மகாபாரதம் 8. கர்ண பருவம் பகுதி -11

கிருஷ்ணன் கர்ணனிடம் யாசகம் கேட்கும் அந்தணனாக சென்று யாசிக்கிறார். கர்ணனோ என்னிடம் இப்போது இருப்பது என் உயிர் மட்டுமே. இல்லை என்று என்னை கூற வைக்காமல் என் உயிரை யாசகமாக பெற்று என்னை பெருமை அடைய வையுங்கள் வேண்டாம் என்று சொல்லி என்னை சிறுமை படுத்திவிடாதீர்கள் என்று கூறினான். அதற்கு கிருஷ்ணன் கர்ணா நீ செய்த தர்மத்தின் பலனை எல்லாம் எனக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடு அதுபோதும் என்கிறார். கர்ணனும் மறு மொழியின்றி இறப்பிலும் இன்முகத்தோடு தான் செய்த தான தர்மத்தின் பலனை எல்லாம் தன் உதிரம் மூலம் கிருஷ்ணருக்கு தாரை வார்த்துக் கொடுத்தான். பின் கிருஷ்ணன் தன் விஸ்வரூபத்தை காட்டி அழியா புகழோடு நீ முக்தியையும் பெறுவாய் என்று வாழ்த்தினார். கர்ணன் தன் இரு கைகளை கூப்பி பரந்தாமனை வணங்க அப்போது அர்ஜூனன் எய்த அம்பு கர்ணனின் கழுத்தை துண்டித்தது. கர்ணனின் உடலில் இழுந்து ஒளி ஒன்று சொர்கத்தை நோக்கி சென்றது. கர்ணன் வீர மரணம் அடைகிறான். நட்புக்கு இலக்கணமாய் வீரத்திற்கு உதாரணமாய் கொடுத்த வாக்கிற்கு பீஷ்மமாய் வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளலாய் வாழ்ந்த கர்ணன் சரித்திர நாயகனாய் மண்ணில் சாய்ந்தான். சூரியன் மறைய பதினேழாம் நாள் யுத்தம் முடிவிற்கு வந்தது.

கர்ணன் மாண்ட நிமிடமே போர் தொண்ணூறு சதவிகிதம் முடிந்தது. பிறகு நடந்த போர் வெறும் சடங்குக்காகவே நடக்கிறது என்பதை துரியோதனன் உணர்ந்தான். தனது பிரியமான 99 தம்பியர்களை இழந்தான். பீஷ்மர் குரு துரோணரை இழந்தான். உயிரினும் மேலான நண்பன் கர்ணனை இழந்தான். மனம் வருந்தினான். செய்வதறியாமல் தவித்தான். இவ்வுலகவாழ்வில் இனி பயன் ஒன்றுமில்லை என்ற உணர்ச்சி அவனுக்கு உண்டாயிற்று. ஆதிக்கத்திலும் உலக ஆட்சியிலும் அவன் படைத்திருந்த பேராசை நிரந்தரமாக அவனைவிட்டு அகன்று போயிற்று. இவ்வுலகில் இனி வாழ்ந்து இருக்க அவன் விரும்பவில்லை. அதிவிரைவில் மறுமையை அடைந்து தன் தோழர்களோடு சேர்ந்திருக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். கௌரவர்கள் கூட்டத்தில் ஒரே துயரம். பாண்டவர்களுடைய கூட்டத்தில் ஒரே மகிழ்ச்சி பாண்டவர்கள் அடைந்த வெற்றிக்கு காரணம் கிருஷ்ணருடைய கிருபை என்று யுதிஷ்டிரர் அனைவரிடமும் கூறினார்.

கர்ண பருவம் முடிந்தது. அடுத்து சல்லிய பருவம்.

திருவடி தீட்சை

குரு அமர்ந்திருக்க அவர் முன் அமர்ந்திருந்தான் சீடன் விஸ்வநாத பிரம்மச்சாரி. சீடனது கண்கள் கலங்கி இருந்தன அவன் தன் கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேசினான். குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களுக்கு பணிவிடை செய்வதிலும் உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது. இப்படி இருக்க என்னை ஏன் வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்கள் என்றான்.

அவனை மெல்ல தனது கரத்தால் தூக்கிய குரு அவனை தீர்க்கமாக பார்த்தார். விஸ்வநாதா சாஸ்திர ஞானத்தை மட்டும் தான் என்னால் உனக்கு வழங்க முடிந்தது. பிரம்ம ஞானத்தை வழங்க உனக்கு வேறு குரு ஒருவர் காத்திருக்கிர்றார். அந்த குரு காசிக்கு அருகில் இருக்கும் வனத்தில் வசிக்கும் அவரை கண்டு ஞானம் அடைவாயாக செல் சீடனே என்றார் குரு. பிரிய மனமில்லாமல் தனது குருநாதரிடமிருந்து விடைபெற்றான் விஸ்வநாத பிரம்மச்சாரி. காசியை அடைந்தான். அவன் அங்கு வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்தான். நகரின் வெளியே இருக்கும் வனத்தை நோக்கி நடந்தான். வழியில் தென்பட்ட தடாகம் ஒன்று கண்களுக்குத் தெரிய அதில் நீர் அருந்த குனிந்தான். அந்த தடாகத்தின் மேல்பரப்பில் அமைந்திருந்த கோயில் கோபுரம் நிழலாக நீரில் பிரதியாகத் தெரிந்தது. நிமிர்ந்து மேல் நோக்கி பார்த்தான். ஆலய கோபுரம் ஒன்று தெரிந்தது. நடு வனத்துக்குள் கோயிலா கோபுரத்தை வணங்கிவிட்டு ஆச்சரியத்துடன் அந்தக் கோயிலுக்குள் நுழைய அடியெடுத்து வைத்தான்.

கோயில் வாசலை அடையும் முன் உள்ளே இருந்து ஓர் குரல் வந்தது. வா விஸ்வநாதா உனக்காகத்தான் காத்திருக்கிறேன். உனது குரு என்னை பார்க்கத்தான் அனுப்பினார் என்று. தனது ஞான குருவை காணும் ஆவலில் கோயிலின் உள்ளே சென்றான் விஸ்வநாதன். அங்கே அவன் கண்ட காட்சி அவனை மாபெரும் அதிர்ச்சி அடைய செய்தது. பரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் தனது கால்களை வைத்து ஆட்டியவாறு தலையில் கைகளை வைத்து கொண்டும் படுத்திருந்தார். இதைக் கண்ணுற்ற விசுவநாதனால் கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை. எனது குரு உங்களை பற்றி உயர்வாக கூறி அனுப்பினார். நீங்கள் அவர் சொன்னதற்கு நேர்மாறாக அல்லவா இருக்க்கிறீர்கள். என கூறியவன் ஐயா சற்று சிவன் மேல் இருக்கும் காலை எடுத்து கீழே வையுங்கள என்றான். அந்த பரதேசி சற்றும் அவனது கருத்துக்களை காதில் போட்டுக் கொள்ளாமல் அவனை பார்த்து மேலும் கூறினார். நீ வேண்டுமானால் எனது கால்களை எடுத்து வேறு இடத்துப் பக்கம் திருப்பி வை. என்னால் கால்களை எடுக்க முடியாது என்றார். கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற விஸ்வநாதன் அவரை நோக்கி வேகமாக வந்து அவரின் கால்களை பற்றி சிவலிங்கத்தின் மேலிருந்து எடுத்து வேறு இடத்ததிற்கு மாற்றி திருப்பி வைத்தான். காலை தூக்கி வைத்த இடத்தில் சிவ லிங்கம் தெரிய வெடுக்கென்று காலை மீண்டும் தூக்கி வேறொரு திசைக்கு மாற்றினான். அங்கும் அங்கும் சிவலிங்கம் காட்சி தெரிய காலை கீழே வைக்காது தூக்கிய வண்ணம் நின்றிருந்தான். கால்களை எங்கு வைத்தாலும் அங்கே ஓர் சிவலிங்கம் முளைத்தெழுகிறதே என செய்வதறியாது விழித்தான். பல இடங்களில் காலை மாற்றி மாற்றி தூக்கி வைத்தாலும் அனைத்து இடத்திலும் சிவலிங்கம் தோன்றுகிறதே என யோசித்தவன் தனது தலையில் அவரின் கால்களை வைத்து அழுத்தினான்.

அவனே சிவமானான்
அவனே சிவமானான்
அவனே சிவமானான்

திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.

‌திருமந்திரம்.

மகாபாரதம் 8. கர்ண பருவம் பகுதி -10

கர்ணன் சல்லியனிடம் தேரை பூமியில் சிக்குண்ட இடத்தில் இருந்து மீட்குமாறு கூறினான். அதற்கு சல்லியன் எனது வேலை தேர் ஓட்டுவது மட்டும் தான். தேரை மீட்பது அல்ல. என்னை நீ அவமதித்து பேசினாலோ முறை தவறி பேசினாலோ நான் உன்னை விட்டு விலகி விடுவேன் என்று துரியோதனனிடம் போட்ட நிபந்தையின் பெயரில் தான் உனக்கு சாரதி ஆனேன். இப்போது நான் போகிறேன் என்று கூறிவிட்டு ரதத்தை விட்டு சென்றுவிட்டார். கர்ணன் தன் தேரில் இருந்து குதித்து தன் தேர் சக்கரங்களை வெளியே எடுக்க முயன்றான். இந்த சூழ்நிலையில் அர்ஜுனன் அவனை கொல்ல விரும்பவில்லை.

கிருஷ்ணர் அர்ஜுனனை நோக்கி ஏன் தயங்குகிறாய் அர்ஜுனா அவன் மீது உள்ள அணைத்து சாபங்களும் ஒன்றாக வேலை செய்கிறது. இது தான் சரியான தருணம். செலுத்து உன் அம்புகளை. கொன்றுவிடு அவனை என்றார். அர்ஜுனனும் தன் இலக்கை குறித்தான். பரசுராமர் அளித்த சாபம் இப்போது வேலை செய்தது. ஆபத்து வேளையில் கர்ணன் கற்ற வித்தைகள் அனைத்தும் அவனுக்கு மறந்து போனது. அர்ஜுனன் தன் மேல் போர் தொடுப்பதை கண்ட கர்ணன் நிராயுதபாணியாய் நிற்கின்ற என்னை தர்மத்தின் பெயரில் கேட்கிறேன் தேரை பூமியில் இருந்து மீட்டு எடுக்க சற்று அவகாசம் கொடு என கேட்டான்.

அப்போது கிருஷ்ணர் கர்ணா நீயா தர்மத்தைப் பற்றி பேசுகிறாய். துரியோதனன் சகுனியுடன் சேர்ந்து தீமைக்குத் துணைப்போனாய். அப்போது உன் தர்மம் என்ன ஆயிற்று. மன்னர் நிறைந்த அவையில் திரோபதியின் உடையைக் களைய நீயும் உடந்தைதானே அப்போது எங்கே போயிற்று உன் தர்மம். பாண்டவர்கள் பதின்மூன்று காலம் வன வாசம் முடித்து வந்ததும் தர்மப்படி நடந்துக் கொண்டாயா. அபிமன்யூவை தர்மத்திற்கு விரோதமாக பின்னால் இருந்து தாக்கினாயே அப்போது எங்கே போயிற்று உன் தர்மம் என கேட்டார். கர்ணன் பதில் பேச முடியாமல் நாணித் தலை குனிந்தான். தான் புரிந்த செயல்கள் சரியானவர்கள் என்று சமாதானம் சொல்ல அவனுக்கு இயலவில்லை

அர்ஜூனன் தன் சக்தி அஸ்திரத்தை எடுத்து நான் தர்மயுத்தம் செய்வது உண்மையென்றால் இது கர்ணனை அழிக்கட்டும் என கர்ணன் மீது செலுத்தினான். அஸ்திரங்களை ஏவும் மந்திரங்கள் மறந்து போக உதவி அற்ற நிலையில் புறமுதுகு காட்டாமல் அர்ஜுனனின் அஸ்திரங்களை மார்பிலே கர்ணன் ஏந்தினான். அம்பு மீது அம்பு விட்டான் அர்ஜுனன். ஆனாலும் கர்ணனின் உயிரை அவற்றால் தீண்டக் கூட முடியவில்லை. ஒரு கட்டத்தில் அர்ஜுனனின் மின்னல் வேக அம்புகள் அனைத்தும் மலர் மாலைகளாகி கர்ணனுக்கு விழத் துவங்கின. குழம்பினான் அர்ஜுனன்.

மகாபாரதம் 8. கர்ண பருவம் பகுதி -9

அர்ஜூனனுடன் வீராவேசமாக போர் புரிந்த கர்ணன் இத்தருணத்தில் இந்திரன் தனக்கு கொடுத்திருந்த சக்தி ஆயுதம் தன் கைவசம் இல்லையே என்று வருந்தினான். வேறு வழியில்லாமல் சக்தி ஆயுதம் துரியோதனனின் வேண்டுகோளின் படி கடோத்கஜன் மீது ஏவப்பட்டது. சக்தி ஆயுதத்திற்கு அடுத்தபடியாக நாகாஸ்திரம் மிக பயங்கரமான ஆயுதம் கர்ணன் அதை எடுத்தான். அர்ஜுனனுடைய கழுத்தை இலக்காக வைத்தான். கர்ணனின் குறியைக் கண்ட சல்லியன் கர்ணனிடம் அவன் கழுத்துக்கு குறி வைக்காதே. மார்புக்கு குறி வை என்றான். கர்ணன் அர்ஜுனன் மாபெரும் வீரன் அவன் உயிர் சில நிமிடங்கள் ஆனாலும் துடித்து இறப்பதை நான் விரும்பவில்லை. ஒரே நொடியில் வேதனை இன்றி அவன் இறக்கட்டும். இதோ அவன் கழுத்துக்கு குறி வைத்து எய்கிறேன் அம்பை என்றான்.

சல்லியன் மீண்டும் வலியுறுத்தினான். சொல்வதை கேள் கர்ணா அர்ஜுனனிடம் நாகாஸ்திரத்துக்கு தகுந்த பதில் அஸ்திரம் கிடையாது. எனவே கிருஷ்ணன் நிச்சயம் ஏதாவது சூழ்ச்சி செய்வான். எனவே நீ அவன் மார்புக்கு குறி வை என்றான். கர்ணன் கேட்கவில்லை நாகாஸ்திரம் நெருப்பைக் கக்கிக் கொண்டு அர்ஜுனனை நோக்கிப் பாய அர்ஜுனன் தன் முடிவு நெருங்கி விட்டது என கையைக் கட்டிக் கொண்டு காத்திருக்க அண்டசராசரங்கள் நடுநடுங்க போரை ஆவலாய் காணக் காத்திருந்த தேவர்கள் மனம் பதைபதைக்க நாகஸ்திரம் அர்ஜுனனை நெருங்கியது.

அந்த நேரத்தில் கிருஷ்ணன் தன் காலால் தேரை அழுத்த குதிரை மண்டியிட்டு அமர்ந்ததும் தேர் ஒன்னரை அடி மண்ணுக்குள் புதைந்தது. அர்ஜுனன் தலையைக் கொய்ய வந்த நாகாஸ்திரம் இந்திரனால் அர்ஜுனனுக்கு வழங்கப்பட்ட கிரீடத்தை சுக்குநூறாக உடைத்தது. அஸ்திரம் திரும்ப கர்ணனை வந்தடைந்தது. இந்த அதிசயத்தை கண்ட பாண்டவர்கள் கர்ஜித்து ஆரவாரம் செய்தார்கள். கோபம் கொண்ட சல்லியன் கர்ணனை மீண்டும் நாகாஸ்திரத்தை செலுத்துமாறு வற்புறுத்தினான். தான் குந்திக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் கர்ணன் அதை உபயோகிக்க மறுத்தான். சல்லியன் மீண்டும் மீண்டும் வற்புறுத்த கோபம் அடைந்த கர்ணன் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம். உங்கள் வேலை ரதம் ஓட்டுவது மட்டும் தான். அதை மட்டும் செய்யுங்கள் என்றான். இருவருக்கும் அபிப்பராய பேதம் உருவானது.

மீண்டும் இரு வீரர்களும் உயிரைப் பறிக்கும் அஸ்திரங்களை இருவரும் ஒருவர் மீது ஒருவர் எய்து கொண்டு போரிடுகிறார்கள். அர்ஜுனன் எய்த அம்புகள் கர்ணனைத் தாக்க கர்ணன் சோர்ந்து போகிறான். அப்போது அவன் முடிவு அவன் கண்களில் தெரிகிறது. மரணம் தன்னை நெருங்கி வந்ததை கர்ணன் உள்மனதில் அறிகிறான். காளதேவன் அசிரீரியாக கர்ணா பூமாதேவி உன் ரதத்தை தன்னுளே பிடித்து வைக்கப் போகிறாள் கவனம் என எச்சரிக்கிறார். அதை உணர்ந்து செயல்படும் முன்னரே தேர் சக்கரம் மண்ணில் புதைகிறது.

No photo description available.
This image has an empty alt attribute; its file name is image-31.png

இறைவனால் எழுதப்பெற்ற திருவாசகம்

மாணிக்கவாசகர் பாட இறைவனால் எழுதப்பெற்ற திருவாசகம் ஓலைச்சுவடி சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் கனக சபையில் இருந்தது இந்த சுவடி நூலை யாரிடம் ஒப்படைப்பது என்ற பிரச்சனை வந்தது. ஒவ்வொருவரும் தாங்களே இந்நூலை வைத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தனர். அப்பொழுது ஒரு அசரீரி கேட்டது. இந்நூலை நம் சிவகங்கையில் விடுங்கள். அது கங்கையை சுற்றியிருக்கும் யாரிடம் போய் சேருகின்றதோ அவரிடம் இருக்கட்டும் என்றது. அவ்வாறே அந்நூல் சிவகங்கையில் விடப்பட்டது. ஆத்ம சாதகரும் சிவநேசச்செல்வருமாகிய ஒரு பெரியவரிடம் அந்நூல் வந்து நின்றது. அவர் அந்நூலை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு சிவ பஞ்சாட்சரத்தை ஓதிக் கொண்டே வீட்டிற்கு சென்றார். அன்று முதல் அந்த இடம் ஸ்ரீ பாதபூஜை அம்பலத்தாடையார் மடம் என்று பெயர் பெற்றது. பெரியவர்க்கு பின் அவருடைய மடத்தின் வாரிசுகள் ஒருவர் பின் ஒருவராக திருவாசகத்திற்கு சிவபூஜை செய்து பாதுகாத்தனர்.

இச்சமயம் கர்னாடகா நவாப்கள் தமிழகம் மீது யுத்தம் தொடுத்தனர். கோவில்களும் மடங்களும் இடித்து நாசமாக்கப்பட்டன. யுத்தம் சிதம்பரம் வரை பரவியது. அப்பொழுது அம்பலத்தாடையார் மடத்தை பத்தாவது தலைமுறையாக ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள் தலைமை வகித்து வந்தார். யுத்தம் பரவி வருவதும் கோவில்கள் இடிக்கப்பட்டு நாசமாக்கப்படும் செய்தியை கேள்விப்பட்டு அதிர்ந்தார். கண் கலங்கினார். இறைவனால் எழுதப்பட்ட தெய்வத் திருநூலுக்கு பாதிப்பு வந்து விடுமோ என்று பயந்தார். பரம்பொருளிடம் சென்று அழுதார். உண்பதை விட்டு சிவபெருமானை நோக்கி சிவபஞ்சாட்சர தியானத்தினுள் ஆழ்ந்தார். நாட்கள் கடந்தன. யுத்தம் கடுமையாகியது. அழிவுச் செய்திகள் வந்த வண்ணமிருந்தன.

சுவாமிகள் சிவதியானத்தை தீவிரமாக்கினார். உலகியல் நினைப்பொழித்தார். திருவாசகத்தை காக்க வேண்டுமே என்ற ஒரே சிந்தனையில் இருந்தார். ஓம் சிவாய நம என்ற நாமத்தில் ஆழ்ந்திருந்தார். இறைவன் நாகலிங்க சுவாமிகளின் நெற்றிப்பொட்டில் பூரணமாய் பரிணமிக்கும் இடத்தை சுட்டி காட்டினார். இறைவன் சுட்டிக் காட்டிய இடம் புதுவை என்பதனைக் கண்டு மகிழ்ந்தார். ஆத்மசாதனைக்கு மிகவும் உகந்த இடமா புதுவை திருவாசகத்தை பாதுகக்க சரியான இடம் என்ற இறைவன் உத்தரவை கண்டு வியந்தார். இறைவன் கருணையை எண்ணி மகிழ்ந்தார். திருவாசகம் கொண்ட வெள்ளி பெட்டகத்தை பட்டுத் துணியால் மூடி சிரத்திலே சுமந்து தொண்டர்கள் இருவரை அழைத்துக் கொண்டு புறப்பட்டார் புதுவைக்கு. புயலினின்றும் தப்பித்து கடலூர் வழியாக புதுவை வந்து சேர்ந்தார். புதுவையில் ஒரிடத்தில் சிறு குடில் அமைத்து திருவாசகப்
பெட்டகத்தை வைத்து சிவபூஜை செய்து வந்தார்.

ஆழ்ந்த சிவத்தியானத்தில் ஈடுபட்ட நாகலிங்க சுவாமிகளுக்கு சக்திகள் பெருகின. அவை சித்துக்களாக மாறின. அன்பர்கள் பலரும் சுவாமிகளை தேடி வந்து குறைகளைக் கூறி போக்கிக் கொண்டனர். சுவாமிகளின் பெருமைகளை பலரும் உணர்ந்தனர். இப்படியே பல ஆண்டுகள் கடந்தன. சுவாமிகள் இறைவனோடு கலக்கும் நாளை எதிர்ப்பார்த்திருந்தார். ஒருசமயம் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது அருகிலிருந்த பட்டத்து தம்பிரான் எதிர்கால நிகழ்ச்சியை சூசகமாக தெரிவிக்க சீடன் பக்குவ நிலைக்கு வந்திருப்பதை உணர்ந்து, அக்கணமே தமது 10 வது பட்டத்தை 11வது பட்டமாக சீடனுக்கு அளித்து பீடத்தில் அமர்த்தினார். அன்றிரவே தாம் இறைவனோடு கலக்கும் செய்தியை இறைவனின் திருக்குறிப்பின் மூலம் உணர்ந்தார். இரண்டாம் நாள் தெய்வீக நிலையிலேயே சென்றது. சுவாமிகள் மௌனத்தையே கடைப்பிடித்தார். தம் சீடர் செய்ய வேண்டிய முறைகளை மட்டும் விளக்கினார். மூன்றாம் நாள் சிவத்தோடு ஐக்கியமாகி ஜீவன் முக்தி பெற்றார்.

உலகம் உய்ய இறைவன் அருளிய திருவாசகத்தைப் போற்றி பாதுகாத்து புதுவைக்கு கொண்டு வந்த பெருமை ஸ்ரீ நாகலிங்க சுவாமிகளையே சாரும். சுவாமிகள் தங்கியிருந்த இடத்தினுள்ளே அவரின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. சமாதி மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இத்தெய்வீக இடத்திற்கு அம்பலத்தாடையார் மடம் என்று பெயர். இம்மடம் அமைந்துள்ளதால் அத்தெருவிற்கு அம்பலத்தாடையார் மடத்து வீதி என்று பிரஞ்சு அரசு பெயர் சூட்டியுள்ளது. திருவாசகம் அமைந்த வெள்ளிப் பெட்டகம் அன்றாடம் பூஜிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் சிவராத்திரியன்று இரவு பெட்டகம் திறக்கப்பட்டு பூஜை செய்யப்படுகின்றது.

பிஜிலி மஹாதேவ் சிவன்கோயில்

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தற்போது இருக்கும் இமாச்சல் பிரதேசத்தில் தவத்தின் மூலம் அழிக்கமுடியாத வரத்தை வாங்கிய அசுரன் ஒருவன் பாம்பு வடிவம் எடுத்து அங்குள்ளவர்களை கொடுமை செய்து வந்தான். அனைவரும் சிவனை வேண்ட சிவன் அசுரனை மலையாக மாற்றி இந்திரனை அழைத்து மலையை அழிக்குமாறு பணித்தார். இந்திரன் தன்னுடைய வஜ்ராயுதம் மூலம் இடி மின்னலை வரவழைத்து மலையை அழித்தார். அரக்கன் 12 வருடங்களுக்கு ஒருமுறை உயிர்த்தெழுந்து மலைவடிவில் அனைவரையும் துன்புறுத்தினான். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்திரனும் இடி மின்னல் மூலமாக அவனை தாக்க தான் பெற்ற வரத்தால் மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டே இருந்தான். இந்திரன் அசுரனை தாக்க அனுப்பிய இடி மின்னல் அசுரனுடன் மக்களையும் தாக்கியது. இதனால் மக்கள் சிவனை வேண்டினர். மலையாக இருக்கும் அசுரன் 12 வருடங்களுக்கு ஒரு முறை உயிர் பெறும் போது இந்திரன் தாக்கும் இடி மின்னலை சிவனே ஏற்றுக்கொண்டு அசுரனை அழித்து இன்றும் மக்களை காப்பாற்றுகிறார்.

தற்போது இமாச்சல் பிரதேசத்தில் குளுமணாலியில் இருக்கும் பிஜிலி மஹாதேவ் கோயில் சிவலிங்கத்தை மட்டும் 12 ஆண்டுக்கு ஒரு முறை இடி மின்னல் தாக்கும். கோவிலுக்கோ கோவிலின் மேற்கூரைக்கோ அதன் சுற்றுப்புறத்திற்கோ ஒன்றும் ஆகாது. இடி மின்னல் தாக்கிய உடன் சிவலிங்கம் தூள் தூளாக நொறுங்கிவிடும். மறுநாள் கோவில் பண்டிட் உடைந்த துகள்களை சிவலிங்கம் இருக்கும் இடத்தில் ஒன்று சேர்ந்து வைத்து அபிஷேகம் செய்து பூஜை செய்து கோவிலை முடிவிட்டு செல்வார். அடுத்த நாள் உடைந்த துகள்கள் ஒன்று சேர்ந்து சிவலிங்கமாக காட்சி கொடுக்கும். பல ஆண்டுகளாக 12 வருடங்களுக்கு ஒரு முறை இச்சம்பவம் இங்கு நடந்து கொண்டிருக்கின்றது.

மகாபாரதம் 8. கர்ண பருவம் பகுதி -8

.
அர்ஜுனனின் பக்கம் யுதிஷ்டிரைத் தவிர்த்து சகோதரர்கள் மூவரும், சிகண்டி, சாத்யகி என அனைவரும் இருக்க அவர்கள் பின்னும் ஆயிரக்கணக்கில் வீரர்கள் அணிவகுத்து நின்றனர். கர்ணனின் பக்கம் துரியோதனன், கிருதவர்மன், கிருபர், சகுனி, அஷ்வத்தாமன் அனைவரும் இருந்தனர். அவர்கள் பின்னனியில் ஆயிரக்கணக்கில் வீரர்கள் அணிவகுத்து நின்றனர். கர்ணனும் அர்ஜூனனும் போரில் இறங்கினர். இருவருக்கும் இடையே கடுமையான யுத்தம் துவங்கியது. இரு வீரர்களுமே தங்கள் மனதில் வெற்றி அல்லது வீரமரணம் எனும் எண்ணத்தை விதைத்திருந்தனர். துவக்கம் அர்ஜுனனிடம் இருந்து. ஆக்னேய அஸ்திரத்தை கொண்டு கர்ணனுக்கு துணை இருந்த அனைத்து வீரர்களையும் அக்னி கொண்டு துரத்தினான். அதற்கு பதிலாய் கர்ணன் வாருணாஸ்திரம் எய்தான். அது கரிய மேகங்களுடன் கூடிய மழையை வருவித்து அந்த இடத்தையே வெள்ளக்காடாக ஆக்கியது.

அர்ஜுனன் வாயுவாஸ்திரம் கொண்டு அந்த மழை மேகங்கள் அனைத்தைம் தூர துரத்தினான். பின்னர் இந்திரனால் தனக்கு தரப்பட்ட சக்தி அஸ்திரத்தை கர்ணன் மேல் பிரயோகித்தான். அஸ்திரத்தின் வலிமையால் ஆயிர கணக்கான அம்புகள் காண்டீபத்திலிருந்து பாய்ந்து கர்ணனின் உடலை பதம் பார்த்தன. அதற்கு பதிலாக பார்கவா அஸ்திரத்தை கர்ணன் பிரயோகித்தான். அது பாண்டவ சேனையின் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்றது. அதில் கோபம் கொண்ட அர்ஜுனன் கிருஷ்ணராலும் பீமனாலும் ஊக்கம் பெற்று பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான். அது கர்ணனின் தரப்பின் ஆயிரம் வீரர்களைக் கொன்றது. கர்ணன் அதற்கு பதிலாக ஐந்து சர்ப்ப அம்புகளை எடுத்து அதை கிருஷ்ணரின் மீது ஏவினான். அது கிருஷ்ணரின் உடலில் ஊடுருவி பூமிக்குள் பாய்ந்து மீண்டும் கர்ணனிடமே செல்லத்துவங்க அர்ஜுனன் அவற்றை தன் அம்புகளின் மூலம் துண்டு துண்டாக்கினான். அந்த அம்பினால் கிருஷ்ணருக்கு பாதிப்பு எதுவும் இல்லாமல் எப்போதும் போல சிரித்துக் கொண்டே இருந்தார். கிருஷ்ணரை கர்ணன் தாக்கியதில் கோபம் கொண்ட அர்ஜுனன் கர்ணன் சேனையில் கர்ணனுக்கு துணை இருந்த ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவித்தான். அர்ஜுனனின் தாக்குதலில் அஞ்சிய கர்ணனின் சேனை வீரர்கள் அனைவரும் அவனை விட்டு விலகிச் சென்றனர். தனி ஒருவனாய் அர்ஜுனனையும் அவனைக் காக்க நின்ற வீரர்களையும் தாக்கினான் கர்ணன்.

அர்ஜுனனின் தாக்குதலில் கர்ணனின் ரதம் சில அடிகள் வரை பின்னுக்குத் தள்ளப்பட்டது. சுதாரித்து கொண்ட கர்ணன் அர்ஜுனனின் ரதத்தை தாக்கினான். கர்ணனின் தாக்குதலில் ரதம் சில அங்குலங்கள் மட்டுமே பின்னுக்குத் தள்ளப்பட்டது. கிருஷ்ணர் உடனே எழுந்து நின்று சபாஷ் கர்ணா. உன் வலிமையையும் நான் மெச்சுகிறேன் என்று பாராட்டினார். கோபம் கொண்ட அர்ஜுனன் கிருஷ்ணரை பார்த்து என் தாக்குதலில் கர்ணனின் ரதம் சில அடிகள் தூரமாக நகர்ந்ததே அதற்கு நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே. நமது ரதம் சில அங்குலம் நகர்ந்தற்க்கு அவனை பாராட்டுகிறீர்களே என்றான். அர்ஜுனா அவன் ரதத்தில் மனிதர்களான சல்லியனும் கர்ணனும் மட்டும் தான் இருக்கிறார்கள். உன் ரதத்தில் நீயும் மூவுலகையும் தன்னுள்ளே அடக்கிய நானும் இருக்கிறேன். கூடவே உன் தேரின் கொடியில் மகா பலசாலியான அனுமன் இருக்கிறார். நாங்கள் இருவரும் இருக்கும் ரதத்தை எந்த மனிதனாலும் அசைக்கக் கூட முடியாது. ஆனால் கர்ணனின் தாக்குதலில் ரதம் சில அங்குலங்கள் நகர்ந்திருகிறதே. நானும் அனுமாரும் இல்லை என்றால் நினைத்துப்பார் உன் நிலைமையை. உன் தேர் இந்த பூலோகத்தில் இருந்தே தூக்கி எரியப்பட்டிருக்கும் என்றார்.

மகாபாரதம் 8. கர்ண பருவம் பகுதி -7

அர்ஜூனனும் கர்ணனும் ஒருவரை ஒருவர் யுத்தம் செய்வதைக் காண அனைத்து தேவர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும் வந்தனர். புகழ் பெற்ற இரு வீரர்களும் தங்கள் திறனை முழு வீச்சில் வெளிப்படுத்தப் போகும் வித்தைகளைக் காண விழி இமைக்காது காத்திருந்தனர். சூரியன் தன் மகனுக்கு ஆசி கூறுவது போலே பிரகாசமான தன் கதிர்களை ஒளிர்த்துக் கொண்டு இருந்தான். இந்திரனும் தன் மகனின் வெற்றிக்காக ஆசிகளை வழங்கினான். கிருஷ்ணர் அர்ஜுனனின் ரதத்தை செலுத்த சல்லியன் கர்ணனின் ரதத்தை நடத்த இருவரும் சந்திக்கும் வேளை நெருங்கியது. அர்ஜுனன் கர்ணன் இவ்விருவரும் வில்வித்தையில் கீர்த்தி மிக வாய்க்கப்பட்டவர்கள். ஒருவரை ஒருவர் கொல்ல அவ்விருவரும் தீர்மானித்து இருந்தார்கள். மகாபாரத போராட்டம் இப்பொழுது இவ்விரு வீரர்கள் மூலம் உச்ச நிலையை எட்டியது.

யுத்தம் துவங்கும் முன்பு கர்ணன் சல்லியனோடு சுருக்கமாக உரையாடினான் நான் இந்த யுத்தத்தில் வெற்றி அடைவேன் என்னும் உறுதிப்பாடு எனக்கு உண்டு. ஆயினும் நான் கொல்லப்பட்டால் எனக்கு நீ என்ன செய்வாய் என்று கேட்டேன். அதற்கு சல்லியன் நீ ஒருபோதும் தோல்வி அடைய மாட்டாய். ஒருவேளை நீ தோல்வி அடைந்தால் நான் ஆயுதம் எடுத்து கிருஷ்ணரையும் அர்ஜுனனையும் கொன்று உன்னுடைய மரணத்திற்கு ஈடு செய்வேன் என்று சல்லியன் கூறினான். சல்லியன் அவ்வாறு கூறியது கர்ணனுக்கு பெரும் மகிழ்வை ஊட்டியது. இதற்கு நிகராக அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் சுருக்கமான உரையாடல் நிகழ்ந்தது. ஒருவேளை நான் கொல்லப்பட்டால் கிருஷ்ணா நீ என்ன செய்வாய் என்று அர்ஜுனன் கேட்டான். அதற்கு கிருஷ்ணன் இம்மண்ணுலகத்தை எவ்வாறு கர்ணனால் அழிக்க முடியாதோ அதே போல நீயும் கொல்லப்பட மாட்டாய். உனக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் கர்ணனையும் அவனுக்கு சாரதியாக இருக்கின்ற சல்லியனையும் நான் கொல்வேன் என்று கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உறுதி கூறினான்.

துச்சாதனன் பீமனால் கொல்லப்பட்டதை அறிந்த துரியோதனன் கிட்டத்தட்ட மூர்ச்சை அடைந்து போனான். அந்த அதிர்ச்சியிலிருந்து அவன் மீள முடியாத நிலையில் இருந்தான். இந்நிலையில் அஸ்வத்தாமன் துரியோதன் இருக்குமிடம் வந்தான். கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் ஒரு பயங்கரமான யுத்தம் நிகழப்போகிறது. இந்த யுத்தத்தில் கர்ணன் கொல்லப்பட்டால் உன்னுடைய துயரம் மேலும் அதிகமாகும். எனவே யுத்தத்தை நிறுத்திவிடு நான் உன்னிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். உன் மனம் மாறிவிட்டால் பாண்டவர்கள் இப்போதும் மகிழ்வோடு உன்னிடம் சமாதானம் செய்து கொள்வார்கள். கர்ணனும் அர்ஜுனனும் நெருங்கிய நண்பர்களாக வாழ்வார்கள் என்று கேட்டுக்கொண்டான். துரியோதனன் சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கியிருந்தான். பிறகு அஸ்வத்தாமனிடம் நீ கூறுவது அனைத்தும் உண்மையே. இந்த உண்மையை நானும் அறிந்திருக்கிறேன். ஆனால் இப்போது பின்வாங்குவது சாத்தியப்படாது. என் அன்புக்குரிய தம்பி துச்சாதனன் கொல்லப்பட்டதை பார்த்த பிறகு சமாதானம் என்ற பேச்சுக்கே இங்கு இடம் இல்லை. ஊழ்வினையின் விளைவால் கடைசி வீரன் இருக்கும் வரை இந்த யுத்தம் நடந்தாக வேண்டும் என்று துரியோதனன் கூறினான்.

குரு பக்தி

ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர். மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றை தேடி நீராட சென்றனர். ஆற்றை கண்டுபிடித்து நீராடினர் இருவரும் பின் குரு சூரியனை வணங்கினார். அப்பொழுது சூரிய பகவான் அசிரிரியாக தோன்றி வேத குருவே வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்று கொண்டேன். ஆனால் இன்று சூரியன் ஆகிய நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனை காப்பாற்றுங்கள் என்று கூறி அசரீரி மறைந்தது. குருவும் சூரியனை வணங்கி விட்டு சீடனை கவலையோடு பார்த்தார். பின் இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே இருக்கும் சிவன் கோயிலை நோக்கி நடக்க துவங்கினர். கோயில் வந்ததும் இறைவனை இருவரும் வணங்கினர். பின் ஊரை தாண்டி காடு வழியே நடந்து சென்றனர். சற்று களைப்பு ஏற்படவே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர்ந்தனர்.

சீடன் தூங்கினானே தவிர குரு தூங்கவில்லை. சீடனின் உயிரை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று நினைத்து விழித்து இருந்தார். அப்பொழுது ஒரு ராஜநாகம் படம் எடுத்த படி சீடனின் அருகே அவனை கொல்ல வந்தது. இதை பார்த்த குரு ராஜநாகமே நில் என்று ஆணையிட்டார். ராஜநாகமும் குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றது. குரு ராஜநாகத்தைப் பார்த்து நீ என் சீடனின் உயிரை எடுக்கவே வந்துள்ளதை நான் அறிவேன். குரு பக்தி மிகுந்த சீடனை காப்பாற்றுவது ஒரு குருவின் கடமை. அதனால் என் சீடனின் உயிரை எடுக்க நான் அனுமதிக்கமாட்டேன் என்று தடுத்தார். இப்பொழுது ராஜநாகம் பேசியது. வேத குருவே உங்கள் சீடனின் கழுத்தில் உள்ள ரத்தத்தை உறிஞ்சு எடுக்க வேண்டும் என்பது எனக்கு காலன் இட்ட கட்டளை. அனைத்தும் உணர்ந்த தாங்களே என் கடமையை செய்ய விடாமல் இப்படி தடுத்து என்னை நிறுத்தலாமா என்று முறை இட்டது. உடனே குரு அப்படி என்றால் என் சீடனின் கழுத்தில் உள்ள ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்பது தானே உனக்கு காலன் இட்ட கட்டளை. சரி சற்று பொறு நானே அவனது ரத்தத்தை உனக்கு ஊட்டுகிறேன். அதை உறிஞ்சியதும் நீ உன் கடமையை செய்து விட்ட பலனை பெறுவாய். என்று கூறி ஒரு சிறு கத்தியை எடுத்த குரு அதை சீடனின் கழுத்தில் வைத்து ரத்தம் வரும் அளவு ஆழம் வைத்து கத்தியை கீறினர். தன் கழுத்தில் கூர்மையாய் எதோ கீறுவதை உணர்ந்த சீடன் கண் விழித்து பார்த்தான். குரு தன் கழுத்தில் கத்தியை வைத்து கீறுவதை உணர்ந்து பின் கண்மூடி படுத்தபடியே சிறிதும் அசையாமல் இருந்தான்.

சீடனின் பல துளி ரத்தத்தை எடுத்த குரு அதை ராஜநாகத்துக்கு ஊட்டிவிட்டார் ராஜநாகமும் குருவின் சாபத்துக்கு நாம் ஆளாகாமல் நம் கடமை நிறைவேறியதே என்ற மகிழ்வோடு ரத்தத்தை உறிஞ்சி விட்டு வந்த வழியே சென்றது. குருவும் சீடனின் உயிரை காப்பாற்றிய நிம்மதியோடு அவனது கழுத்தில் முன்னமே தான் எடுத்து வைத்திருந்த பச்சிலை சாற்றை பிழிந்து சீடனின் கழுத்து பகுதியில் பற்று போட்டு விட்டு நிம்மதியோடு உறங்க சென்றார். சிறிது நேரம் இருவரும் நன்றாக களைப்பு தீர உறங்கிய பின் எழுந்து அமர்ந்தனர். அப்பொழுது சீடன் தன் கழுத்தில் மருந்து பற்று போட்டு இருப்பதை தொட்டு பார்த்து விட்டு எதுவும் குருவிடம் கேட்காமல் குருவே நாம் நடை பயணத்தை தொடரலாமா என்று கேட்டான். குரு புன்னகையுடன் சீடனே நீ சற்று முன் உறங்கும்போது நான் உன் கழுத்தில் கத்தி வைத்த போது நீ என்ன நினைத்தாய் உனக்கு பயம் எதுவும் உண்டாகவில்லையா என்று புன்னகையுடன் கேட்டார். சீடன் குருவே என் கழுத்தில் எதோ ஊறுவதை உணர்ந்தேன். விழித்தும் பார்த்தேன். கையில் கத்தியுடன் நீங்கள் என் கழுத்தை அறுப்பதை உணர்ந்தேன். ஆனால் என் குருநாதராகிய தாங்கள் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். அதனால் நான் நிம்மதியாக உறங்கினேன். பின் இப்பொழுது எழுந்ததும் என் கழுத்தில் உள்ள மூலிகை பற்றை பார்த்தேன் என் குருநாதராகிய உங்களுக்கு என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். அதனால் எனக்கு அதிலும் எந்த வித கவலையும் இல்லை என்று கூறி பணிந்து நின்றான். குருவும் சீடனை ஆற தழுவி எழுந்து அவனோடு நடக்கலானார். ஞானகுருவை முழு நம்பிக்கையுடன் ஏற்று கொண்டால் வாழ்வில் எப்போதும் நல்லதே நடக்கும்.