ஹாசன அம்மாள்

பெங்களுர் அருகே ஹாசன் என்ற ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் ஒரே ஒரு நாள் முழுவதும் கோவில் திறக்கப்படும். அங்கே மூன்று சின்ன சின்னதாக கற்கள் இருக்கும். இந்த சுவாமியின் பெயர் ஹாசன அம்மாள். மூன்று சிறு சிறு கற்கள் தான் அந்த ஹாசன அம்மாள். மூன்று கற்கள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும். அந்த சந்தனத்தை முழுவதும் சுரண்டி விட்டு அந்த சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். சுவாமிக்கு அருகே இரண்டு பெரிய நெய் தீபங்கள் இருக்கும். கோவில் திறந்தவுடன் அந்த இரண்டு நெய் தீபத்திலும் இருக்கும் நெய்யை எடுத்து விட்டு புதிதாக நெய் ஊற்றப்படும். இதில் என்ன அதிசயம் என்றால் ஊற்றிய நெய் தீபம் அடுத்த ஆண்டு வரை அணையாமல் ஒரு வருடம் எரிந்து கொண்டே இருக்கும். நெய் எக்காரணம் கொண்டும் குறையவே குறையாது. சுவாமியின் மீது இருக்கும் சந்தனம் சுரண்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த சந்தனம் இயற்கையாகவே சுவாமி மீது வருகிறது. அபிஷேகம் முடிந்த பிறகு சுவாமிக்கு நைவேத்தியம் சுடாக கொதிக்க கொதிக்க நைவேத்தியம் செய்யப்படுகிறது. சுவாமிக்கு முன் ஒரு குடம் நிறைய தண்ணீர் வைக்கப்பட்டு அதுவும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஒரு ஆண்டு கழித்து மீண்டும் கோவில் திறக்கும் போது தண்ணீர் கொஞ்சம் கூட குறைந்திருக்காது, நெய் தீபத்தில் கொஞ்சம் கூட நெய் குறைந்திருக்காது, சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட அன்னம் கெடாமல் அதே சூட்டில் சுட சுட இருக்கும், சந்தனத்தை முழுவதும் எடுத்து விட்டு அபிஷேகம் செய்து முடித்து வெறும் கற்கலாக தான் நடை சாற்றப்படுகிறது. ஆனால் மீண்டும் ஒரு ஆண்டு கழித்து கோவில் திறக்கும் போது மூன்று சுவாமிகள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -9

மத்சிய நாட்டு மன்னன் நம்மோடு ஒரு தோழனாக மறுத்துவிட்டான் என்ற துரியோதனன் விராட நகரத்தை தெற்கு திசையிலிருந்து சுதர்மன் தாக்கட்டும். அந்நகரை வட திசையிலிருந்து நாம் தாக்குவோம். இரண்டு முனைகளையும் சமாளிக்க விராட மன்னனுக்கு வலிமை இல்லை. அவனை நாம் தோற்கடிப்போம். அவனுடைய பசுக்களை எல்லாம் சூரையாடுவோம். மறைந்திருக்கும் பாண்டவர்களையும் கண்டுபிடிப்போம். விராட நகரம் அவர்களுக்கு அளித்துள்ள பாதுகாப்பு வீண் போயிற்று என்று நிரூபிப்போம் என்று துரியோதனன் கூறினான். அனைவரும் இத்தீர்மானத்தை ஆமோதித்து அதிவிரைவில் விராட நகரை ஆக்கிரமிப்பு செய்ய சென்றார்கள்.

தென்திசை பண்ணையில் இருக்கும் பசுக்களை எல்லாம் திரிகர்த்த நாட்டு மன்னன் சுதர்மன் தன்வசப்படுத்தி ஓட்டிக்கொண்டு போகின்றான் என்று மாட்டுக்காரர்கள் ஓடிவந்து விராட மன்னனிடம் முறையிட்டார்கள். வல்லமைமிக்க கீச்சகனுடைய மரணம் தான் துணிச்சல் நிறைந்த இப்படையெடுப்புக்கு காரணம் என்று விராட மன்னனின் யூகித்தான். ஆயினும் தன் படையை அதிவிரைவில் திரட்டினான். அவனுடைய சகோதரர்களும் அவனோடு சேர்ந்து கொண்டனர்.

கனகன் தனக்கு போரில் ஓரளவு பயிற்சி இருக்கிறது என்றும் தானும் போருக்கு வருவதாகவும் மன்னனிடம் தெரிவித்தான். மேலும் உறுதியான உடல் படைத்திருக்கும் சமையல்காரன் வல்லாளன் குதிரைக்காரன் தாமக்ரந்தி மாட்டுக்காரன் தந்திரிபாலன் இப்போருக்கு நன்கு பயன்படுவார்கள் என்றும் மன்னரிடம் எடுத்துரைத்தான். அரண்மனையில் புதிதாக வேலைக்காரர்களாக எடுத்துக்கொள்ளப்பட்ட நால்வரிடத்திலும் ஓரளவு ஒரு போர் திறமை இருக்கிறது என்று விராட மன்னன் உணர்ந்தான். அவர்கள் போர் வீரர்களா என்று தெரியாது. ஆயினும் தற்போது இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் நால்வருக்கும் ரதங்களும் அவர்களுக்கேற்ற ஆயுதங்களும் வழங்கப்பட்டன. கனகனுக்கு இந்த நிகழ்வு பெருமகிழ்வை ஏற்படுத்தியது. ஏனென்றால் தனக்கும் தன் சகோதரர்களுக்கும் விராட நகரம் செய்த உதவிக்கு இப்போரில் அவனுக்கு வெற்றி தேடிக்கொடுத்து தக்க முறையில் விராட நகருக்கு நன்றி செலுத்தி விடலாம் என்று கனகன் மகிழ்ந்தான்.

திரிகார்த்த நாட்டு சேனையை விராட மன்னனை சேனாதிபதியாக கொண்டு அதிவிரைவில் சென்று தாக்கியது. போர் மிக மும்முரமாக நிகழ்ந்தது. இருபக்கத்திலும் உயிர்சேதம் இருந்தது. விராட மன்னனை கைதியாக பிடித்துக் கொள்வதில் சுதர்மன் ஏதோ ஒரு போக்கில் வெற்றி அடைந்தான். அதன் விளைவாக விராட சேனைக்குள் குழப்பம் உண்டாயிற்று. வீரர்கள் குழப்பமடைந்து அடைந்து அது நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால் புதிதாக சேனையில் சேர்ந்திருந்த நான்கு போர்வீரர்களும் இந்த நெருக்கடியை நன்கு சமாளித்தார்கள். பொருத்தமான இடங்களில் அவர்கள் நின்று கொண்டு வீரர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டினார்கள். அதன் விளைவாக கலைந்து போன வீரர்கள் மீண்டும் உறுதியுடன் ஒன்றுபட்டனர். நிகழ்ந்த போராட்டத்தில் திடீரென்று மாறுதல் ஒன்று நிகழ்வதாயிற்று.

ஆசை மீன்கள்

பருந்து ஒன்று வாயில் மீனைக் கொத்திக்கொண்டு பறந்தது. நூற்றுக்கணக்கான காகங்கள் கா கா என கரைந்தவாறு அதைச் சூழ்ந்து கொண்டு பருந்தை அமளி துமளி செய்தன. பருந்து எங்கு பறந்தாலும் காகங்களும் சுற்றிச் சுற்றி வந்தன. ஓர் கட்டத்தில் பருந்து தன் வாயில் இருந்த மீனை கீழே விட்டது. அவ்வளவு தான் காகங்கள் மீன் விழுந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து பருந்தை விட்டுவிட்டன. இதுவே ஆன்மீகம்

ஆசை மீன்கள் எதுவரை நம்மிடம் இருக்குமோ அதுவரை உலக விகாரங்களுடன் கவலை துன்பம் அமைதியின்மை ஆகியவையும் கூடவே நம்முடன் வரும். ஆசை மீன்களை விட்டுவிட்டால் அமைதி தானாக வரும்.

OLYMPUS DIGITAL CAMERA

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -8

பாண்டவர்களை பற்றி பேச்சு ஆரம்பமானதும் கர்ணனுக்கு இதைக் குறித்து பரபரப்பு மிக உண்டாயிற்று ஏனென்றால் பாண்டவர்கள் மறைந்து இருக்கும் காலம் பெரிதும் கடந்து போயிற்று. பாண்டவர்கள் மறைந்து வாழும் காலம் ஓர் வருடத்தில் இன்னும் சில நாட்களே உள்ளது. திறமை வாய்ந்த வேறு சில ஒற்றர்களை உடனடியாக அனுப்பி தீவிரமாக அவர்களைத் தேடிப் பார்க்க வேண்டும் என்று கர்ணன் தெரிவித்தான். பாண்டவர்கள் மறைந்து போயிருக்க மாட்டார்கள் என்றும் அவர்களே கண்டுபிடிப்பது சாத்தியமல்ல என்றும் துரோணாச்சாரியார் தனது கருத்தை தெரிவித்தார்.

துரோணாச்சாரியார் கருத்தை பீஷ்மரும் ஆமோதித்து கிருஷ்ணனுடைய கருணைக்கு பாண்டவர்கள் பாத்திரமாய் இருக்கிறார்கள். பாண்டவர்கள் தர்மத்தை விட்டு பிசகியது கிடையாது. பாண்டவர்கள் தர்மத்தை கடைபிடிப்பதால் அவர்கள் எங்கு வசித்து வருகின்றார்களோ அங்கு சௌபாக்கியங்களும் நிறைந்திருக்கும். அவர்கள் வசித்து வருவதை முன்னிட்டு அங்கு மழை ஒழுங்காக பெய்யும். அவர்கள் வசித்து வரும் இடத்தில் மக்கள் சண்டை சச்சரவு ஏதும் செய்ய மாட்டார்கள் என்று பீஷ்மர் தெரிவித்தார். மேலும் பாண்டவர்களுக்குரிய ராஜ்யத்தை துரியோதனன் தனக்கு சொந்தமாக்கி நன்கு அனுபவித்தாகி விட்டது. ராஜ ரீதியான முறையில் அவர்களிடம் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குரிய நாட்டை அவர்களிடமே ஒப்படைப்பது சரியானதாகும். அப்படி செய்வது துரியோதனுடைய கண்ணியத்திற்கு பொருத்தமானதாக இருக்கும் என்று கூறினார்.

ஒற்றர்களின் புதியதொரு படை நாடு முழுவதும் சுற்றிப்பார்த்து விட்டு விராட நகரை பற்றிய செய்தி ஒன்றை அஸ்தினாபுரத்தில் கொண்டு வந்தார்கள் பெண்பால் ஒருத்தியிடம் முறை தவறி நடந்து கொண்டதற்காக வலிமை வாய்ந்த கீச்சகன் கந்தர்வன் ஒருவனால் கொல்லப்பட்டான் என்பது அந்த செய்தி. அந்த செய்தியைப்பற்றி துரோயோதனன் எண்ணிப்பார்த்தான். கந்தர்வன் என்று சொல்லப்படுவான். நிச்சயம் பீமனாக இருக்கவேண்டும். அந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட பெண் துரௌபதியாக இருக்க வேண்டும். ஆகவே பாண்டவர்கள் மாறுவேடம் பூண்டு விராட நகரில் இருக்கின்றார்கள். அந்த நகரை முற்றுகையிட்டு போர் புரிய வேண்டும். விராட நகரம் தங்களை பாதுகாப்பாக வைத்ததற்கு கைமாறாக பாண்டவர்களும் போருக்கு கிளம்புவார்கள். போருக்கு வராமல் நகரில் மறைந்திருந்தாலும் ஊர் முழுவதும் அலசி ஆராய்ந்து பார்த்து அவர்களை கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு உடன்படிக்கையின்படி பாண்டவர்கள் மறுபடியும் பன்னிரண்டு வருடகாலம் வனவாசம் செய்ய வேண்டும் என்று எண்ணி விராட நகரை தாக்க முடிவு செய்தான்.

விராட நகரம் மீது எவ்வாறு தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டது. விராட நாட்டு அருகில் உள்ள திரிகார்த்த நாட்டு வேந்தனாகிய சுதர்மன் விராட நாட்டை தென்புறத்தில் இருந்து தாக்க வேண்டும். இந்த ஆலோசனைக்கு சுதர்மன் மத்திய நாட்டு மன்னன் என்னுடைய விரோதி எனக்கு ஓயாது உபத்திரவம் கொடுத்து வந்த கீச்சகன் இறந்துவிட்டான். ஆகையால் இப்போது விராடநகரம் வலிவற்று இருக்கிறது. விராட நாட்டை தாக்கி அந்நாட்டுக்குறிய பசுக்களை நான் கைப்பற்றிக்கொள்கின்றேன் என்றான்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 229 திருப்பாதிரிபுலியூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 229 வது தேவாரத்தலம் திருப்பாதிரிபுலியூர். புராணபெயர் கடைஞாழல், கூடலூர் புதுநகரம். மூலவர் பாடலீசுவரர், கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன், கடைஞாழலுடையபெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன், கறையேற்றும்பிரான, பாடலேஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவநாயகி, பிரஹந்நாயகி. தலமரம் பாதிரிமரம். தீர்த்தம் சிவகரை, பிரம்மதீர்த்தம் (கடல்), சிவகரதீர்த்தம், (திருக்குளம்) பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணையாறு. இராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகரைதீர்த்தம் படித்துறைகளுடன் உள்ளது. முன் மண்டபமும் அதையடுத்து 5 நிலை இராஜகோபுரமும் உள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாயிலைக் கடந்து உட்சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக்கவசமிட்ட கொடிமரம், நந்தியை தரிசிக்கலாம். உள்சுற்றில் சந்திரனும் அதையடுத்து திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தியும் அடுத்து மூலமூர்த்தமும் தனித்தனி சந்நிதிகளாக உள்ளன. அமர்ந்த கோலத்துடன் திருநாவுக்கரசர் கைகூப்பி உழவாரத்துடன் காட்சி தருகின்றார். திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும். உட்பிரகாரம் சுற்றி வரும்போது 63 மூவர் சந்நிதியை அடுத்து தலவிநாயகர் கன்னி விநாயகர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கன்னி விநாயகர் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவத் திருமேனிகளின் சந்நிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூசித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேசர் சந்நிதி, வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. அருணகிரிநாதர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு பாடல் பாடியுள்ளார். தலமரமான ஆதிபாதிரி மரம் கவசமிட்டுக் காக்கப்பட்டு வருகின்றது. இறைவி அரூபமாக (உருவமில்லாமல்) இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம். திருநாவுக்கரசர் எனும் அப்பரடிகளை மகேந்திரவர்மன் (கி.பி 600 -630) கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பரடிகள் கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே எனப் பாடித்துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயமாக பார்த்து அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள். அந்நிலையில் அப்பரடிகள் திருப்பாதிரிப்புலியூருக்கு எழுந்தருளி பாடலநாதனாம் இறைவனை ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் என்று பதிகம் பாடி வழிபட்டார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலமே திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் கரையேறவிட்ட குப்பம் என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது.

சிவன் சித்தராக இருந்து விளையாடி கை வைத்த இடம் இந்த சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்துள்ளது. வாஸ்துபடி ஈசாணி மூலையில் இந்த தீர்த்தம் இருக்கின்றது. மத்தியந்தன முனிவர் மகன் பூசித்து வழிபட்டபோது பாதிரி மரங்களின் மீது மேலே ஏறுவதற்கு வசதியாக இருக்க தனக்குப் புலிக்காலும், கையும் வேண்டிப் பெற்றுப் புலிக்கால் முனிவர் ஆன தலம். புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது. மாணிக்கவாசகர் திருப்பாதிரிபுலியூர் பெருமானை தரிசிக்கச் சென்றார். அப்போது கெடிலநதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இதனால் அங்கேயே மூன்று நாட்கள் காத்திருந்தார். வெள்ளம் வடியவில்லை. தன் நிலையைக் கூறி பெருமானை வழிபட சித்தராகத் தோன்றிய சிவன் மாணிக்கவாசகரை நீர் மேல் நடந்துவருமாறு பணித்தார். ஆனால் பயத்தால் மாணிக்கவாசகர் அப்படியே நின்றார். உடனே சிவன் மாணிக்கவாசகரை கண்களை மூடும்படி கூறிவிட்டு பிரம்பு ஒன்றை ஏவி அந்த நதியை திசை திருப்பி ஓடச் செய்தார். கண் விழித்த மாணிக்கவாசகர் இறைவனின் கருணையை நினைத்த படியே திருத்தலம் வந்து வழிபட்டார்.

பதினாறு வயதினராய் சித்தர் வடிவில் வந்த ஈசன் கை வைத்ததால் சிவகரை தீர்த்தம் உருவானது. சித்தர் வடிவில் வந்த சிவனின் திருவடிகளில் வேதங்களும் பாதுகைகளாக ஆகமங்களும் இருந்தன. உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன் திருவிளையாடல் நிகழ்ந்த திருவுளங்கொண்டு இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பிராட்டி தன் திருக்கரங்களால் புதைத்தாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்து விட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும் இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி பாதங்கள் நிலத்தில் பதியாமல் அரூபமாக (உருவமில்லாமல்) தவமிருந்து இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம். துர்க்கை கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது. சந்நிதியில் உருவம் ஏதும் இருக்காது. பீடம் மட்டுமே உள்ளது. இறைவன் சித்தர் வடிவம் பூண்டு மக்களின் துன்பங்களை நீக்கிய தலம். அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர், உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம். மங்கண முனிவர் பூசித்து தான் பெற்ற முயல் வடிவ சாபம் நீங்கப்பெற்றத் தலம்.

திருநாவுக்கரசை முதன்முதலில் அப்பர் என்று திருஞானசம்பந்தர் அழைத்தது இத்தலத்தில்தான். காசியில் உள்ள இறைவனை 16 முறை வணங்குவதும் இத்தலத்தில் ஒரு முறை வணங்குவதும் சமமானது என்றும் திருவண்ணாமலையில் 8 முறை வணங்குவதும் சிதம்பரத்தில் 3 முறை வணங்குவதும் இங்கு ஒருமுறை வணங்குவதற்குச் சமமானது என்றும் தல வரலாறு கூறிப்பிடுகின்றது. எல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை அம்பாளின் சந்நிதியின் அருகில் தான் இருக்கும். இங்கு இறைவனின் சன்னதியில் பள்ளியறை உள்ளது. திருப்பாதிரிப்புலியூரின் பெருமைகளை தேவி மூலமாக உலகம் அறிய வேண்டும் என்பதற்காக இறைவன் தூர்ச்சடி, பிரமசன்மன் என்ற சிவகணத்தவரை அனுப்பி வைத்தார். அவர்கள் மனித உருவில் குருவாகவும் சீடனாகவும் வந்து திருப்பாதிரிப்புலியூர் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்பு வாய்ந்த சிவதலம் என்பதை மக்களிடையே எடுத்துரைத்தனர். சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும், தொல்காப்பியர் இயற்றிய கலம்பகமும் இருக்கின்றன. சோழர் காலக் கல்வெட்டுகள் 19ம் வேறு இரு கல்வெட்டுக்களும் உள்ளது. இத்தலத்தில், திருக்கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவமடம் உள்ளது. இந்த கோவிலின் வரலாறு சோழர்களின் காலத்தைச் சேர்ந்தது. பிற்காலத்தில் இந்த கோவில் பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டிய வம்சத்தினரால் புணரமைக்கப்பட்டது. இக்கோயில் சுற்றுச்சுவர் கல்வெட்டுகள் மூலம் ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கோயில் என்பது தெரியவருகிறது. இந்த கோவிலின் நான்கு சுவர்களிலும் திருநாவுக்கரசரின் கருத்துக்கள் உள்ளது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், மாணிக்கவாசகர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 228 திருமாணிகுழி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 228 வது தேவாரத்தலம் திருமாணிகுழி. மூலவர் வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர், உதவிநாயகர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் அம்புஜாட்சி, மாணிக்கவல்லி, உதவிநாயகி. தலமரம் கொன்றை. தீர்த்தம் சுவேத, கெடில நதி. மகாலட்சுமி தவம் செய்த நதியாக கெடிலமும், சரஸ்வதிதேவி சுவேத நதியின் வடிவில் உள்ளனர். இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப் பட்டு அவரே பூஜை செய்ததாக தலவரலாறு உள்ளது. கோயில் கெடில நதியின் தென் கரையில் ஓர் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளன. கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்திற்கு 5 நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். தெற்குப் வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் சந்நிதியும் அமைந்துள்ளன. இத்தலத்தில் ஆறுமுகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து தனது தேவியர் இருவரும் உடன் நிற்க கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மயில் வடக்கு நோக்கி உள்ளது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். உள் பிரகாரத்தில் விநாயகர், 63 மூவர், சப்தமாதாக்கள், யுகலிங்கங்கள், பஜலட்சுமி சந்நிதிகள் அமைந்துள்ளன.

இந்த ஆலயத்தில் மூலவரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரை போடப்பட்டிருக்கும். தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும் அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால் இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது. கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது. இறைவனும் இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக கருதப்படுவதால் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது. இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால் இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது. மேலும் மகாவிஷ்ணு மாணியாக அதாவது பிரம்மசாரியாக வழிபடுவதற்கு இடையூறு இல்லாமல் காவலாக பீமருத்திரர் உள்ளார். தீபாராதனையின் போது மட்டும் 3 வினாடிகள் திரையை விலக்குவார்கள் சற்று நேரம் மட்டும் சிறிய ஆவுடையார் மீதுள்ள சிறிய சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கலாம் இறைவனை மறைத்திருக்கும் திரைச்சீலையில் 11 ருத்திரர்களில் ஒருவரான பீமருத்திரர் உருவம் சித்திரமாய் தீட்டப்பட்டுள்ளது. ஆலய வழிபாடுகளில் அர்ச்சனை பூஜைகள் அனைத்தும் முதலில் பீமருத்திரருக்குத் தான் நடைபெறும். பின்னர் அவர் அனுமதி பெற்று மூலவருக்கு தீபாராதனை நடைபெறும்.

இத்தலத்திற்கு வாமனபுரி, இந்திரலோகம், பீமசங்கரக்ஷேத்திரம் என்பன வேறு பெயர்களும் உள்ளது. சிவனின் எதிரில் உள்ள மண்டபத்தில் நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக அமைந்துள்ளன. திரைக்கு பின் சுவாமியும் அம்பாளும் இருப்பதால் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டி நந்திதேவர் வழக்கமான தலை சாய்த்த நிலையில் இல்லாமல் நேர் திசையில் உள்ளார். மதுரை, காஞ்சிபுரம், காசி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்று இங்கு அம்பாளின் அம்புஜாட்சியில் ஆட்சி நடக்கிறது. அம்பாளிடம் இரண்டு கைகளிலும் ஒன்றில் தாமரை மற்றொன்றில் நீலோத்பவம் இருக்கிறது. பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக்கும் அதிதேவிக்கும் 12வது குழந்தையாக வாமன பிரம்மசாரியாக மகாவிஷ்ணு அவதாரம் செய்தார்.

மகாபலியின் தர்மசிந்தனை குறித்த கர்வத்தை அடக்க மூன்றடி மண் கேட்டார். ஒரு அடியால் பூமியையும், ஒரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடி எங்கே என கேட்டார். அதற்கு மகாபலி இந்த உலகை ஆளும் என்னையே அளந்து கொள்ளுங்கள் என விஷ்ணுவின் திருவடி முன் குனிந்தார். பக்திக்கு மெச்சிய திருமால் மகாபலியை சிரஞ்சீவிகளுள் ஒருவனாக்கினார். இப்படி மகாபலியை தர்மத்திற்காக விஷ்ணு அழித்திருந்தாலும் அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது. இந்த பழியைப்போக்க திருமால் இங்கு வந்து சிவபெருமானை ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோயில் திருமாணிக்குழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி). வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட அவன் இறைவனை தியானித்து உதவி கேட்டு முறையிட இறைவனும் அவ்வணிகனை திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார். இதனால் இத்தலம் உதவி என்றும் இறைவன் உதவிநாயகர் என்றும் இறைவி உதவி நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இதற்கு மேலும் சான்றாகக் கல்வெட்டிலும் இத்தலம் உதவி என்றே குறிக்கப் பெறுகின்றது. பெரிய புராணத்தில் சுந்தரர் கெடில நதியில் நீராடித் திருமாணிகுழியைத் தரிசித்ததாக குறிப்பிருந்தும் அப்பெருமான் பாடிய பதிகம் எதுவும் கிடைக்கவில்லை. திருஞானசம்பந்தர் இத்தல இறைவனை பாடும் போது உயிரனை அனைத்தையும் உய்விக்கும் உதவிநாயகன் என்றும் உதவிமாணிகுழி என்றும் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். எனவே இறைவனுக்கு உதவிநாயகன் அம்மனுக்கு உதவி நாயகி என்ற பெயரும் உண்டு. சோழ பாண்டிய விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் உதவிநாயகர், உதவி மாணிகுழி மகாதேவர் என்று குறிக்கப்படுகிறது. சோழர்காலக் கட்டமைப்புடையது இக்கோயில். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 227 திருவாண்டார் கோவில்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 227 வது தேவாரத்தலம் திருவாண்டார் கோவில். புராணபெயர் திருத்துறையூர். மூலவர் வடுகீஸ்வரர், பஞ்சநாதீஸ்வரர், வடுகூர்நாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக இடது பக்கம் சற்றே சாய்ந்தவாறு தலையில் தலைப்பாகையுடன் அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் மீது வடுக்கள் உள்ளது. அம்பாள் திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கன்னி அம்மை. அம்பாள் 4 கரங்களுடன் எழிலாகக் காட்சி தருகிறாள். தலமரம் வன்னி. தீர்த்தம் வாமதேவ தீர்த்தம். இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. அழகிய சுற்று மதில்களுடன் கிழக்கு நோக்கிய ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. நுழைவாயிலுக்கு வெளியே நந்தி ஒன்று காணப்படுகிறது. முகப்பு வாயிலைக் கடந்ததும் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி மற்றும் 18 கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தைக் கடந்தவுடன் அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உருவம் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. வெளிப் பிரகாரத்தில் தென் திசையில் தனி விமானத்துடன் உள்ள நால்வர் சந்நிதி, கன்னி மூலையில் விநாயகர் சந்நிதி, நிருதி மூலையில் வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகன் சந்நிதி உள்ளது.

இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும் 12 திருக்கரங்களுடனும் மயில் மீது அமர்ந்த கோலத்தில் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். தெற்கு நோக்கிய பிச்சாடனர், தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கிய லிங்கோத்பவர், வடக்கு நோக்கிய துர்க்கை, அர்த்தநாரீசுவரர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன. இக்கோவிலின் கருவறை விமானம் தஞ்சை பெரிய கோவில் பாணியில் அமைந்துள்ளது. பிரம்மா, சிவனை வழிபட்ட சிற்பம் தட்சிணாமூர்த்திக்கு அருகில் இருக்கிறது. பிரம்மாவுக்கு அருகில் ஆஞ்சநேயர் உள்ளார். கோஷ்டத்தில் உள்ள துர்க்கை 8 கைகளுடன் போர்க்கோலத்தில் இருக்கிறாள். முண்டாசுரன் என்பவன் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து அவரிடமிருந்து தேவாசுரர்களாலும் பிறரால் சாகாமலும் இருக்க வரங்கள் பெற்றான். வரங்கள் பெற்ற முண்டாசுரன் தேவர்கள் பிரம்மா ஆகியோருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான். பிரம்மா, தேவர்கள் சிவனிடம் சரணடைந்தனர். சிவனின் ஆணைப்படி வடுகபைரவர் தோன்றி முண்டாசுரனை வதம் செய்கிறார். ஆகையால் இத்தலத்தில் சிவபெருமான் வடுகநாதர் என்றும் வடுகபைரவர் அசுரனைக் கொன்ற கொலைப்பழி தீர தவம் செய்து பேறு பெற்றதால் இத்தலம் வடுகூர் என்றும் பெயர் பெற்றது.

ஆண்டார் கோயில் என்பது கோயிலுக்குப் பெயர். கோயிலின் பெயரே பிற்காலத்தில் ஊருக்குப் பெயராயிற்று. ஆண்டார் கோயில் என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில் என்றாயிற்று. படைப்புத்தொழிலுக்கு அதிபதியான பிரம்மா சிவனை போலவே ஐந்து தலைகளை கொண்டவராக இருந்தார். இதனால் அவருக்கு மனதில் அகம்பாவம் உண்டானது. அவரது கர்வத்தை அழிக்க எண்ணினார் சிவன். ஒருசமயம் பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை சிவன் என நினைத்து மரியாதைகளைச் செய்தார். பிரம்மா மறுக்காமல் இருந்து விட்டார். இதைக்கண்டு கோபம் அடைந்த சிவன் பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கொய்து விட்டார். ஆணவம் அழியப்பெற்ற பிரம்மா சிவனை வணங்கி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். சிவன் அவருக்கு மன்னித்து அருள் செய்தார். இந்த வரலாறு இந்த தலத்தில் நிகழ்ந்ததாக தலபுராணத்தில் மூலமாக அறிந்து கொள்ளலாம். அர்த்த மண்டபத்தையும் கருவறையையும் உள்ளடக்கிய சுவர்களின் வெளிப்பிரகாரத்தில் கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இத்தலம் முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. மேலும் முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் கலத்து கல்வெட்டுகளும் கணப்படுகின்றன. திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 226 திருத்தளூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 226 வது தேவாரத்தலம் திருத்தளூர். புராணபெயர் திருத்துறையூர். மூலவர் சிஷ்டகுருநாதேஸ்வரர், சிஷ்டகுருநாதர், பசுபதீஸ்வரர், தவநெறியப்பர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவன் பெரிய லிங்க வடிவில் இருக்கிறார். ஆவுடை வலது பக்கம் இருக்கிறது. சித்திரை மாதம் முதல் வாரத்தில் மாலை வேளையில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. உற்சவர் சோமஸ்கந்தர். அம்பாள் பூங்கோதை நாயகி, சிவலோக நாயகி. தலமரம் கொன்றை. தீர்த்தம் சூர்யபுஷ்கரிணி. இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. வாயிலைக் கடந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். உட்பிரகாரத்தில் நர்த்தன கணபதி, பாலசுப்பிரமணியர், நடராஜர், நால்வர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டேச்வரர், வரதராஜப் பெருமாள் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. இதில் தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் உமா மகேஸ்வரர் சுந்தரருக்குத் தவநெறி தந்த காட்சி சாட்சி விநாயகருடன் கல்லில் சிற்பமாக உள்ளது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் தலமரம் கொன்றை உள்ளது. பக்கத்தில் உள்ளது. அகத்தியர் வழிபட்ட லிங்கம் உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சூரியபுஷ்கரணி கோவிலுக்கு வெளியே உள்ளது.

இத்தல முருகப் பெருமான் இரு தேவியருடன் கிழக்கு நோக்கியவாறு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்பகழில் பாடியுள்ளார். கயிலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்தபோது அகத்தியர் தென்திசைக்கு வந்தார். வழியில் அவர் பல தலங்களில் லிங்கம் பிரதிஷ்டை செய்து சிவன் திருமணத்தை கண்டார். அவர் இத்தலம் வந்தபோது சிவனின் திருமணத்தை காண விரும்பி லிங்கம் அம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இருவரும் அவருக்கு மணக்கோலத்தில் காட்சி தந்தனர். இத்தலத்தில் அகத்தியர் சிவனை மேற்கு நோக்கியும் அம்பாளை வடக்கு நோக்கியும் வைத்து வழிபட்டார். அவரது திருமணம் வட திசையில் உள்ள கயிலாய மலையில் நடந்ததால் இவ்வாறு செய்தார். இதன் அடிப்படையில் அம்பாள் வடக்கு பார்த்து தனிச்சன்னதியில் இருக்கிறாள்.

திருவெண்ணெய் நல்லூரில் சிவனை பித்தா என்று பாடி வணங்கிய சுந்தரர் திருவெண்ணெய் நல்லூரில் இருந்து இத்தலத்திற்கு வந்தார். அப்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடினார். அப்போது வயதான தம்பதியர் உருவில் வந்த சிவபெருமானும் பார்வதியும் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்தனர். கரையில் இறங்கிய பிறகு இறைவன் சுந்தரர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டார். சுந்தரர் சுற்றிலும் தேடிப்பார்த்தார். ஆனாலும் வயதான் தம்பதியைக் காணவில்லை. அப்போது நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார் என்று அசரீரி வாக்கு கேட்க சுந்தரர் மேலே பார்த்தபோது சிவன் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார். சுந்தரர் இறைவனை வணங்கி தனக்கு குருவாக இருந்து உபதேசம் செய்யும்படி கூறினார். சிவபெருமானும் சுந்தரருக்கு குருவாக இருந்து தவநெறி உபதேசம் செய்தார். எனவே தான் இறைவனுக்கு தவநெறி ஆளுடையார், சிஷ்டகுருநாதேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. இந்த ஊருக்கு அருகில் கீழப்பாக்கம் என்றொரு இடத்தில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இந்த இடத்தில் தான் இறைவன் முதியவர் உருவில் சுந்தரருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்ததாகவும் பின்பு ரிஷபாரூடராக ஆலய விமானத்தில் காட்சி கொடுத்ததாகவும் தல புராணம் தெரிவிக்கிறது. சைவ சமயத்தின் சந்தானக் குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியார் பிறந்து வாழ்ந்தது திருத்துறையூர். இவர் முக்தி அடைந்தத் திருத்தலமும் இதுவே. இவரது ஜீவசமாதியும் திருத்துறையூரிலேயே அமைந்துள்ளது. இத்தல இறைவனை சூரியன், பிரம்மா, விஷ்ணு, இராமர், சீதா, பீமன், அகத்தியர் நாரதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 225 திருவெண்ணைநல்லூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 225 வது தேவாரத்தலம் திருவெண்ணைநல்லூர். புராணபெயர் திருவருள்துறை. மூலவர் கிருபாபுரீஸ்வரர், தடுத்து ஆட்கொண்ட நாதர், அருட்கொண்டநாதர் வேணுபுரீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை. மகிசனை வதம் செய்ததால் ஏற்பட்ட ஆக்ரோசம் நீங்க அம்பாள் இங்குள்ள நதியில் குளித்து மங்களம் பெற்ற தலம் என்பதால் மங்களாம்பிகை சந்நதியில் நந்திக்கு பதில் சிம்மம் இருக்கும். சங்க நிதி, பதுமநிதி, ஸ்ரீ சக்கரத்துடன் சிம்ம வாகனத்துடன் அம்பாள் இருக்கின்றாள் தலமரம் மூங்கில்மரம். தீர்த்தம் தண்டுத்தீர்த்தம்,(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம். கிழவராக வந்து சுந்தரரோடு வழக்கு செய்த சிவபெருமான் லிங்கமாக ஐக்கியமாகும் முன் கருவறைக்கு முன்பாக தான் கழற்றி வைத்த காலணி பாதுகைகள் இன்றும் இத்தலத்தில் உள்ளது.

10 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இராஜகோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் சுந்தரர் வழக்கு நடந்த வழக்கு தீர்த்த மண்டபம் உள்ளது. அடுத்து செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம் ஆகியவை உள்ளன. நேரே உயரத்தில் மேலே சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் கையில் ஓலையுடன் காட்சியளிக்கிறார். கோவிலின் தென்புறம் தண்டதீர்த்தம் உள்ளது. உட்பிராபாரத்தில் பொள்ளாப் பிள்ளையார், முருகன், சுந்தரர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் உள்ளன. உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. இறைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றது.

அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில் மீது நடனம் புரிந்ததைக் கண் குளிரக்கண்டு திருப்புகழ் ஒன்று பாடியுள்ளார். இத்தலத்தில் அருள்பாலிக்கும் பொல்லாப்பிள்ளையார் உளியால் செதுக்கப்படாத விநாயகர். சுயம்புவாக தானே தோன்றியவர். இவர் மெய்கண்டதேவருக்கு 5 வயதில் ஞான உபதேசம் செய்வர். தேவேந்திரன் பூஜித்த சுந்தர லிங்கம் இங்கு உள்ளது. மகாவிஷ்ணு பூஜித்த சங்கரலிங்கம் இங்கு உள்ளது. பாண்டவரில் அர்ச்சுணன் தன்மூத்தோனாகிய தருமனும் பாஞ்சாலியும் தனித்திருந்த போது சென்றதால் ஏற்பட்ட பாவத்தை இங்குள்ள இறைவனை வழிபட்டப் போக்கிக் கொண்டான். மேலும் இறைவனை வேண்டி மகப்பேறு அடையவும் வரத்தை பெற்றான். அர்ச்சுனனுக்கு மகப்பேறு அளித்த விஜய லிங்கம் உள்ளது. புத்தூர் சடங்கவியாருடைய மகள் சுந்தரர் திருமண நாளன்று இறைவன் முன் கயிலாயத்தில் அருளியபடி வயது முதிர்ந்த அந்தணராய்த் தோன்றித் தடுத்தாட்கொண்டருளிய இடம். அப்புத்தூர் இப்பொழுது மணம் தவிர்ந்தபுத்தூர் என்று வழங்கப்படுகின்றது.

சிவபெருமான் நீ எனக்கு அடிமை என்று கூறி அதற்கான ஆதாரத்தையும் அங்கு கூடியிருந்தவர்களிடம் காட்ட அதிலுள்ள கையெழுத்து உண்மையானது தான் என்பதை அறிந்த பெரியோர்கள் சுந்தரரை கிழவருக்கு அடிமையாக போகச் சொன்னார்கள். கோபம் கொண்ட சுந்தரர் கிழவரை பித்தன் கிறுக்கன் என்றெல்லாம் திட்டினார். அதையெல்லாம் பொருட்படுத்தாத கிழவர் சுந்தரரை அழைத்துக் கொண்டு இந்த திருவெண்ணெய்நல்லூர் கோயிலுக்குள் சென்று மறைந்தார். வந்தது இறைவன் தான் என்பதை அறிந்த சுந்தரர் சிவபெருமானை வணங்கி நிற்க என்னப் பற்றி பாடு என்று இறைவன் கேட்க எப்படிப் பாடுவது என்று சுந்தரர் கேட்க என்னை பித்தா என்று திட்டினாயே அதையே பாடு என்று அடியெடுத்துக் கொடுத்தார். அப்போது தான் சுந்தரர் பித்தா பிறைசூடி பெருமானே என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடினார். அதிலிருந்து சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலம் தோறும் சென்று திருப்பதிகங்கள் பாடி அற்புதங்கள் நிகழ்த்தி ஆண்டவனின் அறநெறியை பரவச் செய்தார். கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புறம் வடக்கு பக்கத்தில் சுந்தரருக்கும் கிழவனாக வந்த சிவபெருமானுக்கும் பெரியோர்களால் பஞ்சாயத்து நடந்த மண்டபம் இன்றும் உள்ளது. இறைவன் நின்று சாய்ந்திருந்த தூணில் இன்றும் வெதுவெதுப்பாக உஷ்ணம் உள்ளது. மேலும் இறைவன் அடி வைத்த இம்மன்றத்திலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்துச் சென்று பூஜையில் வைத்து பூஜிப்பவர்களும் உண்டு.

விதகோத்திரர் என்னும் அந்தணர் கருவுற்றப் பசுவை வேள்வி செய்தார் அதனால் இத்தலத்திற்கு வந்து அருட்டுறை தீர்த்தத்தில் நீராடி பாடிப்பணிந்து தனது பாவத்தை போக்கிக் கொண்டார். சடையப்ப வள்ளல் இவ்வூரில் வாழ்ந்திருக்கிறார். தாருகாவனத்து முனிவர்கள் அகந்தையால் வேள்வி இயற்றி சிவபெருமானைக் கொல்ல ஏவினர். அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை எல்லாவற்றையும் சிவன் தன்னிடத்தே பெற்றுக் வைத்துக் கொண்டார். முனிவர்கள் தங்கள் அகந்தை அழிந்து இத்தலத்தில் தவம் புரிந்தார்கள். இறைவன் அவர்களது தவறை பொறுத்து அருள் புரிந்தார். எனவே இவ்வாலயம் அருள் துறை என பெயர் பெற்றது. முனிவர்களின் தவறை எண்ணி இங்கு இறைவன் கிருபை புரிந்ததால் கிருபாபுரீசுவரர் எனப்பெயர் பெற்றார். வேதங்கள் இறைவன் ஆணைப்படி இங்கு தவம் புரிய அவற்றின் நடுவில் இறைவன் தீயுருவாகத் தோன்றினான் வேதங்கள் கேட்டுக் கொண்டபடி இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளினான். முதலாம் ராஜராஜ உடையார் கல்வெட்டில் திருவெண்ணெய்நல்லூர்த் திருவருட்டுறை ஆள்வார் என்றும் இரண்டாம் ராஜாதிராஜ உடையார் கல்வெட்டுக்களில் திருவெண்ணெய் நல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர் என்றும் தடுத்தாட்கொண்ட தேவர் என்றும் உள்ளது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆளுடைய நம்பி என்னும் பெயர் உடையார் இரண்டாங் குலோத்துங்க சோழதேவரின் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1148 மே மாதம் ஒன்பதாம் தேதி ஆகும். ஒரு தெருவுக்கு ஆலால சுந்தரப்பெருந்தெரு என்றும் பெயர் கல்வெட்டில் குறிப்படப்பட்டுள்ளது. சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 224 டி.இடையாறு

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 224 டி.இடையாறு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 224 வது தேவாரத்தலம் டி.இடையாறு. புராணபெயர் திருஇடையாறு, திருவிடையாறு. மூலவர் இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர், மருந்தீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர். இங்கு இறைவன் மேற்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது படுகிறது. அம்பாள் ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி. தலமரம் மருதமரம். தீர்த்தம் சிற்றிடை தீர்த்தம். இது அம்மன் சன்னதியில் கிணறாக உள்ளது. மூன்று நிலைகளை உடைய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே 2 பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். கொடிமரம் இல்லை. ஆலயத்தின் உள்ளே இருக்கும் மண்டபத்தில் வள்ளி தெய்வயானை சமேத சண்முக சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள சண்முக சுப்பிரமணியர் பெயரை கலியுகராமப் பிள்ளையார் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்சுற்றில் பெரிய மருதமரம் உள்ளது. நவக்கிரக சந்நிதி, அகத்தீஸ்வர லிங்கம், சண்டேஸ்வரர், சப்தமாதாக்கள், பாலாம்ருத விநாயகர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் உள்ளனர். இத்தலத்தில் சிவ பார்வதி சன்னதிக்கு நடுவே பாலகணபதி குழந்தை வடிவில் மேலிரு கரங்களில் குழந்தைகளுக்கு பிரியமான லட்டு மற்றும் பலாச்சுளையுடனும், கீழிரு கரத்தில் அபய முத்திரையும், கரும்பும் வைத்து அருள்பாலிக்கிறார்.

அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது. மறைஞானசம்பந்தரின் அவதாரத்தலம் இது. இடையாறில் பிறந்த இவர் பெண்ணாடத்தில் வாழ்ந்தார். இவரை மருதமறை ஞானசம்பந்தர் என்றும் கடந்தை மறைஞான சம்பந்தர் என்றும் போற்றுவர். கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணைநதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இடையாற்றில் எம்மை பூஜித்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். சுகப்பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார். இக்கோவில் 8ம் நூற்றாண்டு கோவிலானாலும் கி.பி. 1471இல் ஒரிசா மன்னனால் அழிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து சாளுவ நரசிம்ம அரசரால் மீண்டும் கட்டப்பட்டது என கல்வெட்டில் செய்திகள் உள்ளது. இக்கோவில் கல்வெட்டுகளில் இறைவன் உடைய நாயனார் எனவும் இவ்வூரை இராஜராஜவள நாட்டு திருமுனைப்பாடி இடையாற்று நாட்டு இறையாறு என்று குறிக்கப்பட்டுள்ளது. சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கும். சுந்தரர் இத்தலத்திற்கு வந்து பாடியுள்ளார். 39 திருத்தலங்களுக்கு இணையானது இடையாறு என்று பாடியுள்ளார். சுந்தரர், திருநாவுக்கரசரும், ராமலிங்க அடிகளார் பாடல்கள் பாடியுள்ளார்கள்.