மனம்

ஒரு ஊரில் ஒரு கோவில் இருந்தது. அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம். அந்த வகையில் ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார். கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார் வந்த அதிகாரி கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார். சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது. அதை பார்த்த அவர் சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் அதை உடனே நிறுத்துங்கள் என்று ஆணையிட்டார். உடனே ஆலய ஊழியர்கள் அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள். ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம். இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார்.

அடுத்த நாள் சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா சிறிது நேரம் தானும் சும்மா இருந்து பார்க்கலாம் என்று கோவிலில் வந்து சும்மா இருக்கும் சாமியாருக்கு அருகில் அமர்ந்தார். மனம் அலைய ஆரம்பித்தது. கோவிலுக்கு சம்பந்தமில்லாத அனைத்து நினைவுகளும் வந்தது. மனம் அடங்க மறுத்தது. கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் என்று முயன்றார். சிறிது நேரத்திற்கு மேல் கண்களை முடி இருக்க முடியவில்லை தான் கொண்டு வந்த ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் அதில் கவனத்தை செலுத்தினார். காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது. கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார். மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது. மகளுக்கு வரன் தேட வேண்டும். மகனுக்கு வேலை தேட வேண்டும். மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார். திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது. சுவாமிக்கு வைக்க நெய்வேத்யம் பள்ளிமடத்தில் தயாரித்து கொண்டு இருந்தார்கள். மனது அங்கு செய்கிறது. அதை நினைத்ததும் வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே என்று நினைத்தார். அதிகாரி திணறி போனார். அவரின் சொல்லுக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள். உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது. அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று அது முடியாமல் சோர்ந்து போனார். சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அவருக்குபுரிந்தது. உடனே மறுபடியும் பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் எழுதினார் சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு.

மனம் தியானம் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளது. மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது. எனவே தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை. மனம் செயல்படுகின்ற வரையில் தியானமும் ஆரம்பமாவதில்லை.

ராமாயணம் முன்னுரை

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே.

தர்மம் எப்பொழுதெல்லாம் அழிந்து அதர்மம் தலையெடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக என்பது கீதாசாரம்.

தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுத்த போது பகவான் அவதரித்த வரலாற்றை கூறுபவை இதிகாசங்களாகும். இதிகாசம் என்பது கதை அல்ல. சமஸ்கிருதத்தில் இதி என்பதற்கு இப்படி என்றும் காசம் என்பதற்கு நடந்தது என்றும் அர்த்தம். இதிகாசம் என்றால் மரபுவழி வரலாற்று கதை என்றும் பெரும்காவியம் என்றும் பொருள் உண்டு. இதிகாசங்கள் இரண்டு 1. ராமாயணம் 2. மகாபாரதம். ராமாயணம் என்னும் பெயர் ராமன் மற்றும் அயணம் என்னும் சொற்களின் கூட்டாகும். அயணம் என்னும் சொல் சமஸ்கிருதத்தில் பயணம் அல்லது வழித்தடம் என்னும் பொருளுடையது. இதனால் ராமாயணம் என்பது ராமனின் பயணம் அல்லது அவன் வாழ்ந்த வழி என்னும் பொருளைக் குறிக்கிறது. மூல நூலான வால்மீகி ராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும் பிற நாடுகளின் மொழிகளிலும் ராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. வடமொழியில் வால்மீகி இயற்றிய ராமாயணத்தை பின்பற்றி யோக வசிஷ்டர் எழுதிய வசிஷ்ட ராமாயணம், ராமசர்மர் எழுதிய அத்யாத்ம ராமாயணம் மற்றும் வால்மீகி பெயரால் அழைக்கப்படும் அற்புத ராமாயணம் ஆனந்த ராமாயணம் என நிறைய நூல்கள் உள்ளது. தமிழில் கம்பர் எழுதினார். இது கம்ப ராமாயணம் எனப்படுகின்றது. இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர். கம்போடியாவின் கெமர் மொழியில் உள்ள ரீம்கெர், தாய்லாந்தின் தாய் மொழியில் உள்ள ராமாக்கியென் (ராமகீர்த்தி) தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியம் ஆகும். லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியில் எழுதப்பட்ட இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் ராமாயணத்தைத் தழுவியவை ஆகும்.

இந்தியாவில் வால்மீகி, கம்பன், துளசிதாஸ், எழுத்தச்சன், அஸ்ஸாமிய, வங்காள, சமண ராமாயணங்கள் பல கிடைக்கின்றன. இந்தியாவின் பெரும்பான்மையான மொழிகளில் ராமாயணங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. திரு. ஏ.கே. இராமானுஜம் 1991 இல் எழுதிய ஆங்கில கட்டுரை 300 ராமாயணங்கள் என்பதில் குறிப்பிடப்பட்டவை தவிர மேலும் பல ராமாயண நூல்கள் பிற்காலத்தில் பழைய நூலகங்களிலிருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளன. ராமாயணம் மொத்தம் எத்தனை உள்ளது என்று முழுமையாகச் சொல்லிவிடமுடியாது. இதற்கு காரணமாக ஏன் ராமாயணத்தில் இத்தனை வகைகள் தோன்றியது என்று எண்ணினால் அக்காலத்தில் புராணங்களும் இதிகாசங்களும் தலைமுறை தலைமுறையாக செவிவழிச் செய்தியாகவே பரிமாறப்பட்டிருக்கின்றன. யோகிகள் மகான்கள் எழுதிய நூல்கள் தவிர்த்து மற்ற அனைத்து ராமாயணங்களும் அவரவர்களுக்கு புரிந்தவைகளை அவரவர்கள் விருப்பம் போல் எழுதியிருக்கலாம். ஆகவே தான் யோகிகள் மகான்கள் எழுதிய ராமாயண காவியத்திற்கும் வால்மீகி ராமாயணத்திற்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் இல்லை. மற்றவர்கள் எழுதியதிற்கும் வால்மீகி ராமாயணத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் ஓர் காலகட்டத்தில் சமணர்கள் சைவம் வைணவத்தை அழித்து தங்கள் சமண மதத்தை பரப்புவதற்காக வரலாற்று காவியங்கள் சிலவற்றை வேண்டுமென்றே திரித்து மொழி பெயர்த்திருக்கின்றார்கள் என்றும் வரலாறு உள்ளது. அதன்படியும் பல ராமாயண கதைகள் உருவாகியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

ராமாயணம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. ராமாயண நூல் இதிகாசமே என்றாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகளும் விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைகள் அரசுகள் போன்றவற்றையும் ஆய்வுநோக்கில் பார்க்கும் போது வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தை வால்மீகியால் படைத்திருக்க முடியாது என்பது தெரிகிறது. ராமாயண இதிகாசம் வாழ்வியல் நன்நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன் தலைவனாக எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதையும் தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு நிலைகளையும் ஒன்றுபோல எதிர்கொண்டு சமயத்துக்குத் தக்கபடி நடந்து தனது சொந்த இன்ப துன்பங்களுக்கு அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதையும் காட்டுகிறது. வேறொரு கட்டத்தில் இது தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்ட மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த விஷ்ணுவின் அவதார வரலாறும் ஆகும். மகாபாரத காவியத்தின் வன பருவத்தில் ராமாயண நிகழ்வுகளை மார்க்கண்டேய முனிவர் யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்திருக்கின்றார். வால்மீகி ராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவையாவன பின்வருமாறு:

  1. பால காண்டம்: ராமன் மற்றும் அவரின் உடன்பிறந்தோரின் பிறப்பு, கல்வி, திருமண காலத்துப் பகுதி.
  2. அயோத்தியா காண்டம்: ராமன் சீதையை மணந்து கொண்ட பின்னர் இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்துப் பகுதி.
  3. ஆரண்ய காண்டம்: ராமன் காட்டுக்குச் சென்றதும் அங்கு வாழ்ந்த காலத்துப் பகுதி.
  4. கிஷ்கிந்தா காண்டம்: கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும்போது வானரர் நாட்டில் ராமனது வாழ்க்கை காலத்துப் பகுதி.
  5. சுந்தர காண்டம்: சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய காலத்துப் பகுதி.
  6. யுத்த காண்டம்: ராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய காலத்துப் பகுதி.
  7. உத்தர காண்டம்: ராமன் அயோத்திக்கு திரும்ப வந்து அரசனானதையும் சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய கதைப் பகுதி.

இந்த ராமாயணத்தில் காணப்படும் முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் வால்மீகியால் எழுதப்பட்டதா என்பதில் சில ஐயப்பாடுகளும் நிலவுகின்றன. இவ்விரு பகுதிகளிலிருக்கும் மொழி நடை ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபடுவதும் அவற்றின் உள்ளடக்கங்களில் முரண்பாடுகள் காணப்படுவதும் இத்தகைய ஐயப்பாடுகளுக்குக் காரணமாகும். எனினும் பலர் இவ்வேழு காண்டங்களும் வால்மீகியால் எழுதப்பட்டதாகவே நம்புகின்றனர்.

கம்பன் சோழ நாட்டில் கும்பகோணத்தில் உள்ள தேரெழுந்தூரில் கி.பி. 1180 ஆம் ஆண்டு ஆதித்தன் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவரின் குடும்பத்தின் வறுமை காரணமாக பணக்கார விவசாயி ஒருவருக்கு தத்து கொடுக்கப்பட்டார். இவர் சிறு வயதில் காளி கோவில் கம்பத்தின் கீழ் கிடந்ததால் கம்பர் எனவும் இவரது குருவின் கம்பங்கொல்லையை காவல் காத்தமையால் கம்பர் எனவும் அழைக்கப்பட்டார். கம்பர் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் மிகவும் புலமை பெற்ற மாபெரும் கவிஞன். கம்பனின் வறுமை நிலையில் ஆதரவுக்கரம் நீட்டியவர் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல். தனது புலமையை மெய்பித்து இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னரின் அவைத் தலைவராக உயர்வு பெற்றார். குலோத்துங்க சோழ அரசன் கம்பரிடம் ராமாயணத்தை தமிழில் மொழி பெயர்க்குமாறு ஆணையிட்டார். கம்பர் வால்மீகி ராமாயணத்தை எப்படி தமிழில் தொடங்குவது என்ற குழப்பத்தில் இறைவனை நோக்கித் தியானித்திருந்த போது இறைவனே அவருக்கு அசீரரியாக உலகம் யாவையும் என்று முதலடி எடுத்துக் கொடுத்து பாடச் சொன்னார். அதை வைத்துக்கொண்டு

உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடையா ரவர்
ஆண்டவ ரன்னவர்க் கேசர ணாங்களே.

விளக்கம்: உலகங்கள் எல்லாவற்றையும் தாமே இருக்கும்படியாக உருவாக்கியும் காலம் வரும்வரை அது நிலைத்து நிற்கும்படி காப்பாற்றியும் காலம் முடிந்ததும் அழித்தும் என்று எப்போதும் முடியாத திருவிளையாடலை மீண்டும் மீண்டும் அளவில்லாமல் விளையாடிக்கொண்டே இருக்கிறவர்தான் ஆண்டவர் அவரை நாங்கள் சரணடைகிறோம். என்று முதல் பாடலை இறை வணக்கமாகப் பாடி ஆரம்பித்து கம்பர் ராமாயணத்தை தமிழில் எழுதி முடித்தார்.

வால்மீகி முனிவரின் ராமாயணத்தை தமிழில் எழுதிய கம்பர் இதனை வடமொழியில் ஸ்ரீராமர் கதையை வகுத்து வான்புகழ் கொண்ட வால்மீகி முனிவரின் நூலை நான் தமிழ்ப் பாவினால் பாடியிருக்கின்றேன் என்று தனது பாடலின் வழியே கூறுகின்றார். தாம் இயற்றிய இந்நூலிற்கு கம்பர் முதலில் ராமகாதை என்றே பெயரிட்டிருந்தார். பிற்காலத்தில் ராமாயணம் பலரால் தொகுக்கப்பட்டதால் கம்பரின் பெயரோடு இணைத்து கம்பராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது. கம்பர் இந்த நூலை இயற்றிய பிறகு எண்ணற்ற ராமாயண நூல்கள் படைக்கப்பட்டன. தமிழில் பலவித ராமாயண நூல்கள் தோன்றுவதற்கு கம்பராமாயணம் தூண்டுதலாக இருந்தது என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தக்க ராமாயணம், குயில் ராமாயணம், ராமாயண அகவல், கோகில ராமாயணம், அமர்த ராமாயணம், ராமாயணக் கீர்த்தைகள், பால ராமாயணம் என்று பல நூல்கள் பிற்காலத்தில் தோன்றியது.

கம்பர் தனது ராமகாதையை தொல்காப்பிய நெறிப்படி வல்லினம் மெல்லினம் இடையினம் என்று காட்சிக்கு ஏற்ப தனித்தனியாக பிரித்து சந்தத்தோடு பாடல்களில் தமிழை பயன்படுத்திய பெருமைக்குரியவர் ஆவார். உதாரணமாக அரக்கி ஒருத்தி நடந்து வரும் காட்சியில் வல்லின எழுத்துக்களில் ஆரம்பித்து சந்தத்தோடு எழுதியிருப்பார். அழகான பெண் நடந்து வரும் காட்சியில் மெல்லின எழுத்துக்களில் ஆரம்பித்து சந்தத்தோடு எழுதியிருப்பார். குதிரை வரும் காட்சிகளில் குதிரையின் காலடி சத்தம் வருவது போல வார்த்தைகள் வைத்து சந்தத்தோடு எழுதியிருப்பார். அதனை படிக்கும் போது குதிரை சத்தம் ரிதத்துடன் வருவது போலவே இருக்கும். கம்பரின் காவியத்தை படித்த 14 மொழிகளில் அறிஞரான மகாகவி பாரதியார் தான் கண்ட கவிஞர்களில் கம்பரைப்போல் வள்ளுவரைப்போல் இளங்கோவைப்போல் வேறு யாரையும் கண்டதில்லை என்று இந்த மூன்று தலைசிறந்த கவிஞர்களில் கம்பரை முதலாவதாகக் குறிப்பிட்டு கூறுகிறார்.

கம்பர் ஒரு நரசிம்ம உபாசகர். நரசிங்க பெருமாளின் தீவிர பக்தர். தான் எழுதிய ராமகாவியத்தை ஸ்ரீரங்கம் கோவிலில் நரசிம்மர் சன்னதி முன்னிலையில் அரங்கேற்ற நினைத்தார். ஸ்ரீரங்கம் கோவிலின் பண்டிதர்கள் மற்றும் புலவர்களிடம் தன் வேண்டுதலை முன் வைத்தார். அதற்கு அவர்கள் தில்லையில் இருக்கும் மூவாயிரம் தீட்சிதர்களிடம் அனுமதி பெற்று சான்று ஓலையை வாங்கி வந்தால் இங்கு அரங்கேற்ற அனுமதிக்கிறோம் என்றார்கள். தில்லை சென்ற கம்பர் அங்கிருந்த தீட்சிதர்களிடம் ஸ்ரீரங்கம் கோவிலைச் சேர்ந்தவர்களின் வேண்டுகோளைக் கூறி தாம் இயற்றிய ராமகாவியத்தைச் சரிபார்த்து சான்று தர வேண்டும் என்று கேட்கிறார். அவர்களோ நாங்கள் மூவாயிரம் தீட்சிதர்களும் ஒன்றாகக் கூடுவது அவ்வளவு எளிதானது அல்ல. பலர் பல இடங்களில் இருப்பார்கள் ஒருவர் குறைந்தாலும் ஓலையில் முத்திரை பதிக்கப்படாது. ஆகவே வீண் முயற்சி செய்யாதீர்கள். உமது ஊருக்கே சென்றுவிடுங்கள் என்றனர். கம்பர் மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்புகிறார். தன்னுடைய ராமகாதையை அரங்கேற்ற முடியவில்லையே என்று வருத்தப்பட்டு பாடல்கள் சில அந்தாதிகளாக எழுதினார்.

ஒருநாள் இரவு நித்திரையில் கம்பனின் கனவில் இறைவன் தோன்றி உடனே தில்லை செல்க என்றார். விழித்த கம்பர் உடனே தில்லை விரைந்து செல்கிறார். அங்கு மூவாயிரம் தீட்சிதர்களும் ஓர் இடத்தில் ஒன்று கூடி இருப்பதை கண்டார் கம்பர். ஆச்சரியத்துடன் அருகில் சென்ற போது ஒரு தீட்சிதரின் மகன் பாம்பு தீண்டி இறந்ததால் துக்கம் விசாரிக்க அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர் என்று தெரிந்து கொண்டார். இறைவனின் திருவிளையாடலை எண்ணி மகிழ்ந்து தாம் எழுதிய ராமகாதையின் ஓலைக் கட்டிலிருந்து நாகபடலம் பாடல்களின் ஒரு ஓலைச் சுவடியை எடுத்து இறந்து கிடந்த அச்சிறுவனின் நெஞ்சில் வைத்து அப்பாடலை இறைவனை நினைத்துக் கொண்டு பாடினார். உடனே அச்சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். கூடியிருந்த தில்லை அந்தணர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இவர் பாடலின் ஆற்றலைக் கண்ட அனைவரும் ஒரே முகமாக ஒப்புக்கொண்டு அரங்கேற்றத்திற்கான ஒப்புதல் ஓலை அளித்தனர். அதை வாங்கிக் கொண்டு ஸ்ரீரங்கம் திரும்பிய கம்பர் ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னிதிக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் வீற்றிருக்கும் தனது இஷ்ட தெய்வமான நரசிம்மர் பெருமாள் முன்பு தனது ராமகாவியத்தை அரங்கேற்ற முடிவு செய்தார்.

ராமகாதையைக் கேட்ட ஸ்ரீரங்கத்துப் புலவர்கள் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் இரண்ய வதைப் படலம் இல்லை ஆனால் நீங்கள் எழுதி இருக்கின்றீர்கள். ஆகவே இது ராமாயணத்தோடு சேராது என்பதால் இங்கே அரங்கேற்றம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு கம்பர் தமக்கு இறைவனே அடி எடுத்து கொடுத்து எழுத வைத்திருப்பதால் அதைத் தன்னால் மாற்ற இயலாது என்றும் உங்களுடைய சந்தேகத்திற்கு இறைவன்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறினார். அதற்கு அவர்கள் அப்படி என்றால் இரண்ய வதைப் படலத்தை மட்டும் முதலில் அரங்கேற்றுங்கள் இறைவன் அடியெடுத்துக் கொடுத்தது உண்மையாக இருந்தால் இறைவனே வந்து சாட்சி சொல்லட்டும் அதன்பிறகு நாங்கள் முழு ராமகாதையை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். உடனே கம்பர் ஸ்ரீநரசிம்ம பெருமானை மனதில் வைத்து வேண்டிக்கொண்டு இரண்ய வதைப் படலத்தை ஆரங்கேற்றம் செய்ய ஆரம்பித்தார். பாடலின் நடுவே இரண்யன் ஆரடா சிரித்தார் என்ற கேட்பது போலக் காட்சி வரும் போது மண்டபத்தின் தூணில் இருந்த நரசிம்மர் கடகடவென பெரிய சிரிப்பொலியுடன் கர்ஜனை செய்து கம்பரின் கூற்று உண்மை என ஆமோதித்து தலையாட்டினார். இந்த அதிசயத்தை பயத்தோடு கண்ட புலவர்கள் அனைவரும் கம்பரின் ராமகாதையை ஏற்றுக்கொண்டனர். அங்கு சிரித்த நரசிம்மரை மேட்டழகிய சிங்கர் என்பார்கள். இவர் தாயார் சன்னிதி அருகில் தனி சன்னிதியில் இப்போதும் இருக்கிறார். இவரது கையில் சங்கு மட்டும் இருக்கிறது சக்கரம் இல்லை. இன்றும் ராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடமான இம்மண்டப மேடையைக் காணலாம்.

வால்மீகி ராமாயணம் கம்பராமாயணத்தின் மூலமாக இருந்தாலும் கம்பர் அவற்றை வரிக்குவரி மொழி பெயர்ப்பு செய்யவில்லை. அந்நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் அப்படியே இருந்தாலும் முழுமையாக வால்மீகி ராமாயணம் போல் கம்ப ராமாயணத்தை இயற்றவில்லை. வால்மீகி ராமாயணத்தில் இல்லாத ராமரின் உணவு பழக்கமும் ராவணனின் திறமையும் ராவணன் சீதையைத் தொடாமல் இருந்த நெறியையும் கம்பராமாயணத்தில் காணலாம். கம்பர் தனக்கே உரித்தான பாணியில் வால்மீகி ராமாயணத்தின் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச் சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர் தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார்.

கம்பராமாயணம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களில் 123 படலங்களுடன் ஏறத்தாழ 22000 பாடல்களையும் உடையது. காண்டம் என்பது பெரும் பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய உத்திர காண்டம் என்னும் பகுதியை கம்பரின் சீடராகிய ஒட்டக்கூத்தர் இயற்றியுள்ளார்.

கம்பர் தம் ராமாயணத்தைப் பால காண்டம் முதல் யுத்த காண்டம் முடிய உள்ள ஆறு காண்டங்களில் நிறைவு செய்துள்ளார். யுத்த காண்டத்தின் நிறைவில் விடை கொடுத்த படலம் என்றொரு படலம் உள்ளது. அதில் சுக்ரீவன், அனுமன், விபீஷணன் மற்றும் வானரர் முதலியோர்க்கு பரிசுகள் கொடுத்து ராமர் விடை தந்து அனுப்பிய செய்தி கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு ராமர் பல்லாண்டு மனுநெறி தவறாமல் ஆட்சி செய்ததை விளக்கி ராமாயணத்தைக் கம்பர் நிறைவு செய்து விட்டார். அதன்பின் நிகழ்வுகளாக சீதையைக் குறித்து சந்தேகமாகப் பேசிய ஒரு குடிமகனின் ஆதங்கத்தைத் தீர்க்க வேண்டிய அரச தர்மத்தினால் ஐந்து மாத கர்ப்பிணியான சீதையை ராமன் லக்குமணனைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிடும்படி கூறுவது காட்டில் சீதைக்கு வால்மீகி ஆசிரமத்தில் லவன் மற்றும் குசன் எனும் இரட்டைக் குழுந்தைகள் பிறப்பது ராமர் செய்த அசுவமேத யாகத்தில் உபயோகிக்க வேண்டிய குதிரைகளை லவ-குசர்கள் கட்டி வைத்தது சத்துருக்கனன், பரதன் மற்றும் லக்குமணராலும் வெல்ல முடியாத லவ-குசர்களை ராமரே நேரில் வந்து பார்த்து போரிடுவது பின்னர் தம்மக்கள் என்பதைத் தெரிந்து கொண்டு லவ-குசர்களை அயோத்திக்கு அழைத்து செல்வது சீதை பூமாதேவியை வேண்டிக் கொள்ள பூமி பிளந்து பூமாதேவியுடன் அவள் சேர்வது போன்ற செய்திகளை தான் எழுதிய உத்தர காண்டம் மூலம் ஒட்டக்கூத்தர் விளக்கிக் கொடுத்துள்ளார்.

அருணாசல கவிராயர் என்பவர் ராமாயணம் சராசரி மனிதருக்கும் புரிய வேண்டும் என்று ராமகாவியத்தை தெருக்கூத்து நாடகம் போல் இயற்றினார். தான் எழுதிய ராம நாடகத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய அங்கு உள்ள புலவர்களிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு அவர்கள் இக்கோவில் ரங்கநாதர் கோவில் ஆகையால் நீங்கள் ரங்கநாதரை பற்றி பாடினால் அனுமதி தருகிறோம் என்று கூறுகிறார்கள். அதற்கு அருணாசல கவிராயர் ஒத்துக்கொண்டு பாட ஆரம்பிக்கின்றார். ஏன் பள்ளி கொண்டீரய்யா என்று ரங்கநாதர் பள்ளி கொண்டிருப்பதை பாடலின் முதல் வார்தையாக ஆரம்பித்து பின்பு ராமரைப் பற்றியே பாடுகிறார். விஸ்வாமித்திரர் தங்களை காட்டுக்கு அழைத்துச் சென்றாரே அங்கு பட்ட கஷ்டங்களை நினைத்து படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? பெண்ணாக இருக்கும் தாடகை என்னும் அரக்கியை அம்பு விட்டு கொன்று விட்டோமே என்று வருத்தப்பட்டு படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? ஜனகர் கொடுத்த சிவதனுசை முறித்து விட்டோமே என்ற வருத்தத்தில் படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? பரசுராமர் வில்லோடு வந்த போது அதனை உடைத்தீர்களே அதனை நினைத்து படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? சீதையுடன் காட்டில் நடந்து சென்றீர்களே அந்தக் களைப்பில் படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? கங்கையில் குகனுடன் ஓடத்தில் சென்றீர்களே அந்த உடல் அசதியில் படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? என்று முதல் இரண்டு அடியை மட்டும் ரங்கராதரை பற்றி பாடி மீதி அனைத்தும் ராமரைப் பற்றியே பாடித் தனது ராம நாடகத்தை அரங்கேற்றம் செய்தார் அருணாசல கவிராயர்.

விஷ்ணு புராணம், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களிலும் இதிகாசங்களிலும் வரலாற்று உண்மை உள்ளதா என்ற இந்து பத்திரிக்கை நிருபரின் கேள்விக்கு சுவாமி விவேகானந்தர் பதில் கூறியுள்ளார். ஒரு வரலாற்று உண்மை புராணத்தின் கருவாக உள்ளது. உயர்ந்த கருத்துக்களைப் பல வடிவங்களில் மக்களுக்குக் கற்பிப்பதே புராணங்களின் நோக்கம். ராமாயணமும் மகாபாரதமும் கண்ட நியதிப்படி அவை ராமரையும் கிருஷ்ணரையும் சார்ந்திருக்க வேண்டியது இல்லை. ஆனால் அவை உயர்ந்த கருத்துக்களை மனித இனத்தின் முன் வைப்பதால் அவற்றைச் சிறந்த அடிப்படை நூல்களாகக் கருத வேண்டும். எந்தப் புராணமானாலும் அதிலுள்ள தத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும். அதில் வரும் பாத்திரங்கள் உண்மையா கற்பனையா என்ற ஆராய்ச்சி தேவையில்லை. மனித இனத்திற்கு தர்மத்தை போதிப்பதே புராணங்களின் நோக்கம். ராமாயணத்தில் வரும் பத்துத் தலை அசுரன் வாழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஓர் உண்மைப் பாத்திரமா அல்லது கற்பனையா என்ற கேள்வியைத் தள்ளி வைத்துவிட்டு அவன் மூலம் நமக்கு என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் ராமாயணம் படித்தால் மனம் பக்குவப்பட்டு உடன் பிறந்தோர்களிடம் வேற்றுமை மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும் அதனால் உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுக்கும் தன்மை அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று சொல்லியிருக்கின்றார். முப்பதே வினாடிகளில் சொல்லி ராமாயணத்தை முழுவதுமாக சொல்லி முடிக்கிற மாதிரி அழகான ஒன்பதே வரிகளில் அருளியிருக்கிறார் மஹா பெரியவர்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்

அனைவரும் ராமாயணம் படித்து ராம காவியத்தை அறிந்து ஆனந்தத்துடன் இருப்போம்.

மகிழ்ச்சி

ஒர் பண்டிதரிடம் சென்ற ஒருவன் மற்றவர்கள் செய்யும் செயலால் நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்றான். எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் என்றான். அதற்கு அவர் உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம் தான். உன் மனதைப் புரிந்து கொள். நீ துன்பத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் இருப்பாய் என்றார் பண்டிதர். என் மனதை நான் எப்படிப் புரிந்து கொள்வது என்று கேட்டான். இந்தக் கதையைக் கேள் உன் மனதை புரிந்து கொள்ள உதவும் என்ற பண்டிதர் ஓரு கதை சொன்னார்

ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒருநாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் அந்தப் பூனை அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்விக் கொண்டு வந்தது. அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலேயிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை வருந்தவும் இல்லை. எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று. தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம். தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை துன்பமுமில்லை என்று கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான். மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

ஞானியின் குரு

மிகச் சிறந்த ஞானி ஒருவரிடம் உங்களது குரு யார் என்று ஒருவர் கேட்டார். அதற்கு ஞானி எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் இருக்கிறார்கள். நான் அவர்களது பெயரை சொல்வதற்கே எனக்கு பல மாதங்கள் பிடிக்கும் அவர்களைப் பற்றி பேச வருடங்கள் ஆகும். இருப்பினும் மூன்று பேர்களை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன். அதில் முதலாமவர் ஒரு திருடர்.

ஒருமுறை நான் செல்லவேண்டிய கிராமத்தை போய் சேரும்போது நடு இரவாகி விட்டது. பாதி இரவு சென்று விட்டது. கடைகள் அனைத்தும் மூடிக் கிடந்தன. கதவுகள் அனைத்தும் அடைபட்டுக்கிடந்தன. ரோட்டில் மனித நடமாட்டமே இல்லை. நான் விசாரிப்பதற்காக யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இறுதியில் சுவற்றில் உள்ளே நுழைவதற்காக கன்னம் வைத்துக் கொண்டிருந்த ஒரு திருடனை பார்த்தேன். நான் அவரிடம் நான் தங்க இங்கே ஏதாவது இடம் இருக்குமா என்று கேட்டேன். அவர் நான் ஒரு திருடன் நீங்களோ ஒரு ஞானி போல தோன்றுகிறீர்கள். இப்போது தங்க இடம் கிடைப்பது மிகவும் கடினம். நீங்கள் விரும்பினால் என் வீட்டிற்கு வரலாம். திருடனுடன் தங்க உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையென்றால் என்னுடன் வாருங்கள் என்று அழைத்தார். நான் கொஞ்சம் ஒரு வினாடி தயங்கினேன். பின் எனக்கு உரைத்தது. ஒரு திருடன் ஞானியை பார்த்து பயப்படாத போது ஒரு ஞானி ஏன் திருடனைக் கண்டு அஞ்ச வேண்டும். உண்மையில் அவன்தான் என்னைக் கண்டு அஞ்ச வேண்டும். அதனால் நான் அவனிடம் சரி நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினேன். நான் அவனுடன் சென்று அவன் வீட்டில் தங்கினேன். அந்த மனிதன் மிகவும் அன்பானவன். நான் அவருடைய வீட்டில் ஒரு மாதம் தங்கினேன். ஒவ்வொரு இரவும் அவர் திருடுவதற்கு கிளம்பும்போதும் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் தியானம் செய்யுங்கள் ஓய்வெடுங்கள் நான் என் வேலையை பார்க்கப் போகிறேன் என்பார். அவர் திரும்பி வரும்போது ஏதாவது கிடைத்ததா என்று நான் கேட்பேன். இன்று எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை திரும்பவும் முயற்சிப்பேன் என்று கூறுவார். ஒருநாளும் அவர் நம்பிக்கையிழந்து நான் பார்க்கவேயில்லை. ஒரு மாதம் முழுவதும் அவர் வெறும் கையுடன்தான் திரும்பி வந்தார். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவர் நாளை முயற்சி செய்வேன். கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும். நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள் என்று நீங்கள் கடவுளிடம் சொல்லுங்கள். என்று கூறுவார்.

நான் பல வருடங்கள் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கையில் எதுவும் நிகழவில்லை. நான் மிகவும் மனமுடைந்து நம்பிக்கையிழந்து இது எல்லாவற்றையும் நிறுத்திவிடலாமா என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு. கடவுள் என்று ஒருவரும் இல்லை எல்லா பிரார்த்தனைகளும் எல்லா தியானங்களும் பொய் என்று நினைப்பேன் அப்போது திடீரென அந்த திருடனின் நினைவு வரும். அவர் ஒவ்வொரு நாள் இரவும் கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும் என்று கூறியதை நினைத்துக் கொள்வேன். அதனால் மேலும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். திருடன் அந்த அளவு நம்பிக்கையுணர்வுடனும் இருக்கும்போது நான் ஏன் இன்னும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று தோன்றும். பலமுறை இப்படி நிகழ்ந்திருக்கிறது. அந்த திருடனும் அவனைப் பற்றிய நினைவும் நான் இன்னும் ஒருநாள் தியானம் செய்யலாம் என்று நான் முயல உதவி செய்திருக்கிறது. அவர் தான் எனது முதல் குரு.

எனது இரண்டாவது குரு ஒரு நாய். நான் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி வந்தது. நாய் நதிக்குள் பார்த்தது. தன்னுடைய பிம்பத்தை தண்ணீரில் பார்த்து பயந்து குரைத்தது. தண்ணீரில் இருந்த நாயின் பிம்பமும் குரைத்தது. இதை பார்த்து பயந்து போய் திரும்பி போனது. ஆனால் தாகம் மிகவும் அதிகமாக இருந்ததால் திரும்பி வந்து தண்ணீரை பார்த்தது. அந்த நாய் அங்கேயே இருப்பதை பார்த்தது. ஆனாலும் தாகத்தினால் தண்ணீரில் எட்டிக் குதித்தது. அந்த பிம்பம் கலைந்து போய் விட்டது. தண்ணீரை குடித்து தண்ணீரில் நீச்சலடித்து ஆனந்தப்பட்டது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதன்மூலம் கடவுளிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்ததை புரிந்து கொண்டேன். நாம் அறியாத ஒன்றை பார்த்து பயந்து பின் வாங்ககூடாது. எதிர்த்து செல்லவேண்டும். சென்ற பின்னால் அங்கு பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்துவிடும். அறியாதவற்றை கண்டு நான் பயப்படும் போது நாயின் நினைவு வரும் எதிர்த்து நிற்பேன். என் அறியாமை மறைந்துவிடும். அந்த நாய்தான் எனது இரண்டாவது குரு.

எனது மூன்றாவது குரு ஒரு சிறு குழந்தை. நான் ஒரு நகரத்தினுள் சென்றபோது ஒரு எரியும் விளக்கை கைகளில் எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தது அந்த குழந்தை. ஒரு கிண்டலுக்காக நான் அந்த குழந்தையை நீயா இந்த விளக்கை ஏற்றினாய் என்று கேட்டேன். ஆமாம் என்று கூறியது குழந்தை. விளக்கு எரியாமல் இருந்தது நீ நெருப்பை வைத்தாய் ஒளி வந்தது. நீ ஏற்றியபோது பார்த்தாய் அல்லவா அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா என்று கேட்டேன். அந்த குழந்தை சிரித்துவிட்டு விளக்கை ஊதி அணைத்துவிட்டு இப்போது நீங்கள் இந்த ஒளியை பார்த்தீர்கள் அல்லவா அது எங்கு போனது என்று எனக்கு கூறுங்கள் என்று கேட்டான். என்னுடைய ஆணவம் சுக்குநூறானது. எனது அறிவு அனைத்தும் பொடிபொடியானது. அந்த வினாடியில் நான் எனது முட்டாள்தனத்தை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் அனைத்தும் அறிந்தவன் என்ற எண்ணத்தை விட்டு விட்டேன். எனக்கு எப்போதெல்லாம் அனைத்தும் தெரியும் என்கின்ற எண்ணம் வருகின்றதோ அப்போதெல்லாம் இந்த குழந்தையை எண்ணிக்கொள்வேன் என்றார்.

அர்த்தநாரீஸ்வரர் கோவில்

விழுப்புரம் மாவட்டம் கூத்தனூர் அடுத்தள்ள ரிஷிவந்தியம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில். மூலவர் அர்த்தநாரீஸ்வரர். அம்பாள் முத்தாம்பிகை. தலவிருட்சம் புன்னை. தீர்த்தம் அகஸ்த்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஞான போத புஷ்கரிணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சங்கர தீர்த்தம். சிவனின் சொல்படி அகத்தியர் தென்னகத்தில் பல பகுதிகளில் தங்கி சிவ பெருமானுக்குப் பூஜைகள் செய்தார். இப்பகுதியில் அகத்தியர் பூஜையில் இருக்கும் போது இறைவனின் திருமணக்காட்சியை காண விரும்பி சிவனை வேண்ட சிவன் திருமணக்காட்சியை தந்தருளினார். இக்காட்சியினை பிற மக்களும் கண்டு பிரார்த்திக்க வேண்டும் என அகத்தியர் வேண்டவே இங்கு சுயம்புலிங்கமாக தோன்றி அருள்பாலித்தார்.

விஜய நகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக காடுகளை விவசாய நிலமாக மாற்ற நிலத்தை வெட்டும் போது சிவலிங்கம் தோன்றியது. இவரே அர்த்தநாரீஸ்வரர். மண்வெட்டியில் வெட்டுப்பட்ட கீறலை தழும்பாக இப்போதும் சுயம்புலிங்கத்தில் பார்க்கலாம். இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் இந்த சிவலிங்கம் துவாபரயுகத்தில் இருந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் ராமர், அகத்தியர், குகை நமச்சிவாயர் வந்து வழிபட்டதற்கான சான்றுகள் கோவில் கல்வெட்டில் காணப்படுகிறது. ரிஷிகள் பலர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டதால் இப்பகுதி ரிஷிவந்தியம் என பெயர் பெற்றுள்ளது. குகை நமச்சிவாயரின் சீடரான குரு நமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்களை தரிசித்து விட்டு இத்தலம் வழியாக சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்பாளிடம் தாயிருக்க பிள்ளை சோறு என்ற செய்யுளை பாடினார். உடனே அம்பாள் அவர் முன் தோன்றி நான் இங்கு ஈசனுடன் பாதிபாகமாக இடம் பெற்றிருக்கிறேன். எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக என்று கூற குக நமசிவாயரும் அதன்படியே மின்னும்படிவந்த சோறு கொண்டு வா என்ற பாடலைப்பாடினார். இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குருநமச்சிவாயரின் பசியாற்றினாள்.

தேவர்களின் தலைவரான இந்திரன் அன்றாடம் ரிஷிவந்தியம் இறைவனுக்கு 108 பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். அத்தலத்தில் இருந்த அம்பாளை அவர் வழிபடவில்லை. ஒரு நாள் கோபமடைந்த அம்பாள் இந்திரனின் பால் குடத்தை மறைத்துவிட்டார். பால் குடத்தை காணாததால் மனமுடைந்த இந்திரன் கோவில் பலிபீடத்தில் தலையை மோதி உயிர்விட முயற்சித்த போது ஈசன் இந்திரன் முன் தோன்றி இனி பார்வதிக்கும் பாலாபிஷேகம் செய்யக் கூறினார். மேலும் இவ்வாறு அபிஷேகம் செய்யும் போது எனது உருவத்துடன் இணைந்து பார்வதியும் தோன்றும் எனக் கூறி சிவன் மறைந்தார். அன்று முதல் இன்று வரை தேனபிஷேக பூஜை செய்யும் தருணத்தில் சுயம்பு லிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக ஆண் பாதி பெண் பாதியான தோற்றத்தில் கையில் கிளியுடன் அம்பாளும் சிவனும் தோற்றமளிக்கின்றனர். இங்கு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் தேன் கெடாது. தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது. இதன்படி இன்றும் தினசரி நடக்கும் தேனாபிஷேகத்தில் அம்பாளின் உருவம் தெரியும். மற்ற அபிஷேகம் நடக்கும் போது லிங்க வடிவம் மட்டுமே தெரியும்.

அகத்தியரின் மின்சாரம் கண்டுபிடிப்பு

சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்

அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி இதற்கான விளக்கம். ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிரத்தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள் பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்,

மித்ரவருனசக்தியா அப்படி என்றால் என்ன?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்பூர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் மயிலின் கழுத்துப் பகுதி என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள். இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. மயிலின் கழுத்து நிறம் அது காப்பர் சல்ஃபேட் கண்டுபிடித்தாகிவிட்டது. அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது.

வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் அகத்தியர் இட்ட பெயர் மித்ரவருண சக்தி. இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர். மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் குறிக்கும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

ஜல நரசிம்மர்

கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிச்சூழ மலையில் உள்ளது ஜர்னி நரசிம்மர் குகை கோவில். ஆங்காங்கே வவ்வால்கள் தொங்கிக்கொண்டிருக்கும் 300 அடி நீளமுள்ள குகையில் மார்பளவு தண்ணீரில் நடந்து சென்றால் இங்குள்ள நரசிம்மரை தரிசிக்கலாம். இந்த குகையில் தானாக ஊற்றெடுத்து எப்போதும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. இந்த தண்ணீரில் பல மூலிகை சக்திகள் இருக்கிறது. குகையின் முடிவில் சிவ லிங்கமும் நரசிம்மர் சிலையும் உள்ளது. இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக தோன்றியவர்.

பிரகலநாதனுக்காக நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த பின்னர் ஜலசூரன் என்னும் அரக்கனையும் வதம் செய்தார். அந்த அரக்கன் ஒரு சிறந்த சிவ பக்தன் அவன் இந்த குகையில் தான் சிவனை தவம் செய்து வழிபட்டான். நரசிம்மர் அவனை வதம் செய்த பின்னர் இந்த குகையில் அவன் ஜலமாக (நீராக) மாறி சிவனின் பாதத்தில் இருந்து ஊற்றெடுத்தான். அந்த அசுரனின் ஆசைக்கு இணைக்க நரசிம்மர் இந்த குகையில் குடிகொண்டார் என்று புராண வரலாறு கூறுகிறது.

கர்மா

கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார். ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான். அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான். மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான். அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான். அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான். அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான் அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை. கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர் சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர் நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர். ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன். அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்.

இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன் அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும் என்றான் கடைக்காரன் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது. இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி. மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான் தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான். அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக்கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான். அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான். அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான். அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான். அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான். அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது. இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான். அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்.

குரு சிஷ்யர்களைக் கேட்டார் சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன என்றார் பல சீடர்கள் அதற்கு பல விதமாக கர்மா என்பது நமது சொற்கள் நமது செயல்கள் நமது உணர்வுகள் நமது கடமைகள் என்றெல்லாம் பதில் கூறினர். குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும். மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும் என்று முடித்தார்.

வால்மீகி வரலாறு

தேவலோகத்தில் வருண பகவான் தன்னுடைய குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நாராயண நாமத்தை சொல்லிக்கொண்டு நாரதர் அங்கு வந்தார். வருண பகவானோ நாரதர் வருவதைக் கவனிக்காமல் குழந்தையுடனே விளையாடிக் கொண்டிருந்தார். நாராயண நாமத்தை கவனிக்காத வருணன் மேல் கோவம் கொண்ட நாரதர் நீ உன் குழந்தையை பிரிவாயாக என்று சாபமிட்டார். நாரதரிடம் தன்னை மன்னிக்கும் படியும் சாப விமோசனம் கொடுக்கும் படியும் கேட்டுக்கொண்டான் வருணன். அதற்கு நாரதர் இந்தச் சாபம் ஒரு வரம் இக்குழந்தை பூலோகத்தில் பிறந்து பிற்காலத்தில் விஷ்ணுவின் அவதாரப் புராணத்தை ஒரு இதிகாசமாகப் படைக்கும் என்று வாழ்த்திவிட்டு சென்றார். அக்குழந்தையே பிற்காலத்தில் வால்மீகி என்ற பெயர் பெற்று ராமாயணத்தை படைத்தார்.

மகரிஷி கஷ்யப அதிதி தம்பதியருக்கு ஒன்பதாவது குழந்தையாக வருண் பிரசேதாஸ் என்பவர் பிறந்தார். அந்த வருண் பிரசேதாஸிற்கு ரிக்சன் என்கிற ரத்னாகர் பத்தாவது குழந்தையாகப் பிறந்தார். ரத்னாகர் தனது மிகவும் ஏழ்மையான குடும்பத்தைக் காப்பாற்ற வழி தெரியாமல் திருட ஆரம்பித்தான். காட்டு வழியில் வருபவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை அடித்துக் கொண்டு தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய ஜென்ம காரணத்தினால் நாரதர் ரத்னாகர் இருந்த காட்டு வழியே வந்தார். அவர் வருவதைப் பார்த்துவிட்டு கத்தியை எடுத்துக் கொண்டு அவர் அருகில் சென்றான். அவரை அருகில் சென்று பார்ததுமே அவன் மனதில் சிறிது சாந்தம் ஏற்பட்டது. அவரிடம் யார் நீங்கள்? எங்கு வந்தீர்கள்? இருப்பதையெல்லாம் கீழே வைத்துவிட்டு பேசாமல் ஓடிப்போங்கள் என்றான். அதற்கு அவர் என்னிடம் ஒன்றுமே இல்லை நான் நாராயண மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு பகவானை வணங்கிக் கொண்டு இருக்கின்றேன். எனக்கு எதுவும் தேவை இல்லை. சதா பகவத் தியானத்திலேயே ஆனந்தமாக இருக்கின்றேன் என்றார். அதற்கு ரத்னாகர் பார்த்தாலே தெரிகிறது நீங்கள் சாந்தமாக ஆனந்தமாக இருக்கின்றீர்கள். ஆனால் உங்களிடம் ஒன்றும் இல்லை என்கின்றீர்கள். நான் நிறைய கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கிறேன் என்றான்.

நீ இப்படி சேர்த்து வைத்த பணமெல்லாம் பண மூட்டை இல்லையப்பா இதெல்லாம் பாவ மூட்டை. இதற்காக நரகத்தில் கஷ்டப்படுவாய். இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு சொர்க்கம் நரகம் என்று உள்ளது. இங்கே நல்ல வாழ்க்கை வாழ்ந்து புண்ணிய காரியங்கள் செய்தால் சொர்க்கம் செல்வார்கள். பாவச் செயல்கள் செய்தால் நரகத்திற்கு செல்வார்கள். நரகத்தில் பலவிதமான தண்டனைகளைப் பெற்று அவதிப் படவேண்டியிருக்கும் என்றார் நாரதர். நான் செய்யும் செயல்கள் அனைத்தும் என் மனைவி குழந்தைகளுக்காகத் தானே செய்கிறேன். அவர்கள் எல்லோரும் என்னுடைய பாவத்தைப் பகிர்ந்து கொள்வார்கள் என்றான் ரத்னாகர். அப்படியானால் நீ அவர்களைப் போய் கேட்டுக் கொண்டு வா என்றார் நாரதர். முனிவரே தப்பித்துப் போக முயல்கிறீரா இதெல்லாம் என்னிடம் முடியாது என்றான். இல்லையப்பா நீ வேண்டுமானால் என்னைக் கயிற்றால் கட்டிப் போட்டுவிட்டுச் செல். அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும் என்றார் நாரதர். ரத்னாகர் யோசித்துப் பார்த்தான். இந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து நாரத முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான்.

ரத்னாகர் அவனின் வீட்டுக்கு வந்து தன் அப்பா அம்மா மனைவி மற்றும் குழந்தைகளிடம் நான் நிறைய பாவம் செய்துவிட்டதாக ஒரு முனிவர் சொல்கிறார். அந்த பாவங்களை எல்லாம் நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்கிறீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள் நாங்கள் எதற்காக உன் பாவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்? நீ நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியதுதானே? நீ ஏன் பாவ வழியில் சம்பாதிக்கின்றாய்? குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது உன்னுடைய கடமை. அதற்கு நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியது உன்னுடைய தர்மம். அதை விட்டு விட்டு தவறான வழியில் சம்பாதிப்பது உன் தவறு. அதனால் உன்னுடைய பாவத்தை நாங்கள் வாங்கிக் கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இதைக் கேட்டவுடன் ரத்னாகருக்கு அகக்கண் திறந்துவிட்டது. திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் ரத்னாகர். ஓடி வந்து நாரதரின் காலில் விழுந்து சுவாமி நீங்கள் சொன்னது சரிதான் என்று கண் கலங்கியபடியே நாரதரின் கட்டுகளை அவிழ்த்து விட்டான். சுவாமி நீங்கள் சொன்னபடி என் மனைவி குழந்தைகள் பெற்றோர் என எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறிவிட்டார்கள் என்றான். அதற்கு நாரதர் அவர்கள் சொன்னதில் தவறில்லையே? மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல்வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை என்றார் நாரதர். ஆமாம் சுவாமி அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும் என்றான். நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் இராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே. இராம நாமத்தை ஜபம் செய்வது எல்லாப் பாவத்தையும் போக்கும் என்றார் நாரதர்.

ரத்னாகருக்கு ராம என்ற சொல் வாயில் நுழையவில்லை. இதனை பார்த்த நாரதர் அங்கிருக்கும் மரத்தை காட்டி இது என்ன மரம் என்று கேட்டார். இது மரா மரம் என்றான். நீ இந்த மரத்தின் பெயரான மரா என்பதைச் சொல்லிக் கொண்டிரு அது போதும் என்றார். நீங்கள் சொன்னபடியே இந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று வணங்கி நின்றான். நாரதரும் அவனை ஆசீர்வசித்து விட்டுத் தன் வழியே சென்றார். அவர் போனபின் ரத்னாகர் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து மரா மரா மரா என்று ஜபிக்க ஆரம்பித்தான். நாளடைவில் அது ராம ராம ராம என்று மறுவி ஒலித்தது. ரத்னாகர் இரவு பகலாய் பசி தாகத்தை மறந்து ராம ராம ராம என்று ஜபம் செய்து கொண்டே சமாதி எனும் நிஷ்டையில் இருந்தான். அசையாமல் அவன் இருந்ததால் நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான்.

சில காலம் கழித்து சப்தரிஷிகள் அந்தப் பக்கம் வந்தார்கள். அங்கே ராம நாம ஜபம் ஒரு புற்றுக்குள்ளிருந்து ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்டு அதற்குள் இருப்பவரை தங்களின் ஞானக்கண்ணால் பார்த்து வால்மீகி என்று அழைத்தனர். சமஸ்கிருதத்தில் வால்மீகி என்றால் புற்றுக்குள்ளிருப்பவன் என்று பெயர். அவர்களின் அழைப்பினால் தவம் கலைந்து புற்றிலிருந்து ரத்னாகர் வால்மீகியாக வெளியே வந்தார். இடைவிடாத ராம நாம ஜெபத்தின் பயனால் நீங்கள் ஒரு மகரிஷியாகிவிட்டீர்கள். இன்றிலிருந்து உமக்கு வால்மீகி என்று பெயரே நிலைக்கும். ராம நாமத்தின் மகிமையை உங்கள் மூலமாக இந்த உலகம் தெரிந்துக் கொள்ளும் என்று கூறி ஆசீர்வதித்தனர். அவரும் ரிஷிகளை நமஸ்கரித்து விட்டு பின் ராம நாமத்தையே ஜபித்துக் கொண்டு ஒரு ஆசிரமத்தை தமஸா நதிக் கரையில் கட்டிக் கொண்டார். அவரிடம் சிஷ்யர்கள் எல்லாம் வந்து சேர்கிறார்கள். வால்மீகி தன்னுடைய தவத்தினால் ராமனின் வரலாற்றை தனது ஞானதிருஷ்டியில் கண்டார். இப்படிப்பட்ட குணாதிசயங்களோடு ஒரு மனிதன் இந்த உலகத்தில் இருப்பானா என்று அவருக்கு சந்தேகம் வந்தது.

ஒரு நாள் நாரதர் அவரது ஆசிரமத்திற்கு வருகிறார். அவரை வரவேற்ற வால்மீகி தன்னுடைய ஞான திருஷ்டியில் கண்ட மனிதனை பற்றி நாரதரிடம் கேட்கின்றார். இந்த உலகில் சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லா நல்ல குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா என்று நாரதரிடம் கேட்டார். அதற்கு நாரதர் உண்டு அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த தசரத மன்னனின் குமாரர் ஸ்ரீராமர் என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராம சரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப இராமாயணம் எனப்படும். இதுவே வால்மீகி ராமாயணத்தின் முதல் சர்கம் ஆகும்.

ஒரு நாள் வால்மீகி முனிவர் தமஸா நதியில் குளிக்க செல்கிறார். அப்போது அங்கு இரண்டு அன்றில் பறவைகள் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டு இருக்கின்றன. அப்போது வேடன் ஒருவன் அம்பால் ஒரு அன்றில் பறவையை அடித்துவிடுகிறான். ஒரு பறவை இறந்தவுடன் இன்னொரு பறவை தன்னுடைய ஜோடி பறவை இறந்த துக்கத்தில் ஓலமிட்டது. பறவையின் துக்கத்தை கண்ட வால்மீகி தன் ஞான திருஷ்டியில் கண்ட ராமனும் இப்படி தானே சீதையை பிரிந்து துக்கப்பட்டிருப்பான் என்று எண்ணி திரேதாயுக விஷ்ணுவின் அவதாரமான ராமாயண இதிகாசத்தை 24000 சுலோகங்கள் கொண்டதாக முழுமையாக இயற்றினார். யோக வாசிஷ்டம், அத்புத ராமாயணம், கங்காஷ்டகம் ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டவையே.

வால்மீகி இயற்றிய ராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவர் இயற்றிய ராமாயணமும் அதன் பாத்திரங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள் விவரிக்கப் பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள் அரசுகள் போன்றவற்றை ஆய்வு நோக்கில் பார்க்கும் போது வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என்று தெரிந்து கொள்ளலாம். நான்கு வரிகள் கொண்ட சுலோகங்களால் எழுதப்பட்டுள்ள வால்மீகியின் ராமாயணத்திலிருந்து ஒரு வரியைக் கூட மாற்ற முடியாது அல்லது புதிதாக இடைச் செருகல் என்று சேர்க்க முடியாது என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு.

பல முனிவர்கள் வால்மீகி என்கிற இதே பெயரில் இருந்து சித்தி அடைந்திருக்கிறார்கள். எட்டுகுடியில் ஒரு வால்மீகியின் சமாதி இருக்கிறது. அவர் எழுதிய பாடல்கள் மூலம் அவர் பிற்காலத்தவர் என்று தெரிந்து கொள்ளலாம். திருவாரூர், சங்கரன்கோவில், குடவாசல், திருவெற்றியூர், காஞ்சீபுரம் இப்படிப் பல கோவில்களில் வால்மீகநாதர் சந்நிதியும் வேறுபாடான திரு உருவங்களும் உண்டு. இவை எல்லாம் வால்மீகி என்ற பெயரில் பல முனிவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதற்குச் சான்றாகும்.