ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பாண்டியன் கொண்டை

அரங்கனின் ஆபரணங்களில் முக்கியமானது பாண்டியன் கொண்டை. முக்கியத் திருவிழாக்களில் அரங்கன் பாண்டியன் கொண்டை அணிந்தே வெளிவருவார். அரங்கனே தன் பக்தர்களில் ஒருவரானக் அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி என்பவரைக் கொண்டு இந்தப் பாண்டியன் கொண்டை என்னும் ரத்தினக் கிரீடத்தைச் செய்யச் சொல்லி வாங்கியிருக்கிறார். அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி திருமலை திருமலையப்பன் சேவையிலே ஈடுபட்டு பின்னர் அவர் காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் ஈடுபாடு கொண்டு தினமும் உஞ்சவ்ருத்தி மேற்கொண்டு அதில் கிடைக்கும் பொருட்களை தான்யங்களைப் பணமாக மாற்றி அதன் மூலம் வரதராஜப்பெருமாளின் சந்நிதிக்குக்கு பல கைங்கரியங்களைச் செய்து வந்தார். காஞ்சி மாநகரில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்கும் திருப்பணிகள் செய்தார். தன்னால் இயன்ற பொருளைச் சேர்த்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் மாமண்டூரில் நிலம் வாங்கி நந்தவனம் அமைத்து கைங்கரியம் செய்து வந்தார். ஒரு நாள் நந்தவனத்தில் வேங்கடாத்ரி சுவாமியைப் பாம்பு தீண்டியது.. அவர் சற்றும் அஞ்சாமல் பெருந்தேவித் தாயார் சந்நிதிக்குச் சென்று பல கீர்த்தனைகளைப் பாடி அங்கேயே மயங்கி விழுந்தார். பின்னர் தூங்கி எழுந்திருப்பவர் போல் எழுந்து பெருமாள் சந்நிதிக்கு சென்று பிரசாதங்கள் வாங்கிக் கொண்டார். கொடிய பாம்பின் விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை..

ஒரு நாள் அல்லூரி வேங்கடாத்ரி சுவாமிகளின் கனவில் அரங்கன் உற்சவக் கோலத்தில் தோன்றித் தனக்குப் பாண்டிய மன்னனால் சமர்ப்பிக்கப்பட்ட பாண்டியன் கொண்டை பழசாகிப் பழுதடைந்து விட்டதாகவும் புதியது தேவை என்றும் கேட்டார். வேங்கடாத்ரி சுவாமி இருந்தது காஞ்சியில் அங்கே குடிகொண்டிருந்த வரதராஜரைப் பிரார்த்தித்துக் கொண்டு எந்தவிதமான அளவுகளும் இல்லாமல் அரங்கனின் பாண்டியன் கொண்டைக்கு மாதிரியாக ஒன்றைச் செய்தார். வேங்கடாத்ரி சுவாமிகள். அதை எடுத்துக் கொண்டு திருவரங்கம் அடைந்தார். அரங்கனைக் கண்ட வேங்கடாத்ரி சுவாமிகள் தன்னை மறந்து அரங்கன் மேலும் நம்பெருமாள் மேலும் பற்பல கீர்த்தனைகளைப் பாடினார். அவர் பாடிய நின்னுகோரியுன்னா ராரே என்ற பாடல் அவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். சுவாமிகள் கொண்டு சென்ற மாதிரிக் கிரீடம் நம்பெருமாளுக்கு வைத்துப் பார்த்தால் மிக அழகாகப் பொருந்திவிட்டது. கோயிலின் ஊழியர்களும் மற்றப் பெரியோர்களும் சுவாமிகளின் இந்தத் திறமையையும் அபூர்வமான ஞானத்தையும் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஶ்ரீரங்கம் முழுதும் சுவாமிகளின் புகழ் பரவியது.

மாதிரிக் கொண்டை போல இப்போது அசலில் செய்ய வேண்டும். அதற்குப் பணம் வேண்டும். வேங்கடாத்ரி சுவாமி ஒரு சபதம் எடுத்துக் கொண்டார். பாண்டியன் கொண்டையைச் செய்ய அன்றாடம் குறைந்த பட்சமாகப் பத்து ரூபாய் தேவை. ஆகவே தினம் தினம் பத்து ரூபாய் கிடைக்கும் வரை தான் பட்டினியாக இருப்பது எனத் தீர்மானித்தார். சில நாட்கள் கிடைத்தது. பல நாட்கள் எதுவும் கிடைக்கவில்லை. அப்போது அவரின் முக்கியச் சீடர்கள் ஆன வெங்கடசாமி நாயுடு, புதுச்சேரி அப்பாசாமி நாயுடு ஆகியோர் பத்து ரூபாய்களைக் கொடுத்தார்கள். பணம் கிடைக்கக் கிடைக்க அரங்கனின் பாண்டியன் கொண்டைத் தயாரிப்பும் மெல்ல மெல்ல நடந்து வந்தது.

கொண்டையில் பதிக்க ஒரு அங்குல அளவில் சதுர வடிவிலான மரகதக் கல் ஒன்று தேவைப்பட்டது. வேங்கடாத்ரி சுவாமி மரகதப் பச்சைக்கல்லைப் பெறப் பல வழிகளிலும் முயன்றார். அப்போது அரங்கன் அவர் கனவில் மீண்டும் தோன்றி கல்கத்தாவில் உள்ள வைர வியாபாரி ஒருவரின் வீட்டில் வடக்கு மூலையில் உள்ள இரும்புப் பெட்டியில் கொண்டையில் பதிக்கத் தேவையான மரகதப் பச்சைக்கல் இருப்பதாகவும் அதை வேண்டிப் பெறுமாறும் அந்த வைர வியாபாரியின் பெயர் மாதவ சேட் என்றும் தெரிவித்தார். சுவாமியின் பக்தர்களின் ஒருவரான காசிதாஸ் செளகார் என்பவர் மாதவ சேட்டின் கல்கத்தா விலாசத்தைப் பெற்று மரகதப் பச்சையை அரங்கனுக்காகக் கேட்டுக் கடிதம் எழுதினார். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மாதவ சேட் இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ந்தார். அரங்கனே தன் கொண்டையில் வைக்க மரகதக் கல்லைக் கேட்டிருக்கிறான். அதுவும் நம்மிடம் இது என்ன விந்தை என்று எண்ணி இரும்புப் பெட்டியைத் தலைகீழாகப் புரட்டிப் பார்த்த மாதவ சேட் தன் தந்தையால் வைக்கப்பட்ட மரகதக் கல்லைக் கண்டெடுத்துவிட்டார். அவருக்கோ அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கோ அந்த மரகதக்கல் இருந்தது அன்று வரை தெரியவில்லை. கல்லை உடனடியாக அனுப்பி வைத்த மாதவ சேட் கூடவே தன்னுடைய பங்காக ஆயிரம் ரூபாய் பணமும் அனுப்பி வைத்தார்.

கொண்டை தயாராகி வந்தது. ஆனால் திடீரென கொண்டையைச் செய்து வந்த பொற்கொல்லனுக்குப் பேராசை பிடித்து விட்டது. ஆகவே மாதவ சேட் அனுப்பிய விலை உயர்ந்த மரகதக் கல்லை ஒளித்துவிட்டு அதற்கு பதிலாகச் சாதாரணப் பச்சைக்கல் ஒன்றை வைத்து விட்டான். இப்போதும் அரங்கன் விடவில்லை. வேங்கடாத்ரி சுவாமியின் கனவில் தோன்றி பொற்கொல்லன் கல்லை ஒளித்த விபரத்தைத் தெரிவித்து விட்டார். தன் சீடர்களோடு பொற்கொல்லனைச் சந்திக்கச் சென்ற வேங்கடாத்ரி சுவாமியைக் கண்ட கொல்லன் முதலில் தனக்கு எதுவுமே தெரியாது என சாதித்தான். ஆனால் அப்பாசாமி நாயுடுவும் மற்றும் சிலரும் அவனை மிரட்டி விசாரிக்கவே கல்லை மாற்றியதை ஒப்புக் கொண்டு அதைத் திரும்பக் கொடுத்தான். உண்மையான மரகதக் கல் பதிக்கப்பட்டுப் பாண்டியன் கொண்டை தயாராகி அரங்கனுக்குச் சமர்ப்பிக்க எடுத்துச் செல்லப்பட்டது. தன் சீடர்களுடன் கொண்டையை ஊர்வலமாக எடுத்துச் சென்றார் வேங்கடாத்ரி சுவாமிகள். திருவரங்கத்தில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அல்லது பரமபத ஏகாதசி என அழைக்கப்படும் நாளில் ருத்ரோகாரி ஆண்டில் 1863 ஆம் ஆண்டில் அந்தப் பாண்டியன் கொண்டை அரங்கனுக்குச் சமர்ப்பிக்கப் பட்டது. இன்றளவும் அந்தப் பாண்டியன் கொண்டை முக்கிய தினங்களில் மட்டுமின்றி வைகுண்ட ஏகாதசி அன்றும் நம்பெருமாளை அலங்கரித்து வருகிறது.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -5

விராட நகரத்தில் மகாராணி சுதேசனாவுக்கு சகோதரன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் கீச்சகன். வல்லமை மிகவும் வாய்க்கப் பெற்றவன். அரசனுக்கு மைத்துனன் ஆகையால் அந்நாட்டுக்கு சேனைத் தலைவன் என்ற மிக உயர்ந்த ஸ்தானத்தை வகித்து வந்தான். ஒரு போக்கில் அவனை விராட நாட்டு மன்னன் என்றே அழைக்கலாம். அந்த அளவுக்கு பலமும் செல்வாக்கும் கொண்டவனாக இருந்தான். பாண்டவர்கள் புரிந்து வந்த வனவாசம் அமைதியாக சென்று கொண்டிருந்தது. அப்போது உபத்திரம் ஒன்று உருவெடுத்தது.

கீச்சகன் தன் சகோதரியாகிய ராணியின் அந்தப்புரத்திற்கு ஒருநாள் உரிமையுடன் சென்றான். அப்போது தற்செயலாக சைரந்திரியைப் பார்த்தான். பார்த்ததும் அவள் மீது காதல் கொண்டான். அந்த வேலைக்காரியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிறிதேனும் நாணம் இன்றி தன் சகோதரியிடம் அவன் வேண்டினான். அவன் அப்படிக் கேட்பது பொருத்தமற்றது என்று உடன்பிறந்தவள் எடுத்துக் கூறினாள். ஆனால் கீச்சகன் மட்டும் தான் எடுத்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்கவில்லை. அந்த வேலைக்காரி 5 கந்தர்வர்கள் பாதுகாத்து காப்பாற்றுகிறார்கள். அவளிடம் வம்பு செய்தாள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று எடுத்துக்கூறி எச்சரிக்கை செய்தும் அவன் அதை பொருட்படுத்தவில்லை. அந்த பெண்ணை தனக்கு உரியவள் ஆக்குவேன் இல்லை என்றாள் அம்முயற்சியில் மடிந்து போவேன் என்று தீர்மானமாக தன் சகோதரியிடம் கூறினான்.

கீச்சகனுடைய மாளிகைக்கு உள்ளே சென்று கொஞ்சம் மதுபானம் கொண்டு வரவேண்டுமென்று சுதேசனா ராணி சைரந்திரிக்கு உத்தரவிட்டாள். இதனை புரிந்து கொண்ட சைரந்தரி வேலைக்காரியாக இருந்த தன்னை காப்பாற்றி அருள வேண்டும் என்றும் தனக்கு பதிலாக வேறு வேலைக்காரியை அனுப்பி வைக்க வேண்டுமென்றும் பரிந்துரை செய்து விண்ணப்பித்தாள். ஆயினும் அவருடைய வேண்டுதல் அங்கீகரிக்கப்படவில்லை. அரசியின் ஆணைக்கு அடிபணிந்து அவள் நடக்க கடமைப்பட்டு இருந்தாள். தன்னை காப்பாற்றி அருள வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்ட சைரந்திரி அரசியின் ஆணைக்கு அடிபணிந்து கீச்சகனின் மாளிகைக்கு சென்றாள்.

சைரந்தரி என்ன நிகழும் என்று எதிர்பார்த்தாளோ அது அப்படியே நடந்தது. அவளைப் பார்த்த உடனே கிச்சகன் தனக்கு இணங்கும்படி அவளை கெஞ்சி கேட்டான். அவனுடைய போக்கு பொருந்தாதது என்று சைரந்திரி எடுத்து விளக்கினாள். ஆனால் கீச்சகனோ அவள் கையை பிடித்து இழுத்தான். வலிமை வாய்ந்த வேலைக்காரி ஒரே குலுக்கில் தன்னை விடுவித்துக் கொண்டு அரசனுடைய மண்டபத்திற்கு ஓடினாள். வெறிபிடித்த அந்த சேனைத்தலைவன் அவளைப் பின்தொடர்ந்து ஓடி சபைக்கு நடுவே அவளை தனது காலால் எட்டி உதைத்தான். இந்நாட்டில் திக்கற்ற பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லையா என்று சைரந்தரி ஓலமிட்டாள். விராட மன்னன் அமைதியாக இருந்தான். அங்கு குழுமியிருந்த அனைவரும் கிச்சனுக்கு நடுநடுங்கி நடந்துகொண்டனர். கனகனும் வல்லாளனும் சபையில் இருந்தனர். ஆனால் ஒர் வருட காலம் தங்களை மறைத்துக்கொண்டு அடங்கிக் கிடக்கும் நெருக்கடிக்கு அவர்கள் கட்டுப்பட்டு இருந்தனர். இந்த பிழையை சரி படுத்த முயன்று தங்களை இன்னாரென்று உலகுக்குக் காட்டிக் கொள்ளும் நெருக்கடியில் அவர்கள் அகப்பட்டுக் கொள்ளலாகாது. நிலைமை இப்படி இருந்தும் வல்லாளன் சிறுது சீற்றம் அடைந்தான். அதை கூறிப்பால் உணர்ந்து கொண்ட கனகன் விரைந்து சென்று சமைப்பதற்கு விறகு பிளக்க வேண்டும் என்று வல்லாளனுக்கு ஞாபகம் ஊற்றினான். அதன் உட்கருத்தை அறிந்து கொண்ட வல்லாளன் அமைதியாக அந்த சபையில் இருந்து வெளியேறினான்.

மறைபொருள் இறைவன்

ஒரு குளத்தில் ஒரு குட்டி மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை வந்தது. அம்மா நாம் வாழ தண்ணீர் மிக அவசியமென்று சொல்கிறாய். அந்த தண்ணீர் எங்கே இருக்கிறது எனக்குக் காட்டு எனக் கேட்டது. உடனே தாய் மீன் இதுதான் தண்ணீரென்று தண்ணீரைக் காட்டியது. குட்டி மீனுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மா நீ தண்ணீரைக் காட்டு என மீண்டும் சொல்லியது. மீண்டும் தாய் மீன் தண்ணீரைக் காட்டியது. அப்போதும் குட்டிமீனுக்கு தண்ணீர் தெரியவில்லை.

இந்த அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என சொல்லிக் கொண்டே அப்பா மீனிடம் இதே கேள்வியைக் கேட்டது. அப்பாவும் அதே மாதிரி தண்ணீரைக் காட்ட அப்பாவுக்கும் ஒன்றும் தெரியாது எனத் தீர்மானித்து விட்டது. பிறகு உறவினர்களிடம் போய் இதே கேள்வியைக் கேட்டது. எல்லோரும் ஒரே பதிலையே சொன்னார்கள். திருப்தி அடையாத மீன் யாருக்குமே ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்து இறுதியில் உருவத்தில் பெரிய திமிங்கலத்திடம் வந்து தண்ணீரைக் காட்டச் சொன்னது.

உடனே திமிங்கலம் குட்டி மீனை தன் முதுகில் ஏறச் சொன்னது. குட்டி மீனும் முதுகில் ஏறியது. கரை நோக்கிச் சென்ற திமிங்கலம் குட்டி மீனை கரையில் எறிந்தது. குட்டி மீன் தண்ணீர் இல்லாமல் துடிதுடித்து உயிருக்குப் போராடியது. அப்போது திமிங்கலம் இதுதான் தண்ணீர் என்று தண்ணீரைக் காட்டி மீண்டும் குட்டி மீனைத் தண்ணீரில் விட்டது. அப்போதுதான் குட்டி மீனுக்கு தண்ணீர் தண்ணீராகத் தெரிந்தது.

அதுபோல்தான் கடவுளும் உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு உருவில் நிரம்பி இருந்தாலும் பலருக்கும் அவர் தெரிவதில்லை. எல்லோரும் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தனக்கு உள்ளே இருக்கும் கடவுளை யாரும் உணர்வதே இல்லை. கடவுளை அனுபவித்துதான் அறிய முடியும்.

இறைவன் மனிதனை படைத்து அவனுக்குள் நல்ல குணங்களையும் விதைத்து அவனுள்ளே மறைப்பொருளாய் அங்கும் இங்கும் எங்கும் சிவமாய் இருக்கின்றார்.

கட உபநிஷதம்.

இறைவனைத் தவிர வேறு எதன்மூலம் கிடைக்கின்ற அமைதியும் மகிழ்ச்சியும் நிலையானதல்ல. சில புறக் காரணங்களின் வாயிலாகக் கிடைக்கின்ற அமைதியும் மகிழ்ச்சியும் அந்தக் காரணம் விலகியதும் குலைந்துவிடும். ஆனால் இறைவனைப் பெறுவதால் கிடைக்கின்ற அமைதி எதனாலும் குலையாது.

கட உபநிஷதம்.

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்

யானையை அடக்கிய கோழி

யானை அளவு எதிரியின் பலம் இருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் எதிரியை வென்றிடலாம்

சோழ அரசர் ஒருவர் யானை மேல் உலா வந்த போது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும் பாகனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும் மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன் சிவனே தன்னையும் மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றிய இறைவனுக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் சூட்டினான். பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது யானையை கோழி அடக்கியது போல அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார்.

திருச்சி உறையூரில் உள்ள பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் கல்தூணில் இந்த இந்த சிற்பம் உள்ளது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாறு. கிட்டத்தட்ட 1300 வருடங்களுக்கு முன் இந்த மிதிவண்டி படத்தை தூணில் சிற்பமாக வடித்துள்ளார்கள் நமது முன்னோர்கள். மிதிவண்டி தயாரிக்கப்பட்டது ஒரு 200 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்ததாக தற்போதைய வரலாறு உள்ளது.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -4

பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியும் 12 வருடகாலம் வனவாசத்தை நல்விதத்தில் பயன்படுத்திக் கொண்டதை முன்னிட்டு பக்குவப்பட்ட மனநிலையில் தாங்கள் வாழ்ந்து வந்திருந்த ராஜ வாழ்க்கைக்கு எதிரான வேலைகளை ஏற்றத்தாழ்வு இல்லாமல் அரண்மனையில் செய்தனர். தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். விராட நகரத்தில் சூத்திர தர்மம் வைசிய தர்மம் ஆகியவற்றை அமைதியாகவும் ஆர்வத்துடனும் நிறைவேற்றினர்.

விராட நகரத்தில் அப்பொழுது விழாக்கள் பல நிகழ்ந்தது. அவைகளில் சிவராத்திரியையொட்டி நடந்த விழாவானது சிறப்புற்று விளங்கியது சுமார் 10 நாட்கள் நடந்த விழாவில் விதவிதமான போட்டி விளையாட்டுகள் நடைபெற்றது. அதற்கு ஏராளமான விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்திலிருந்தும் தூரத்தில் இருந்தும் போட்டி போடுபவர்கள் பலர் வந்து வந்து சேர்ந்தனர். எங்கிருந்தோ வந்திருந்த மற்போர் வீரன் ஒருவன் மற்றவர்களை எல்லாம் எளிதில் தோற்கடித்தான். விராட நகரத்தில் வசிக்கும் போர் வீரர்கள் வெறும் குழந்தைகளுக்கு நிகர் என்றும் தன்னை தோற்கடிக்க யாருக்கும் இயலாது என்றும் அவன் தன்னை குறித்து பெருமை அடித்துக்கொண்டான். அவ்வாறு அவன் கூறியது விராட மன்னனுக்கு மிகச் சங்கடமாக இருந்தது. அரசனுடைய மனநிலையை அவனுடைய தோழனாக புதிதாக வந்திருந்த கனகன் அறிந்து கொண்டான். அரசனிடம் சென்று தங்களுடைய புதிய சமையல்காரன் வல்லாளன் என்பவன் பல தடவை விளையாட்டிற்காக மல்யுத்தம் புரிவதை பார்த்திருக்கின்றேன். கர்வமே வடிவெடுத்திருக்கின்ற இந்த வீரனுடன் போட்டியிடும்படி வல்லாளனுக்கு ஆணையிட்டு பாருங்கள். ஒரு வேளை இவனை தோற்கடிக்க அவனுக்கு சாத்தியமாகலாம் என்றான்.

அக்கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வல்லாளனை வேந்தன் தன் முன்னிலைக்கு வரவழைத்தான். நீ மற்போர் புரிவதில் திறமைசாலி என்று என்னுடைய தோழன் கூறுகின்றான். கர்வமே வடிவெடுத்திருக்கின்ற அந்த வீரனை மற்போர் செய்து வெல்ல முடியுமா என்று முயற்சி பண்ணிப்பார் என்று கூறினான். இத்தகைய நல்ல சந்தர்ப்பம் தனக்கு வந்து வாய்க்கும் என்று வல்லாளன் எதிர்பார்க்கவில்லை. என் நாட்டின் மன்னனுடைய பெருமையின் பொருட்டு என்னால் இயன்றதை செய்கிறேன் என்று கூறிக்கொண்டு மறுப்போர் மேடைக்கு ஓடினான். அன்றைய விளையாட்டில் வெற்றி வீரனாக விளங்கியவனிடம் தன்னோடு மற்போர் புரியும்படி மரியாதையுடன் வல்லாளன் வேண்டினான். இருவருக்கும் இடையில் யுத்தம் துவங்கியது. இரண்டு சிங்கங்கள் ஒன்றோடொன்று சண்டை போடுவது போன்ற காட்சி தென்பட்டது. வேண்டுமென்றே வல்லாளன் தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்தவில்லை. ஆகையால் மற்போர் சிறிது நேரம் தொடர்ந்து நிகழ்வதாயிற்று. தன்னுடைய திறமைகளை விதவிதமான பங்குகளில் காட்டிய பிறகு வல்லாளன் கர்வமே வடிவெடுத்த வீரனை தோற்கடித்தான். மன்னனுக்கு இந்நிகழ்ச்சி மட்டில்லா மகிழ்வை உண்டாக்கியது. நகரவாசிகள் ஆரவாரத்துடன் வல்லாளனுடைய வெற்றியை புகழ்ந்து பாராட்டினார்கள்.

மகாபாரதப் போர் தத்துவம்

மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அதில் இருக்கும் தத்துவம் உண்மை. அதை அனைவரும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்கள் தான் பஞ்சபாண்டவர்கள். ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள். எண்ணிக்கையில் பெரிதான கௌரவர்களை எதிர்த்து கிருஷ்ண பரமாத்மா என்னும் மனசாட்சியின் படி சத்தியத்தை கடைபிடித்து சத்தியத்தின் படி வாழ்க்கையை வாழ்ந்து ஐம்புலன்களால் போரிட தீமைகளை வெற்றி பெறலாம். கர்ணன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை மோகம். அவன் இந்திரியங்களின் ஒரு பகுதி. கூடவே பிறந்தவன். ஆனால் தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் அவனது விருப்பம் ஆசை போல ஏதேனும் சாக்குபோக்கு சொல்லி தவறு செய்வான். அவனையும் வெற்றி பெற்றால் இறைவனை அடையலாம்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -3

காலையிலும் மாலையிலும் அரண்மனையில் பசுக்கள் இருக்கும் பண்ணையை சென்று பார்வையிடுவது மன்னனுடைய வழக்கமாக இருந்தது. ஒருநாள் அரசன் பசுக்களை பார்வையிடும் பொழுது பசுக்களை பற்றி சில கேள்விகள் பசுக்களை பார்த்துக்கொள்பவர்களிடம் கேட்டான். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவன் பசுக்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை தெரிவித்தான். அவன் தெரிவித்த விவரங்கள் பசுக்களை பார்த்துக்கொள்பவர்களுக்கு புரியாதவகைகளாக இருந்தது. பசுக்களை பற்றி அனைத்தும் அறிந்தவனாக தென்பட்டவனிடம் யார் என்று மன்னர் விசாரித்தார். தன் பெயர் தந்திரிபாலன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த பண்ணையில் தனக்கு ஏதேனும் வேலை வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வந்தவனுடைய நடை பாவனைகளை பார்த்து இவன் ஒரு பிராமணன் அல்லது க்ஷத்திரனாக இருக்க வேண்டும் என்று அரசன் எண்ணிக்கொண்டு அவனை மாட்டுப் பண்ணையில் வேலைக்கு நியமித்தார். மாட்டுப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தவன் சகாதேவன்.

சைரந்திரி என்னும் பதத்தின் பொருள் வேலைக்காரி என்பதாகும். சைரந்திரி என்னும் பெயர் கொண்டவளாக திரௌபதி விராட நகரின் வீதிகளில் நடந்து சென்றாள். அவள் கந்தல் துணிகளை அணிந்து கொண்டிருந்தாள். அப்படி இருந்தும் இயல்பாகவே அவளுடைய அழகு மேன்மையானதாக இருந்தது. பாதையில் போய்க் கொண்டிருந்த மக்கள் அவளின் உடைகளை பார்த்து பரிகாசம் பண்ணினார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் அவளைச் சூழ்ந்து வேடிக்கை செய்து கொண்டே பின் தொடர்ந்தனர். அரண்மனை மாடியில் மேல்தட்டில் இருந்த அரசியான சுதேனா வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது சைரந்திரியின் இக்கட்டான சூழல் அரசியின் கண்ணில் தென்பட்டது. தன்னந்தனியாய் போய்க் கொண்டிருந்த பெண்ணின் பரிதாப பரிதாபகரமான நிலை அவருடைய உள்ளத்தை தொட்டது. தாதிமார்கள் சிலரை அனுப்பி அவளை அரண்மனைக்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டான்.

இந்தப் பெண்ணின் பரிதாபகரமான பாங்கும் அவளுடைய கண்களிலிருந்து வந்த கண்ணீரும் அரசியின் உள்ளத்தை தொட்டது. அவள் யாரென்று அரசி விசாரித்தாள். தன்னுடைய பெயர் சைரந்திரி என்றும் தனக்கு ஐந்து கந்தர்வர்கள் கணவர்களாக இருக்கின்றார்கள் என்றும் ஒரு சாபத்தை முன்னிட்டு ஒர் வருட காலம் நான் அவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டிருக்கின்றேன். ஓர் வருடத்திற்கு பிறகு அந்த சாபத்திலிருந்து நான் விடுதலை பெறுவேன். அதுவரையில் தங்களிடம் நான் எனது பாதுகாப்பை வேண்டுகிறேன் என்றாள். தங்களுக்கு பூ மாலைகள் அழகாக தொடுக்க எனக்கு தெரியும். மிகவும் நேர்த்தியாக தங்களுடைய மேனியை அலங்கரிக்கவும் நான் வல்லவள் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அரசி சிறிது சிந்தித்துப் பார்த்துவிட்டு ஓராண்டுக்கு உனக்கு ஆதரவு தருவதில் எனக்கு சிரமம் ஏதும் இல்லை. ஆனால் உன்னுடைய பேரழகு தான் அதற்கு இடைஞ்சலாக இருக்கின்றது. பருவத்தில் இருக்கும் ஆண்மகன் உன்னுடைய மேனி அழகில் மயங்கிவிடுவான். இங்கிருப்பதால் ஆண்களால் உனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்று எண்ணுகிறேன் என்றாள். தாயே நான் வெளியில் எங்கும் செல்லாமல் தங்களுடைய அந்தப்புரத்திலேயே தங்கி ஆண்களின் கண்களில் முடிந்தவரை படாமல் இருந்து கொள்கிறேன். மற்றொரு விஷயம் என்னுடைய கந்தர்வக் கணவர்கள் வெளித்தோற்றத்தில் இல்லாமல் என்னை காப்பாற்றி வருகிறார்கள். என்னிடம் யாராவது முறை தவறி தீண்டினால் அவனை என் கணவன்மார்கள் கொன்றுவிடுவார்கள் என்றாள். அனைத்தையும் கேட்ட அரசி அந்தப்புரத்தில் அடைக்கலம் புகுந்த அப்பெண் வாசித்திருக்க அனுமதி வழங்கினாள்.

தானம்வேறு தர்மம்வேறு

சூரியபகவான் சிவ பெருமானிடம் கேட்டார். பரம்பொருளே பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்தவன் கர்ணன். தான் பெற்ற புண்ணியங்கள் அனைத்தையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது. என கேட்டார் சூரியபகவான்.

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்த பின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஆனால் தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இது தான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம். கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன் தான். ஆனால் மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது என்றார்.

கேட்டு கொடுப்பது தானம்
கேட்காமல் அளிப்பது தர்மம்

Image result for சிவபெருமான் சூரிய பகவான்

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -2

அரண்மனைக்கு சென்ற யுதிஷ்டிரன் தன்னுடைய பெயர் கணகன் என்று சொல்லி விராட நகர மன்னனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தான் ஒரு பாண்டித்தியம் பெற்ற பிராமணன் என்றும் பகடை விளையாட்டில் வல்லவன் என்றும் தன்னைப் பற்றி கூறிக்கொண்டு தனக்கு ஏதேனும் வேலை வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் உன்னுடைய நடை உடை பாவனை ஆகியவை நீ ஒரு மேன்மகன் என்பதைத் தெரிவிக்கின்றன. நீ கற்றறிந்தவனாகவே தென்படுகிறாய். ஆகவே என்னுடைய தோழனாக உன்னை என்னோடு வைத்துக் கொள்கின்றேன். அரிய பெரிய விஷயங்களை நீ எனக்கு தெரிவிப்பாய். ஓய்வு வேளைகளில் நீ என்னோடு பகடை விளையாடு என்றான்.

சில நாட்கள் கழித்து பீமன் விராட மன்னனின் முன் தோன்றி தன்னுடைய பெயர் வல்லாளன் என்றும் தனக்கு சமையல் தொழில் நன்கு தெரியும் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தன்னுடைய தொழிலுக்கு அறிகுறியாக தன் கையில் அவன் கரண்டி ஒன்றை வைத்திருந்தான். விதமான பட்சணங்கள் சமைத்து மன்னரை திருப்திப்படுத்த முடியும் என்று அவன் உறுதி கூறினான். மற்றும் நன்றாக மற்போர் புரிந்து மன்னனை மகிழ்விக்க முடியுமென்றும் தெரிவித்து தனக்கு வேலை வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். புதிதாக வந்தவனுடைய கம்பீரமான உடல் அமைப்பை பார்த்து மன்னன் வியப்பு அடைந்தான். இவன் சேனைப்படை ஒன்றுக்கு தலைமை வகிக்கும் தகுதி வாய்ந்தவன் என்று அரசன் எண்ணினான். அரண்மனை மடைப்பள்ளியில் தலைமை சமையல்காரனாக நியமிக்கப்பட்டான்.

தாறுமாறாக உடை அணிந்த பேடு ஒருத்தி அங்கு நின்று கொண்டிருந்தவர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு விராட மன்னன் முன்னிலையில் வந்தாள். பிருஹன் நளா தனது பெயர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். இந்திர லோகத்தில் வசித்த பொழுது அர்ஜுனன் ஒர் வருட காலம் பேடுவாக இருக்கவேண்டுமென்று ஊர்வசி சாபமிட்டாள். அந்த சாபத்தை ஒரு வருட காலம் மறைந்திருந்து வாழும் காலத்தில் பயன்படுத்திக் கொண்டான் அர்ஜுனன். தான் பாடல்கள் பாடுவதிலும் நாட்டியத்திலும் இசைக்கருவிகள் மீட்டுவதிலும் வல்லவள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். உத்திரை என்பவள் விராட மன்னனின் மகளாவாள். அந்த ராஜகுமாரிக்கு லலித கலைகளையும் சொல்லித்தருவதாக கூறினான். சாபத்தினால் பேடு வேடத்தில் இருக்கும் அர்ஜுனனை கண்ட மன்னன் ஆண்மையோடு கூடிய ஆற்றல் மிகப் படைத்தவளாக இவள் தென்படுகிறாள். ஆகையால் இவளை மிகவும் ஜாக்கிரதையாக கவனித்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவள் கேட்ட உத்தியோகத்தை அவளுக்கு அளித்தான்.

விராட மன்னன் தன் அரண்மனை லாயத்திலிருந்த குதிரைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அழகு வாய்ந்த மனிதன் ஒருவன் தன் பெயர் தமக்ரந்தி என்றும் தான் குதிரைகளை பழக்குவதில் மிக வல்லவன் என்று தன்னை அறிமுகப் படுத்தினார். தனக்கு உணவும் உடையும் தங்க இடமும் கொடுத்தால் போதும் என்றும் குதிரையை பார்த்துக்கொள்ளும் வேலை வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். வந்தவனின் நேர்த்தியான பாங்கை பார்த்து மன்னன் அவன் கேட்ட வேலையில் அமர்த்திக் கொண்டான். குதிரை லாயத்தில் வேலைக்கு சேர்ந்தவன் நகுலன்.