பீமனின் ஆற்றல் முழுமையாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பீமன் ஒருவனே நான்கு திசைகளிலும் சுழன்றான். அவன் திரும்பும் திசை எங்கும் கௌரவர்கள் மாண்டனர். பீமனை தாக்க துரியோதனன் தனது தம்பிகள் 24 பேரை மூன்றாக பிரித்து அனுப்பினான். அவர்களில் முதல் எட்டு பேரை கை கால்களை உடம்பில் இருந்து பிய்த்து எடுத்து தலையை கதாயுதம் கொண்டு நசுக்கியும் கொடூரமாக கொன்றான். பின்பு பீமன் யனைப் படையை அழித்தான். கௌரவர்கள் அவனை கண்டு அஞ்சினர். இதை கண்டு துரியோதனனும் சஞ்யனின் மூலம் கேட்டு அறிந்த திருதிராட்டிரனும் வருந்தினர். கௌரவர்கள் படை தோல்வி மேல் தோல்வி கண்டது.
கடோத்கஜன் கௌரவ வீரர்கள் பலரைக் கொன்றான். துரியோதனனை எதிர்த்து கடும் போர் செய்து அவன் தேரை அழித்தான். அவன் மார்பில் அம்புகளைச் செலுத்தினான். கடோத்கஜன் போர் வலிமைக் கண்டு துரோணர் கடோத்கஜனைத் தாக்கினர். பீமன் கடோத்கஜனுக்கு உதவிட விரைந்தான். துரோணரை தாக்கி அவரின் தேரை முறித்தான். கடோத்கஜனை காப்பாற்றும் முயற்சியில் பீமன் மேலும் துரியோதனனின் தம்பியர் எட்டு பேரை கொன்றான்.
தனது தம்பிமார்கள் கொன்ற பீமனை கொல்லும்படி பீஷ்மரிடம் துரியோதனன் நயந்து வேண்டினான் ஆனால் தம்மால் பாண்டவர்களை கொள்ள இயலாது என்று பீஷ்மர் கூறிவிட்டார். சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு பீமன் துரியோதனின் சகோதரர்கள் மேலும் 8 பேரை வெட்டித் தள்ளினான். எட்டாம் நாள் மட்டும் பீமன் துரியோதனன் தம்பியர் பதினாறு பேரைக் கொன்றிருந்தான். ஆக இதுவரையில் பீமன் துரியோதனனின் சகோதரர்கள் 24 பேரை கொன்று விட்டான். துரியோதனன் மீண்டும் பீஷ்மரிடம் எப்படியாவது பாண்டவர்களை கொன்றதாக வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டான். பீஷ்மர் மீண்டும் துரியோதனனிடம் தனது பழைய கருத்தை எடுத்துரைத்தார். கிருஷ்ணன் பாண்டவர்களை பாதுகாத்து வருகின்றான். மண்ணுலகத்தாரும் விண்ணுலத்தாரும் ஒன்று கூடினாலும் பாண்டவர்களை அழிக்க முடியாது. ஆனால் துர்புத்தியே வடிவெடுத்த துரியோதனனுக்கு மட்டும் இக்கருத்து விளங்கவில்லை தான் கையாண்டு வந்த செயல் முற்றிலும் சரியானது என்று மனப்பூர்வமாக நம்பினான்.
அர்ஜுனன் பீஷ்மர் மீது சரமாரியாக அம்புகள் எய்து திணறடித்தான். இந்திரன் தன் வேலைகளை நிறுத்திவிட்டு அன்று அர்ஜுனன் போர் செய்வதை கண்டு தன்னை மறந்தான். யானைகள் சரிந்தன குதிரைகள் மடிந்தன காலாட்படைகள் அழிந்தன. திரும்பிய திசை எங்கும் பாண்டவர்களின் வெற்றி ஆராவாரம் தெரிந்தது. துரியோதனன் செய்வது அறியாமல் திகைத்தான். தர்மம் தலை தூக்க தொடங்கியது. சூரியன் மறைய எட்டாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.
நகுலனும் சகாதேவனும் சேர்ந்து சல்லியனை எதிர்த்து போரிட்டனர். சல்லியன் வில்வித்தையிலும் போர்முறைகளிலும் தேர்ந்தவன். தேரோட்டத்தில் வல்லவன் சல்லியனை சாய்க்க நகுல சாகாதேவ சகோதரர்கள் கடுமையாக போராடினர். சல்லியனும் துரிதமாக தன் ஆயுதங்களை பயன்படுத்தினான். சகாதேவன் தன் ஈட்டியால் சல்லியனின் தேரை தாக்கினான். அவன் ஈட்டி பாய்ந்து வருவதை கண்டு சல்லியனின் குதிரைகள் மிரண்டு தடுமாறி ஓட அவைகளை அடக்கினான் சல்லியன். நகுலனோ தன் வாள்திறமையால் சல்லியனின் வில்லை வென்றான். சகாதேவனை சல்லியனின் அம்புகள் தாக்காதவாறு தன் வாழ்சுழற்சியால் அவற்றை தடுத்தான். சல்லியன் தன் இரு மருமகன்களின் போர் திறமையை கண்டு வியந்தான். இறுதியில் மூவரும் சோர்ந்தனர். சல்லியன் மயங்கி நிராயுதபாணியாக தான் தேரில் சாய்ந்தான். தர்மத்தின் படி சல்லியனை கொல்லாமல் உயிர் வாழ விட்டனர் நகுல சகாதேவ சகோதரர்கள்.
கடுமையாய் இருந்த ஏழாம் நாள் போர் சூரியன் மறைய முடிவுக்கு வந்தது. அத்தனை போர் வீரர்களும் போராடி களைத்து போய் இருந்தனர் அன்று இரவு கிருஷ்ணனின் புல்லாங்குழல் வேணுகானம் அனைவருக்கும் அமைதியையும் ஆறுதலையும் கொடுத்தது. அன்று கௌரவர்களுக்கு நடந்த இழப்புகளை அடுத்த நாளில் சரி செய்ய வேண்டும். பாண்டவர்களின் படைகளை சிதறடிக்க வேண்டும் என்று கௌரவர்கள் ஆலோசித்து முடிவு செய்தனர்.
எட்டாம் நாள் பீஷ்மர் தனது சேனைகளை ஊர்மி வியூகத்தில் அமைத்தார். அது கடல் போல் பெரியதாக காட்சி அளித்தது. பீஷ்மருக்கு போட்டியாக தன் படையின் சிறந்த வீரர்களின் தொகுப்பை கொண்டு சிருங்கடக வியூகத்தை திருஷ்டத்துய்மன் வகுத்தான். அது பார்க்க இரண்டு கொம்புகள் போன்று காணப்பட்டது. மிகவும் வலுவான இந்த வியூகம் பகைவரின் வியூகம் எதுவானாலும் அதைச் சிதறச் செய்யும் ஆற்றல் உடையது. அர்ஜுனனும் திருஷ்டத்யும்னனும் வியூகத்தின் தலை பகுதியில் நின்றனர். தருமர், சிகண்டி, அரவான் இடது புறத்திலும் பீமன் மற்றும் கடோத்கஜன் வலது புறத்திலும் இருந்தனர். நகுல சகாதேவ சகோதரர்கள் அபிமன்யு துருபதன் ஆகியோர் வியூகத்தின் பின்புற சுவராக இருந்தனர்.
துரியோதனன் படை தளபதிகளிடம் கோபம் கொண்டான் ஆகையால் கௌரவ படைகள் சீற்றடுடன் போர் புரிந்தனர். பாண்டவ படைகள் ஏழாம் நாள் கிடைத்த வெற்றியினாலும் இரவு கிருஷ்ணர் கொடுத்த வேணுகானதினாலும் உற்சாகத்துடன் போர் செய்தனர். கௌரவ படையின் விகர்ணன் துச்சாதனன் தேர்கள் மற்றும் குதிரைகளை யுதிஷ்டிரர் மற்றும் சிகண்டிகை தூள் தூள் ஆக்கினர். விகர்ணனும் துச்சாதனனும் பின்வாங்கினார்கள். மற்றொரு புறம் நகுல சகாதேவ சகோதரர்களும் அபிமன்யுவும் சிந்து நாட்டரசன் ஜயத்திரதன், சகுனி, சகுனியின் மகன் உல்லூகன், சல்லியன், பர்பரிகன், பூரிசிரவஸ் ஆகியோரை கலங்கடித்தனர். அபிமன்யுவின் ஆற்றல் வெளிப்பட தொடங்கியது. பாண்டவர்களின் படையில் அபிமன்னு என்பவனின் மிகபெரிய ஆற்றல் மெதுவாகவும் அதே சமயம் வலிமையாகவும் உருவாகிகொண்டிருப்பது அன்று கௌரவர்களுக்கு தெரிய வந்தது.
ஒரு நாள் சக்கரவர்த்தி அக்பர் வேட்டைக்காக ஒரு பரந்த வனத்திற்குள் சென்றார். அவருடன் மந்திரி பீர்பாலும் சென்றார். ஆனால் காட்டுக்குள் சென்றவர்களுக்கு வழி தவறிப் போனது. கொடும் வனம் அதைவிட கொடிய பசி இருவரையும் வாட்டி வதைத்தது. ஆனால் பீர்பாலோ அடர்ந்த வனத்தின் அழகில் மனதை பறிகொடுத்து விட்டார். உடனே ஒரு பெரியமரத்தின் கீழ் அமர்ந்து ராம ராம என்று ராம நாம ஜபத்தை ஜபிக்கத் தொடங்கினார். அக்பர் பசி தாங்க முடியாமல் பீர்பாலை நோக்கி ஏதாவது உணவை சேகரித்துக் கொண்டு வாருங்கள். நிச்சயம் சிறிது தூரம் போனால் ஏதாவது வழி தென்படும் என்று கூற பீர்பாலோ அரசே என் வயிறோ உணவிற்கு ஏங்குகிறது. ஆனால் மனமோ ராம நாமத்திற்கு ஏங்குகிறது. அதனால் மன்னா இப்போது நான் உணவைப் போய் சேகரிக்கும் நிலையில் இல்லை என்று பதிலளித்தார்.
இதைக் கேட்டு சினம் கொண்ட அக்பர் தானே உணவை தேடிக் கொண்டு போனார். அவர் எதிர்பார்த்தது போலவே தொலைவில் ஒரு வீடு தென்பட விரைந்து சென்ற சக்கரவர்த்தி அக்பரை அவ்வீட்டினர் மனம் மகிழ்ந்து வரவேற்று அறுசுவை உணவளித்து உபசரித்தனர்.
அக்பரும் மனம் கேளாமல் பீர்பாலிற்காகவும் உணவைக் கேட்டுப் பெற்று காட்டில் மரத்தடியில் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தவருக்கு உணவு கொடுத்துவிட்டு ஏளனத்தோடு சொன்னார். பீர்பால் இப்போதாவது தெரிந்ததா நான் எடுத்த சரியான முடிவு தான் இன்று உங்களுக்கு உணவு கிடைத்தது. நீங்கள் ஜபித்துக் கொண்டிருக்கும் ராமஜபம் உங்களுக்கு உணவு கொடுக்கவில்லை தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறினார். உணவைப் புசித்து முடித்து விட்டு அமைதியாக பீர்பால் அரசே உணவிற்காக மகாபெரிய சக்கரவர்த்தியான தாங்கள் ஒரு சாதாரண பிரஜையிடம் யாசிக்க நேர்ந்தது. ஆனால் என் பிரபு ராமரோ எனக்கு உணவை மாமன்னரான உங்கள் கையில் கொடுத்தனுப்பியுள்ளார். இது தான் ராம ஜபத்தின் மகிமை என்று கூற அக்பர் வாயடைத்துப் போய் நின்றார்.
பீஷ்மரும் பாண்டவர்களின் படை தளபதியான திருஷ்டத்துய்மனும் நேருக்கு நேர் போரில் சந்தித்தனர். வில் வித்தையில் தான் குருவையே தோற்கடித்தவர் பீஷ்மர் என்பதால் அவரின் ஆற்றல் என்ன என்பதை திருஷ்டத்துய்மன் நன்கு அறிவான். சாமர்த்தியமாக அவரை தாக்காமல் அவருடைய அனைத்து தாக்குதலையும் தடுத்து பீஷ்மரை சோர்ந்து போக வைத்தான்.
அர்ஜுனனும் துரோணரும் நேருக்கு நேர் சந்தித்தனர். அர்ஜூனனை பார்த்து துரோணர் அர்ஜுனா நீ என்னை வென்றால் அதனால் பெருமை எனக்கு தான். தயங்காமல் உன் அம்புகளை செலுத்து இது உனக்கும் எனக்கும் நடக்கும் போர் அல்ல. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போர். வீழ்வது நானாக இருப்பினும் வெல்வது தர்மமாக இருக்க வேண்டும். நான் என் ஆற்றலை குறைத்து யுத்தம் செய்ய மாட்டேன் என் முழு ஆற்றலுடன் போர் செய்வேன். என்னை நீ இந்த போரில் வென்றால் நீ வில்லுக்கு விஜயன் என்று பெயர் பெறுவாய். வில்லுக்கு விஜயன் என்ற புகழ் உன்னை சேரட்டும் என்று ஆசி வழங்கினார். குருவின் ஆசியோடு அம்புகளை செலுத்தினான் அர்ஜுனன். அம்புகள் காற்றை கிழித்து கொண்டு பாய்ந்தன. அக்னி மற்றும் வாயு அஸ்திரங்களை செலுத்தினான். துரோணரும் அதற்க்கு ஈடாக போர் புரிந்தார். இருவரின் ஆயுதங்கள் தீர்ந்து போகும் நிலையில் இருவரும் சோர்ந்தனர். கிருஷ்ணர் அர்ஜுனரிடம் இன்று நீ புரிந்த யுத்தம் தான் துரோணரின் தலைமை சீடன் என்பதை உலகிற்கு தெரிவித்தது என்று கூறி ஊக்கம் அளித்தார்.
நகுலனும் சகாதேவனும் காலாட்படைகளை சிதறடித்தனர். நகுலனின் வாள் சுழர்ச்சியும் சகாதேவனின் ஈட்டியும் போர் களத்தில் புயலை உருவாகியது. அன்றிய போரில் சகாதேவன் வீசிய ஈட்டிகளின் எண்ணிக்கை 17485. ஆறாம் நாள் போரில் பாண்டவர்களின் கை ஓங்கி இருந்தது. அர்ஜுனன் துரோணர், பீமன், துரியோதனன், பீஷ்மர், திருஷ்டத்துய்மன், நகுலன் சகாதேவன் என அனைவரும் சோர்ந்திருந்த நிலையில் மாலையில் சூரியன் அஸ்தமித்தான். ஆறாம் நாள் போர் முடிவிற்கு வந்தது.
ஏழாம் நாள் யுத்தத்திற்கு அனைவரும் தயாரானர்கள். ஆறாம் நாள் போரில் சோர்வடைந்த துரியோதனன் அடுத்த நாள் காலை பீஷ்மரிடம் முறையிட்டான். எனது அச்சமும் சோர்வும் என்னை விட்டு அகவில்லை. உங்கள் உதவி இல்லாமல் நான் எப்படி வெற்றி பெறுவேன் எனக் கெஞ்சிக் கேட்டான். பீஷ்மர் என்னால் முடிந்த அளவிற்கு போர் செய்து கொண்டு தான் இருகிறேன் என்று கூறினார்.
அரசன் ஒருவனுக்கு தீட்சை பெற வேண்டும் என்ற ஆசை உண்டானது. தீட்சை பெற வேண்டுமானால் அதற்கு குரு ஒருவரை அனுகி மந்திரதீட்சை பெறுவது முற்றிலும் அவசியம் என்று சாஸ்திரங்கள் கூறுவதை அவன் அறிந்திருந்தான். தொலைதூத்தில் இருக்கும் அந்த பிரம்மஞானியிடம் சென்று மந்திரதீட்சை பெற முடிவு செய்தான். பிரம்ம ஞானியின் ஆஸ்ரமம் இருந்த மலைச்சாரலுக்கிடையே இருந்த குடிலுக்கு சென்றான். முதலில் அவரைப் பணிந்து வணங்கிக் கொண்டவன் எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான். மன்னனை உற்று நோக்கிய பிரம்மஞானி இவன் மந்திரதீட்சை பெறும் போதிய மனப்பக்குவம் இல்லாதவனாத் தெரிகிறான். இவனுக்கு மந்திரதீட்சை கொடுக்கும் தகுதி இப்போது இல்லை என்பதைப் புரிந்து கொண்டுவிட்டார். எனவே அரசனிடம் அரசே நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு உரிய நேரம் இன்னும் வரவில்லை. அதற்கு சில மேலும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நான் இப்போது உங்களுக்கு மந்திரதீட்சை தருவதற்கில்லை என்று கூறினார். அரசன் தனக்கு மந்திரதீட்சை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தனால் ஞானி தீட்சை தராததால் மிகவும் ஏமாற்றத்துடன் அரண்மனைக்குத் திரும்பினான்.
தன் அமைச்சரிடம், எனக்கு பிரம்மஞானி மந்திர உபதேசம் தர மறுத்துவிட்டார். எப்படியும் நான் மந்திரதீட்சை பெற்றாக வேண்டும். அதற்கு வேறு என்ன வழி? கூறுங்கள் என்று கேட்டான். மன்னர் பெருமானே நமது நாட்டில் சாஸ்திரங்களை மிகவும் நன்கு கற்றறிந்த பெரிய சமஸ்கிருத பண்டிதர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரிடம் நீங்கள் தீட்சை பெற்றுக் கொள்ளலாமே என்றார். தாங்கள் விரும்பினால் உடனே அவரிடம் நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு நான் உரிய ஏற்பாடுகள் செய்கிறேன் என்றார் அமைச்சர். மன்னனும் அமைச்சர் சொன்னபடி மந்திர தீட்சை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்தான். அமைச்சர் பண்டிதருடன் தொடர்புகொண்டு உரிய ஏற்பாடுகள் செய்தார். பண்டிதர் ஒரு நல்ல நாளில் அரண்மனைக்கு வந்தார். அவர் மன்னனுக்கு மந்திரோபதேசம் செய்து வைத்தார்.
அவருக்கு அரசன் நிறைய வெகுமதிகள் வழங்கி அனுப்பி வைத்தான். அரசன் தந்த பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொண்ட பண்டிதர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். இப்போது தனக்கு மந்திர தீட்சை கிடைத்துவிட்டது. தனக்கு தீட்சை தர மறுத்த பிரம்மஞானிக்கு இப்போது நான் பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்தான். தன் வீரர்களை அழைத்தான். எனக்கு மந்திரதீட்சை தர மறுத்த பிரம்மஞானியைப் பிடித்து வர கட்டளையிட்டு அனுப்பினான்.
அரசன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள் பிரமஞானியை வீரர்கள். சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அரசன் ஞானியை ஏளனத்துடன் பார்த்து உங்களிடம் எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொண்டேன். எனக்கு உபதேசம் செய்ய மறுத்துவிட்டீர்களே இப்போது என்ன ஆயிற்று தெரியுமா? நான் என்ன மந்திரத்தை உங்களிடம் உபதேசம் பெற வேண்டும் என்று விரும்பினேனோ அதே மந்திரத்தை நான் இப்போது ஒரு பண்டிதரிடம் பெற்றுக்கொண்டேன் என்றான். பிரம்மஞானி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். மன்னன் தொடர்ந்தான். ஓம் நமச்சிவாய இது தானே மந்திரம் இந்த மந்திரத்தை தருவதற்குத் தானே நீங்கள் மறுத்தீர்கள்? இப்போது நான் விரும்பியபடி எனக்கு மந்திரதீட்சை கிடைத்து விட்டது என்றான் ஆணவமாக. அது கேட்ட பிரம்மஞானி அரசே இப்போது நான் சொல்வதுபோல் நீங்கள் சிறிது நேரம் நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார். ஏதும் புரியாத அரசனும் அதையும் பார்க்கலாம் என சம்மதித்தான். பிரம்மஞானி அரசனிடம் அரசே நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தில் நான் சிறிது நேரம் அமர்வதற்கு என்னை அனுமதியுங்கள். அதே சமயம் நீங்கள் நான் இப்போது நின்று கொண்டிருக்கும் இந்த இடத்திற்கு வந்து சிறிது நேரம் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அரசன் பிரம்மஞானி நின்று கொண்டிருந்த இடத்தில் வந்து நின்று கொண்டான். ஞானியோ சென்று சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார்.
பிரம்மஞானி அரியணையில் அமர்ந்தவுடன் அவர் அரசனைச் சுட்டிக்காட்டி அருகில் இருந்த வீரர்களிடம் இவரை உடனே கைது செய்யுங்கள் என்று கட்டளையிட்டார். இவ்விதம் பிரம்மஞானி கூறியதைக் கேட்டு அரசவையில் இருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டார்கள். வீரர்களுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியாது அதிர்ச்சியாக அசையாது நின்றார்கள். இந்த நிலையில் பிரம்மஞானி தன்னைக் கைது செய்யும்படி கூறியதைக் கேட்டு கோபம் கொண்ட அரசன் அரியணையில் உட்கார்ந்திருந்த பிரம்மஞானியை வீரர்களுக்குச் சுட்டிக்காட்டி இவரை உடனே கைது செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். இவ்விதம் அரசன் சொன்னவுடன் வீரர்கள் உடனே சென்று பிரம்மஞானியைக் கைது செய்தார்கள். அப்போது பிரம்மஞானி அரசனைப் பார்த்து சிரித்தபடியே கூறினார். அரசே இப்போது இங்கு நடந்த சம்பவத்தில் உங்கள் கேள்விக்கு உரிய பதில் இருக்கிறது. இதுதான் மெய்ஞ்ஞானி ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவதற்கும் பண்டிதர் ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவதற்கும் உள்ள வேறுபாடு என்றார்.
நான் உங்களைக் கைது செய்யும்படி இங்கிருந்த வீரர்களுக்குக் கட்டளை இட்டேன். ஆனால் என் கட்டளையை அவர்கள் நிறைவேற்றவில்லை. நான் அரசனுக்குரிய அரியணையிலிருந்துதான் உத்தரவு பிறப்பித்தேன் என்றாலும் என் உத்தரவை இங்கு யாரும் பொருட்படுத்தவில்லை நிறைவேற்றவில்லை. மாறாக நீங்கள் அரியணையில் அமராமல் அங்கு நின்றுகொண்டு என்னைக் கைது செய்யும்படி உத்தரவு பிறப்பித்தீர்கள். உடனே உங்கள் கட்டளையை வீரர்கள் நிறைவேற்றத் துணிந்தார்கள். எனவே நான் கூறிய அதே சொற்களை நீங்கள் சொன்னபோது தான் அதற்கு இங்கு பலன் ஏற்பட்டது. நீங்கள் கூறிய அதே சொற்களை நான் இங்கு சொன்னபோதிலும் அதற்கு மதிப்பில்லாமல் போனது. இது போல்தான் அரசே மந்திரோபதேசம் செய்யும்போது குருமார்கள் சீடர்களுக்கு வழங்கும் மந்திரம் ஒரே மந்திரமாக இருக்கலாம். ஆனால் மெய்ஞ்ஞானி ஒருவர் அந்த மந்திரத்தை மந்திர தீட்சையின்போது உரிய முறையில் வழங்கினால்தான் அந்த மந்திரம் உயிர் பெற்று தனக்கு உரிய உண்மையான உயர்ந்த பலனைத் தரும். இறையனுபூதி பெறாத ஒருவர் சாஸ்திரங்களை ஏராளமாகப் படித்தவராக இருக்கலாம். ஆனால்,அவர் ஞானிகள் சொல்லும் அதே மந்திரத்தை உபதேசம் செய்தாலும் அதற்குரிய உயர்ந்த பலன் இருக்காது. தகுதியானவர்கள் உபதேசம் செய்தால் தான் மந்திரம் பலிக்கும் மல மாசு நீங்கும் என்று கூறி முடித்தார்.
உண்மையையுணர்ந்த அரசன் ஞானியை கைது நிலையைத் தவிர்த்து தன் தவறுக்கு வருந்தி இனி திருத்தமாக இருந்து கொள்வதாக அறிவித்தான். தீ என்றால் மலம். ஷை என்றால் ஒழித்தல். மலமாகிய அழுக்கை ஒழிப்பதே தீட்சையாகும். தீட்சைகள் பல வகைப்படும்.
பரிச தீட்சை: ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில் புருவ மத்தியிலும் தலை உச்சியிலும் நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும். உதாரணம் ஒரு பறவை முட்டையிட்டு அதன் மேல் உட்கார்ந்து அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது பரிச தீட்சையாகும்.
நயன தீட்சை: ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும். உதாரணம் ஒரு மீன் முட்டையிட்டு அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை.
பாவானா தீட்சை: ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து சகஜத்திலேயே வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான எண்ணமற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை. உதாரணம் ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும்.
ஐந்தாம் நாள் யுத்தம் தொடங்கியது. பீஷ்மர் தனது சேனையை மகர வியூகத்தில் அமைத்தார். வியூகம் வடிவத்தில் முதலை போன்று இருந்தது. அதை எதிர்த்து திருஷ்டத்யும்னன் தனது சேனேயை சியேன வியூகத்தில் அமைத்தான். வியூகம் வடிவத்தில் பருந்து போன்று இருந்தது. அன்றைக்கு நிகழ்ந்த யுத்தத்திற்கு சங்குல யுத்தம் என்று பெயர். அத்தனை பேரும் அவனவனுக்கு ஏற்ற எதிரியைத் தாக்கி போர் புரிவது சங்குல யுத்தம் ஆகும். யுத்தம் ஆரம்பிக்கும் போது துரியோதனன் துரோணரைப் பார்த்து குருவே நீங்கள் பாண்டவர்களைக் கொல்லும் செயலில் ஈடுபடுங்கள். உம்மையும் பீஷ்மரையுமே நான் நம்பியுள்ளேன் என்றான். அதற்கு துரோணர் பாண்டவரிடம் பகை வேண்டாம் என ஏற்கனவே பலமுறை சொல்லியும் நீ கேட்கவில்லை. ஆயினும் என்னால் இயன்ற அளவு போரிடுவேன் என்றார்.
அர்ஜுனன் ஆயிரக்கணக்கான வீரர்களை வீழ்த்தினார் அவனை எதிர்த்து பயந்தவர்கள் சுடர்விட்டு எரியும் தீயில் பாய்ந்து விட்டில் பூச்சிகள் போன்று மடிந்தார்கள். யுத்தத்தில் பல ஆயிரம் பேர் மாண்டனர். சாத்யகியும் பீமனும் துரோணருடன் சண்டையிட அர்ஜூனன் அஸ்வத்தாமனுடன் போரிட்டான். அபிமன்யூ துரியோதனனின் மகன் லட்சுமணனுடன் போரிட்டான். சூரியன் மறைய அன்றைய போர் முடிந்தது. பாண்டவ மற்றும் கௌரவர்களின் சகோதர இழப்பின்றி யுத்தம் முடிந்தது.
ஆறாம் நாள் போரில் திருஷ்டத்துய்மன் னது சேனையை மகர வியூகத்தில் அமைத்தான். பீஷ்மர் கிரௌஞ்ச வியூகத்தில் அமைத்தார். ஒருவருடன் ஒருவர் போர் புரிந்தனர். பீமன் அன்று சிறப்பாக போரிட்டான். பகைவர்களைக் கொன்று குவித்தான். யானை படைகள் இவன் ஆற்றல் கண்டு மிரண்டது. குதிரை படைகள் தெறித்து ஓடின. பீமன் தன் கையில் இருக்கும் கதாயுதத்தை சுழற்றும் வேகமும் அதில் இருந்து எழுந்த ஓசையும் பலராமனின் சீடன் என்பதை நிருபித்தான். பீமனின் கதாயுதம் இவ்வொரு முறை நிலத்தில் மோதும் போதும் நிலம் அதிர்ந்தது. இதை கண்ட கௌரவ படைகள் அச்சத்தின் உச்சியில் இருந்தனர். அவன் ஆற்றலும் போர் வெறியும் அன்று எல்லை அற்று இருந்தது. பீமனை பார்த்த பீஷ்மர், துரோணர், கிருபர் அனைவரும் இப்படியும் ஒருவர் போர் செய்ய முடியுமா என்று மனதிற்குள் பீமனை பற்றி பெருமை கொண்டனர். துரோணர் இவன் என் சிஷ்யன் என்று கூற அதற்க்கு பீஷ்மர் அவன் என் பேரன் என்று பெருமை கொண்டார். இடையில் கிருபரோ உங்கள் அனைவருக்கும் முன்பு நான் தான் குல குரு ஆதலால் அந்த பெருமை என்னை சேரும் என்று போர்களத்தில் கூற மூவரும் நகைத்து கொண்டனர். பின்பு அவனும் தங்கள் எதிர் அணியில் ஒருவன் என்பதை உணர்ந்து மீண்டும் ஆயுதம் ஏந்தி போரினை தொடர்ந்தார்கள்.
துரியோதனன் பீமனுடன் போர் புரிய நெருங்கினான். அதைக் கண்ட பீமன் துரியோதனா நீ இங்குத்தான் இருக்கிறாயா உன்னைப் போர்க்களம் எங்கும் தேடி அலைந்தேன். இன்றுடன் உன் வாழ்வு முடிந்தது என்று கூறி அவன் தேர்க்கொடியை அறுத்துத் தள்ளினான். இருவருக்கும் பெரும் போர் மூண்டது. இருவரும் தங்களின் கதாயுதத்தால் சண்டை போட்டனர். கதாயுதங்களின் சத்தம் இடியன ஒலித்தது. இருவரின் கதாயுதங்களில் இருந்து வந்த நெருப்பு பொறிகள் பகலில் மின்னல் போல் தெரித்தது.
டில்லியை நவாப்கள் ஆண்ட கால சமயத்தில் அங்கிருந்து பெரும் படைகளுடன் புறப்பட்டு வழிநெடுக ஆங்காங்கே கோயில்களில் இருக்கும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை கொள்ளையடித்துக் கொண்டே வந்தனர். அப்படி வரும்பொழுது தமிழகத்திலும் புகுந்து சிதம்பரத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலை நெருங்கியது. அப்போது படைத்தளபதிக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. பல்வேறு வைத்தியம் செய்தும் வலி குறையவில்லை. இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியுள்ள செல்வ முத்துக்குமார சுவாமியின் ஆபரணங்களை பாதுகாத்து வந்த சரவணபிள்ளை முத்துக்குமரா கொடியவன் நெருங்கி விட்டார்களே அருள் வடிவான உன் மகிமை அறியாமல் உன் ஆபரணங்களை அள்ளிக் கொண்டு போய் விடுவார்களே என்று முறையிட்டு அழுதார். அப்படியே தரையில் படுத்து தூங்கி விட்டார். அவர் கனவில் முருகப்பெருமான் எழுந்தருளி சரவணா வருத்தங்கொள்ளாதே அத்தளபதிக்கு கடுமையான வயிற்று வலியை உண்டாக்கியுள்ளது. நாளை காலை இப்பொட்டலத்திலுள்ள மருந்தை அவருக்கு கொடுத்து அவனை விழுங்கச் செய் என்று கூறி மறைந்தார்.
கண்விழித்துப் பார்த்த சரவணப்பிள்ளையின் கையில் ஒரு பொட்டலம் இருந்தது. விடிந்ததும் தளபதி இருந்த முகாமிற்கு சென்று காவலர்களிடம் உங்கள் தளபதியின் வயிற்று வலியை தீர்க்க என்னிடம் மருந்து உள்ளது என்றார். அவரை அழைத்துச் சென்று தளபதியிடம் விஷயத்தை கூறினர். ஐயா என் வயிற்று வலியை உங்கள் மருந்து தீர்த்து வைத்தால் உங்களுக்கு தகுந்த சன்மானம் அளிப்பேன் என்றார் தளபதி. தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பிரித்தார் சரவணப்பிள்ளை. அதில் வைத்தீஸ்வரன் கோவில் பிரசாதமான திருச்சாந்து உருண்டை இருந்தது. அதை தளபதியிடம் கொடுத்து உண்ண சொன்னார். சாப்பிட்ட மறுநொடி தளபதியின் வயிற்றுவலி காணாமல் போனது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த தளபதி வேண்டியதைக் கேளுங்கள் என்றார். சரவணபிள்ளையும் முருகப்பெருமான் தன் கனவில் சொன்னதை விவரித்துக் கூறினார். இதைக் கேட்டதும் மெய் சிலிர்த்தான் தளபதி தன்னிடம் இருந்த முத்துப்பந்தல், ஆலவட்டம், தண்டு, குடை, கொடி மற்றும் சாமரம் ஆகியவற்றுடன் ஏராளமான செல்வத்தையும் முருகப்பெருமானுக்கு சமர்ப்பித்தார். இதை நினைவுறுத்தும் விதமாக இன்றும் செல்வ முத்துக் குமார சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும் காலங்களில் தண்டு, குடை, கொடி, ஆல வட்டம் மற்றும் சாமரம் ஆகியவற்றைக் கொண்டு உபச்சாரம் நடைபெறுகிறது.
அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் நாள்தோறும் நீ எனக்கு யுத்ததில் நடக்கும் செய்திகளை எடுத்துக் கூறுகின்றாய். யுத்தம் செல்லும் போக்கில் போனால் என் மகன் எவ்வாறு வெற்றி பெறப்போகிறான். இன்று எனது மகன்கள் 8 பேரை பீமன் கொன்று விட்டான். இது எனக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது என்றான். அதற்கு சஞ்சயன் உண்மையை எடுத்துரைக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த விபத்தை நீங்களாகவே வரவழைத்துக் கொண்டார்கள் என்றான்.
நான்காம் நாள் போரின் முடிவில் இரவில் துரியோதனன் மிகவும் துன்பத்தில் மூழ்கியவனாக இருந்தான் அவனால் தூங்க முடியவில்லை பீஷ்மருடைய கூடாரத்திற்கு மெதுவாக நடந்து சென்றான். பீஷ்மரிடம் சென்ற துரியோதனன் நீங்களும் துரோணரும் கிருபரும் இருந்தும் என் தம்பியர் 8 பேர் மாண்டார்கள். பல வீரர்கள் உயிர் இழந்தனர். பாண்டவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று வருத்தத்துடன் கேட்டான். அதற்கு பீஷ்மர் இது குறித்து பலமுறை உன்னிடம் எச்சரிக்கை பண்ணியிருக்கிறேன். போரில் பாண்டவர்களே வெற்றி பெருவார்கள். நீ தோல்வியடைவாய். பாண்டவர்களுடன் சமாதானமாகப் போவதே நன்று என பலமுறை வற்புறுத்தியும் இருக்கிறேன்.
பாண்டவர்களிடம் நீ வைத்திருக்கும் பகைமையும் அநீதியுமே உன்னை கீழ்நிலைக்கு இழுத்துச் செல்கின்றன. பாவி ஒருவனை மண்ணுலகும் விண்ணுலகும் ஒன்று கூடினாலும் காப்பாற்ற முடியாது. பாண்டவர்கள் தர்மத்திலிருந்து இம்மியளவும் பிசகாதவர்கள். ஆகையால் கிருஷ்ணன் அவர்களை காப்பாற்றி வருகின்றான். எங்கு கிருஷ்ணர் உள்ளாரோ அங்கு தர்மம் இருக்கிறது. எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கிறது. கிருஷ்ணனோ நாராயணனுடைய அவதார மூர்த்தி. உலகிலுள்ள கயவர்களை எல்லாம் அழித்துத்தள்ள அவன் தீர்மானிக்கின்றான். நீ புரிந்துள்ள பாவச்செயலின் விளைவிலிருந்து நீ தப்பித்துக் கொள்ளமாட்டாய் இது உண்மை. பாண்டவர்களுடன் நீ சமாதானம் செய்து கொள். இல்லையேல் நீயும் அழிந்து போவாய். இப்பொழுதும் கூட நிலைமை தலைக்கு மேல் போய்விடவில்லை. நீ தீர்மானித்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவகாசம் இருக்கிறது என்றார். துரியோதனன் சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தான். பிறகு அவருடைய கூடாரத்தை விட்டு அவன் கிளம்பி சென்றான். இரவெல்லாம் அவனுக்கு உறக்கம் இல்லை. ஆனால் தன்னை தானே திருத்தி அமைத்துக் கொள்ளும் எண்ணம் அவனுக்கு வரவில்லை.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 240 வது தேவாரத்தலம் திருமாகறல். உற்சவர் சோமாஸ்கந்தர், நடராஜர். மூலவர் திருமாகறலீஸ்வரர், அடைக்கலங்காத்த நாதர், உடும்பீசர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மகம்வாழ்வித்தவர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு. இறைவன் உடும்பின் வால் போன்று காட்சி அளிக்கிறார். அம்பாள் திரிபுவனநாயகி, புவனநாயகி. தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் தலமரம் எலுமிச்சை. தீர்த்தம் அக்னி. செய்யாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகரங்களுடனும் இவ்வாலயம் உள்ளது. பிராகாரத்தில் பொய்யாவிநாயகர், ஆறுமுகர், 63 நாயன்மார்கள், நால்வர், நவக்கிரகங்கள் சந்நிதிகள் உள்ளன. கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், சிறிய தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. விசாலமான வெளிப்பிரகாரம் வலமாக வந்து படிக்கட்டுகளையேறி விநாயகர் மறுபுறம் சுப்பிரமணியர், துவாரபாலகர்கள் உள்ளனர்.
இராஜேந்திர சோழ மன்னருக்கு பென்னுடும்பின் வால் வடிவில் இவ்வாலயத்தின் இறைவன் காட்சியளித்துள்ளார். மூலவரின் விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின் பகுதி) அமைப்பில் அமைந்துள்ளது. விமானத்தில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தி உள்ளார். இத்தலத்தில் முருகப்பெருமான் மயில்மீது ஆறு திருமுகங்களுடன் இருதேவியர் உடனிருக்க வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். முருகப்பெருமான் சூரபத்மன் முதலிய அரக்கர்களை அழிக்க போர் செய்த போது தப்பிப் பிழைத்த மாக்கிரகன் என்ற அசுரன் சிவபூஜை செய்து வந்தான். அவன் இத்தலம் வந்த போது இங்குள்ள இறைவனுக்கு தன் பெயரால் மாக்கிரன் என பெயர் சூட்டினான். இப்பெயர் மருவி மாகறலீசர் என்று மாறியது. திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப்பரிசாக வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத்தம்பதிகளை வெள்ளையானையில் அமரச்செய்து அக்காட்சியை கண்ணாற கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப முருகன் இத்தலத்தில் வெள்ளையானை மீது அமர்ந்து காட்சி தந்தார்.
மும்மூர்த்திகளில் தானே சிறந்தவன் என்று செருக்குற்று இருந்த பிரம்மாவை சிவபெருமான் சபித்தார். தனது சாபம் நீங்க பிரம்மா இத்தலம் வந்து ஒரு லிங்கம் பிரதிஷடை செய்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார். பின்பு சத்தியலோகம் செல்லும் போது ஆண்டு முழுவதும் காய்க்கும் அதிசயப்பலாமரம் ஒன்றை நட்டார். அப்பலாமரம் நாள்தோறும் கனி கொடுத்து வந்தது. ராஜேந்திர சோழ மன்னன் இந்த அதிசய பலாமரத்தைக் கண்டு வியந்து அந்த ஊரிலிருந்து தினமும் ஒருவர் இந்த பழத்தை எடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டான். நடராஜருக்கு இப்பழத்தை மதிய வேளையில் நைவேத்தியம் செய்து அதை மன்னருக்கு கொடுப்பது வழக்கம். தினந்தோறும் வீட்டுக்கு ஒருவர் என்ற முறையில் மன்னனுக்கு சென்று கொடுத்து வந்தனர்.
ஒருமுறை அந்தண சிறுவனின் முறை வந்தது. இந்த மரத்தில் இருந்து தினமும் பழம் பறித்துப் போக மக்களை ஏவும் மன்னன் வேலைக்காரர்களை இதற்கென நியமித்திருக்கலாமே என எண்ணிய அவன் ஒரு தந்திரம் செய்தான். அந்த ஊர் மக்களிடம் நான் சிறுவன் பழத்தை சுமக்க சிரமப்படுவேன் நீங்கள் எல்லோரும் போய் இந்த பழத்தை கொடுத்து வாருங்கள். நான் இங்கிருந்து உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன் என்று கூற அனைவரும் சிதம்பரம் சென்று விட்டனர். இந்த மரம் இருந்தால் தானே பிரச்னை வரும். இதை அழித்து விட்டால் நம் ஊர் மக்கள் தினமும் பழம் சுமக்கும் தொல்லை இருக்காதே எனக் கருதியவன் அந்த மரத்தை எரித்து விட்டான். ஊர் திரும்பிய மக்களிடம் பலாமரத்தில் தானாக தீப்பிடித்து சாம்பலாகி விட்டதாக தெரிவித்தான். ஊராரும் நம்பிவிட்டனர். மறுநாள் பலாப்பழம் சிதம்பரம் செல்லவில்லை. அந்த சிறுவனை அழைத்து மன்னர் விசாரித்தார். அப்போது அவன் பலாப்பழத்தை சிதம்பரம் கொண்டு வருவதற்கு தாங்கள் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எனவே தான் மரத்தை எரித்தேன் என்றான்.அதற்கு மன்னன் தகுந்த வசதி வேண்டும் என நீ இதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதை நீ செய்யாததால் உனது கண்களை கட்டி நாடு கடத்த உத்தரவிடுகிறேன் என்றான்.
காவலர்கள் சிறுவனை அழைத்துச் சென்ற போது மன்னனும் கூடச் சென்று தண்டனை நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்துகொண்டு திரும்பினான். அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விடப்பட்ட ஊர் திருத்தணிக்கும் திருவள்ளுருக்கும் இடையில் விடிமாகறல் என்று வழங்கப்படுகிறது. அரண்மனைக்கு வரும் வழியில் ஓரிடத்தில் பொன்னிற உடும்பு ஒன்று தென்பட்டது. அதை பிடிக்க காவலாளிகள் சென்ற போது அது ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. மன்னன் ஆட்கள் சிலரை அழைத்து புற்றைச் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டான். காவலாளிகள் அந்த புற்றை ஆயுதங்களால் அந்த புற்றை கலைத்த போது உடும்பின் வாலிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது அசரீரி தோன்றி சிறுவன் என்றும் பாராமல் நாடு கடத்தியதற்காக கண்டனக்குரல் எழுந்தது. மன்னன் மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்த மன்னனிடம் மீண்டும் அசரீரி தோன்றி சிவபெருமானே உடும்பாக வந்ததாகவும் அவ்விடத்தில் ஓர் சிவாலயம் கட்டி வழிபாடு செய்யும்படியும் ஆணையிட்டார். மன்னனும் அதன்படியே செய்தான். இன்றும் கூட உடும்பின் வால் அளவிலுள்ள லிங்கம் தான் மூலஸ்தானத்தில் உள்ளது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், விசயகண்ட கோபாலதேவர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளது. கல்வெட்டுக்களில் இத்தலம் சயங்கொண்ட சோழமண்டலத்துப் பொற்கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல் என்றும் கோயிலுக்கு நிலங்கள் விடப்பட்டச் செய்திகளும் குறிக்கப்பட்டுள்ளன. திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை போற்றிப்பாடிய பதிகத்தை உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 239 வது தேவாரத்தலம் திருகுரங்கனில் முட்டம். புராணபெயர் திருக்குரங்கணின் முட்டம். மூலவர் வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர். இறைவன் இத்தலத்தில் சிறிய லிங்க உருவில் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை மிகச் சிறியதாக உள்ளது. சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் இறையார் வளையம்மை. இவள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். வாலி, இந்திரன், எமன் ஆகியோர் சிவனை வணங்கும் முன்பு அம்பாளை வணங்கினார்கள். அவர்களுக்கு அருள் செய்யும்படி சிவனிடம் அம்பாள் பரிந்துரை செய்தாள். எனவே அம்பாளுக்கு இப்பெயர் வந்தது. தன்னை வணங்குபவர்களுக்கு வளைந்து கொடுத்துச் செல்பவள் என்ற பொருளில் இப்பெயரால் அழைக்கப்படுகிறாள். திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியிருக்கிறார். தலமரம் இலந்தை. தீர்த்தம் வாயசை தீர்த்தம், காக்கைமடு தீர்த்தம். இந்த தீர்த்தம் எமன் சிவபூஜை செய்வதற்காக காக்கை உருவில் இருந்தபோது தன் அலகினால் பூமியைக் குத்தி உண்டாக்கிய தீர்த்தம்.
இக்கோயில் பாலாற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. மதிற்சுவருடன் கூடிய ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்திருக்கிறது. வாயிலைக் கடந்தவுடன் பலிபீடமும், நந்தி மண்டபமும் இருக்கக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள்வாயிலைக் கடந்து சென்றால் நேரே மூலவர் வாலீஸ்வரர் சந்நிதி உள்ளது. இறைவன் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். உள்பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், காசிவிஸ்வநாதர், பைரவர், சூரியன், நவக்கிரகம், துர்க்கை, சப்தமாதர்கள், நால்வர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள விநாயகர் தாமரை மலர் பீடத்தின் மேல் இருக்கிறார். இந்த பீடத்திற்கு கீழே ஆவுடையாரும் இருக்கிறது. இந்த அமைப்பு விநாயகரை சக்தி தாங்கிக் கொண்டிருக்கும் வடிவம் ஆகும். இங்கு சாந்த முகத்துடன் இருக்கும் விஷ்ணு துர்க்கையின் வலது கையில் பிரயோகச் சக்கரம் இருப்பதுடன் இடக்கையில் சக்கர முத்திரையும் இருக்கிறது. இவள் காலுக்கு கீழே மகிஷாசுரன் இல்லை.
தனது பதினாறாவது வயதில் இறக்கும்படியான வரம் பெற்றிருந்த மார்க்கண்டேயர் சிவதல யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு பதினாறு வயதாகியபோது எமதர்மன் அவரைப் பிடிக்க வந்தான். அவனிடம் இருந்து தப்பிச் சென்ற மார்க்கண்டேயர் சிவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அப்போது எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது. தன் பணியை சரியாக செய்யாததால் சிவன் அவரது பதவியை பறித்தார். தன் பதவியை இழந்த எமதர்மன் சிவனை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் சிவன் பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தன் தரிசனம் கிடைக்கப்பெற்று இழந்த பதவி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகம் வந்த எமன் காகம் வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார். கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால் தன் உடல் முழுவதும் கண்களாக தெரியும்படி முனிவரிடம் சாபம் பெற்றான் இந்திரன். அவன் தன் தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான். சிவன் அவனிடம், தகுந்த காலத்தில் பூலோகத்தில் தான் சாபவிமோசனம் தருவதாகவும் அதுவரையில் பூமியில் சிவதலயாத்திரை மேற்கொள்ளும்படியும் கூறினார். அவரது சொல்கேட்ட இந்திரன் அணில் வடிவில் பூலோகம் வந்தான். இவ்விருவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது சிவபக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார். இதனைக்கண்ட எமன் இந்திரன் இருவரும் வாலியுடன் சேர்ந்து சிவனை வணங்கினர். சிவன் இம்மூவருக்கும் காட்சி தந்ததோடு எமன் இந்திரன் இருவருக்கும் சாபவிமோசனமும் கொடுத்தார். பின் அவர்களது வேண்டுதலுக்காக இவ்விடத்திலேயே சுயம்புவாக எழுந்தருளினார். தலமும் குரங்கு அணில் முட்டம் என்றானது. (முட்டம் என்றால் காகம் என்று பொருள்).
கோயில் முன்மண்டப சுவர்களில் இம்மூவரும் வழிபட்ட சிற்பங்கள் இருக்கிறது. சிவனை வழிபடும் முன்பு காக வடிவில் இருந்த எமதர்மன் தன் அலகால் நிலத்தில் கீறி தீர்த்தம் உண்டாக்கினார். பின் அதில் மூவரும் நீராடி சிவனை வணங்கினர். இந்த தீர்த்தம் பிறைச்சந்திர வடிவில் கோயிலின் மூன்று புறங்களிலும் சூழ்ந்திருக்க நடுவில் சிறிய பாறையின் மீது சிவன் வீற்றிருக்கிறார். கல்வெட்டில் இத்தலம் காலியூர்க் கோட்டத்து இருகழி நாட்டு மாமண்டூர்ப் பற்றத்துப் பல்லவபுரமான குரங்கணில்முட்டம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார் என்றும் கொய்யாமலர் ஈசுவரதேவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் சகம் 1451-ல் பூஜைக்காக கிருஷ்ணதேவராயர் பல்லவபுரம் கிராமத்தை இக்கோயிலுக்கு அளித்ததாக குறிப்புள்ளது. திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இத்தலத்தை குரங்கணின்முட்டம் என்றும் பறவாவகைவீடு (முக்தி கிடைக்கும் தலம்) என்றும் சொல்லி பதிகம் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.