இந்த பாம்பு 1800 ஆண்டுகள் பழமையான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய தூணில் செதுக்கப்பட்டுள்ளது. முப்பரிமாண முறையில் இச்சிலை செதுக்கப்பட்டுள்ளது. சிலையின் மத்தியில் மிக சிறு உருவத்தில் பால கிருஷ்ணனை படுத்திருக்கிறார். இடம்: ஜம்புகேஸ்வரர் கோவில். திருவானைக்காவல் திருச்சி.
வள்ளி மலைக் கோவிலில் சுப்ரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்த ஜாம பூஜையில் தேனும் தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. அடிவாரம் மற்றும் மலைக் கோவிலில் குமரி வள்ளிக்கு தனி சன்னதி இருக்கிறது. இவள் கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில் கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன் வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது. வள்ளி பாறைச் சிற்பமாக இங்கே அருள் பாலிக்கிறாள். இடம்: வேலூரில் இருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள வள்ளிமலை.
முதல் இரண்டும் புவனேஸ்வரத்தில் வழிபடும் கோவில்களில் உள்ளவை. அடுத்த இரண்டும் ஒடிசா அருங்காட்சியகங்களில் உள்ளவை. காலகட்டம் ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும். கையில் வேல், கழுத்தில் புலிநகம் கோர்த்த சங்கிலி. வாகனமான மயிலின் அழகு கூடிக்கொண்டே செல்கிறது. இடக்கையிலோ வலக்கையிலோ வேல். தலையின் ஜடாமுடி அலங்காரம் மிகத் தனித்தன்மை கொண்டதாக உள்ளது. சன்னவீரம் இல்லை. மூன்றில் பூணூல் உள்ளது. ஒன்றில் இல்லை.
தசமஹாவித்யா என்ற 10 பெரும் தேவியரில் திரிபு ரபைரவி தேவியும் ஒரு சக்தி. ஆதி சக்தியான காளியே சம்ஹார காலத்தில் பைரவி உருவை எடுத்து அருள்கிறாள். பைரவ சக்திக்கெல்லாம் மூலமானவள் திரிபுர பைரவி. சிவப்பரம்பொருள் நிகழ்த்திய லீலையில் சிவபெருமானிடம் இருந்து பல பைரவர்கள் தோன்றினர். அவர்கள் அனைவரும் சிவபெருமானைப் போன்றே உருவம் பெற்றிருந்தனர்.
அந்தகனாக உள்ள அசுரனை சிவபெருமானார் ஆட்கொண்ட பிறகு மலைகளில் உறைந்து சிவார்ச்சனை விதிகளையும் தந்திரங்களையும் உலகுக்கு அளித்து அருளும்படி பைரவர்களைப் பணித்தார் சிவனார். அவர்கள் வேண்டிய சக்தியைப் பெற்றிட எல்லாம் வல்ல பராசக்தியை பைரவி உருவில் தியானித்து ஆராதனை செய்யுமாறு கட்டளையிட்டார். அதன்படி அனைத்து பைரவ சக்திகளும் உண்டாயினர்ர்ந்த சக்திகளுக்கெல்லாம் மூலமானவளே திரிபுர பைரவி எனப் போற்றப்படுகிறாள். மும்மூர்த்திகளை சிருஷ்டி செய்வதாலும் முன்னரே இருப்பதாலும் மூன்று வேதங்களின் ஸ்வரூபமாக விளங்குவதாலும் உலகம் அழிந்த பின்னும் முன்போலவே உலகை பூர்த்தி செய்வதாலும் சரஸ்வதி லட்சுமி காளி ஆகிய முப்பெரும் தேவியரும் இவளின் அங்கமாக விளங்குவதாலும் ஸ்தூலசூட்சும காரண சரீரங்களில் உள்ளவள் என்பதாலும் இந்த சக்தியை திரிபுரை அல்லது திரிபுர பைரவி என்று போற்றுகின்றனர். இடம்: கைலாசநாதர் கோவில் காஞ்சிபுரம்.
பிணிமுகம் என்ற யானையின் மீதேறி இருக்கும் குமரனை அர்ஜுன ரதத்தில் காண முடியும். இது தேவ சேனாபதி வடிவமாகும். தாரகன் சூரபத்மன் ஆகியோருடன் சண்டை செய்யத் தயாராக இருக்கும் நிலையாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
விஷ்ணு ஐந்து தலை அனந்தசேஷ நாகத்தின் மேல் மகாராஜ லீலாசனத்தில் அமர்ந்துள்ளார். விஷ்ணுவின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படமெடுத்துக் குடையமைத்துள்ளது. விஷ்ணு நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மேல் இடக்கை சக்கரத்தையும் மேல் வலக்கை சங்கையும் ஏந்தியுள்ளன. கீழ் இடக்கை இனம் காண முடியாத ஒரு பொருளைப் பற்றியுள்ளது. கீழ் வலக்கை தொடையில் வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் இருபுறமும் இரண்டு நாகினிகள் ஒயிலாக நின்றவாறு காட்சி தருகிறார்கள். சிற்பத்தின் இடது மூலையில் கருடன் நாகத்தின் மீது சாய்ந்தவாறு காட்சி தருகிறார். பூமாதேவி விஷ்ணுவின் இடது புறத்தில் வலது காலை மடக்கி அமர்ந்த நிலையில் நாகத்தின் மீது சாய்ந்தவாறு காட்சி தருகிறார். இடம்: பாதாமி குடைவரை கோவில். குகை எண் 3.
மாகாபலிபுரத்தில் பல இடங்களில் மிக அழகிய சோமாஸ்கந்தச் சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன. சோமாஸ்கந்தர் எனும் வடிவம் பல்லவர்களுக்கே பிரத்யேகமானது. பின்னர் சோழர்களால் உலோகத்தில் முன்னெடுக்கப்பட்டது. சோமாஸ்கந்தர் என்றால் உமை ஸ்கந்தன் ஆகியோருடன் கூடிய சிவன். அருகருகே சிவனும் உமையும் அமர்ந்திருக்க இடையில் குழந்தை வடிவக் குமரன் விளையாடுவதுபோல் இந்தச் சிற்பங்கள் இருக்கும். முருகன் ஏழே நாள்களில் வளர்ந்தவன். அவன் குழந்தையாக இருந்தது மூன்று நாள் மட்டுமே. நான்காவது நாள் இளைஞனாகி விட்டான். இந்த சிற்பத்தில் சோமாஸ்கந்த வடிவில் இருப்பவர் மூன்று நாட்களே ஆன குழந்தை முருகப்பெருமான்.
சுருட்டப்பள்ளியில் உள்ள தட்சிணாமூர்த்தி தன் மனைவியுடன் அருள் காட்சியளிக்கிறார். அம்பாள் கௌரி வாமபாகத்தில் இருந்து ஆலிங்கனம் செய்து கொள்ளும் காட்சியே தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி ஆகும்.
மதிநுதல் மங்கையோடு வடவாலிந்து மறையோதும் எங்கள் பரமன் என்று திருஞானசம்பந்தர் தம்பதி சமோதரர்களாக விளங்கும் தம்பதி சமேத தட்சிணாமூர்த்தியை சிறப்பிக்கிறார். சாந்த சொரூபமாக தனது இடது புறத்தில் தனது தேவியுடன் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியன் திருக்கோலம் உலகின் வேறெங்கும் காண முடியாது. தட்சிணாமூர்த்தி தனது இடது காலை மடித்து வலக்காலை முயலகன் முதுகின் மீது தொங்கவிட்டு பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். தனது முன்கை சின்முத்திரை காட்ட இடது முன்கை மடித்த இடது காலின்மீது உள்ளது. பின்னிரு கரங்களில் மானும் மழுவும் உள்ளன. சனகாதி முனிவர்கள் காலடியில் அமர்ந்துள்ளனர். அவரது இடது தோளின் பின்புறம் பரிவோடு தோளைப் பற்றியவாறும் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பது போலவும் அமைந்துள்ள பார்வதி தேவியின் அழகிய திருவடிவம். இடம்: பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் ஊத்துக்கோட்டை சுருட்டபள்ளி ஆந்திர மாநிலம்.
பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத பிரமனைச் சிறையிலிட்டு பிரமனின் படைப்புத் தொழிலைத் தான் கையிலெடுத்ததைக் காண்பிப்பதுதான் முருகனின் பிரம்ம சாஸ்தா முருகர். திருச்சி மலைக்கோட்டை கீழ்க்குகையின் காலமும் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னானதே. இங்கே முருகனின் முகம் வெகுவாகச் சிதைந்துள்ளது. மார்பில் சன்ன வீரம் அணியவில்லை, ஆனால் பூணூலை நிவீதமாக வலது கைக்கு மேல் வருமாறு அணிந்துள்ளார். தலையில் வைத்துள்ள கிரீடம் முருகனைக் குறிப்பால் உணர்த்தி விடுகிறது. இடம் திருச்சி மலைக்கோட்டை. இன்னோரு முருகரின் சிற்பம் மகாபலிபுரம் திரிமூர்த்தி மண்டபத்தில் உள்ளது.
ஆடை ஆபரணங்களோடு கால் மூட்டு கூட கல்லில் தெரிய காலை சிறிது மடக்கி இடையை கொஞ்சம் வளைத்து ஒயிலாக நிற்கும் நாராயணி என்றும் அழைக்கப்படும் விஷ்ணு துர்க்கை தேவியின் பல வடிவங்களில் ஒன்று. இடம்: கங்காஜடாதீஸ்வரர் கோவில் கோவிந்தபுத்தூர் அரியலூர் மாவட்டம்.