அன்புக்கும் நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டவன் பெருமாள்

ஒரு நாள் அக்பர் அரசவையில் அக்பரும் பீர்பாலும் பேசி கொண்டிருக்கும்போது அக்பர் கேட்டார் பீர்பாலே இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா? அதற்கு பீர்பால் அரசே அவருக்கு ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன் கேட்கிறீர்கள் என்றார். அக்பர் இல்லை ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததர்காவா உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும் நீர் கூறியது போல் ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றி இருக்கலாமே? அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும்?

இதற்க்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார் அதை பார்த்ததும் அக்பருக்கு ஒரு சந்தோசம் பீர்பாலே பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று. ஒரிரு நாட்கள் சென்றன. அக்பரும் அவர் குடும்பத்தாரும் அவர்களுடன் பீர்பாலும் சில மெய் காப்பாளர்களும் கங்கை கரையை கடப்பதற்கு படகில் சென்று கொண்டிருந்தனர். அக்பரின் மூன்று வயது பேர குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த பீர்பால் படகு ஆழமான பகுதிக்கு வந்ததும் பீர்பால் படகோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும் சைகை காட்டிவிட்டு அக்பரின் பேரனை கங்கையில் தூக்கி போட்டுவிட்டார். பதறிய அக்பர் உடனே நீரில் குதித்து தன பேரனை காப்பாற்ற துணிந்தார். அவரோடு சேர்ந்து பீர்பால் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து அக்பரையும் குழந்தையும் தூக்கி வந்து படகில் சேர்த்தான். படகில் பேரனுடன் ஏறிய அக்பர் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு பீர்பால் என்ன இது நீயா இப்படி என் பேரனை கொல்ல துணிஞ்ச என்னால நம்பவே முடிலயே சொல்லும் என்ன காரணத்துக்காக என் பேரனை தண்ணீர்ல தூக்கி போட்டீர் சொல்லும்? என்றார் கோபமாக.

பீர்பால் அமைதியாக உங்களுக்கு திருமாலை பத்தி தெரியனும் என்பதற்காக அப்படி செஞ்சேன் அரசே என்றார். அக்பர் பீர்பாலே என்ன விளையாடுறியா நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் உமது திருமாலை நான் தெரியுறதுக்கும் என்ன சம்மந்தம். பீர்பால் அரசே மன்னித்துக்கொள்க நீங்க அன்று ஒரு நாள் உங்கள் கடவுள் திருமாலுக்கு சேவகர்களே இல்லையா அவர்தான் வந்து யானையை காப்பாற்றணுமான்னு கேட்டிங்களே ஞாபகம் இருக்கா உங்களுக்கு? அக்பர் ஆமாம் அதுக்கும் இன்று நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் என்ன சம்மந்தம்? பீர்பால் அரசே கொஞ்சம் யோசித்து பாருங்கள் என்னையும் சேர்த்து இந்த படகில் உங்களுக்கு 10 சேவகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிற்பிக்காமல் நீங்களே உங்கள் பேரனை காப்பற்ற தண்ணீரில் குதித்து விட்டீர்கள் ஏன் அரசே? எங்களை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டார். அக்பர் கொஞ்சம் கோபம் தணிந்து அப்படி இல்லை பீர்பால் என் பேரன் மேல் அளவு கடந்த பாசம் வச்சுருக்கேன்னு உனக்கு தெரியும். நீர் திடிர்னு தண்ணீர்ல அவனை தூக்கி போட்டதால் எனக்கு அவனை காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்ததே தவிர உங்களுக்கு உத்தரவிட்டு அவனை காப்பாற்ற சொல்லும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லமால் நானே குதித்து அவனை காப்பாற்றினேன் என்றார்.

பீர்பால் புன்னகையுடன் அரசே இந்த நாட்டை ஆளும் உங்களுக்கே இவளோ பாசம் இருக்கும் போது அண்ட சாகசரங்களையும் ஆளும் எங்கள் திருமாலுக்கு எவளோ பாசம் இருக்கும் உயிர்கள் மேல். அதனால்தான் எத்தனை சேவகர்கள் இருந்தாலும் தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான். அரசே இப்பொழுது புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையை காப்பாற்றினார் என்று. நான் நீரில் வீசிய உங்கள் பேரனை காப்பற்ற இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன் தவறு இருந்தால் மன்னியுங்கள் அரசே என்றார். அக்பர் இல்லை பீர்பால் நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். உங்கள் கடவுளை பற்றி தவறாக எண்ணி இருந்தேன் உங்கள் கடவுள் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார் நெகிழ்ச்சியாக

அன்புக்கும் நம்புபவர்களுக்கும் பகவான் கட்டுண்டவன் கூப்பிட்ட குரலுக்கு தானை வந்து உதவுவான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -42

குந்தி தேவி தன் வாழ்க்கையில் உண்மைக்கு மாறானது எதையும் சொன்னது இல்லை. அவர் வார்த்தையும் காப்பாற்றப்படவேண்டும். திரோபதியின் கர்மபலன் தீர வேண்டும். எனவே நீங்கள் ஐவரும் திரோபதியை திருமணம் செய்து கொள்ளுங்கள். வருடத்திற்கு ஒருவருடன் மனைவியாய் திரொபதி இருப்பாள். ஒரு வருடம் முடிந்ததும் மீண்டும் கன்னியாவாள். அவள் சிவனிடம் பெற்ற வரத்தின் மகிமையே அதற்கு காரணம். கணவன்மார்கள் ஐவருக்கும் திரோபதி பொதுவாய் இருந்தாலும் அவளுடைய கற்பு ஒரு நாளும் பட்டுப்போகாது. அவளுடைய கற்பு அலாதியாக அவளுக்கே உரியதாகும். எனவே இத்திருமணத்திற்கு அனுமதி கொடுக்கலாம். இவர்களின் கர்மபலன் தீருவதற்கு நாம் அனைவரும் துணையிருப்போம் என்று வியாசர் கூறினார். அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். வியாசர் விடைபெற்றுச் சென்றார்.

அந்தி வேலை வந்தது. அன்று பகல் முழுவதும் நிகழ்ந்த செயல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து அமைதி நிலவியது. அப்போது அங்கு கிருஷ்ணரும் அவருடைய தமையன் பலராமனும் அவர்களுடைய அத்தை குந்திதேவியை தரிசித்து தங்களுடைய வணக்கத்தை செலுத்துவதற்கு குடிசைக்கு வந்தனர். குந்திதேவி தன் மைந்தர்களாகிய பாண்டவர்களை அவ்விருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அப்போது தான் அவர்கள் பரஸ்பரம் முதல் தடவை ஒருவரை ஒருவர் பார்க்கின்றார்கள். வயதை அனுசரித்து முறையாக அவர்கள் ஒருவரை ஒருவர் வணங்கி கொண்டனர். அப்போது தொடங்கிய உறவு எப்பொழுதும் நிலைத்து இருப்பதற்கு ஏற்றவாறு அமைந்தது. மாறுவேடத்தில் வாழ்ந்து வரும் பாண்டவர்களுக்கு அதிவிரைவில் நல்ல காலம் வரப்போகிறது என்றும் அது வரையில் சிறிது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு தெய்வீக சகோதரர்களான கிருஷ்ணரும் பலராமரும் தங்களுடைய மாளிகைக்கு திரும்பிச் சென்றனர்.

பிராமணர்களாக வேடம் தரித்து திரௌபதியை அழைத்து வந்த பாண்டவர்களை பின்தொடர்ந்து வந்த திருஷ்டத்யும்னன் அங்கு நடந்தது அனைத்தையும் முற்றிலும் கவனித்தான். அவர்கள் பாண்டவர்கள் என்றும் அவர்கள் தாய் குந்திதேவி என்பதையும் அறிந்து மிக்க மகிழ்ச்சியுடன் அரண்மனைக்கு விரைந்து ஓடிச் சென்று தன் தந்தையிடம் தான் அறிந்து கொண்ட விஷயங்கள் அனைத்தையும் தெரிவித்தான். வேந்தனாகிய துருபத மன்னன் சுயவரத்தில் நிகழ்ந்த சம்பவங்களை குறித்து கவலையுடன் இருந்தான். அவனுக்கு திருஷ்டத்யும்னன் கொண்டு வந்த செய்தி மிகவும் அமைதியை அளித்தது. மகன் கூறிய அனைத்தும் உண்மையாக இருக்கவேண்டும் என்று அவன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். திருஷ்டத்யும்னன் கூறியது அனைத்தும் உண்மையாக இருந்தால் தன் வாழ்க்கையில் கொண்டிருந்த திட்டங்கள் யாவும் நிறைவேறும் என்று அம்மன்னன் மகிழ்ச்சி அடைந்தான். தனக்கு வாய்த்த புதிய உறவினர்களுக்கு துருபத மன்னன் விலை உயர்ந்த ஆடைகளை அனுப்பி வைத்தான். அவர்கள் அனைவரும் விருந்துக்கு அரண்மனைக்கு வர வேண்டும் என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தான்.

பாத நமஸ்காரம்

நாம் யார் காலிலோ விழுந்து வணங்குவது அல்ல பாத நமஸ்காரம். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற பாதத்தை பகவானுடைய தொண்டிற்கு உபயோகப்படுத்தினால் அதற்கு பாத நமஸ்காரம் செய்கிறாய் என்று அர்த்தம். சுவாமி காலில் விழுந்து சுவாமிக்கு என்ன ஆகணும்? உலகத்தில் சுவாமியின் பாதம் இல்லாத இடமே இல்லை. உலகம் பூரா சுவாமியின் கண், கைதான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் சுவாமியின் திருப்பாதங்கள், எங்கு பார்த்தாலும் சுவாமியின் திருக்கரங்கள். சுவாமி கொடுத்திருக்கிற கண்களைக் கொண்டு அனைத்தையும் கடவுளைப் பார்க்க வேண்டும். காதுகளை வைத்துக் கொண்டு கேட்கும் அனைத்தையும் கடவுளுடைய வாசகங்களாகக் கேட்கவேண்டும். கால்களை வைத்துக்கொண்டு நிறைய கோவில்கள் பாத யாத்திரை செல்லவேண்டும். தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும். நம்முடைய பாதங்களை நாம் அவனுக்கு வழிபாடாக பயன்படுத்துகிற நன்றிக்கடன் இருக்கிறதே அதுதான் உண்மையான பாத நமஸ்காரம்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -41

பாண்டவர்கள் ஐந்து சகோதரர்களும் மணமகள் திரௌபதியை தங்களுடன் அழைத்துக் கொண்டு தாங்கள் குடியிருந்த குடிசைக்கு அழைத்து வந்தனர். இவர்களின் பின்னே பாண்டவர்களுக்கு தெரியாமல் இந்த பிராமணன் யார் என்று அறிந்து கொள்ள திரௌபதியின் அண்ணன் திருஷ்டத்யும்னன் பின் தொடர்ந்து வந்தான். குடிசைக்கு வெளியே இருந்து அவர்கள் உரத்த குரலில் அம்மா என்று நாங்கள் ஒரு நூதானமான பிட்சை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறினார்கள். வீட்டுக்குள் இருந்த குந்திதேவி என்ன பிட்சை கொண்டு வந்திருக்கின்றார்கள் என்று பார்க்காமல் ஐந்து பேரும் உங்களுக்குள் பங்கிட்டு கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து பார்த்தார். அர்ஜூனனுடன் திரௌபதி நின்று கொண்டு இருந்தார். நடந்தவைகள் அனைத்தையும் யுதிஷ்டிரன் குந்திதேவியிடம் விளக்கமாக சொன்னான். அனைத்தையும் கேட்ட குந்திதேவி குழம்பிப்போனாள்.

குந்திதேவி தன் குழப்பத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் திரௌபதியை கட்டித் தழுவிக் கொண்டாள். திரௌபதியும் தனக்கு புதிதாக வாய்த்த மாமியார் குந்திதேவி பாதங்களைத் தொட்டு வணங்கினாள். பிறகு மூத்தவனாகிய யுதிஷ்டிரனிடம் குந்திதேவி தனது மனக் கவலையை வெளியிட்டார். உண்மைக்கு மாறானது எதையும் என் வாழ்நாளில் நான் சொன்னது கிடையாது. நீங்கள் கொண்டு வந்த பிட்சையை ஐந்து பேரும் பங்கீட்டு கொள்ளுங்கள் என்று எண்ணிப் பார்க்காது நான் சொல்லிவிட்டேன். திரௌபதி தான் அந்த பிட்சை என்பது இப்போது எனக்கு விளங்குகின்றது. நான் அப்படி சொல்லியபடியால் என்ன நிகழப்போகிறது என்று தெரியவில்லை என்று தனது கவலையை வெளிப்படுத்தினாள். சிறிது நேரம் தாயும் பிள்ளைகளும் சிந்தனையில் மூழ்கி இருந்தனர் அதன் பிறகு யுதிஷ்டிரன் தாயே தாங்கள் தயங்க வேண்டாம். பொல்லாங்கு ஏதும் நிகழாது என்று சொல்லிவிட்டு அர்ஜுனா நீ திரௌபதியை மணந்து கொள் என்று கூறினான் அதற்கு அர்ஜுனன் மூத்தவர் தாங்கள் இருக்கும் போது தங்களுக்கு திருமணம் ஆகாமல் நான் எப்படித் திருமணம் செய்து கொள்வது இது பொருந்தாது. தங்களின் திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினான்.

பாண்டவர்களும் குந்திதேவியும் இந்த சிக்கலை எப்படி சரி செய்வது என்ற குழப்பத்தில் இருந்தனர். அப்போது வியாசபகவான் இங்கு தோன்றினார். உங்களிடம் இருந்த குழப்பத்தை ஞானதிருஷ்டியில் அறிந்தேன். ஆகவே தர்மத்தின் போக்கை தெளிவுபடுத்த இங்கு வந்தேன் என்றார். பாண்டவர்களும் குந்திதேவியும் திரௌபதியும் வியாசபகவானை வரவேற்று வணங்கினார்கள். வியாசபகவான் அனைவரிடமும்
திரௌபதி பூர்வ ஜென்மத்தில் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவளுக்கு தரிசனம் கொடுத்த சிவபெருமான் என்ற வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு திரௌபதி தர்மத்தை கடைபிடிக்கும் நல்ல கணவன் வேண்டும் என்று இறைவனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் ஐந்து முறை மீண்டும் மீண்டும் கூறினாள். ஆகையால் இறைவனின் வரத்தின் படி அவளின் வினைபயனால் ஐந்து தர்மத்தை கடைபிடிக்கும் கணவன்மார்கள் அமைந்தாக வேண்டும். அந்த அமைப்பு பாண்டவர்களாகிய உங்களைக் கொண்டு நிகழ்கிறது. ஏனெனில் உங்கள் ஐவருக்கும் எதைக்கொண்டும் கருத்து வேறுபாடு கிடையாது. திரௌபதியின் வினைப்பயன் தங்கள் தாயின் சொல்வழியாக ஐவரும் திருமணம் செய்ய தூண்டுகிறது.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -40

கர்ணன் தனது சந்தேகம் தீர பிராமண வேடம் அணிந்த அருஜூனனிடம் சென்று நம்மில் யார் வில்வித்தையில் சிறந்தவர் என்று நமது திறமையை வெளிப்படுத்தும் பாங்கில் போட்டி போடலாம் என்று கர்ணன் கூப்பிட்டான். பிராமண வாலிபனும் அதற்கு சம்மதித்தான். இருவரும் அவரவர் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார். அதிவிரைவில் பிராமண வாலிபன் கர்ணனை விட வில்வித்தையில் சிறந்தவனாக தனது திறமையை காட்டினான். கர்ணன் பிராமண வாலிபன் வில்லித்தையில் சிறந்தவன் ஒத்துக்கொண்டு அர்ஜுனன் உயிரோடு இருந்தபோது அவன் கிட்டத்தட்ட என் தரத்தை ஒத்திருந்தான். இப்பொழுது பிராமணனாகிய நீயோ என்னை வென்று விட்டாய் பார்க்கவர் எனக்கு குரு ஆவார் உனக்கு குரு யார் என்று கேட்டான். அதற்கு பிராமண வேடத்தில் இருந்த அர்ஜூனன் என் குருவும் ஒரு பிராமணர் என்றான். இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் மன்னர்களுக்கு இடையில் ஓர் குழப்பம் உண்டாயிற்று.

துருபத மன்னனுடைய அரண்மனையில் சுயம்வரம் வெற்றிகரமாக நடந்து விட்டது. ஆனால் அங்கு வந்திருந்த வேந்தர்கள் அனைவரும் அதிருப்தி அடைந்தனர். அரசர்களிடம் க்ஷத்திரியன் பிராமணன் பற்றிய எண்ணமே அதற்குக் காரணமாய் இருந்தது. துருபதன் தன்னுடைய மகளை நாடோடி பிராமணன் ஒருவருக்கு மணம் முடித்துக் கொடுத்து அதன் வாயிலாக நம்மை வேண்டுமென்றே இங்கு வரவழைத்து அவமானப்படுத்தியுள்ளார். பொருத்தமான ராஜகுமாரன் ஒருவன் கிடைக்கவில்லை என்றால் துரோபதி தற்கொலை செய்து கொள்வதே சரியானதாகும். நாடோடி ஒருவனுக்கு மாலை சூட்டியது பெரும் தவறாகும். துருபதன் ஆயுள்காலம் முழுவதும் மறக்க முடியாத பாடம் ஒன்றை அவனுக்கு புகட்டவேண்டும் என்று வேந்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி துருபத மன்னனை தாக்கத் துவங்கினர்.

இந்த நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்பது துருபதனுக்கு விளங்கவில்லை. பரிதாபத்துடன் நாலா பக்கமும் பார்த்தான். அதேவேளையில் சுயம்வரத்தில் வெற்றி அடைத்திருந்த பிராமண வாலிபன் கர்ணனிடம் பேச்சை நிறுத்திவிட்டு மாமனாரான துருபத மன்னனை காப்பாற்றும் பொருட்டு அங்கு விரைந்தான். மேலும் பிராமண வேடம் அணிந்த அவனது யுதிஷ்டிரன் தவிர்த்து மூன்று சகோதரர்களும் நெருக்கடியில் அகப்பட்டுக் கொண்ட துருபதன் மன்னனைக் காப்பாற்ற விரைந்தனர். பிராமணர் அபிமானத்தை முன்னிட்டு மேலும் பல பிராமணர்கள் அங்கு குவிந்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் ஒதுங்கி இருக்கும்படி பணிவுடன் பாண்டவர்கள் வேண்டிக் கொண்டனர். ஒரு சிறிய போர் போல மல்லுக்கட்டே நிகழ்ந்தது. அங்கு குழுமியிருந்த அரசர்கள் அனைவரையும் இந்த நான்கு பிராமணர்களும் வெற்றிகரமாக சமாளித்தனர். இந்த நால்வரும் யார் என்பது கிருஷ்ணனுக்கு தெரியும். ஆகையால் மகிழ்வுடன் அவன் அதை வேடிக்கைப் பார்த்தார். பிறகு மன்னர்களை சமாதானப்படுத்த கிருஷ்ணன் முயன்றார். அங்கு இருந்த அரசர்களிடம் இங்கு நிகழ்ந்ததில் குறை ஏதும் இல்லை. க்ஷத்திரிய ஐதிகத்துக்கு உட்பட்டே துருபதன் அனைத்தையும் செய்திருக்கின்றான். துருபதன் தவறு எதும் செய்யவில்லை என்று கிருஷ்ணன் தெளிவாக விளக்கினார். குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -39

வேந்தர்களில் சிலர் வில்லையும் அம்புகளையும் அருகில் வந்து உற்றுப் பார்த்தனர். வியப்பின் அறிகுறி அவர்களின் முகங்களில் தாண்டவமாடியது. ஒன்றும் பேசாமல் பின்வாங்கினர். மேலும் சிலர் வில்லை கையில் தூக்கி பார்த்தனர். அஞ்சி அவர்களும் பின்வாங்கினர். சிசுபாலன் மற்றும் ஜராசந்தன் என்னும் அரசர்கள் அந்த வில்லை தூக்கி அதில் அம்மை ஏற்றி இலக்கை அடிக்க முயன்றனர். ஆனால் பெரும் தோல்வி அடைந்தார்கள். பகட்டே வடிவாக தெரிந்த துரியோதனன் உறுதியான தீர்மானத்துடன் இலக்கை நோக்கி அடித்தான். ஆனால் அதில் அவனும் வெற்றி காணவில்லை. கர்ணனுடைய முயற்சி மிக நேர்த்தியாக இருந்தது. மேடையை நோக்கி அவன் ஒரு வேங்கையை போன்று கம்பீரமாக நடந்தான். சுழன்று கொண்டிருந்த சக்கரத்தின் துவாரத்தின் வாயிலாக அம்பை அவன் சிரமம் ஏதுமின்றி செலுத்தினான். ஆனால் இலக்கை மட்டும் அடிக்க அவனால் முடியவில்லை. போட்டிக்கு வந்த மன்னர்கள் அனைவரது முயற்சியும் தோல்வியில் முடிந்தது. சுயவரம் தோல்வி அடையும் போல தென்பட்டது.

திருஷ்டத்யும்னன் மீண்டும் ஒருமுறை மேடையில் வந்து பிரகடம் பண்ணினான். இவ்வளவு நேரம் நடந்த போட்டியானது நாட்டை ஆளும் வேந்தர்களுக்கு என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இனி இது அனைவருக்கும் பொதுவாக அமைகிறது. பிராமணர்கள் க்ஷத்திரியர்கள் வைசியர்கள் சூத்திரர்கள் ஆகிய யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம். வில்லால் இலக்கை அடிக்கின்றவர்களுக்கு என் சகோதரி மனைவியாவாள் என்று அறிவித்தான். பிராமணர்களின் கூட்டத்தில் இருந்து ஒருவன் எழுந்து நின்றான். அவனுக்கு பலர் உற்சாகம் ஊட்டினார்கள். வேறு சிலர் அவனை அதட்டி உட்கார சொல்லினர். ஆனால் அவன் அர்ஜூனன் என்பதை கிருஷ்ணன் அறிந்துகொண்டான். திரௌபதியின் விவாகம் நிச்சயமாக நடைபெறப்போகிறது என்று கிருஷ்ணன் எண்ணினான். கூட்டத்தில் இருந்து வந்தவனுடைய நடையில் ராஜரீதி மிளிர்ந்தது. வில்லையும் அம்புகளையும் நெருங்கி அதற்கு தலைவணங்கினான். பின்பு வில்லை கையில் எடுத்து ஓசையை கிளப்பினான். பிறகு ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து அம்புகளையும் எய்தான். மீன் போன்று அமைக்கப்பட்ட குறியானது கீழே தரையில் விழுந்தது. பிராமணனாக வேடம் போட்டு வந்திருந்த அர்ஜூனன் வெற்றி பெற்றான்.

கொட்டகை முழுவதிலும் திடீரென்று கர்ஜனை முழங்கியது. அங்கு இருந்தவர்கள் அனைவரையும் விட பிராமணர்கள் யாண்டும் க்ஷத்திரர்களுக்கும் மேலானவர்கள் என்ற சொல் காதைத் துளைத்தது. திரௌபதி அன்னப்பறவைக்கு நிகராக மெதுவாக நடந்து வந்து பிராமண வாலிபன் நின்று கொண்டிருந்த இடத்தை அணுகி அவனுக்கு மாலை சூட்டினாள். அப்போது சங்குகள் ஒலித்தன. துத்தாரிகள் கதறின. பேரிகைகள் கொட்டின. காளங்கள் கத்தின. தம்பட்டங்கள் அடித்தன. வாத்திய முழக்கங்கள் வானை எட்டியது. தம்பதிகள் மீது பூக்கள் தூவப்பட்டது. மணமகன் மணமகளின் கரத்தைப் பற்றிக்கொண்டு மேடையிலிருந்து கீழே இறங்கினான். தகுதி வாய்ந்த மருமகன் தனக்கு வாய்த்தது குறித்து திருபத மன்னன் மிக மகிழ்வு அடைந்தான். இதனை பார்த்துக் கொண்டிருந்த கர்ணன் ஏமாற்றமடைந்தான். அதற்கு காரணம் இரண்டு இருந்தது. வில்வித்தையில் தன்னை விட மேன்மையானவன் ஒருவன் இருக்கின்றான் என்ற எண்ணம் ஒன்று. உலகறியாத பிராமணன் ஒருவன் அக்கலையில் உச்ச நிலையை எய்தியது மற்றொன்று. உண்மையில் அவ்விளைஞன் வில் வித்தையில் வல்லவனா அல்லது குருட்டுப்போக்கில் வெற்றி பெற்றானா இன்னும் சந்தேகம் கர்ணனுக்கு வந்தது.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -38

பாஞ்சால நாட்டின் தலைமை பட்டணத்தில் சுயவரத்திற்க்காக மகத்தான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. பிரபலம் வாய்ந்த ராஜகுமாரர்களுக்கு எல்லாம் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. துரியோதனனை தலைவனாகக் கொண்டு கௌரவர்வர்கள் அங்கு வந்திருந்தார்கள். கர்ணனும் வந்திருந்தான். சகோதரர்களாகிய பலராமனும் கிருஷ்ணனும் அங்கு வந்திருந்தார்கள். வந்திருந்த மன்னர்களில் பெரும்பாலோனோர் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை வேடிக்கை பார்ப்பதற்க்காக வந்திருந்தனர். போட்டி போடுவதற்கும் பலர் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் அமர்வதற்கு பொருத்தமான இட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அழைப்பு இல்லாதவர்களாகவும் யாருக்கும் அறிமுகமாகாத பாண்டவர்கள் இந்நகரத்திற்கு வந்தார்கள். ஒரு குயவனுடைய வீட்டில் அவர்கள் தங்கியிருப்பதற்கு இடம் தேடிக் கொண்டார்கள். பிட்சையாக அகப்பட்டதை அவர்கள் பூசித்து வந்தார்கள். வீதிகளில் அலைந்து திரிந்து அங்கு நிகழும் சுயவரத்தைப் பற்றிய விவரங்களை எல்லாம் அவர்கள் சேகரித்து கொண்டார்கள்.

அர்ஜுனன் மட்டும் உயிரோடு இருப்பானாகில் அவன் திடீரென்று கவர்ச்சிகரமாக மேடையில் தோன்றி மற்ற போட்டியாளர்களை எல்லாம் பின்வாங்கும் படி அவன் தோற்கடித்தான் என்னும் பேச்சு மக்களிடையே இருந்தது. குறிப்பிட்ட சுயவர நாள் வந்தது. மேடை மிக அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நறுமணம் எங்கும் தவழ்ந்து கொண்டிருந்தது. இனிய இசை எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மன்னாதி மன்னர்கள் கவர்ச்சிகரமான பாங்கில் அவரவர்களுக்குரிய ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். அதற்கு நேர்மாறாக மாறுவேடம் பூண்டிருந்த பாண்டவர்கள் தனித்தனியாக வந்து பிராமணர்களுக்கு உரிய இடங்களில் அமைதியாக அமர்ந்து கொண்டனர். அவர்கள் தனித்தனியாக வந்ததற்கு காரணம் ஒன்று இருந்தது. அனைவரும் சேர்ந்து வந்தால் நிச்சயமாக உலகத்தவர்கள் அவர்களை அடையாளம் கண்டு பிடித்துவிடுவார்கள். ஆகையால் அவர்கள் தனித்தனியாக வந்து அமர்ந்து கொண்டனர்.

அகன்ற கொட்டகையின் மத்தியிலே அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு திருஷ்டத்யும்னன் தன்னுடைய சகோதரி திரௌபதியை அழைத்து வந்தான் பிறகு போட்டியிடுவதற்காக வந்திருந்தவர்களின் பெயர்களை வாசித்தான். திரௌபதி அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தாள். தெய்வீக சௌந்தர்யம் அவளிடம் இயல்பாக அமைந்திருந்தது. அவள் அணிந்திருந்த ஆடை அந்த அழகை மேலும் அதிகரிக்கும்படி செய்தது. பூமாலை ஒன்றை அவள் கையில் ஏந்தியிருந்தாள். வெற்றி பெற்ற ராஜகுமாரனுக்கு அந்த மாலையை அவள் சூட்டுவாள். திரௌபதி தன் கண்பார்வையை கீழே தரையின் மீது வைத்தவளாக அமைதியுடன் நின்று கொண்டிருந்தாள்.

போற்றுதற்குரிய மன்னர்கள் இருக்கும் பேரவையில் திருஷ்டத்யும்னன் பேச ஆரம்பித்தான். எல்லோருடைய கவனத்தையும் பணிவுடன் வேண்டுகிறேன் இதோ இங்கு வில் இருக்கிறது. 5 அம்புகள் இருக்கின்றன. ஒரு துவாரத்தைச் கூடிய சக்கரம் ஒன்று மேலே சுழன்று கொண்டு இருக்கிறது. அதற்கு மேல் இலக்கு அமைக்கப்பட்டிருக்கின்றது. சுழன்று கொண்டிருக்கின்ற சக்கரத்தின் வாயிலாக மேலே இருக்கின்ற இலக்கின் மேல் எய்பவர்கள் என் சகோதரியை திருமணம் முடிந்து கொடுக்கின்றோம் இது என் உறுதிமொழி என்று திருஷ்டத்யும்னன் பேசி முடித்தான். வேந்தர்கள் அனைவரும் வில்லையும் அம்பையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது கிருஷ்ணனுடைய கருத்து சபையில் அமர்ந்து இருந்தவர்கள் மீது சென்றது. தன் பார்வையை எல்லா பக்கமும் அவன் செலுத்தினான். பிராமணர்களிடையே பாண்டவ சகோதரர்கள் மாறுவேஷத்தில் அமர்ந்திருப்பதை கிருஷ்ணன் கண்டு கொண்டான். அவர்கள் உயிரோடு இருப்பதை பார்த்து அகமகிழ்ந்து கொண்டான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -37

குந்திதேவி பிராமணரையும் அழைத்துக்கொண்டு பீமனிடம் சென்று அனைத்தையும் கூறினாள். பீமன் அசுரனை அழித்துவிடுவதாக உறுதி கூறினான். அடுத்த நாள் காலையில் ஒரு வண்டி நிறைய உணவு அவர்களின் வீட்டருகே கொண்டு வரப்பட்டது. பகன் என்னும் அசுரன் வசித்து இருந்த இடத்திற்கு பீமன் அந்த வண்டியை ஓட்டிச் சென்றான். வேண்டுமென்றே செல்லும் வழியில் காலதாமதம் செய்தான். பகனுடைய குகைக்கு அருகில் வந்ததும் கொண்டு வந்திருந்த உணவு வகைகளை தானே திருப்தியாக புசித்தான். தனது உணவுகளை ஒரு மனிதன் சாப்பிடுவதைப் பார்த்த அசுரன் அந்த மனிதனை அழிப்பதற்கு விரைந்து ஓடி வந்தான். பசிப் பிணிக்கு உட்பட்டிருந்த பீமன் கொண்டு வந்த உணவு முழுவதையும் சாப்பிட்டு முடிக்கும் வரையில் அவனை ஒரு கையால் பிடித்து சமாளித்தான். பிறகு சண்டை தொடங்கியது. யானை கரும்பு ஒன்றை இரண்டாக கிழிப்பது போன்று அந்த அரக்கனை இரண்டாக கிழித்து அசுரனின் பிரேதத்தை வண்டியில் பொட்டு நகரத்தின் வாயில் அருகில் கொண்டு வந்து நிறுத்தினான் பீமன். ஊரார் அனைவரும் அதை பார்க்க வேண்டும் என்பது அவனது எண்ணம். தேவதை ஒன்று அந்த அரக்கனைக் கொன்று தன்னை காப்பாற்றியது என்று பிராமண விருந்தினர் ஊராருக்கு எடுத்துரைத்தார். பாண்டவர்கள் இன்னும் சிறிது காலம் மறைத்து இருக்க வேண்டும் என்பதே அதற்கு காரணம். ஏகசக்ர நகரம் அன்று முதல் நரபலியில் இருந்து விடுவிக்கப்பட்டது.

மாறுவேடம் பூண்டிருந்த பாண்டவர்கள் அந்த வீட்டு பிராமணரின் பாராட்டுக்குரிய விருந்தினர்களாக மகிழ்வுடன் வாழ்ந்து வந்தார்கள். வேதங்களை கற்பதிலும் ஏனைய சாஸ்திரங்களை ஆராய்ச்சி பண்ணுவதிலும் மறைந்திருந்த காலத்தில் நேரத்தை செலவிட்டார்கள். காலம் சிறிது நாள் சென்றது காலம் எப்படி கடந்து போயிற்று என்பது அவர்களுக்கே விளங்கவில்லை. நூல் ஆராய்ச்சியில் ஆழ்ந்து மூழ்கி இருந்ததே அதற்கு காரணம்.

சாஸ்திரங்களை ஆழ்ந்து ஆராய்ந்து படித்த பிராமண பண்டிதன் ஒருவன் ஒவ்வொரு நாடாக தேச சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போது ஏகசக்ர நகரத்தில் பாண்டவர்களை அவர்களுடைய வீட்டில் வந்து சந்தித்து சில காலம் தங்கினான். அங்கு அவன் வசித்து வந்த குறுகிய காலத்தில் அரிய பெரிய விஷயங்களைப் பற்றிய அற்புதமான சொற்பொழிவுகள் நிகழ்தினான். வேறு நாட்டில் நடக்கின்ற சம்பவங்கள் சிலவற்றை பற்றியும் பேசினான். அப்பொழுது பாஞ்சால நாட்டு மன்னனாகிய துருபதனை பற்றியும் அவளது மகளாகிய திரௌபதியை பற்றியும் பேசினான். அந்த அழகிய பெண்ணுக்கு சுயவரம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதலில் தலைசிறந்த வில்லாலியான அர்ஜுனனுக்கு அப்பெண்ணை மணந்து கொடுக்க அவளது தந்தை துருபதன் தீர்மானித்திருந்தான். ஆனால் வாரணவதத்தில் நடந்த பரிதாபகரமான முடிவை கேள்வியுற்று அவனுடைய மனம் உடைந்து போயிற்று. எனினும் ஒருவேளை அர்ஜுனன் மாண்டு போகாது உயிரோடு இருந்தால் அவன் இந்த சுயம்வரத்திற்கு வந்து சேர வேண்டும். என்பது அதனுடைய ஆவலாக இருக்கிறது. இவ்வாறு புதிதாக வந்திருந்த பண்டிதன் துருபதனைப்பற்றியும் திரொபதியைப்பற்றியும் கூறினான். மாறுவேடம் பூண்டிருந்த பாண்டவர்களில் உற்சாகத்துடன் இதனை கேட்டு திரௌபதி அர்ஜுனனுக்கு உரியவள் என்று உணர்ந்தார்கள். வியாச மகரிஷி மறுபடியும் அவர்களிடம் பிரசன்னமாகி அவர்களை ஏகசக்ர நகரத்தில் இருந்து புறப்பட்டு துருபதன் ஆண்டுவந்த பாஞ்சால நாட்டு தலைமை பட்டனமாகிய கம்பிலியாவுக்கு புறப்பட்டுப் போகும்படி அவர்களுக்கு புத்திமதி கூறினார். பாண்டவர்கள் பாஞ்சால நாட்டு தலைமை பட்டணமாகிய கம்பிலியாவுக்கு புறப்பட்டு போக தீர்மானித்தார்கள்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -36

குந்தி தேவியும் பாண்டவர்களும் காட்டிற்குள் நெடுந்தூரம் நடந்து சென்று இறுதியாக ஏகசக்கர நகரத்தை அடைந்தார்கள். அங்கு அவர்கள் வசித்திருப்பதற்கு ஒரு பிராமணனுடைய இல்லத்தில் இடம் கிடைத்தது. துறவறம் வாழ்க்கை வேசத்திற்க்கு ஏற்றவாறு ஏகசக்ர நகரத்தில் பிட்சை எடுத்து அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். எனினும் இயல்பாக அவர்களிடம் அமைந்திருந்த ராஜரீதியை மறைத்துக் கொள்ள அவர்களால் இயலவில்லை. அந்நகரத்தில் வசித்து இந்த அறிஞர்கள் அவர்களை சரியாக மதிப்பீட்டார்கள். இவர்கள் பேரியல்பு வாய்க்கப்பெற்ற பெருமக்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக துறவிகள் போன்று வேஷமிட்டு இருக்கின்றார்கள் என்பது அவர்களுடைய யூகமாக இருந்தது. ஒரு நாளைக்கு ஐந்து புதல்வர்கள் பிச்சை எடுத்து வந்த அன்னத்தை சரிபாதி பீமனிடம் கொடுத்துவிட்டு மறுபாதியை ஏனைய சகோதரர்களுக்கு குந்திதேவி பங்கிட்டுக் கொடுத்தாள். அப்படி இருந்தும் பீமனுக்கு அந்த உணவு போதவில்லை. ஓரளவு பட்டினியுடன் அவன் தாக்குப்பிடித்து வந்தான்.

ஒரு நாள் பாண்டவர்கள் ஐவரும் பிட்சை எடுக்க நகரத்திற்குள் சென்றனர். அப்போது குந்திதேவி வசித்துவந்த வீட்டின் உட்புறத்தில் அழுகை சத்தம் அவள் காதுக்கு எட்டியது. உள்ளே சென்று அவள் அந்த அழுகைக்கு காரணம் என்ன என்று அவள் கேட்டாள். அதற்கு அவர்கள் பகன் என்னும் அசுரன் ஒருவன் இந்நகரத்தின் அருகில் இருக்கும் காட்டுப் பகுதியில் வசித்து வருகின்றான். அவன் இந்த ஊரில் நிகழ்த்திய உயிர்சேதம் வரம்பு கடந்து இருந்தது. ஆகையால் அந்த நஷ்டத்தை குறைத்துக் கொள்வதற்காக ஊரார் அந்த அரக்கனுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். அந்த உடன்படிக்கையின் படி அந்த ஊருக்கு எந்த ஒரு தீங்கும் நிகழாதவாறு அந்த ஊரை காப்பாற்றுவது அரக்கனுடைய கடமையாகும். அதற்கு கைமாறாக அரக்கனுக்கு வாரத்தில் ஒரு வண்டி உணவும் இரண்டு காளைகளும் ஒரு மானுடனும் அவனுக்கு உணவாக அளிக்கப்பட வேண்டும். இந்த நகரத்தில் முறைப்படி ஒவ்வொரு குடும்பமும் உணவையும் மானுடன் ஒருவனையும் பலியாகக் கொடுத்து விடுதல் வேண்டும் என்பது ஊரின் உத்தரவு. அடுத்த நாள் காலையில் அவ்வாறு நரபலி தருகின்ற முறை எங்களது குடும்பத்திற்கு உரியது. குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் தாயும் மகனும் மகளும் ஒருவரை ஒருவர் காப்பாற்றும் பொருட்டு நான் போகின்றேன் என்று முந்திக் கொண்டு இருக்கின்றோம். எங்களில் ஒருவரை இழக்கப்போகின்றோம் என்பதை முன்னிட்டு அழுகின்றோம் என்று கூறினார்கள்.

அக்குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த சங்கடத்தை நிவர்த்தி பண்ணுவதாக குந்திதேவி உறுதி கூறினாள். தன்னுடைய புதல்வர்களை ஐவரில் ஒருவனை அன்றைக்கு உணவாக அனுப்பி வைக்கிறேன் என்று அவள் கூறினாள். அதற்கு அக்குடும்பம் ஒத்துக்கொள்ளவில்லை. விருந்தினர்களை பலி கொடுப்பது தர்மமாகாது. எப்படியும் விருந்தினர்களை காப்பாற்றுவதே எங்களுக்குரிய தர்மம் என்பதால் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். அதற்கு அவர்களிடம் குந்திதேவி ஒரு செய்தியை கூறினாள். எனது ஐந்து புதல்வர்களையும் தேவர்கள் சிலர் காப்பாற்றி வருகின்றார்கள். ஆகையால் அவர்கள் வழியாக இவ்வூருக்கு ஏதேனும் விமோசனம் கிடைக்கும் என்று அவர்களுக்கு சமாதானம் கூறி அவர்களை சம்மதிக்க வைத்தாள். அவர்களும் சிறிது தயக்கத்திற்கு பிறகு ஒத்துக்கொண்டனர்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -35

காட்டிற்குள் இருந்த பாண்டவர்கள் ஐவரும் குந்திதேவியுடன் அடுத்து எங்கு செல்லலாம் என்று கலந்தாலோசித்துக் கொண்டே காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களை இடும்பியும் பின் தொடர்ந்து சென்றாள். இதனைக் கண்ட குந்திதேவி எதற்காக எங்கள் பின்னால் வருகின்றாய் என்று கேட்டாள். அதற்கு இடும்பி பீமன் மீது நான் காதல் கொண்டுள்ளேன். அவரோ தன் தாய் தமையன் ஆகியோரிடையே அனுமதியின்றி என் காதலை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டார். தாயே என் மீது இரக்கம் வையுங்கள். நான் வேண்டுவது தர்மமே. என்னை தாங்கள் புறக்கணித்தால் நான் மாண்டு போவேன். என் மீது இரக்கம் வைத்து என்னை ஏற்றுக்கொண்டீர்கள் என்றால் நான் உங்களுக்கு விசுவாசத்துடன் இருப்பேன். நீங்கள் எங்கு போக விரும்புகிறீர்களோ அங்கு உங்களை என்னால் தூக்கி செல்ல முடியும். உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருகின்றேன் என்றாள். குந்திதேவிக்கு அவள் மீது இரக்கம் உண்டாயிற்று.

மூத்தவன் யுதிஷ்டிரனோடு இந்த விஷயத்தை பற்றி குந்திதேவி கலந்து பேசினாள். அதன் பிறகு பீமன் சிறிது காலம் இடும்பியுடன் வாழ அனுமதித்தாள். இடும்பிக்கு இப்பொழுது பரம திருப்தி உண்டாயிற்று. இடும்பி அவர்கள் அனைவரையும் ஸாலிஹோத்ரத் என்னும் காட்டிற்கு தூக்கிச் சென்றாள். அங்கு அவர்களுக்கு குடில் ஒன்றை கட்டிக் கொடுத்தாள். அவர்கள் வாழ்வதற்கேற்ற வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்தாள். காலையில் இருந்து மாலை வரை இடும்பி பீமனைத் தன்னோடு அழைத்துச் சென்று பல இடங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தாள். சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு பீமனுடன் அவர்கள் வசிக்கும் குடிசைக்கு திரும்பி வந்தாள். பீமனுக்கும் இடும்பிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. பயங்கரமான கண்களுடனும் பெரிய வாயுடனும் அம்பு போன்ற நீண்ட காதுகளுடனும் பார்ப்பதற்குப் பயங்கரமாகவும் ஒரு மகனை அவள் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு அவர்கள் கடோத்கஜன் என்று பெயரிட்டார்கள். ராட்சசப் பெண்கள் தாங்கள் விரும்பிய வடிவை அடையும் சக்திவாய்ந்த பிள்ளையைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் தங்கள் வடிவை மாற்றிக் கொள்வார்கள். அவன் குழந்தையாக இருந்தாலும் பிறந்த அந்த மணிநேரத்திலேயே ஓர் இளைஞனுக்கு உரிய வளர்ச்சியை அடைந்தான்.

வனவாசிகளாக இருந்த பாண்டவர்களுக்கு வியாச பகவான் தரிசனம் கொடுத்தார். அவர்களுடைய நலத்தை அவர் விசாரித்தார். கௌரவர்கள் தங்களுக்கு செய்திருந்த கொடுமைகளை பற்றி அவர்கள் முறையிட்டார்கள். இப்பிரபஞ்ச வாழ்வு அனைத்தும் நலம் மற்றும் கேடு ஆகிய இரண்டும் கலந்தது. தர்மத்தை உறுதியாக பற்றிக்கொண்டு பொறுமையுடன் கேடு காலத்தை சகித்து வரவேண்டும் என்றும் விரைவில் அதனைத் தொடர்ந்து நல்ல காலம் நிச்சயம் வரும் என்றும் அது வரை பொறுமை காக்குமாறு அவர்களிடம் கூறினார். பாண்டவ சகோதரர்கள் அதுவரையில் தவம் செய்யும் பிராமணர்களாக தங்கள் வேஷத்தை மாற்றிக்கொண்டு ஏகசக்கர நகரத்திற்குச் சென்று அங்கு வசித்து வரவேண்டும் என்றும் வியாசர் பாண்டவர்களிடம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

பீமன் இடும்பியிடம் உன்னையும் கடோத்கஜனையும் விட்டு பிரியும் நேரம் வந்து விட்டது என்றும் தான் செல்ல வேண்டும் என்றும் தனக்கு இருக்கும் சூழ்நிலையை விளக்கிக் கூறினான். அதற்கு இடும்பி இத்தனை நாட்கள் தம்முடன் குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வந்தது தமக்கு திருப்தி என்றும் உங்களை விட்டு நானும் கடோத்கஜனும் பிரிந்து செல்கின்றோம். பாண்டவர்களாகிய உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் தம்மையும் கடோத்கஜனையும் எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம். உடனே நாங்கள் வருவோம் என்று கூறிவிட்டு கடோத்கஜனையும் அழைத்துக்கொண்டு அரைமனதுடன் அவர்களை விட்டு பிரிந்து சென்றாள்.