தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 219 திருநாவலூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 219 வது தேவாரத்தலம் திருநாவலூர். புராணபெயர் ஜம்புநாதபுரி, திருநாமநல்லூர். மூலவர் பக்தஜனேசுவரர் ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர். பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படுகின்றன. இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் மனோன்மணி நாவலாம்பிகை, சுந்தர நாயகி. அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். தலமரம் நாவல்மரம். தீர்த்தம் கோமுகி தீர்த்தம், கருட நதி. திருநாவலூர் சுந்தரர் அவதரித்த தலம் சுக்ரன் வழிபட்ட சிவதலம் இங்கு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். இவர் சுந்தரருக்கு காட்சியளித்தவர்.

கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. கோபுரத்தையடுத்து இடதுபுறம் உள்ளே சுந்தரர் சந்நிதி உள்ளது. சுந்தரர் தனது இரு மனைவியர் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் சூழ, எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி காட்சி தருகிறார். பூலோக வாழ்க்கையை நீத்து சுந்தரர் கயிலாயம் சென்றபோது யானை மீது சென்றார். எனவே சுந்தரர் யானை வாகனத்தில் உள்ளார். கோபுர வாயில் கடந்தவுடன் எதிரில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளனர். கொடிமர விநாயகர் சுந்தர விநாயகராகக் காட்சி தருகிறார். உள்வாயிலைக் கடந்ததும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன. நால்வர் இரு மனைவியருடன் சுந்தரர், நடராசர், சிவகாமி, முருகன், விநாயகர், வள்ளி, தெய்வயானை முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன. நடராச சபை உள்ளது. உள்பிராகாரத்தில் நரசிங்க முனையரையர் பூசித்த மிகப் பெரிய சிவலிங்க மூர்த்தம் உள்ளது. வடக்குச் சுற்றில் தல மரங்களான நாவல் மரங்களை அம்மன் சந்நிதிக்கு அருகில் காணலாம். இந்த ஊருக்கு நாவலூர் எனும் பெயர் ஏற்பட காரணம் இதுவே.

பிரகலாதனின் தந்தை இரண்யன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தி வந்தான். தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். மகாவிஷ்ணுவும் இரண்யனை வதம் செய்ய முடிவு செய்தார். ஆனாலும் வரங்கள் பல பெற்ற இரண்யன் தனக்கு மரணம் நிலத்திலும், நீரிலும், வானிலும், ஆயுதங்களாலும், மனிதர்களாலும், தேவர்களாலும், விலங்குகளாலும், பகலிலும், இரவிலும், அரண்மனை உள்ளேயும், வெளியிலும் ஏற்படக்கூடாது என்ற வரமும் பெற்றிருந்தான். இப்படிப்பட்ட இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார். நரசிம்ம அவதாரம் எடுத்து தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம் தான் திருநாவலூர். இத்தலத்தில் மகாவிஷ்ணு தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆலய பிரகாரத்தின்.வடக்குச் சுற்றில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். உயரமாக அமைந்த இந்தச் சந்நிதிக்குப் படிகளேறிப் போக வேண்டும். முகப்பு மண்டமும், மகா மண்டபமும் கூடிய இந்த சந்நிதியில் கிழக்கு நோக்கி ஆறடி உயரத்தில் வரதராஜப் பெருமாள் ஆஜானுபாகுவாக காட்சி தருகிறார். சந்நிதிக்கு எதிரில் கருடன் சிற்பம் உள்ளது.

ஈசனை மூலையில் நவகிரகங்களுக்கு அருகிலேயே சுக்கிரனாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்த லிங்கமான பார்க்கவீசுவரர் லிங்கம் உள்ளது. பார்வதிதேவி இங்கு எழுந்தருளி சிவனை பூஜித்து மணம் புரிந்தார். இத்தலத்தின் சிறப்பை பெருமையை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார். சிவப்பிரியர் என்பவர் சிவனை பூஜித்து சண்டிகேஸ்வரர் பதவி பெற்றதும் ஆதிசேஷன் உமிழ்ந்த நஞ்சினால் கருநிறமடைந்த கருடன் சிவனை பூஜித்து விஷம் நீங்கியது இத்தலத்தில் தான். கிருதயுகத்தில் விஷ்ணு வழிபட்ட லிங்கம், திரேதாயுகத்தில் சண்டிகேஸ்வரர் வழிபட்ட லிங்கம், துவாபரயுகத்தில் பிரம்மா வழிபட்ட லிங்கம், கலி யுகத்தில் சுந்தரர் வழிபட்ட லிங்கம் இங்குள்ளது. அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடல்கள் பாடியுள்ளார். சுக்கிரன் இத்தலத்தில் ஒரு லிங்கத்தை தாபித்து அதற்கு முறைப்படி பூஜைகள் நடத்தி இறையருள் பெற்றார். சுக்கிரன் நிறுவிய லிங்கம் நவகிரகங்களுக்கருகே அமைந்துள்ளது. அமிர்தத்தை கடைந்த காலத்தில் வாசுகி என்ற நாகத்தின் நஞ்சை இறைவன் சாப்பிட்டு நஞ்சு விந்தாக மாறி பூமியில் விழுந்து நாவல் மரங்களாக முளைக்கப்பெற்றது. ஜம்புவனம் என்ற பெயரில் இந்த இடத்தில் இறைவன் தானாக தோன்றப் பெற்று 4 யுகங்களுக்கு முன்பே இங்கு இறைவன் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கர்ப்ப கிரகம் மட்டும் முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பின்பு சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களால் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

ஜம்புநாதேசுவரர் என்று வழங்கி வந்த காலங்களில் சுந்தரர் ஜம்பு என்ற வடமொழி பெயரை நாவல் என்று அழைத்து திருநாவலீசன் என்று ஈசனையும் புராண பெயரான திருநாமநல்லூர் என்று ஊர்ப்பெயரையும் குறிப்பிட்டு தனது பாடல்களில் பாடியுள்ளார். ஒரு முறை சுக்கிர பகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பல காலம் பூஜித்து வந்தார். இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள் சுக்கிரனை தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தேவர்கள் அசுரர்கள் போர் ஆரம்பமானது. தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர். ஆனால் இறந்த அசுரர்களை எல்லாம் சுக்கிரன் தன் சஞ்சீவினி மந்திரத்தால் உயிர் பிழைக்க செய்தார். பயந்து போன தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவன் சுக்கிரனை அழைத்து அவரை விழுங்கி விட்டார். சிவனின் வயிற்றில் பல காலம் யோகத்தில் இருந்தார் சுக்கிரன். பின்னர் அவரை வெளியே வரவழைத்து, நவக்கிரகத்தில் பதவியைக் கொடுத்து அனைவரும் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார். பின்னர் சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள் இரண்டு புதல்வியர் பிறந்தனர். அவர் பூலோகம் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். இந்த இடமே இன்றைய திருநாவலூர் ஆகும். இங்குள்ள உட்கோயில் தொண்டீச்சரம் எனப்படுகிறது. இது முதற்பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தனால் கட்டுவிக்கப் பெற்றது என்பது கல்வெட்டுச் செய்தி. பிரம்மா, விஷ்ணு, சண்டிகேசுவரர், சப்தரிஷிகள், கருடன், சுந்தரர், சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையர் வழிபட்டுள்ளனர். சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 218 திருவதிகை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 218 வது தேவாரத்தலம் திருவதிகை. புராணபெயர் தியாகவல்லி. மூலவர் அதிகை வீரட்டேஸ்வரர். இங்கு இறைவன் 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கமாக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பெரியநாயகி, திரிபுர சுந்தரி. தலமரம் சரங்கொன்றை. தீர்த்தம் சூலத்தீர்த்தம், கெடிலநதி. இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது. இத்திருக்கோயிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான். இக்கோவிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது. தேவாரம் முதன் முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும். சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடனும், 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது. கோயிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இதைத் திருநீற்று மண்டபம் என்றழைக்கிறார்கள். இம்மண்டபத் தூண்களில் ரிஷபாரூடர், அப்பர், மயில் வாகனன் முதலிய சிற்பங்களும், இக்கோயிலைத் திருப்பணி செய்வித்த செட்டியார் சிற்பங்களும் உள்ளன.

கோபுர வாயிலின் இரு பக்கமும் நாட்டியக் கலையின் 108 தாண்டவ லட்சணங்களை விளக்கும் வகையில் கரண நடன சிற்பங்கள் உள்ளது. திறந்த வெளி முற்றத்தின் தென்பக்கம் சங்கர தீர்த்தமும், வடப்பக்கம் 5 அடி உயரமுள்ள பத்மாசனக் கோலத்தில் காணப்படும் ஒரு புத்தர் சிலையும் உள்ளன. 2வது கோபுர வாயிலின் வெளிப்புறம் விநாயகர், கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளன. 5 நிலைகளையுடைய இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய நந்தியின் உருவசிலைக் காணப்படுகிறது. ஒருபுறம் முருகப் பெருமானும் மறுபுறம் கணபதியும் காட்சியளிக்கின்றனர். 2வது சுற்றின் தென்புறத்தில் திருநாவுக்கரசருக்கும் அவர் தமக்கை திலகவதிக்கும் தனித் தனியாக சந்நிதி உள்ளது. அதற்கடுத்து பைரவர், சனீஸ்வரர், மற்றும் துர்க்கையம்மன் சந்நிதிகள் உள்ளன. அதன்பின் இறைவி பெரியநாயகி சந்நிதி இருக்கிறது. 3வது சுற்றில் தான் மூலவர் அதிகை வீரட்டேஸ்வரர் சந்நிதி இருக்கிறது. கருவறைச் சுவற்றில் சிவன் பார்வதி கல்யாணத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உள் சுற்றின் தென்மேற்கே உள்ள பஞ்சமுகலிங்கம் உள்ளது. இந்த லிங்கம் பல்லவர் காலத்தைச் சார்ந்தது. இத்தகைய பஞ்சமுக லிங்கம் தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லை. மூன்று திக்குகளை நோக்கி நான்கு முகங்கள் உள்ளன. ஒரு முகம் மேல் நோக்கி உள்ளது. எனவே பஞ்சமுகலிங்கம் என்று பெயர் பெற்றது.

நடராச சபை உள்ளது. திருவதிகை ஊரின் மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருவாமூர் என்ற ஊரில் பிறந்த திருநாவுக்கரசர் சமண மதத்தில் மிகவும் தீவிரமாக இருந்தார். அவரது சகோதரி திலகவதியார் சைவ சமயத்திலேயே இருந்து வீரட்டானேசுவரருக்கு தொண்டு செய்து வந்தார். அப்போது திருநாவுக்கரசருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) தாக்கியது. சமண சமயத்தவர்கள் அவரது வயிற்று வலியை நீக்க எவ்வளவோ முயன்றனர். ஆனால் முன்னை விட மேன்மேலும் வலி அதிகமானது. ஒருநாள் அதிகாலையில் திருஅதிகை அடைந்து திலகவதியாரின் காலில் விழுந்து தமது நோயைப் போக்கும் படி கூற திலகவதியாரும் மனமிரங்கி வீரட்டானேசுவரர் சன்னதிக்கு தன் தம்பியை அழைத்து சென்று திலகவதியார் தன் தம்பியாகிய திருநாவுக்கரசரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட இறைவன் சூலை தந்து ஆட்கொள்வோம் என்று பதிலுறைத்தார். திலகவதியார் ஐந்தெழுத்தை ஓதி இறைவனது திருநீறு அளித்தார். அந்த திருநீறை பூசிக்கொண்டு திருவாயில் போட்டுக் கொண்டவுடன் வயிற்றுவலி நீங்கிவிட்டது. உடனே வீரட்டானேசுவரரை வணங்கி கூற்றாயினவாறு விலக்ககலீர் என்னும் கோதில் நீடிய திருப்பதிகம் பாடினார். அதனால் மனமகிழ்ந்த கண்ணுதற் பெருமான் நாவுக்கரசு என்று நின்நன்நாமம் நயப்புற மன்னுக என்று பட்டம் கொடுத்தார். அது முதல் திருநாவுக்கரசர் சைவத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு உழவாரம் செய்து வந்தார். உழவாரம் முதன் முதலில் திருநாவுக்கரசரால் இங்கு தான் செய்யப்பெற்றது.

தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலம் வெல்லவோ கொல்லவோ முடியாது வரம் பெற்றனர். பின்பு பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். அவர்களால் தொல்லையடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அதன்படி பூமியை தேராகவும் சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும் நான்கு வேதங்களை குதிரைகளாகவும் பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் வரச் செய்தார். சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார். அச்சு முறிந்தது.

பிள்ளையாரை வணங்காததால் தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர். தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால் தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார். அவ்வளவு தான். உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலை குனிந்தனர். ஒரே சமயத்தில் தேவர்கள் அசுரர்கள இருவரது ஆணவத்தையும் அடக்கினார் ஈசன். பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டார். இந்த புராண வரலாறு திரிபுர சம்காரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

திருநாவுக்கரசர் உழவாரப்பணி செய்த இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கி இத்தலப் பெருமானை வழிபட்டார். சுந்தரர் இரவு மடத்தில் தூங்கிக் கொண்டு இருந்த போது அவரின் மேல் யாரோ காலால் இடிப்பது தெரிந்து சுந்தரர் நகர்ந்து படுத்தார். மீண்டும் யாரோ அவர் தலையில் கால் படும்படி படுக்க சுந்தரர் எழுந்து காலால் தலையை தீண்டியவரை கடுமையாகப் பேச பின் இறைவன் தான் இவ்வாறு திருவிளையாடல் செய்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு அவரை வணங்கினார். இவ்வாறு சுந்தரர் இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றார். பல்லவனான மகேந்திர வர்மனின் மனத்தை மாற்றிச் சமண பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் என்ற கோவிலை எழுப்பச் செய்ததும் இத்தலத்தினால் தான். சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான உண்மை விளக்கம் நூலை அருளிய மனவாசகங்கடந்தாரின் அவதாரத் தலம்.

கோயிலின் உட்புறத்திலுள்ள மற்றொரு பதினாறுகால் மண்டபத்தின் இரு தூண்களில் ஒன்றில் சுப்பிரமணியத் தம்பிரானின் அமர்ந்த நிலை சிற்பமும் இதற்கு நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரானின் நின்று கைகூப்பிய நிலை சிற்பமும் உள்ளது. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர். இவர் சீடரான சிவஞானத் தம்பிரான்தான் முதன்முதலில் இத்திருக்கோயிலில் திருநாவுக்கரசருக்கு பத்து நாள்கள் விழா எடுத்துச் சிறப்பித்தார். இன்றும் சித்திரை மாதம் 10 நாட்கள் திருநாவுக்கரசருக்கு விழா நடக்கின்றது. இப்பகுதியில் புத்தமதம் சிறப்பாக ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்தது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ள புத்தர் சிலை கோயிலுக்கு வரும் சிவபக்தர்களால் இன்றளவும் வழிபடப்படுகிறது. இந்த புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தருக்கு இங்கு இறைவன் திருநடன தரிசனம் காட்டியிருக்கிறார். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

புத்தன் சபரிமலை

கேரளாவில் சபரிமலையை போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலை போன்றே ஆச்சார அனுஷ்டானங்களை பூஜைகளை கடைபிடித்து வரும் புத்தன் சபரிமலை எனும் கோவில் உள்ளது. அங்கு அனைத்து வயது பெண்களும் பதினெட்டு படிகள் வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது பிரதான சபரிமலை அமைந்துள்ள பத்தனம்தெட்டா மாவட்டத்தில் திருவல்லாவிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் தடியூர் எனும் இடத்தில் மிக புராதான ஆலயமாக பழமை மாறாது காணப்படுகிறது இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் ஆலயம். இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது, பழமையானது. இங்கும் அடர்ந்த வனப்பிரதேசம் ஒரு காலத்தில் இருந்துள்ளது கொடும் காட்டு விலங்குகள் வாழ்ந்த இந்த புத்தன் சபரிமலையில் பக்தர்கள் அவ்வளவாக சென்றதில்லை சுமார் நூறு வருடங்களாக மட்டுமே இருமுடி கட்டி பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

சபரிமலையில் உள்ளது போன்றே அதே வடிவிலான ஐம்பொன்னால் ஆன அய்யப்பன் விக்கிரகம் இங்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள 18 படிகளும் கரும் கற்களால் சபரிமலையில் உள்ளது போன்றே செங்குத்தாக அமையப்பெற்றுள்ளது. இங்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டாலும் இருமுடி கட்டு இல்லாத எவரும் படிக்கட்டுக்கள் மீது செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இருமுடி கட்டு இல்லாதவர்கள் கோவிலின் வடக்கு பகுதி வழியாக செல்லவே அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையில் பின்பற்றப்படும் பூஜைகளும் வழிபாட்டு முறைகளும் அபிஷேக வகைகளும் குறிப்பாக சந்தனாபிஷேகம், நெய்யபிஷேகம், பூ அபிஷேகம் போன்றவைகள் அப்படியே சற்றும் மாறாது இங்கும் கடைபிடிக்கப் படுகிறது.

சபரிமலையை போன்றே ஒவ்வொரு மலையாள மாதம் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை பக்தர்கள் இங்கும் அய்யப்பனை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையை போன்றே அப்பமும் அரவணை பாயாசமும் இங்கும் பிரதான பிரசாதங்கள். தை முதல் நாளில் மகர சங்கராந்தியன்று எப்படி சபரிமலையில் மகர விளக்கு காணப்படுகிறதோ அவ்வாறே இங்கும் மகரவிளக்கு தரிசனத்தை பக்தர்கள் காணலாம். எல்லாவற்றையும் விட சபரிமலை தந்தரியாக செயல்படுபவர்களே இங்கும் தந்தரியாக செயல்படுகிறார்கள்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -7

விராட நகருக்குள் மக்களிடமும் மன்னரிடமும் விடியற்காலையில் நம்பிக்கை ஒன்று பரவியது. யாராலும் எதிர்க்க முடியாத கீச்சகனை கந்தவர்கள் கொன்றுவிட்டார்கள். இச்செய்தியை குறித்து ஊரார் அனைவரும் நடுநடுங்கினர். சைரந்திரியை கந்தர்வர்கள் பாதுகாத்து வருகின்றார்கள். சைரந்திரிடம் முறை தவறி நடந்து கொள்கிறார்கள் ஆபத்துக்கு ஆளாவார்கள் என்று அவர்கள் அஞ்சினார்கள. ஆராய்ச்சிக்கு எட்டாத அப்பெண் விஷயத்தில் நடவடிக்கை எடுக்க அரசனுக்கு துணிவு வரவில்லை. அவளுக்கு சிறதளவும் மனவருத்தம் உண்டாகாதவாறு அவளை வெளியே அனுப்பி விடும்படி அரசியிடம் அரசன் தெரிவித்தான். சகோதரனுடைய மரணத்தைக் குறித்து அரசி சுதேசனா மிகவும் துயரத்தில் ஆழ்ந்நிருந்தாள். அதேவேளையில் சைரேந்திரிக்கு நிகழ்ந்த தௌர்பாக்கியத்தை குறித்தும் அரசி சுதேசனா வருந்தினாள். தனக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்ட திசையை பணிவுடன் சைரேந்திரியிடம் அரசி சுதேசனா தெரிவித்து அவள் மனம் கோணாது நகரை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று நயந்து வேண்டிக்கொண்டாள்.

அகதியாக வந்த தன்னை பதினோரு மாதங்கள் தாங்கள் என்னிடம் இரக்கம் மிக வைத்து நன்கு பாதுகாத்து வந்தீர்கள். நான் விமோசனம் அடைவதற்கு கிட்டத்தட்ட ஒருமாதம் மட்டுமே பாக்கியிருக்கிறது. தங்கள் என்னை காப்பாற்றி வருவது என்னுடைய கந்தர்வக் கணவர்கள் நன்றி மிக உடையவர்களாக கவனித்து வருகிறார்கள். தாங்கள் எனக்கு காட்டியிருக்கும் பேரன்புக்கு ஏற்ற கைமாறு ஒன்றை நிச்சயம் அவர்கள் தங்களுக்கு செய்து வைப்பார்கள். மடிந்துபோன தங்களுடைய சகோதரனுக்கு ஏற்ற ஈடு ஏதாவது இருக்குமானால் அதையும் அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள். தாயே தங்களுக்கு வேறு எந்த தீங்கும் வந்து விடாது. என் மீது இரக்கம் வைத்து ஓர் மாதம் மட்டும் காப்பாற்றுங்கள் என்று அரசிடம் கேட்டாள். அதற்கு அரசி ஒரு மாதம் முற்றுப் பெறும் வரையிலும் தன்னுடனேயே வைத்துக் கொள்ள சம்மதம் கொடுத்தாள்.

பாண்டவர்கள் எங்கு எப்படி வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு ஏற்ற மிக தகுதி வாய்ந்த ஒற்றர்களை துரியோதனன் நியமித்து இருந்தான். அவர்கள் நாடெங்கும் உள்ள மூலைமுடுக்குகளில் அலசி ஆராய்ந்து பார்த்தனர். பெரிய பட்டணங்களையும் பெரிய ஊர்களையும் கிராமங்களையும் அவர்கள் தேடிப் பார்த்தார்கள். வனந்திரங்களிலும் மலைகளிலும் குகைகளிலும் தேடிப் பார்த்தார்கள் ஆனால் மறைந்து வாழ்ந்திருக்கும் பாண்டவர்களை மட்டும் கண்டுபிடிக்க அவர்களுக்கு இயலவில்லை. ஆகையால் ஒற்றர்கள் அஸ்தினாபுரம் திரும்பி வந்து நாட்டை விட்டு சென்றவர்கள் இறந்து போய் இருப்பார்கள் அல்லது கடல் கடந்து வெளிநாடுகளுக்கு ஓடிப்போய் இருப்பார்கள் என்று உறுதி கூறினார்கள். தங்களுக்கும் தங்கள் அறிவுக்கு எட்டிய இடங்களில் எங்குமே அவர்கள் வாழ்ந்திருக்கும் அறிகுறி ஏதுமில்லை என்று அவர்கள் கூறினார்கள். பாண்டவர்கள் இறந்திருந்தால் உபத்திரவம் முடிந்தது என்று துரியோதனன் எண்ணினான். எனினும் இதுகுறித்து ஆலோசனை செய்ய சபை ஒன்றை கூட்டி ஆலோசனை கேட்டான்.

நாயாகப் பிறவி எடுப்பது ஏன்?

ராமர் தனது அரசவையில் அமர்ந்திருந்தார். அப்போது வெளியே நாய் ஒன்று பெருங்குரலில் குரைத்துக் கொண்டிருந்தது. என்னவென்று தெரிந்து வருமாறு ஒரு காவலனை அனுப்பினார். அவன் அந்த நாயைத் துரத்திவிட்டு ராமரிடம் வந்து காரணமின்றிக் குரைத்த அந்த நாயை இந்தப் பகுதியை விட்டே துரத்தி விட்டேன் என்றான். சற்று நேரம் கழித்து மீண்டும் அந்த நாய் குரைக்க அதே காவலன் விரைந்து சென்று அதைத் துரத்தினான். இந்த நிகழ்வானது தொடர்ந்து நடந்தது. இதனை சிந்தித்த ராமர் லட்சுமணனிடம் அந்த நாய் தொடர்ந்து குரைக்கிறது. நீ போய் காரணம் என்ன வென்று தெரிந்து கொண்டு வா என்று அனுப்பினார். லட்சுமணன் குரைக்கும் நாயை நெருங்கி உன் துயரத்துக்குக் காரணம் என்ன சொல் என்று கேட்டான். அதற்கு அந்த நாய் ஈனஸ்வரக் குரலில் பேசத் தொடங்கியது ராமரை வரச் சொல்லுங்கள் எனக்கு நீதி வேண்டும் என்றது. இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த லட்சுமணன் நாய் சொன்னதை அப்படியே ராமரிடம் கூறினான். உடனே ராமர் வெளியே வந்தார். எனது ராஜ்யத்தில் காரணமின்றி எவரும் துயரப்படக் கூடாது. ஆகவே நீ எவ்விதத் தயக்கமும் இன்றி உன் துயரத்தை என்னிடம் சொல் என்றார். அந்த நாய் பணிவுடன் அவரை வணங்கி பேசத் தொடங்கியது. என்னை சன்யாசி ஒருவர் கல்லால் அடித்துக் காலை உடைத்து விட்டார். அதை முறையிடவே இங்கு வந்தேன் எனக்கு நீதி வேண்டும் என்று வேதனையுடன் கூறியது. ராமர் கனிவான குரலில் வருந்தாதே. நான் இப்போதே அந்த சன்யாசியிடம் விசாரிக்கிறேன் என்று சன்யாசியை அழைத்து வர உத்தரவிட்டார். சற்று நேரத்துக்குள் அந்த சன்யாசி அங்கு வந்து ராமரை வணங்கி நின்றார்.

ராமர் சன்யாசியிடம் நீங்கள் எதற்காக இந்த நாயைக் கல்லால் அடித்தீர்கள் என்று விசாரித்தார். அதற்கு சன்யாசி நான் பிட்சை வாங்கி வரும்போது இந்த நாய் எனது பிட்சான்னத்தைத் தொட முயற்சி செய்தது. அப்போது நான் மிகவும் பசியுடன் இருந்ததால் இந்த நாய் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. எனவே அதன் மீது கல் எறிந்தேன் என்றார். ராமர் புன்னகை மாறாத முகத்துடன் அவரை நோக்கி இந்த நாய் ஐந்தறிவு படைத்த பிராணி. இதனால் தனக்கு தேவையான உணவே சமைக்கவோ உருவாக்குக் கொள்ளவோ தெரியாது. பார்க்கும் உணவே சாப்பிடவே தோன்றும் இது ஐந்தறிவு படைத்த பிராணிகளுக்கு உண்டான விதி. உங்களுக்கு பசி இருப்பது போல் இந்த நாயிற்கும் பசி எடுத்ததினால் உங்களது உணவை சாப்பிட முயற்சி செய்தது. இந்த நாயின் விதிப்படி இது தவறு அல்ல. பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பது ஆறறிவு மனிதனுக்கு உண்டான தர்மம். நீங்கள் அந்த தர்மத்தை மீறியது மட்டுமல்லாமல் நாயை கல்லால் அடித்து காயப்படுத்தி தவறு செய்து விட்டீர்கள். உமது செயல் கண்டிப்பாகக் குற்றமே. எனவே நீங்கள் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறினார். நாயின் பக்கம் திரும்பிய ராமர் இந்த சன்யாசி உனக்கு கெடுதல் செய்திருப்பதால் இவரை தண்டிக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன். நீ என்ன சொன்னாலும் அதை நிறைவேற்றுகிறேன் என்றார். அதற்கு அந்த நாய் இவரை ஒரு சிவாலயத்தில் அதிகார வேலையில் அமர்த்துங்கள். இதுவே நான் அவருக்கு அளிக்கும் தண்டனை என்றது.

ராமர் அதற்குச் சம்மதித்து அதற்கான ஆணையை பிறப்பித்தார். தனக்குப் பெரிய பதவி கிடைத்த மகிழ்ச்சியில் சன்யாசியும் திருப்தியுடன் அங்கிருந்து வெளியேறினார். நாயும் மன நிறைவுடன் அகன்றது. இதை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் வியப்புடன் நின்றார்கள். அன்னத்துக்கு அலையும் அந்த சன்யாசிக்கு இது அதிர்ஷ்டமே அன்றி தண்டனையல்ல. இதனால் அவர் மேலும் சுகம் அடையப் போகிறார். இது எப்படி தண்டனை ஆகும் என்று மக்கள் ராமரிடம் கேட்டார்கள். அனைத்தும் அறிந்த ராமர் நாயிடமே இதனை கேட்டு தெரிந்து கொள்வோம் என்று அந்த நாயை அழைத்து வருமாறு தன் காவலரிடம் கூறினார். நாயும் வந்தது. இப்போது நாயிடம் அதே கேள்வியே மக்கள் கேட்டார்கள். அதற்கு அந்த நாய் சிவாலயத்தில் அதிகாரி வேலை என்று அந்த சன்யாசிக்கு நான் அளித்தது முள்ளின் மேல் நிற்கிற ஒரு பணி. சிவாலயம் மடம் கிராமம் போன்றவற்றில் தவறு செய்யும் அதிகாரிகள் பசு அந்தணர் அநாதை ஆகியோரின் செல்வத்தை அபகரிப்பவர்கள் அரசனது வீட்டில் இருந்து கொண்டு அங்கு வரும் யாசகர்களைத் தடுப்பவர்கள் அந்தணரின் உணவுப் பொருட்களை அபகரிப்பவர்கள் ஆகியோர் மறு ஜென்மத்தில் கண்டிப்பாக நாயாகப் பிறப்பார்கள். சென்ற பிறவியில் நான் தவறு இழைத்த ஒரு மடாதிபதியாக இருந்ததால் இப்போது நாயாகப் பிறவி எடுத்துள்ளேன். எனவே தான் சன்யாசிக்கு இப்படி ஒரு தீர்ப்பு சொன்னேன். இந்த ஜென்மத்தில் எனது பசிக்கு உணவு தராமல் தவறு செய்த சன்யாசி சிவாலயப் பணியில் இருந்து நல்ல விதமாக பணி செய்தால் என்னை அடித்த பாவம் தீர்ந்து நன்மை அடைவார். ஆசையின் காரணமாக ஏதேனும் தவறு செய்தால் மீண்டும் பாவம் செய்து நாயாகப் பிறப்பார் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பியது. அங்கு கூடியிருந்த அனைவரது சந்தேகமும் தீர்ந்தது.

கருத்து: சிவாலயம் மடம் அரசு நிர்வாகம் போன்ற பதவியில் இருப்பவர்கள் தவறு செய்யக்கூடாது. பசு அந்தணர் ஆதரவற்றோர் ஆகியோரின் செல்வத்தின் மேல் ஆசைப்படகூடாது. அரசனை காண வரும் யாசகர்களை தடுக்கக்கூடாது. உண்மையான அந்தணர்களின் பொருளை அபகரிக்ககூடாது.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -6

சைரந்திரியின் ஓலத்தை கேட்ட விராட மன்னன் உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் பிரச்சனை என்னவென்று எனக்குத் தெரியாது. உண்மையான காரணத்தை அறியாது நான் தீர்ப்பளிக்க முடியாது என்றும் சேனாதிபதிக்கும் வேலைக்காரிக்கும் இடையில் இருக்கும் இந்த சச்சரவு அந்தப்புரத்தில் துவங்கியதால் மகாராணி இதனை விசாரித்து வேண்டிய முடிவு எடுக்கட்டும் என்று மன்னன் கூறினான். சைரந்திரி கூறிய அனைத்தையும் அறிந்த சபை உறுப்பினர்கள் கீச்சகனை நிந்தித்தனர். கனகன் வேடத்தில் இருக்கும் யுதிஷ்டிரன் சைரந்திரியிடம் நீ இங்கே இருக்காதே உடனடியாக சுதேசனாவின் அறைக்குச் செல். உனது கந்தர்வக் கணவர்கள் இவ்வளவு பிரச்சனைக்குப் பிறகும் உனது உதவிக்கு விரைந்து வராததால் தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்தும் நிலையில் இப்போது இல்லை என நான் நினைக்கிறேன். கந்தர்வர்கள் உனது துன்பத்தை கண்டு உனக்கு அநீதியிழைத்தவனின் உயிரை எடுப்பார்கள் என்றான்.

இந்தச் சொற்களைக் கேட்ட சைரந்திரி கலைந்த கேசத்துடன் கண்கள் சிவக்க சுதேசனாவின் அறையை நோக்கி ஓடினாள். அவளது நிலையைக் கண்ட சுதேசனா சைரந்திரி உன்னை யார் அவமதித்தது நீ ஏன் அழுகிறாய்? யாரால் உனக்கு இந்தத் துயரம் ஏற்பட்டது? எனக் கேட்டாள். நான் உங்களுக்காக மதுவைக் கொண்டு வரச் சென்றேன். என்னிடம் தவறாக நடந்து கொண்டு சபையில் மன்னரின் முன்னிலையிலேயே கீச்சகன் என்னை அடித்தான் என்றாள். இதைக் கேட்ட சுதேசனா நீ விரும்பினால் அவனைக் கொல்லச் செய்கிறேன் என்றாள். அதற்குத் சைரந்திரி கீச்சகன் யாருக்கு அநீதியிழைத்தானோ அவளை பாதுகாக்கும் கந்தர்வர்கள் அவனைக் கொல்வார்கள். இன்றே கீச்சகன் யமனின் வசிப்பிடம் செல்வான் என்பது உறுதி என்றாள்.

சைரந்திரி வல்லாளனை தனியாக சந்தித்து தன்னுடைய பரிதாபகரமான நிலையை தெரிவித்தாள். என்னை காப்பாற்றுங்கள். இல்லாவிடில் நான் தற்கொலை செய்து கொள்வேன். எனக்கு வேறு உபாயம் ஏதும் இல்லை என்றாள். பீமன் சிறிது நேரம் சிந்தித்தான். பிறகு சைரந்திரியிடம் கீச்சகனிடம் சமாதானமாக பேசுவதாக பாசாங்கு செய்து நள்ளிரவில் நாட்டிய மண்டபத்திற்கு தனித்து வந்து உன்னை சந்திக்கும் படி அவனிடம் கூறு. அவன் அங்கு வந்ததும் நான் மறைந்திருந்து மற்ற காரியங்களை பார்த்துக் கொள்கின்றேன் என்றான்.

இந்த திட்டத்தை சைரந்திரி ஏற்றுக்கொண்டு மிகத் திறமை வாய்ந்தவளாக கீச்சகனிடம் நடந்து கொண்டாள். அதன் விளைவாக கீச்சனுக்கு மட்டில்லா மகிழ்வு உண்டாயிற்று. ஆர்வத்துடன் நள்ளிரவில் நாட்டிய மண்டபத்திற்குள் அவன் நுழைந்தான். மங்கலான விளக்கொளியில் ஒரு கட்டிலின் மேல் மேனி முழுவதும் ஒரு போர்வையால் மூடப்பட்டு மானிட உருவம் ஒன்று தென்பட்டது. படுத்திருப்பது சைரந்தரி என்று எண்ணிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த பேர்வழியை எழுப்பினான். எதிர்பார்த்ததற்கு மாறாக ராட்சசன் போன்ற ஒருவன் குதித்தெழுந்து வந்து கீச்சகனை தாக்கினான். வந்தவன் சைரந்திரியை பாதுகாக்கும் கந்தர்வர்களில் ஒருவனாக இருக்கும் என்று பயந்து போனான் கீச்சகன். இருவருக்கும் இடையில் மிக பயங்கரமான மற்போர் துவங்கியது. கீச்சகனை பீமன் கொன்றுவிட்டான். அவனுடைய உடலை ஒரு மாமிச குவியலை போன்று பிசைந்து விட்டான். எலும்புத்துண்டுகள் ஆங்காங்கு குவியலோடு கலந்து தென்பட்டன. பிறகு பீமன் நீராடி தன் மேனியில் சந்தனக் குழம்பைப் பூசி கொண்டு அயர்ந்து தூங்க சென்று விட்டான்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பாண்டியன் கொண்டை

அரங்கனின் ஆபரணங்களில் முக்கியமானது பாண்டியன் கொண்டை. முக்கியத் திருவிழாக்களில் அரங்கன் பாண்டியன் கொண்டை அணிந்தே வெளிவருவார். அரங்கனே தன் பக்தர்களில் ஒருவரானக் அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி என்பவரைக் கொண்டு இந்தப் பாண்டியன் கொண்டை என்னும் ரத்தினக் கிரீடத்தைச் செய்யச் சொல்லி வாங்கியிருக்கிறார். அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி திருமலை திருமலையப்பன் சேவையிலே ஈடுபட்டு பின்னர் அவர் காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் ஈடுபாடு கொண்டு தினமும் உஞ்சவ்ருத்தி மேற்கொண்டு அதில் கிடைக்கும் பொருட்களை தான்யங்களைப் பணமாக மாற்றி அதன் மூலம் வரதராஜப்பெருமாளின் சந்நிதிக்குக்கு பல கைங்கரியங்களைச் செய்து வந்தார். காஞ்சி மாநகரில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்கும் திருப்பணிகள் செய்தார். தன்னால் இயன்ற பொருளைச் சேர்த்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் மாமண்டூரில் நிலம் வாங்கி நந்தவனம் அமைத்து கைங்கரியம் செய்து வந்தார். ஒரு நாள் நந்தவனத்தில் வேங்கடாத்ரி சுவாமியைப் பாம்பு தீண்டியது.. அவர் சற்றும் அஞ்சாமல் பெருந்தேவித் தாயார் சந்நிதிக்குச் சென்று பல கீர்த்தனைகளைப் பாடி அங்கேயே மயங்கி விழுந்தார். பின்னர் தூங்கி எழுந்திருப்பவர் போல் எழுந்து பெருமாள் சந்நிதிக்கு சென்று பிரசாதங்கள் வாங்கிக் கொண்டார். கொடிய பாம்பின் விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை..

ஒரு நாள் அல்லூரி வேங்கடாத்ரி சுவாமிகளின் கனவில் அரங்கன் உற்சவக் கோலத்தில் தோன்றித் தனக்குப் பாண்டிய மன்னனால் சமர்ப்பிக்கப்பட்ட பாண்டியன் கொண்டை பழசாகிப் பழுதடைந்து விட்டதாகவும் புதியது தேவை என்றும் கேட்டார். வேங்கடாத்ரி சுவாமி இருந்தது காஞ்சியில் அங்கே குடிகொண்டிருந்த வரதராஜரைப் பிரார்த்தித்துக் கொண்டு எந்தவிதமான அளவுகளும் இல்லாமல் அரங்கனின் பாண்டியன் கொண்டைக்கு மாதிரியாக ஒன்றைச் செய்தார். வேங்கடாத்ரி சுவாமிகள். அதை எடுத்துக் கொண்டு திருவரங்கம் அடைந்தார். அரங்கனைக் கண்ட வேங்கடாத்ரி சுவாமிகள் தன்னை மறந்து அரங்கன் மேலும் நம்பெருமாள் மேலும் பற்பல கீர்த்தனைகளைப் பாடினார். அவர் பாடிய நின்னுகோரியுன்னா ராரே என்ற பாடல் அவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். சுவாமிகள் கொண்டு சென்ற மாதிரிக் கிரீடம் நம்பெருமாளுக்கு வைத்துப் பார்த்தால் மிக அழகாகப் பொருந்திவிட்டது. கோயிலின் ஊழியர்களும் மற்றப் பெரியோர்களும் சுவாமிகளின் இந்தத் திறமையையும் அபூர்வமான ஞானத்தையும் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஶ்ரீரங்கம் முழுதும் சுவாமிகளின் புகழ் பரவியது.

மாதிரிக் கொண்டை போல இப்போது அசலில் செய்ய வேண்டும். அதற்குப் பணம் வேண்டும். வேங்கடாத்ரி சுவாமி ஒரு சபதம் எடுத்துக் கொண்டார். பாண்டியன் கொண்டையைச் செய்ய அன்றாடம் குறைந்த பட்சமாகப் பத்து ரூபாய் தேவை. ஆகவே தினம் தினம் பத்து ரூபாய் கிடைக்கும் வரை தான் பட்டினியாக இருப்பது எனத் தீர்மானித்தார். சில நாட்கள் கிடைத்தது. பல நாட்கள் எதுவும் கிடைக்கவில்லை. அப்போது அவரின் முக்கியச் சீடர்கள் ஆன வெங்கடசாமி நாயுடு, புதுச்சேரி அப்பாசாமி நாயுடு ஆகியோர் பத்து ரூபாய்களைக் கொடுத்தார்கள். பணம் கிடைக்கக் கிடைக்க அரங்கனின் பாண்டியன் கொண்டைத் தயாரிப்பும் மெல்ல மெல்ல நடந்து வந்தது.

கொண்டையில் பதிக்க ஒரு அங்குல அளவில் சதுர வடிவிலான மரகதக் கல் ஒன்று தேவைப்பட்டது. வேங்கடாத்ரி சுவாமி மரகதப் பச்சைக்கல்லைப் பெறப் பல வழிகளிலும் முயன்றார். அப்போது அரங்கன் அவர் கனவில் மீண்டும் தோன்றி கல்கத்தாவில் உள்ள வைர வியாபாரி ஒருவரின் வீட்டில் வடக்கு மூலையில் உள்ள இரும்புப் பெட்டியில் கொண்டையில் பதிக்கத் தேவையான மரகதப் பச்சைக்கல் இருப்பதாகவும் அதை வேண்டிப் பெறுமாறும் அந்த வைர வியாபாரியின் பெயர் மாதவ சேட் என்றும் தெரிவித்தார். சுவாமியின் பக்தர்களின் ஒருவரான காசிதாஸ் செளகார் என்பவர் மாதவ சேட்டின் கல்கத்தா விலாசத்தைப் பெற்று மரகதப் பச்சையை அரங்கனுக்காகக் கேட்டுக் கடிதம் எழுதினார். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மாதவ சேட் இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ந்தார். அரங்கனே தன் கொண்டையில் வைக்க மரகதக் கல்லைக் கேட்டிருக்கிறான். அதுவும் நம்மிடம் இது என்ன விந்தை என்று எண்ணி இரும்புப் பெட்டியைத் தலைகீழாகப் புரட்டிப் பார்த்த மாதவ சேட் தன் தந்தையால் வைக்கப்பட்ட மரகதக் கல்லைக் கண்டெடுத்துவிட்டார். அவருக்கோ அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கோ அந்த மரகதக்கல் இருந்தது அன்று வரை தெரியவில்லை. கல்லை உடனடியாக அனுப்பி வைத்த மாதவ சேட் கூடவே தன்னுடைய பங்காக ஆயிரம் ரூபாய் பணமும் அனுப்பி வைத்தார்.

கொண்டை தயாராகி வந்தது. ஆனால் திடீரென கொண்டையைச் செய்து வந்த பொற்கொல்லனுக்குப் பேராசை பிடித்து விட்டது. ஆகவே மாதவ சேட் அனுப்பிய விலை உயர்ந்த மரகதக் கல்லை ஒளித்துவிட்டு அதற்கு பதிலாகச் சாதாரணப் பச்சைக்கல் ஒன்றை வைத்து விட்டான். இப்போதும் அரங்கன் விடவில்லை. வேங்கடாத்ரி சுவாமியின் கனவில் தோன்றி பொற்கொல்லன் கல்லை ஒளித்த விபரத்தைத் தெரிவித்து விட்டார். தன் சீடர்களோடு பொற்கொல்லனைச் சந்திக்கச் சென்ற வேங்கடாத்ரி சுவாமியைக் கண்ட கொல்லன் முதலில் தனக்கு எதுவுமே தெரியாது என சாதித்தான். ஆனால் அப்பாசாமி நாயுடுவும் மற்றும் சிலரும் அவனை மிரட்டி விசாரிக்கவே கல்லை மாற்றியதை ஒப்புக் கொண்டு அதைத் திரும்பக் கொடுத்தான். உண்மையான மரகதக் கல் பதிக்கப்பட்டுப் பாண்டியன் கொண்டை தயாராகி அரங்கனுக்குச் சமர்ப்பிக்க எடுத்துச் செல்லப்பட்டது. தன் சீடர்களுடன் கொண்டையை ஊர்வலமாக எடுத்துச் சென்றார் வேங்கடாத்ரி சுவாமிகள். திருவரங்கத்தில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அல்லது பரமபத ஏகாதசி என அழைக்கப்படும் நாளில் ருத்ரோகாரி ஆண்டில் 1863 ஆம் ஆண்டில் அந்தப் பாண்டியன் கொண்டை அரங்கனுக்குச் சமர்ப்பிக்கப் பட்டது. இன்றளவும் அந்தப் பாண்டியன் கொண்டை முக்கிய தினங்களில் மட்டுமின்றி வைகுண்ட ஏகாதசி அன்றும் நம்பெருமாளை அலங்கரித்து வருகிறது.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -5

விராட நகரத்தில் மகாராணி சுதேசனாவுக்கு சகோதரன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் கீச்சகன். வல்லமை மிகவும் வாய்க்கப் பெற்றவன். அரசனுக்கு மைத்துனன் ஆகையால் அந்நாட்டுக்கு சேனைத் தலைவன் என்ற மிக உயர்ந்த ஸ்தானத்தை வகித்து வந்தான். ஒரு போக்கில் அவனை விராட நாட்டு மன்னன் என்றே அழைக்கலாம். அந்த அளவுக்கு பலமும் செல்வாக்கும் கொண்டவனாக இருந்தான். பாண்டவர்கள் புரிந்து வந்த வனவாசம் அமைதியாக சென்று கொண்டிருந்தது. அப்போது உபத்திரம் ஒன்று உருவெடுத்தது.

கீச்சகன் தன் சகோதரியாகிய ராணியின் அந்தப்புரத்திற்கு ஒருநாள் உரிமையுடன் சென்றான். அப்போது தற்செயலாக சைரந்திரியைப் பார்த்தான். பார்த்ததும் அவள் மீது காதல் கொண்டான். அந்த வேலைக்காரியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிறிதேனும் நாணம் இன்றி தன் சகோதரியிடம் அவன் வேண்டினான். அவன் அப்படிக் கேட்பது பொருத்தமற்றது என்று உடன்பிறந்தவள் எடுத்துக் கூறினாள். ஆனால் கீச்சகன் மட்டும் தான் எடுத்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்கவில்லை. அந்த வேலைக்காரி 5 கந்தர்வர்கள் பாதுகாத்து காப்பாற்றுகிறார்கள். அவளிடம் வம்பு செய்தாள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று எடுத்துக்கூறி எச்சரிக்கை செய்தும் அவன் அதை பொருட்படுத்தவில்லை. அந்த பெண்ணை தனக்கு உரியவள் ஆக்குவேன் இல்லை என்றாள் அம்முயற்சியில் மடிந்து போவேன் என்று தீர்மானமாக தன் சகோதரியிடம் கூறினான்.

கீச்சகனுடைய மாளிகைக்கு உள்ளே சென்று கொஞ்சம் மதுபானம் கொண்டு வரவேண்டுமென்று சுதேசனா ராணி சைரந்திரிக்கு உத்தரவிட்டாள். இதனை புரிந்து கொண்ட சைரந்தரி வேலைக்காரியாக இருந்த தன்னை காப்பாற்றி அருள வேண்டும் என்றும் தனக்கு பதிலாக வேறு வேலைக்காரியை அனுப்பி வைக்க வேண்டுமென்றும் பரிந்துரை செய்து விண்ணப்பித்தாள். ஆயினும் அவருடைய வேண்டுதல் அங்கீகரிக்கப்படவில்லை. அரசியின் ஆணைக்கு அடிபணிந்து அவள் நடக்க கடமைப்பட்டு இருந்தாள். தன்னை காப்பாற்றி அருள வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்ட சைரந்திரி அரசியின் ஆணைக்கு அடிபணிந்து கீச்சகனின் மாளிகைக்கு சென்றாள்.

சைரந்தரி என்ன நிகழும் என்று எதிர்பார்த்தாளோ அது அப்படியே நடந்தது. அவளைப் பார்த்த உடனே கிச்சகன் தனக்கு இணங்கும்படி அவளை கெஞ்சி கேட்டான். அவனுடைய போக்கு பொருந்தாதது என்று சைரந்திரி எடுத்து விளக்கினாள். ஆனால் கீச்சகனோ அவள் கையை பிடித்து இழுத்தான். வலிமை வாய்ந்த வேலைக்காரி ஒரே குலுக்கில் தன்னை விடுவித்துக் கொண்டு அரசனுடைய மண்டபத்திற்கு ஓடினாள். வெறிபிடித்த அந்த சேனைத்தலைவன் அவளைப் பின்தொடர்ந்து ஓடி சபைக்கு நடுவே அவளை தனது காலால் எட்டி உதைத்தான். இந்நாட்டில் திக்கற்ற பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லையா என்று சைரந்தரி ஓலமிட்டாள். விராட மன்னன் அமைதியாக இருந்தான். அங்கு குழுமியிருந்த அனைவரும் கிச்சனுக்கு நடுநடுங்கி நடந்துகொண்டனர். கனகனும் வல்லாளனும் சபையில் இருந்தனர். ஆனால் ஒர் வருட காலம் தங்களை மறைத்துக்கொண்டு அடங்கிக் கிடக்கும் நெருக்கடிக்கு அவர்கள் கட்டுப்பட்டு இருந்தனர். இந்த பிழையை சரி படுத்த முயன்று தங்களை இன்னாரென்று உலகுக்குக் காட்டிக் கொள்ளும் நெருக்கடியில் அவர்கள் அகப்பட்டுக் கொள்ளலாகாது. நிலைமை இப்படி இருந்தும் வல்லாளன் சிறுது சீற்றம் அடைந்தான். அதை கூறிப்பால் உணர்ந்து கொண்ட கனகன் விரைந்து சென்று சமைப்பதற்கு விறகு பிளக்க வேண்டும் என்று வல்லாளனுக்கு ஞாபகம் ஊற்றினான். அதன் உட்கருத்தை அறிந்து கொண்ட வல்லாளன் அமைதியாக அந்த சபையில் இருந்து வெளியேறினான்.

மறைபொருள் இறைவன்

ஒரு குளத்தில் ஒரு குட்டி மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை வந்தது. அம்மா நாம் வாழ தண்ணீர் மிக அவசியமென்று சொல்கிறாய். அந்த தண்ணீர் எங்கே இருக்கிறது எனக்குக் காட்டு எனக் கேட்டது. உடனே தாய் மீன் இதுதான் தண்ணீரென்று தண்ணீரைக் காட்டியது. குட்டி மீனுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மா நீ தண்ணீரைக் காட்டு என மீண்டும் சொல்லியது. மீண்டும் தாய் மீன் தண்ணீரைக் காட்டியது. அப்போதும் குட்டிமீனுக்கு தண்ணீர் தெரியவில்லை.

இந்த அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என சொல்லிக் கொண்டே அப்பா மீனிடம் இதே கேள்வியைக் கேட்டது. அப்பாவும் அதே மாதிரி தண்ணீரைக் காட்ட அப்பாவுக்கும் ஒன்றும் தெரியாது எனத் தீர்மானித்து விட்டது. பிறகு உறவினர்களிடம் போய் இதே கேள்வியைக் கேட்டது. எல்லோரும் ஒரே பதிலையே சொன்னார்கள். திருப்தி அடையாத மீன் யாருக்குமே ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்து இறுதியில் உருவத்தில் பெரிய திமிங்கலத்திடம் வந்து தண்ணீரைக் காட்டச் சொன்னது.

உடனே திமிங்கலம் குட்டி மீனை தன் முதுகில் ஏறச் சொன்னது. குட்டி மீனும் முதுகில் ஏறியது. கரை நோக்கிச் சென்ற திமிங்கலம் குட்டி மீனை கரையில் எறிந்தது. குட்டி மீன் தண்ணீர் இல்லாமல் துடிதுடித்து உயிருக்குப் போராடியது. அப்போது திமிங்கலம் இதுதான் தண்ணீர் என்று தண்ணீரைக் காட்டி மீண்டும் குட்டி மீனைத் தண்ணீரில் விட்டது. அப்போதுதான் குட்டி மீனுக்கு தண்ணீர் தண்ணீராகத் தெரிந்தது.

அதுபோல்தான் கடவுளும் உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு உருவில் நிரம்பி இருந்தாலும் பலருக்கும் அவர் தெரிவதில்லை. எல்லோரும் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தனக்கு உள்ளே இருக்கும் கடவுளை யாரும் உணர்வதே இல்லை. கடவுளை அனுபவித்துதான் அறிய முடியும்.

இறைவன் மனிதனை படைத்து அவனுக்குள் நல்ல குணங்களையும் விதைத்து அவனுள்ளே மறைப்பொருளாய் அங்கும் இங்கும் எங்கும் சிவமாய் இருக்கின்றார்.

கட உபநிஷதம்.

இறைவனைத் தவிர வேறு எதன்மூலம் கிடைக்கின்ற அமைதியும் மகிழ்ச்சியும் நிலையானதல்ல. சில புறக் காரணங்களின் வாயிலாகக் கிடைக்கின்ற அமைதியும் மகிழ்ச்சியும் அந்தக் காரணம் விலகியதும் குலைந்துவிடும். ஆனால் இறைவனைப் பெறுவதால் கிடைக்கின்ற அமைதி எதனாலும் குலையாது.

கட உபநிஷதம்.