அகலிகை வரலாறு

தேவலோகத்தில் இருந்த ஊர்வசி தான் தான் அழகு என்று எண்ணி அகங்காரம் கொண்டிருந்தாள். அவளது ஆணவத்தை அடக்க பிரம்மா நீரிலிருந்து அகலிகையை மிக அழகுடன் படைத்தார். இவள் பிரம்மனின் மானசீக மகளாவாள் இவளது பெயருக்கு மாசு அற்றவள் என்றும் தனது உடலில் அழகில்லாத பகுதி சிறிது இல்லாதவள் என்று பொருள். அவளை மணக்க அனைவரும் போட்டி போட்டனர். எனவே சுயவர போட்டி நடத்த பிரம்மா முடிவு செய்தார். அகலிகையை மணக்க சுயவர போட்டி நடந்தது. யார் முதலில் முன்பும் பின்பும் தலை உள்ள பசுவை மூன்று முறை முதலில் வலம் வருகிறார்களோ அவர்களுக்கே அகலிகை என்ற போட்டியை பிரம்மா வைத்தார். முன்னும் பின்னும் தலை உள்ள பசு மூன்று உலகத்திலும் எங்கும் இல்லை ஆகவே வேறு ஏதேனும் சொல்லுங்கள் என்று தேவர்கள் பிரம்மாவிடம் கோரிக்கை வைத்தார்கள். மூன்று உலகத்தையும் யார் முதலில் சுற்றி வருகின்றார்களோ அவர்களுக்கே அகலிகை என்று இரண்டாவது போட்டியை பிரம்மா அறிவித்தார். இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் யார் முதலில் வெற்றி பெருக்கின்றார்களோ அவர்களுக்கு அகலிகை மனைவியாவாள் என்று பிரம்மா அறிவித்தார்.

இந்திரன் மாய வேலைகள் செய்து அகலிகையை அடைய எண்ணியிருந்தான். தேவர்கள் அவர்களுக்கான வாகனத்தில் மூன்று உலகத்தையும் சுற்ற போட்டி போட்டுக்கொண்டு கிளம்பினார்கள். நடப்பது அனைத்தையும் எட்டி நின்று பார்த்தார் நாரதர். கௌதம முனிவர் ஆஸ்ரமத்தில் அவருக்குப் பணிவிடை செய்ய ஏற்றவள் அகலிகை. ஆகவே அகல்யாவை கௌதம முனிவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நாரதர் திட்டம் திட்டினார். எனவே பூரண கருவுற்றிருந்த ஒரு பசுவை ஓட்டிக்கொண்டு கௌதம முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தார். கௌதமரை வெளியே அழைத்தார். அந்தப் பசு அப்போது கன்றை ஈன ஆரம்பித்தது. பசுவின் பின்புறம் கன்றின் முகம் முதலில் தோன்றியது. உடனே நாரதர் கௌதமரை அந்தப் பசுவை மூன்று முறை வலம் வரச்செய்தார். கௌதமர் இரண்டு தலைகளை உடைய பசுவை இப்போது மூன்று முறை சுற்றி வந்துவிட்டார். நாரதர் கௌதம மகரிஷியை பிரம்மதேவரிடம் அழைத்துப்போய் நடந்ததைக் கூறி கௌதமர் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டார். எனவே கௌதமருக்கு அகலிகையை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டார்

பிரம்மதேவரும் அகலிகையை கௌதமருக்குத் திருமணம் செய்து வைத்தார். அகலிகையும் மகிழ்ச்சியுடன் கௌதமருடன் இல்லறத்தில் மகிழ்ந்திருந்தாள். அந்த மகிழ்ச்சியில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது அக்குழந்தைக்கு சதானந்தர் என்று பெயர் வைத்தார்கள். ஜனக மகாராஜாவின் புரோகிதராக இருப்பவர் இந்த சதானந்தாரே ஆவார். இந்திரன் மற்றவர்களுக்கு முன்னால் உலகை வலம் வந்து பிரம்மதேவரிடம் அகலிகையைக் கேட்டான். ஆனால் அகலிகைக்குத் திருமணம் ஆகிக் குழந்தையும் பிறந்துவிட்ட கதையைப் பிரம்மதேவர் சொல்ல இந்திரன் ஏமாற்றத்தால் பொருமினான். மனதிற்குள் வன்மத்தை வளர்ந்த இந்திரன் எப்படியும் அகலிகையை அடைய வேண்டும் என்று திட்டம் திட்டினான். தினந்தோறும் அகலிகையையும் கௌதம மகரிஷியின் செயலையும் நோட்டமிட்டான் இந்திரன்.

கௌதம மகரிஷி தினந்தோறும் அதிகாலை குளக்கரைக்கு செல்வதை இந்திரன் அறிந்துகொண்டான். ஒருநாள் விடிவதற்கு முன்பே சேவலாய் மாறி கூவினான். விடிந்து விட்டது என்று எண்ணிய கெளதமர் குளக்கரைக்கு செல்ல வீட்டை விட்டு வெளியேறினார். இந்திரன் கௌதம மகரிஷி போல் உருவத்தை மாற்றிக்கொண்டு அகலிகை இருந்த குடிலுக்குள் சென்றான். தனது கணவர் தான் வந்திருக்கின்றார் என்று எண்ணிய அகலிகை அவருக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தாள். இதனை பயன் படுத்திக்கொண்ட இந்திரன் அவளிடம் நெருக்கமானான். திடீரென தன் கணவன் தன்னை நெருங்கி வருவதை அறிந்த அகலிகை தனது கணவரின் குணாதிசயத்தை போல் தெரியவில்லையே என மனதிற்குள் நினைத்து ஏதோ ஒரு தவறு நடக்கிறது என புரிந்து கொண்டாள். ஆனால் என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

இன்னும் சரியாகப் பொழுது விடியவில்லை என்பதை உணர்ந்த கௌதமர் எதோ தவறு நடக்கப்போகிறது என உணர்ந்து விரைவாக குடிலுக்கு திரும்பினார். கௌதமர் உடனடியாக திரும்பி வந்ததை அறிந்த இந்திரன் பூனை உருவத்திற்கு தன்னை மாற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான். அதனை அறிந்த கௌதமர் பூனை வடிவத்தில் இருப்பது யார் என்று தன் கையில் இருந்த தண்ணிரை பூனை மேல் தெளிக்க இந்திரன் கௌதமரின் உருவத்தை அடைந்தான். தன்னைப்போல் இருப்பவனை பார்த்த கௌதமர் நடந்ததே புரிந்துகொண்டார். உடல் முழுவதும் உனக்கு பெண் உருப்பாக போகட்டும் என்று அவனை சபித்தார். கணவனின் தொடு உணர்வை அறிந்து கொள்ளாமல் கல் போல் இருந்த நீ கல்லாக போவாய் என்று அகலிகையை சபித்தார். அகலிகை உண்மையை உணர்ந்து கௌதமர் காலில் விழுந்து கதறினாள். நீண்டகாலம் காற்றே உணவாக எடுத்துக்கொண்டு கல்லாக இருப்பாயாக. பல காலம் கழித்து இங்கு தசரதன் மகன் அவதார புருஷன் ராமன் ஒருநாள் இங்கு வருவார். இந்த ஆசிரமத்திற்கு வரும் ராமரின் கால்பாதம் உன் மீது பட்டதும் உன் சாபம் பாவம் இரண்டும் நீங்கும். நீ அவரை வரவேற்று உபசரிப்பாய். அப்போது உன்னுடைய இயற்கை குணத்தை அடைந்து மறுபடியும் என்னுடன் வாழ்வாய் என்று கூறினார். இந்திரன் செய்த தவறினால் அறியாமால் தவறுக்கு உடந்தையாக இருந்த அகலிகையை சபித்துவிட்டோமே இந்த பாவத்திற்கு ஈசனின் திருவடி தரிசனம் கிடைத்தால் மட்டுமே இந்த பாவம் போகும் என்று ஈசன் திருவடியை நாடி கௌதம மகரிஷி இமயமலை சென்று தியானத்தில் அமர்ந்து விட்டார்.

இந்த துளசி செடி இருக்கும் கல்லுக்குள் அகலிகையின் ஆத்மா உள்ளது. ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு ஒரு ஆணால் சபிக்கப்பட்டவளே இந்த பெண். ராமா இவளுடைய சாபத்தை உன்னால் மட்டுமே திருப்பி எடுக்க முடியும். இந்த கல்லை உன் பாதங்களால் நீ தொட்டால் சாபத்தில் இருந்து அகல்யா மீள்வாள் இந்த கல்லில் உன் பாதத்தை வை என விஸ்வாமித்திரர் கூறினார். விஸ்வாமித்திரர் கூறியதை போல் தன் பாதத்தை கல்லின் மீது வைத்தார் ராமர். அந்த கல் ராமருடைய ஸ்பரிசத்தால் சாப விமோசனம் பெற்றாள் அகலிகை. ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பெய்ய அவளுடைய கொடிய பாவம் தீர்ந்து தேவகன்னிகை போல் பிரகாசித்தாள். அகலிகைக்கு விமோசனம் கிடைத்ததை அறிந்த கெளதமரும் அங்கே வந்து சேர்ந்தார். கௌதமரும் அகலிகையும் ராமருக்கு உபசரணைகள் செய்தார்கள். அனைத்தையும் ஏற்றுக்கொண்டார் ராமர்.

துர்கா பரமேஸ்வரி அம்மன்

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டீல் என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நந்தினி ஆற்றின் நடுவே அமைந்துள்ளது.

துர்கா பரமேஸ்வரி அம்மன்

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டீல் என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நந்தினி ஆற்றின் நடுவே அமைந்துள்ளது.

ராமாயணம் பால காண்டம் பகுதி -19

பிரம்ம ரிஷி பட்டத்தை பெற்ற விஸ்வாமித்திரருக்கு வசிஷ்ட மகரிஷி தன்னை பிரம்மரிஷியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தன் வாயால் பிரம்ம ரிஷி விஸ்வாமித்ரர் என்று அழைக்கவேண்டும் என்ற வெறியும் அவர் மனதில் இருந்தது. இதனை தன் சுய அறிவினால் பெற்றுவிட முடியும் என்று தன் சத்திரிய குல அரச குணத்தால் அவரின் தவ வலிமைகள் எல்லாம் அவரின் சுய ஆசாபாசங்களுக்காக பயன்படுத்தினார். விஸ்வாமித்திரை சிறந்த பிரம்ம குல ரிஷியாக மாற்ற இந்திரனுக்கு ஆணையிட்டார் பிரம்மா. இந்திரன் தன் சபையில் உள்ள சிறந்த அழகியும் அறிவில் சிறந்தவளுமான மேனகையை அனுப்பினான்.

மேனகை அவர் புத்தி எனும் இரண்டாம் நிலையிலிருந்து மேல் நிலைக்கு செல்ல ஆக்ஞா சக்கரத்தை விஸ்வாமித்திரருக்கு வழங்க முயற்சித்தாள். விஸ்வாமித்திரர் மேனகையின் ஆக்ஞை சக்கரத்தை ஏற்றுக்கொள்ளத் தவறியதுடன் கீழ்நிலையான காமத்தில் லயித்துவிட்டார். அத்துடன் மேனகையை மனைவியாக ஆக்கிக்கொண்டார் விஸ்வாமித்திரர். இவர்கள் இருவருக்கும் சகுந்தலை என்ற மகள் பிறந்தாள். இப்போது உணர்வு நிலைக்கு வந்த விஸ்வாமித்ரர் தன் தவம் மேனகையால் கலைக்கப்பட்டதாலும் தன் தவ பலன்களை அனைத்தும் விரயமானதால் மேனகையை விசுவாமித்திரர் சபித்து மீண்டும் தவத்தில் ஈடுபட்டார். விஸ்வாமித்திரர் தனது மனைவி மக்களை விட்டுவிட்டு கடுந்தவம் செய்வதற்காகத் தனிமையான இடம் ஒன்றைத் தேடிச் சென்று விட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு கடுந்தவம் செய்த விஸ்வாமித்ரர் உண்ணாமல் மூச்சு விடுவதையும் கூட அறவே குறைத்து கடும் தவம் புரிந்தார்.

அப்போது நாட்டில் மழை பெய்யாமல் கடும் பஞ்சம் ஏற்பட்டது. விஸ்வாமித்ரரின் குடும்பத்தினருக்கு தேவையான உணவு கிடைக்காமல் அவர்கள் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர். விஸ்வாமித்திரரின் குடும்பத்தினர் பட்டினி கிடப்பதை அறிந்த சூரிய வம்சத்து மன்னர் திரியருனியின் மகன் சத்தியவிரதன் அந்தக் குடும்பத்திற்குத் தேவையான உணவினைத் தேடிக் கொண்டு போய்க் கொடுத்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். ஒருநாள் அவனுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. அப்போது வசிஷ்டர் வளர்த்து வந்த பசுக்களில் ஒன்று அவனின் கண்ணில் பட்டது. அந்தப் பசுவைத் திருடிக் கொண்டு சென்ற அவன் அதைக் கொன்று அதன் இறைச்சியை விசுவாமித்திரரின் மனைவி மக்களுக்குக் கொடுத்து தானும் சாப்பிட்டான்.

பசு காணாமல் போனதை அறிந்த வசிஷ்டர் நடந்ததை தனது ஞான திருஷ்டியால் கண்டறிந்தார். அவர் காட்டிற்குள் இருந்த சத்தியவிரதனைச் சந்தித்து பசுவைக் கொல்வது பாவம் அதை கொன்று இறைச்சியையும் சாப்பிட்டு மிகப்பெரிய பாவம் செய்து விட்டாய் என்றார். பசிக்கு உணவில்லாத போது பசு மட்டுமல்ல எதைக் கொன்று சாப்பிடுவதும் தவறில்லை உங்களுடைய அறிவுரை எதையும் கேட்க நான் தயாராக இல்லை என்றான் சத்தியவிரதன். கோபமடைந்த வசிஷ்டர் நல்லுரையைக் கேட்காதது பசுவைக் கொன்றது மற்றும் பசு இறைச்சியை உண்டது என்ற மூன்று பாவங்களுக்காக திரிசங்கு (மூன்று பாவங்களைச் செய்தவன்) என்ற பெயருடன் சண்டாளனாக விளங்குவாய் என்று சத்தியவிரதனுக்கு சாபம் கொடுத்தார்.

கங்கையின் வரலாறு

ஆதிகாலத்தில் அயோத்தியை ஆண்ட இசுவாகு குலத்தில் சகரர் என்பவர் குழந்தைப்பேறின்மையால் இறைவனை வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது முதல் மனைவி சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும் 2 வது மனைவி கேசினி என்பவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தனர். சில காலம் கழித்து சகரர் அசுவமேதயாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தார். சகரர் அசுவமேதயாகம் செய்தால் தன்னுடைய பதவி போய்விடுமோ என்று அஞ்சிய இந்திரன் யாக குதிரையை மறைத்து வைக்க குதிரையை தூக்கிச்சென்று பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மகரிஷியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். அந்த குதிரையை தேடிச்சென்ற சகரரின் புதல்வர்கள் ஆறுபதாயிரம் பேரும் கபிலரின் ஆசிரமத்தில் குதிரை இருப்பதை கண்டு கபிலரை திட்டியதுடன் அவரை துன்புறுத்த துவங்கினார்கள். கோபமடைந்த கபில மகரிஷி அவர்களை சபித்து சாம்பலாக்கி விட்டார். அனைத்தையும் அறிந்த சகரர் மன்னன் கபிலரை வணங்கி தான் செய்யும் அஸ்வமேத யாககுதிரை தங்கள் ஆசிரமத்தில் இருந்ததினால் இந்த குழப்பங்கள் வந்தது. தன் புதல்வர்களை மன்னிக்குமாறும் அவர்கள் சாப விமோசனம் தந்து நற்கதி அடைவதற்கு வழி சொல்லுமாறும் தன் குதிரையை எடுத்துச்செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

சகரரின் வேண்டுகோளை ஏற்ற கபிலமகரிஷி குதிரையை எடுத்துச்செல்ல அனுமதி கொடுத்து மேலுலகத்தில் இருக்கும் கங்கையை பூலோகம் வரவழைத்து இந்த சாம்பலை புனிதப்படுத்தினால் இவர்கள் நற்கதி அடைவார்கள் என்று விமோசம் கூறினார். இதனை கேட்டு மகிழ்ந்த சகரர் குதிரையை எடுத்துச் சென்று அசுவமேத யாகத்தை முடித்தார். முதல் மனைவியின் வாரிசுகள் அறுபதாயிரம் பேரும் சாம்பலானதால் இரண்டாவது மனைவியின் புதல்வன் நாட்டின் அரச பதவியை ஏற்றுக்கொண்டார். அவனுக்குப்பின் அவனது புதல்வன் பகீரதன் ஆட்சி பொறுப்பை ஏற்றக்கொண்ட போது தமது முன்னோர்கள் ஆறுபதாயிரம் பேருக்கு நடந்ததை தெரிந்துகொண்டார். பின்பு நாட்டை துறந்து கங்கையை பூலோகம் கொண்டு வர பிரம்ம தேவரை நினைத்து காட்டில் கடும் தவம் இயற்றினான். இவரின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைந்தார்.

பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடையவேண்டி கங்கை பூமிக்கு வந்து பின் பாதளத்துக்கு வந்து தன் முன்னோர்கள் மோட்சம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக்கொண்டான். அதற்கு கங்கை பகீரதா நான் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்க மாட்டாள். நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன் என்று கூறினாள். பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும் பராக்கிரம சாலிகளிடமும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான். ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்துவிட்டனர். பகீரதன் மஹாவிஷ்ணுவை வேண்ட அவர் இச்செயல் ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும். அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர். அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெறு என்று கூறினார்.

பகீரதன் ஈசனைக் குறித்துத் தவம் இருந்து வேண்டினான் மனம் மகிழ்ந்த ஈசனும் அவனுக்குக் காட்சி அளித்து பகீரதா உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும் உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கை பூமிக்கு வரும் போது எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும். அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன் என்றார். பகீரதனும் கங்கையிடம் ஈசனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க அவளும் மகிழ்வோடு சப்தமிட்டுக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்தாள். ஈசன் தன் சடையை விரித்துப் பிடித்தார். அப்போது கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. நான் மிகவும் வேகமாக வருகின்றேன். என் ஆற்றலையும் வேகத்தையும் இந்த ஈசனால் தாங்க இயலுமா என யோசித்தாள். எல்லாம் வல்ல ஈசன் கங்கையின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டார். நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார். திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவித்து தன் அகங்காரத்தை போக்கிக்கொண்டாள். பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைந்தான் ஈசனை நோக்கி மீண்டும் ஒற்றைக்காலில் தவமிருந்தான்.

பகீரதன் முன் தோன்றிய ஈசன் கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான். வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது. கங்கை வந்த வேகத்தில் அந்த ஆசிரமத்தை முற்றிலும் நீரால் அழித்து முனிவரையும் உருட்டித் தள்ள ஆயத்தமானாள். கோபம் கொண்ட முனிவர் கங்கையை அப்படியே தன் கைகளால் கங்கையை எடுத்து அள்ளிக் குடித்து விட்டார். கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான். முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும் கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான். அவன் நிலை கண்டு இரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார். இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக்கொண்டு தம் மூதாதையரின் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான். சகரர் புத்திரர்கள் அறுபதாயிரம் பேருக்கும் நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்தது.

சிறுவனின் பக்தி

யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள பகுதி ஒன்றில் (இன்றைய மதுரா) ஒரு சின்னஞ்சிறு இடையன் வசித்து வந்தான். அவனுக்கு விளையாட யாரும் தோழர்கள் இல்லாததால் ஒரு சிறு கல்லையே சிவலிங்கமாக கருதி அதை பூஜித்து விளையாடி வந்தான். சேற்றையே சந்தனமாக கருதி அதற்கு இட்டு அழகு பார்த்தான். மேய்ச்சல் நிலத்தில் கிடைத்த சில மலர்களை கொண்டு அதற்கு அர்ச்சனை செய்து மகிழ்ந்தான். நைவேத்தியத்திற்கு கனிகள் கிடைக்கவில்லை என்பதால் பல வகை மண் வகைகளையே உருண்டையாக பிடித்து வைத்து அவற்றை கனிகளாக பாவித்து அந்த சிவலிங்கத்திற்கு படைத்து மகிழ்ந்தான். அவன் வழிபாடு அன்போடும் ஆத்மார்த்தமாகவும் இருந்தது.

இடையர் குலச் சிறுவனின் இந்த பூஜையை பெரிதும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்ட சிவபெருமான் குபேரனின் தனத்தில் இருந்து பெருமளவு எடுத்து அச்சிறுவனுக்கு கொடுத்து அவன் பூஜித்து வந்த அந்த கல்லை ரத்தின லிங்கமாக மாற்றிவிட்டார். அவனுடைய வீடும் சகல செல்வங்களாலும் நிரம்பி ரத்தின மயமாக காட்சியளித்தது. திடீரென தான் பூஜித்து வந்த சிவலிங்கமானது ரத்தினக் கல்லாகவும் தனது வீடு உள்ளிட்ட அனைத்தும் செல்வத்தால் நிரம்பி வழிவதைக் கண்ட அந்த சிறுவன் வியப்படைந்தான். அப்போது அவன் முன்னர் பிரத்யட்சமானார் சிவபெருமான். தான் ஏக்கத்தோடு பணிந்து பூஜித்து வந்த சிவபெருமான் தன் முன் நிற்பதை கண்ட அந்த பாலகன் அவரை பணிந்து பலவாறு துதித்தான்.

சிவபெருமான் அந்த சிறுவனை நோக்கி குழந்தாய் நீ செய்துள்ள புண்ணியத்தால் இனி உன் பெயர் ஸ்ரீகரன் என்று வழங்கப்படும். மேலும் உன் வம்சத்தில் நந்தகோபன் என்கிற மகன் பிறப்பான். அவரிடம் மகாவிஷ்ணுவே மகனாக வளர்வார். நமது நல்லாசிகள் என்று கூறிவிட்டு மறைந்தார். அதன் பிறகு அந்த சிறுவன் பல காலம் சிவபூஜை செய்தபடி வாழ்ந்துவிட்டு அனைத்து விதமான இன்பங்களையும் துய்த்துவிட்டு இறுதியில் சிவலோகப் ப்ராப்தி அடைந்தான்.

கருத்து: எவ்வளவு பெரிய மற்றும் சிறிய யாகங்கள் பூஜைகள் செய்தாலும் எந்த எண்ணத்தில் செய்கின்றோம் என்பதே முக்கியமானது.

ராமாயணம் பால காண்டம் பகுதி -18

வசிஷ்டரிடம் சென்ற கௌசிகன் தாங்கள் முற்றும் துறந்த முனிவர் தங்களுக்கு இந்த நந்தினி காமதேனு பசு தேவையில்லை. நாட்டை ஆளுகின்ற என்னிடம் இருப்பதே சரியானது. என்னிடம் இந்த பசு இருந்தால் நான் கேட்டதை பெற்று நாட்டிற்கு மேலும் நன்மை அளிக்க இயலும் ஆகவே இந்த பசுவை என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டார். வசிஷ்டர் கொடுக்க மறுத்துவிட்டார். தங்களுடைய இந்த ஒரு பசுவுக்கு இணையாக 1000 பசுக்களை கொடுக்கின்றேன் கொடுங்கள் என்று கேட்டார் கௌசிகன். ஆனால் வசிஷ்டர் மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த கௌசிகன் காமதேனு பசுவை பலவந்தமாக எடுத்துச்செல்ல முற்பட்டான். வசிஷ்டரின் தவபலனுக்கு முன்னால் தன் வலிமையால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன் படைகள் அனைத்தையும் அனுப்பி காமதேனு பசுவை எடுத்துச்செல்ல முற்பாட்டான். வசிஷ்டர் தன்னுடைய தண்டத்தை முன்னால் போட அனைத்து படைகளும் அழிந்து போனது.

அரசனின் படை பலம் அதிகார வலிமையை விட தவ பலனே அதிகம் என்பதை உணர்ந்தான் கௌசிகன். வசிஷ்டர் கௌசிக மன்னனிடம் பிரம்ம ரிஷிகளுக்கு மட்டுமே காமதேனு பசுக்கள் கட்டுப்படும் நீங்கள் பிரம்மரிஷியானால் காமதேனு பசுவை தருகிறேன் என்றார். தவம் செய்தாலும் சத்ரியனான தாங்கள் எளிதில் பிரம்மரிஷி பட்டம் வாங்க முடியாது என்று கூறினார். தவம் செய்து தன்னை வெற்றி கொண்ட வசிஷ்டரை போல் மிகப்பெரிய ரிஷியாக வேண்டும் என்றும் வசிஷ்டரே தன்னை பிரம்மமகரிஷி என்று அழைக்க வேண்டும் என்ற வேட்கை அவரிடம் அதிகரித்தது.

சத்ரிய குலத்தில் தோன்றியதால் தவ பலனை பெற்று அதிகாரத்தினாலே அனைத்தையும் பெற்று விடலாம் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. தன் சுய அறிவால் அனைத்தையும் பெற்று விட நினைத்தார் கௌசிகன். கௌசிகனும் அந்த பிரம்மரிஷி பட்டத்தை வாங்கி காட்டுவதாக சவால் விடுத்து ஒரு கள்ளி செடியின் முனையில் மேல் நின்று கடும் தவம் புரிந்தார். இதை கண்ட பார்வதிதேவி கௌசிகன் முன் தோன்றி விளக்கில் பஞ்சமுகமாக திரி போட்டு தீபம் ஏற்றினால் உன் தவம் சித்தியாகி பிரம்மரிஷி பட்டம் பெறலாம் என்று அறிவித்து மறைந்தாள்.

பஞ்சமுகமாக திரிவைத்து விளக்கேற்ற முனைந்தான் கௌசிகன். எவ்வளவு முயன்றும் அந்த திரிகள் எரியவில்லை. உடனே அந்த விளக்கில் தன் தலை இரண்டு கை மற்றும் கால்கள் இவை ஐந்தையும் வைத்து அந்த விளக்கை ஒரு மந்திரம் ஓதி எரிய வைத்தான் கௌசிகன். தனது உடலையே திரியாக்கி தீபம் ஏற்றி தவம் செய்வதை கண்ட சிவசக்தியர் கௌசிகனுக்கு தரிசனம் கொடுத்தார்கள். தனது உடலை திரியாக்கி தீபம் ஏற்றி தவம் செய்த போது கௌசிக மன்னன் தான் அறிந்த நன்கு வேதத்தின் சாரமாக ஒரு மந்திரம் இயற்றி அதனை சிவசக்திக்கு உச்சாடனம் செய்தார். மந்திரத்திற்காக தன் உடலையே (காயத்தை) திரியாக்கி உச்சாடனம் செய்து வரம் பெற்றதால் அந்த மந்திரம் காயத்ரி மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. கௌசிகன் மன்னன்
தன் தவத்தினால் காயத்ரீ மந்திரத்தை உலகிற்கு அளித்தார். விஸ்வம் என்றால் உலகம் மித்ரர் என்றால் நண்பன் உலகத்தின் நண்பன் என்ற பொருளில் சிவசக்தியர் கௌசிகனை விஸ்வாமித்திரர் என்று அழைத்து பிரம்மரிஷி பட்டத்தையும் வழங்கினார்கள்.

எண்ணங்கள்

ஒரு வீட்டு வாசலில் ஒரு மரம் இருந்தது. அதன் கீழ் ஒரு துறவி அமர்ந்திருந்தார். அந்த வீட்டில் ஒரு வேசி இருந்தாள். அவருக்கு வேசியின் மேல் மிகவும் அக்கறை. இவள் இந்தத் தீய தொழிலைச் செய்து இப்படி வீணாகப் போகிறாளே என்று வருத்தப்படுவார். ஒரு ஆசாமி உள்ளே போனதும் ஒரு சிறிய கல்லை எடுத்துப் போடுவார். அப்படிப் போட்டதில் மலைபோல கற்கள் அங்கு குவிந்துவிட்டது. வேசிக்கோ துறவியைப் பார்த்து பொறாமை இவர் எப்போதும் தெய்வத்தை நினைத்து தியானத்திலேயே இருக்கிறாரே நாம் இந்தப் பாவத் தொழிலை செய்து கொண்டு இருக்கிறோமே என்று எப்போதும் நினைத்து வருந்தியபடி இருந்தாள். ஒரு நாள் அவள் இறந்துபோனாள். தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் அவளை அழைத்துப் போவது துறவிக்குத் தெரிந்தது. துறவி ஆச்சரியத்துடன் பார்த்தார்.

சிறிது நாட்களில் துறவி இறந்தார் அவரை யம தூதர்கள் வந்து நரகத்துக்கு அழைத்துப் போனார்கள். துறவிக்கு கோபம் வந்துவிட்டது. என்ன இது அநியாயம் நான் எப்போதும் இறை நினைவாகவே இருந்தேன். எனக்கு நரகம் அதோ கல்குவியல் அளவுக்கு ஆண்களோடு சுகித்த வேசிக்குப் புஷ்பக விமானமா என்று கேள்வி கேட்டார். எமதூதர்கள் கூறினார்கள் முனிவரே அவள் இறைவனைத் தியானம் செய்யமுடியவில்லையே என்று இரவும் பகலும் இறைவனை எண்ணியபடியே தன் தொழிலைச் செய்தாள். நீங்களோ இறைவனை நினைத்து தியானம் செய்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு எத்தனை பேர் செல்கின்றார்கள் என்று பார்த்து கல்லை போட்டுக்கொண்டிருந்தீர்கள். இந்தக் கல்குவியல் அளவுக்கு அவளேயே நினைத்துப் பாவம் சம்பாதித்துக் கொண்டீர்கள் என்று நரகத்திற்கு அழைத்துப் சென்றார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை

கருத்து: எந்த செயல் செய்தாலும் எண்ணங்களே பிரதானம்.

ஆயுள்

புத்தர் பெருமான் மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார். சுற்றிலும் சீடர்கள் அவருடைய அருளுரையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள். புத்தர் தம் சீடர்களை நோக்கி ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று கேட்டார். எதற்கு அவர் இப்படியொரு சாதராணக் கேள்வியைக் கேட்டார் என்பது விளங்காமல் சீடர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். எழுபது ஆண்டுகள் என்றார் ஒரு சீடர். தவறு என்றார் புத்தர். அறுபது ஆண்டுகள் என்றார் ஒரு சீடர். தவறு என்றார் புத்தர். ஐம்பது ஆண்டுகள் என்றார் ஒரு சீடர். தவறு என்றார் புத்தர். இதென்ன எல்லாவற்றையும் தவறு என்கிறாரே மனித வாழ்வு ஐம்பது ஆண்டுகள் கூட இல்லையா என்ன என்று திகைத்தார்கள் சீடர்கள். சில வினாடிகள் அமைதியாக இருந்த புத்தர் அது ஒரு மூச்சு என்றார்.

வெறும் மூச்சுவிடும் நேரம்தானா என்று கேட்டார் ஒரு சீடர். ஆமாம் வாழ்வு என்பது மூச்சுவிடும் ஒரு நேரம் தான். அந்த நேரம் மட்டுமே நமக்கு சொந்தம் அடுத்த மூச்சுவிடும் நேரத்திற்கு நாம் இருப்போமா இருக்க மாட்டோமா என்று யாருக்கும் தெரியாது. அதனால் நமக்கு சொந்தமான இந்த ஒவ்வொரு வினாடி நேரத்தையும் அனுபவித்து நிகழ்காலத்தில் முழு ஈடுபாட்டோடு வாழ வேண்டும். ஒவ்வொரு வினாடி பொழுதிலும் முழுமையாக வாழவேண்டும். சிலர் நேற்றைய நினைவில் வாழ்கிறார்கள். சிலர் இறந்தகால நினைவில் வாழ்கிறார்கள். சிலர் அறியப்படாத எதிர்காலத்தில் எதிர்காலக் கனவில் எதிர்கால ஏக்கத்தில் ஒரு தெளிவில்லாமல் வாழ்ந்து நிகழ்காலத்தை இழந்து விடுகிறார்கள். இவர்கள் எதார்த்தமான நம் முன்னால் துடித்துக்கொண்டுள்ள நம் கைவசமுள்ள நம் ஆளுகைக்கு உட்பட்ட நம் அதிகாரத்தில் உள்ள நிகழ்காலத்தைக் காணச் சக்தியற்ற கண்பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -17

ரீசிக முனிவரிடம் இரண்டு பிரசாதங்களையும் வாங்கிக்கொண்டு சத்யவதி தன் தாயை சந்திக்க சென்றாள். நடந்த அனைத்தையும் தன் தாயிடம் தெரிவித்தாள். சில நொடிகள் யோசித்த சத்யவதியின் தாய் நான் ஒன்று சொன்னால் நீ வருத்தப்படக்கூடாது சத்யவதி பொதுவாக எல்லா தந்தைகளும் தன் மகன் தான் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். ஆகையால் நீ சாப்பிட வேண்டும் என்று உன் கணவர் கூறிய அந்த பிரசாதத்திற்கு தான் சக்தி அதிகமாக இருக்கும். ஆகையால் அதை நீ எனக்கு கொடுத்துவிட்டு எனக்காக கொடுத்ததை நீ சாப்பிடு. மரத்தையும் அதற்கேற்றாற் போல நாம் மாற்றி சுற்றிக்கொள்வோம். எனக்கு பிறக்கப்போகும் உன்னுடைய சகோதரனுக்காகவும் இந்நாட்டின் எதிர்கால அரசனுக்காகவும் இதை நீ செய்வாயா என்றார். சத்யவதியும் சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி என்று கூறிவிட்டாள். அதன் பிறகு பிரசாதத்தை இருவரும் மாற்றி சாப்பிட்டு விட்டு மரத்தையும் மாற்றி சுற்றினர்.

சில நாட்களில் சத்யவதியும் அவள் தாயும் கர்ப்பம் அடைந்தனர். சத்யவதியின் உருவ மாற்றத்தை கவனித்த முனிவர் பிரசாதம் உண்பதில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்பதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். பெரும் தவறு செய்துவிட்டாயே சத்தியவதி நான் ஒரு அந்தணன் என்பதால் உனக்கு பிறகும் குழந்தை அந்தணனாக இருக்கவேண்டும் என்றும் உன் தந்தை சத்ரியன் என்பதால் உன் தாய்க்கு பிறகும் குழந்தை சத்ரியனாக இருக்கவேண்டும் என்று நான் பிரசாதம் அளித்தேன். இப்போது நீங்கள் இருவரும் பிரசாதத்தை மாற்றி சாப்பிட்டதால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை அந்தணனுக்கு உரிய குணத்தோடு எப்போதும் தவம் செய்துகொண்டிருக்க விரும்புவான். உனக்கு பிறக்கப்போகும் குழந்தையோ போர் குணத்தோடும் அனைவரையும் கொன்று குவிக்கும் வலிமையோடும் பிறக்கப்போகிறான் என்றார். இதை கேட்டு அதிர்ந்த சத்யவதி நான் செய்த தவறை மன்னித்து இதை எப்படியாவது மாற்றுங்கள் சுவாமி என கதறி அழுதாள்.

மனம் மாறிய முனிவர் ஒரே ஒரு வழி இருக்கிறது. உனக்கு பிறக்கும் குழந்தை அந்தணனாக பிறப்பான். ஆனால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை சத்ரியனாக பிறந்தாலும் சில காலத்திற்கு பிறகு அவன் அந்தணன் போல மாறிவிடுவான் என்று கூறி அதற்கான வரத்தையும் அளித்தார். அதன்படி சத்யவதிக்கு பிறந்த குழந்தையே பிற்காலத்தில் ஜமதக்னி முனிவர் என்றழைக்கப்பட்டார். அவளின் தாய்க்கு பிறந்த குழந்தை தான் அரசனாக இருந்து பின் முனிவராக மாறிய விசுவாமித்திரர் ஆவார். அவருக்கு கௌசிகன் என்று பெயர் வைத்தார்கள். தனது தந்தைக்கு பிறகு அரசனான கௌசிகன் ஒரு நாள் காட்டிற்கு தன் படை பலத்துடன் வேட்டையாட சென்றார். காட்டில் இருந்த வசிஷ்டரின் ஆசிரமத்தை கண்ட கௌசிகன் அங்கு சென்றார். வந்த அனைவரையும் வரவேற்ற வசிஷ்டர் அனைவருக்கும் உணவு கொடுத்து உபசரித்தார். தனிமையில் காட்டில் இருக்கும் ஒரு முனிவரால் உடனடியாக இவ்வளவு பெரிய படைக்கு எப்படி உணவு இவரால் கொடுக்க முடிந்தது என்று கௌசிகன் ஆச்சரிப்பட்டு தெரிந்து கொள்ள முயற்சித்தான். வசிஷ்டரிடம் இருந்த கேட்டதை கொடுக்கும் நந்தினி என்னும் காமதேனு பசுவால் வசிஷ்டர் அனைவருக்கும் விருந்தளித்தார் என்பதை தெரிந்து கொண்டு வசிஷ்டரிடம் இருந்து நந்தினி காமதேனு பசுவை எப்படியாவது கொண்டு சென்றுவிடவேண்டும் என்று எண்ணினார்.