ஐயப்பனின் திருவாபரணம்

மகர சங்கராந்தி காலத்தில் தவக்கோலத்திலிருந்து ஐயப்பன் கண் விழிக்கிறார். அன்றைய நாளில் ஐயப்பன் ராஜ கோலத்தில் தரிசனம் கொடுக்கிறார். மணிகண்டன் அவதாரக் காலத்தில் தன் வளர்ப்புத் தந்தையிடம் ஆண்டு தோறும் தவக்கோலத்தில் இருக்கும் ஐயப்பன் அந்த ஒருநாளில் கண்விழித்து தன் பக்தர்களைப் பார்த்து அனுக்கிரகம் பண்ணுவேன் என்று வாக்களித்திருந்தார். பகவான் கண்விழிக்கும் அந்தக் காலத்தில் தேவர்கள் எல்லாம் விசேஷமாக ஆராதனை செய்வார்கள். ஐயப்பன் ஜோதி ஸ்வரூபனாகக் காட்சி கொடுக்கும் நாள் மகர சங்கராந்தி அன்று ஐயப்பனுக்கு திருவாபரணங்களை அணிவித்து தீப ஆரத்தி காட்டியதும் ஐயப்பனின் மகர ஜோதி தரிசனத்தை பொன்னம்பலமேட்டில் காணலாம். இந்தத் திருவாபரணப் பெட்டி பந்தள அரண்மனையிலிருந்து பயணித்து வந்து சரியாக மகரஜோதி தினத்தன்று சபரிமலை வந்து சேரும். இந்த நாளில் ஐயப்பன் திருவாபரணங்கள் அணிந்து பூரண சொரூபனாகக் காட்சி கொடுப்பான்.

மகர சங்கராந்தி தினத்தன்று பந்தள ராஜனின் காணிக்கையான திருவாபரணம் மூன்று பெட்டிகளில் சபரிமலைக்கு எடுத்து வரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். திருவாபரணம் எங்கு சென்றாலும் கருடன் அதன் மேலேயே பறந்து வருகிறது. ஐயப்பனின் சந்நிதானத்தைப் பெட்டி அடைந்ததும் கருடன் சந்நிதானத்தை மூன்றுமுறை வலம் வந்து பின் பறந்து மறையும். மூன்று பெட்டிகளில் ஒன்று ஆபரணப்பெட்டி இரண்டு வெள்ளிப்பெட்டி மூன்று கொடிப்பெட்டி. இதில் ஆபரணப்பெட்டியில் தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் இருக்கும்.

முதல் திருவாபரணம் பெட்டியில் இருப்பவை

  1. திருமுக மண்டலம் எனப்படும் முக கவசம்.
  2. பூரணா புஷ்கலா தேவியருடைய உருவங்கள்.
  3. பெரிய வாள் மற்றும் சிறிய வாள்.

4 இரண்டு யானை உருவங்கள்.

  1. கடுவா எனப்படும் புலி உருவம்.
  2. வில்வமாலை.
  3. சரப்பொளி மாலை.
  4. நவரத்தின மாலை.
  5. வெள்ளிகட்டிய வலம்புரிச் சங்கு இந்த ஆபரணப் பெட்டியில் இருக்கும்.

இரண்டாவதாக இருக்கும் வெள்ளிப் பெட்டியில் தங்கக்குடம் மற்றும் பூஜா பாத்திரங்கள் இருக்கும்.

மூன்றாவது கொடிப்பெட்டியில் யானைப் பட்டம், தலப்பாற மலை, மலையின் கொடிகள் ஆகியன இருக்கும்.

ஆபரணப்பெட்டி தவிர்த்த இரண்டு பெட்டிகளும் மாளிகை புறத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு எழுந்தளிப்பு என்னும் நிகழ்ச்சியில் யானைக்கு அந்தப் பட்டத்தை சாத்தி ஊர்வலங்கள் நடைபெறும். திருவாபரணப் பெட்டி சந்நிதானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பகவானுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். அந்தக் காலத்தில் மகர சங்கராந்தி அன்று காலையில்தான் பந்தள அரண்மனையில் இருந்து இந்தப் பெட்டிகள் கிளம்புமாம். இந்தப் பெட்டிகளைச் சுமப்பவர்கள் பெட்டியைத் தலைமேல் ஏற்றிக்கொண்டதும் தேவதா ஆவேசம் கொண்டு ஓடிவந்து அந்த நாளின் மாலையிலேயே சந்நிதானம் வந்து சேருவார்கள். காலங்கள் மாறிவிட்டன. தற்போது சுமார் இரண்டரை நாள்கள் ஆகின்றன.

இந்தப் பெட்டிகளைச் சுமப்பதற்கென்றே சில குடும்பங்கள் உள்ளனர். அவர்கள் தான் இவற்றைச் சுமப்பர். இதில் பகவானின் சாட்சியம் என்பது போல இந்தப் பெட்டிகள் வெளியே எடுத்து வந்ததும் பருந்து ஒன்று மேலே வரும். கருடனை தரிசனம் செய்த பின்புதான் தலையில் திருவாபரணப் பெட்டிகள் ஏற்றப்பட்டு யாத்திரை புறப்படும். திருவாபரணப் பெட்டியோடு ஒரு பல்லக்கும் பந்தள ராஜாவும் உடன் வருவார். இந்த யாத்திரை செல்லும் வழியெல்லாம் உள்ள மக்கள் பகவானை தரிசனம் செய்ய வீட்டுவாசல்களில் கோலமிட்டு பூக்கள் தூவி வரவேற்பார்கள். இப்படி சரணகோஷத்தின் நடுவே மிதந்துவரும் இந்தத் திருவாபரணப்பெட்டி, பம்பை, நீலிமலை வழியாக சந்நிதானத்தை மகரசங்கராந்தி அன்று அடையும். திருவாபரணத்தைச் சுமந்துசென்று 18 படிகளில் ஏறி சுவாமிக்கு அணிவிப்பார்கள். ஐயப்பன் அன்று ராஜ கோலத்தில் காட்சி கொடுப்பார். ஐயப்பன் தன் முக மண்டலத்தில் மீசையோடும் பூரணா புஷ்கலா சமேதராக அச்சன்கோயில் அரசராகக் காட்சி கொடுப்பார். யானை புலிகள் எல்லாம் முன்பாக இருக்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு முன்பாக இரு வாள்களும் வைக்கப்பட்டு ஐயன் அருட்காட்சி தருவார். அந்தக் கோலத்தில் ஐயனுக்கு தீபாராதனை முடிந்ததும் மகரஜோதி தரிசனம் நடைபெறும். வாழ்வில் விலைமதிக்க முடியாத ஜோதிதரிசனம் திருவாபரண தரிசனம்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 214 திருக்கூடலையாற்றூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 214 வது தேவாரத்தலம் திருக்கூடலையாற்றூர். புராணபெயர் தட்சிணப்பரயாகை. மணிமுத்தாறு, வெள்ளாறு நதிகள் இங்கு கூடுவதால் இத்தலத்திற்கு தட்சிணப்பிரயாகை என்ற பெயரும் உண்டு. மூலவர் நர்த்தன வல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாயகர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம் முதல் மூன்று நாட்களில் மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. அம்பாள் பராசக்தி, ஞானசக்தி. இக்கோவிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. ஞானசக்தி சன்னதியில் குங்குமமும், பராசக்தி சன்னதியில் விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது. தீர்த்தம் பரம்ம, அகஸ்திய, கார்த்தியாயனர் தீர்த்தங்கள், சங்கம தீர்த்தம். தலமரம் கல்லாலமரம். வெள்ளாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு நதிகள் கூடும் இடத்தில் அமைந்த தலம். ஆதலால் திருக்கூடலையாற்றூர் எனப் பெயர் பெற்றது.

இவ்வாலயத்தின் பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நந்திதேவர் மட்டும் காணப்படுகிறார். கொடிமரம் பலிபீடம் இல்லை. வெளிச் சுற்றில் பக்கவாயில் உள்ளது. அமுத விநாயகர், விசுவநாத லிங்கம், ஆறுமுகர், ஞானசக்தி, அம்பாள் முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம். மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது. படிகளேறி மேலே சென்றால் அழகிய மண்டபம் உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி எதிரில் உள்ளது. நடராச சபையில் நடராஜர் சிவகாமி அம்மையுடன் உள்ளார். இக்கோவிலில் சித்ரகுப்தர் உற்சவ மூர்த்தியாக ஒரு கையில் எழுத்தாணியும் மறு கையில் ஏடும் கொண்டு காட்சி தருகிறார். இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில்லை. மூலவரைத் தரிசித்து விட்டு வரும்போது வலதுபுறம் பொங்கு சனிபகவான் சந்நிதி மட்டும் உள்ளது. இத்தலத்திலுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது. இங்கு முருகர் பன்னிரு திருக்கரங்களுடன் தனது இரு தேவியர் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

சிதம்பரத்தில் வியாக்ரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தனது நடனக் காட்சியை காட்டி அருளினார் சிவபெருமான். அந்த நடனக் காட்சியைத் தானும் காண விரும்பி பிரம்மா இத்தலத்தில் இறைவனை வழிபட்டு வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்று பிரம்மாவிற்கும் சரஸ்வதிக்கும் நர்த்தனம் ஆடி அருள் செய்தார். எனவே இத்தல இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அகத்தியருக்கு கார்த்தியாயனன் என்ற மகன் பிறந்தான். அவனும் தந்தையைப் போல் மிகப்பெரிய ரிஷி ஆனான். அதன்பின் அகத்தியர் தனக்கு ஒரு மகள் வேண்டும் என இங்குள்ள இறைவனை வேண்டினார். இறைவனின் விருப்பப்படி மகாலட்சுமி இங்கு ஓடும் மணிமுத்தாறு நதியில் இருந்த தாமரை மலர் மீது விளையாடுவதை கண்டார். அக்குழந்தையை எடுத்து அம்புஜவல்லி என பெயரிட்டு வளர்த்து வந்தார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்த போது தன் துணைவி இங்கு அம்புஜவல்லியாக வளர்வதை அறிந்து மணம் செய்து கொண்டார். இங்கு விஷ்ணுவுக்கும் சன்னதி உள்ளது.

சோழநாட்டை ஆண்டு வந்த தினகர மகாராஜன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவளைக் கொன்று விட்டான். இதனால் அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து கொண்டது. இதனால் நாடு மனைவி மக்களை இழந்து சுற்றித்திரிந்தான். அப்போது ஒரு வியாதியுள்ள ஓரு நாய் அவனது பின்னால் வந்து கொண்டிருந்தது. ஒருநாள் அந்த நாய் ஒரு நதியில் மூழ்கி எழுந்தவுடன் ஆரோக்கியத்துடனும் தோற்றப்பொலிவுடனும் விளங்கியது. இதைப்பார்த்த மன்னன் தானும் அந்நதியில் நீராடி தனது தோஷம் நீங்கப்பெற்று நாடு நகரத்தை திரும்பப் பெற்றான். அவன் நீராடிய இடத்தில் இரண்டு நதிகள் கூடின. அந்த நதிகளின் கரையில் சிவாலயம் கட்டினான். நதிகள் கூடியதால் திருக்கூடலையாற்றூர் என்று பெயரும் வைத்தான். மன்னன் கட்டிய கோயில் பழுதடைந்தது. சிலைகளைக் காணவில்லை. அப்போது அம்பாள் அவ்வூர் பொன்னப்ப குருக்களின் கனவில் தோன்றி நான் ஆற்றில் கிடக்கிறேன் என்றாள். அதன்பின் குருக்கள் ஆற்றில் கிடந்த சிலைகளை எடுத்து தற்போதுள்ள கோயிலை கட்டி சிலைகளை பிரதிஷ்டை செய்தார். சுந்தரர் திருமுதுகுன்றம் தலத்தை தரிசிக்க சென்றபோது இத்தலத்தை வணங்காமல் சென்றார். இறைவன் அந்தணராக வந்து சுந்தரர் முன்செல்ல சுந்தரர் அவரைத் திருமுதுகுன்றத்திற்கு வழி யாதெனக் கேட்டார். அந்தணராக வந்த இறைவனோ கூடலையாற்றுருக்கு வழி இது என்று கூறி மறைய திடுக்கிட்ட சுந்தரர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டார். சுந்தரமூர்த்தி நாயனார் வந்த அந்தணர் சிவபெருமானே என்று அறிந்து இறைவன் திருவருளை வியந்து தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் கூடலையாற்றூர் இறைவன் தன் முன் வந்த அதிசயத்தை தான் அறிந்து கொள்ளாமல் போனதை குறிப்பிடுகிறார். தனது பாடல்கள் பத்தினையும் பாடுபவர்களது வினைகள் பற்றுகள் அனைத்தும் கெடுவது உறுதி என்று கடைசி பாடலில் குறிப்பிடுகிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.


சித்தர்களின் உடலை ஏன் எரிக்காமல் ஜீவ சமாதி செய்கிறார்கள்?

பெருமையற்றவர் உடல் எரிக்கப்பட்டு பெருமையுள்ளவர் உடல் புதைக்கப் படவேண்டும் என்று திரு மூலர் சொல்கிறார்.

ஞானியர் தங்கள் உடலையே கோவிலாக கொண்டு வாழ்பவர்கள். அந்த உடலுக்கு தீவைப்பது திருக்கோவிலுக்கே தீவைப்பதற்க்கு சமனாகும். அவ்வாறு செய்தால் மண்ணில் மழையின்றி கொடிய பஞ்சம் ஏற்படும். மன்னர் அரசாட்சியை இழக்க வேண்டி வரும். அத்துடன் ஞானியரின் உடல்கள் அடக்கம் செய்ய ஆட்கள் இல்லாது மண்ணில் கிடந்தது அழிந்தால் அந்த நாட்டின் அழகு எல்லாம் கெட்டு நாடு வீழ்ச்சியடைந்து பெருந்துன்பம் ஏற்படும் என்றும் இவர்கள் உடல் மண்ணில் அடக்கம் செய்வதால் நாட்டு மக்களுக்கு பல நன்மைகள் கிட்டும் என்றும் நாடுவளம் பெறுவதுடன் நாட்டு மக்களுக்கும் நல்லருள் கிடைக்கும் என்று சொல்கிறார் திருமூலர்

இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வெளியே வந்து வெவ்வேறு இடங்களில் நடமாடி மீண்டும் அடக்கமாகின்றார்கள். இதனால் இவர்களை அடக்கம் செய்தததாக சொல்லாமல் ஜீவ சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -18

வைஷ்ணவ யக்ஞம் இனிதாக அஸ்தினாபுரத்தில் நிறைவேறியது. யாகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த அரசர்கள் அனைவரும் பரம திருப்தி அடைந்தனர். ஆயினும் இந்திரப்பிரஸ்தத்தில் யுதிஷ்டிரன் செய்த ராஜசூய யாகத்திற்கு இணையாகது என்பது வந்திருந்த அறிஞர்கள் கருந்தாக இருந்தது. வந்திருந்த மன்னர்கள் அனைவரும் முறைப்படி கௌரவிக்கப்பட்டு திருப்தியாக திருப்பி அனுப்பப்பட்டனர். யக்ஞம் சிறப்பாக நிறைவேறுவதற்கு கர்ணன் எடுத்துக் கொண்ட முயற்சி காரணமாக இருந்த படியால் துரியோதனன் கர்ணனை மனமாற பாராட்டி தனது நன்றியை கூறினான். அப்போது கர்ணன் தன் உயிர் வாழ்ந்திருக்கும் காலம் எல்லாம் துரியோதனனுக்கு பணிவிடை செய்வேன் என்றும் அர்ஜுனனைக் கொல்லும் வரையில் தான் மது மாமிசம் அருந்த போவதில்லை என்று கர்ணன் விரதம் பூண்டான். இத்தீர்மானம் தக்க வேவுக்காரர்கள் மூலம் பாண்டவர்களுடைய காதுக்கு இச்செய்தி எட்டியது.

கர்ணன் மற்றுமொரு பாராட்டுதலுக்குரிய விரதம் எடுத்துக் கொண்டான். தன்னிடத்தில் இருப்பவற்றை யார் தானமாக கேட்டாலும் அதை அவர்களுக்கு அக்கணமே எடுத்துக் கொடுத்து விடுவேன் என்பது அப்பொழுது அவன் எடுத்துக்கொண்ட விரதம் ஆகும். அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் அவன் கொண்டிருந்த இந்த விரதமே கர்ணன் சிரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாகும்.

துர்வாச மகரிஷி அஸ்தினாபுரத்தில் துரியோதனனை வந்து சந்தித்தார். இந்த மகரிஷி பல ஆண்டுகளுக்கு முன்பு பாண்டவர்களின் தாயாகிய குந்திதேவி சிறுமியாய் இருந்த பொழுது நாம் விரும்பிய தேவதையை தன்னிடத்தில் ஆவாஹனம் பண்ணி கொள்ளும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்திருந்தார். இம்மகரிஷி 10000 சிஷ்யர்களுடன் அஸ்தினாபுரத்தில் துரியோதனனிடம் விருந்தோம்பலை எதிர்பார்த்து நின்றார். முன்கோபமே வடிவெடுத்த முனிவரை திருப்திபடுத்த துரியோதனன் விரும்பினான். அவரை திருப்திப்படுத்தவில்லை என்றால் அவர் கோபித்துகொண்டு யாரையும் சாபம் அளிக்கும் வல்லமை அவரிடம் இருந்தது. அவரிடம் இருக்கும் தெய்வீகத்தன்மையை துரியோதனன் நன்கு அறிந்திருந்தான். ஆகையால் மிகவும் ஜாக்கிரதையாக பக்தி பூர்வமாக துரியோதனன் அவருக்கு பணிவிடை பண்ணினான். துரியோதனன் புரிந்த பணிவிடைக்கு துர்வாச மகரிஷி பரம திருப்தி அடைந்தார். அவனுக்கு வேண்டிய வரத்தை கேட்கலாம் என்று துரியோதனனிடம் அவர் மகிழ்வுடன் கேட்டார். தனக்கு வாய்ந்த இந்த சந்தர்ப்பத்தை துரியோதனன் நன்கு பயன்படுத்திக் கொண்டான்.

தாங்கள் குருவம்சத்தின் ஒரு பகுதியாகிய கௌரவர்களிடம் தங்களின் விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டீர்கள். அதுபோல் காம்யக வனத்தில் இருக்கும் குரு வம்சத்தின் இன்னொரு பகுதியாக இருக்கும் பாண்டவர்களின் இருப்பிடம் செல்ல வேண்டும். அங்கு திரௌபதி எவ்வளவு பேர் வந்தாலும் அனைவருக்கும் உணவு கொடுத்து விருந்தோம்பல் செய்யும் சக்தியை பெற்றிருக்கின்றாள். பாண்டவர்கள் அனைவரும் நண்பகல் உணவு சாப்பிட்ட பின்பு அவர்களிடம் நீங்கள் உங்கள் விருந்தோம்பலை கேட்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -17

வனத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் அஸ்தினாபுரத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்தது. பீஷ்மர் துரியோதனனை சபா மண்டபத்திற்கு வரவழைத்து அறநெறி பிறழாத பாண்டவர்களிடம் துரியோதனன் செய்த செயலை கண்டித்தார். துரியோதனன் பீஷ்மர் கொடுத்த புத்திமதியை பொருட்படுத்தவில்லை. பீஷ்மர் பாண்டவர்களை எப்பொழுதும் புகழ்வதாகவும் தன்னை இகழவும் செய்கின்றார். ஆனாலும் எனக்கு தீங்கு ஏதும் வரவில்லை. நான் நன்கு வாழ்ந்து வருகின்றேன் என்று தன் தொடையை தட்டி பலத்த ஓசை பண்ணிவிட்டு அங்கு பீஷ்மரை அவமதிக்கும் பாங்கில் அங்கிருந்து வெளியேறினான்.

துரியோதனன் கர்ணனிடம் யுதிஷ்டிரன் நடத்திய ராஜசூய யக்ஞத்தை பார்த்த நாள் முதல் அத்தகைய வேள்வி ஒன்றை தானும் நடத்தி மாமன்னன் என்ற உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்று ஆசை இருக்கின்றது என்று தன்னுடைய எண்ணத்தை தெரிவித்தான். அதற்கு கர்ணன் அவனுடைய ஆசையை முற்றிலும் ஆமோதித்து ராஜசூய யக்ஞம் நடத்துவதற்கு முதலில் இவ்வுலகில் இருக்கும் மன்னர்கள் அனைவருடைய அனுமதியையும் பெறவேண்டும். தான் இந்த நிலவுலகை சுற்றிவந்து அனைத்து மன்னர்களின் அனுமதியையும் பெற்று யக்ஞம் நடத்தி உனக்குரிய உயர்ந்த அந்த பதவியை பெற்று தருகின்றேன். நான் இந்த நிலவுலகை சுற்றி வருவதற்குள் நீ யக்ஞம் நடத்த ஏற்படு செய்வாயாக என்று கூறினான்.

ராஐசூய யக்ஞம் நடத்துவதற்கு புரோகிதர்களிடம் அபிப்பிராயம் கேட்கப்பட்டது. புரோகிதர்கள் இதற்கு சம்மதம் கொடுக்கவில்லை. ஏற்கனவே ராஐசூய யக்ஞம் நடத்திய யுதிஷ்டிரன் வாழ்ந்திருக்கும் போது துரியோதனன் மற்றொரு ராஐசூய யாக்ஞம் நடத்துவது பொருந்தாது மற்றும் மன்னராகிய திருதரஷ்டிரர் இருக்கும் போது அவருடைய மகன் யக்ஞம் நடத்துவது பொருந்த செயல் என்று தங்களுடைய அபிப்பிராயத்தை தெரிவித்தார்கள். இப்போது துரியோதனன் தன்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்கு வேறு ஒரு உபாயத்தை எடுத்துரைத்தான். வைஷ்ணவ யக்ஞம் சீரிலும் சிறப்பிலும் ராஜசூய யக்ஞத்துக்கு நிகரானது. ஆகவே வைஷ்ணவ யக்ஞம் செய்வதற்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டான். அனைவரும் சம்மதம் கொடுத்தார்கள். யக்ஞத்திற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்ய ஆரம்பித்தார்கள். அக்கம் பக்கம் இருக்கும் அனைத்து மன்னர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டன.

காம்யக வனத்தில் இருக்கும் பாண்டவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அழைப்புகள் எடுத்துச்சென்றவர்கள் முறையாக அனைத்து விஷயங்களையும் பாண்டவர்களிடம் எடுத்துரைத்தனர். அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட யுதிஷ்டிரன் யக்ஞம் இனிது நிறைவேற வேண்டும் என்று ஆசிகள் கூறி பதிமூன்று வருடங்கள் வன வாசத்தில் இருக்கும் காரணத்தால் தங்களால் வரஇயலாது என்று கூறினான். அப்போது பீமன் அழைக்க வந்தவர்களிடம் எங்களுடைய பதிமூன்று வருட வனவாசத்திற்கு பிறகு நாங்கள் ஒரு யக்ஞம் செய்வோம். அந்த யக்ஞத்திற்கு திருதராஷ்டிரரின் மைந்தர்கள் அனைவரும் ஆஹீதியாக்க படைக்கப்படுவார்கள் இந்த செய்தியை துரியோதனனிடம் தெரிவிக்கவும் என்று கூறினான். அழைக்கவந்தவர்களும் நடந்தவைகள் அனைத்தையும் அரண்மனையில் தெரிவித்தார்கள்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -16

கந்தர்வர்களின் தலைவனான சித்திரசேனனிடம் அர்ஜுனன் வேண்டுதல் ஒன்றை வைத்தான். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் யுதிஷ்டிரன் முன்பு நிறுத்தும் படியும் யுதிஷ்டிரன் கூறும் தண்டனையை இவர்களுக்கு கொடுக்கும்படியும் வேண்டுகோள் வைத்தான். இதற்கு சித்திரசேனன் முழுவதும் சம்மதம் கொடுத்தான். கௌரவர்கள் அனைவரும் யுதிஷ்டிரன் முன்பு அழைத்துச் செல்லப்பட்டனர். துரியோதனன் செய்த பிள்ளைக்காக யுதிஷ்டிரன் அவனை சிறிது கடிந்து கொண்டான். இதுபோன்ற பொருளற்ற நடவடிக்கை ஏதும் இனி செய்ய வேண்டாம் என்றும் தலைமை பட்டணத்திற்கு திரும்பிப்போய் அமைதியாக வாழவேண்டும். பகையால் பயனேதுமில்லை. இப்போது நிகழ்ந்துள்ள தௌர்பாக்கியங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு இன்புற்று வாழ்ந்து இருக்கும்படி துரியோதனனுக்கு புத்திமதி கூறி அனுப்பி வைத்தான். துரியோதனன் வெட்கத்தாலும் அவமானத்தாலும் முகம் வாடிப்போனவனாக அங்கிருந்து கிளம்பினான். உடன் வந்தவர்கள் அனைவரையும் அஸ்தினாபுரம் அனுப்பிவிட்டு அவன் தனியாக ஓரிடத்தில் தங்கினான்.

துரியோதனன் திரும்பி வந்ததை அறிந்த கர்ணன் திட்டப்படி துரியோதனன் காரியத்தை நிறைவேற்றி வந்திருக்கிறான் என கருதி துரியோதனனை கர்ணன் பாராட்டினான். ஆனால் துரியோதனனோ தனக்கு நேர்ந்த தௌர்பாக்கியத்தையும் யுதிஷ்டிரனின் மேன்மை தாங்கிய எண்ணமே தன்னை கந்தர்வர்களிடம் இருந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தது என்றும் தெரிவித்தான். தான் வெறுக்கும் பாண்டவர்களால் தன்னுடைய உயிர் காப்பாற்றப்பட்டதை எண்ணி மேலும் உயிர் வாழ்ந்திருக்க துரியோதனன் விருப்பமில்லை. துச்சாதனனை சிம்மாசனத்தில் அமர்த்தி வைத்து விட்டு பட்டினி கிடந்து உயிர் துறக்க தீர்மானித்தான் துரியோதனன்.

அவனுடைய தம்பிமார்கள் அவனுடைய பாதங்களில் விழுந்து கும்பிட்டு அத்தகைய தீவிர நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டார்கள். துரியோதனன் தான் கொண்டிருந்த தீர்மானத்தில் இருந்து மாறவில்லை. அனைத்தையும் கேட்ட கர்ணன் அப்படி செய்வது பயங்கர பயந்தாங்கோலித்தனம் என்றும் க்ஷத்ரியன் ஒருவனுக்கு அது சரியானது இல்லை என்றும் தங்களை ஆண்டுவந்த வேந்தனுக்கு செய்ய வேண்டிய கடமையை தானே பாண்டவர்கள் செய்தனர் என்றும் கர்ணன் நிலைமையை எடுத்துக் காட்டி துரியோதனன் கொண்டிருந்த தீர்மானத்தில் இருந்து பின் வாங்குமாறு கூறினான். ஆனால் துரியோதனன் தான் கொண்டிருந்த தீர்மானத்தில் இருந்து பின் வாங்காதவனாக தென்பட்டான்.

அத்தருணத்தில் தானவர்களும் தைத்யர்களும் துரியோதனன் முன்னிலையில் வந்து தேவர்களால் தங்களுக்கு நேர்ந்த கஷ்டத்தை எடுத்து விளக்கினார்கள். தேவர்களோடு போர் புரிய அவர்கள் தீர்மானித்து இருந்தார்கள். துரியோதனன் மடிந்து போனால் தங்களுடைய போர் வலிமை குறைந்துவிடும். பாண்டவர்களுக்கு துணை புரிய தேவர்கள் முன்வந்திருக்கிறார்கள். தேவர்களைத் தோற்கடிப்பதன் வாயிலாக பாண்டவர்களை தோற்கடிப்பது உறுதி என்று அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். அரக்கர்கள் கொடுத்த இந்த வாக்குறுதி துரியோதனனுக்கு புதிய வல்லமையை கொடுத்தது இத்தகைய புதிய நம்பிக்கை அடைய பெற்றவனாக துரியோதனன் அஸ்தினாபுரம் திரும்பி வந்தான்.

ஆருத்ரா தரிசனம்

பிறப்பே எடுக்காத ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி?

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி இரண்டு புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் ஓர் விளகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் வந்தார் சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார். சேந்தனார் வீட்டுக்கு களி உண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம் ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில் இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில் திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும் ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான். திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா என்று கூறிக் கதறி அழுதாள். அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள் இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது.

சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சிவபெருமான் பக்தர்களுக்காக இப்பூமியில் நின்ற நாள் ஆருத்ரா நன்னாள்.

காயத்திரி மந்திரம்

விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம். ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புன்னிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்தித்தார். காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள். 5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள். இந்த மந்திரத்தை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும். 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. காயத்திரி என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு காயத்திரி மந்திரம் என்ற பெயர் ஆயிற்று.

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம் எனக் குறிப்பிட்டுள்ளார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் நதிகளில் நான் கங்கையாகவும் மலைகளில் நான் விந்திய மலையாகவும் மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறுகையில் பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும் காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம் தான். ஆனால் மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு ரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம் எனக் குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தி (1869—1948) அவர்கள் யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக்கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார். காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் உயர் அறிவு சக்தியினை அளித்து அறியாமையை நீக்க வேண்டும் என்பதாகும். இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன. காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது. வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.

காயத்திரி மந்திரம்:

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

7 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிப்பது மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

11 நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பது நரம்பு மண்டலத்திலும் சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

22 நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பது ஒருவரின் அழிவுப்பூர்வ ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

31 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிப்பது மூளையின் க்ரே பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

150 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிப்பது உயர்நிலையினை மனம் மற்றும் மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாக இருக்கும்.

மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் பற்றி இதுவரை விஞ்ஞான ஆய்வுகள் செய்யப்படவில்லை. என்றாலும் அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன.

கைலி கட்டும் அரங்கன்

ஸ்ரீரங்கம் கோயிலில் அர்ஜுன மண்டபம் வடகிழக்கு ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது. கிழக்கு பதிப்பகத்தால் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட மதுரை சுல்தான்கள் புத்தகத்தில் துலுக்க நாச்சியார் பற்றிய சித்திரம் மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. துலுக்க நாச்சியார் என்பவர் அரங்கநாதரின் மேல் காதல் கொண்ட சுரதானி என்ற இயற்பெயர் கொண்ட இசுலாமியப் பெண்ணாவார். இசுலாமிய வழக்கப்படி அகிலும் சந்தனமும் கலந்த தூபப்புகை போடுவது இச்சந்நிதியில் நடைபெறுகிறது. இவருக்கு அரங்கநாதர் இசுலாமியர்களைப் போல கைலி ஆடையுடன் காட்சியளிக்கிறார்.

மாலிக் கபூர் தில்லியை ஆண்ட அலாவுதீன் கில்சியின் தலைமைப் படைத்தலைவர். தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி காஞ்சிபுரம் கோயில்கள், சிதம்பரம் நடராசர் கோயில், திருவண்ணாமலை, திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில்களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்ததுடன் கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார். திருவரங்கத்தினை கொள்ளையடித்த போது டில்லிக்கு அரங்கநாதர் விக்ரகத்தினையும் கொண்டு சென்றார்கள். ரங்கநாதரின் உற்சவர் விக்ரகத்தை தில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்திவந்த சுல்தானிடம் அந்த விக்ரகம் ஒப்படைக்கப்பட்டது. அந்த விக்ரகத்தைப் பார்த்த சுல்தானின் மகள் அதை ஒரு விளையாட்டுப் பதுமையாகக் கருதி தன் அறையிலேயே வைத்துக் கொண்டு அந்த அரங்கனை உளமார நேசிக்கவும் ஆரம்பித்தாள்.

அரங்கன் ஆக்கிரமிப்பாளர்களுடன் டில்லி செல்வதைப் பார்த்த ஒரு பெண்மணி திருக்கரம்பனூரைச் சேர்ந்தவள். தானும் அவர்களைப் பின் தொடர்ந்து டில்லி சென்றாள். அவள் மூலமாகத்தான் அரங்கன் தில்லிக்குச் சென்றுவிட்ட விவரம் இங்கிருப்போருக்குத் தெரிய வந்தது. இவ்வாறு அரங்கனை மீட்டுக் கொண்டுவர தன்னாலியன்ற சேவையினைப் புரிந்ததால் அந்தப் பெண்மணியை பின் சென்ற வல்லி என்று போற்றி வைணவம் பாராட்டுகிறது. அரங்கனை மீட்க எண்ணி தலைமை பட்டருடன் பின்சென்ற வல்லி என்ற நாட்டியப் பெண்ணும் அவளது இசை நாட்டிய குழுவுமாக ஒரு அறுபது பேர் டில்லி சென்று அரசரை இசையில் மகிழ்வித்து அரங்கனைத் திருப்பித் தரக் கேட்கிறார்கள். தன் மகளிடம் இருப்பவர்தான் அரங்கன் என்பதை அறிந்த மன்னர் அரங்கனை கொண்டு செல்ல அனுமதி தந்து அவர்களுடைய மத உணர்வுக்கு மதிப்பளித்து அந்த விக்ரகத்தைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு தன் மகளிடம் சொன்னான்.

இளவரசி கொடுக்க மறுக்கிறாள். இளவரசியிடமிருந்து பெறுவது சுலபமாகயில்லை. அதனால் இசைக்குழு இளவரசியை பாடல்கள் பாடி ஏமாற்றித் தூங்கவைத்து அரங்கனை எடுத்துவந்து விடுகிறார்கள். இளவரசி கண்விழித்து தன் அறையில் அரங்கனைக் காணாமல் தொலைந்தது அறிந்து பதறி நோய்வாய்ப் படுகிறாள். மன்னன் கவலையுற்று தன் படையை ஸ்ரீரங்கம் அனுப்பி அரங்கனையும் எடுத்துவரப் பணிக்கிறார். அரங்கனின் வடிவழகில் மனம் பறிகொடுத்திருந்த அந்தப் பெண்ணோ மிகுந்த மன வருத்தத்துடன் அந்த அழகனைத் தான் நேரில் காணும் பொருட்டு நேரே திருவரங்கத்திற்கே வந்துவிடுகிறாள். டில்லியில் இருந்து இளவரசி வந்திருப்பதை அறிந்த தலைமை பட்டரோடு சிலர் தாயார் சிலைக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து வில்வ மரத்தினடியில் தாயாரைப் புதைத்து விட்டு அரங்கனோடு தலைமறைவாகி விடுகின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலிலும் அரங்கன் இல்லாமல் கோவில் மூடியிருப்பதைக் கண்டு தன் கற்பனையில் அவள் உருவாக்கி வைத்திருந்த உருவம் அங்கே காணக்கிடைக்காததால் மனம் வெதும்பி அங்கேயே மயக்கமடைந்து இறந்து அரங்கன் திருவடி சேர்ந்தாள். அவள் உடலிலிருந்து ஒரு ஒளி மட்டும் கோவிலுக்குள் செல்வதைச் சுற்றி இருந்தவர்கள் பார்க்கிறார்கள். அதன் பிறகு அவளின் தந்தை ஏராளமான செல்வத்தைக் கோவிலுக்கு எழுதிவைத்தார்.

முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாதென்பதால் அரங்கன் சன்னதியிலேயே பிரகாரத்தில் கிளிமண்டபத்திற்கெதிராக அவளை ஒரு சித்திரமாக மட்டும் வரைந்து ஒரு சன்னதியில் வைத்து துலுக்க நாச்சியார் என்ற பெயரில் வழிபாடு நடக்கின்றது. பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் இடத்துக்கு அருகிலுள்ள அர்ச்சுன மண்டபத்தில் அவள் ஓவியமாய் இன்றைக்கும் மிளிர்கிறாள். மதம் கடந்த அங்கீகாரமாக இன்றும் அரங்கனுக்கு காலையில் லுங்கி போன்ற வஸ்திரம் அணிவித்து அவர்கள் உணவாக ரொட்டி வெண்ணை நைவேத்தியம் செய்கிறார்கள். இந்த ரொட்டி நம்முடையது போல் இல்லாமல் லேசாக வெல்லம் கலந்து இனிப்பாக இருக்கும். மிக மிக மெல்லியதாக இருக்கும் ரொட்டிக்கு தொட்டுக் கொள்ள வெண்ணை. திருமஞ்சன காலங்களில் வேட்டிக்குப் பதில் லுங்கி வஸ்திரம். அரங்கனுக்கு வெந்நீரில் மட்டுமே திருமஞ்சனம். வெந்நீர் சூட்டை மணியக்காரர் கையில் வாங்கி சரியான பதம் என்று ஆமோதித்தபின் தான் செய்ய வேண்டும்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -15

கந்தர்வர்கள் கௌரவர்களின் கையை கட்டி கைது செய்து காம்யக வனத்திற்குள் பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். கௌரவர்களின் கதியை பார்த்து பீமன் அகமகிழ்வு எய்தி மிக நன்று மிக நன்று என்று கத்தினான். எங்களை ஏளானம் செய்ய திட்டம் போட்டவர்களின் வினைப்பயன் அவர்களையே சூழ்ந்து கொண்டது என்று கத்தினான். பழிக்குப்பழி வாங்கும் செயலை நாங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் எங்களின் பிரதிநிதிகளாக கந்தர்வர்கள் இச்செயலை செய்து விட்டார்கள் என்று உரக்க கூறினான். பீமனுடைய பேச்சை யுதிஷ்டிரன் ஆமோதிக்கவில்லை. நம்முடைய குடும்ப தகராறுகள் நம்முடனே இருக்கட்டும். எக்காரணத்தை முன்னிட்டும் வேற்றார் வந்து நம்முடைய உறவினர்களை தாக்குவதற்கு நாம் ஒரு போதும் அனுமதி தரக்கூடாது. அது மட்டுமில்லாமல் குடும்ப பெண்களையும் அவர்கள் சிறைபிடித்துச் செல்கின்றார்கள். குருவம்சத்துக்கு ஆபத்து என்று ஏதேனும் ஒன்று வந்தால் பாண்டவர்களாகிய நாமும் கௌரவர்களும் ஒன்று சேர்ந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று பீமனிடம் யுதிஷ்டிரன் கூறினான்.

துரியோதனன் தங்களை காப்பாற்றுமாறு தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டிருந்தது பாண்டவர்களுக்கு கேட்டது. யுதிஷ்டிரன் தனது சகோதரர்களிடம் யாரேனும் ஒருவர் ஆபத்தில் அகப்பட்டு இருந்தால் அவர்களை காப்பாற்றுவது என்பது ஒரு பொது விதி. இப்போது ஆபத்தில் நமது உறவினர்கள் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை காப்பற்ற நாம் அதிவிரைவாக ஒட நாம் கடமைப் பட்டிருக்கின்றோம். மேலும் துரியோதனன் காப்பாற்றுமாறு நம்மிடம் உதவி கேட்கிறான். இப்போது நான் யாக்ஞத்தில் ஈடுபட்டிருப்பதால் ஆயுதம் எதையும் கையாளலாகாது. ஆகையால் நீங்கள் நால்வரும் நமது உறவினர்களை காப்பாற்ற விரைந்து செல்லுங்கள் என்று உத்தரவிட்டார்.

யுதிஷ்டிரரின் ஆணைக்கு உட்பட்டு பாண்டவ சகோதரர்கள் நால்வரும் தங்களுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கந்தர்வர்களோடு வீராவேசத்தோடு போர்புரிந்தார்கள். இந்தப்போராட்டம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது கந்தர்வர்களின் தலைவன் சித்தரசேனன் தான் இன்னானென்று காட்டிக்கொண்டு அர்ஜூனன் முன் வந்து நின்றான். இவ்வளவு நேரம் பயங்கரமாக போரிட்டு வந்த அர்ஜூனன் இந்திரலோகத்தில் தனக்கு குருவாக இருந்த சித்திரசேனனை பார்த்ததும் அவர் முன்பு வீழ்ந்து வணங்கினான். யுத்தம் நிறுத்தப்பட்டது. கௌரவர்களை ஏன் கைது செய்து அழைத்துச் செல்கின்றீர்கள் என்று இந்திர லோகத்து குருவான சித்திரசேனனிடம் மிகுந்த வணக்கத்துடன் அர்ஜூனன் கேட்டான்.

அதற்கு சித்திரசேனன் கஷ்டதிசையில் இருக்கும் பாண்டவர்களை பரிகாசம் செய்யும் பொருட்டு கௌரவர்கள் ராஜரீதியில் உடை அணிந்து ஆடம்பரமாக வனத்திற்குள் வந்தார்கள். அவனது நோக்கத்தை அறிந்து வந்த நாங்கள் அவனை தண்டித்தல் பொருட்டு கைது செய்து அழைத்துச் செல்கின்றோம் என்றார்.

தொடரும்………