மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -11

கிருஷ்ணர் மேலும் பேசினார். குருவம்சத்தை சேர்ந்த துரியோதனும் அவனுடைய கூட்டாளிகளும் பாவம் நிறைந்த அதர்மத்தை செய்து வந்திருக்கின்றார்கள். அதற்கு அரசனான தங்களும் ஒருவிதத்தில் உடந்தையாக இருந்திருக்கின்றீர்கள். அத்தகைய ஆடாத பாவச்செயல்களை மன்னிக்கவும் மறக்கவும் யுதிஷ்டிரன் இப்போது ஆயத்தமாய் இருக்கின்றான். இப்பொழுதும் தங்களுக்கு அடிபணிந்து நடந்து கொள்ள அவன் ஆயத்தமாய் இருக்கின்றான். பகடைவிளையாட்டின் முடிவில் அமைத்து வைத்த ஒப்பந்தப்படி அவர்கள் தானாக சம்பாதித்துக் கொண்ட ராஜ்யத்தை அவர்களுக்கு திருப்பித் தந்துவிட வேண்டும் என்பது ஒன்றே அவர்களுடைய வேண்டுகோள் ஆகும் என்று கிருஷ்ணன் சபையில் தெரிவித்தார்.

திருதராஷ்டிரன் பேசினார். இது ஒரு ஓயாத குடும்பத்தகராறு. ஆயினும் இது விரைவில் அமைதியாகவும் பெருந்தன்மையான முடிவுக்கு வர வேண்டும் என்பதே என்னுடைய ஆவல். ஆனால் என் மகன் துரியோதனன் என் சொல்படி கேட்க மறுக்கிறான். அவன் கர்ணன் சகுனியுடம் சேர்ந்து கொண்டு தன் போக்கில் விபரீதமாக நடந்து கொள்கின்றான். கிருஷ்ணா தயவு செய்து நீ தான் அவனை நல்வழியில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கிருஷ்ணன் துரியோதனிடம் ராஜ குடும்பத்தில் பிறந்தவன் அதற்கேற்றவாறு பெருந்தன்மையோடு நடந்து கொள்வது சரியானது. கீழோன் ஒருவன் கடைபிடிக்கின்றன சிறுநெறிகள் உனக்கு ஒரு பொழுதும் பொருந்தாது. நீசனாக இருப்பவன் பேராசை பிடித்தவனாகின்றான். மற்றும் தயாள குணம் படைத்திருப்பது மன்னனின் மகனாக பிறந்து இருப்பவனுடைய பாங்கு ஆகின்றது. நீ முற்றிலும் மன்னனுடைய மாட்சிமை படைத்தவனாக இருப்பாயாக. பெற்றோர் சொல்லை கேட்பதனால் அறநெறியில் நிலைத்திருப்பவன் ஆகின்றாய். சகோதரர்களோடு நல்லிணக்கம் பூணுவதன் வாயிலாக உன்னுடைய வல்லமையும் மகிமையும் நீ வளர்க்கின்றாய். இதற்கு நேர்மாறாக யுத்தத்தில் இறங்குவாய் என்றால் அதன் விளைவாக குரு வம்சம் முழுவதும் அழிந்து பட்டுப் போகும். வேறு சில பல அரச குடும்பங்களும் அழிந்து போகும் என்று கிருஷ்ணன் துரியோதனிடம் கூறினார்.

கிருஷ்ணன் கொடுத்த அரிதிலும் அரிதான புத்திமதியை பீஷ்மரும் துரோணரும் முற்றிலும் ஆமோதித்தார்கள். தயாளகுணம் படைத்தவனாக துரியோதனன் இருக்கவேண்டுமென்று அவனிடத்தில் அன்போடு அவர்கள் எடுத்துரைத்தார்கள். விபரீதத்தை தவிர்ப்பதற்கு பாண்டவர்களோடு சமாதானம் பண்ணிக் கொள்வது ஒன்றே சரியான உபாயம் என்று எடுத்துரைத்தார்கள். அடுத்தபடியாக இதே விதத்தில் விதுரரும் துரியோதனிடம் முறையாக வேண்டிக்கொண்டார். துரியோதனனுடைய தந்தை திருதராஷ்டிரரும் தாய் காந்தாரியும் பிடிவாதம் பிடித்தவனாக இருக்க வேண்டாம் என்று அவனிடம் கேட்டுக்கொண்டார்கள்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -10

கிருஷ்ணர் கூறியதை கேட்ட துரியோதனன் தன் முயற்சியை நிறுத்திவிடவில்லை. குருவம்சம் முழுவதுக்கும் நீ நடுநிலை வகித்துள்ளாய். அப்படி இருக்க குரு வம்சத்தின் ஒரு பகுதியை வேற்றார் ஆகவும் மற்றொரு பகுதியை உற்றாராகவும் பாகு படுத்திப்பார்ப்பது ஏன் என்று கிருஷ்ணனிடம் துரியோதனன் கேட்டான். அதற்கு கிருஷ்ணன் பாண்டவ சகோதரர்கள் ஒருபொழுதும் தர்மத்திலிருந்து பிசகியவர்கள் அல்லர். அவர்கள் எப்பொழுதும் நேர்மையே வடிவெடுத்து இருக்கின்றார்கள். நீயோ அவர்களுக்கு ஜென்மசத்ரு அவர்களை ஒழித்துக்தள்ள தீர்மானித்திருக்கிறார். நல்லவர்களுக்கு பகைவன் எனக்கும் பகைவன் ஆகிறான். அவர்களை உனக்குச் சொந்தம் என்று நீ அங்கீகரிக்கும் வரையில் நான் உன்னிடத்தில் இருந்து விலகியிருக்க கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறிவிட்டு கிருஷ்ணன் விதுரருடைய வீட்டுக்கு திரும்பிச் சென்றான்.

விதுரரும் கிருஷ்ணரும் நிலைமையை ஆலோசனை செய்து கொண்டார்கள். துரியோதனன் செருக்கே வடிவெடுத்து இருக்கின்றான். பிடிவாதக்காரனாக இருக்கின்றான். அவனுடைய சபா மண்டபத்திற்கு போவது சரியானதாக இருக்காது என்று விதுரர் கிருஷ்ணரிடம் தெரிவித்தார். ஆனால் கிருஷ்ணரோ கடைசி நிமிடம் வரையில் சமாதானத்திற்கு முயற்சி பண்ண வேண்டும் என்றும் அதன் விளைவு எதுவானாலும் ஆகட்டும் என்று கூறினார். அடுத்தநாள் துரியோதனனும் சகுனியும் திருதராஷ்டிரரின் பிரதிநிதிகளாக கிருஷ்ணன் இருக்குமிடம் வந்து அவனை சபா மண்டபத்திற்கு அழைத்தார்கள். கிருஷ்ணனும் அவ்வாறே வருவதற்கு சம்மதித்தார். விதுரரும் அவரைப் பின்பற்றிச் சென்றார். அஸ்தினாபுர சபா மண்டபத்தில் கிருஷ்ணன் தக்க மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். முதியோர்கள் அனைவரும் அவர்களுடைய பக்கத்தில் சேர்ந்திருந்த அரசர்கள் எல்லோரும் எழுந்து நின்று கிருஷ்ணருக்கு வணக்கம் செலுத்தினார்கள். ஆரம்பத்தில் நடைபெற வேண்டிய வரவேற்பு முறைமைகள் நிறைவேற்றப்பட்டன.

கிருஷ்ணன் எழுந்து தன் கருத்தை சபையோருக்கு தெரிவித்தார். குருவம்சத்துக்குரிய அரசாங்கம் பலவீணமடைந்த பொழுது தங்களுடைய தம்பியாகிய பாண்டு குருவம்சத்தை பழைய பெருமைக்கு கொண்டு வந்து நிலைநிறுத்தினார். வனத்தில் பாண்டு மன்னன் மடிந்து போன பொழுது அவருடைய பிள்ளைகள் அனாதைகள் போன்று தங்களிடம் வந்து சேர்ந்தார்கள். பெரியப்பாவாகிய உங்களை தங்களுடைய தந்தைக்கு நிகராக கருதி உங்களை அவர்கள் சார்ந்து இருந்தார்கள். ஆரம்பத்தில் தாங்கள் யுதிஷ்டிரனை யுவராஜனாக நியமித்தது முற்றிலும் பொருத்தமாக இருந்தது. அவன் தந்தைக்கு அடிபணிந்து நடப்பது போன்றே தங்களையும் அடிபணிந்து வந்திருக்கின்றான். ஆனால் தாங்கள் அவனுடைய அடக்க ஒடுக்கத்தை தேவைக்கேற்றவாறு பயன்படுத்திக் கொண்டீர்கள். தங்களுடைய தம்பியின் மக்களை எத்தனை எத்தனையோ வகையாக அல்லல்களுக்கு ஆளாக்கினீர்கள். மடிந்து போவதிலிருந்து அவர்கள் தப்பித்துக் கொண்டது தெய்வாதீனமானதாகும். தங்களுடைய மைந்தன் துரியோதனன் வேண்டுமென்றே அவர்களை பலபல ஆபத்துக்களுக்கு ஆளாக்கினான். அவர்கள் தப்பி கொண்டதும் தெய்வாதீனமானதாகும்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -9

பாண்டவர்களும் கிருஷ்ணனும் பேசுவதைக்கேட்ட திரௌபதி கிருஷ்ணனை தனியாக சந்தித்து தேம்பித் தேம்பி அழுதாள். அஸ்தினாபுரத்தில் சபை நடுவே தான் பட்ட அவமானத்தையும் அல்லல்களையும் கிருஷ்ணனுக்கு அவள் ஞாபகம் மூட்டினாள். பரிதாபகரமான காட்சியை பார்த்த கிருஷ்ணன் திரௌபதியிடம் சமாதானத்தை நாடி நான் அஸ்தினாபுரம் போகிறேன். ஆனால் துரியோதனன் அதற்கு சம்மதம் கொடுக்க மாட்டான். போராட்டத்தில் தான் அவன் நம்மை இணைத்து வைக்கப்போகிறான். அதன் விளைவாக உனக்கு நிகழ்ந்த மானபங்கத்துக்கு பொருத்தமான ஈடு வந்து சேரும் என்று கூறினான். கிருஷ்ணன் பேச்சைக் கேட்ட திரௌபதி மன ஆறுதல் அடைந்தாள்.

பாண்டவர்களிடம் விடைபெற்று சாத்யகியை தன்னோடு அழைத்துக்கொண்டு கிருஷ்ணன் அஸ்தினாபுரம் புறப்பட்டுப் போனான். கிருஷ்ணருடைய வருகையைப் பற்றி கேள்விப்பட்ட திருதராஷ்டிர மன்னன் அவனுக்கேற்ற மேன்மைமிக்க வரவேற்பை அளிக்கவேண்டும் என்று ஆணையிட்டான். கிருஷ்ணருடைய மேன்மையை பாராட்டும் விதத்தில் துரியோதனன் ஆங்காங்கு ராஜரீதியான கொட்டைகளையும் வரவேற்பு பந்தல்களையும் அமைத்து வைத்தான். ஆனால் கிருஷ்ணனோ எந்த ஆடம்பர ஏற்பாடுகளையும் கவனிக்காமல் தன் போக்கில் பயணம் சென்றார். அத்தகைய ஆடம்பரங்களுக்கு கிருஷ்ணன் கட்டுப்பட மாட்டான் என்றும் பாண்டவர்களுக்கு கௌரவர்கள் செய்துள்ள பாதங்களுக்கு நிவர்த்தி தேடுவதே கிருஷ்ணனுடைய வருகையின் நோக்கமாக இருக்கிறது. அதைப் புறக்கணித்து விட்டு பண்ணுகின்ற எந்த ஒரு செயலும் கிருஷ்ணனை திருப்திப்படுத்தாது என்று துரியோதனனுக்கு விதுரன் எடுத்து விளக்கினார்.

கிருஷ்ணனை பிடித்து கைதியாக அடைத்து வைத்து விடலாம் என்று துரியோதனன் சதி ஆலோசனை பண்ணினான். ஆனால் முதியவர்கள் அதற்கு சம்மதம் கொடுக்கவில்லை. சமாதானம் பேச வருகின்றவரை இவ்வாறு கையாளுதல் முற்றிலும் பொருத்தமற்றது என்று துரியோதனனின் செயலுக்கு தடை போட்டார்கள். கிருஷ்ணன் அஸ்தினாபுரத்தை வந்தடைந்த பொழுது பொது மக்கள் பலமான வரவேற்பு அளித்தனர். வந்தவன் முதலில் திருதராஷ்டிர மன்னனுடைய மாளிகைக்குப் போய் அவனுக்கு வணக்கம் செலுத்தினர். அடுத்தபடியாக விதுரருடைய வீட்டிற்குச் சென்றான் அங்கு வசித்து வந்த குந்திதேவி கிருஷ்ணரை பார்த்ததும் தாரைதாரையாக கண்ணீர் சிந்தி வரவேற்றாள். வனவாசத்தில் தன் புதல்வர்கள் அனுபவித்த கஷ்ட திசையை அவள் கண்ணீர் சிந்துவதற்கு காரணமாக இருந்தது. அவளுடைய புதல்வர்களுக்கு அதிவிரைவில் நல்ல காலம் வரும் என்றும் தான் எப்போதும் துணை இருப்பதாகவும் கிருஷ்ணன் அவளுக்கு ஆறுதல் அளித்து அங்கிருந்து கிளம்பினான்..

கிருஷ்ணர் துரியோதனன் இருப்பிடத்திற்கு சென்று நலம் விசாரித்தான். துரியோதனன் கிருஷ்ணனை தன் மாளிகைக்கு விருந்துக்கு வரவேண்டும் என்று அழைத்தான். ஆனால் கிருஷ்ணனோ அதற்கு சம்மதம் கொடுக்கவில்லை. தூதனாக வந்த ஒருவன் வந்த காரியம் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு முன்பு எதிரிகளிடமிருந்து உணவு ஏற்றுக் கொள்ளல் ஆகாது என்று தெரிவித்தார்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -8

கிருஷ்ணனுடைய உதவியை நாடி அவனை முதலில் சந்தித்தவன் நான். கிருஷ்ணனுடைய உதவியை பெற்றுக்கொள்ளும் உரிமை முதலில் எனக்கே இருந்தது. அப்படி இருக்கும்போது அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் ஒரு சலுகை காட்டினான். கிருஷ்ணன் ஆயுதம் இல்லாத தன்னை ஒற்றை ஆளாக ஒருபக்கமும் தளவாடங்கள் நிரம்பப்பெற்றிருந்த சேனைகள் மற்றொரு பக்கமும் பிரித்து வைத்து பங்கு போட்டான். இரண்டில் ஒன்று விருப்பப்பட்ட பாகத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று அனுதாபம் காட்டினான். அசடு ஆகிய அவனோ வல்லமை வாய்ந்த சேனையை புறக்கணித்துவிட்டு ஆயுதம் எடுத்து போர் புரிவது இல்லை என்று கூறிய கிருஷ்ணனை தன் பக்கம் சேர்த்துக் கொண்டான். யுத்தத்துக்கு தேவையாக இருக்கின்ற கிருஷ்ணனுடைய சேனையை நான் பெற்றுள்ளேன். இப்பொழுது என் வசம் 11 அக்ஷௌஹினி படைகள் இருக்கின்றன. ஆனால் பாண்டவர்கள் வசம் 6 அக்ஷௌஹினி படைகள் மட்டுமே உள்ளது. ஆகையால் அவர்கள் தோற்றுப் போவார்கள். தோற்று விடுவோம் என்று பாண்டவர்கள் அஞ்சுகிறார்கள் ஆகையால் தான் அவர்களுடைய வாழ்க்கை ஆதாரத்திற்கு வெறும் ஐந்து கிராமங்கள் கிடைத்தால் போதும் என்று அவர்கள் கெஞ்சுகின்றார்கள் என்று துரியோதனன் பேசினான்

திருதராஷ்டிரன் பேசினார். துரியோதனா நீ தாராள மனம் படைத்தவனாக இரு. அவர்களுடைய ராஜ்யம் முழுவதையும் அவர்களிடம் திருப்பி ஒப்படைத்து விடு. நீ இப்படி நடந்து கொள்வது உன்னுடைய பரந்த மனப்பான்மையை வெளிக்காட்டுவதாக இருக்கும். ஒருவரை ஒருவர் நேசிக்கின்ற சகோதரர்களாக நீங்கள் வாழ்ந்திருங்கள். நீங்கள் இவ்வாறு வாழ்வது எனக்கு பெருமையை உண்டு பண்ணும் என்றார். அதற்கு துரியோதனன் தந்தையே அவர்கள் கேட்பது ஐந்து கிராமங்கள். நான் ஐந்து ஊசி முனை அளவு நிலம் கூட அவர்களுக்கு தரப்போவதில்லை. அவர்கள் மீண்டும் வனதிற்கு சென்று தொலைந்து போகட்டும் என்று கூறிவிட்டு அக்கணமே சபையில் இருந்து வெளியேறினான்.

சஞ்சயன் திரும்பிச்சென்ற பிறகு பாண்டவர்கள் இடையே மீண்டும் ஆலோசனை நடந்தது. கௌரவர்கள் அபகரித்துக் கொண்ட ராஜ்யத்தின் எந்த ஒரு பகுதியையும் அவர்கள் திருப்பித் தரப் போவதில்லை என்று யுதிஷ்டிரன் தெரிவித்து விட்டு இந்த நெருக்கடியான நேரத்தில் கிருஷ்ணனுடைய அபிப்பிராயத்தை அவன் நாடி நின்றான். இவ்வளவு நாள் போர்புரிய பொங்கிக்கொண்டிருந்த பீமனுக்கு ஏதேனும் ஒரு போக்கில் சமாதானம் செய்து கொள்வதே நலம் என்னும் சாந்த மனப்பான்மை இப்பொழுது வடிவெடுத்தது. போர் நிகழ்ந்தால் என்னென்ன கேடுகள் எப்படியெல்லாம் அமையக் கூடும் என்பதை அர்ஜுனன் யோசித்தான். சமாதானத்தை நாடி அஸ்தினாபுரத்திற்கு செல்லப்போவதாக கிருஷ்ணன் தெரிவித்தான். அப்படி போவது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று யுதிஷ்டிரன் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தான். ஆனால் கிருஷ்ணனோ தன்னை யாரும் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று உறுதி கூறினான்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -7

பீஷ்மர் பேசினார். உங்களை நான் தப்பான வழியில் நடத்தலாகாது. நீங்கள் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே இருவரையில் கண்டிருக்கின்றீர்கள். அதுவும் பகடை விளையாட்டில். பாண்டவர்களை வஞ்சித்து பெற்றது மட்டுமே உங்களுடைய வெற்றி. அது ஒன்றே தவிர வேறு எந்த போராட்டத்திலும் நீங்கள் பாண்டவர்களை தோற்கடித்தது கிடையாது. வனத்திலே கந்தர்வர்கள் உங்கள் அனைவரையும் கைதிகளாக பிடித்து கூட்டிக்கொண்டு போனபொழுது வீராதி வீரனாகிய அர்ஜுனன் ஒருவன் தான் உங்கள் உயிரைக் காப்பாற்றினான். அவ்வேளையில் கர்ணன் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ஓட்டம் பிடித்து தப்பித்துக் கொண்டான். அது தான் உங்களுடைய வீரியம். சில நாட்களுக்கு முன்பு விராட நாட்டின் மீது படையெடுத்துச் சென்ற பொழுது 6 அதிரர்களாகிய நாம் அனைவரையும் அர்ஜுனன் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு தோற்கடித்தான். அப்படி இருந்தும் உங்களுடைய வீரத்தைப் பற்றி நீங்களே பெருமை பேசிக்கொள்கிறீர்கள். வெற்றி உங்களுடையது என்ற இறுமாப்பில் இருக்கின்றீர்கள் என்று பீஷ்மர் பேசினார்.

கர்ணன் பேசினான். தோல்வி என்பது வரப்போகும் வெற்றிக்கான வழி என்பதை இந்த முதியவர் அறிந்து கொள்ளவில்லை வெவ்வேறு விதமான போர்த் திட்டங்களை தோல்விகள் என்று இவர் பொருள் சேராத வண்ணம் வியாக்கியானம் பண்ணுகிறார். தலைவிதி என்னும் கொள்கையை இவர் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் இவரோடு சேர்ந்திருந்து நான் போர் புரிய போவதில்லை. வீராதி வீரன் என்று இவர் கூறுகின்ற அர்ஜுனனால் இவர் தோல்வியடையும் வரை நான் ஆயுதம் தொடமாட்டேன். என்றைக்கு நான் ஆயுதத்தை எடுக்கிறானோ அன்றைக்கு அர்ஜுனன் அழிந்து போவது உறுதி. முதுமையால் ஆட்கொள்ளப்பட்டு வெற்றியில் நம்பிக்கை இழந்து இருக்கும் இந்த முதியவரின் கருத்து பிரகாரம் அர்ஜுனனை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று கூறிவிட்டு பீஷ்மரை எதிர்க்கும் பாங்கில் கர்ணன் சபையை விட்டு வெளியேறினான்.

திருதராஷ்டிரன் பேசினார். நம் குடும்பத் தலைவராகிய பீஷ்மர் கூறுவது முற்றிலும் மெய். போர் வேண்டாம் சமாதானத்தில் ஒன்றுபடுவோம் என்று பெரியவர்கள் அனைவரும் ஏகோபித்து கூறுகின்றனர். அதுதான் சரியான வழி என்று நானும் நம்புகின்றேன். ஆனால் முரட்டு பிடிவாதக்காரர்களாகிய இளைஞர்கள் தம் போக்கிலேயே சென்று கொண்டிருக்கின்றார்கள். நம்முடைய அறிவுரையை அவர்கள் பொருட்படுத்துவது இல்லை என்று திருதராஷ்டிரர் கூறினார்.

துரியோதனன் பேசினான். தந்தையே தயவு செய்து நான் சொல்வதை சிறிது கேளுங்கள். தாங்கள் நினைத்தபடி நான் அவசரக்காரன் இல்லை. இந்த பாண்டவர்களிடத்தில் சிறிதளவாவது க்ஷத்திரிய வீரீயம் இருந்திருந்தால் பகடை விளையாட்டில் நாங்கள் அவர்களை தோற்கடித்து அவமானப்படுத்திய பொழுது எங்கள் மீது அவர்கள் கோபப்பட்டு சீறி எழிந்து சண்டை போட்டிருக்க இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -6

சஞ்சயன் கூறியவற்றை கேட்ட திருதராஷ்டிரனின் மனசாட்சி அவனை துன்புறுத்தியது. இரவு முழுவதும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. விதுரனை வரவழைத்து தனக்கு அமைதி இல்லை என்றும் தனக்கு அமைதி வேண்டும் என்றும் ஏன் இப்படி நடக்கிறது உன்னுடைய புத்திமதி என்ன என்று கேட்டான். அறிஞனாகிய விதுரர் அன்று இரவு முழுவதும் திருதராஷ்டிரனிடம் நீதி நெறிகளை விளக்கினார். தர்மநெறி தவறுபவர்களுக்கு அமைதி கிடைக்காது. கபடமாக பாண்டவர்கள் கொள்ளையடிக்கப்பட்டார்கள். அப்படி இருந்தும் அவர்கள் சௌபாக்கியமாகவே வாழ்ந்து வருகின்றார்கள். தர்மத்திலிருந்து அவர்கள் பிசகாது இருந்ததே அதற்கு காரணமாக இருந்தது. ஆனால் கௌரவர்களுக்கு சொத்து ஏராளமாக இருந்தும் மனஅமைதி இல்லை. அதற்கு அவர்களது அக்கிரமமே காரணமாய் இருக்கிறது என்று இரவு முழுவதும் திருதராஷ்டிரனுக்கு ஏராளமாக தர்மத்தை போதித்து விதுரர் விடைபெற்றார்.

விதுரர் கூறிய அனைத்தையும் கேட்ட திருதராஷ்டிரன் கவலையில் ஆழ்ந்தான். மைந்தான் மகாபாவியாகி விட்டான். தன்னுடைய போக்கை நல்வழிக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திருதராஷ்டிரன் இடையிடையே உணர்ந்தான். ஆனால் அவன் உள்ளத்தில் ஊறிக்கிடந்த சிற்றியல்பு அதற்கு இடம் தரவில்லை. மற்றொரு பக்கம் புத்திர வாஞ்சையும் பொல்லாங்கிலேயே அவனை எடுத்துச் சென்றது.

காலையில் சஞ்சயன் கௌரவர்களுடைய சபா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான். பாண்டவர்கள் எப்படி சமாதானம் பண்ணிக் கொள்வதற்கு ஆயத்தமாய் இருக்கின்றார்களோ அதே போல் அவர்கள் போர் செய்வதற்கும் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று சஞ்சயன் கூறியது கௌரவர்களை விவாதத்தில் இழுத்துச் சென்றது. அப்போது அவர்களுக்கு இடையில் கருத்து வேற்றுமை வளர்ந்தது.

பீஷ்மர் திருதராஷ்டிரனிடம் கூறினார். அர்ஜுனனும் கிருஷ்ணரும் பழங்காலத்து நரன் நாராயணாகிய ரிஷிகள். அவர்கள் இப்பொழுது மனித ரூபத்தில் தோன்றி வந்திருக்கின்றனர். மண்ணுலகத்தில் உள்ள அக்கிரமங்களை ஒழிப்பதற்கும் நேர்மையை நிலைநாட்டுவதற்கும் அவர்கள் வந்திருக்கிறார்கள். போர் புரிய அவர்கள் தீர்மானித்தால் அவருடைய எதிரிகள் அனைவரும் துடைத்துத் தள்ளப்படுவார்கள். ஆகையினால் அவர்களோடு நாம் சமாதானம் பண்ணிக் கொள்வது சரியானதாக இருக்கும் என்று பீஷ்மர் கூறினார். அதைக் கேட்ட கர்ணன் இந்த முதியவர் மிகவும் படுபாவி. இவருடைய உடல் நம்மோடும் அவருடைய உள்ளம் நம்முடைய எதிரிகளிடமும் இருக்கிறது. நம்முடைய எதிரிகளை போற்றுவதும் நம்மை தூற்றுவதும் இவருடைய தொழிலாகும் என்றான் கர்ணன்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -5

சஞ்சயன் சில நாட்களுக்குப் பிறகு கௌரவர்களுடைய தூதுவனாக உபப்பிளவிய நகரத்திற்கு வந்து சேர்ந்தான் தன்னுடைய வாழ்த்துக்களை ஏராளமாக எடுத்து வழங்கினான். ஆனால் இந்திரப்பிரஸ்தத்தை பாண்டவர்களுக்கு திருப்பித் தருவதை பற்றிய பேச்சு ஏதும் பேசவில்லை. துரியோதனன் ஒரு முரடன் கையகல நிலத்தைக்கூட அவன் திருப்பி தரமாட்டான். இதை முன்னிட்டு குருவம்சத்தினரான பாண்டவர்களும் கௌரவர்களும் பரஸ்பரம் போர் புரிந்து தங்களைத் தாங்களே பாழ்படுத்திக் கொள்ளல் ஆகாது. தவவாழ்வு மேலானது என்று தர்ம சாஸ்திரம் பாராட்டுகின்றது. மற்றும் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் யுத்தம் சரியானது அல்ல என்று அதே தர்மசாஸ்திரம் எச்சரிக்கை பண்ணுகின்றது. இந்த விஷயத்தை யுதிஷ்டிரன் யோசித்துப்பார்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

யுதிஷ்டிரனுக்கு யுத்தத்தில் விருப்பம் இல்லை. ஆனால் தர்மயுத்தம் ஒன்று அவன் மீது திணிக்கப்படும் போது அந்த யுத்தத்திலிருந்து அவன் பின் வாங்க மாட்டான். போராட்டத்திற்கும் சமாதானத்திற்கும் அவன் முற்றிலும் தயாராய் இருந்தான். சமாதானம் என்பது கௌரவமான முறையில் வந்து அமையவேண்டும். பாண்டவர்கள் தங்களுக்குத்தானே சம்பாதித்துக் கொண்ட ராஜ்யம் அவர்களுக்கு உரியதாக வேண்டும். அதற்கெல்லாம் மேலாக கிருஷ்ணனுடைய தீர்மானப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று யுதிஷ்டிரன் ஆயத்தமாய் இருந்தான்.

சகோதரர்களாகிய கௌரவர்கள் பாண்டவர்கள் இரு தரப்பினரின் நலன் மேல் தனக்கு அக்கரை இருப்பதாக கிருஷ்ணன் தெரிவித்தான். மேலும் தானே அஸ்தினாபுரம் சென்று இரு கட்சிக்காரர்களுக்கும் நலன் ஏற்படும் வகையில் சமாதானம் செய்து வைக்க முயல்வதாகவும் தெரிவித்தான். தன்னுடைய முயற்சி புறக்கணிக்கப்படுமானால் அதனால் வரும் சேதங்கள் அளவிடமுடியாத அளவில் இருக்கும் என்று சஞ்சயனிடம் கூறி அவன் திரும்பி செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டான்.

சஞ்சயின் அஸ்தினாபுரம் திரும்பிச்சென்று திருதராஷ்டிரனை தனியாக முதலில் சந்தித்தான். நிலைமையை உள்ளபடி அவன் தெரிவித்தான். பாண்டு மன்னன் உயிரோடு இருந்திருந்தால் அவர் சொற்படி யுதிஷ்டிரன் நடந்திருப்பான். அதன்படியே தனது பெரியப்பாவாகிய திருதராஷ்டிரர் எடுக்கும் முடிவுக்கு அடிபணிந்து நடந்து கொண்டான். யுதிஷ்டிரனுடைய இந்த அடக்கத்தை முறைதவறி கையாண்டு கெடுத்துவிட்டார்கள். அப்படி செய்த தீமையையும் யுதிஷ்டிரன் சமாளித்துக் கொண்டான். துரியோதனனுடைய துஷ்ட தனமான போக்குக்கு இணங்கி வரும்படி தன் தந்தையை வற்புறுத்துகின்றான். தந்தையின் சொற்படி நடக்க துரியோதனன் எந்த விதத்திலும் தயாராய் இல்லை. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடுநிலை வகிக்கவில்லை தன் மகன் சார்பிலேயே அவன் நடந்து கொண்டான். இவ்விஷயத்தை உள்ளபடி திருதராஷ்டிரருக்கு சஞ்சயன் தெரிவித்தான். மேலும் மற்றவர்கள் அனைவருக்கும் அடுத்தநாள் சபை நடுவே வைத்து தான் பாண்டவர்களிடம் சென்றதன் விளைவே தெரிவிப்பதாக சஞ்சையன் எடுத்துச் சொல்லி விட்டு அங்கிருந்து விடை பெற்றான்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -4

பாண்டவர்களுக்கு உதவ வந்த சல்லியனை துரியோதனன் கட்டுப்படுத்தி விட்டான். துரியோதனனிடம் அகப்பட்டுக்கொண்ட சல்லியன் ஸ்தப்பித்துப் போய் நின்றான். சல்லியன் துரியோதனனுக்கு கொடுத்த வாக்கிலிருந்து இனி பின்வாங்குவது பொருந்தாது. துரியோதனைப் பார்த்து சல்லியன் நான் கொடுத்த உறுதிமொழிப்படி உனக்காக நான் போர் புரிகின்றேன். ஆனால் அதற்கு எனக்கு சிறிது அவகாசம் கொடு. என்னுடைய சகோதரியின் செல்வந்தர்கள் எத்தனையோ துயரங்களுக்கு பின் அவைகளை சமாளித்துக் கொண்டு வெளியே வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறுவது என் முதல் கடமை ஆகும். அந்த கடமையை நிறைவேற்றிய பிறகு நான் உனக்கு உரியவன் ஆவேன் என்று கூறினான். துரியோதனனும் சம்மதித்தான்.

சல்லியன் உபப்பிளவிய நகருக்கு சென்று பாண்டவர்களை சந்தித்தான். அந்த சந்திப்பு நெகிழ்ச்சி உண்டு பண்ணக் கூடியதாக இருந்தது. பாண்டவர்கள் 13 வருட காலம் நடந்த நன்மைகள் தீமைகள் அனைத்தையும் சல்லியனிடம் எடுத்து விளக்கி தற்போது அந்த கடினமான காலத்திருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதையும் விளக்கினார்கள். அனைத்தையும் உள்ளன்போடு கேட்ட சல்லியன் அவர்களுக்கு ஆறுதல் அளித்தான். சல்லியன் நடந்து கொண்டது பாண்டவர்களுக்கு மன அமைதியை உண்டு பண்ணியது. இனி வரப்போகும் யுத்தத்தில் தங்களுக்கு மாமாவும் அவருடைய சேனேயும் போரில் உதவி செய்வார்கள் என்ற மனக் கோட்டையில் பாண்டவர்கள் இருந்தார்கள். ஆனால் சல்லியன் தனக்கு வழியில் நிகழ்ந்த இக்கட்டையும் தர்ம சங்கடத்தையும் எடுத்து விளக்கினான். பாண்டவர்கள் பெரிதும் திகைத்துப் போயினர். இடி விழுந்தது போல் இருந்தது அவர்களுக்கு இந்த செய்தி. எதிர்பாராத வண்ணம் துரியோதனனுக்கும் சல்லியனுக்கும் நிகழ்ந்த யுத்த ஒப்பந்தத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய சங்கடத்தில் இருந்தார்கள். இதைக் குறித்து யுதிஷ்டிரன் ஆழ்ந்து எண்ணிப் பார்த்தான். அதன் பிறகு தன்னுடைய மாமாவிடம் தன்னுடைய வேண்டுதலை தெரிவித்தான். எப்பொழுதாவது கர்ணனுக்கு சல்லியன் சாரதியாக அமைய வேண்டிய நெருக்கடி யுத்தத்தில் வந்து அமைந்தால் அப்போது அர்ஜூனனுடைய பராக்கிரமத்தை கர்ணனிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த உபகாரம் அவர்கள் அடைந்துள்ள நஷ்டத்துக்கு ஈடு செய்யும். சல்லியனும் இதற்கு சம்மதம் தெரிவித்தான்.

பாண்டவர்களுடைய பிரதிநிதியாக துருபத மன்னனுடைய புரோகிதன் ஒருவன் அஸ்தினாபுரத்திற்கு வந்து பாண்டவர்களுக்கு நியாயமாக உள்ள ராஜ்யத்தை திருப்பி கொடுத்து விடும்படி முறையாக கேட்டான். பாண்டவர்களுக்கு உரிய அஸ்தினாபுரத்து ராஜ்யத்தை துரியோதனன் முறைதவறி கைப்பற்றிக் கொண்டான். அதன்பிறகு அவர்கள் சொந்த முயற்சியால் தேடிக் கொண்ட இந்திரப்பிரஸ்தம் ராஜ்யத்தையும் அக்கிரமமான முறையில் துரியோதனன் அபகரித்துக் கொண்டான். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் உள்ள ஒப்பந்தப்படி துரியோதனன் கொடுத்த வாக்குப்படியே பாண்டவர்களுக்கு உரிய ராஜ்யத்தை திருப்பி ஒப்படைப்பதே சரியான முறையாகும். அப்படித் தராவிட்டால் வரும் யுத்தம் பெரும் கேட்டை விளைவிக்கும் என்று தூதுவன் விளக்கினான். இதனை பீஷ்மர் முற்றிலும் ஆமோதித்தார். ஆனால் கர்ணன் அதனை முற்றிலும் எதிர்த்தான். திருதராஷ்டிர மன்னனோ பாண்டவர்களின் பிரதிநிதியை திரும்பிப் போகும்படி வேண்டிக்கொண்டான். பாண்டவர்களுக்கு தங்ளுடைய தரப்பை எடுத்து விளக்குவதற்கு சஞ்சயனை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.

Image result for சல்லியன் துரியோதனன்

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -3

கிருஷ்ணருடைய பாதுகாப்புக்கு நிகராக வேறு ஏதும் இல்லை என்பது அர்ஜூனனுடைய கொள்கையாக இருந்தது. அர்ஜுனன் கிருஷ்ணனுடைய அருளை நம்பி இருந்தான். துரியோதனன் கிருஷ்ணனுடைய சேனைப் படைகளையும் ஆயுதங்களையும் நம்பி இருந்தான். அடுத்தபடியாக பலராமனுடைய உதவியை துரியோதனன் நாடிச் சென்றான். பலராமன் துரியோதனனிடம் விராட நகரிலேயே தீவிரமாக அனைத்தையும் எடுத்து விளக்கினேன். ஆனால் கிருஷ்ணனோ முற்றிலும் பாண்டவர்களுக்கு சகாயம் பண்ணுவதில் தீவிரமாக இருக்கின்றான். என் சகோதரனை எதிர்த்து போர் புரியும் எண்ணம் எனக்கு இல்லை. ஆகையால் இரண்டு கட்சிகளுக்கும் நான் நடுநிலை வகிப்பவனாக இருந்து கொள்கிறேன் என்றார். துவாரகைக்கு வந்து முற்றிலும் பயன்பட்டது என்று துரியோதனன் உறுதியாக நம்பினான்.

நகுலனுக்கும் சகாதேவனுக்கும் தாயாக இருந்தவள் காலம் சென்ற மாத்ரி. அவளுடைய சகோதரன் சல்லியன் மத்ர தேசத்தை ஆண்டு வந்தான். வரப்போகும் யுத்தத்தில் தங்களுக்கு உதவி புரிய வேண்டும் என்று சல்லியனை பாண்டவர்கள் வேண்டிக் கொண்டனர். தன்னுடைய சகோதரியின் செல்வர்களுக்கு தக்க முறையில் உதவி தர வேண்டும் என்று சல்லியன் தீர்மானித்தான். ஒரு பெரிய சேனையை திரட்டிக்கொண்டு அவன் பாண்டவர்கள் முகாம் அமைத்து இருந்த உபப்பிளவிய நகரை நோக்கி விரைந்து போய்க்கொண்டிருந்தான். சல்லியனின் தீர்மானத்தையும் போக்கையும் அறிந்த துரியோதனன் சூழ்ச்சி ஒன்றை கையாண்டான். சல்லியன் பெரும் படையுடன் வரும் பாதையில் தங்கப் போகும் இடங்கள் அனைத்திலும் அவர்கள் வருவதற்கு முன்பே துரியோதனன் அருமையான கொட்டகைகளை அமைத்து வைத்திருந்தான். சல்லியனுக்கு வழிநெடுக உபசாரங்களும் உணவும் வழங்கப்பட்டது. இத்தகைய அரிய பெரிய ஏற்பாடுகள் வசதிகள் எல்லாம் தன்னுடைய சகோதரியின் செல்வன் யுதிஷ்டிரன் செய்து வைத்திருந்தான் என்று சல்லியன் எண்ணினான்.

பணிவிடை செய்தவர்களிடம் எனக்கு பணிவிடை செய்வதில் எத்தனை சிரமம் எடுத்துக் கொண்ட உங்கள் அனைவருக்கும் தக்க முறையில் சன்மானம் செய்தாக வேண்டும். இதற்கான அனுமதியை உங்களுடைய அரசரிடம் தயவுசெய்து பெற்று வாருங்கள் என்றான். வேலையாட்கள் ஓடிச்சென்று துரியோதனனிடம் எடுத்துரைத்தார்கள். இத்தகைய சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்று துரியோதனன் ஏற்கனவே திட்டம் போட்டிருந்தான். அவனுடைய திட்டப்படியே நடந்தமையால் மகிழ்ந்த துரியோதனன் சல்லியனை அணுகி என்னுடைய உபசாரத்தை நீங்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்டதே முன்னிட்டு நான் பெருமகிழ்வு அடைகிறேன் உங்களால் நான் கண்ணியப்படுத்தப்பட்டவன் ஆகின்றேன்என்றான். இத்தகைய அரிய பெரிய உபசாரங்கள் எல்லாம் எதிர்க்கட்சி மன்னனிடம் இருந்து வந்தது என்று அவன் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு கைமாறாக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்து சொல் துரியோதனனிடம் சல்லியன் கேட்டான். துரியோதனனுடைய சூழ்ச்சி முற்றிலும் வெற்றிபெற்றது. அக்கணமே நீங்களும் உங்களுடைய பெரிய சேனையும் இனி வரப்போகும் யுத்தத்தில் தயவு பண்ணி என்னுடன் சேர்ந்து யுத்தம் செய்ய வேண்டும் இதுவே தங்களிடம் வேண்டுகின்ற சன்மானம் ஆகும் என்று துரியோதனன் சல்லியனிடம் கூறினான்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -2

பாண்டவர்கள் போருக்கு ஆயுத்தமான பணிகளை செய்ய ஆரம்பித்தனர். துரியோதனன் எதிர்பார்த்ததை விட அதிவிரைவில் துவங்கும் நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது. துரியோதனனும் போருக்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான். தன்னுடைய நண்பர்கள் அனைவரின் உதவியை நாடி தூதுவர்களை அனுப்பி வைத்தான். அரசர்களும் அவர்களுடைய சேனைகளும் மிகப் பரபரப்புடன் ஆங்காங்கு போருக்கு ஆயத்தமாயினர்.

கிருஷ்ணனுடைய உதவியை நாடி துரியோதனன் தானே துவாரகைக்கு அவசரமாக புறப்பட்டு சென்றான். அதேபோல் கிருஷ்ணனுடைய உதவியை நாடி அர்ஜூனனும் அங்கு விரைந்து சென்றான். அப்போது கிருஷ்ணன் உறங்கி கொண்டிருந்தார். கிருஷ்ணனுடைய கட்டிலின் தலைமாட்டில் இருந்த ஒற்றை நாற்காலியின் மீது துரியோதனன் விரைந்து சென்று அமர்ந்து கொண்டான். அவனுக்கு பின் சென்ற அர்ஜுனன் கிருஷ்ணருடைய கால்மாட்டில் கைகட்டி நின்று கொண்டிருந்தான். கிருஷ்ணன் கண் விழித்து பார்த்ததும் கால்மாட்டில் நின்று கொண்டிருந்த அர்ஜுனன் தென்பட்டான். இருவருக்குமிடையில் நலத்தைப் பற்றி விசாரணை நிகழ்ந்தது. பின்பு கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தம்மை நாடிவந்ததன் நோக்கம் என்ன என்று கேட்டார். அர்ஜுனன் வந்த விஷயத்தை உள்ளபடி எடுத்து விளக்கினான். அர்ஜுனனுக்கு உதவி செய்ய கிருஷ்ணன் சம்மதம் தெரிவித்தார்.

அதன் பிறகு கிருஷ்ணரிடம் தலை மாட்டில் துரியோதனன் அமர்ந்து இருப்பதை அர்ஜுனன் எடுத்துரைத்தான். திரும்பிப் பார்த்து அவனுடன் சிறிது நேரம் கிருஷ்ணர் உரையாடினார். கிருஷ்ணனுடைய உதவியை நாடி வந்திருப்பதாக துரியோதனன் சொன்னான். தான் முதலில் வந்ததாகவும் ஆகையால் தர்மரீதியாக தனக்கே கிருஷ்ணன் உதவி செய்தாக வேண்டுமென்று அவன் வேண்டிக் கொண்டான். ஆனால் கிருஷ்ணனோ துரியோதனா என்னை நீ முதலில் நாடி வந்துள்ளாய். ஆகையால் என்னுடைய உதவியைப் பெறும் உரிமை உனக்கு உண்டு. ஆனால் நான் அர்ஜுனனை முதலில் பார்த்தேன். ஆகையால் அவனுக்கும் என் உதவி கிடைக்கும். உங்கள் இருவருக்கும் நான் உதவி செய்கின்றேன். என்னிடத்தில் இருக்கும் அனைத்தையும் இரண்டு பாகங்களாகப் பிரிக்கிறேன். ஆயுதம் இல்லாமல் தனியாக இருக்கும் நான் ஒரு பாகம். என்னுடைய சேனையும் சேனைத் தலைவர்களும் ஆயுத தளவாடங்களும் மற்றொரு பாகமாகும். இவ்விரண்டு பாகங்களில் உனக்கு ஒன்றும் அர்ஜுனனுக்கு ஒன்றும் கிடைக்கும். உங்கள் இருவரில் அர்ஜுனன் இளையவனாக இருப்பதால் அவனே முதலில் எந்த பாகம் வேண்டும் என்று தீர்மானிக்கட்டும். அடுத்த பாகத்தை நீ எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

பாகம் பிரித்து வைத்தது குறித்து துரியோதனனுக்கு சொல்வதற்கு ஏதுமில்லை. ஆனால் சேனைகளையும் ஆயுதங்களையும் அர்ஜூனன் முதலில் கேட்டு விடுவானே என்று அரை மனதுடன் அதற்கு சம்மதம் கொடுத்தான். அர்ஜூனன் சற்று சிந்தித்துப் பார்த்தான். போர்க்களத்தில் தனக்கு உதவி பண்ண நிராயுதபாணியாக இருக்கும் கிருஷ்ணனை தனக்கு வேண்டுமென்று அவன் வேண்டினான். அர்ஜூனன் கூறியதும் அதை கேட்ட துரியோதனன் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தான். ஆயுதங்களும் படைகளும் போருக்கு முற்றிலும் தேவையாக இருக்கும் என்பது துரியோதனனுடைய கருத்தாக இருந்தது.