைந்த தாடி மீசை கையில் அழுக்குப் பிடித்த ஒரு தகரக் குவளை பக்கத்தில் சொறி பிடித்த நாய் இந்தக் கோலத்தில் சென்றான். உதங்கரிடம் சென்று தகரக் குவளையை நீட்டினான். அருவருப்படைந்த முனிவர் அவனை விரட்டினார். மாற்றுருவில் வந்த இந்திரன் நீரைக் குடிக்கும்படி வற்புறுத்தினான் முனிவர் கேட்கவில்லை. இந்திரன் சென்றுவிட்டான். தனக்கு வாக்களித்தபடி கிருஷ்ணர் நீரைக் கொடுக்கவில்லை என்று உதங்கருக்கு கிருஷ்ணர் மீது மகா கோபம் வந்தது. எப்படியோ சமாளித்துச் சற்றுத் தொலைவில் உள்ள ஊருக்குச் சென்று தாகத்தைத் தணித்துக் கொண்டார். கிருஷ்ணரை வேறொரு நாளில் மீண்டும் சந்தித்தார் உதங்கர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். புன் சிரிப்போடு நெருங்கிய கிருஷ்ணர் என்ன முனிவரே உங்களுக்காக இந்திரனிடம் தேவாமிர்தம் கொடுத்து அனுப்பினேன் நீங்கள் அவனை விரட்டிவிட்டீர்களே என்றார். உதங்கருக்குத் தன் தவறு புரிந்தது.

உதங்கர் பெரிய தவயோகி. ஆனால் ஏன் அவரால் கிருஷ்ணர் அனுப்பிய அமிர்தத்தைக் குடிக்க முடியவில்லை. விஸ்வரூபம் காட்டிய பரந்தாமனே அனுப்பிய நீர் என்றால் யோசிக்காமல் எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே? அப்படிச் செய்ய விடாமல் உதங்கரைத் தடுத்தது எது? உயிர்களிடத்தில் உயர்வு தாழ்வு பேதம் பார்க்கும் அவரது குணம் காரணம். ஒருவர் எவ்வளவு தவம் செய்கிறார் என்பது முக்கியமல்ல. எவ்வளவு சாஸ்திரங்களைப் படித்துக் கரைத்துக் குடிக்கிறார் என்பதும் முக்கியமல்ல. புறத் தோற்றம் முக்கியமல்ல. தோற்றத்துக்குப் பின் என்ன இருக்கிறது என்பதை உணர்வதே முக்கியம். பார்த்தல் கேட்டல் நுகருதல் உணர்தல் சுவைத்தல் என்று ஐந்து புலன்களினால் எதனை அனுபவித்தாலும் அதில் இறைவன் இருக்கிறார் என்பதை கிருஷ்ணர் உதங்கருக்கு உணர்த்தினார். உதங்கர் எவ்வளவுதான் ஞானியாக இருந்தாலும் அவருக்கு மனிதர்களிடத்தில் பேதம் பாராட்டும் தன்மை இருந்தது. தோற்றத்தை வைத்து ஒருவரை எடைபோடும் தன்மை இருந்தது. அது இருக்கும்வரை ஒருவர் கடவுளை நெருங்க முடியாது. ஆகவே தனது மாய விளையாட்டால் இதனை உதங்க முனிவருக்கு உணர்த்தி அவரது குணத்தை மாற்றினார் கிருஷ்ணர்.

பார்த்தல் கேட்டல் நுகருதல் உணர்தல் சுவைத்தல் என்று ஐந்து புலன்களினால் எதனை அனுபவித்தாலும் அதில் இறைவன் இருக்கிறார். இறைவனின் அருளாற்றல் இருக்கிறது என்பதை நாமும் உணர்வோம். இறைவனடி சேர்வோம்.

உத்குடி ஆசனத்தில் அய்யனார்

கருவறையில் அய்யனார் வடக்கு நோக்கிய நிலையில் உத்குடி ஆசனத்தில் ஜடாமுடியுடன் மாலை மற்றும் யக்ஞோபவீதம் கால்களில் சலங்கை அணிந்து அமர்ந்துள்ளார். சுற்றி காவல் தெய்வங்கள் உள்ளார்கள். உள்ளூர் மக்கள் இந்த அய்யனாரை சாஸ்தா என்றும் அழைக்கிறார்கள். இங்கு இவரது வாகன யானை பீடத்தின் முன் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. இடம்: விஷ்ணு கோவில் இடங்கிமங்கலம் லால்குடி திருச்சி மாவட்டம்.

குருநாதர் கருத்துக்கள் #1.83

சிறியவன் சிறியவனாக இருக்க பெரும் அருள் உண்டு. சிறியது பின்பு பெரியதாகும் திறன் உண்டு. நாம் சின்னவன் (நாம் கீழான இடத்தில் இருக்கின்றோம் மற்றவர்கள் மேலான இடத்தில் இருக்கின்றார்கள்) என்ற எண்ணத்தை தவிர்ப்பீர்களாக. இன்று சின்னது என்பது நாளை பெரிதாகும். குறுகிய மனப்பான்மை இங்கு பலருக்கும் உண்டு. பயத்தை மனதிலிருந்து நீக்கி விடுங்கள். பின்பு அனைத்தும் சீராகும். பூஜைகளில் இறைவனிடம் மனம் விட்டு கூறியும் மனம் விட்டு கேட்கவும் வேண்டும் இவ்விதம் செய்திட நல்முடிவுகள் உண்டு.

குருநாதர் கருத்துக்கள் #1.82

கேள்வி: ஆனமிக நிலையை வைத்து இன்றைய இளைஞர்களிடம் குழப்பங்கள் அதிகமாக உள்ளது ஏன்?

குழப்பத்திற்கு அடிப்படையே முதல் காரணமாகும் முதலில் இறைவன் வெளியே இல்லாதவன் என்று உணர வேண்டும். இரண்டாவதாக அவன் நமக்குள் இருக்கின்றான் என்பதை உணர வேண்டும். மூன்றாவதாக அவன் நம்மை விட்டு பிரியாமல் இருக்கின்றான் என்பதை உணர வேண்டும். நான்காவதாக அவன் தேவையற்றவன் என்பதை உணர வேண்டும். அன்புடன் அவனை பார்த்தால் அன்பு அது பக்தியாய் மாறி பக்தியது பெரும் வெள்ளமாய் பெருகி அந்த பரவசத்தில் நாமும் அமர இறைவனை உறுதியாக காண முடியும். அடிப்படையில் இறைவனை வெளியில் பார்ப்பதை விட வேண்டும் என்பது விதியாகும். ஏனெனில் இறைவன் நம்மை விட்டு பிரிந்ததில்லை இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்பதை நாம் உணர்வதில்லை. இதனை அப்அப்பொழுது சிந்தனையில் வைக்க வேண்டும். ரூபம் இல்லாத இறைவன் நம்முடைய இயலாமையால் ரூபத்தை கொடுக்கின்றான். ரூபமாய் இருக்கும் இறைவனை சிறிது தூரத்தில் பார்த்து நாம் வேறு இறைவன் வேறு என தவறாகப் புரிந்து நமக்கும் இறைவனுக்கும் உள்ள தூரத்தை அதிகரித்ததால் இக்காலத்தில் வேதனை காண்கின்றோம் என்பதே உண்மையான நிலை இதை தவிர்க்க வேண்டும் என்றால் எமக்குள் இருக்கும் இறைவா என்கின்ற வாக்கியத்தை எப்பொழுதும் உங்கள் வழிபாட்டில் சேர்த்துக் கொண்டால் இது நாளடைவில் பெருகி உண்மையாக மாறி அந்த உண்மையை உணரச்செய்யும். இன்று முழுமையாக தவம் செய்தோம் இறைவனை காணவில்லை என எண்ண வேண்டாம். ஏனெனில் நீங்கள் தியானம் செய்தது வெளியில் இருக்கும் இறைவனை உள்ளிருக்கும் இறைவனை அல்ல. உள் சென்று ஹிருதய ஸ்தானத்தில் இறைவன் இருப்பதாக எண்ணி அந்த இடத்தை சுத்தமாக வைத்து இறைனுக்கு பாத நமஸ்காரங்கள் செய்வது ஒன்றே போதுமானது. இங்கு இறைவனுக்கு ரூபம் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஜோதி ஸ்வருபனை ஜோதி ஸ்வருபமாக காண்பீர்களாக இவ்விதம் செய்திட குறையின்றி இறையருள் கைகூடும்.

குருநாதர் கருத்துக்கள் #1.81

கேள்வி: மன சக்தியால் எதையும் சாதிக்க இயலுமா? பின்பு ஏன் பல காரியங்கள் தோல்வி அடைகின்றது?

உறுதியாக மன சக்தியால் அனைத்தையும் சாதிக்க இயலும். பின்பு காரியங்கள் நடைபெறவில்லை என்றால் அதற்கு காரணம் மனஉறுதி குறைவாக உள்ளதை ஆகும். மனதில் ஒன்றை வைத்து ஒன்று என்றால் ஒன்றை மட்டும் வைத்து மாற்றாமல் அசைக்காமல் அது நடைபெறும் என எண்ணம் கொண்டால் உறுதியாக நடைபெறும் என அனுபவரீதியாகவும் யாம் கண்டதும் அனைவரும் கண்டதாகும். தவறு எங்கிருக்கிறது என்றால் என்ன வேண்டும் என்பதில் முதலில் உறுதியில்லை. இரண்டாவதாக அப்படம்தனை மனதில் வைத்து மாற்றி மாற்றி கலர் கலராகவும் பல விதங்களாகவும் மாற்றிக் காண ஓர் புதுமையான படம் மனதில் காணும் நிலை உண்டாகும். பின்பு வெற்றி எவ்வாறு உண்டாகும். இதன் அடைப்படை என்னவென்றால் முதலில் என்ன வேண்டும் என்பதை முழுமையாக அறிய வேண்டும். இரண்டு அது எவ்விதம் வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். இதற்கு பின்பே மனதில் வைக்க வேண்டும். உதாரணமாக நான்கு சக்கர வாகனம் ஒன்று வேண்டும் என்றால் அது எந்த வாகனம்? அதன் பெயர் என்ன? அதன் கலர் என்ன? அதை எங்கு வைக்க வேண்டும்? என்பதில் முதலில் தெளிவு வேண்டும். இது தான் விதி மாறாக இன்று ஓர் விதமான வாகனமும் நாளை வேறு வாகனம் கலர் வேறு நிறுத்தும் இடம் வேறு என மாற்றிக் கொண்டிருந்தால் உறுதியாக அக்காரியம் நடைபெறாது. ஆங்கிலத்தில் POWER OF THOUGHT (எண்ணகளின் சக்தி) என்பதை கடைபிடித்தால் வெற்றி உறுதியாக கிடைக்கும்.

குருநாதர் கருத்துக்கள் #1.80

ஒன்று செய் அதை நன்றாக செய் என்பது இக்கலியுகத்தில் குறையாக உள்ளது. பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்யும் முயற்சியில் அனைத்து காரியங்களும் முக்கால்வாசி பலனே தருகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஒரு காரியம் முடிந்தபின் மற்றொரு காரியத்திற்குச் செல்வதே சிறந்ததாகும். முயற்சித்தால் இதுவும் கைகூடும். ஒரு வேளை செய்யும் பணி இன்று முடியாமல் அதற்குள் வேறொரு முக்கியமான பணி வந்துவிட்டால் பயப்பட வேண்டாம். அப்பணியை மறுநாள் முழுமையாகத் தொடருதல் வேண்டும். அப்பணியை முடித்தப் பிறகே புதிதாக வரும் பணிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்தையும் தொடர்கதையாகச் செய்வது சரியாகாது. இதைக் கூறுவதற்குக் காரணமும் உண்டு. பலர் இங்கு இஷ்ட தெய்வத்தை காலத்திற்கு ஏற்றார் போல மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இது பலன் அளிக்காது. இஷ்ட தெய்வம் என்பது ஓர் ஆடையல்ல அடிக்கடி மாற்றிக்கொள்வதற்கு. முழுமையான பலன் வேண்டுமெனில் ஒன்றில் நிற்கக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். அந்த ஒன்றிலிருந்து விலக விலக மன சஞ்சலங்களே மிஞ்சும். ஒன்றில் நின்று வெல்வாய் என்பதே எமது அறிவுரையாகும்.

குருநாதர் கருத்துக்கள் #1.79

நமக்கு பிற உயிர்களிடம் அன்பு இல்லாமல் இருந்தாலும் அன்பாக இருப்பது போல் நடித்தல் வேண்டும். ஏனென்றால் இந்த நடிப்பு செல்ல செல்ல நாளடைவில் நிஜமான அன்பாக மாறிவிடும். ஒருவர்க்கு தானம் செய்யும் எண்ணம் இல்லையென்றால் தானம் செய்தால் புகழ் கிடைக்கும் என்ற எண்ணம் கொண்டு தானம் செய்தல் வேண்டும். இத்தானம் செய்வது பழக்கமாகி விடும் பின்பு அதன் வழியாக அகங்காரம் தோணாது. நல் குணங்கள் ஒன்றும் இல்லா போதிலும் அது இருப்பது போல் பாவனை செய்து காரியங்கள் நடத்தி விட நாட்கள் செல்ல செல்ல அத்தகைய அன்பு பாசம் தானதர்ம சீலனாக மாறி பெருமளவிற்கு முன்னேற்றம் அடைய இயலும். தானம் என்பது வெறும் பணத்தால் அன்னத்தால் மட்டுமல்ல நல்வார்த்தைகளும் நம் அறிவை பங்கிடுவதும் தானமே ஆகும். இயன்றளவிற்கு நம் கையில் வசதிகள் இல்லா போதிலும் நம் அறிவை பகிர்ந்து கொள்வதும் ஓர் பெரும் தானமாகின்றது. இதனையும் மனதில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

குருநாதர் கருத்துக்கள் #1.78

கேள்வி: பலர் தமக்குள் இருக்கும் குறைகள் தெரியாத நிலையில் இருக்கின்றனர். இத்தகைய குறைகளை மூடி மறைப்பதற்காக பெருமளவில் கோபம் கொண்டு சீறி எழுகின்றனர். இது அவர்களுடைய கீழ் நிலையை மறைப்பதற்கான ஓர் முயற்சியாகும். இத்தகைய நபர்கள் எவ்வாறு இதிலிருந்து மீள்வது?

முதலில் தம் குறைகளை உணர வேண்டும். குறைகளை உணர்ந்த பின் அக்குறைகளை நீக்கி குறையின்றி வாழ கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திட கோபங்கள் குறைவதோடு உண்மையான நிலையை உணர்ந்து பெருமளவில் அமைதி கிடைக்கும். ஆன்மீக பாதையில் செல்கின்ற பலருக்கும் குறிப்பாக சக்தி உபாசனையில் (அம்மனை வழிபடுபவர்கள்) ஈடுபடுகின்றவர்க்கும் தன்னை விட சிறந்த பக்தர் இல்லை என்கின்ற ஆணவம் அதிகமாக வரும். இது அகங்காரத்தை வளர்க்கும். தன் குறைகளை மறைத்து கோபப்படுவார்கள். ஆத்திரம் கொண்டு அங்கும் இங்கும் ஓடுவார்கள். சம்பந்தப்படாத மற்றவர்களையும் வார்த்தையால் தாக்கி பேசுவார்கள் இதனை தவிர்த்திடவே முதலில் நாம் நமக்குள் இருக்கும் குறைகளை அறிந்து கொள்ள வேண்டும். இவ்விதம் செய்தால் மட்டுமே முன்னேற்றங்கள் கிடைக்கும். குறைகளை கண்டால் என்ன செய்வது? அதை வளர விடக்கூடாது. அதை நீக்கும் வழியை தேட வேண்டும். இது ஒரு நாளில் முடியாத செயல். பல காலங்கள் செல்ல வேண்டும் என்ற விதி இருந்த போதிலும் படிப்படியாக குறைகளை நீக்குதல் வேண்டும். இல்லை என்றால் ஓர் விஷக் கொடியாக இது வளர்ந்து பின்பு இறைவனை நெருங்கும் தகுதியற்றவனாக மாற்றி விடும். ஏனெனில் அகங்காரத்திற்கும் கோபத்திற்கும் அப்பாற்பட்டவனாக நிற்கின்றான் அத்தெய்வம். பாசம் அன்பு இரண்டும் இரண்டு கால்களாக வைத்து நடமாடும் அந்த இறைவனை நாம் வணங்க வேண்டுமென்றால் பாசம் அன்பு என்ற இரண்டு தன்மைகளை நாம் வளர்த்தல் வேண்டும். அத்தன்மைகளை வளக்க வேண்டுமென்றால் அகங்காரமும் கோபமும் ஆகாது என்பதை நன்கு உணர வேண்டும். இது எவரையும் சுட்டிக்காட்டாமல் பொதுவாக ஆன்மீக பாதையில் செல்வோர்க்கு நேரிடக்கூடிய ஓர் கடினம் ஆகும். இது ஆன்மீக பருவத்தில் ஏற்படக்கூடிய ஓர் நிலை.