மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -26

தன்னுடைய பாஞ்சால நாட்டின் மீது குருவம்சத்து ராஜகுமாரர்கள் போர்தொடுக்க வந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தி துருபதன் காதுக்கு எட்டியது. அத்தகைய எதிர்ப்புக்கு காரணம் என்ன என்று அந்த வேந்தனுக்கு விளங்கவில்லை. தன்னுடைய சகோதரர்களின் உதவியுடன் தன்னை எதிர்த்து வந்தவர்களை சிரமப்பட்டு முறியடித்து கடைசியாக கௌரவர்களை அவன் வென்று விட்டான். இந்த நெருக்கடியில் அர்ஜுனன் தன்னுடைய போர் தந்திரத்தை கையாண்டான். தன்னுடைய தமையனான யுதிஷ்டிரனை பின்னால் இருக்கும் படி செய்து ஏனைய நான்கு சகோதரர்களுடன் துருபதன் மீது போர் தொடுத்து அவனை சிறைபிடித்து துரோணரிடம் கொண்டு வந்து சேர்த்தான்.

துரோணாச்சாரியாரின் திட்டம் இப்பொழுது பலித்து விட்டது. துருபத மன்னன் துரோணாச்சாரியாருக்கு இப்போது அடிமையானான். துரோணர் துருபதனைப்பார்த்து இளமைப்பருவத்தில் நாம் தோழர்களாக இருந்த பொழுது உன் தந்தையின் ராஜ்யம் உன்னுடைய ஆட்சிக்கு வரும்போது அதில் சரிபாதியை எனக்கு தருவதாக நீயே மனமுவந்து பல தடவை கூறி இருக்கின்றாய். நீ பதவிக்கு வந்தபிறகு நான் உன்னுடைய ராஜ்ஜியத்தில் பங்குக்கு வரவில்லை. என்னுடைய வறுமை நோயை களைந்து எனக்கு ஏதாவது உதவி செய்து வைக்கும்படி உன்னை வேண்டினேன். அரசனுக்கும் ஆண்டிக்கும் இடையே நட்பு சாத்தியப்படாது என்று என்னை விரட்டினாய். இப்பொழுது உனக்கு சொந்தம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. உயிரும் கூட உன்னுடையது இல்லை. நீதி முறைப்படி உன்னை நான் கொல்ல முடியும். ஆயினும் அஞ்சாதே உன்னுடைய உயிரை நான் எடுக்க மாட்டேன். அதற்கு பதிலாக என்னால் வெல்லப்பட்ட ராஜ்ஜியத்தின் சரி பாதியை உனக்குத் தந்து விடுகிறேன். இளமையில் நாம் இருவரும் கொண்டிருந்த நட்பை இனி சம அந்தஸ்தில் இருந்து கொண்டு இருவரும் பேணி வருவோம் என்றார். அவருடைய பரந்த மனப்பான்மையை எண்ணி துருபதனும் தன் இளமைப் பருவ நண்பனை கட்டி தழுவி கொண்டான்.

துருபத மன்னனும் துரோணாச்சாரியாரும் பரஸ்பரம் நட்பு பூண்டனர். ஆயினும் துருபதனுடைய மனதில் குறை ஒன்று உறுத்திக் கொண்டிருந்தது. தான் அடைந்த தோல்வியும் அவமானமும் அவனுடைய உள்ளத்தில் இருந்து அகலவில்லை. தோற்கடித்தவரோ தனுர் வேதத்தில் பரமாச்சாரியார் ஆவார். அவரை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாது. தான் அடைந்திருந்த இழிவுக்கு ஈடு செய்யும் வழி தேடி துருபத மன்னன் கடும் தவத்தில் ஈடுபட்டான். அதன் விளைவாக தவசக்தியில் பன்மடங்கு மேல் நிலைக்கு வந்து துரோணரை எப்படி வெல்வது என்று தெரிந்து கொண்டான். அதன்படி துரோணரை வெல்ல அரியதொரு யாகம் வளர்ப்பதற்க்கான புரோகிதன் ஒருவனை நாடெங்கிலும் தேடி அலைந்தான். அத்தகைய புரோகிதர் ஒருவரும் அரசனுக்கு அகப்பட்டான். அவன் செய்த யாகத்தின் பலனால் திருஷ்டத்யும்னன் என்னும் மைந்தனும் திரௌபதி என்னும் மகளும் பிறந்தார்கள். திருஷ்டத்யும்னன் துரோணாச்சாரியார்க்கு சிஷ்யன் ஆனான். எதிர்காலத்தில் துரோணாச்சாரியாரை அழிப்பதற்கும் இவனே முக்கியமானவன் ஆகிறான். அர்ஜூனன் வில்வித்தைக்கு விஜயன் என பெயர் பெற்றவன். அவனது திறமையை பாராட்டி செல்வி திரௌபதியை அர்ஜுனனுக்கு மணம் செய்து கொடுத்து பாண்டவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது அடுத்தபடியாக துருபதனின் திட்டம் ஆகும்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -25

பீமனுடைய பேச்சு துரியோதனனுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. துரியோதனன் பீமனைப்பார்த்து வீரன் ஒருவன் இன்னொரு வீரனின் வீரியத்தை போற்றுவான். பீமா கர்ணன் செய்து காட்டிய வித்தைகளை நீ காணவில்லையா. பிறப்பு செருக்கிலும் பதவி செருக்கிலும் நீ மூழ்கி கிடக்கின்றாய். புண்ணிய நதி ஒன்று உற்பத்தியாகும் இடம் மிகவும் சிறுமையானது. அதை முன்னிட்டு அது புறக்கணிக்கப்படுவது இல்லை. ரிஷிகள் பல பேருடைய தோற்றம் மிகக் கீழானது அது விமர்சனத்திற்கு உதவாது. அக்காரணத்தை முன்னிட்டு அவர்களின் மகிமைகள் ஒதுக்கப் படுவதில்லை. நம்முடைய குருமார்களாகிய கிருபாச்சாரியார் துரோணாச்சாரியார் ஆகியோர்களின் பிறப்பை ஆராய்ந்து பார்த்தால் பாராட்டுக்குரிய பெரிய நிலையில் அவர்கள் பிறந்தவர்கள் அல்ல. ஆயினும் அவர்கள் மீது நாம் குருபக்தி வைத்திருக்கிறோம். அவர்களின் கலைத்திறமைகளை நாம் ஏற்று வருகின்றோம். மேலும் உன்னுடைய தந்தையும் உன் சகோதரர்களின் தந்தையும் குரு வம்சத்திற்கு உரியவர்கள் அல்ல. கர்ணனும் தனது போர் வித்தைகளின் மூலம் சத்திரியனே. அவன் ஒரு வீரன் உனக்கு துணிச்சல் இருக்குமானால் உன் தம்பி அர்ஜுனன் அவனோடு போட்டி போடட்டும் என்று துரியோதனன் பீமனைப் பார்த்து கூறினான். அமர்ந்திருந்தவர்களில் பலர் துரியோதனனின் பேச்சை பெரிதும் பாராட்டினர்.

குருமார்கள் ஆகிய கிருபர் துரோணர் மற்றும் பெரியவர்கள் சிலரும் ராஜகுமாரனான அர்ஜுனனுடன் கர்ணனை போட்டியிட அனுமதிக்கவில்லை.. மேற்கு திசையில் சூரியன் மறைந்தான். விளையாட்டு போட்டிகளும் ஒருவாறு முடிவுக்கு வந்தது. கூட்டத்தில் இருந்தவர்கள் கடைசியாக வந்து தன் வில்வித்தையை செய்து காட்டிய கர்ணனை பற்றியே பேசிக்கொண்டு போனார்கள். சற்று முன்பு தலைசிறந்த வீரன் என்று சொல்லிய அர்ஜுனனை அவர்கள் இப்போது மறந்து போயினர். அர்ஜுனன் வில்வித்தையில் சிறந்தவன் என அனைவருக்கும் காட்ட வேண்டுமென்று துரோணாச்சாரியார் எண்ணியிருந்தார் ஆனால் அவர் எண்ணியபடி நிகழவில்லை..

துரோணாச்சாரியார் உள்ளத்தில் ஓர் எண்ணம் ஆழ்ந்து புதைந்திருந்தது. கர்வமே வடிவமாக இருந்த துருபத மன்னனுடைய புகழுக்கு பங்கம் பண்ண வேண்டும் என்பதே அந்த எண்ணமாகும். அதற்கேற்ற காலம் இப்போது வந்தது. ராஜகுமாரர்களுக்கு துரோணர் கொடுத்து வந்த பயிற்சி முடிவற்றது. அவர்கள் அதற்கு தட்சணை செலுத்த வேண்டும் என்பது ஆச்சாரியார் விருப்பமாக இருந்தது. தாராளமாக தட்சணை வழங்க மாணவர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள். ஆனால் துரோணர் கேட்ட குரு தட்சணை நூதனமானது. இந்த இளம் வீரர்கள் பாஞ்சால நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதை ஆண்டுவந்த துருபதனை பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்பது அவர் கேட்ட தட்சணையாகும். துரோணர் கேட்ட தட்சணை இளைஞர்களுக்கு பெரிய ஊக்கமாக இருந்தது. அதற்கு காரணம் அவர்களிடம் இருந்த போர் திறமைகளை நடைமுறையில் கொண்டு வருவதற்கும் அனைவரும் தெரிந்து கொள்ளவும் நல்ல சந்தர்ப்பத்தை அது ஏற்படுத்தியது. பெரிய சேனை ஒன்றைத் திரட்டிக்கொண்டு பாஞ்சால நாட்டின் மீது அவர்கள் படையெடுத்துச் சென்றனர். அவர்களின் செயலை வேடிக்கை பார்க்கும் நோக்கில் துரோணரும் சென்றார். பாண்டவ சகோதரர்கள் போகும் வழியில் மற்றொரு முடிவு செய்தனர். போராட்டத்தின் ஆரம்ப நேரத்தில் தாங்கள் ஒதுங்கியிருக்க தீர்மானித்தனர். துரியோதனின் தலைமையில் அவனுடைய சேனைகள் முதலில் போரிட துவங்கும். துரியோதனன் தளர்வுற்று போனால் பின் அர்ஜுனனுடைய சேனை அதற்கு உதவி பண்ண வேண்டும் என்பதே அவர்கள் கையாண்ட போர் திட்டமாகும். துரோணாசாரியாரும் இத்திட்டத்தை ஆமோதித்தார்

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -24

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -24

கர்ணன் தன்னோடு தனியாக போட்டி போடும் படி அர்ஜுனனை அறை கூவினான். இருவரும் போட்டி போட ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். அத்தருணத்தில் கிருபாச்சாரியார் மேடைமீது தோன்றினார். இருவருக்கிடையில் நடக்கும் போட்டிக்கு உரிய சட்டதிட்டங்களை கடைபிடித்தே ஆக வேண்டும் என்றார். மேலும் அர்ஜுனன் பிரசித்தி பெற்ற குரு வம்சத்திற்குரிய ராஜகுமாரன். அவன் பாமரனோடு போட்டியிட மாட்டான். ஆகவே நீ உன்னுடைய வம்சத்தைப் பற்றி விளக்குவயாக என்றார். கர்ணனுடைய தலை கவிழ்ந்தது. ஏனெனில் அவன் எந்த நாட்டைச் சேர்ந்த ராஜகுமாரனும் இல்லை.

நடந்தவைகள் அனைத்தையும் கவனித்து வந்த துரியோதனன் அர்ஜுனனை எதிர்த்து நிற்க ஒருவன் இருக்கிறான். அவனுடன் நட்பை உண்டாக்கி அர்ஜூனனை எதிர்க்க உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி போட்டி மேடைமீது வந்தான். மூன்று வித அரசர்களை அறநெறி அங்கீகரிக்கிறது. பிறப்பில் வேந்தன், பராக்கிரமத்தை முன்னிட்டு வேந்தன், வெற்றியை முன்னிட்டு வேந்தன் ஆகிய மூன்று வித வேந்தர்களை தர்மம் ஏற்றுக்கொள்கிறது. பராக்கிரமத்தை முன்னிட்டு இந்த இளைஞனை அரசனாக அங்கீகரித்து கொள்ளதகுதி வாய்ந்தவன் ஆகின்றான். ஆனால் அர்ஜூனனை எதிர்த்து போட்டியிட வந்திருப்பவன் ஒரு நாட்டுக்குரிய அரசனாக இருக்கவேண்டும் என்று இங்கு இருப்பவர்கள் வற்புறுத்துவார்கள் எனில் அந்த நிபந்தனையை இப்பொழுதே நிறைவேற்றுகின்றேன். என்னுடைய கட்டுப்பாட்டில் அரசன் இல்லாமல் இருக்கும் அங்க நாட்டுக்கு கர்ணனை அரசனாக முடி சூட்டுகிறேன் என்று அறிவித்தான். முடிசூட்டு விழா அப்பொழுதே அங்கு நடத்தப்பட்டது. தன்னுடைய கீரிடத்தை எடுத்து துரியோதனன் கர்ணனுடைய தலையில் வைத்தான். தன் உடைவாளை எடுத்து புதிதாக அரசனாக முடி சூட்டப்பெற்ற கர்ணனுடைய வலக்கையில் வைத்தான். அங்கு கூடியிருந்த பலபேர் ஒரு நொடிப்பொழுதில் நிகழ்ந்த பொருத்தமான செயலை பெரிதும் பாராட்டினார்கள்.

அப்போது கையில் கழி ஒன்றைப் பற்றிக்கொண்டு வயதானவர் ஒருவர் தள்ளாடி மேடையில் ஏறினார். கர்ணனுடைய வளர்ப்புத் தந்தையாகிய அதிரதன் தான் அப்படி வந்தவர். ஆகையினால் அவருடைய வளர்ப்பு மகனான கர்ணன் விரைந்து ஓடி தான் புதிதாகப் பெற்ற அரசபதவிக்கான கீரிடத்தை தந்தையின் பாதங்களில் வைத்து வீழ்ந்து வணங்கினான். அப்பொழுது அதிரதன் கர்ணனை பார்த்து என் அருமை செல்வா கர்ணா நெடுநாட்களுக்கு பிறகு உனக்கு சௌபாக்கியம் வாய்த்திருப்பதை குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ராஜகுமாரனாகிய துரியோதனனை நான் போற்றுகின்றேன் என்றார். கர்ணன் சூதபுத்திரன் என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்தது.

பாண்டவர்களுக்கு இப்பொழுது உற்சாகம் ததும்பியது. அப்போது பீமன் தேரோட்டி மகனே கையில் சாட்டையை எடுத்து கொண்டு உன்னுடைய தொழிலை செய்வாயாக. அர்ஜுனனுடன் போட்டி போட தகுதி வாய்ந்தவன் நீ இல்லை என்றான். கர்ணனுடைய முகம் வாடியது. உணர்ச்சியினால் தூண்டப்பட்டு துடித்தான். ஆயினும் அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. அமைதியுடன் தான் வணங்கும் தெய்வமாகிய சூரிய பகவானை வானத்தை நோக்கி உற்று நோக்கினான். ஆனால் அதே சூரிய பகவான் தான் தனது தந்தை என்பது அவனுக்கு தெரியவில்லை. குந்திதேவி மட்டுமே அந்த உண்மையை அறிந்திருந்தாள் அந்த நெருக்கடியான நேரம் அவளுக்கு மிக்க துக்கத்தை விளைவித்தது.

தொடரும்……….

கர்மவினை

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன். ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான். அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது. மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது. சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான். இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை. பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன் அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல் தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்?

குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும் என்றான். சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான். அதே நாட்டில் நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலை நீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. அவள் அந்த அந்தணர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது என்றும் சொன்னாள். அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.

நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசக்கூடாது.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -23

அர்ஜுனன் தலை சிறந்த வீரன் என்று அனைவரும் எண்ணிக் கொண்டு இருந்த பொழுது மைதானத்தின் வாசலில் திடீரென்று ஒரு ஓசை கேட்டது. அதன் விளைவாக அங்கு சிறு சலசலப்பு உண்டாயிற்று. வந்தவன் கர்ணன். ஆச்சாரியர்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்தினான். பிறகு தான் கற்றிருந்த வில்வித்தை திறனை மேடையில் செய்து காட்டுவதற்கு அவர்களுடைய அனுமதியை வேண்டினான். அரை மனதோடு அவனுக்கு அனுமதி தரப்பட்டது. அவன் அர்ஜுனன் செய்து காட்டிய அனைத்து வித்தைகளையும் திறமைகளையும் செய்துக் காட்டினான். அர்ஜுனனுக்கு ஒருவாறு தயக்கம் உண்டாயிற்று.

இதற்கிடையில் அரசர் குடும்பத்தினர்கள் அமர்ந்திருந்த மேடையில் பெண்களிடையே குழப்பம் ஒன்று உருவாயிற்று. அதற்கு காரணம் குந்திதேவி மயக்கமடைந்திருந்தாள். குந்தி தேவி சிறுமியாக இருந்த போது துருவாச மகரிஷிக்கு பணிவிடை செய்த பொழுது பரம திருப்தி அடைந்த மகரிஷி குந்திக்கு மந்த்ரோபதேசம் ஒன்று செய்து வைத்தார். அந்த மந்திரத்தை உச்சரிந்து எந்த தெய்வத்தை வேண்டினாலும் அந்த நெய்வம் தன்மீது பிரசன்னம் ஆகும் படி செய்யலாம். சிறுமியாய் இருந்ததினால் ஒரு தெய்வத்தை மந்திரம் சொல்லி வரவேற்பதினால் வரும் விளைவுகளை பற்றி அவள் அறிந்திருக்கவில்லை. ஒரு நாள் விளையாட்டுத்தனமாக சூரிய பகவானை எண்ணி அந்த மந்திரத்தை கூறினாள். சூரிய பகவானை வேண்டி செய்த மந்திரத்தின் பலனால் குண்டலத்துடனும் கவசத்துடனும் ஒரு குழந்தை பிறந்தது. மந்திரத்தின் பலனால் குழந்தை பிறந்ததும் அவள் முன்பு இருந்தபடியே கன்னியானாள். தனக்குப் பிறந்த குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தையை ஒரு பெட்டகத்தில் வைத்து ஆற்றில் மிதந்து போகும் படி செய்தாள்.

எதிர்காலத்தில் எங்கேயாவது அக்குழந்தையை காண வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது புதிதாக வந்தவன் குண்டல கவசத்துடன் அதே ஆபரணங்களை அணிந்திருந்தான். இந்த காட்சியைப் பார்த்ததும் அவள் மூர்ச்சையாகி விட்டாள். இதுவே பெண்களுக்கான மேடையில் நடந்த குழப்பத்திற்கு காரணமாயிருந்தது. குந்தியின் அருகே சென்ற பேரறிஞரான விதுரருக்கு விஷயம் முழுவதும் விளங்கியது. நீர் தெளித்து குந்திதேவியை மயக்கத்திலிருந்து தெளிவு பெறும்படி அவர் செய்தார். அப்போது அவர் கைசாடைகளின் வாயிலாக மற்றவர்கள் யாருக்கும் விளங்காத மொழியில் கர்ணனுடைய வரலாற்றை வெளிப்படுத்தலாகாது என்றும் அனைத்தையும் மறைத்து வைக்கும்படி கூறினார். சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு மகனுடைய ஆற்றல்களை பார்த்து மகிழ்ந்திருந்தாள். சில நிமிடங்களுக்கு பிறகு மறைத்து வைக்கப்பட்டிருந்த மகனுக்கும் உலகறிய வெளிப்படையாக வளர்த்து வந்த மகனுக்கும் இடையில் நிகழ்ந்த போராட்டத்தை குறித்து அவள் பரிதவிக்கும் படி நேர்ந்தது. ஆயினும் இந்த நெருக்கடியை அவள் சமாளித்துக் கொண்டாள்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -22

துரோணாச்சாரியார் பெரிய விளையாட்டுப் போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்தார். தம்முடைய சிஷ்யர்களின் விதவிதமான ஆற்றல்களை மக்களிடையே விளம்பரப்படுத்துவது அவரின் நோக்கமாக இருந்தது. பீஷ்மரும் திருதராஷ்டிரனும் துரோணரின் செயலை முற்றிலும் ஆமோதித்தனர். விளையாட்டு பந்தயத்திற்கு ஏற்ற மேடை ஒன்று அதிவிரைவில் தயார் செய்யப்பட்டது. இந்த நாளிலே அக்கம் பக்கத்தில் இருந்தும் நெடுந்தூரத்தில் இருந்தும் கூட்டம் கூட்டமாக மக்கள் அங்கு வந்து கூடினர். ராஜ குடும்பத்தாருக்கு ஏற்ற மேடை ஒரு பக்கம் அமைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு என்றும் முக்கியமான பிரமுகர்கள் என்றும் அடுத்த பக்கத்தில் மற்றொரு மேடை அமைக்கப்பட்டிருந்தது.

துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார், துரோணாச்சாரியாரின் மகனான அசுவத்தாமன் ஆகியோர் விளையாட்டு அரங்கத்தில் முதலில் பிரசன்னமானார்கள். இவர்களை திருதராஷ்டிர மன்னன் வரவேற்றான். அது ஒரு கவர்ச்சிகரமான காட்சியாய் இருந்தது. ராஜகுமாரர்கள் ஒருவர் பின் ஒருவராக அரங்கத்தில் வைத்து அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அவர்களும் முறையாக ஆச்சாரியார்களுக்கு வணக்கம் செலுத்தினார்கள். ஒவ்வொரு ராஜகுமாரனும் எந்தெந்த ஆயுதப்பயிற்சி பெற்று இருந்தார்களோ அந்தந்த கலைகளை எல்லாம் அவனவன் நன்கு பிரயோகித்து காட்டினான். அவர்கள் காட்டிய பயிற்சி திறமையை பார்த்து மக்கள் திகைத்துப் போயினர்.

துரியோதனனுக்கும் பீமனுக்கும் நிகழ்ந்த கதாயுதப் போராட்டம் அனைவர் உள்ளத்திலும் பதைபதைப்புடன் கவர்ந்தது. சிரமம் ஏதுமின்றி மிகவும் லாவகமாக அவர்கள் இருவரும் கலைத் திறமையை வெளிப்படுத்தினர். விளையாட்டாக துவங்கிய போராட்டம் வம்புச்சண்டை வடிவெடுக்கும் அறிகுறிகள் தென்பட்டன. அந்த நெருக்கடியில் அசுவத்தாமன் இருவருக்கும் இடையில் நுழைந்து அந்த விளையாட்டு வீரர்களை பிரித்து வைத்தான். திருதராஷ்டிர மன்னனுக்கு கண் பார்வை இல்லை ஆகையால் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகளை விதுரர் அவருக்கு விளக்கி வந்தார். தன் கணவன் நிலைக்கு ஏற்றபடி தன் கண்ணை துணியால் கட்டிக் கொண்டிருந்த காந்தாரி மகாராணிக்கு குந்தி அங்கு நிகழ்ந்தவைகளை விளக்கிக் கொண்டிருந்தாள். எங்கு திரும்பி பார்த்தாலும் எல்லோருடைய முகத்திலும் குதுகலமே ததும்பிக் கொண்டிருந்தது.

கடைசியில் மேடையின் மீது அர்ஜுனனை அறிமுகப்படுத்தி வைப்பது துரோணாச்சாரியார் மிக்க மகிழ்வு கொண்டிருந்தார். சிஷ்யனும் வில்வித்தையில் தனது திறமையை மிக அற்புதமாக செய்து காட்டினான். அவனைப் பாராட்டிய போது வானளாவிய ஓலமிடுதல் உச்ச நிலைக்கு சென்றது. இதற்கு காரணம் என்ன என்று விதுரன் திருதராஷ்டிரனுக்கு எடுத்து விளங்கினார். அப்பொழுது அவனுக்கு தன் தம்பியாகிய பாண்டுவின் புதல்வர்களை குறித்து பொறாமை உண்டாயிற்று. ஆனால் மற்றவர்களை போன்று தாமும் அதனை பாராட்டி அவர் பாசாங்கு செய்தார். அன்று நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் அர்ஜுனனே தலை சிறந்தவன் என்று எல்லோரும் முடிவு செய்தனர்.

Image result for பாண்டவர்கள் கௌரவர்கள் சிறுவர்கள் விளையாட்டு"

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -21

உடலில் உண்டு பண்ணுகின்ற வதையையும் வலியையும் பொறுத்துக்கொள்ளும் மனவலிமை சூத்திரியர்களுக்கே உண்டு வேறு யாருக்கும் கிடையாது. அடே சிறுவனே நீ சூத்திரியனா என்று பார்கவ மகரிஷி கர்ணனிடம் கோபமாகக் கேட்டார். கர்ணன் குருவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். தேம்பித் தேம்பி அழுதான். என் பெற்றோர் யார் என்று எனக்கு தெரியாது. ஒரு தேரோட்டியின் என் குடும்பம் என்னை வளர்த்து வருகிறது. ஆதலால் நான் சூத புத்திரன் என்று அழைக்கப்படுகின்றேன். ஞான வேட்கையினால் தூண்டப் பெற்று கல்வி கற்க நான் தங்களிடம் பொய் கூறினேன். வேறு பாவம் எதையும் நான் செய்யவில்லை. நான் கொண்டிருக்கும் நோக்கத்தின் புனிதத்தை கருத்தில் கொண்டு என்னை மன்னித்து அருளும் படி வேண்டுகின்றேன். கல்வியை இணத்தோடும் கொள்கைழோடும் இணைக்கலாகாது என கூறப்படுகிறது. தாங்கள் எனது தந்தைக்கும் தாய்க்கும் மேலானவர் தங்களிடம் அடைக்கலம் அடைகிறேன். கிருபை கூர்ந்து தாங்கள் என்னை தங்களுக்கு உற்றவனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினான்.

பார்கவ ரிஷிக்கு கோபமடைந்தார். அவருக்கு பண்பிலும் மிக்கது பிறப்பு. மாணவன் ஒருவன் எத்தகைய பிறப்பில் இருக்கின்றான் என்பது அவருக்கு முக்கியமானதாக இருந்தது. பிராமண குலத்தில் பிறந்தவனுக்கு மட்டுமே கலையை கற்றுக் கொடுப்பது என்ற கொள்கையை அவர் வைத்திருந்தார். கர்ணன் கூறியதை கேட்டதும் பார்கவரிஷிக்கு கர்ணன் மீது வைத்திருந்த அன்பு ஒரு நொடிப்பொழுதில் மாயமாக மறைந்து போயிற்று. அவனைப் பற்றிய நல்ல எண்ணத்தை அறவே மறந்து விட்டார். கர்ணன் இவ்வளவு நாள் குருவிற்கு செய்த பணிவிடையும் ஒப்பற்றது. அதையும் அவர் பொருட்படுத்தவில்லை. அவருடைய தலை சிறந்த மாணவனாக திகழ்ந்த கர்ணன் மீது சாபம் ஒன்றை சுமத்தினார். உன்னை ஒரு பிராமணன் என்று பாசாங்கு பண்ணிக்கொண்டு என்னிடத்தில் இருந்து கற்றுக் கொண்ட அர்த்தசாஸ்திர வித்தைகளை அனைத்தையும் கற்றுக் கொண்டாய். இந்த வித்தைகள் பயன்படுத்த வேண்டிய நெருக்கடியான நேரத்தில் இவை யாவும் உன் ஞாபகத்தில் இருந்து மறைந்து போகும் என்று சாபமிட்டார்.

பார்கவரிஷி கூறியதை கேட்டதும் கர்ணன் மயக்கமடைந்து கீழே விழுந்தான். நெடுநேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்து அவன் எழுந்து பார்த்த பொழுது பார்கவரிஷி அங்கு இல்லை. ஆதரிப்போர் அற்றவனாக ஊக்கத்தை முற்றிலும் இழந்தவனாக அவன் ஆகிவிட்டான் வீட்டுக்கு திரும்பி போய்க் கொண்டிருந்த பொழுது தன்னுடைய நிலையை எண்ணி கவலையுற்றான். அவனை பெற்றவர் யார் என்பது அவனுக்கு தெரியாது. வளர்ப்பு பெற்றோர்களோ அன்பே வடிவெடுத்து இருந்தனர். ஆயினும் சூதபுத்திரன் என்னும் நாமம் அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது. திறமைசாலிகளின் கூட்டத்தில் அவன் ஒட்டி உறவாடுதற்கு அந்த நாமம் இந்த நாமம் அவனுக்கு இடைஞ்சலாய் இருந்தது. இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே வீடு நோக்கி சென்றான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -20

கல்வி அறிவிலும் வில் வித்தையிலும் கர்ணன் கொண்டிருந்த ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. ஆனால் சூதபுத்திரன் என்னும் நாமம் அவனுடைய ஆர்வத்திற்கு இடைஞ்சலாக இருந்தது. அவனை வாட்டி வந்த இந்த பெயரை முன்னிட்டு கர்ணன் தன்னை ஒரு கீழோனாக ஒருபோதும் கருதவில்லை. தன்னை ஓர் சூத்திரியனாகவே எண்ணிக்கொண்டான். தனுர் வேதத்தில் பிரசித்தி பெற்ற பார்க்கவ ரிஷியை பார்க்கலாம் என்ற எண்ணம் அவனுடைய உள்ளத்தில் உதித்தது. பிறகு அந்த எண்ணம் உறுதியாக நிலைத்து அவரை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தான். பார்க்கவ ரிஷி சூத்திரியர்களுக்கு வித்தைகளை கற்றுக்கொடுப்பதில்லை பிராமணர்களுக்கு மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருந்தார். தன்னை ஒரு சூத்திரன் என்று சொல்லிக் கொள்வதில் கர்ணனுக்கு விருப்பமாக இருந்தது. ஆனால் அவரிடம் தன்னை ஒரு பிராமணன் என்று பொய் கூற தீர்மானித்தான். ஞான வேட்கையை முன்னிட்டு கல்வி கற்கவும் வில்வித்தையை கற்கவும் பொய் கூறுவதில் குற்றமில்லை என்று அவன் எண்ணினான்.

கர்ணன் தன்னை ஒரு பிராமண இளைஞன் என்று பார்க்கவ ரிஷியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். அதன் விளைவாக அவன் அக்கணமே தங்குதடையின்றி மாணாக்கனாக ஏற்றுக் கொள்ளப்பட்டான். வில்வித்தைக்கு முற்றிலும் தகுதி வாய்ந்தவன் என கர்ணன் தன்னை நிரூபித்தான். சில ஆண்டுகளாக அவன் குருகுல ஆசிரம வாசத்தில் இருந்து அனைத்தையும் கற்று தலை சிறந்த மாணவனாக திகழ்ந்தான். பார்க்கவரிஷி கர்ணனுக்கு பிரம்மாஸ்திரம் உட்பட பல மந்திரசக்தி வாய்க்கப்பெற்ற அஸ்திரங்களை கற்றுக் கொடுத்தார். கல்வியை பூர்த்தி செய்த பொழுது குருவானவர் சீடனுக்கு உபதேசம் செய்தார். தகுதி மிக வாய்க்கப் பெற்ற மாணாக்கன் என உன்னை நீ நிரூபித்துள்ளாய். என் வசம் இருக்கும் ஞானம் அனைத்தையும் நான் உனக்கு கற்பித்து உள்ளேன். நீ சத்தியம் பேசுபவனாகவும் முதியோர்கள் இடத்தில் வணக்கம் மிக படைத்தவனாகவும் இருக்கின்றாய். தர்மத்தை நிலைநாட்டுவதற்காக நீ பெற்றுள்ள ஞானத்தை பயன்படுத்துவாயாக என்று கூறினார்.

ஒரு நாள் நண்பகலில் பார்க்கவரிஷி சிறிது நேரம் கர்ணனின் மடிமீது தலைவைத்து படுத்திருந்தார். அப்பொழுது கர்ணனுடைய தொடையை வண்டு ஒன்று கடித்தது. அதன் விளைவாக ரத்தம் பெருக்கெடுத்து ஒடியது. குருவின் தூக்கத்திற்கு பங்கம் ஏற்பட கூடாது என்று கர்ணன் வலியை பொறுத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். ரிஷியின் உடம்பில் இரத்தம் பட்டு அவரது தூக்கம் கலைந்தது. தன் உடம்பில் ரத்தம் பரவியதற்கு என்ன காரணம் என்று கர்ணனிடம் கேட்டார். அப்போது கர்ணன் தனது தொடையை வண்டு ஒன்று குடைந்தது என்றும் அதன் விளைவாக இரத்தம் வழிந்து தங்கள் உடலில் பட்டு தங்களது தூக்கம் கெட்டது தன்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினான். அதற்கு அவர் வண்டு கடித்ததும் நீ ஏன் கத்தி குதித்து எழவில்லை என்று கேட்டார். தங்கள் உறக்கத்திற்கு இடையூறு வரக்கூடாது என்பதை பொறுத்து வலியை தாங்கிக் கொண்டேன் என்றான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -19

இன்னொரு நாள் பழங்காலத்துப் பண்புகளுக்கு ஏற்ப பரிட்சை ஒன்றை துரோணர் ராஜகுமாரர்களுக்கிடையே நடத்தினார். துரியோதனனை துரோணாச்சாரியார் தம்மிடம் அழைத்தார். இவ்வுலகில் தேடிப்பார்த்து நல்லவன் ஒருவனைக் கண்டு பிடித்து தம்மிடம் அழைத்து வரும்படி உத்தரவு பிறப்பித்தார். அதே முறையில் பாண்டவ சகோதரர்களுள் மூத்தவனாகிய யுதிஷ்டிரனை தம்மிடம் அழைத்து அவனிடம் மற்றொரு உத்தரவை பிறப்பித்தார். இவ்வுலகில் தேடிப்பார்த்து கெட்டவன் ஒருவனை தம்மிடம் அழைத்து வருமாறு உத்தரவு பிறப்பித்தார். சில நாட்கள் கழித்து திரும்பி வந்த துரியோதனன் தனக்கு வாய்த்த அனுபவத்தை துரோணரிடம் தெரிவித்தான். பரந்த இவ்வுலகில் தான் தேடிப்பார்த்தும் நல்லவர் ஒருவருமே இல்லை என்று தன்னுடைய அனுபவமாக துரோணரிடம் தெரிவித்தான். அடுத்ததாக யுதிஷ்டிரன் திரும்பி வந்தான். உலகம் முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு உலகில் கெட்டவர் ஒருவர் கூட இல்லை என்று துரோணரிடம் தெரிவித்தான்.

துரியோதனன் யுதிஷ்டிரன் ஆகிய இருவருமே ஒரே ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒரே குருவிடம் கல்வி பயின்றவர்கள். இருவரும் ஒரே உலகத்தில் தேடிப் பார்த்தார்கள். துரியோதனன் கண்ணுக்கு நல்லவன் யாருமே தென்படவில்லை யுதிஷ்டிரன் கண்ணுக்கு கெட்டவர்கள் யாரும் தென்படவில்லை. மனதில் தீய எண்ணம் இருப்பவனுக்கு எங்கும் தீமையே காட்சி கொடுக்கின்றது. மனதில் நன்மை நிறைந்தவனுக்கு எங்கு பார்த்தாலும் நன்மையே தெரிகின்றது என்பதை துரோணர் ராஜகுமாரர்களுக்கு சொல்லி நன்மையை மட்டுமே நினைக்க வேண்டும் என்று பாடம் நடத்தினார்.

அதிரதன் என்னும் பெயர் படைத்திருந்த தேர்ப்பாகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ராதை எனும் மனைவி இருந்தாள். இருவரும் இன்புற்று வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் காலை அதிரதன் நதியில் கங்கா ஸ்நானம் செய்து கொண்டிருந்தான். அப்போது அழகிய பெட்டகம் ஒன்று மிதந்து வந்தது. அதில் தெய்வீகம் திகழும் குழந்தை ஒன்று இருந்தது. தேர்ப்பாகன் அக்குழந்தையை தன்னுடைய குழந்தையாக சுவீகாரம் பண்ணி கொண்டான். அக்குழந்தைக்கு கர்ணன் என்று பெயரிட்டான். வளர்ந்த கர்ணன் சூதபுத்ரன் என்றும் அழைக்கப்பட்டான். சூதபுத்ரன் என்னும் சொல் தேரோட்டியின் மகன் என பொருள்படும். ராதையின் வளர்ப்பு குழந்தையாக இருப்பதினால் அவனுக்கு ராதேயன் என்னும் பெயரும் ஏற்பட்டது. அவனுக்கு வயது அதிகரித்துக் கொண்டு வந்த பொழுது தந்தையின் தொழிலான தேர் ஓட்டுவதில் அவனுடைய நாட்டம் குறைந்து போயிற்று. கல்வியிலும் யுத்தப் பயிற்சியிலும் அவனுக்கு நாட்டம் அதிகரித்து வந்தது.

அஸ்தினாபுரத்தில் தனுர்வேத பாடசாலை ஒன்று இருக்கிறது என்று அவன் கேள்விப்பட்டான். வில்வித்தையில் ஆர்வமாக இருந்த கர்ணன் பாடசாலையில் ஆசிரியராக இருந்த துரோணரை நேரில் சென்று சந்தித்து யுத்த கல்வியை கற்றுத்தருமாறு பக்திபூர்வமாக தன்னுடைய வேண்டுகோளை தெரிவித்தான். ஊக்கமும் அறிவும் மிக படைத்திருந்த இச்சிறுவனுடைய பெற்றோர் பற்றிய வரலாற்றை துரோணர் விசாரித்தார். கர்ணன் தேரோட்டி ஒருவருடைய மகன் என தெரியவந்ததும் இப்பாடசாலையில் மாணாக்கனாக அவனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவனை புறக்கணித்தார். தோல்வியடைந்த கர்ணன் துயரத்துடன் தன் வீட்டிற்கு திரும்பி வந்தான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -18

துரோணர் விளக்கமாக கூறியது அனைத்து மாணவர்களுக்கும் புரிந்தது முதலில் துரோணர் யுதிஷ்டிரனை கூப்பிட்டு வில்லில் அம்பை பூட்டி குறி வைக்கும்படி கூறினார். யுதிஷ்டிரன் அம்பால் குறி வைத்த பின்பு துரோணர் அவரிடம் உனக்கு என்ன தெரிகிறது என்று கேள்வி கேட்டார். அதற்கு யுதிஷ்டிரன் எனக்குப் பக்கத்தில் தாங்கள் இருக்கின்றீர்கள். சுற்றிலும் மரங்கள் இருக்கின்றன. மேலே முக்கோணமாக மூன்று கிளைகள் தெரிகின்றது. அதனுள் பறவை போன்ற அமைப்பு தெரிகின்றது என்று சொல்லிக்கொண்டே சென்றான். உடனே துரோணர் யுதிஷ்டிரனைப் பார்த்து நீ அம்பை எய்ய வேண்டாம் தனியாக சென்று அமர்வாயாக என்று சொல்லி உத்தரவிட்டார். அடுத்தபடியாக துரியோதனன் அழைக்கப்பட்டான். அவனும் அதே இடத்தில் இருந்து வில்லில் அம்பை பூட்டி குறி வைத்தான். என்ன பார்க்கிறாய் என்று துரியோதனனைப் பார்த்து கேட்டார். யுதிஷ்டிரன் கூறியதைப் போலவே துரியோதனும் கூறினான். அவனையும் அம்பு எய்ய வேண்டாம் எழுந்து செல் என்று உத்தரவிட்டார். மூன்றாவது முறையாக பீமனுடைய முறை வந்தது. பீமனைத் தொடர்ந்து அதே கேள்விகளும் விடைகளும் அடுத்தடுத்த மாணவர்களிடையே தொடர்ந்து வந்தது. அனைவரும் அம்பு எய்யாமல் அருகில் சென்று அமர்ந்தார்கள்

அர்ஜுனனுடைய முறை வந்தது. என்ன பார்க்கிறாய் என்று விளக்கமாக சொல் என்று அர்ஜுனனை பார்த்து துரோணர் கேட்டார். அதற்கு அர்ஜுனன் பறவை என்று மட்டும் பதிலளித்தான். என்ன பார்க்கின்றாய் என்று நன்றாக விளக்கு என்று துரோணர் அர்ஜுனனை பார்த்து கூறினார். அர்ஜுனன் ப என்று மட்டும் சொன்னான். அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. என்ன என்ன பார்க்கின்றாய் என்று துரோணர் அர்ஜுனனை அதட்டினார். அர்ஜுனனிடம் இருந்து விடை ஒன்றும் வரவில்லை. அவனுடைய மனது குறியின் மீது மட்டுமே இருந்தது. துரோணர் அம்பை விடு என்றார். அம்பு குறியை துளைத்துக்கொண்டு போனது. இந்த நிகழ்வு மாணவர்களிடையே இருந்த பாகுபாட்டை நன்கு விளக்கி காட்டியது. மனதை ஒருமுகப்படுத்துவதில் அர்ஜுனன் தலை சிறந்தவனாக திகழ்ந்தான். யார் ஒருவன் தன் மனதை அடக்கி ஒருமுகப்படுத்தி தனது பயிற்சியில் ஈடுபடுகின்றானோ அப்பயிற்சியில் அவன் மேன்மை அடைந்தவன் ஆகின்றான்

துரோணர் மாணாக்கர்களை அழைத்துக் கொண்டு நதிக்கரைக்கு நீராடச் சென்றார். நீரில் மூழ்கி அவர் நீராடிய போது முதலை ஒன்று அவர் காலை பிடித்துக் கொண்டது. தம்மை விடுவித்துக் கொள்ளும் திறமை துரோணருக்கு இருந்தது ஆயினும் ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர் போல அவர் பாசாங்கு பண்ணி சிஷ்யர்களை உதவிக்கு வரும்படி அழைத்தார். ஆச்சாரியாரின் நிலையைப் பார்த்த ராஜகுமாரர்கள் அனைவரும் பரபரப்பும் பதைபதைப்பும் மனக்குழப்பம் உடையவர்களாக அங்குமிங்கும் ஓடினர். அர்ஜுனன் ஒருவன் மட்டுமே மனம் கலங்காது இருந்தான். ஐந்து அம்புகளை விடுத்து முதலையை துண்டு துண்டாக வெட்டி தள்ளினான். விடுபட்ட ஆச்சாரியார் மகிழ்வுடன் அர்ஜுனனை பாராட்டினார். பிரம்மாஸ்திரம் உட்பட பல அஸ்திர சாஸ்திர நுட்பங்களை அர்ஜுனனுக்கு புகட்டி வந்தார். நெருக்கடியான சூழ்நிலை வந்தால் மட்டுமே மேலான இந்த அஸ்திர சாஸ்திரங்களை பயன்படுத்த வேண்டும். சாமானியமான சூழ்நிலையில் பயன்படுத்தக்கூடாது என்று அர்ஜுனனுக்கு பாடம் புகட்டி வந்தார். மேலும் சில அஸ்திரங்களை மனிதர்கள் மீது பிரயோகிக்க கூடாது என்றும் ராட்சஷர்கள் போன்ற எதிரிகள் மீது மட்டுமே அத்தகைய அஸ்திர சாஸ்திரங்களை கையாள வேண்டுமென்றும் அவனுக்கு பாடம் புகட்டி வந்தார். அவ்வாறு இல்லாமல் முறையில்லாமல் அந்த அஸ்திர சாஸ்திரங்களை உபயோகப்படுத்தினால் உலகுக்குக் கேடு விளைவிக்கும். அவ்வாறு உலகுக்குக் கேடு செய்பவன் பெரும் குற்றவாளி ஆவான் என்றும் அர்ஜுனனுக்கு பாடம் புகட்டி வந்தார்.