இறைவனை அடையும் வழி

புதிதாக வந்த சீடன் குருவிடம் இறைவனை தேடுகிறேன் அறிந்து கொள்ள பல பயிற்சிகள் செய்கிறேன். என்னால் இறைவனை விரைவில் அறிந்து கொள்ள முடியுமா என்று குருவிடம் கேட்டான்.

குரு – சீடனே உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?

சீடன் – நம்புகிறேன் இருப்பினும் கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.

குரு – எதனால் இந்த சந்தேகம் வருகிறது?

சீடன் – பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.

குரு – நல்லது எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே. இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன் நீ ஆண்டவனைத் தெரிந்து கொள்ள அடைய உண்மையிலேயே விரும்புகிறாயா?

சீடன் – ஆமாம் குருவே.

குரு – உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?

சீடன் – ஆமாம் குருவே.

குரு – அன்புள்ள சீடனே நீ இறைவனை அடைய ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்.

சீடன் – மிகவும் சந்தோஷம் குருவே இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

குரு – ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது ஆனால் இறைவன் தான் உன்னை வந்து அடைவான்.

சீடன் – இது குழப்பமாக இருக்கிறதே.

குரு – ஒரு குழப்பமும் இல்லை ஒர் கதை சொல்கிறேன் கேள் ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது. ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான் அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். நாட்டுக்கு நன்மை பயக்கும் பல நற்காரியங்களை செய்கின்றான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது. ராஜாவே அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார் பாராட்டுகிறார் பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?

சீடன் – நிச்சயமாக நடக்கும் குருவே.

குரு – இப்போது ராஜாதான் இறைவன். நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது சிறிது கடினம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே (இறைவனே) உன்னைப் பார்க்க வருவார். எனவே இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான தான தர்ம செயல்களில் ஈடுபடு இறைவனே உன்னை வந்து அடைவான் சரிதானே?

சீடன் – மிகவும் சரிதான் குருவே.

குரு – நல்லது சீடனே இனி ஆன்மிகம் உனக்கு கை கூடும். போய் வா என்றார்.

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்.

நம் எண்ணங்களும் உணர்வுகளும் சிந்தனைகளும் சொல்களும் செயல்களும் நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு நல்லது செய்யுமெனில்
இறைவனை நாம் தேட வேண்டியதில்லை இறைவனே நம்மை தேடி வருவார்.

மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -3

பாண்டவ சகோதரர்கள் 13 வருடங்களுக்கு பிறகு தங்களிடமிருந்து தாய் குந்தியை சந்தித்தனர். அவள் பாதத்தில் வீழ்ந்து வணங்கினர். காந்தாரியின் மருமகள்களும் அருகில் தனது கணவர்களை இழந்து நின்றனர். சோகம் ததும்பிய சந்திப்பாக அது காட்சி கொடுத்தது. காந்தாரியை பார்த்து திரௌபதி தாயே உங்களுடைய பேரர்கள் அனைவரும் நடந்த போரில் அழிந்துவிட்டனர் என்று தேம்பி அழுதாள். பெரும் துயரத்தில் மூழ்கி இருந்தவர்கள் தங்களது பரிதாபகரமான நிலையை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்

கொடிய யுத்தத்தின் முடிவை அறிந்து கண்டு கொள்வதற்காக காந்தாரிக்கு ஞானக்கண்ணை கொடுத்தருளினார் வியாசர். சிறிது நேரம் இதை பார்த்து திகைத்து போன காந்தாரி யுத்தத்தை உள்ளபடி கிருஷ்ணரிடம் விவாதித்தாள். இறுதியில் பார்த்த நிகழ்ச்சிகள் யாவும் மனைவிமார்கள் தங்களுடைய கணவன்மார்களை இழந்து விட்டதை குறித்து அழுகையின் குரலாகவே இருந்தன. இதற்கெல்லாம் காரணம் கிருஷ்ணனுடைய பாராமுகம் என்று காந்தாரி கிருஷ்ணரிடம் குற்றம் சாட்டினாள். கிருஷ்ணன் நினைத்திருந்தால் இந்த பெரும்போரை ஆரம்பத்திலேயே தடுத்து இருக்கலாம் என்பது காந்தியின் கருத்து. எண்ணிக்கையில் அடங்காத சேனைகள் சேனைத் தலைவர்கள் அரசர்கள் அழிந்து போனதற்கு காரணமாக இருந்தவன் கிருஷ்ணன் என்று காந்தாரி எண்ணினாள்.

குரு வம்சம் முழுவதும் அழிந்து போனதற்கு நிகராக 36 வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ணரின் விருஷ்ணி வம்சம் தங்களுக்குள்ளேயே கலவரம் மூண்டு அழிந்துபோகும் என்று கிருஷ்ணன் மீது அவள் சாபத்தை சுமத்தினார். அதற்கு கிருஷ்ணன் தாயே நீ உள்ளன்போடு உனது கணவருக்கு நீ செய்திருந்த பணிவிடைகளின் விளைவாக ஓரளவு புண்ணியத்தை நீ பெற்றிருக்கிறாய். விருஷ்ணி வம்சத்தின் மீது சாபம் கொடுத்ததன் விளைவாக சேர்த்து வைத்த புண்ணியத்தை நீ இழந்து விட்டாய். விருஷ்ணிகள் யாராலும் வெல்லப்பட மாட்டார்கள் என்பது உண்மையே. ஆயினும் ஏதேனும் ஒரு விதத்தில் அவர்கள் இவ்வுலகை காலி பண்ணி ஆக வேண்டும். ஆகையால் உன்னுடைய சாபத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த யுத்தத்தில் நான் பாராமுகமாக இருந்து விட்டேன் என்று நீ குற்றம் சாட்டுவதில் உண்மை இல்லை. குரு வம்சத்தவர்களை காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்துக் கொண்டேன். உண்மையில் உங்கள் குடும்பத்தின் அழிவுக்கு காரணம் உங்களுடைய பாராமுகமும் உங்களுடைய கணவரின் பாராமுகம் மட்டுமே. உங்களுடைய புதல்வர்களின் கொடுரம் நிறைந்த அதர்மங்களே இந்த யுத்தத்திற்கு காரணம். இந்த அதர்மங்களுக்கு துணை நின்ற இனைத்து அரசர்களும் தடுக்க முடியாதபடி அழித்துவிட்டனர். அது குறித்து இனி ஆவது ஒன்றுமில்லை. ஆகையால் துயரத்திலிருந்து விடுபட்டு தெளிவடைந்து இருப்பாயாக என்று கிருஷ்ணன் கூறினார்.

தர்பைப்புல்

ஒரு காலத்தில் தம்போத்பவா என்ற மாபெரும் மன்னன் விதர்ப தேசத்தில் இருந்தான். அவன் பல புண்ணியங்களையும் செய்து கொண்டே இருந்ததினால் அவனுக்கு பெரும் வரங்கள் கிடைத்து இருந்தன. அவன் உலகெங்கும் சுற்றி அனைத்து நாடுகளையும் வென்றான். இனி வெல்வதற்கு நாடுகளே இல்லை என்ற நிலை வந்த போது அவனுடைய ராஜகுரு கூறினார் மன்னா இனி நீங்கள் ஏன் பூமியில் உள்ளவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். தேவலோகத்துக்குச் சென்று அங்குள்ள தேவர்களையும் வெற்றிக் கொள்ள வேண்டும். அதுவே இனி உங்கள் பெருமைக்கு தகுந்ததாக அமையும். அதைக் கேட்ட மன்னனுக்கும் ஆசை துளிர் விட்டது. நாம் உண்மையிலேயே மிகப் பெரிய மன்னன் பூமியிலேயே அனைத்தையும் வென்றுவிட்ட நான் தேவலோகம் சென்று அதையும் வென்று வர வேண்டும் என எண்ணத் துவங்கினான். அப்படி எண்ணியவன் ஒரு நாள் பெரும் படையுடன் கிளம்பி தேவலோகத்துக்குச் சென்றான்.

படையினரை தேவலோகத்தின் வாயிலிலேயே நிற்க வைத்தப் பின் நேராக பிரம்மாவிடம் சென்றவன் தான் வந்தக் காரியத்தைக் குறித்துக் கூற பிரம்மா அவனுடைய அகங்காரத்தை அடக்க முடிவு செய்தார். தம்போத்பவா நீ இன்னமும் பூமியில் உள்ள சிலரை வெற்றி கொள்ளாமல் இங்கு வந்து என்னப் பயன் முதலில் அங்கு சென்று அவர்களை வென்றுவிட்டு வா என்றார். தம்போத்பவா வியப்புற்றான். பூமியில் நான் வெல்ல யாரும் இருக்கின்றார்களா என ஆச்சர்யமாக அவரிடம் கேட்க பிரம்மா பூமியில் வட பகுதியில் இருந்த கந்தமாதனா என்ற பகுதியில் உள்ள நதிக்கரையில் அமர்ந்து இருந்த இரண்டு தேவ முனிவர்களை வெற்றிக் கொண்டு விட்டு தேவலோகத்துக்கு வருமாறு கூறி அனுப்பினார்.

தம்போத்பவாவும் உடனே கிளம்பி கந்தமாதனாவிற்குச் சென்றான். அங்கு ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தபடி தவத்தில் இருந்த இரண்டு முனிவர்களைப் பார்த்தான். இவர்களையா நான் வெல்ல வேண்டும் என்று எண்ணியவன் அவர்கள் எதிரில் சென்று நின்று கொண்டு அவர்களுடைய தவத்தைக் கலைத்தான். கண்களை விழித்தவர்களிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னர் அவர்கள் தம்முடன் சண்டையிட்டு வெற்றிபெற வேண்டும் இல்லை என்றால் சரணாகதி அடை வேண்டும் என இறுமாப்புடன் கூறினான். அவர்களை சுற்றி தர்பைப் புல் வைக்கப்பட்டு இருந்தது. முனிவர்கள் கூறினார்கள் தம்போத்பவா நீ ஒரு பெரிய மன்னன். ஆனால் நாங்கள் முனிவர்கள். நாங்கள் ஏன் உன்னுடன் சண்டைப் போட வேண்டும். நீ உன் வழியில் போ நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம் என்றார்கள். ஆனால் அது மன்னன் மனதில் ஏறவில்லை. அவர்களின் தவத்தை இடையூறு செய்த வண்ணம் வாளை உறுவி வைத்துக் கொண்டு அவர்களை சண்டைக்கு அழைத்தான். எத்தனை நேரம் தான் விதண்டாவாதம் செய்வது என எண்ணிய முனிவர்கள் தமது முன்னால் வைத்து இருந்த ஒரு கட்டு தர்பை புற்களை எடுத்து அவன் மீது வீசினார்கள். அந்த ஒரு கற்று தர்பைப் புல் பல கற்றுகளாக மாறி அவனைத் தாக்கத் துவங்கின. அவன் தனது வாளினால் தர்பைகளை வெட்ட வெட்ட அவை பெருகிக் கொண்டே போனது மட்டும் அல்லாமல் அவன் கேடயங்களும் அவன் மீது விழுந்து கொண்டு அடிகளை தடுக்க முடியாமல் திணறி இரண்டாக உடைந்து விழுந்தது. தர்ப்பைப் புற்கள் அவன் உடலெங்கும் கீறிக் கீறிக் காயப்படுத்த அவனால் சண்டை இட முடியாமல் அப்படியே முனிவர்கள் முன்னால் விழுந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். உடலெங்கும் ரத்தம் வழிய தமது காலடியில் விழுந்து கிடந்தவனை எழுப்பினார்கள் முனிவர்கள்.

முனிவரே ஒரு தர்பைப் புல் என் அனைத்து ஆயுதங்களையும் வலுவிழக்கச் செய்து விட்டதை எண்ணி வியக்கின்றேன். அதற்கு அத்தனை மகிமையா? என்று கேட்டதும் அவன் முன்னால் நாரத முனிவர் அமைதியாக சிரித்துக் கொண்டே காட்சி தந்தார். மீண்டும் மீண்டும் அவரிடம் தனது அறியாமையினால் ஏற்பட்ட தவறைக் கூறி தன்னை மன்னிக்குமாறு கேட்டதும் நாரதர் கூறினார் மன்னா அகங்காரம் தன்னையே அழிக்கும் என்பது பழமொழி. அதற்கு உதாரணமாக நீ இருக்கிறாய். தர்பையை என்ன அத்தனை கேவலமாக நினைத்து விட்டாயா? தட்சிணாமூர்த்தி கைகளுடன் ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார். அவருடைய வலது கால் அபஸ்மரா என்ற அரக்கனை மிதித்த நிலையில் இருப்பார். அது அறியாமையை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் பாம்பையும் பிடித்திருப்பார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பும் கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும் ஓலைச்சுவடியையும் வைத்து இருப்பார். அவரது கீழ் வலது கை மூலம் ஞான முத்திரையை காட்டுவார். அந்த தக்ஷிணாமூர்த்தி யார் தெரியுமா? சிவபெருமானின் ஒரு ரூபம் ஆவார். அப்படிப்பட்டவர் கையில் உள்ள தர்பையை வேறு யாரிடமாவது காண முடியுமா?

அதை எதற்காக அவர் தனது கையில் வைத்து இருக்கின்றார் தெரியுமா? தியான நிலையில் உள்ளவர் கையில் ஆயுதம் வைத்து இருக்கக் கூடாது. ஆனால் அதே சமயத்தில் தியானத்தை தடுக்க வருபவர்களை ஆயுதமாக அது மாறி தாக்க வல்லமைக் கொண்ட சக்தியை தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு உள்ளதே தர்பை என்பதை அவர் மூலம் அறிய முடிகின்றது. நமக்கு ஏற்படும் பல கெடுதல்களையும் போக்கவல்லது தர்பை என்று வேதங்களில் கூறப்பட்டு உள்ளது. அதனால் தான் நல்லதோ கெட்டதோ ஹோமம் செய்யும் போது தர்பையினால் ஆனா பவித்ரம் {மோதிரத்தை} அணிந்து கொண்டே காரியங்களை செய்கிறோம். அந்த நேரத்தில் விரல் என்பது நமது உடலை குறிக்கின்றது. நமது உடலை சுற்றி நம்மைக் காக்கும் அந்த தர்ப்பை. ஹோம குண்டங்களில் யாக குண்டங்களில் நான்கு பக்கமும் தர்பையை வைப்பது அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். எளிய முனிவர்களுக்குக் கவசமாக உள்ள அப்படிப்பட்ட தர்பையே சக்தியாக உருவெடுத்து உன்னைத் தாக்கி அழித்தது. நாரதர் கூறியதைக் கேட்ட தம்போத்பாவா வெட்கி தலைக் குனிந்தான். அவரை வணங்கி துதித்து விட்டு நாட்டிற்குத் திரும்பியவன் முதலில் ராஜ குருவை அரண்மனையில் இருந்து துரத்தி அடித்தான். அடுத்து தனது அனைத்து அரசையும் வாரிசுகளிடம் ஒப்படைத்து விட்டு தக்ஷிணாமூர்த்தியின் பக்தனாக மாறி தனது கடைசி காலத்தை அமைதியாக கழித்தான்.

ஆதி நடராஜர்

சிவதாண்டவத்தில் உன்னதமான ஆனந்த தாண்டவம் புடைப்பு சிற்பமாக நீளம் அகலம் 40 செமீ அளவில் சிறியதாக செதுக்கப்பட்டுள்ளது. நடனமாடும் சிவனின் கையில் உடுக்கை இல்லை. காலடியில் முயலகன் இல்லை. சிவனின் இரு காதுகளிலும் ஒரே விதமான குழைகள். தீச்சட்டி இடதுகையில் இல்லாமல் வலது கையில் ஏந்தப்பட்டிருக்கிறது. எப்போதும் அவர் கழுத்தைச் சுற்றியிருக்கும் நல்லபாம்பு கழுத்தில் இல்லாமல் தனியாகத் தரையில் படம் எடுத்தபடி இருக்கிறது. இந்தச் சிறிய சிற்பத்தில் வலது புறத்தில் ஒரு சிவகணம் முக்காலியில் அமர்ந்து ஒருபக்க மேளம் ஒன்றைத் தட்டிக் கொண்டிருக்கிறார். இடம் அவனிபஜன பல்லவேஸ்வரம் கோவில் (ஸ்தம்பேஸ்வரர் கோவில்) சீயமங்கலம் திருவண்ணாமலை.

மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -2

பாண்டவர்கள் தங்களது பெரியம்மாவாகிய காந்தாரியை சமரசம் செய்து கொள்ள கடமைப்பட்டிருந்தார்கள். அது மிக கடினமான காரியம் ஏனென்றால் இந்த யுத்தத்தில் அவனுடைய நூறு புதல்வர்களையும் பாண்டவர்களால் இழந்து விட்டாள். பிரத்யேகமாக பீமன் மீது அவள் அதிகமாக கோபம் கொண்டிருந்தாள். பீமன் ஒருவனே அனைவரையும் அழித்தவன். அதை முன்னிட்டு பீமன் மீது காந்தாரி சாபமிடுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருந்தது. காந்தாரியின் சாபத்தை தடுத்தல் பொருட்டு வியாசர் முதலில் காந்தாரியிடம் சென்று அவளை சமாதானப்படுத்தினார். நிகழ்ந்த யுத்ததிற்கு காரணம் துரியோதனனும் அவனது சகோதரர்களும் என்பதை அவள் ஒத்துக்கொண்டாள். யுத்தத்தை கிளம்பியவர்கள் அந்த யுத்தத்தில் மடிந்து போனது முறையே என்று வியாசர் ஆறுதல் கூறி அங்கிருந்து கிளம்பினார்.

பீமன் கௌரவ சகோதரர்களை கொல்ல கையாண்ட முறையை ஆமோதிக்க அவளால் இயலவில்லை. துச்சாதனனுடைய ரத்தத்தை குடித்தான். கதையுத்தத்தில் முறையற்ற பாங்கில் துரியோதனனின் தொடையில் அடித்து அவனை வீழ்த்தினான். எனவே பீமன் மீது கோபம் மிகவும் கொண்டிருந்தாள். பெரியம்மாவாகிய காந்தாரியின் காலில் விழுந்து பீமன் வணங்கினான். தாயே தாங்கள் என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தையும் குற்றமாகவே நான் ஏற்றுக் கொள்கின்றேன். நான் செய்துள்ள குற்றங்களுக்கு என்னை மன்னிப்பார்களாக. மற்றும் ஒரு விஷயத்தை நான் உங்களிடம் கூறுகின்றேன். 13 வருடங்களுக்கு முன்பு இச்செயலை சபை நடுவே நான் செய்திருந்தால் அப்போது தாங்கள் ஆமோதித்து இருப்பீர்கள். அப்போது என் தமையன் யுதிஷ்டிரன் செய்த தடையால் நான் இத்தனை காலம் காத்திருந்தேன். அன்று அவமானப்படுத்தப்பட்ட திரௌபதிக்கு ஆறுதல் தரும் பொருட்டு நான் செய்திருந்த சபதத்தின்படி துச்சாதனனின் ரத்தத்தை குடித்துவிட்டு யாருக்கும் தெரியாத வண்ணம் துப்பிவிட்டேன்.

திரௌபதிக்கு துரியோதனன் தன் தொடையை காட்டி அவமானப்படுத்தினான். அப்போழுதே துரியோதனனின் தொடையை துண்டிப்பேன் என்று நான் தீர்மானம் பண்ணினேன். அத்தீர்மானத்தையும் அன்றே துரியோதனனிடம் அனைவர் முன்னிலையிலும் தெரிவித்துவிட்டேன். கதையுத்த போராட்டத்தில் துரியோதனனை யாரும் நேர்மையான முறையில் தோற்கடிக்க இயலாது. கதையுத்தத்தில் அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. நான் கொண்டிருந்த தீர்மானத்தை நிறைவேற்றுதல் பொருட்டு முறை தவறி துரியோதனனின் தொடையில் அடித்தேன். அந்த குற்றத்திற்காக தாங்கள் என்னை மன்னித்தருள்வீர்களாக என்று பீமன் கூறினான். பீமனின் பேச்சை கேட்டதும் காந்தாரியின் கோபம் பெரிதும் அடங்கியது. பீமனுடைய அறிவு திறமையை கிருஷ்ணர் பாராட்டினார். பாண்டவ சகோதரர்கள் தங்கள் பெரியம்மா காந்தாரியின் காலில் விழுந்து வணங்கினார்கள்.

அக்கமாதேவி குகை லிங்கம்

ஸ்ரீசைலம் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நல்லமலை குன்றில் அக்கமாதேவி குகைகள் அமைந்திருக்கிறது. 150 அடி ஆழம் கொண்ட சரித்திர சிறப்பு வாய்ந்த அக்கமாதேவி குகையில் இந்த லிங்கம் காணப்படுகிறது.

பசு நாகம் என்ற தெய்வ அம்சங்கள்

மகாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல் படுத்திருக்கிறார். பரமசிவன் கழுத்தில் பாம்பு அழகாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. விநாயகப் பெருமான் இடுப்பில் பாம்பை சுற்றிக் கொண்டிருக்கிறார். பகவான் கிருஷ்ணர் காளிங்கன் என்ற பாம்பின் மேல் நர்த்தனம் ஆடுகிறார். முருகனின் வாகனமான மயில் வாயில் பாம்பைக் கொத்திக் கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் தன்னலம் கருதாது கொடையளிக்கும் பசுவும் தெய்வாம்சமாக இருக்கின்றது. நஞ்சை உமிழ்ந்து மனிதனுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய பாம்பு தெய்வாம்சமாக இருக்கின்றது. இந்த குழப்பத்திற்கு வாரியார் சுவாமிகள் அருமையான விடையைக் கூறியுள்ளார். மனித ஜென்மம் என்பது பாவங்களும் புண்ணியமும் கலந்த ஒன்று. மனிதனுக்கு மனிதன் பாவ புண்ணிய விகிதாசாரம் வேறுபடலாம். ஆனால் மனித வாழ்க்கை முழுவதும் 100 சதவிகிதம் பாவம் செய்தவனுமில்லை. மனித வாழ்க்கை முழுவதும் புண்ணியம் செய்பவனும் இருப்பது சாத்தியமில்லை. இறைவன் எப்படிப்பட்ட மனிதனையும் தன் பிரஜையாகவே கருதி ரட்சிக்கிறான். அதன் அடையாளமாகத்தான் மனித உணவின் எச்சத்தை உண்டு சத்தான பாலைக் கொடுத்து நல்லவற்றை மட்டும் செய்யும் பசுவையும் தெய்வாம்சம் கொண்டதாகச் செய்தார் கடவுள். நஞ்சை உமிழும் பாம்பையும் கழுத்திலோ இடுப்பிலோ தன் உருவத்திலோ அணிந்துகொண்டு நஞ்சையளிக்கும் நாகப் பாம்பையே ஏற்றுக் கொள்கிறேன். உன்னையா ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பாம்பையும் தெய்வாம்சம் கொண்டதாக்குகிறார் என்று விளக்கமளித்தார்.

நல்லவனுக்கும் சரி கெட்டவனுக்கும் சரி ஆத்திகனுக்கும் சரி நாத்தினுக்கும் சரி கடவுள் ஒன்றுதான்.

மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -1

விதுரரும் சஞ்சயனும் திருதராஷ்டிரனை சமாதானப்படுத்த பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். அஸ்தினாபுரம் துக்கத்தில் மூழ்கி இருந்தது. உற்றார் உறவினர் என அனைவரையும் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் மடிந்து போனதை குறித்து பெண்கள் அழுது கொண்டிருந்தனர். போரில் எண்ணிக்கையில் அடங்காத வீரர்கள் அழிந்து போனதற்கு திருதராஷ்டிரன் தான் காரணம் என்று சஞ்சயன் எடுத்துரைத்தான் இதைக் குறித்து பெரியோர்கள் எச்சரிக்கை செய்தபொழுது திருதராஷ்டிரன் அதை ஏற்கவில்லை. பின்பு அதன் விளைவை அனுபவித்தே ஆகவேண்டும் என்று விதுரர் கூறினார். அப்போது வியாச பகவான் அங்கு பிரசன்னமாகி திருதராஷ்டிரருக்கு ஓரளவு ஆறுதலும் உறுதிப்பாடும் கூறினார். அம்மன்னன் போர்க்களத்திற்குச் சென்று தன்னுடைய புதல்வர்களின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என்றும் அழிந்து போனவர்களுக்கு ஈமக் கடன்களைச் செய்து முடிக்க வேண்டும் என்றும் வியாசர் புத்திமதி புகட்டினார். திருதராஷ்டிரன் தன் தம்பியின் பிள்ளைகளாகிய பாண்டவர்களை தன் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார் வியாசர்.

அஸ்தினாபுரத்தில் இருந்தவர்கள் கும்பல் கும்பலாக புறப்பட்டு போர்க்களம் நடந்த இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் நடந்து போன அதே பாதையில் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரௌபதி அழுது கொண்டு வனத்திற்குச் சென்றான். தமக்கு வந்த துயரம் நாளடைவில் அஸ்தினாபுரத்து மகளிருக்கு வந்தமையும் என்று கூறி இருந்தாள். திரௌபதி அப்பொழுது கூறியது இப்போது நடந்தது.

பதிமூன்று வருடத்திற்கு முன்பு வனவாசம் போன பாண்டவர்கள் இப்போது தங்களுக்கூறிய ராஜ்யத்தை மீட்டெடுத்து வெற்றி வீரர்களாக அஸ்தினாபுரத்திற்கு திரும்பி வந்தார்கள். அஸ்தினாபுரம் நுழைந்த உடனேயே பெரியப்பா திருதராஷ்டிரரோடு இணைந்து இருக்க பாண்டவர்கள் முயன்றனர். பாண்டவர்கள் மீது கோபத்திலும் சோகத்திலும் மூழ்கிக் கிடந்தான் திருதராஷ்டிரன்.

அரண்மனைக்கு வந்த பாண்டவர்களில் யுதிஷ்டிரனை கிருஷ்ணன் முதலில் திருதராஷ்டிரருக்கு அறிமுகப்படுத்தினார். அவனை அன்புடன் கட்டித் தழுவிக் கொண்டார். இரண்டாவது பீமனை அறிமுகப்படுத்துவதாக இருந்தது. பீமன் பெயரை கேட்டதும் திருதராஷ்டிரனுக்கு கோபம் அதிகமாக வரும் என்று கிருஷ்ணர் எதிர்பார்த்தார். அதை சமாளிக்க பீமனுக்கு பதிலாக அவனைப் போன்றே செய்யப்பட்ட பொம்மை ஒன்றை திருதராஷ்டிரன் முன் நிறுத்தி பீமன் என்று அறிமுகப்படுத்தினான். துரியோதனனையும் ஏனேய அனைத்து புதல்வர்களையும் கொன்றதை எண்ணிய திருதராஷ்டிரர் சினத்தை வளர்த்து அதை வெளிப்படுத்தும் வழியாக வெறுப்புடன் இறுகத் தழுவினான். அதன் விளைவாக அந்த பொம்மை நொறுங்கிப்போனது. திருதராஷ்டிரனும் மயங்கி தரையில் விழுந்தான். திருதராஷ்டிரனை சஞ்சயன் தேற்றுவித்தார். தெளிந்து எழுந்த மன்னன் தன் செயலை குறித்து வருந்தினார். பீமனை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய முறையை கிருஷ்ணன் எடுத்துரைத்தார். பீமன் மீது இருந்த வெறுப்பு தற்பொழுது திருதராஷ்டிரருக்கு விறுப்பாக மாறி அமைந்தது. அன்பு படைத்தவனாக திருந்தி தன் தம்பியின் பிள்ளைகள் ஐவரையும் தனக்கு உரியவர்கள் என அன்புடன் ஏற்றுக்கொண்டான்.

பஞ்சநதன நடராஜர்

1.ஆலிங்க நதனம் 2.பஞ்சநதனம் 3.சிங்க நதனம் 4.யானை நதனம் 5.யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்று சிற்பக்கலை வல்லுனர்களால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன. அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அந்த கற்களுக்கு பஞ்சநதன பாறை என்று பெயர். அந்த வகை பாறையில் செய்தவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால் சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இந்த நடராஜருக்கு உண்டு. காலையில் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கும். இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது. சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள சிறுநீரகம் மற்றும் சிறுநீரக கல் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.

சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு திருச்சி அருகில் ஊட்டத்தூரில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவிலில் அருள்பாலிக்கிறார். நடராஜர் சிலைக்கு அருகில் இறைவி சிவகாம சுந்தரி முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிக்கிறார். இயற்கையிலேயே நன்னீர் ஊற்று இருந்த ஊர் என்பதனால் ஊற்றத்தூர் என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் ஊட்டத்தூர் என பெயர் மருவி மாறியது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்து இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றுள்ளார். ஆகையால் கோவிலின் நடுவில் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கோவிலில் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியே ஊரில் உள்ள மற்றொரு கோவிலான பெருமாள் கோவிலுக்கு பிரம்ம தீர்த்தம் எடுத்து சென்றதாக வரலாறு கூறுகிறது. திருநாவுக்கரசர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம் அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடலூர் என அழைக்கப்பட்டது. இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்

இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது. ராஜராஜசோழன் உடல் நலம் இல்லாமல் இருந்தபோது ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட்டு குணம் அடைந்து ஆயுட்காலம் நீட்டிக்கப்பெற்றார் என்றும் கர்ண பரம்பரை செவிவழிச்செய்தி புராண வரலாறு உள்ளது. இந்த அபூர்வ நடராஜர் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பாடலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.