ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோயில்.

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் இருந்து 73 கி.மீ தொலைவில் உள்ள பனகனப்பள்ளிக்கு மேற்கே 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள நந்தி ஒவ்வொரு ஆண்டும் சிறிய அளவில் வளர்ந்து வருகிறது. இது இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் உறுதிப்படுத்தப்பட்டது. நந்தியின் அளவு அதிகரித்து வருவதால் கோயில் ஊழியர்கள் ஏற்கனவே ஒரு தூணை அகற்றியுள்ளனர். சிலை ஆரம்பத்தில் அதன் தற்போதைய அளவை விட மிகவும் சிறியதாக இருந்தது என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். இந்த சிலை மீது சில சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சிலை செதுக்கப்பட்ட பாறை வளர்ந்து வரும் தன்மையைக் கொண்டுள்ளது என்றும் 20 ஆண்டுகளில் 1 அங்குல உயரம் வளர்ந்து வருவதாக தொல்பொருள் ஆய்வுத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்த சித்தப்பா என்னும் சிவ பக்தர் ஒருவர் இறைவனைக் காண வேண்டித் தவமிருந்தார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த இறைவன் புலி உருக் கொண்டு அவர் முன் தோன்றினார். வந்திருப்பவர் சிவனார் என்றுணர்ந்த சித்தப்பா ஆனந்தக் கூத்தாடினார். தெலுங்கில் நேனு சிவனே கண்டி (நான் சிவனை கண்டு கொண்டேன்) என்று கூவினார். அது தான் நேனுகண்டி என்றாகி பின் யாகந்தி என்று மருவியது. இந்த கோவிலை 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்கம வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹாரா புக்க ராயாவால் கட்டப்பட்டது. வீரபிரம்மேந்திர ஸ்வாமி சில காலம் இங்கு தங்கியிருந்து கால ஞானம் என்னும் நூலை இயற்றியுள்ளார். வீர பிரம்மந்திர ஸ்வாமியின் கூற்றின்படி இந்த நந்தி சிலை உயிர் பெற்று வரும்போது இந்தக் கலியுகம் முடியும்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -24

யுதிஷ்டிரனின் பதில்களால் மகிழ்ந்து போன அந்த குரல் இறுதியில் மடிந்து போன நால்வரில் யாராவது ஒருவருக்கு நான் உயிர் தருகிறேன். யாருக்கு உயிர் கொடுக்க வேண்டும் எனக் கேட்டது. நகுலனை எனக்குத் திருப்பிக் கொடுங்கள் என யுதிஷ்டிரர் வேண்டினார். யாராலும் வெல்ல முடியாத சிறந்த போர்வீரர்களான பீமன் அர்ஜூனன் ஆகியோரில் ஒருவரைக் கேட்காமல் நகுலனை எதற்குத் தேர்ந்தெடுக்கிறாய் என அசரீரி கேட்டது.

அதற்கு யுதிஷ்டிரன் போர் புரிந்து வெற்றிபெறுவது என் வாழ்கையின் குறிக்கோள் அல்ல. அதுமட்டுமில்லாமல் என் தந்தை பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என இரண்டு மனைவிகள். இருவரும் எனக்கு தாய்மார்கள் ஆகிறார்கள். அவர்கள் இருவருக்கும் மகப்பேறு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் என் கடமையாகும். அந்த கடமையை நிறைவேற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்து இருக்கிறது. யுதிஷ்டிரனாகிய நான் மற்றும் பீமன், அர்ஜூனன் ஆகியோர் குந்திக்கு பிறந்தோம். மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர். என் தாய்க்கு பக்திப்பூர்வமாக சேவை செய்ய நான் உயிரோடு இருக்கிறேன். மற்றொரு தாயான மாத்ரி இறந்துவிட்டாள். அவளுக்குச் செய்ய வேண்டிய சிராத்தம் போன்ற கடமைகளைச் செய்ய ஒரு மகன் வேண்டும். ஒரு தாய்க்கு மகன் இல்லாது போகும்படி நான் நடந்து கொள்வது தர்மம் இல்லை ஆகவே நகுலனை உயிர்ப்பிக்க வேண்டுகிறேன் என்றார் யுதிஷ்டிரர்.

நீ பரந்த மனப்பான்மை படைத்தவன் உன்னை போன்றவனை காண்பது அரிதிலும் அரிது. ஆகவே 4 சகோதரர்களையும் நான் உனக்குத் திருப்பித் தந்து விடுகிறேன் என்றார். உடனே நான்கு சகோதரர்களும் உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்திருப்பது போன்று எழுந்தார்கள். அவர்களை வாட்டிய பசி தாகம் களைப்பு ஆகியவை இப்போது ஓடிப் போயின. யுதிஷ்டிரர் அசரீரியை பார்த்து என்னுடைய சகோதரர்களை தேவர்களாலும் வெல்ல முடியாது. அத்தகைய வீரர்களை மயக்கத்தில் விழவும் மறுபடியும் எழுந்திருக்கவும் செய்திருக்கிறாய். அத்தகைய நீ யார் என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார். யுதிஷ்டிரர் முன்பு பிரகாசத்துடன் மூர்த்தி ஒன்று தோன்றி நான் தர்மதேவதை உனக்கு நான் தெய்வீக தந்தையாவேன். உன்னுடைய உறுதிப்பாட்டை சோதித்தல் பொருட்டு இப்பொழுது நிகழ்ந்தவை யாவற்றையும் நான் வேண்டுமென்றே செய்தேன். உன்னிடத்தில் எனக்கு பரம திருப்தி உண்டாகியது நீ வேண்டும் வரங்களைப் பெற்றுக் கொள்வாயாக என்று தர்ம தேவதை கூறினார். தந்தையை பிராமணன் மானிடம் இழந்த அரணிக்கட்டையை திருப்பித்தர கடமைப்பட்டிருக்கிறேன். இல்லையேல் தர்மத்திலிருந்து நாங்கள் பிசகியவர்கள் ஆவோம். ஆகவே அரணிக்கட்டை மீண்டும் கிடைக்க தயை கூர்ந்து அதற்கு அருள்புரிவீர்களாக என்றான். அதற்கு தர்மதேவதை தானே மான் வடிவில் வந்து அரணிக்கட்டையை தூக்கி சென்றோம் என்று கூறி திருப்பி அளித்தார். மகிழ்ச்சியுடன் அரணிக்கட்டையை பெற்றுக்கொண்டார் யுதிஷ்டிரர்.

வீரபிரம்மேந்திரர்

விஸ்வகர்மா பொற்கொல்லர் மரபில் வந்த பரிபூரணஆசாரி பிரகதாம்பாள் என்ற தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்தார் வீரபிரம்மேந்திரர். அவர் பிறந்த அன்றே அவர் தந்தை இறந்து விட்டார். அதனால் மிகுந்த கலக்கமெய்தினாள் பிரகதாம்பாள். ஒரு முனிவரிடம் குழந்தையை ஒப்படைத்த அவள் தான் வாழ விரும்பாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். முனிவர் அந்த அழகிய குழந்தையைக் கனிவோடு பார்த்தார். எவ்விதம் அந்த தெய்வீகக் குழந்தையை வளர்ப்பது என சிந்தனையில் ஆழ்ந்தார். இறைவன் கட்டளையேபோல அவரைத் தேடிவந்தார்கள் இருவர். வீரபோஜர் வீரபாப்பம்மா என்ற அவ்விருவரும் அந்தக் குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக உறுதி கூறி வாங்கிச் சென்றார்கள். வீரபிரம்மத்தைப் பதினான்கு வருடம் மிகப் பாசத்துடன் வளர்த்தார்கள் அவர்கள். அப்போது வீரபிரம்மத்தின் வளர்ப்புத் தந்தை காலமாகிவிட்டார். பிறந்த போதே தந்தையையும் பின் தாயையும் இழந்தது இப்போது வளர்ப்புத் தந்தையையும் இழந்தது வீரபிரம்மேந்திரரை சிந்தனையில் ஆழ்த்தின. தத்துவ ஞானத்தில் தோய்ந்தது அவர் மனம். தம் வளர்ப்புத் தாயிடம் தமக்கு வற்றாத ஆன்மிகத் தேடல் இருப்பதால் அந்த வழியில் வாழ்க்கை நடத்தப்போவதாகக் கூறி பிரியாவிடை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

கால்போன போக்கில் நடந்தார். எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அமைதியாக நெடுநேரம் தியானம் செய்தார். இந்த வாழ்வின் பொருள் என்ன என்றறியும் தீராத ஆவல் அவருக்கிருந்தது. அவர் போகாத கோவில் இல்லை. ஒருநாள் இரவு வீரபிரம்மேந்திரர் பனகானபள்ளி என்ற அழகிய சிறு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே அச்சம்மா என்பவளின் வீட்டுத் திண்ணை காலியாக இருந்தது. அதில் படுத்து உறங்கினார். காலை கதவைத் திறந்து வெளியே வந்து திண்ணையைப் பார்த்தாள் அச்சம்மா. யாரோ ஒரு பையன் உறங்குகிறானே? உறங்கும்போதும் அவன் முகத்தில் தென்பட்ட ஒளி அச்சம்மாவை வசீகரித்தது. அந்தப் பையன் மேல் அவளுக்குத் தாயன்பு பெருகியது. அவன் எழுந்ததும் யாரப்பா நீ என்று விசாரித்தாள் அவள். அவன் தான் ஓர் அநாதை என்றும் ஊர் ஊராகச் சுற்றி வருவதாகவும் தெரிவித்தான். எனக்கு நான் வளர்க்கும் மாடுகளை மேய்க்க ஒருவன் தேவை. இனி இங்கேயே இரு என்று கண்டிப்பு கலந்த பிரியத்தோடு சொல்லி அவனுக்கு உணவளித்தாள் அச்சம்மா. இப்படியாக வீரபிரம்மேந்திரர் அச்சம்மாவின் மாடுகளை மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தப்பட்டார்.

வீரபிரம்மேந்திரர் மாடுகளைச் சுற்றி ஒரு மிகப்பெரிய வட்டக் கோடு வரைந்து விடுவார். மாடுகள் அந்தக் கோட்டுக்குள்ளிருந்து புல் மேய்ந்து கொண்டிருக்கும். அதைக் கடந்து செல்லாது. மாடுகள் அவரைப் பெரிதும் நேசித்தன. மாடுகள் புல்மேயும் தருணத்தில் வீரபிரம்மேந்திரர் கால ஞானம் என்ற எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் நூலை எழுதலானார். பனையோலையில் முட்களால் எழுதப்பட்டதே அந்த நூல். ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அந்த நூலை எழுதிவந்தார் அவர். இப்படியாகக் காலம் போய்க்கொண்டிருந்த போது ஒருநாள் மாடுகளை அடித்துச் சாப்பிடும் எண்ணத்தில் காட்டிலிலிருந்து ஒரு புலி அங்கு வந்தது. ஆனால் வீரபிரம்மேந்திரர் கிழித்த கோட்டினுள்ளே செல்ல இயலாமல் புலி தத்தளித்துத் திரும்பிச் சென்றது. இதைப் பார்த்தார்கள் சில இடையர்கள். அவர்கள் அச்சம்மாவிடம் சென்று இந்தத் தகவலைச் சொன்னார்கள். அச்சம்மா வியப்படைந்தாள். ஏற்கெனவே வீரபிரம்மேந்திரரின் முகத்தில் தென்பட்ட தெய்வீக ஒளி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. தவிர அவர் ஏதோ தொடர்ந்து எழுதி வருவதையும் அவள் அறிவாள்.

வீரபிரம்மேந்திரர் வீடு திரும்பியதும் அச்சம்மா அவரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அவர் பெரிய மகான் என்பதைத் தாம் இப்போது தான் அறிந்ததாகவும் அவரை மாடு மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தியது பெரும் தவறு என்றும் அவள் கண்ணீர் உகுத்தாள். ஏதோ ஒரு தொழில் செய்து எல்லாரும் வாழ வேண்டியது தான். கண்ணனே மாடு மேய்த்தவன் தான். அது ஒன்றும் இழிவான தொழில் அல்ல என்று கூறி அவளை சமாதானப் படுத்தினார் வீரபிரம்மேந்திரர். அச்சம்மா அவர் எழுதிவரும் நூல் என்னவென்று விசாரித்தாள். எதிர்காலத்தில் நடக்கப்போவதைத் தான் கணித்து எழுதி வருவதாக அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் என்னென்ன நடக்குமென்று எனக்கு ஓரளவாவது சொல்ல இயலுமா என்று அச்சம்மா கேட்டாள். வீரபிரம்மேந்திரர் நகைத்துக்கொண்டே சில விஷயங்களைச் சொன்னார். அவற்றில் சில:

புண்ணிய நதிகள் வற்றிவிடும். கடல் பொங்கி நகருக்குள் நுழையும். அதனால் அதிகம் பேர் உயிரிழப்பார்கள். கணவனை மட்டுமே மணந்து வாழும் பத்தினிப் பெண்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். ஆண்கள்- பெண்கள் இரு தரப்பாரிடமும் ஒழுக்கம் கெடும். இந்தியாவில் ஜனத்தொகைப் பெருக்கம் அதிகமாவதால் குழந்தை பிறப்பதை செயற்கை முறையில் தடுக்கப் பார்ப்பார்கள். பெரியோருக்கு அடங்கி சிறியோர் நடந்தது போகும் காலம் மாறி சிறியோருக்கு அடங்கி பெரியோர் நடக்க நேரிடும். புண்ணியத் தலங்களில் வாழ்பவர்கள் ஆண்டவனுக்கு அஞ்சி வாழாமல் ஆண்டவன் பெயரால் மோசடி செய்து வஞ்சித்து வாழ்வார்கள்.’ இதையெல்லாம் கேட்ட அச்சம்மா மிகுந்த வியப்படைந்தாள். அவரையே தன் குருவாக ஏற்றாள் அச்சம்மா. தனக்கு உபதேசம் வழங்குமாறு வேண்டினாள். வீரபிரம்மேந்திரர் அவளுக்குச் சிவ மந்திரத்தை உபதேசித்து, அதை ஓயாமல் ஜெபித்து வருமாறு பணித்தார். பொருள் மேல் உள்ள ஆசையை விட்டு விட்டு ஆன்மிகப் பணிகளில் நாட்டம் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அச்சம்மாவின் மனம் வீரபிரம்மேந்திரரின் உபதேசங்களால் ஞானம் அடைந்தது. மெல்ல மெல்லப் பற்றுகள் அவளை விட்டு விலகத் தொடங்கின. இல்லறத்தைத் துறந்து துறவியானாள் அவள். தன் சொத்தையெல்லாம் செலவிட்டு ஏகாந்த மடம் என்றொரு மடம் நிறுவினாள். அதில் வாழ்ந்தபடி வீரபிரம்மேந்திரரின் கொள்கைகளை மக்களிடையே பரப்பிவரலானாள். அச்சம்மாவின் வாழ்க்கை இனி அவ்விதமே தொடரும் என அறிவித்த வீரபிரம்மேந்திரர், அவளிடம் விடைபெற்று மீண்டும் பல்வேறு தலங்களுக்கு யாத்திரை செல்லலானார்.

ஆந்திரவில் இருக்கும் போலேரம்மா என்ற புகழ்பெற்ற அம்மன் கோவிலுக்குச் சென்றார் அவர். அங்கு சிலர் போலேரம்மா புனித யாத்திரைக்கு அவரிடம் நன்கொடை கேட்டனர். நன்கொடை தருவது கட்டாயமென்று அவரை அச்சுறுத்தினர். இப்போது என்னிடம் பணம் எதுவுமில்லையே, பிறகு கிடைத்தால் தருகிறேன் என்றார். பின் தன் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டார் அவர்களிடம். அவர்கள் நன்கொடை தராத அவருக்கு நெருப்புத் தர மறுத்தனர். அவர் போலேரம்மா கோவிலுக்கு வெளியே வந்துநின்றார். உள்ளே சந்நிதியை உற்றுப் பார்த்தார். போலேரம்மா என் சுருட்டுக்குக் கொஞ்சம் நெருப்பு கொடு என்று கேட்டார். மறு நிமிடம் போலேரம்மா சந்நிதியிலிருந்து ஒரு தணல் காற்று வெளியில் புறப்பட்டு வந்தது அவரது சுருட்டைக் கொளுத்தியது சரி சரி நெருப்பு போதும் என்று அவர் சொன்னதும் மீண்டும் கருவறைக்கே சென்று மறைந்தது அந்தத் தணல். இந்த அதிசயத்தைப் பார்த்தவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள். அவரது காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்கள். அவர்கள் அனைவருமே அவரின் அடிய வர்களானார்கள். இப்படி மெல்ல மெல்ல வீரபிரம்மேந்திரரின் அடியவர் எண்ணிக்கை நாள் தோறும் பெருகத் தொடங்கியது.

காலப்போக்கில் அவர் தமது பொற்கொல்லர் மரபில் தோன்றிய கோவிந்தம்மா என்ற பெண்ணை மணந்தார். இல்லறம் துறவறம் இரண்டும் சம மதிப்புடையவை தான் என்று அவர் அடிக்கடிச் சொல்வது வழக்கம். தம் இல்லற வாழ்வில் ஐந்து மகன்களையும் ஒரு மகளையும் பெற்றார். தம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் ஆன்மிகவாதிகளாக மாற்றினார். அனைவருடனும் இணைந்து ஆன்மிகப் பணியாற்றி வந்தார். தாம் ஜீவசமாதி அடைய எண்ணி குடும்பத்தாரிடம் அறிவித்தார் வீரபிரம்மேந்திரர். குடும்பத்தார் கண்கலங்கினர். யாக்கை நிலையற்றது இதன் மேல் பற்று வைக்காதீர்கள் என்று போதித்தார். பின் சமாதிக்குழியில் இறங்கி நிஷ்டையில் அமர்ந்தார். எனக்கு இறப்பில்லை என்பதால் என் மனைவி தன் சுமங்கலிலிக் கோலத்தை மாற்றத் தேவையில்லை என்று அறிவித்தார். சமாதியின் மேலே பலகை போட்டு சமாதி மூடப்பட்டது.

பத்து மாதங்கள் சுழன்றோடின. இன்னுமா அவர் உயிரோடிருப்பார்? அவர் மனைவிக்கேன் சுமங்கலிலிக் கோலம் என்று சிலர் விமர்சித்தனர். மூத்த பிள்ளை மனம் நொந்து தாயிடம் விளக்கம் கேட்டார். மக்களுக்கு அறிவில்லை. அவர்களின் அழிவுக்காலம் நெருங்கி விட்டதால் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். என் கணவர் எனக்கிட்ட கட்டளைப்படியே நான் சுமங்கலிலிக் கோலத்தில் இருந்து வருகிறேன் என்றார் தாயார். மகனுக்குச் சமாதானம் ஏற்படவில்லை அவன் ஆக்ரோஷத்தோடு ஒரு கடப்பாரையை எடுத்து வந்து சமாதியை இடித்துத் திறந்து பார்த்தான். அங்கே சலனமே இல்லாமல் யோக நிஷ்டையில் கம்பீரமாக வீற்றிருந்தார் வீரபிரம்மேந்திரர். சமாதியை இடித்த மூத்த மகனின் கைகள் நடுக்கத்தில் வெலவெலத்தன. அவனை கண்திறந்து பார்த்த வீரபிரம்மேந்திரர் சமாதியைத் திறந்த தோஷம் விலகப் பரிகாரம் செய்யச் சொல்லி மீண்டும் சமாதியை மூடச் சொன்னார். இந்த அதிசயத்தைப் பார்த்த ஊர்க்காரர்கள் வீரபிரம்மேந்திரரின் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டனர். மனைவியையும் பக்தியோடு கும்பிடத்தொடங்கினார்கள். ஆந்திராவில் கந்தி மல்லையபள்ளி என்ற இடத்தில் இருக்கிறது சித்த புருஷரான வீரபிரம்மேந்திரரின் ஜீவசமாதி.

Image may contain: text that says 'எதிர்காலத்தை முன்னமே சொன்ன வீரபிரம்மம்!'

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 217 திருச்சோபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 217 வது தேவாரத்தலம் திருச்சோபுரம். புராணபெயர் தியாகவல்லி. மூலவர் சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சோபுரநாயகி, தியாகவல்லியம்மை, சத்யாயதாட்சி, வேல்நெடுங்கண்ணி. தலமரம் கொன்றை. தீர்த்தம் கிணற்று தீர்த்தம். மணற்பாங்கான பகுதியில் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஓரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. உள்ளே கவசமிட்ட கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். சுப்பிரமணியர், கஜலட்சுமி, வீரட்டேஸ்வர லிங்கம், கண்ணப்பர், திரிபுவன சக்கரவர்த்தி அவர் மனைவி வழிபட்ட லிங்கங்கள், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள், சிவன், அம்பாள் இருவரையும் ஒரே இடத்திலிருந்து தரிசிக்கக் கூடிய அமைப்புடன் அமைந்துள்ளன. இத்தலத்து மூலவர் சிவலிங்கத் திருமேனி அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கயிலாயத்தில் சிவன் அம்பாள் திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த தென்திசை வந்தார் அகத்தியர். அவர் வரும் வழியில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வங்கக்கடற்கரை வழியாக சென்றபோது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிவனிடம் தன் வலி தீர்க்க முறையிட விரும்பி கடல் மணலால் லிங்கம் அமைக்க முயன்றார். ஆனால் எவ்வளவு முயன்றும் லிங்கத்தை சரியாக அமைக்க முடியவில்லை. சிவன் தன்னை சோதிப்பதை உணர்ந்த அகத்தியர் அருகிலிருந்த மூலிகை செடிகளை பறித்து அதன் சாறை மணலில் சேர்த்தார். அக்கலவையால் லிங்கம் அமைத்து வணங்கினார். வலி நீங்கியது. இந்த லிங்கம் இருந்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.

சதுர ஆவுடையார் மீது பாணம் சுற்றளவு சற்று குறைவாக நீட்டுவாக்கில் உள்ள லிங்கத் திருமேனியுடன் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். லிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்த போது ஏற்பட்ட கைத்தடம் இருக்கிறது. லிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பில் கங்காதேவி உள்ளார். அகத்தியர் அமைத்த லிங்கத்திலேயே அம்பாள் ஐக்கியமாகி விட்டதால் சிவலிங்கத்துக்கு மஞ்சள் குங்கும வழிபாடு நடக்கின்றது. பிற்காலத்தில் அம்பாளுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டது. கோஷ்ட மூர்த்தத்தில் லிங்கோத்பவருக்கு இருபுறங்களிலும் திருமாலும் பிரம்மாவும் நின்று தரிசிக்கும் கோலத்தில் உள்ளனர். கோயில் உள்ள பகுதி திருச்சோபுரம் என்றும் பக்கத்தில் உள்ள பகுதி தியாகவல்லி என்றும் சொல்லப்படுகிறது. திரிபுவனச் சக்கரவர்த்தியின் முதல் மனைவியான தியாகவல்லி அம்மையார் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த காரணத்தால் தியாகவல்லி என்று பெயர் பெற்றது. இக்கோயில் பல்லாண்டுகளுக்கு முன்பு கடல் சீற்றத்தால் மணலால் மூடப்பட்டு விட்டது. பிற்காலத்தில் சிவபக்தர் ஒருவர் இத்தலத்தை பற்றி அறிந்து சுவாமியை தரிசனம் செய்ய வந்தார். ஆனால் இங்கு கோயில் இல்லை. ஓரிடத்தில் கோபுர கலசத்தின் நுனி மட்டும் தெரிந்தது. அதன்பின் ஊர்மக்கள் மணலை அகற்றி இக் கோயிலை வெளிக்கொண்டு வந்தனர். கையில் வீணை ஏந்தியபடி இசைக்கு அதிபதியாக காட்சி தரும் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இசையின் வடிவமாகவே அருளுகிறார். இவரது சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. வழக்கமாக வலது கையில் நாகமும் இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இடது கையில் நாகம் வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார். இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல் வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 216 தீர்த்தனகிரி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 216 வது தேவாரத்தலம் தீர்த்தனகிரி. புராணபெயர் திருத்திணைநகர். மூலவர் சிவக்கொழுந்தீசர். இங்கு இறைவன் சதுரவடிவ பீடத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பாணம் சற்று கூர்மையாகவுள்ளது. சிவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியஒளி சுவாமி மீது விழுகிறது. அம்பாள் ஒப்பிலாநாயகி, நீலாயதாக்ஷி, கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள். தலமரம் கொன்றை. தீர்த்தம் ஜாம்புவதடாகம். கோயிலுக்கு வெளியே இருக்கும் இத்தீர்த்தத்தில் முன்வினைப் பயனால் ஜாம்பு என்கின்ற கரடி வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றார். இதனால் இத்தீர்த்தம் அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.

இராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி உள்ளது. கோபுரவாயில் வழியாக உள்ளே நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம். நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. மேலும் இந்த பிராகாரத்தில் நால்வர், விநாயகர், சுப்பிரமணியர், வீரசேன மன்னன் ஆகியோரின் சந்நிதிகளும், தலமரமாகிய கொன்றையும், பைரவர், சூரியன் திருமேனிகளும் உள்ளன. பிரகார வலம் முடித்து தெற்கிலுள்ள பக்கவாயில் வழியாக உள்ளே சென்றால் நேரே நடராச சபை உள்ளது. நடராச மூர்த்தியின் கீழே பீடத்தில் மகாவிஷ்ணு சங்கை வாயில் வைத்து ஊதுவது போலவும் பிரம்மா பஞ்சமுக வாத்யம் வாசிப்பது போலவும் சிறிய மூர்த்தங்கள் உள்ளன. திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காணலாம். கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். லிங்கோத்பவருக்கு இருபுறமும் பிரம்மா, விஷ்ணு நின்று தரிசிக்கும் கோலத்தில் காணப்படுகின்றனர். சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது காலுக்கு கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டும் இருக்கின்றனர்.

விவசாய தம்பதியர்கள் உணவு படைத்தபோது சிவன் தரையில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டார். இதன் அடிப்படையில் தட்சிணாமூர்த்தி இக்கோலத்தில் இருக்கின்றார். முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன்பின்பு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு சமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணி எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றான். ஆனால் அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். அப்போது இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க விவசாயி வீட்டிற்குச் சென்று உணவு எடுத்து வருவதாகக் கூறினான். அடியவராக வந்து இறைவன் அவனிடம் நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன் என்றார்.

விவசாயியும் ஒத்துக்கொண்டு தன் தோட்டத்தை உழும்படி கூறினான். இறைவன் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது தோட்டத்தில் அன்று விதைக்கப்பட்டிருந்த திணைப் பயிர்கள் அனைத்தும் நன்கு விளைந்து கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆச்சர்யமடைந்த விவசாயி சந்தேகத்துடனே அடியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் அன்னமிட்டான். அடியவர் சாப்பிட்ட பின்பு அவரிடம் ஒரே நாளில் திணைப்பயிர் விளைந்தது எப்படி என தன் சந்தேகத்தை கேட்டான். அடியவராக வந்த முதியவர் மறைந்து சிவபெருமானாக அவனுக்கு காட்சி தந்து தானே அடியவராக வந்ததை உணர்த்தினார். சிவதரிசனம் கண்டு மகிழ்ந்த விவசாயி இறைவனை அங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். இறைவனும் சுயம்பு லிங்கமாக அவ்விடத்தில் எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால் இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது. சிவன் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்திய ஏர் மற்றும் நீர் இறைத்த கலம் தற்போதும் இருக்கிறது. வீரசேன மன்னனுக்கு இருத்த வெண்குஷ்டம் இத்தீர்த்தத்தில் மூழ்கி தீர்ந்தமையால் அவனே இக்கோயிலைக் கட்டினான். சுந்தரர் இத்தலத்தில் உள்ள அம்பாளைக்குறித்தும் பதிகம் பாடியிருக்கிறார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 215 ராஜேந்தரப்பட்டினம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 215 வது தேவாரத்தலம் ராஜேந்தரப்பட்டினம். புராணபெயர் எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம், திருவெருக்கத்தம்புலியூர். மூலவர் திருக்குமாரசாமி, சுவேதாரண்யேஸ்வரர், நீலகண்டேஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மார்ச் மாதம் 16 முதல் 20 வரை 5 நாட்கள் மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. அம்பாள் வீராமுலைஅம்மன், நீலமலர்கண்ணி அம்மை, அபின்னகுசநாயகி, அபீதகுஜநாயகி, நீலோற்பலாம்பிகை. தீர்த்தம் கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம். தலமரம் வெள்ளேருக்கு.

தேவர்களும் முனிவர்களும் இத்தலத்தில் பறவையாகவும் மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட்டு வந்தனர். அங்கே வந்த வேடர்கள் பறவைகளை கொல்லவும் மரங்களை வெட்டவும் முயன்றனர். உடனே அனைவரையும் யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி வழிபடுங்கள் என கூறி மறைந்தார். எனவே இவ்வூர் எருக்கத்தம்புலியூர் ஆனது. ராஜராஜ சோழன் புத்திரபாக்கியம் வேண்டி இத்தல ஈசனை வணங்கினார். அதன் பலனாக ராஜேந்திர சோழன் பிறந்தான். இதனால் இத்தலத்திற்கு ராஜேந்திரபட்டினம் என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வாலயத்தின் ராஜகோபுரம் 5 நிலைகளையுடையது. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் உள்ளன. வலதுபுறம் சிறிய விநாயகர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் இடதுபுறத்தில் நவக்கிரகமும் நால்வரும் உள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய அவதாரத்தலம் திருஎருக்கத்தம்புலியூர். இவரது திருவுருவம் மதங்க சூளாமணியாருடன் உள்ளது. மகாகணபதி, விசுவநாதர் விசாலாட்சி, முருகர், லட்சுமி சந்நிதிகள் உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

சுவேதன் என்ற அரசனுக்கு முன்வினைப்பயனால் வெண்குஷ்டம் ஏற்பட்டது. சிவபக்தனான இவன் எருக்கத்தம்புலியூர் தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்து நோய் நீங்கப் பெற்றான். இத்தலத்தின் எருக்கிற்கு வெண்குஷ்டத்தைப் போக்கும் சக்தியுண்டு. கைலாயத்தில் சிவன் வேதாகமத்தின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்து கொண்டிருந்தார். பார்வதி அதை சரியாக கவனிக்காததால் அவளை பரதவர் குல பெண்ணாக பிறக்குமாறு சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன் தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார். இக்குற்றத்திற்காக சிவன் முருகனை மதுரையில் வணிகர் குலத்தில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். முருகன் மதுரையில் தனபதி, குணசாலினி என்ற பெற்றோருக்கு உருத்திரசன்மர் என்ற பெயரில் அவதரித்தார். உரிய வயது வந்த போது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டு பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் குமாரசாமி ஆனார். உருத்திரசன்மரின் உருவம் இங்கிருக்கிறது. முருகப்பெருமான், வியாக்ரபாதர் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

கந்த சஷ்டி கவசம் வரலாறு

முருகப்பெருமான் புகழ்பாடும் கந்த சஷ்டி கவசம் இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர் மிகச்சிறந்த முருக அடியார் கந்த சஷ்டி கவசத்தில் நிறைய சொற்கள் வடமொழியில் இருந்து எடுத்தாளப்பட்டு இருக்கிறது. சஷ்டி கவசப் பாடல்களின் வயது சுமார் 250 ஆண்டுகள் இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

பாலதேவராய சுவாமிகளுக்கு ஒருசமயம் அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணியவர் முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது. கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார்.

ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது. மனம் வாடாது. குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம். நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -23

தண்ணீர் எடுக்கப்போன தம்பிகள் நீண்டநேரம் ஆகியும் வராததால் வருந்தியபடி தண்ணீர் தேடி தானே நடக்கலானார் யுதிஷ்டிரர். நீர் இருக்கும் தடாகம் அருகே வந்தவர் தனது நான்கு சகோதரர்களும் மாண்டுகிடப்பதைக் கண்டு மிகவும் வருந்தினார். இங்கு போர் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று நினைத்தவர் உடல் தளர்ச்சியை நீக்கிக்கொள்ள முதலில் நீர் அருந்த முற்பட்டார். அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது. என் பேச்சை பொருட்படுத்தாமல் தண்ணீர் குடித்ததால் உன் உடன்பிறந்தவர்கள் மாண்டுபோனார்கள். முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை அலட்சியப்படுத்தினால் உன் தம்பிகளின் கதிதான் உனக்கும் ஏற்படும் என்று குரல் ஒலித்தது. அசரீரிக்கு மதிப்பளித்து தண்ணீர் குடிக்காமல் கரையேறிய யுதிஷ்டிரர் இந்த தண்ணீர் தடாகம் உனக்குச் சொந்தம் எனக் கூறுகிறாய். உனது அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்க எனக்கு உரிமை இல்லை. உன் கேள்விகளைக் கேள் முடிந்த அளவுக்கு பதில் சொல்லுகிறேன் என்றார்.

கேள்வி – சூரியனை பிரகாசிக்கும் படி செய்வது எது?

யுதிஷ்டிரன் பதில் – பரப்பிரத்தின் தெய்வீக சக்தி சூரியனை பிரகாசிக்கும் படி செய்கிறது

கேள்வி – மனிதன் மேலோன் ஆவது எப்போது?

யுதிஷ்டிரன் பதில் – தவத்தின் வாயிலாக மனிதன் மேலோன் ஆகிறான்

கேள்வி – மனிதன் எப்போது புத்திமான் ஆகின்றான்?

யுதிஷ்டிரன் பதில் – ஏட்டுக்கல்வியினால் மனிதன் புத்திமான் ஆவதில்லை. சான்றோர் இணக்கத்தினாலே மனிதன் புத்திமான் ஆகின்றான்.

கேள்வி – பிராமணன் யார்?

யுதிஷ்டிரன் பதில் – எல்லோருடைய நலத்தின் பொருட்டு தன்னை ஒப்படைப்பவன் பிராமணன் ஆகிறான்.

கேள்வி – க்ஷத்திரன் யார்?

யுதிஷ்டிரன் பதில் – தர்மத்தை காக்கும் பொருட்டு தன் உயிரைக் கொடுப்பவன் க்ஷத்திரியன் ஆகின்றான்.

கேள்வி – வேகம் வாய்ந்தது எது

யுதிஷ்டிரன் பதில் – மனம்.

கேள்வி – பயணம் போகிறவர்களுக்கு மிக மேலான கூட்டாளி யார்?

யுதிஷ்டிரன் பதில் – கல்வி

கேள்வி – எதை துறப்பதால் மனிதன் பொருள் படைத்தவன் ஆகின்றான்?

யுதிஷ்டிரன் பதில் – ஆசையை துறப்பதால் மனிதன் பொருள் படைத்தவன் ஆகின்றான்.

கேள்வி – அமைதி எங்கு உள்ளது?

யுதிஷ்டிரன் பதில் – மனத்திருப்தியில்.

கேள்வி – அதிசயங்களுள் அதிசயம் எது?

யுதிஷ்டிரன் பதில் – கணக்கற்ற பேர் இடைவிடாமல் இறந்து கொண்டே இருக்கின்றனர். அப்படி இருந்தும் உயிர்வாழ்ந்து இருப்பவன் தான் மரணம் அடையாமல் இருக்க போவதாக எண்ணிக் கொள்கிறான். இதுவே அதிசயங்களுள் அதிசயம்

இதுபோன்று பல கேள்விகளை அசரீரி கேட்டபோது அசராமல் பதில் சொன்னார் யுதிஷ்டிரர்.

முருகன் அருள்

ஒரு சிறுவன் அவனது காலில் புண் ஏற்பட்டது சின்னப்புண் தானே என்று அந்தப் பையனும் கண்டு கொள்ளவில்லை நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூர புரையோடிப் போனதால் அவனுக்கு உள்ளே வலி ஏற்பட்டது வலி தாங்கமுடியாது தவித்த அவனை அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர். அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி இப்படியா விட்டு வைப்பது உடனே பட்டணம் போய் காண்பியுங்கள் என்றார். பையனைச் சோதித்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார் உள்ளே செப்டிக் ஆகி விட்டது உடனே காலை எடுக்க வேண்டும் இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர்.

இந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தரமுடியும் இந்தக் கால் தேயும் வரை அவன் ஆலயத்தை சுற்றுவோம் இவ்வாறு நினைத்தவன் தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்றான். 108 மற்றும் 1008 என்ற கணக்கெல்லாம் இல்லை. காலை மாலை என தினமும் கணக்கு வழக்கின்றி கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான். சில மாதங்களில் யாராலும் நம்ப முடியாத அற்புதமாக ஏன் அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில் தானே ஆற ஆரம்பித்த புண் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது. இனி என் வாழ் நாள் முழுதும் முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும். அதுவே என் தொழில். அதுவே என் மூச்சு என்று ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன். அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை ஓர் அரை நூற்றாண்டிற்கு மேல் நின்றபடியே முருகன் புகழ் பாடிய திரு முருக கிருபானந்த வாரியார் என அழைக்கப்பட்ட வாரியார் சுவாமிகள்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -22

மானை பிடிக்க முடியாமல் போனதால் தர்மத்திலிருந்து பிசகி விட்டோமே என்று வருத்தத்தில் பாண்டவ சகோதரர்கள் இருந்தனர். அப்போது பீமன் துச்சாதனன் சபையின் நடுவே திரௌபதியை இழுத்து வந்த போது நாம் அவனை கொன்றிருக்கவேண்டும் அந்த கடமையிலிருந்து நாம் நழுவியதே இந்த இந்த தர்மத்திலிருந்து பிசகியதற்கு காரணமாக அமைந்து விட்டது என்றான். அப்போது அர்ஜூனன் சபையில் கர்ணன் திரௌபதியை அவமானப்படுத்திய போது நான் செயலற்று இருந்தேன் அப்போதே அங்கு அவனை நான் கொன்று இருந்தால் இப்படி ஒரு சூழ்நிலை வந்து இருக்காது என்றான். சகாதேவன் சகுனி பகடை விளையாட்டில் வெற்றி பெற்றிருந்த பொழுது நான் அவனை கொன்றிருக்க வேண்டும் அப்படி செய்யாமல் போனது தான் காரணமாக இருக்கும் என்றான். சகோதரர்கள் கூறிய அனைத்தையும் யுதிஷ்டிரன் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான். அனைவருக்கும் தாகம் ஏற்பட்டது. தங்கள் தாகத்தை தணிக்கும் பொருட்டு அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்து தண்ணீர் கொஞ்சம் கொண்டு வரும்படி நகுலனிடம் அவன் கூறினார்

தண்ணீர் தேடிச்சென்ற நகுலன் வனத்தில் ஸ்படிகம் போன்று தூய்மையான தடாகத்தை கண்டான். முதலில் தனது தாகத்தை தணித்துக்கொண்டு அம்புகள் வைக்கும் தூணியில் சகோதரர்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல திட்டமிட்டான். அவன் பொய்கையில் இறங்கி தண்ணீர் பருக ஆரம்பித்தபோது அசரீரி ஒன்று ஒலித்தது. இந்தத் தடாகம் எனக்குச் சொந்தமானது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். அதன் பிறகு நீர் பருகலாம் என்றது அசரீரி. சுற்றும் முற்றும் பார்த்த நகுலன் யாரும் கண்ணுக்கு புலப்படாததால் அசரீரியை அலட்சியப்படுத்தி விட்டு தண்ணீர் குடித்தான். சிறிது தண்ணீர் குடித்த உடனேயே நகுலன் செத்தவன் போன்று கீழே விழுந்தான்.

வெகுநேரம் ஆகியும் தண்ணீர் எடுக்கச்சென்ற நகுலனைக் காணாததால் இரண்டாவதாக சகாதேவன் அனுப்பப்பட்டான். அவனும் திரும்ப வரவில்லை. மூன்றாவதாக அர்ஜூனன் சென்றான். உடலில் காயம் ஏதும் இல்லாமலே சகோதரர்கள் இருவரும் மரணித்து தரையில் கிடந்ததைப் பார்த்துத் திகைத்தான். கண்ணுக்குத் தெரியாத எதிரியை நோக்கி மந்திர அஸ்திரம் ஒன்றை எய்தான் அர்ஜூனன். அப்போதும் அதே குரல் ஒலித்தது உன் பாணம் என்னை ஒன்றும் செய்யாது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு விடைசொல். அதன்பிறகு நீர் எடுத்துச்செல் என்றது. முதலில் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு உன்கேள்விகளுக்கு விடை சொல்லுகிறேன் என்று கூறியபடி தண்ணீர் குடித்த அர்ஜூனனும் கீழே வீழ்ந்தான்.

மூன்று சகோதரர்களும் திரும்பி வராததால் யுதிஷ்டிரன் மனக்கவலை அடைந்தான். அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என நினைத்தான். தம்பிகளுக்கு என்ன ஆனது என்று பார்த்து விட்டு எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்று பீமனிடம் யுதிஷ்டிரன் கூறினார். தண்ணீர் எடுக்கச்சென்ற பீமன் பொய்கை அருகே தனது மூன்று சகோதரர்களும் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து பொங்கி எழுந்தான். இது ராட்சசர்களின் வேலையாகத்தான் இருக்கும். முதலில் தாகத்தை தணித்துக்கொண்டு அவர்களை ஒழித்துக் கட்டுகிறேன் என சூளுரைத்தபடி பீமன் தடாகத்தில் இறங்கினான். மீண்டும் அதே அசரீரி ஒலித்தது. எனக்கு நிபந்தனை விதிக்க இவன் யார் என அலட்சியமாக நினைத்தபடி தண்ணீரைக் குடித்த பீமன் முந்தைய மூவரைப் போன்றே கீழே விழுந்தான்.