இவ்வுலக நிலையில் பொதுவாக மானிடர்களிடம் ஓர் தன்மை உண்டு. அத்தன்மையானது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது. பொதுவாக மற்றவர்கள் நல்ல நிலையில் இருந்தால் அதைக்கண்டு யாமும் அந்த நிலையை அடைய வேண்டும் என்று எண்ணாது சிறு பொறாமைத் தன்மையையும் வளர்க்கின்றனர். இதனைத் தவிர்த்தல் வேண்டும் என்று இங்கு கூறுகிறோம். பொதுவாக ஒப்பிடுவதை ஓர் நல்வழியில் மாற்றி அமைத்தல் வேண்டும். மற்றொருவரின் நல்குணங்கள் நம்மிடம் உள்ளதா என்று ஆராய்தல் வேண்டும். அவ்விதம் இல்லையேல் அதனை நம் வாழ்வில் அமைக்க முயற்சித்தல் வேண்டும். இது மட்டும் அல்லாது தீயவர்களின் குணங்கள் நம்மிடத்தில் உண்டா என்று எண்ணி அவ்விதம் இருந்தால் அதை நீக்குதல் வேண்டும். இதுவே சீரான ஒப்பிடும் முறை என்று இங்கு கூறுகிறோம். இக்காலத்தில் ஒப்பிடுதல் செல்வம் அறிவு பதவி என்கின்ற நிலையில் செல்கின்றது. இது ஓர் வருத்தமான காரியமாகின்றது. சிறிது சிறிதாக ஒப்பிடுதலை மாற்றி நம் நன்மைக்கென ஒப்பிட்டுப் பயன் பெறுவீர்களாக.
கேள்வி: கடவுள் என்று கூறினால் அவர் ஆண்பாலா? பெண்பாலா? அவரை எவ்விதம் வணங்க வேண்டும்?
ஒவ்வொரு மனிதர்களிலும் ஆண்பால் பெண்பால் உண்டு என்கின்றதை அறிதல் வேண்டும். அமைதி அளிப்பது அசையா நிலையை அளிப்பது ஆண்பால் என்றும் அசையும் சக்தியானது பெண்பால் என்றும் உணர்தல் வேண்டும். சில சமயங்களில் பெண்மையும் சீறி எழுந்து ஆண் செய்யும் தொழில்கள் செய்கின்றதை காண்கின்றோம். இவ்விதமே ஆண்களும் சில சமயங்களில் மௌனம் சாதித்து அழுது ஒதுங்கி விடுகின்றனர். இது உள்ளிருக்கும் பெண்பால் செய்யும் தொழிலாகின்றது என்பதே உண்மையான நிலை. இறைவனைப் பொறுத்த அளவில் அங்கு பால் (ஆண்பால் பெண்பால்) இல்லை. பிரம்மம் என எடுத்துக் கொண்டால் பிரம்மத்திற்குப் பால் (ஆண்பால் பெண்பால்) இல்லை. குணங்கள் இல்லை ஆசைகள் இல்லை பாசங்கள் இல்லை. சுத்தம் முழுமையான சுத்தம் சுத்த சிவம் என்கின்ற பொருளாகின்றது. இவ்விதம் இருக்கையில் நமக்கு ஏன் பெண் ரூபங்கள் ஆண் ரூபங்கள் படைத்து இருக்கின்றான்? இது இறைவனாகப் படைக்கவில்லை. மனிதன் எவ்விதத்தில் இறைவனை வணங்குகின்றானோ அந்த ரூபத்தில் இறைவன் காட்சி அளித்து அருள் பாலிக்கின்றான் என்பதே உண்மையான நிலை.
இவ்விதம் இருக்க சக்தி பெரிதா? சிவன் பெரிதா? என்கின்ற ஓர் பழமையான வினா ஒன்றும் இங்கு காண்கின்றோம். உண்மையாக கூறுகையில் இறைவன் நமக்குள் இருக்கின்றான் இது உண்மை. அவ்விறைவன் எங்கு இருக்கின்றான்? ஆண்பால் பெண்பால் உள்ள தேகத்தில் இருக்கின்றான். அவ்விதம் இருக்கும்போது தாயாகவும் தந்தையாகவும் அவ்வொரு சக்தியே இருக்கின்றது என உணர்தல் வேண்டும். வணங்குவது உங்களது விருப்பமாக இருக்கும். ஏனெனில் எந்த ரூபம் உமக்கு அதிகமாக பிடிக்கின்றதோ அந்த ரூபத்தில் வணங்கிக் கொள்வாய் அந்த ரூபத்தில் இறைவன் காட்சி அளிப்பான். இதில் எவ்வித குழப்பமும் இல்லை. இருப்பினும் இறையருளானது பால் (ஆண்பால் பெண்பால்) அற்றது என்கின்ற நிலையை இங்கு யாம் விளக்கினோம்.
கேள்வி: அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார் என்பது பழமொழி என்றால் தேக உபத்திரவம் செய்வது நலம்தானா?
இதன் உண்மையான பொருளை அறிந்து கொண்டால் எளிதாகப் புரியும். அடி உதவுவது போல் என்கின்றதை தனியாக எடுத்துக் கொண்டால் கட்டையால் அடிப்பதோ கரங்களால் அடிப்பதோ அல்ல என்றும் இங்கு யாம் பணிவுடன் எடுத்துரைக்கின்றோம். அடி உதவுவது போல் என்றால் திருவடி உதவுவது போல் என்கின்ற பொருளாகின்றது. இறைவனுடைய பாதங்களைச் சரணடைந்தால் அதுவே போதுமானது. இது பெருமளவில் உதவும் உறவினர்களை விட பெரிதாக உதவும் என்பது பொருளாகின்றது.
கேள்வி: கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் இதற்கு என்ன பொருள்?
மரத்தில் மறைந்தது மாமத யானை மரத்தை மறைத்தது மாமத யானை. உதாரணமாக கல்லில் ஒரு நாயின் சிலையை வடிவமைத்தால் குழந்தைகள் காண்பது நாயாகும். அவர்களுக்கு அந்த வினாடி கல் மறைந்து விடுகிறது. சிற்பி காண்பது கல்லாகும். சிற்பிக்கு நாய் மறைந்து விடுகிறது என்பதே பொருளாகின்றது. அவரவர் மனப்பான்மைக்கேற்பவே அனைத்தும் தோற்றமளிக்கிறது.
கேள்வி: காண்பவனும் அவனே கண்டதும் அவனே இடைவெளியும் அவனே என்ற ஓர் சொல்லுக்குப் பொருள் என்ன?
அனைத்திலும் இறைவன் இருக்கின்றான் என்கின்றதை உணர்த்திடவே இவ்வித சொல்லாகின்றது. அகம் பிரம்மாஸ்மி என்பது ஒரு பக்கமாக யாமும் பிரம்மமும் ஒன்றே என்கின்ற பொருள் அளிக்கின்றது. இது அதற்கும் மேலாக யாம் மட்டுமின்றி அனைத்தும் இறை அருளே அனைத்தும் பரப்பிரம்மமே என்கின்ற பொருளை விளக்குகின்றது. உட்பொருள் என்னவென்றால் இந்நிலையில் அனைத்து உயிர் ஜீவராசிகளின் மேலும் அன்பு செலுத்த வேண்டும். பாசம் செலுத்த வேண்டும். அவர்களையும் இறைவனாக காணுதல் வேண்டும் என்பதே பொருளாகின்றது. கலியுகத்தில் இது சிறிது கடினமானதாகும் என யாம் அறிவோம். இருப்பினும் இயன்ற அளவிற்கு இறைவனை அனைத்திலும் கண்டு தீயவையையும் தீய செயல்களையும் நல் செயல்களையும் இறைவனின் திருவிளையாட்டாகக் கண்டுகொண்டால் குழப்பம் நீங்குவது மட்டுமல்லாமல் மேன்மையும் அடையக்கூடும் என்பதே பொருள் ஆகின்றது.
தமிழகத்தில் சில சிவாலயங்களில் சண்டிகேசுவரராக யமதர்மர் உள்ளார். திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் திருவாரூர் போன்ற சிவாலயங்களில் யமதர்மர் சண்டிகேசுவரராக உள்ளார். இவருக்கு யமசண்டிகேசுவரர் என்று பெயர். அனைத்து சிவத்தலங்களிலும் ஒரு சண்டிகேஸ்வரர் மட்டுமே சிவ தியானத்தில் ஆழ்ந்திருப்பார். திருவாரூரில் மட்டும் இரண்டு சண்டிகேஸ்வர்கள் உள்ளார்கள். முதலாமவர் ஆதி சண்டிகேஸ்வரர். இவர் தியானத்தில் இருப்பார். மற்றொருவர் யம சண்டிகேஸ்வரர். திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்கள் என்பதால் யமனுக்கு இவ்வூரில் வேலை இல்லை. இவ்வூரில் பிறந்தவர்களின் காலக் கணக்கை சண்டிகேஸ்வரரே கவனிக்கிறார். ஆகவே இங்கு யமதர்மர் சண்டிகேஸ்வரர் ஆனார் என்கிறது தல புராணம்.
இறைவன் இராவணனுக்கு அருளிய வடிவம் இராவண அனுக்கிரகமூர்த்தி. பத்து தலைகள் இருபது தோள்களுடன் விரிந்த மார்பை உடையவன் இலங்கை மன்னன் இராவணன். வானில் செல்லக் கூடிய தேரினை வைத்திருந்தான் இராவணன். ஒரு முறை கயிலை மலை வழியாக இராவணன் தேரில் சென்றபோது தேர் மேற்கொண்டு நகர தடையாக மலை இருப்பது கண்டு இறைவன் வீற்றிருக்கும் மலை என்று மதிக்காமல் மலையைப் பெயர்க்க எண்ணி மலையை அசைத்தான். மலை அசைவதைக் கண்ட உமையவள் அஞ்சினாள். இதை உணர்ந்த சிவபெருமான் தன் கால் விரலை ஊன்றி அழுத்த இராவணன் உடல் அதில் சிக்குண்டு இரத்தம் பெருக்கெடுத்தது. அவன் ஆணவம் ஒழிய தன் கையிலிருந்த நரம்பை வீணையாக்கி இறைவனை நோக்கி பண் நிறைந்த பாடல்களைப் பாடினான். அவன் பக்திக்கு மகிழ்ந்த பெருமான் காட்சியளித்து தேர் நீண்ட ஆயுள் வாள் ஆகியன அளித்து அருள் புரிந்தார். தான் செல்லும் வழியில் இடையூறாக இருந்த கயிலையை ஆணவத்தால் பெயர்த்தெடுக்க முனைந்த இராவணனை அவன் செருக்கு அழியும் வண்ணம் தண்டித்து அருள் புரிந்த வடிவம் இராவண அனுக்கிரக மூர்த்தி. இடம் முதல் சிற்பம் நெல்லையப்பர் கோவில் திருநெல்வேலி. இரண்டாவது படம் எல்லோரா குகை கோயில் சிற்பம்
இதை யாம் சிறிது மறுக்க வேண்டும். நன்றாக சிந்தித்தால் மழை நமக்கு அளிப்பது சூரிய பகவான் ஆவார் என்று அறிதல் வேண்டும். பூமியில் இருக்கும் நீர் தனை ஆவியாக்கி மேல் எடுத்துச் சென்று மேகங்களாக மாற்றி சில இடங்களில் மழை பொழிய வைக்கின்றான். பின்பு இந்நாட்டில் இச்சமயத்தில் இவ்வளவிற்கு வெப்பம் இருந்த போதிலும் மழை ஏன் இல்லை? என்று ஓர் வினாவும் எழும்புகின்றது. இதற்குப் பொருள் எளிது. இம்மழை மேகங்கள் எங்கு தர்மம் நிலை நாட்டுகின்றதோ அங்கு செல்லும் என்பதே பொருள்.
இதற்குச் சிறிதாக உதாரணங்கள் யாம் அளிப்போம். ஆகம ரீதியில் சிறப்பாக இன்றும் ஆலய வழிபாடுகள் நடக்கும் தலம் பரசுராம ஷேத்திரம் என்பதும் அங்கு மழை எப்பொழுதும் பொழியும் என்கின்ற நிலையும் உண்டு. இரண்டாவதாக கர்நாடகா எனும் பிரதேசத்தில் பலப்பல ஆண்டுகளாக ஆலயங்களில் அன்னம் அளிக்கப்படுகின்றது. இது அன்னதான சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது. இதன் வழியாக அங்கும் மழை பொழிகின்றது. ஓர் குறுகிய காலத்திற்கு முன்பாகவே இந்நாட்டிலும் இத்தகைய தானங்கள் மீண்டும் துவங்கியுள்ளார்கள் என்பதும் சிறிது காலமாகவே வழிபாடுகளில் சிரத்தை காட்டுகின்றனர் என்றும் இங்கு எடுத்து உரைத்தோமே. இனி வரும் காலங்களில் இங்கும் நன்றாக மழை பொழியக் காணும் என்றென கூறுகின்றோம்.
பொதுவாக வெப்பம் அதிகம் என்று பலர் கூறுவதைக் கேட்டோம். மனிதனின் உள்ளிருக்கும் வெப்பத்தை விட இந்த வெப்பம் பெரிதா? என்று யாம் கேட்கிறோம். உள்ளிருக்கும் அனைத்தும் வெப்பம் அளிப்பதாகவே காண்கின்றோம். இவ்வெப்பத்தின் காரணமாக மனிதனின் சிந்தனை குலைந்து போவதையும் கண்டோம். இவ்வெப்பம் எதனால் உண்டாகுகின்றது என சிந்தித்தல் வேண்டும். வெளியாகக் காணும் வெப்பம் கதிரவனால் என்று உறுதியாக கூற இயலும். உள்ளில் இருக்கும் வெப்பம் எதனால் தோன்றுகிறது என வினாவக் கண்டால் இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஓர் கதிரவன் தானா? பல கதிரவர்கள் உள்ளிருந்து ஆட்டிப் படைக்கின்றனர் என்றும் இங்கு எடுத்தரைப்போம். இதில் முதன்மையான அதிக வெப்பம் அளிக்கும் காரணம் என்ன என வினாவக் கண்டால் இதற்கு மூல காரணமாக யாம் காண்பது தேவையற்ற எதிர்பார்ப்புக்கள் என்று கூறுவோம். எதிர்பார்ப்புகளின் விளைவாக பலப்பல தவறுகள் செய்கின்றனர் மானிடர் என்றும் கூறி இங்கிருக்கும் அனைவரையும் யாம் சுட்டிக் காட்டவில்லை என்றும் அறிதல் வேண்டும். இது ஓர் பொது விளக்கமாக எடுத்துக் கொள்வீர்களாக.
முதலாவதாக ஆண் குழந்தை வேண்டும் என எதிர்பார்ப்பு பெண்ணாக பிறந்தால் ஆ என்ன துக்கம்? ஏன் என்றால் அந்தப் பெண் அனைவரையும் விழுங்கி விடுவதாக எண்ணுகின்றனர். இவ்விதம் இல்லை கலியுகத்தில் பெண்ணே பெரிது என்று கூறுவோம்.
இரண்டாவதாக பெற்றக் குழந்தை இந்தக் கல்வி கற்க வேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பம். அக்குழந்தைக்கு என்ன விருப்பம் என்று எவரும் சிந்திப்பதில்லை. அந்த ஆன்மா எந்த நாட்டம் செல்கின்றது என்று எவரும் சிந்திப்பதில்லை. இது ஓர் பெரும் வெப்பமாக யாம் காண்கின்றோம்.
மூன்றாவதாக அக் குழந்தை அவ்வழியே செல்லாது வேறு வழி நாடும் போது ஆ என்ன துயரம் மீண்டும் வருத்தமே இதன் வழியாக எதிர்பார்ப்பு போய் விட்டது என் வாழ்க்கை போய் விட்டது என்று பெற்றோர் கருதுவார்கள். இதுவும் வெப்பத்தை உண்டாக்குகிறது.
நான்காவதாக இன்னாரைத்தான் நீ திருமணம் புரிதல் வேண்டும் என்று எதிர்பார்கின்றனர். எனக்கு அவரைப் பிடிக்கவில்லை என குழந்தை கூறுகிறது பிடிக்காவிட்டால் என்ன சொத்து இருக்கின்றது என்று கூறுகின்றனர். இவ்விதம் பல வகையான சச்சரவுகள் அகம் தனில் வீண் விவாதங்கள் அனைத்தும் நடந்து ஓர் உஷ்ணமே உண்டாக்குகின்றது. விளைவு பூகம்பம் அமைதி போய் விட்டது. இதற்கு ஆண்டவனை ஓர் வழி கேட்போம். என்ன கேட்கப் போகின்றீர்கள்? நாம் உனக்கு அபிஷேகம் செய்கின்றோம் எனக்கு அமைதியைக் கொடு என்று உடனடியாக இங்கு ஓர் ஒப்பந்தம் ஓர் வியாபாரம் நடைபெறுகின்றது. உனது அபிஷேகம் ஆண்டவனுக்கு எதற்கு ஐயா? என பூசாரி வினாவுவான் என எதிர்பார்கின்றோம் ஆனால் அதுவும் அவ்விதம் இல்லை. ஓர் இருநூறு ரூபாய் தட்சணையாக நீ வைத்து விடு அனைத்தும் சிறப்பாக ஆண்டவன் மன்னிப்பான் என்று கூறுகின்றனர். பணம் செலுத்தி செலுத்தி மனிதனின் வாழ்க்கையே வியாபாரமாகி விட்டது. இவ்விதம் அனைத்தும் வியாபார ரீதியில் நீ இது தருகிறாயா நான் அது தருகிறேன் என்பது சாதாரண ஓர் காரியமாகி விட்டது.
மூலவர் சிங்கீஸ்வரர். உற்சவர் பஞ்சமூர்த்திகள், நடராஜர், சிவகாமி அம்பாள், பிரதோஷநாயர், சந்திரசேகர். அம்பாள் புஷ்பகுஜாம்பாள். மூலவர் மற்றும் அம்பாள் கோபுரம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. தல விருட்சம் இலந்தை மரம். தீர்த்தம் ஸ்வேத பத்ம புஷ்கரிணி கமல தீர்த்தம். ஊர் திருவள்ளுவர் மாவட்டம் மப்பேடு. ஶ்ரீதேவி பூதேவி ஆதிகேசவபெருமாள் சன்னதி உள்ளது. சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் அவதரிதவர். கலைமகளாகிய சரஸ்வதிக்குரிய நட்சத்திரம் மூலம் நட்சத்திரம். சரஸ்வதி ஒரு மூல நட்சத்திரத்தனறு ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரைத் தண்டினால் சிங்க நாத பீஜாட்சர சக்திகளை பொறித்தாள். இதனால் இவரது பேச்சு தெளிவானதாகவும் உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும் சமயோசிதமாகவும் இருந்தது. சொல்லின் செல்வர் என்ற பட்டமும் கிடைத்தது.
சிவபெருமான் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடிய போது சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது இசை பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால் சிவனின் நடனத்தைக் காண முடியாமல் போய்விட்டது. இசை ரசனையில் சிவ நடனத்தைக் காண முடியாமல் போனதால் அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது இசை பக்தியை பாராட்டிய சிவன் பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார். நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால் இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பகுஜாம்பாள் என்றும் பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தனது மெய்யான ரூபத்தை பெற இங்கு சிவனை வழிபட்டார். இதனால் இந்த ஊர் ஆரம்ப காலத்தில் திருமால்பேடு (பேடு=பெண்) என்று அழைக்கப்பட்டத. பின்னர் மெய்ப்பேடு என்று அழைக்கப்பட்டு தற்போது மப்பேடு என அழைக்கப்படுகிறது.
கோயில் 5 ஏக்கரில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. கோயிலின் வட கிழக்கு மூலையில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீர பாலீஸ்வரர் மற்றும் வையாழி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. வீரபாண்டியன் தலை கொண்டவன் என்ற பெயர் கொண்ட சோழ மன்னனான இரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கிபி 976 இல் இக்கோயில் கட்டப்பட்டது. இவர் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் சகோதரர். பின்னர் இதே கிராமத்தில் பிறந்த அரியநாத முதலியார் கிருஷ்ண தேவராயர் மதுரையை ஆண்ட காலத்தில் தளவாயாக இருந்ததால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி கிபி 1501 இல் கோவில் ராஜ கோபுரம் மதில் சுவர் மற்றும் 16 கால் மண்டபத்தை கட்டி வைத்தார். மேலும் வடகிழக்கு மூலையில் உள்ள பாலீஸ்வர மரகத பச்சைக் கல்லால் ஆன சன்னதியை புதுப்பித்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு குகஸ்ரீ சுந்தரேச சுவாமிகள்(ஆத்தூர்-சேலம்) முன்னிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் சத் சங்கம் பெயரில்,நால்வர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த ஆலயத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வின் போது ஆலயத்தின் பிரதான கோபுர உச்சியில் கிபி 1947 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையில் இரண்டாம் ஆதித்திய கரிகால சோழனால் கட்டப்பட்டதையும் உறுதி செய்கின்றது. கோயிலில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சம்ஸ்கிருத மொழி மற்றும் நந்திநாகரி எழுத்து வடிவில் தகவல்கள் எழுதப்பட்டிருந்தது. செப்பேடுகளை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறை சிங்கீஸ்வரர் கோயிலில் கண்டெ டுக்கப்பட்டுள்ள செப்பேடுகள் 1513 ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த கிருஷ்ண தேவராய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. பல பிராமணர்களுக்கு அரசரால் கிருஷ்ணராயபுரா என மறு பெயரிடப்பட்ட வாசல பட்டகா கிராமத்தை பரிசாக அளித்துள்ளதை இந்த செப்பெடுகள் குறிப்பிடுகின்றன.