மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -4

விதுரர் மற்றும் சஞ்சயனுடைய மேற்பார்வையில் மடித்து போனவர்களுடைய சடலங்கள் அனைத்தும் ஊழித்தீயில் தகனம் செய்யப்பட்டன. யுதிஷ்டிரரும் அவருடைய சகோதரர்களும் திருதராஷ்டிரனும் ஏனைய பிரமுகர்கள் அனைவரும் கங்கை தீர்த்தத்துக்கு போய் சேர்ந்தார்கள். காந்தாரியும் குந்தியும் திரௌபதியும் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். அனைவரும் கங்கை நதியில் நீராடி மடிந்து போனவர்களுக்கு இறுதிக்கடன் முறையாக நிறைவேற்றினார்கள்.

இப்பொழுது உயிரை கொடுப்பதற்கு நிகரான கடமை ஒன்று குந்திக்கு வந்தது. துயரத்தில் இருந்த குந்திதேவி கர்ணன் தனக்கு பிறந்த முதல் செல்வன் என்பதையும் யுதிஷ்டிரனுக்கு மூத்தவன் என்பதையும் கர்ணனின் வரலாறு முழுவதையும் அனைவரிடம் கூறினாள். இச்செய்தி துயரத்தில் மூழ்கியிருந்த அனைவருக்கிடையில் சலசலப்பை உண்டு பண்ணியது. பாண்டவ சகோதரர்கள் கர்ணனை பலவிதங்களில் அவமானப்படுத்தி இருந்தனர். ஆனால் அதை அலட்சியம் செய்து பாண்டவர்கள் பேசியதை பொருட்படுத்தவில்லை. தன்னுடைய உண்மை வரலாற்றை வாழ்க்கையின் பிற்பகுதியில் கர்ணன் அறிந்தான். உயிர் இருக்கும் வரையில் துரியோதனனுக்கு சேவை செய்யும் பொருட்டு அந்த ரகசியத்தை மறைத்து வைத்திருந்தான். இத்தனை காலம் கர்ணனை யார் என்று அறிந்து கொள்ளாது அவனை அலட்சியப்படுத்திய பாண்டவர்கள் ஐவரும் கர்ணனின் மேல் இருந்த வெறுப்பு மாறி அவனிடம் மரியாதை கொண்டனர். உயிரோடு இருந்த காலமெல்லாம் சூழ்நிலையால் கர்ணனை வேற்றான் என்று எண்ணிய பாண்டவர்கள் இப்போது கர்ணனுக்கு சிரத்தையுடன் ஈமசடங்கை செய்து முடித்தனர்.

ஸ்திரீ பருவம் முடிந்தது அடுத்தது சாந்தி பருவம்.

பற்று

ஒருவன் செல்வத்தின் மீது பற்று கொண்டு ஏராளமான செல்வத்தைச் சம்பாதித்தான். பல சொத்துக்களை வாங்கிக் குவித்தான். அவன் ஆசைப்பட்டதற்கு அதிகமாகவே அவனிடம் செல்வம் சேர்ந்து விட்டது. ஆனால் அவன் மனம் ஏனோ திருப்தியடையவே இல்லை. ஏதோ ஒரு வெறுமையை தனக்குள் அவன் உணர்ந்தான். அந்த வெறுமை உணர்வு அவன் மன அமைதியைக் கெடுப்பதாக உணர்ந்தான். இவ்வளவு செல்வங்கள் குவிந்தாலும் தன்னிடம் எல்லாம் இருந்தாலும் தன் மனதில் ஏதோ ஒன்று இல்லாதது போன்ற ஒரு வெறுமை உணர்வு ஏன் வந்தது? என்று தனக்குள் யோசித்தான். முடிவில் அவன் மனதில் அதற்கான காரணம் என்ன என்பது புலப்பட்டது. தன்னுடைய இந்த அமைதியற்ற வெறுமைக்குக் காரணம் செல்வத்தின் மீது தான் கொண்ட ஆசையினால் தான் என்ற முடிவுக்கு வந்தான். இனி அமைதியடைய என்ன செய்யலாம் என்று பல நாட்களாகச் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான். தான் அடைந்த இந்த செல்வத்தையெல்லாம் ஒரு துறவிடம் கொடுத்து விட்டு மன நிம்மதியை அடைந்திடலாம் என்று தீர்மானித்தான்.

தனது எல்லா ஆஸ்திகளையும் விற்று செல்வமாக்கி ஒரு மூட்டையில் கட்டி எடுத்துக் கொண்டு பல இடங்களிலும் காடு மேடெல்லாம் அலைந்து ஒரு உண்மையானத் துறவியைக் கண்டு பிடித்தான். தான் கொண்டு வந்த மூட்டையை அவர் காலடியில் போட்டான். குருவே நான் கஷ்டப்பட்டு உண்டாக்கிய செல்வங்கள் அனைத்தும் இந்த மூட்டையில் இருக்கின்றன. இதை எடுத்துக் கொண்டு என்னை சீடனாக ஏற்று மன நிம்மதியை அடையும்படிக்கு அருளுங்கள் என்று பணிந்து நின்றான்.

குனிந்த தலையை நிமிர்த்தி பார்த்த போது துறவியைக் காணவில்லை. அவரோ இவன் கொண்டு வந்த மூட்டைத் தூக்கிக் கொண்டு வெகு தூரத்தில் ஓடிக் கொண்டிருந்தார். இவனைப் போய் உண்மையான நல்ல துறவி என்று எண்ணி ஏமாந்து விட்டோமே என்று துறவியைத் துரத்திக் கொண்டு ஓடினான். துறவியோ ஏற்கனவே தொலை தூரத்திற்குச் சென்று விட்டபடியினால் இவனால் அவரைப் பிடிக்க முடியவில்லை. முடிவில் கண்களை விட்டே மறைந்து விட்டார். இவனுக்கோ களைப்பு மேலிட்டது. தாகம் வாட்டியெடுத்தது. சரி அந்தத் துறவியின் குடிலுக்குப் போய் தண்ணீர் கிடைக்குமா என்று பார்ப்போம் என்று திரும்பி வந்தவன் திடுக்கிட்டான். அங்கு துறவி குடிலுக்கு முன் உள்ள மரத்தடியில் கால் மேல் கால் போட்டுப் படுத்துக் கிடந்தார். மூட்டை கீழே கிடந்தது. இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது துறவி மெதுவாகக் கண்களைத் திறந்தார். அவனைப் பார்த்துக் கேட்டார். நீ இந்த செல்வத்தால் நிம்மதியே இல்லை இது வேண்டாம் என்று தானே என்னிடம் கொண்டு வந்துக் கொடுத்தாய். பிறகு ஏன் என்னைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தாய்? அப்படியானால் இந்தச் செல்வத்தின் மீதுள்ள பற்று இன்னும் உனக்கு நீங்கவில்லை என்று தானே பொருள். எனவே உமது செல்வத்தை எண்ணி சரி பார்த்து எடுத்துசெல். உடமைப் பொருள் எதன் மீதும் பற்று கொள்ளாமல் இருப்பதே அமைதியடைவதற்கு ஒரே வழி என்றார். அவன் அவர் காலடியில் விழுந்து பற்று விட்டு பற்றில்லாமல் வாழ வழிகாட்டுங்கள் குருவே என்று அழுதான். அவர் அவனைத் தேற்றி ஞானம் பெற உபதேசித்தருளினார்.

இறைவனை அடையும் வழி

புதிதாக வந்த சீடன் குருவிடம் இறைவனை தேடுகிறேன் அறிந்து கொள்ள பல பயிற்சிகள் செய்கிறேன். என்னால் இறைவனை விரைவில் அறிந்து கொள்ள முடியுமா என்று குருவிடம் கேட்டான்.

குரு – சீடனே உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?

சீடன் – நம்புகிறேன் இருப்பினும் கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.

குரு – எதனால் இந்த சந்தேகம் வருகிறது?

சீடன் – பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.

குரு – நல்லது எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே. இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன் நீ ஆண்டவனைத் தெரிந்து கொள்ள அடைய உண்மையிலேயே விரும்புகிறாயா?

சீடன் – ஆமாம் குருவே.

குரு – உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?

சீடன் – ஆமாம் குருவே.

குரு – அன்புள்ள சீடனே நீ இறைவனை அடைய ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்.

சீடன் – மிகவும் சந்தோஷம் குருவே இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

குரு – ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது ஆனால் இறைவன் தான் உன்னை வந்து அடைவான்.

சீடன் – இது குழப்பமாக இருக்கிறதே.

குரு – ஒரு குழப்பமும் இல்லை ஒர் கதை சொல்கிறேன் கேள் ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது. ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான் அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். நாட்டுக்கு நன்மை பயக்கும் பல நற்காரியங்களை செய்கின்றான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது. ராஜாவே அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார் பாராட்டுகிறார் பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?

சீடன் – நிச்சயமாக நடக்கும் குருவே.

குரு – இப்போது ராஜாதான் இறைவன். நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது சிறிது கடினம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே (இறைவனே) உன்னைப் பார்க்க வருவார். எனவே இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான தான தர்ம செயல்களில் ஈடுபடு இறைவனே உன்னை வந்து அடைவான் சரிதானே?

சீடன் – மிகவும் சரிதான் குருவே.

குரு – நல்லது சீடனே இனி ஆன்மிகம் உனக்கு கை கூடும். போய் வா என்றார்.

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்.

நம் எண்ணங்களும் உணர்வுகளும் சிந்தனைகளும் சொல்களும் செயல்களும் நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு நல்லது செய்யுமெனில்
இறைவனை நாம் தேட வேண்டியதில்லை இறைவனே நம்மை தேடி வருவார்.

மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -3

பாண்டவ சகோதரர்கள் 13 வருடங்களுக்கு பிறகு தங்களிடமிருந்து தாய் குந்தியை சந்தித்தனர். அவள் பாதத்தில் வீழ்ந்து வணங்கினர். காந்தாரியின் மருமகள்களும் அருகில் தனது கணவர்களை இழந்து நின்றனர். சோகம் ததும்பிய சந்திப்பாக அது காட்சி கொடுத்தது. காந்தாரியை பார்த்து திரௌபதி தாயே உங்களுடைய பேரர்கள் அனைவரும் நடந்த போரில் அழிந்துவிட்டனர் என்று தேம்பி அழுதாள். பெரும் துயரத்தில் மூழ்கி இருந்தவர்கள் தங்களது பரிதாபகரமான நிலையை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்

கொடிய யுத்தத்தின் முடிவை அறிந்து கண்டு கொள்வதற்காக காந்தாரிக்கு ஞானக்கண்ணை கொடுத்தருளினார் வியாசர். சிறிது நேரம் இதை பார்த்து திகைத்து போன காந்தாரி யுத்தத்தை உள்ளபடி கிருஷ்ணரிடம் விவாதித்தாள். இறுதியில் பார்த்த நிகழ்ச்சிகள் யாவும் மனைவிமார்கள் தங்களுடைய கணவன்மார்களை இழந்து விட்டதை குறித்து அழுகையின் குரலாகவே இருந்தன. இதற்கெல்லாம் காரணம் கிருஷ்ணனுடைய பாராமுகம் என்று காந்தாரி கிருஷ்ணரிடம் குற்றம் சாட்டினாள். கிருஷ்ணன் நினைத்திருந்தால் இந்த பெரும்போரை ஆரம்பத்திலேயே தடுத்து இருக்கலாம் என்பது காந்தியின் கருத்து. எண்ணிக்கையில் அடங்காத சேனைகள் சேனைத் தலைவர்கள் அரசர்கள் அழிந்து போனதற்கு காரணமாக இருந்தவன் கிருஷ்ணன் என்று காந்தாரி எண்ணினாள்.

குரு வம்சம் முழுவதும் அழிந்து போனதற்கு நிகராக 36 வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ணரின் விருஷ்ணி வம்சம் தங்களுக்குள்ளேயே கலவரம் மூண்டு அழிந்துபோகும் என்று கிருஷ்ணன் மீது அவள் சாபத்தை சுமத்தினார். அதற்கு கிருஷ்ணன் தாயே நீ உள்ளன்போடு உனது கணவருக்கு நீ செய்திருந்த பணிவிடைகளின் விளைவாக ஓரளவு புண்ணியத்தை நீ பெற்றிருக்கிறாய். விருஷ்ணி வம்சத்தின் மீது சாபம் கொடுத்ததன் விளைவாக சேர்த்து வைத்த புண்ணியத்தை நீ இழந்து விட்டாய். விருஷ்ணிகள் யாராலும் வெல்லப்பட மாட்டார்கள் என்பது உண்மையே. ஆயினும் ஏதேனும் ஒரு விதத்தில் அவர்கள் இவ்வுலகை காலி பண்ணி ஆக வேண்டும். ஆகையால் உன்னுடைய சாபத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த யுத்தத்தில் நான் பாராமுகமாக இருந்து விட்டேன் என்று நீ குற்றம் சாட்டுவதில் உண்மை இல்லை. குரு வம்சத்தவர்களை காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்துக் கொண்டேன். உண்மையில் உங்கள் குடும்பத்தின் அழிவுக்கு காரணம் உங்களுடைய பாராமுகமும் உங்களுடைய கணவரின் பாராமுகம் மட்டுமே. உங்களுடைய புதல்வர்களின் கொடுரம் நிறைந்த அதர்மங்களே இந்த யுத்தத்திற்கு காரணம். இந்த அதர்மங்களுக்கு துணை நின்ற இனைத்து அரசர்களும் தடுக்க முடியாதபடி அழித்துவிட்டனர். அது குறித்து இனி ஆவது ஒன்றுமில்லை. ஆகையால் துயரத்திலிருந்து விடுபட்டு தெளிவடைந்து இருப்பாயாக என்று கிருஷ்ணன் கூறினார்.

தர்பைப்புல்

ஒரு காலத்தில் தம்போத்பவா என்ற மாபெரும் மன்னன் விதர்ப தேசத்தில் இருந்தான். அவன் பல புண்ணியங்களையும் செய்து கொண்டே இருந்ததினால் அவனுக்கு பெரும் வரங்கள் கிடைத்து இருந்தன. அவன் உலகெங்கும் சுற்றி அனைத்து நாடுகளையும் வென்றான். இனி வெல்வதற்கு நாடுகளே இல்லை என்ற நிலை வந்த போது அவனுடைய ராஜகுரு கூறினார் மன்னா இனி நீங்கள் ஏன் பூமியில் உள்ளவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். தேவலோகத்துக்குச் சென்று அங்குள்ள தேவர்களையும் வெற்றிக் கொள்ள வேண்டும். அதுவே இனி உங்கள் பெருமைக்கு தகுந்ததாக அமையும். அதைக் கேட்ட மன்னனுக்கும் ஆசை துளிர் விட்டது. நாம் உண்மையிலேயே மிகப் பெரிய மன்னன் பூமியிலேயே அனைத்தையும் வென்றுவிட்ட நான் தேவலோகம் சென்று அதையும் வென்று வர வேண்டும் என எண்ணத் துவங்கினான். அப்படி எண்ணியவன் ஒரு நாள் பெரும் படையுடன் கிளம்பி தேவலோகத்துக்குச் சென்றான்.

படையினரை தேவலோகத்தின் வாயிலிலேயே நிற்க வைத்தப் பின் நேராக பிரம்மாவிடம் சென்றவன் தான் வந்தக் காரியத்தைக் குறித்துக் கூற பிரம்மா அவனுடைய அகங்காரத்தை அடக்க முடிவு செய்தார். தம்போத்பவா நீ இன்னமும் பூமியில் உள்ள சிலரை வெற்றி கொள்ளாமல் இங்கு வந்து என்னப் பயன் முதலில் அங்கு சென்று அவர்களை வென்றுவிட்டு வா என்றார். தம்போத்பவா வியப்புற்றான். பூமியில் நான் வெல்ல யாரும் இருக்கின்றார்களா என ஆச்சர்யமாக அவரிடம் கேட்க பிரம்மா பூமியில் வட பகுதியில் இருந்த கந்தமாதனா என்ற பகுதியில் உள்ள நதிக்கரையில் அமர்ந்து இருந்த இரண்டு தேவ முனிவர்களை வெற்றிக் கொண்டு விட்டு தேவலோகத்துக்கு வருமாறு கூறி அனுப்பினார்.

தம்போத்பவாவும் உடனே கிளம்பி கந்தமாதனாவிற்குச் சென்றான். அங்கு ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தபடி தவத்தில் இருந்த இரண்டு முனிவர்களைப் பார்த்தான். இவர்களையா நான் வெல்ல வேண்டும் என்று எண்ணியவன் அவர்கள் எதிரில் சென்று நின்று கொண்டு அவர்களுடைய தவத்தைக் கலைத்தான். கண்களை விழித்தவர்களிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னர் அவர்கள் தம்முடன் சண்டையிட்டு வெற்றிபெற வேண்டும் இல்லை என்றால் சரணாகதி அடை வேண்டும் என இறுமாப்புடன் கூறினான். அவர்களை சுற்றி தர்பைப் புல் வைக்கப்பட்டு இருந்தது. முனிவர்கள் கூறினார்கள் தம்போத்பவா நீ ஒரு பெரிய மன்னன். ஆனால் நாங்கள் முனிவர்கள். நாங்கள் ஏன் உன்னுடன் சண்டைப் போட வேண்டும். நீ உன் வழியில் போ நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம் என்றார்கள். ஆனால் அது மன்னன் மனதில் ஏறவில்லை. அவர்களின் தவத்தை இடையூறு செய்த வண்ணம் வாளை உறுவி வைத்துக் கொண்டு அவர்களை சண்டைக்கு அழைத்தான். எத்தனை நேரம் தான் விதண்டாவாதம் செய்வது என எண்ணிய முனிவர்கள் தமது முன்னால் வைத்து இருந்த ஒரு கட்டு தர்பை புற்களை எடுத்து அவன் மீது வீசினார்கள். அந்த ஒரு கற்று தர்பைப் புல் பல கற்றுகளாக மாறி அவனைத் தாக்கத் துவங்கின. அவன் தனது வாளினால் தர்பைகளை வெட்ட வெட்ட அவை பெருகிக் கொண்டே போனது மட்டும் அல்லாமல் அவன் கேடயங்களும் அவன் மீது விழுந்து கொண்டு அடிகளை தடுக்க முடியாமல் திணறி இரண்டாக உடைந்து விழுந்தது. தர்ப்பைப் புற்கள் அவன் உடலெங்கும் கீறிக் கீறிக் காயப்படுத்த அவனால் சண்டை இட முடியாமல் அப்படியே முனிவர்கள் முன்னால் விழுந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். உடலெங்கும் ரத்தம் வழிய தமது காலடியில் விழுந்து கிடந்தவனை எழுப்பினார்கள் முனிவர்கள்.

முனிவரே ஒரு தர்பைப் புல் என் அனைத்து ஆயுதங்களையும் வலுவிழக்கச் செய்து விட்டதை எண்ணி வியக்கின்றேன். அதற்கு அத்தனை மகிமையா? என்று கேட்டதும் அவன் முன்னால் நாரத முனிவர் அமைதியாக சிரித்துக் கொண்டே காட்சி தந்தார். மீண்டும் மீண்டும் அவரிடம் தனது அறியாமையினால் ஏற்பட்ட தவறைக் கூறி தன்னை மன்னிக்குமாறு கேட்டதும் நாரதர் கூறினார் மன்னா அகங்காரம் தன்னையே அழிக்கும் என்பது பழமொழி. அதற்கு உதாரணமாக நீ இருக்கிறாய். தர்பையை என்ன அத்தனை கேவலமாக நினைத்து விட்டாயா? தட்சிணாமூர்த்தி கைகளுடன் ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார். அவருடைய வலது கால் அபஸ்மரா என்ற அரக்கனை மிதித்த நிலையில் இருப்பார். அது அறியாமையை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் பாம்பையும் பிடித்திருப்பார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பும் கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும் ஓலைச்சுவடியையும் வைத்து இருப்பார். அவரது கீழ் வலது கை மூலம் ஞான முத்திரையை காட்டுவார். அந்த தக்ஷிணாமூர்த்தி யார் தெரியுமா? சிவபெருமானின் ஒரு ரூபம் ஆவார். அப்படிப்பட்டவர் கையில் உள்ள தர்பையை வேறு யாரிடமாவது காண முடியுமா?

அதை எதற்காக அவர் தனது கையில் வைத்து இருக்கின்றார் தெரியுமா? தியான நிலையில் உள்ளவர் கையில் ஆயுதம் வைத்து இருக்கக் கூடாது. ஆனால் அதே சமயத்தில் தியானத்தை தடுக்க வருபவர்களை ஆயுதமாக அது மாறி தாக்க வல்லமைக் கொண்ட சக்தியை தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு உள்ளதே தர்பை என்பதை அவர் மூலம் அறிய முடிகின்றது. நமக்கு ஏற்படும் பல கெடுதல்களையும் போக்கவல்லது தர்பை என்று வேதங்களில் கூறப்பட்டு உள்ளது. அதனால் தான் நல்லதோ கெட்டதோ ஹோமம் செய்யும் போது தர்பையினால் ஆனா பவித்ரம் {மோதிரத்தை} அணிந்து கொண்டே காரியங்களை செய்கிறோம். அந்த நேரத்தில் விரல் என்பது நமது உடலை குறிக்கின்றது. நமது உடலை சுற்றி நம்மைக் காக்கும் அந்த தர்ப்பை. ஹோம குண்டங்களில் யாக குண்டங்களில் நான்கு பக்கமும் தர்பையை வைப்பது அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். எளிய முனிவர்களுக்குக் கவசமாக உள்ள அப்படிப்பட்ட தர்பையே சக்தியாக உருவெடுத்து உன்னைத் தாக்கி அழித்தது. நாரதர் கூறியதைக் கேட்ட தம்போத்பாவா வெட்கி தலைக் குனிந்தான். அவரை வணங்கி துதித்து விட்டு நாட்டிற்குத் திரும்பியவன் முதலில் ராஜ குருவை அரண்மனையில் இருந்து துரத்தி அடித்தான். அடுத்து தனது அனைத்து அரசையும் வாரிசுகளிடம் ஒப்படைத்து விட்டு தக்ஷிணாமூர்த்தியின் பக்தனாக மாறி தனது கடைசி காலத்தை அமைதியாக கழித்தான்.

மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -2

பாண்டவர்கள் தங்களது பெரியம்மாவாகிய காந்தாரியை சமரசம் செய்து கொள்ள கடமைப்பட்டிருந்தார்கள். அது மிக கடினமான காரியம் ஏனென்றால் இந்த யுத்தத்தில் அவனுடைய நூறு புதல்வர்களையும் பாண்டவர்களால் இழந்து விட்டாள். பிரத்யேகமாக பீமன் மீது அவள் அதிகமாக கோபம் கொண்டிருந்தாள். பீமன் ஒருவனே அனைவரையும் அழித்தவன். அதை முன்னிட்டு பீமன் மீது காந்தாரி சாபமிடுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருந்தது. காந்தாரியின் சாபத்தை தடுத்தல் பொருட்டு வியாசர் முதலில் காந்தாரியிடம் சென்று அவளை சமாதானப்படுத்தினார். நிகழ்ந்த யுத்ததிற்கு காரணம் துரியோதனனும் அவனது சகோதரர்களும் என்பதை அவள் ஒத்துக்கொண்டாள். யுத்தத்தை கிளம்பியவர்கள் அந்த யுத்தத்தில் மடிந்து போனது முறையே என்று வியாசர் ஆறுதல் கூறி அங்கிருந்து கிளம்பினார்.

பீமன் கௌரவ சகோதரர்களை கொல்ல கையாண்ட முறையை ஆமோதிக்க அவளால் இயலவில்லை. துச்சாதனனுடைய ரத்தத்தை குடித்தான். கதையுத்தத்தில் முறையற்ற பாங்கில் துரியோதனனின் தொடையில் அடித்து அவனை வீழ்த்தினான். எனவே பீமன் மீது கோபம் மிகவும் கொண்டிருந்தாள். பெரியம்மாவாகிய காந்தாரியின் காலில் விழுந்து பீமன் வணங்கினான். தாயே தாங்கள் என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தையும் குற்றமாகவே நான் ஏற்றுக் கொள்கின்றேன். நான் செய்துள்ள குற்றங்களுக்கு என்னை மன்னிப்பார்களாக. மற்றும் ஒரு விஷயத்தை நான் உங்களிடம் கூறுகின்றேன். 13 வருடங்களுக்கு முன்பு இச்செயலை சபை நடுவே நான் செய்திருந்தால் அப்போது தாங்கள் ஆமோதித்து இருப்பீர்கள். அப்போது என் தமையன் யுதிஷ்டிரன் செய்த தடையால் நான் இத்தனை காலம் காத்திருந்தேன். அன்று அவமானப்படுத்தப்பட்ட திரௌபதிக்கு ஆறுதல் தரும் பொருட்டு நான் செய்திருந்த சபதத்தின்படி துச்சாதனனின் ரத்தத்தை குடித்துவிட்டு யாருக்கும் தெரியாத வண்ணம் துப்பிவிட்டேன்.

திரௌபதிக்கு துரியோதனன் தன் தொடையை காட்டி அவமானப்படுத்தினான். அப்போழுதே துரியோதனனின் தொடையை துண்டிப்பேன் என்று நான் தீர்மானம் பண்ணினேன். அத்தீர்மானத்தையும் அன்றே துரியோதனனிடம் அனைவர் முன்னிலையிலும் தெரிவித்துவிட்டேன். கதையுத்த போராட்டத்தில் துரியோதனனை யாரும் நேர்மையான முறையில் தோற்கடிக்க இயலாது. கதையுத்தத்தில் அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. நான் கொண்டிருந்த தீர்மானத்தை நிறைவேற்றுதல் பொருட்டு முறை தவறி துரியோதனனின் தொடையில் அடித்தேன். அந்த குற்றத்திற்காக தாங்கள் என்னை மன்னித்தருள்வீர்களாக என்று பீமன் கூறினான். பீமனின் பேச்சை கேட்டதும் காந்தாரியின் கோபம் பெரிதும் அடங்கியது. பீமனுடைய அறிவு திறமையை கிருஷ்ணர் பாராட்டினார். பாண்டவ சகோதரர்கள் தங்கள் பெரியம்மா காந்தாரியின் காலில் விழுந்து வணங்கினார்கள்.

அக்கமாதேவி குகை லிங்கம்

ஸ்ரீசைலம் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நல்லமலை குன்றில் அக்கமாதேவி குகைகள் அமைந்திருக்கிறது. 150 அடி ஆழம் கொண்ட சரித்திர சிறப்பு வாய்ந்த அக்கமாதேவி குகையில் இந்த லிங்கம் காணப்படுகிறது.

பசு நாகம் என்ற தெய்வ அம்சங்கள்

மகாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல் படுத்திருக்கிறார். பரமசிவன் கழுத்தில் பாம்பு அழகாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. விநாயகப் பெருமான் இடுப்பில் பாம்பை சுற்றிக் கொண்டிருக்கிறார். பகவான் கிருஷ்ணர் காளிங்கன் என்ற பாம்பின் மேல் நர்த்தனம் ஆடுகிறார். முருகனின் வாகனமான மயில் வாயில் பாம்பைக் கொத்திக் கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் தன்னலம் கருதாது கொடையளிக்கும் பசுவும் தெய்வாம்சமாக இருக்கின்றது. நஞ்சை உமிழ்ந்து மனிதனுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய பாம்பு தெய்வாம்சமாக இருக்கின்றது. இந்த குழப்பத்திற்கு வாரியார் சுவாமிகள் அருமையான விடையைக் கூறியுள்ளார். மனித ஜென்மம் என்பது பாவங்களும் புண்ணியமும் கலந்த ஒன்று. மனிதனுக்கு மனிதன் பாவ புண்ணிய விகிதாசாரம் வேறுபடலாம். ஆனால் மனித வாழ்க்கை முழுவதும் 100 சதவிகிதம் பாவம் செய்தவனுமில்லை. மனித வாழ்க்கை முழுவதும் புண்ணியம் செய்பவனும் இருப்பது சாத்தியமில்லை. இறைவன் எப்படிப்பட்ட மனிதனையும் தன் பிரஜையாகவே கருதி ரட்சிக்கிறான். அதன் அடையாளமாகத்தான் மனித உணவின் எச்சத்தை உண்டு சத்தான பாலைக் கொடுத்து நல்லவற்றை மட்டும் செய்யும் பசுவையும் தெய்வாம்சம் கொண்டதாகச் செய்தார் கடவுள். நஞ்சை உமிழும் பாம்பையும் கழுத்திலோ இடுப்பிலோ தன் உருவத்திலோ அணிந்துகொண்டு நஞ்சையளிக்கும் நாகப் பாம்பையே ஏற்றுக் கொள்கிறேன். உன்னையா ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பாம்பையும் தெய்வாம்சம் கொண்டதாக்குகிறார் என்று விளக்கமளித்தார்.

நல்லவனுக்கும் சரி கெட்டவனுக்கும் சரி ஆத்திகனுக்கும் சரி நாத்தினுக்கும் சரி கடவுள் ஒன்றுதான்.