ராமாயணம் பால காண்டம் பகுதி -14

கௌதம மகரிஷி தினந்தோறும் அதிகாலை குளக்கரைக்கு செல்வதை இந்திரன் அறிந்துகொண்டான். ஒருநாள் விடிவதற்கு முன்பே சேவலாய் மாறி கூவினான். விடிந்து விட்டது என்று எண்ணிய கெளதமர் குளக்கரைக்கு செல்ல வீட்டை விட்டு வெளியேறினார். இந்திரன் கௌதம மகரிஷி போல் உருவத்தை மாற்றிக்கொண்டு அகலிகை இருந்த குடிலுக்குள் சென்றான். தனது கணவர் தான் வந்திருக்கின்றார் என்று எண்ணிய அகலிகை அவருக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தாள். இதனை பயன் படுத்திக்கொண்ட இந்திரன் அவளிடம் நெருக்கமானான். திடீரென தன் கணவன் தன்னை நெருங்கி வருவதை அறிந்த அகலிகை தனது கணவரின் குணாதிசயத்தை போல் தெரியவில்லையே என மனதிற்குள் நினைத்து ஏதோ ஒரு தவறு நடக்கிறது என புரிந்து கொண்டாள். ஆனால் என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

இன்னும் சரியாகப் பொழுது விடியவில்லை என்பதை உணர்ந்த கௌதமர் எதோ தவறு நடக்கப்போகிறது என உணர்ந்து விரைவாக குடிலுக்கு திரும்பினார். கௌதமர் உடனடியாக திரும்பி வந்ததை அறிந்த இந்திரன் பூனை உருவத்திற்கு தன்னை மாற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான். அதனை அறிந்த கௌதமர் பூனை வடிவத்தில் இருப்பது யார் என்று தன் கையில் இருந்த தண்ணிரை பூனை மேல் தெளிக்க இந்திரன் கௌதமரின் உருவத்தை அடைந்தான். தன்னைப்போல் இருப்பவனை பார்த்த கௌதமர் நடந்ததே புரிந்துகொண்டார். உடல் முழுவதும் உனக்கு பெண் உருப்பாக போகட்டும் என்று அவனை சபித்தார். கணவனின் தொடு உணர்வை அறிந்து கொள்ளாமல் கல் போல் இருந்த நீ கல்லாக போவாய் என்று அகலிகையை சபித்தார். அகலிகை உண்மையை உணர்ந்து கௌதமர் காலில் விழுந்து கதறினாள். நீண்டகாலம் காற்றே உணவாக எடுத்துக்கொண்டு கல்லாக இருப்பாயாக. பல காலம் கழித்து இங்கு தசரதன் மகன் அவதார புருஷன் ராமன் ஒருநாள் இங்கு வருவார். இந்த ஆசிரமத்திற்கு வரும் ராமரின் கால்பாதம் உன் மீது பட்டதும் உன் சாபம் பாவம் இரண்டும் நீங்கும். நீ அவரை வரவேற்று உபசரிப்பாய். அப்போது உன்னுடைய இயற்கை குணத்தை அடைந்து மறுபடியும் என்னுடன் வாழ்வாய் என்று கூறினார். இந்திரன் செய்த தவறினால் அறியாமால் தவறுக்கு உடந்தையாக இருந்த அகலிகையை சபித்துவிட்டோமே இந்த பாவத்திற்கு ஈசனின் திருவடி தரிசனம் கிடைத்தால் மட்டுமே இந்த பாவம் போகும் என்று ஈசன் திருவடியை நாடி கௌதம மகரிஷி இமயமலை சென்று தியானத்தில் அமர்ந்து விட்டார்.

இந்த துளசி செடி இருக்கும் கல்லுக்குள் அகலிகையின் ஆத்மா உள்ளது. ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு ஒரு ஆணால் சபிக்கப்பட்டவளே இந்த பெண். ராமா இவளுடைய சாபத்தை உன்னால் மட்டுமே திருப்பி எடுக்க முடியும். இந்த கல்லை உன் பாதங்களால் நீ தொட்டால் சாபத்தில் இருந்து அகல்யா மீள்வாள் இந்த கல்லில் உன் பாதத்தை வை என விஸ்வாமித்திரர் கூறினார். விஸ்வாமித்திரர் கூறியதை போல் தன் பாதத்தை கல்லின் மீது வைத்தார் ராமர். அந்த கல் ராமருடைய ஸ்பரிசத்தால் சாப விமோசனம் பெற்றாள் அகலிகை. ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பெய்ய அவளுடைய கொடிய பாவம் தீர்ந்து தேவகன்னிகை போல் பிரகாசித்தாள். அகலிகைக்கு விமோசனம் கிடைத்ததை அறிந்த கெளதமரும் அங்கே வந்து சேர்ந்தார். கௌதமரும் அகலிகையும் ராமருக்கு உபசரணைகள் செய்தார்கள். அனைத்தையும் ஏற்றுக்கொண்டார் ராமர்.

சொர்க்கம்

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார். என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள் கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை என்றார்.

புன்னகைத்த குரு கதை ஒன்றைச் சொன்னார். ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன் ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான் என்று எண்ணி அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள். அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான். அச்சம் கொண்ட அவன் அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன் ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான் எனக் கூறி அங்கிருந்து வெளியேறினான். இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது. உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு. உலகம் உனக்கு சொர்க்கமாகும் என்றார் குரு.

ராமாயணம் பால காண்டம் பகுதி -13

ஓர் காலத்தில் அருளுக்கும் அழகுக்கும் பெயர் பெற்றதாக இந்த ஆசிரமம் இருந்தது. இந்த ஆசிரமத்தின் தலைமையில் இருந்தவர் கௌதம மகரிஷி ஆவார். அவரது மனைவியின் பெயர் அகலிகை. இவள் பிரம்மனின் மானசீக மகளாவாள் இவளது பெயருக்கு மாசு அற்றவள் என்றும் தனது உடலில் அழகில்லாத பகுதி சிறிது இல்லாதவள் என்று பொருள். தேவலோகத்தில் இருந்த ஊர்வசி தான் தான் அழகு என்று எண்ணி அகங்காரம் கொண்டிருந்தாள். அவளது ஆணவத்தை அடக்க பிரம்மா நீரிலிருந்து அகலிகையை மிக அழகுடன் படைத்தார். அவளை மணக்க அனைவரும் போட்டி போட்டனர். எனவே சுயவர போட்டி நடத்த பிரம்மா முடிவு செய்தார். அகலிகையை மணக்க சுயவர போட்டி நடந்தது. யார் முதலில் முன்பும் பின்பும் தலை உள்ள பசுவை மூன்று முறை முதலில் வலம் வருகிறார்களோ அவர்களுக்கே அகலிகை என்ற போட்டியை பிரம்மா வைத்தார். முன்னும் பின்னும் தலை உள்ள பசு மூன்று உலகத்திலும் எங்கும் இல்லை ஆகவே வேறு ஏதேனும் சொல்லுங்கள் என்று தேவர்கள் பிரம்மாவிடம் கோரிக்கை வைத்தார்கள். மூன்று உலகத்தையும் யார் முதலில் சுற்றி வருகின்றார்களோ அவர்களுக்கே அகலிகை என்று இரண்டாவது போட்டியை பிரம்மா அறிவித்தார். இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் யார் முதலில் வெற்றி பெருக்கின்றார்களோ அவர்களுக்கு அகலிகை மனைவியாவாள் என்று பிரம்மா அறிவித்தார்.

இந்திரன் மாய வேலைகள் செய்து அகலிகையை அடைய எண்ணியிருந்தான். தேவர்கள் அவர்களுக்கான வாகனத்தில் மூன்று உலகத்தையும் சுற்ற போட்டி போட்டுக்கொண்டு கிளம்பினார்கள். நடப்பது அனைத்தையும் எட்டி நின்று பார்த்தார் நாரதர். கௌதம முனிவர் ஆஸ்ரமத்தில் அவருக்குப் பணிவிடை செய்ய ஏற்றவள் அகலிகை. ஆகவே அகல்யாவை கௌதம முனிவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நாரதர் திட்டம் திட்டினார். எனவே பூரண கருவுற்றிருந்த ஒரு பசுவை ஓட்டிக்கொண்டு கௌதம முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தார். கௌதமரை வெளியே அழைத்தார். அந்தப் பசு அப்போது கன்றை ஈன ஆரம்பித்தது. பசுவின் பின்புறம் கன்றின் முகம் முதலில் தோன்றியது. உடனே நாரதர் கௌதமரை அந்தப் பசுவை மூன்று முறை வலம் வரச்செய்தார். கௌதமர் இரண்டு தலைகளை உடைய பசுவை இப்போது மூன்று முறை சுற்றி வந்துவிட்டார். நாரதர் கௌதம மகரிஷியை பிரம்மதேவரிடம் அழைத்துப்போய் நடந்ததைக் கூறி கௌதமர் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டார். எனவே கௌதமருக்கு அகலிகையை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டார்

பிரம்மதேவரும் அகலிகையை கௌதமருக்குத் திருமணம் செய்து வைத்தார். அகலிகையும் மகிழ்ச்சியுடன் கௌதமருடன் இல்லறத்தில் மகிழ்ந்திருந்தாள். அந்த மகிழ்ச்சியில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது அக்குழந்தைக்கு சதானந்தர் என்று பெயர் வைத்தார்கள். ஜனக மகாராஜாவின் புரோகிதராக இருப்பவர் இந்த சதானந்தாரே ஆவார். இந்திரன் மற்றவர்களுக்கு முன்னால் உலகை வலம் வந்து பிரம்மதேவரிடம் அகலிகையைக் கேட்டான். ஆனால் அகலிகைக்குத் திருமணம் ஆகிக் குழந்தையும் பிறந்துவிட்ட கதையைப் பிரம்மதேவர் சொல்ல இந்திரன் ஏமாற்றத்தால் பொருமினான். மனதிற்குள் வன்மத்தை வளர்ந்த இந்திரன் எப்படியும் அகலிகையை அடைய வேண்டும் என்று திட்டம் திட்டினான். தினந்தோறும் அகலிகையையும் கௌதம மகரிஷியின் செயலையும் நோட்டமிட்டான் இந்திரன்.

ஆசை

நண்பர்கள் இருவர் ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது வெள்ளத்தில் ஓர் கம்பளி மூட்டை மிதந்து செல்வது கண்டனர் ஒருவன் ஆசையினால் அதை பிடித்து தனதாக்கிக் கொள்ள நினைத்து ஆற்றில் குதித்து கம்பளி மூட்டைப் பிடித்துக்கொண்டான். அப்போது ஆற்றின் வேகத்தில் கம்பளி மூட்டை அவனை அதனுடன் இழுக்க ஆரம்பித்தது. போராடிக் கொண்டிருந்த அவனைப் பார்த்து கரையில் இருந்த நண்பன்

கம்பளி மூட்டை போனால் போகிறது அதை விட்டு விட்டு நீ கரையேறு என்றான். அப்போது கம்பளி மூட்டையை பிடித்துக்கொண்டிருந்தவன் சொன்னான். இது கம்பளி மூட்டையல்ல கரடி நான் விட்டாலும் அது என்னை விட மறுக்கிறது என்றான். உயிர்கள் பொருள்களின் மீது ஆசை வைத்து அவற்றைப் பிடித்துக்கொண்டவுடன் அதன்பிடியில் சிக்கித் திண்டாடுகின்றார்கள். முடிவில் பிடித்த ஆசைகளை துறக்க நினைத்தாலும் அவர்களால் அது முடிவதில்லை. ஆசையின் பிடியில் அவர்கள் கட்டுண்டு விடுகின்றனர். ஆசையும் பாசமும் அவர்களை துறப்பதாக இல்லை.

ராமாயணம் பால காண்டம் பகுதி -12

பகீரதன் ஈசனைக் குறித்துத் தவம் இருந்து வேண்டினான் மனம் மகிழ்ந்த ஈசனும் அவனுக்குக் காட்சி அளித்து பகீரதா உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும் உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கை பூமிக்கு வரும் போது எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும். அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன் என்றார். பகீரதனும் கங்கையிடம் ஈசனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க அவளும் மகிழ்வோடு சப்தமிட்டுக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்தாள். ஈசன் தன் சடையை விரித்துப் பிடித்தார். அப்போது கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. நான் மிகவும் வேகமாக வருகின்றேன். என் ஆற்றலையும் வேகத்தையும் இந்த ஈசனால் தாங்க இயலுமா என யோசித்தாள். எல்லாம் வல்ல ஈசன் கங்கையின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டார். நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார். திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவித்து தன் அகங்காரத்தை போக்கிக்கொண்டாள். பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைந்தான் ஈசனை நோக்கி மீண்டும் ஒற்றைக்காலில் தவமிருந்தான்.

பகீரதன் முன் தோன்றிய ஈசன் கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான். வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது. கங்கை வந்த வேகத்தில் அந்த ஆசிரமத்தை முற்றிலும் நீரால் அழித்து முனிவரையும் உருட்டித் தள்ள ஆயத்தமானாள். கோபம் கொண்ட முனிவர் கங்கையை அப்படியே தன் கைகளால் கங்கையை எடுத்து அள்ளிக் குடித்து விட்டார். கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான். முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும் கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான். அவன் நிலை கண்டு இரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார். இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக்கொண்டு தம் மூதாதையரின் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான்.

சகரர் புத்திரர்கள் அறுபதாயிரம் பேருக்கும் நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்தது என்று கங்கையின் வரலாற்றை ராமருக்கு விஸ்வாமித்ரர் சொல்லி முடித்தார். மிதிலை நகரம் தூரத்தில் தென்பட்டது. மிதிலை நகரத்திற்கு முன்பு ஒரு ஆசிரமம் தென்பட்டது மிகவும் பழமையாகவும் யாரும் இல்லாததைப்போலவும் தென்பட்ட ஆசிரமம் ஓர் காலத்தில் சிறப்பானதாக இருந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டது. ஆசிரமத்தின் அருகில் ஓரு கல்லில் இருந்து ஒரு துளசி செடி வளர்வதை ராமர் கண்டார். குருவே இது மிகவும் வியப்பாக உள்ளது. எப்படி இங்கே அனைத்தும் தனித்து விடப்பட்டுள்ளது அப்படி இருந்தும் எப்படி ஒரு கல்லில் இருந்து துளசி செடி வளர்கிறது இது யாருடைய ஆசிரமம் இது. இந்த ஆசிரமத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகின்றேன் தாங்கள் கூறுங்கள் என்று கேட்டார்.

கோபம்

புத்தர் மீது வெறுப்புக் கொண்ட ஒருவன் அவரைப் பார்த்தபோது அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டான். அதைத் துடைத்துக் கொண்டே புத்தர் வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா என்று அமைதியாக கேட்டார். புத்தருடன் இருந்த சீடர் ஆனந்தருக்குக் கோபம் வந்து விட்டது. நீங்கள் அனுமதி கொடுத்தால் அவனுக்கு நான் பதிலடி கொடுக்கிறேன் என்றார். புத்தர் தனது சீடரிடம் சொன்னார் ஆனந்தா நாம் எல்லாம் சந்நியாசிகள் என்பதை மறந்து விட்டாயா இதோ இவரைப்பார் ஏற்கனவே இவர் கோபம் என்னும் நோயினால் பீடிக்கப் பட்டிருக்கிறார். அவருடைய கோபமான முகத்தைப்பார். அவர் உடல் ஆடுகிறது. கோபப்படும் முன் அவர் மகிழ்வுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கின்றாயா அவர் தன கோபத்தினால் பைத்தியமாக நிற்கிறார். இதைக் காட்டிலும் கொடிய தண்டனை வேறு யார் அவருக்குக் கொடுக்க முடியும்.

எனக்கு என்ன பெரிய கெடுதல் நேர்ந்து விட்டது. என் முகத்தை துடைப்பதில் எனக்கு சிரமம் ஒன்றும் இல்லை. நீ கோபப்படாதே. இல்லையெனில் அவருக்கு நேர்ந்த சிரமங்கள் எல்லாம் உனக்கும் நேரும். உன்னை நீயே ஏன் தண்டித்துக் கொள்ள வேண்டும். இவர் மீது கோபப்படாதே. மாறாக இரக்கப்படு என்றார். பின்னர் புத்தர் தன் மீது உமிழ்ந்தவரைப் பார்த்து நீ மிகவும் களைப்புடன் காணப்படுகிறாய். உன்னை நீயே தண்டித்துக் கொண்டது போதும். என்னிடம் நீ நடந்து கொண்டதை மறந்துவிடு வீட்டிற்குப் போய் ஓய்வெடு என்றார். அவன் மிகுந்த அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாதவனாக நின்றான். பின் அவன் புத்தரிடம் மன்னிப்புக் கேட்டான். புத்தர் சொன்னார் முதலாவதாக நான் உன் மீது கோபப்படவில்லை. பின் எதற்காக நான் உன்னை மன்னிக்க வேண்டும். இப்போது உன்னைப் பார்க்கையில் எனக்கு மகிழ்ச்சி ஏனெனில் நீ உன் துன்ப நிலையிலிருந்து மீண்டு நிம்மதியுடன் காணப்படுகிறாய். மீண்டும் இத்தவறை யாரிடமும் செய்து உனக்குள் நீயே நரகத்தை உருவாக்கிக் கொள்ளாதே என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -11

விஸ்வாமித்ரர் தலைமையில் அனைவரும் கங்கை நதிக்கரையை அடைந்தனர். விஸ்வாமித்ரரிடம் கங்கை எப்படி மூவுலகிலும் ஓடுகிறது. கங்கையின் வரலாற்றை கூறுமாறு ராமர் கேட்டுக்கொண்டார். ஹிமவானின் மூத்த பெண் கங்கா தேவி. இளைய பெண் பார்வதி தேவி என்று சொல்லி கங்கா தேவியின் கதையை சொல்ல விஸ்வாமித்ரர் ஆரம்பித்தார். ஆதிகாலத்தில் அயோத்தியை ஆண்ட இசுவாகு குலத்தில் சகரர் என்பவர் குழந்தைப்பேறின்மையால் இறைவனை வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது முதல் மனைவி சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும் 2 வது மனைவி கேசினி என்பவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தனர். சில காலம் கழித்து சகரர் அசுவமேதயாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தார். அப்போது இந்திரன் யாக குதிரையை மறைத்து வைக்க குதிரையை தூக்கிச்சென்று பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மகரிஷியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். அந்த குதிரையை தேடிச்சென்ற சகரரின் புதல்வர்கள் ஆறுபதாயிரம் பேரும் கபிலரின் ஆசிரமத்தில் குதிரை இருப்பதை கண்டு கபிலரை திட்டியதுடன் அவரை துன்புறுத்த துவங்கினார்கள். கோபமடைந்த கபில மகரிஷி அவர்களை சபித்து சாம்பலாக்கி விட்டார். அனைத்தையும் அறிந்த சகரர் மன்னன் கபிலரை வணங்கி தான் செய்யும் அஸ்வமேத யாககுதிரை தங்கள் ஆசிரமத்தில் இருந்ததினால் இந்த குழப்பங்கள் வந்தது. தன் புதல்வர்களை மன்னிக்குமாறும் அவர்கள் சாப விமோசனம் தந்து நற்கதி அடைவதற்கு வழி சொல்லுமாறும் தன் குதிரையை எடுத்துச்செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

சகரரின் வேண்டுகோளை ஏற்ற கபிலமகரிஷி குதிரையை எடுத்துச்செல்ல அனுமதி கொடுத்து மேலுலகத்தில் இருக்கும் கங்கையை பூலோகம் வரவழைத்து இந்த சாம்பலை புனிதப்படுத்தினால் இவர்கள் நற்கதி அடைவார்கள் என்று விமோசம் கூறினார். இதனை கேட்டு மகிழ்ந்த சகரர் குதிரையை எடுத்துச் சென்று அசுவமேத யாகத்தை முடித்தார். முதல் மனைவியின் வாரிசுகள் அறுபதாயிரம் பேரும் சாம்பலானதால் இரண்டாவது மனைவியின் புதல்வன் நாட்டின் அரச பதவியை ஏற்றுக்கொண்டார். அவனுக்குப்பின் அவனது புதல்வன் பகீரதன் ஆட்சி பொறுப்பை ஏற்றக்கொண்ட போது தமது முன்னோர்கள் ஆறுபதாயிரம் பேருக்கு நடந்ததை தெரிந்துகொண்டார். பின்பு நாட்டை துறந்து கங்கையை பூலோகம் கொண்டு வர பிரம்ம தேவரை நினைத்து காட்டில் கடும் தவம் இயற்றினான். இவரின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைந்து ஆலோசனை வழங்கினார்.

பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடையவேண்டி கங்கை பூமிக்கு வந்து பின் பாதளத்துக்கு வந்து தன் முன்னோர்கள் மோட்சம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக்கொண்டான். அதற்கு கங்கை பகீரதா நான் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்க மாட்டாள். நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன் என்று கூறினாள். பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும் பராக்கிரம சாலிகளிடமும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான். ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்துவிட்டனர். பகீரதன் மஹாவிஷ்ணுவை வேண்ட அவர் இச்செயல் ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும். அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர். அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெறு என்று கூறினார்.

சித்திகள்

ஒரு யோகி தன் குருவிடம் சென்று நான் பதினான்கு வருடங்கள் காட்டில் தனியாக இருந்து தவம் செய்து நீரின் மேல் நடக்கும் சித்தியை அடைந்திருக்கிறேன் என்றான். அதைக் கேட்ட குரு மகனே ஏன் இவ்வளவு கடினப்பட்டு பதினான்கு வருடங்களையும் வீணாக்கி இருக்கிறாய். ஒன்றரையணா கொடுத்தால் ஓடக்காரன் உன்னை நீரின் மேல் கொண்டு போய் அக்கரை சேர்ப்பான். நீ அடைந்த சித்தி ஒன்றரையணா மதிப்புத் தான் என்றார்.

இறைவனின் திருவடியை அடையும் வழியாக சித்திகள் மீது ஆசை கொண்டு யாரும் காலத்தை வீணாக்க வேண்டாம். இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்ற நோக்குடன் உண்மையான பக்தி செய்யுங்கள். அற்புதங்களைக் காட்டி மக்களைக் கவர நினைக்கும் யோகிகளிடம் செல்ல வேண்டாம் இது ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஞானமொழி.