ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 23

ராம காரியத்தை செய்த சம்பாதி கழுகிற்கு முனிவர் சொன்னது போல் புதிய சிறகுகள் மீண்டும் முளைக்க ஆரம்பித்தது. வசீகர அழகுடன் பிரகாசித்த கழுகு சிறகுகளை அடித்து பறந்து மகிழ்ச்சி அடைந்து அங்கதனிடம் பேச ஆரம்பித்தது. சூரியனால் எரிக்கப்பட்ட எனது சிறகுகள் ராம காரியத்தை செய்து முடித்ததும் முனிவர் சொன்னபடி மீண்டும் முளைத்து விட்டது. வாலிபப் பருவத்தில் எனக்கிருந்த பராக்கிரமமும் வலிமையும் மீண்டும் எனக்கு கிடைத்து விட்டது. முனிவரின் வாக்கு சத்திய வாக்கு என்று நிருபிக்கப்பட்டு விட்டது. இந்நிகழ்ச்சியே நீங்கள் சீதையை காண்பீர்கள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதற்கான சான்று. இனி உங்கள் காரியத்தை தொடருங்கள் என்று சொல்லி விட்டு கடற்கரையில் தம்பி ஜடாயு கழுகிற்கு கிரியைகள் செய்து திருப்தி அடைந்தது சம்பாதி கழுகு.

சீதை இருக்கும் இடமும் ராட்சசன் ராவணன் இருக்கும் இடமும் சம்பாதி கழுகின் வழியாக வானரங்களுக்கு தெரிந்து விட்டது. சுக்ரீவனிடம் பொய் சொல்வதற்கு இது போதும் என்று வானரங்கள் எண்ணினார்கள். சம்பாதி கழுகு சொன்னதை மட்டும் வைத்துக் கொண்டு சீதையை நேரில் பார்க்காமல் சூக்ரீவனிடத்தில் இந்த செய்தியை சொல்ல முடியாது. சீதையை தேடும் காரியத்தை நிறுத்தி கிஷ்கிந்தைக்கு செல்வது சரியல்ல என்று அங்கதன் கூறினான். 100 யோசனை தூரம் கடல் தாண்டி இலங்கை சென்று பார்த்தால் மட்டுமே ராம காரியம் செய்து முடித்தது போல் இருக்கும். 100 யோசனை தூரம் தாண்டிச் சென்று சீதையை நேரில் எப்படி பார்ப்பது என்று தெரியாமல் வானரங்கள் திகைத்தார்கள். வானரங்கள் மறுபடியும் கவலையில் மூழ்கினார்கள். அங்கதன் பேச ஆரம்பித்தான். எந்த காரியம் என்றாலும் எப்படி சாதிக்கலாம் என்று எண்ண வேண்டும். தைரியத்தை இழக்க வேண்டாம். உங்கள் தாவும் சக்திகளைப் பற்றி சுக்ரீவன் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். வானர வீரர்களே யார் யாருக்கு அதிகமான தூரம் தாவும் சக்திகள் உள்ளது? உங்களுடைய தாவும் சக்திகளைப் பற்றி ஒவ்வோருவராக சொல்லுங்கள். அதன் பிறகு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம் என்றான் அங்கதன். கஜன் என்ற வானரம் நான் பத்து யோசனை தூரம் தாண்டுவேன் என்றான். கவாஷன் என்ற வானரம் நான் இருபது யோசனை தூரம் தாண்டுவேன் என்றான். ஒவ்வோரு வானரமாக அதிகமான யோசனை தூரத்தை சொல்லிக் கொண்டே வந்தார்கள். இறுதியில் அனைவரையும் விட மூத்தவரான ஜாம்பவன் பேச ஆரம்பத்தான். இளமையில் நான் 100 யோசனை தூரத்திற்கும் அதிகமான தூரத்தை தாண்டி இருக்கிறேன். இப்போது முதுமை தன்மை காரணமாக என்னால் 90 யோசனை தூரம் மட்டுமே தாண்ட முடியும். ஆனால் இலங்கை 100 யோசனை தூரம் இருக்கிறது. என்னால் அங்கு செல்ல முடியவில்லேயே வயதாகி விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. இளமையோடு இருந்தால் நிச்சயமாக இந்நேரம் தாண்டியிருப்பேன் என்று அங்கதனிடம் கூறினான்.

சீதை இருக்கும் இலங்கைக்கு 100 யோசனை தூரம் தாண்டி இலங்கையை என்னால் சென்று சேர முடியும் என்றான் அங்கதன். அனைத்து வானரங்களும் அங்கதனின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தார்கள். உடனே அங்கதன் சீதையை கண்டபின் உடனடியாக மறுபடியும் அங்கிருந்து திரும்பவும் இவ்வளவு தூரம் தாவும் சக்தி எனக்கு இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை என்றான். அதற்கு ஜாம்பவான் அங்கதா அதைப் பற்றி நீ சந்தேகப்பட வேண்டியதில்லை. உனது தந்தையான வாலிக்கு இருந்தது போலவே அளவற்ற சக்தி உனக்கும் உண்டு. உன்னால் 100 யோசனை தூரம் மட்டுமல்ல அதனை தாண்டியும் உன்னால் சென்று விட்டு மீண்டும் திரும்ப வரவும் முடியும். அதற்கேற்ற சக்தி உன்னிடம் உள்ளது. ஆனால் இந்த காரியத்தை யுவராஜாவாகிய நீ செய்தால் சரியாக இருக்காது. நீ மற்றவர்களுக்கு உத்தரவிட்டு அனைத்து காரியங்களையும் செய்து முடித்தல் வேண்டும். இதுவே ராஜநீதி ஆகும். இச்செயலை செய்ய சரியான நபர் அனுமனே. அதோ ஒரு ஓரத்தில் மௌனமாக அமர்ந்திருக்கும் அனுமனே இக்காரியத்தை செய்து முடிக்கும் திறமை பெற்றவன் என்று சொல்லி அனுமனை அருகில் அழைத்து வந்தான் ஜாம்பவான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 22

அனுமன் அங்கதனிடம் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு செய்வோம். நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று தைரியம் கூறினார். கடற்கரையில் கும்பலாக உணவில்லாமல் அமர்ந்திருந்த வானரங்களை அருகில் மலை மீதிருந்த கழுகரசன் சம்பாதி பார்த்துக் கொண்டிருந்தான். சிறகுகள் இழந்து பறக்க முடியாமல் பட்டினியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த கழுகரசன் சம்பாதி இத்தனை வானரங்கள் உணவில்லாமல் பட்டினியால் ஒரே இடத்தில் இறந்து போகப் போகின்றார்கள். நமக்கு இன்று உணவு சுலபமாக கிடைத்து விட்டது என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தது. அப்பொழுது வானரங்கள் ஒருவருக்கொருவர் தசரதன் இறந்தது முதல் ராமர் காட்டிற்கு வந்தது சீதையை ராவணன் தூக்கிச் சென்றது ஜடாயு கழுகு இறந்தது என்று அனைத்தைப் பற்றியும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்பேச்சில் ஜடாயு இறந்து விட்டான் என்ற செய்தியை கேட்டதும் திடுக்கிட்டது கழுகு. எனது தம்பி ஜடாயு இறந்து விட்டானா என்று அது பற்றி மேலும் தெரிந்து கொள்ள கழுகரசன் சம்பாதி ஆர்வமடைந்தது. என் அன்புக்குரிய அருமை தம்பி ஜடாயு பற்றி பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் யார் நடந்தது என்ன என்று விவரமாக சொல்லுங்கள் என்று மலை மீதிருந்து கத்தியது.

அனுமன் பறக்க முடியாமல் இருந்த கழுகை கீழே தூக்கிவர ஒரு வானரத்தை கேட்டுக் கொண்டார். கீழே வந்த கழுகரசன் சம்பாதி பேசத் தொடங்கியது. கருடனும் அருணனும் அண்ணன் தம்பிகள். அண்ணன் கருடனுக்கு நானும் ஜடாயுவும் இரண்டு குமாரர்கள். நானும் ஜடாயுவும் சிறு வயதிலிருந்தே நாங்கள் பெற்ற அபார சக்தியை அனுபவித்துக் கொண்டு இருந்தோம். ஒரு நாள் ஆகாயத்தில் போட்டு போட்டுக் கொண்டு மேலே கிளம்பினோம். சூரியனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகரித்தது. சிறுவனான ஜடாயு மிகவும் சோர்வடைந்தான். வெப்பம் ஜடாயுவை எரித்து விடும் போலிருந்தது. உடனை எனது சிறகுகளை விரித்து ஜடாயுவை காப்பாற்றினேன். அவன் உயிர் பிழைத்தான். எனது சிறகுகள் எரிந்து பறக்க முடியாமல் இந்த மலை மேல் விழுந்தேன். இந்த மலையின் மீது இருந்த நிசாகர் என்ற முனிவரிடம் எனக்கு விமோசனம் கேட்டேன். முக்காலமும் உணர்ந்த அவர் ராம அவதாரத்தை இறைவன் விரைவில் எடுப்பார். அப்போது ஓர் ராம காரியத்தை நீ செய்வாய். அப்போது உனது சிறகுகள் பழையபடி வந்து உனது இளமை திரும்பும் ராமரை காணும் பாக்கியம் உனக்கு உண்டாகும் என்றார். அதன்படி ராமரை பார்க்கவும் ராம காரியம் செய்வதற்காகவும் இங்கே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ஜடாயு இறந்து விட்டான் என்று தாங்கள் பேசிக் கொண்டிருந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. என்னுடைய தம்பி எப்படி இறந்தான் சொல்லுங்கள் என்றான் கழுகரசன் சம்பாதி.

அனுமனும் அங்கதனும் ராமனைப் பற்றியும் ராவணன் சீதையை தூக்கிச் சென்றது பற்றியும் தங்களைப் பற்றியும் அனைத்தையும் விரிவாக கழுகரசன் சம்பாதியிடம் சொல்லி ராமருக்கு எப்படி உதவுவது சீதை இருக்குமிடம் கண்டுபிடிக்க தங்களுக்கு ஏதேனும் வழிவகைகள் தெரிந்தால் சொல்லுங்கள் என்று சம்பாதி கழுகிடம் கேட்டுக் கொண்டார்கள். அனைத்தையும் கேட்ட கழுகரசன் சம்பாதி எனது தம்பி ஜடாயுவை கொன்ற ராவணனை அழிக்க துடிக்கிறேன். சிறகில்லாத வயதான என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. ராவணனை அழிக்க உங்களுக்கு நான் உதவுகின்றேன். எனக்கு ராம காரியம் செய்யும் பாக்கியம் இப்போது கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைந்தது சம்பாதி கழுகு. எனக்கு ஞானதிருஷ்டி தெரியும் அதன் வழியாக பார்த்து சீதையும் ராவணனும் எங்கிருக்கிறார்கள் என்று சொல்கிறேன் என்று தான் காணும் காட்சிகளை விவரிக்க ஆரம்பித்தது சம்பாதி கழுகு. இலங்கையை பற்றியும் ரவணனின் படை பலங்கள் அவனுடைய செல்வம் மாட மாளிகைகள் அங்கிருக்கும் தோட்டத்தில் சீதையை சுற்றி ராட்சசிகள் பாதுகாப்பாக நின்று காவல் காப்பது என கடல் தாண்டிய இலங்கையில் நடக்கும் காட்சிகள் அனைத்தையும் விவரமாக கூறியது சம்பாதி கழுகு. வானரங்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர். இனி சுக்ரீவன் நமக்கு தண்டனை கொடுப்பான் என்ற பயம் இல்லை. சீதை இருக்குமிடம் தெரிந்து கொண்டோம் என்று உற்சாகம் அடைந்தனர்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 21

அனுமன் கூறிய அனைத்தையும் கேட்ட பெண் தவசி இந்த குகையின் சக்தி உங்களுக்கு தெரியவில்லை. இதில் உள்ளே வந்த அந்நியர்கள் மறுபடியும் உயிருடன் வெளியில் செல்ல முடியாது. இங்கேயே வாழ்ந்து மாண்டு போவார்கள். இந்த குகையை விட்டு உங்களால் வெளியே போக முடியாது. நீங்கள் வந்த காரணம் பெருங்காரியமாக இருப்பதால் இங்கிருந்து வெளியேற உங்களுக்கு உதவி செய்கிறேன். நீங்கள் அனைவரும் கண்களை முடிக்கொள்ளுங்கள். எனது தவ வலிமையால் நீங்கள் சென்று சேர வேண்டிய சரியான இடத்திற்கு உங்களை சென்று சேர்க்கிறேன் என்றார். வானரங்கள் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டனர். தவஸ்வி அவர்கள் அனைவரையும் தன் தவ வலிமையால் நாட்டின் எல்லையிலுள்ள ஒரு கடற்கரைக்கு கொண்டு சேர்த்தாள். அனைவரும் ஓர் கடற்கரையில் இருப்பதை உணர்ந்தார்கள்.

அனுமனிடன் அப்போது ஒரு வானரம் பேச ஆரம்பித்தான். சுக்ரீவன் நமக்கு கொடுத்த ஒரு மாத காலம் நிறைவடைந்தது. சீதையை பற்றிய எந்த தகவலும் அறிந்து கொள்ளாமல் இப்போது நாம் கிஷ்கிந்தைக்கு சென்றால் சுக்ரீவன் நமக்கு மரண நண்டனை விதிப்பான். எனவே நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு ஒர் உபாயம் சொல்லுங்கள் என்று கூறினான். வானரம் சொன்னதை ஆமோதித்த அங்கதன் பேச ஆரம்பித்தான். ராமருடைய ஆணைக்கு பயந்து தான் சுக்ரீவன் எனக்கு யுவராஜா பட்டத்தை தர ஒப்புக் கொண்டான். சுக்ரீவனுக்கு என் மேல் அன்பு கிடையாது. அங்கே போய் உயிரை விடுவதை விட தவஸ்வி சுயம்பிரபாவினுடைய குகைக்குள் மறுபடியும் சென்று அங்கேயே சுகமாக வாழ்வோம். அங்கு நமக்கு வேண்டியது அனைத்தும் இருக்கிறது. அங்கு சுக்ரீவன் உட்பட யாரும் உள்ளே நுழைய முடியாது. நாம் சந்தோஷமாக ஆயுள் முழுவதும் காலம் கழிக்கலாம் என்று கூறினான். அங்கதனை சொன்னதே சரி என்று பல வானரங்கள் கூறினார்கள்.

அனுமனுக்கு இந்த யோசனை சரி என்று தோன்றவில்லை. ஏன் இப்படி தகாத வார்த்தைகளை பேசுகிறீர்கள். நம்முடைய குடும்பங்களை விட்டுவிட்டு இந்த குகைக்குள் சாப்பிட்டு தூங்கி உயிர் வைத்துக் கொண்டிருப்பதில் பலன் ஒன்றும் இல்லை. சுக்ரீவனுக்கு அங்கதனின் மேல் விரோதம் ஒன்றும் இல்லை. சுக்ரீவன் மிகவும் நல்லவன் அவனை பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை. நீங்கள் சொல்வது போல் நாம் இப்போதிருந்து இந்த குகையில் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தால் லட்சுமணனுடைய கோபத்தில் வரும் ஓர் அம்பிற்கு இந்த குகை தாங்காது. லட்சுமணன் ஒரு அம்பிலேயே இந்த குகையை பொடிப் பொடியாகி ஒன்றும் இல்லாமல் செய்து விடுவான். ஆகையால் இந்த யோசனையை விடுங்கள். சுக்கீரவிடத்தில் நடந்தவற்றைச் சொல்லி நாம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என்றார் அனுமன்.

அனுமன் சொன்னதை கேட்ட அங்கதன் சுக்ரீவனுக்கு என் மீது இரக்கம் கிடையாது. வாலியை எப்படி கொன்றான் யோசித்துப் பாருங்கள். நான் உயிருடன் இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. ஏதாவது காரணத்தை சொல்லி என்னை அழிப்பதே அவருடைய எண்ணம். எந்த அரசனும் தனது ராஜ்யத்துக்கு இடையூறாக இருக்கும் ஒருவரை எப்படி அழிப்பது என்று எண்ணுவார்கள். சுக்ரீவன் அது போலவே என்னை கொல்வான். என் தாய் ஏற்கனவே வாலியை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். இப்போது என்னையும் சுக்ரீவன் கொன்று விட்டால் என் தாய் என்ன ஆவாள் என்று எனக்கு தெரியவில்லை நான் என்ன செய்வேன் என்று கதறி அழ ஆரம்பித்தான். கிஷ்கிந்தைக்கு சென்று உயிரை விடுவதை விட நான் இங்கேயே என் உயிரே விடுகிறேன் என்று சொல்லி தர்ப்பைப் புல்லை கடல் மணலில் பரப்பி அனைத்து தெய்வங்களையும் வணங்கி விட்டு உயிர் நீக்கும் சங்கல்பம் செய்து கொண்டு கிழக்கு முகமாக பார்த்து அங்கதன் அமர்ந்து கொண்டான். யுவராஜன் செய்த காரியத்தை கண்ட பல வானரங்களும் தாங்களும் அப்படியே உயிரை விடுகிறோம் என்று சங்கல்பம் செய்து கொண்டு அங்கதன் பின்னே அமர்ந்து விட்டார்கள்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 20

அனுமனும் அங்கதனும் அங்கே ஒரு பெரிய குகையை கண்டார்கள். இந்த குகைக்குள் இருந்து பல வகைப் பறவைகள் சந்தோசமாக வெளிவந்து கொண்டிருந்தன. குகைக்குள் இருந்து நல்ல வாசனையோடு காற்று வீசுவதை பார்த்து இந்த குகையில் தண்ணீர் இருக்க வேண்டும். அனைவரும் உள்ளே செல்வோம் வாருங்கள் என்று கூறினார்கள். குகைக்குள் இருட்டாக இருந்தது ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு தண்ணீர் தண்ணீர் என்று தாகத்தால் வருந்திய வானரங்கள் வெகுதூரம் இருட்டிலேயே சென்றார்கள். குகையின் இறுதியில் வெளிச்சத்துடன் மிக ரம்யமான வனத்தை கண்டார்கள். மிக அதிசயமான தங்கத்தால் ஆன மாளிகைகளும் எல்லாவித செல்வமும் நிறைந்த நகரத்தை கண்டார்கள். அங்கே ஓரிடத்தில் மரவுரி தரித்த ஒரு பெண் தவஸ்வியை கண்டார்கள். அவரின் முகத்தில் இருந்த தேஜஸை பார்த்து வானரங்கள் நடுங்கினார்கள்.

அனுமன் அவரிடம் சென்று வணங்கினான். தாயே நாங்கள் சோர்வினாலும் தண்ணீர் தகத்தினால் உள்ளே வந்தோம். தங்களைக் கண்டு எங்கள் கூட்டத்தினர் பயப்படுகின்றார்கள். தங்களைப் பற்றியும் இந்த விசித்திர குகையைப் பற்றியும் தாங்கள் சொல்லி எங்கள் வானர கூட்டத்தின் பயத்தை போக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு அந்த பெண் தவஸ்வி நீங்கள் அனைவரும் மிகவும் களைப்பாகவும் பசியுடனும் இருக்கின்றீர்கள். முதலில் உங்கள் பசி தாகத்தை தீர்த்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு பேசலாம் என்று அவர்களுக்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தாள். அனைவரும் பசியாறி மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்பொது தவஸ்வி பேச ஆரம்பித்தாள். இந்த அழகிய அரண்மனை வானவர்களுடைய விஸ்வகர்மா மயன் கட்டியது. பிரம்மாவினால் சுக்ராச்சாரியாருக்கு உபதேசிக்கப்பட்ட சிற்பக் கலையை சுக்ராச்சாரியாரிடம் இருந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து நன்கு கற்றவன். இந்த அரண்மனையை அவன் கட்டி வெகுகாலம் இங்கே வசித்து வந்தான். ஒரு முறை இந்திரன் மேல் ஏற்பட்ட பகையின் காரணமாக இந்திரன் அவனை வதம் செய்து விட்டான். அதன்பின் இந்த பொன்மயமான அரண்மனையை பிரம்மா ஹேமை என்பளுக்கு கொடுத்து விட்டார். இந்த இடத்திற்கு அவளே உரிமையாளர். இப்போது அவள் தேவலோகம் சென்று இருக்கிறாள். எனது பெயர் சுயம்பிரபா. இந்த இடத்தை காவல் காத்துக் கொண்டிருக்குக்கிறேன். இவ்வளவு பெரிய கூட்டமாக வந்திருக்கும் நீங்கள் யார் உங்கள் காரியம் என்ன ஏன் இந்த மாதிரி காடுகளில் திரிந்து களைத்து இருக்கின்றீர்கள் என்று கேட்டாள்.

அனுமன் பேச ஆரம்பித்தார். தசரத குமாரன் ராமர் இந்த உலகத்திற்கு அதிபதியானவர் தன் தம்பி மற்றும் மனைவியுடன் தன் தந்தையின் சத்தியத்தை காப்பாற்றுவதற்காக ராஜ்ய பதவியை விட்டு காட்டிற்குள் வனவாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது ராட்சசன் ஒருவன் ராமருடைய மனைவி சீதையை தூக்கிக் கொண்டு சென்று விட்டான். சீதையை தேடிக் கொண்டு ராமரும் லட்சுமணனும் வந்தார்கள். வன ராஜன் சுக்ரீவன் அவர்களுக்கு நண்பனானான். ராமருக்காக சீதையை தேடும்படி சுக்ரீவன் ஆணையிட்டு ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து எங்களை அனுப்பி வைத்தான். அவர் இட்ட ஆணையை நிறைவேற்ற நாங்கள் அனைத்து காடுகளிலும் குகைகளிலும் தேடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது தாகத்தாலும் பசியாலும் சோர்வினாலும் நாங்கள் இந்த குகைக்குள் வந்து சேர்ந்தோம். குகைக்குள் நீண்ட நாட்களாக தண்ணீரை தேடிக்கொண்டு இருந்ததில் சுக்ரீவன் எங்களுக்கு விதித்த மாத காலம் முடிந்து விட்டது. இன்னும் நாங்கள் சீதையை கண்டு பிடிக்கவில்லை. சுக்ரீவன் மிகவும் கண்டிப்பானவர். அவர் இட்ட வேலையை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யாத காரணத்தினால் எங்களைக் கொன்று விடுவார் தயவு செய்து நாங்கள் விரைவாக வெளியில் செல்வதற்கான வழியை சொல்லுங்கள் என்று அனுமன் தவஸ்வியிடம் சொல்லி முடித்தார்.

ஸ்ரீரங்கம் வெள்ளையம்மாள்

750 ஆண்டுகளுக்கு முன் அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்திய படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் முகமதியப் படைகளின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானது. ஸ்ரீரங்கத்தையும் ஸ்ரீஅரங்கன் திருக்கோவிலையும் காக்க ஸ்ரீரங்க படைகளும் மக்களும் பல நாள் துலுக்கர்களுடன் போரிட்டனர். கோயிலுக்குள் புகுந்து விட்ட முகமதியப் படைகள் கண்ணில் பட்ட அனைவரையும் வெட்டி சாய்த்தது. ஏராளமான பொன் வைர ஆபரணங்களைக் கொள்ளையடித்தனர். மதிப்பு மிக்க பொக்கிஷங்களைத் தேடி அங்கேயே சில காலம் தங்கி விட்டார்கள். நடந்துவிட்ட திடீர் விபரீதங்களை எண்ணிக் கண்ணீர் வடித்தனர் தப்பி பிழைத்த ஸ்ரீரங்கத்து மக்கள். அரங்கன் கோயில் தேவதாசியான வெள்ளையம்மாள் கோயில் கொள்ளைக்குத் தலைமை தாங்கி வந்த முகமதியப் படைத் தளபதிக்கு ஆசை நாயகியாக இருக்க சம்மதித்து தளபதிக்கு செய்தி சொல்லி அனுப்பினாள். அன்று வழக்கத்தை விட தன்னைக் கூடுதலாக அலங்கரித்துக் கொண்டாள். உடன் கிளம்பிய தோழியை இருக்கச் சொல்லிவிட்டு இருட்டில் தனியாகச் சென்றாள். ஸ்ரீரங்கம் முழுவதும் முகமதியர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் வீதிகளில் உள்ளூர் மக்களின் நடமாட்டம் சுத்தமாக இல்லை. முகமதியப் படை வீரர்கள் கோயிலைக் கைப்பற்ற கொடூரமாக போரிட்ட களைப்பில் அதிகமாக மது அருந்தி மயங்கிக் கிடந்தனர். இதனால் பலரை எளிதில் தாண்டிப் போனாள் வெள்ளையம்மாள்.

ஸ்ரீரங்கம் கோயில் மண்டபப் பகுதியில் கூடாரம் அமைத்துத் தூங்கிக் கொண்டிருந்த தளபதியின் குடிலுக்குள் நுழைந்தாள். அந்த நேரத்தில் சுதாரித்துக்கொண்டு எழுந்த தளபதி யாரது என்றபடி தீப்பந்தத்தை உயர்த்தினான். வணக்கம் தளபதியாரே கும்பிட்டாள் வெள்ளையம்மாள். நீயா? இங்கே ஏன் வந்தாய்? தகவல் அனுப்பி இருந்தால் நானே உன் இல்லம் வந்திருப்பேனே என்று அவளருகே வந்தான். தளபதியே இது அரங்கனின் வீடு. இங்கே என் அருகே நீங்கள் வராதீர்கள். என் இல்லம் வாருங்கள். இப்போது ஒரு முக்கியமான சங்கதி கேள்விப்பட்டேன். அதைச் சொல்லத்தான் ஓடோடி வந்தேன் என்றாள். என்ன செய்தி என்றான் தளபதி. இங்கே நீங்கள் எதற்காக படையெடுத்து வந்தீர்கள். என்று கேட்டாள். எதிரிகளை வெற்றிகொண்டு செல்வங்களையும் பெண்களையும் மற்றும் அழகிகளையும் அள்ளிச் செல்ல வேண்டும் என்பது தான் எங்கள் படையெடுப்பின் ஒரே நோக்கம் என்றான் தளபதி. வெற்றி அடைந்து விட்டீர்கள். செல்வங்களை எடுத்துக் கொண்டீர்கள். ஆனாலும் ஏன் இங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டாள். விலை மதிக்க முடியாத செல்வங்களைப் புதையலாக ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதை எடுக்கத்தான் காத்திருக்கிறோம் என்றான் தளபதி. நானும் அதற்காகவே வந்தேன். ஐம்பொன் சிலைகளும் வைர மாலைகளும் முத்து மணிகளும் பாதுகாப்பாக எங்கே இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். அதனை சொல்ல வேண்டுமானால் ஒரு நிபந்தனை அதை நிறை வேற்றுவதாக நீங்கள் சத்தியம் செய்து கொடுத்தால் அந்த இடத்தைக் காட்டுவேன் என்றாள் வெள்ளையம்மாள். எங்கே இருக்கிறது என்று சொல். உன்னை என் நாட்டுக்கு அழைத்துச் சென்று பொன்னாலேயே அலங்கரிக்கிறேன் என்றான் தளபதி.

புதையலை நான் தனியாக சென்று பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் நீங்களும் நானும் மட்டும் முதலில் சென்று பார்ப்போம். அதன் பிறகுதான் நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்றாள். இவ்வளவு தானா சரி வா நீயும் நானும் மட்டும் போய்ப் பார்ப்போம். நீ ஆசைப்பட்ட நகைகளைநீயே எடுத்துக் கொள். மீதி இருப்பதை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்று சந்தோஷமாக சிரித்தான். உங்கள் ஆட்கள் யாருக்கும் தெரியாதபடி மறைந்து வாருங்கள் என்று அழைத்துச் சென்றாள். ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு கோபுரம் அருகே வந்து நின்றாள் வெள்ளையம்மாள். இங்கே தான் இருக்கிறது. ஆனால் மேலே போக வேண்டும் என்று அண்ணாந்து பார்த்தாள். சீக்கிரம் வா போகலாம் உடனே நான் புதையலைப் பார்க்க வேண்டும் என்று அவசரப்பட்டான். சில நிமிடங்களில் இருவரும் கோபுரத்தின் உச்சியை அடைந்தனர். இரவின் நிசப்தத்தை கலைத்துக் கொண்டு சலசலத்தபடி தூரத்தில் ஓடிய காவிரி ஆற்றின் இரைச்சல் கேட்டது. கோபுரத்தின் உச்சியில் இருந்தபடி இரவு நேர ஸ்ரீரங்கத்து அழகை ரசித்துப் பார்த்த தளபதி அற்புத தரிசனம் வெள்ளையம்மா இந்தக் கோபுரத்தின் உச்சியில் இப்போது தான் முதன் முறையாக ஏறி இருக்கிறேன். இந்த இடத்தில் இருந்து உங்கள் ஊரை ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. அத்தனை அழகாக மின்னுகிறது எங்கே இருக்கிறது பொக்கிஷங்கள் என்று கேட்டான். அதோ அங்கே பாருங்கள் என்று கை நீட்டி ஸ்ரீரங்கநாதர் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தை காட்டினாள். அவனும் ஆர்வமாய் பார்த்தான். கீழே தான் பொக்கிஷம் இருக்கிறதா பிறகு ஏன் மேலே அழைத்து வந்தாய் என்று சொல்லி வாய் மூடுவதற்குள் சிணுங்கலாய் பேசிக்கொண்டிருந்த வெள்ளையம்மாள் திடீரென்று புயலாய் மாறினாள். கோபுரத்தின் உச்சியில் இருந்து தளபதியை கீழே தள்ளி விட்டாள். தளபதி எழுப்பிய அபயக் குரல் கேட்டு முகமதியப் படையினர் கிழக்குக் கோபுரம் பகுதிக்கு ஓடி வந்தனர். அங்கே தங்களது படைத் தளபதி இறந்துக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கோபுரத்தின் உச்சியைப் பார்த்தனர். அங்கே வெள்ளையம்மாள் வெற்றி தேவதையைப் போன்ற பெருமிதத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பிடிக்க வீரர்கள் சிலர் கோபுரத்தின் மீது வேகமாக ஏறினர். அதைக் கண்டு கொஞ்சமும் அச்சம் அடையாமல் ஸ்ரீரங்கநாதர் புகழை வாய்விட்டு பாடியபடி குவிந்த கரத்துடன் நினைத்ததை சாதித்த திருப்தியுடன் கோபுரத்தின் மேலே இருந்து கீழே குதித்தாள். அவளுடைய உயிர் பிரிந்தது.

தகவல் கேள்விப்பட்டு ஸ்ரீரங்கத்து மக்கள் ஓடோடி வந்தனர். வெள்ளையம்மாளின் பக்தியைக் குறைவாக மதிப்பிட்டதை எண்ணி தங்களைத் தாங்களே நொந்து கொண்டனர். ஒரு பெண்ணுக்கு இருக்கும் துணிச்சல் தங்களுக்கு இல்லாமல் போனதே என்று ஆண்கள் வீரம் வரப் பெற்றனர். மேலும் ஸ்ரீரங்கத்தை காக்க வெளியிலிருந்து வந்த படைகளும் சேர்ந்து கொண்டன. தலைவன் இல்லாத படையை சிதறடித்தனர். கொள்ளை அடித்து வைத்திருந்த நகைகள் பொன் பெண்களை அப்படியே விட்டு உயிர் பிழைத்த வீரர்கள் தப்பிஓடினர். ஸ்ரீரங்கமாநகரையும் கோவிலையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக தன் உயிரைக் கொடுத்த வெள்ளையம்மாளின் நினைவாக அந்தக் கோபுரம் இன்னமும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. வெள்ளையம்மாளின் தியாக வரலாறு செவிவழிக் கதையாகவே பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அவள் குதித்து உயிர்விட்ட கிழக்கு கோபுரம் இப்போது வெள்ளைக் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. வெள்ளைக் கோபுரத்தில் இருந்து குதித்து உயிருக்குப் போராடிய வெள்ளையம்மாள் தனது உயிர் பிரியும் தறுவாயில் இனிவரும் காலங்களில் என்னைப் போன்ற தேவதாசிகளில் யாரேனும் மரணம் அடையும் போது கோயில் திருமடப் பள்ளியில் இருந்து நெருப்பும் திருக்கொட்டாரத்தில் இருந்து தீர்த்தம் மலர் மாலைகள் திருப்பரிவட்டம் ஆகியவற்றைக் கொடுத்தனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அந்த வழக்கம் வெகுகாலத்துக்கு நடைமுறையில் இருந்தது. 1953-ல் தாசிகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்த பிறகுதான் இந்த வழக்கம் நின்று போயிற்று.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 19

ராமர் சுக்ரீவனிடம் பேச ஆரம்பித்தார். இந்த உலகம் முழுவதும் ஒவ்வொரு திசைகளில் இருக்கும் நாடுகளையும் அதன் வழிகளையும் நேரில் பார்த்தது போல் உன் வீரர்களுக்கு விளக்கிச் சொன்னதை பார்த்தேன். அத்தனை நாடுகளையும் அதன் வழிகளையும் நீ எப்படி அறிந்து வைத்திருக்கிறாய். எப்போது அந்த நாடுகளுக்கு சென்றாய் என்று கேட்டார். அதற்கு சுக்ரீவன் வாலியால் நாட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்டதும் நான் செல்லும் இடங்கலெல்லாம் வாலி என்னை துரத்திக்கொண்டே வருவான். அவனுக்கு பயந்து உலகம் முழுவதும் சுற்றி அலைந்திருக்கிறேன். இதன் காரணமாக உலகம் முழுவதும் இருக்கும் நாடுகள் காடுகள் அனைத்தையும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. ஒரு நாள் மதங்க மகரிஷி ஆசிரமத்தைப் பற்றி அறிந்தேன். இந்த பிரதேசத்தில் வாலி நுழைந்தால் மகரிஷியின் சாபத்தால் அவன் தலை வெடித்துப் போகும் என்ற காரணத்தினால் இங்கு வர மாட்டான். மீறி வந்தாலும் எனக்கு அபாயம் ஒன்றுமில்லை என்று அங்கு பலகாலம் ஒளிந்திருந்தேன் என்று ராமரிடம் சொல்லி முடித்தான் சுக்ரீவன். சுக்ரீவன் வானரங்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஒரு மாத காலம் செல்ல ஆரம்பித்தது.

ராமர் இருக்குமிடத்தில் இருந்து சீதையை தேடிச் சென்றவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். வடக்கு கிழக்கு மேற்கு பக்கம் சென்றவர்கள் அனைவரும் திரும்பி வந்தார்கள். காடுகள் மலைகள் ஆறுகள் நகரங்களிலும் ஜாக்கிரதையாக தேடிப் பார்த்து விட்டோம். சீதையை எங்கும் காணவில்லை. எங்களுக்கு சீதையை கண்டு பிடிக்கும் பாக்கியம் இல்லை. ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு தென் திசை நோக்கியே சென்றிருக்கிறான். தென் திசை சென்ற அனுமனும் திரும்பி வரவில்லை. விரைவில் அனுமன் நல்ல செய்தியோடு வருவார் என்று எண்ணுகிறோம் என்று சுக்ரீவனிடம் சொல்லி முடித்தார்கள். வானரங்கள் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராமர் அவர்களின் முயற்சியில் திருப்தி அடைந்தார்.

ராமர் தெற்குப் பக்கம் சென்ற அனுமன் நல்ல செய்தியோடு வருவார் என்று அனுமனின் வருகைக்காக காத்திருந்தார். தெற்குப் பக்கம் தேடிக் கொண்டு சென்றவர்கள் விந்தைய மலைக் குகைகளிலும் வனங்களிலும் புகுந்து எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தார்கள் எங்கும் சீதையை காணவில்லை. ஒரு பெரிய பாலைவனத்தை கண்டார்கள். அங்கும் தேடிப் பார்த்துவிட்டு அதனை தாண்டி வேறு இடம் சென்றார்கள். அங்கு ஒரு அரக்கன் இருந்தான். அரக்கனை கண்ட வானரங்கள் அவன் தான் ராவணனாக இருக்க வேண்டும் ராவணன் இங்கிருப்பதால் சீதை இங்கு தான் எங்கோ இருக்க வேண்டும் என்று அரக்கனை நோக்கி சென்றார்கள். ஒரு பெரிய வானர கூட்டம் தம்மை நோக்கி வருவதைக் கண்ட அரக்கன் இன்று நல்ல உணவு கிடைத்தது என்று சந்தோசமாக அவர்களை பிடிக்க தாவினான். அங்கதன் அரக்கன் மேல் பாய்ந்து ஒர் அறை அறைந்தான். அந்த அடியை தாங்க முடியாமல் அரக்கன் கத்திக் கொண்டே கீழே விழுந்து இறந்தான். ராவணன் இறந்தான் என்ற மகிழ்ச்சி அடைந்த வானரங்கள் அந்த காடு முழுவதும் சீதையைத் தேடிப் பார்த்தார்கள். சீதை அங்கு இருப்பதற்காக ஒரு அறிகுறியும் அங்கு காணவில்லை. பிறகு வேறு இடத்தை தேடி சென்றார்கள். எவ்வளவு தேடியும் பயனில்லையே என்று உற்சாகம் இழந்து வருத்தப்பட்டு அமர்ந்து விட்டார்கள். அங்கதனும் அனுமனும் தைரியம் சொல்லி வானரங்களை உற்சாகப் படுத்தினார்கள். உற்சாகமடைந்த வானரங்கள் மறுபடியும் தேடி சென்றார்கள். இப்படியே பல நாட்கள் கழிந்தது. சீதையைக் காணவில்லை. சுக்ரீவன் கடுமையான தண்டனை விதித்து விடுவானே என்ற பயத்தில் தேடிக் கொண்டே சென்றவர்கள் பசியாலும் தாகத்தாலும் சோர்வடைந்தனர்.

அமைதி

ஒரு முனிவரின் ஆசிரமத்திற்கு அரசர் ஒருவர் வந்து தங்கினார். அன்று இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த ஆசிரமத்தை சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. நாய்கள் வெறித்தனமாகக் குரைத்து இரவின் அமைதியைக் கெடுத்தன.
அரசரால் தூங்கவே முடியவில்லை. அரசருக்கு கோபம் வந்தது. நாய்களின் சத்தத்திற்கு நடுவில் முனிவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பிய அரசர் இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது என்று புலம்பினார்.

முனிவர் பொறுமையுடன் பதில் கூறினார். அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த நாய்கள் உங்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ இங்கு கூடவில்லை. இங்கு அரசர் தங்கி இருப்பது நாய்களுக்கு தெரியாது. அதற்கான அறிவும் அந்த நாய்களுக்கு கிடையாது. அவை தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள் தூங்குகிற வேலையைப் பாருங்கள் என்றார். நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால் நான் எப்படி தூங்க முடியும் என்றார் அரசர்

அதற்கு முனிவர் நீங்கள் அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அது போல் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல. உங்கள் எதிர்ப்பு உணர்வு மட்டுமே. நீங்கள் சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள். இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை. நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவதும் இல்லை. நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான். நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன பார்த்தீர்களா ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால் குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான் என்றார் முனிவர். உதவாக்கரை யோசனை என்று மனதுக்குள் பழித்தபடி போனார் அரசர். ஆனால் காலையில் மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து முனிவரைச் சந்தித்தார் அரசர். ஆச்சரியம் எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன் என்றார் அரசர்.

ஆத்ம ஞானம்

ஆத்ம ஞானம் என்பது அவரவர்களால் அறியப்படுகிற ஒரு பொருள். இன்று வரை யாராலும் அதைப்பற்றி முழுவதுமாக சொல்ல முடியவில்லை. சொல்ல முடியாததன் காரணம் மனிதன் நூறு வருடங்கள் வாழ்கிறான் என்றால் ஆன்மாவின் தத்துவமோ கோடிக்கணக்கான வருடங்களாக இந்த உலகத்தில் வாழ்கிறது.

ஆத்ம ஞானத்ததைப் பற்றி கருத்துக்கள் சொல்வது குருடர்கள் யானையைத் தொட்டு தடவிப் பார்த்து தங்களது கருத்துக்களை சொல்வது மாதிரி தான் இருக்கும். யானையின் காலைத் தொட்டு பார்த்தவன் தூண் மாதிரி இருப்பதாகச் சொல்வான். அதன் காதை தொட்டு பார்த்தவன் முறம் மாதிரி இருப்பதாகச் சொல்வான். காதை தொட்டுப் பார்த்தவன் சொல்வதும் நிஜம்தான். காலை தொட்டுப் பார்த்தவன் சொல்வதும் நிஜம்தான். ஆனால் காதும் காலும் மட்டும் யானையாகாது. அவர்கள் கண்டது ஆத்ம ஞானத்தின் ஒரு பகுதி மட்டுமே.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 18

ராமரிடம் சுக்ரீவன் பேச ஆரம்பித்தான். இந்த கோடிக்கணக்கான அபூர்வ பலம் கொண்ட வானர சேனைகள் அனைவரும் உங்களுடைய சேனைகளை. நீங்கள் இடும் ஆணையை குறைவில்லாமல் செய்யும் பலம் மிக்கவர்கள். இவர்கள் அனைவரையும் உங்களுடைய சேனைகளாக கருதி தற்போது தங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை உத்தரவிடுங்கள் அவர்கள் செய்து முடிப்பார்கள் என்று சொல்லி முடித்தான் சுக்ரீவன். அதைக் கேட்ட ராமர் மகிழ்ச்சியடைந்து சுக்ரீவனை அணைத்துக் கொண்டார். ராமர் பேச ஆரம்பித்தார். முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது சீதை எங்கே இருக்கின்றாள்? அவளை தூக்கிச் சென்ற ராவணன் எங்கே இருக்கின்றான்? என்பதே கண்டு பிடிக்க வேண்டும். இப்போது இங்கு உள்ள வானர படைகளுக்கு உத்தரவிட வேண்டியது வானரங்களின் அரசனான நீ தான் சுக்ரீவா. நானும் லட்சுமணனும் அல்ல. எல்லாம் அறிந்து செய்ய வேண்டியதைச் செய்ய தெரிந்தவன் நீ உன் திட்டப்படியே நடக்கட்டும் என்றார் ராமர்.

ராமரின் உத்தரவுப்படி சுக்ரீவன் தனது சேனாதிபதிகளுடன் ஆலோசித்து ஒரு கூட்டத்திற்கு ஒரு தலைவனை நியமித்து எட்டு திசைகளுக்கும் சென்று சீதையை தேட ஆணையிட்டான். சுக்ரீவன் அனுமனிடம் பேச ஆரம்பித்தார். நீ சீதையை கண்டு பிடிக்கும் ஆற்றல் உடையவன். உன் தந்தையின் வேகமும் நல்ல பலத்தையும் நீ பெற்றிருக்கிறாய். பலம் அறிவு உபாயம் அனைத்தும் உன்னிடத்தில் நிறைவுடன் இருக்கின்றது. எனவே சீதையை தேடும் இந்த பொறுப்பை உன்னிடமும் ஒப்படைக்கிறேன். உன்னைத் நான் இந்தப் பெரும் காரியத்தில் நம்பியிருக்கிறேன். உனக்குச் சமமாக வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லை. நீ அங்கதனுடன் சென்று சீதை எங்கிருக்கிறாள் என்பதை அறிந்துவா என்று அனுமனுக்கு ஆணை பிறப்பித்தான் சுக்ரீவன். வடக்கே சதபலி என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். கிழக்கு பக்கமாக வினதன் என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். மேற்கே சுஷேணன் என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். தெற்கே அனுமன் அங்கதன் தலைமையில் சென்றார்கள். எப்படியாவது சீதையை கண்டுபிடிக்க வேண்டும். எங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்தாலும் அவர்களை உங்களால் கண்டுபிடிக்க முடியும் அதற்கான மன வலிமை உடல் வலிமை உங்களிடம் இருக்கிறது. ஒரு மாதத்திற்குள் கட்டாயம் திரும்பி வந்து என்னிடம் சொல்ல வேண்டும் என்று மிகக் கண்டிப்பாக ஆணையிட்டான் சுக்ரீவன். எட்டு திசைகளில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் எப்படி செல்ல வேண்டும் என்றும் அதற்கான வழிகளையும் தெளிவாக வானர கூட்டங்களுக்கு விளக்கிச் சொல்லி அனுப்பினான். எட்டு திசைகளுக்கும் வானர கூட்டங்கள் புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல் எட்டு திசைகளுக்கும் பிரிந்து சென்றனர்.

ராமர் சீதையை கண்டு பிடிக்கும் காரியத்தை அனுமன் சரியாக செய்து முடிப்பார் என்று எண்ணினார். எந்தவிதமான இடையூறுகள் வந்தாலும் அதனை நீக்கி செய்து முடிப்பான் அனுமான் என்பதையும் உணர்ந்தார். அனுமனை தன்னருகே அழைத்தார் ராமார். தனது மோதிரத்தை அனுமனிடம் கொடுத்தார். உன்னால் சீதை கண்டு பிடிக்கப்பட்டால் இந்த மோதிரத்தை அவளிடம் நீ காட்டு இந்த மோதிரத்தை பார்த்தவுடன் நீ என்னுடைய தூதன் என்பதை அவள் அறிந்து கொள்வாள். விரைவில் அவளை மீட்பேன் என்ற செய்தியை அவளிடம் சொல்லி அவள் இருக்குமிடத்தை விரைவில் அறிந்துவா. நான் சீதையை மறுபடியும் அடையும்படி செய்வாயாக என்று ராமர் அனுமனிடம் கூறினார். விரைவில் சீதை இருக்குமிடம் அறிந்து கொண்டு தங்களை வந்து சந்திக்கிறேன் என்று ராமரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு சென்றார் அனுமான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 17

ராமருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது என்பதே அறிந்த சுக்ரீவன் ராமரே நினைத்து மிகவும் பயந்தான். லட்சுமணனை சகல மரியாதையுடன் உள்ளே அழைத்து வருமாறு தனது சேவகர்களுக்கு கட்டளையிட்டான். அந்தப்புரத்தின் உள்ளே வந்த லட்சுமணன் அங்கு ஆட்டம் பாட்டம் இசையுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் கண்டு கோபம் கொண்டான். தனது வில்லின் நாணை இழுத்து சத்தம் எழுப்பி தனது கோபத்தை வெளிக் காட்டினான். அந்த சத்தம் கிஷ்கிந்தை நகரத்தையே நடுங்கச் செய்தது. நாணின் சத்தத்தை கேட்டதும் சுக்ரீவன் பயந்து எழுந்தான். லட்சுமணன் உண்மையில் மிகவும் கோபமாக வந்திருக்கிறான் என்ற அபாயத்தை உணர்ந்து தாரையிடம் உடனடியாக சென்று லட்சுமணனை சமாதானப்படுத்தும் படி கேட்டுக் கொண்டான். உலக அறிவிலும் சாமர்த்தியமான பேச்சிலும் தாரைக்கு நிகர் யாருமில்லை. அவள் லட்சுமணனிடம் சென்று மெதுவாக பேச ஆரம்பித்தாள். வெகு நாட்கள் பகைவன் தொந்தரவுடன் சுகங்கள் எதையும் அனுபவிக்காமல் துக்கத்துடனேயே வாழ்ந்து வந்த சுக்ரீவன் நீங்கள் சம்பாதித்துக் கொடுத்த ராஜ்யத்தை பெற்றதும் அதில் உள்ள சுகங்களில் புத்தி மயங்கி அனுபவித்து வருகின்றான். அவன் மேல் கோபம் கொள்ள வேண்டாம். மயக்கத்தில் மூழ்கியிருக்கும் சுக்ரீவனை தெளிவுடன் இருக்கும் தாங்கள் மன்னிக்க வேண்டும். தங்களுக்கு கொடுத்த வாக்கை அவர் மறந்து விடவில்லை. பல இடங்களில் உள்ள வீரர்களை எல்லாம் இங்கு வந்து சேர சுக்ரீவன் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றான். அவர்கள் இன்றோ நாளையோ வந்து விடுவார்கள். பிறகு சீதையைத் தேடும் வேலையையும் ராவணனை எதிர்த்து வெற்றி வரும் வேலையும் நடைபெறும். சுக்ரீவனை சந்தேகப்பட வேண்டாம். இப்போது அரசனை பார்க்க தாங்கள் உள்ளே வரலாம் என்று லட்சுமணனை அழைத்துச் சென்றாள். தாரையின் பேச்சால் கோபம் குறைந்த லட்சுமணன் உள்ளே நுழைந்ததும் சுக்ரீவன் தனது ஆசனத்தில் இருந்து இறங்கி வந்தான். முதலில் நான் எந்த குற்றம் செய்திருந்தாலும் மன்னிக்க வேண்டும் என்று லட்சுமணனிடம் கேட்டுக்கொண்டு பேசத் துவங்கினான்.

ராமருடைய நட்பினாலும் வீரத்தாலும் நான் இந்த ராஜ பதவியை அடைந்தேன். ராமன் எனக்கு செய்த உதவியை நான் மறக்க மாட்டேன். ராமருடைய பராக்கிரமத்தை அறிந்தவன் நான். என் துணை இல்லாமலேயே பகைவர்களை அழிக்கும் பலம் ராமருக்கு உண்டு என்று எனக்கு தெரியும். நான் என் சேனைகளுடன் அவரை பின்பற்றி செல்வேன். சீதையை தேடுவதற்கு ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்படும். நான் செய்த தாமதத்தை மன்னித்து விடுங்கள் என்று லட்சுமணனிடம் கேட்டுக்கொண்டான். இதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த லட்சுமணன் ராமர் இருக்கும் இடத்திற்கு வந்து இந்த செய்தியை சொல்லி அவரின் துக்கத்தை போக்குங்கள் என்று லட்சுமணன் சுக்ரீவனிடத்தில் கேட்டுக் கொண்டான். சுக்ரீவனும் லட்சுமணனும் ராமர் இருக்குமிடம் சென்று அவரின் கால்களில் விழுந்து வணங்கி இந்த நல்ல செய்தியை சொல்லி அவரை திருத்திப் படுத்தினான்.

ராமர் மகிழ்ச்சியுடன் பேசத் துவங்கினார். உன்னை போன்ற நண்பன் உலகத்தில் வேறொருவன் இல்லை. மேகங்கள் மழை பெய்து பூமியை குளிரச் செய்தது போல் என் உள்ளத்தை குளிரச் செய்துவிட்டாய். உன் நட்பை பெற்றது என் பாக்கியம். இனி ராவணன் அழிவது நிச்சயம் என்று ராமர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுக்ரீவன் சொல்லி அனுப்பிய அனைத்து வானர கூட்டங்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். பல்வேறு நிறங்களும் வடிவங்களும் கொண்ட வானரங்கள் மொத்தமாக வந்ததில் எழுந்த தூசியானது வானத்தை மறைப்பது போல் இருந்தது.