ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 245

கேள்வி: இறையை அடைவதற்கு ஸ்தூல வடிவில் குரு அவசியமா? அல்லது தனிப்பட்ட முயற்சியினாலேயே இறையை அடைய முடியுமா?

இறைவன் கருணையாலே யார் இருளை நீக்குகிறாரோ அவர் குரு. யார் பிறவித் தளையை நீக்குவதற்கு வழி காட்டுகிறாரோ அவர் குரு. இது ஒரு புறம் இருக்க ஒன்றை உணர்ந்து கொள்ள ஒன்றை கற்றுக் கொள்ள எது காரணமாக இருக்கிறதோ அது அனுபவமோ நிகழ்வோ சக உறவோ நட்போ இதன் மூலம் தக்க பாடம் கற்றுக் கொண்டோம். இனி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற உணர்வு எத்தருணம் யார் மூலம் அல்லது எதன் மூலம் ஒரு மனிதனுக்கு வருகிறதோ அனைத்தும் குருதான். எனவே புறத்தோற்றத்தில் குருவைத் தேடுவதை விட மானசீகமாக இறைவனை வணங்கி குறிப்பாக இறைவனை குரு தக்ஷிணாமூர்த்தி ரூபத்திலே வணங்கி வந்தால் குரு தொடர்பான ஐயங்கள் நீங்கும். மனதில் உள்ள இருள் நீங்கும். மனித வடிவில் குருவைத் தேட வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. எத்தனைதான் உயர்ந்த புண்ணியங்கள் செய்து பலருக்கு ஆன்மீக வழி காட்டுகிறேன் என்று ஒரு ஆத்மா பிறந்தாலும் இங்கு வந்த பிறகு சிறிது சேற்றைப் பூசிக் கொள்ளத்தான் செய்கிறது. எனவே அவன் 90 நல்ல விஷயங்களை போதித்து சில தவறான விஷயங்களை போதித்து விட்டால் அதைக் கேட்கின்ற மனிதனுக்கும் அந்தத் தவறு பாடமாகப் பதிந்து விடும். எனவே மனித விடிவில் பலரை சென்று பார்ப்பதை தவறு என்று கூறவில்லை. எல்லாம் கேட்டு விட்டு பிறகு இறைவனை மானசீகமாக வணங்கி எது நல்லது? எது அல்லது? என்பதை இறைவா நீ உணர்த்து என்று இறைவனிடம் சரணாகதி அடைவதே மெய்யான குருவிற்கும் குருவின் போதனைக்கும் ஏற்ற வழியாகும்.

கேள்வி: பிறவி தோறும் வரும் வாசனை காமம் குரோதம் (கோபம்) லோபம் (பேராசை) போன்றவற்றைக் கடக்க வழி:

வைராக்யத்தால் மட்டும்தான் கடக்க இயலும்.

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை.

  1. மச்ச அவதாரம்

தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.

  1. கூர்ம அவதாரம்

மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.

  1. வராக அவதாரம்

ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.

  1. நரசிம்ம அவதாரம்

எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .

  1. வாமண அவதாரம்

ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.

6.பரசுராம அவதாரம்

வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.

  1. ராம அவதாரம்

திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.

  1. பலராம அவதாரம்

இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.

9.கிருஷ்ணஅவதாரம்

முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.

  1. கல்கி அவதாரம்

இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும் தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 244

கேள்வி: வயதானவர்களின் கஷ்டங்களால் அவர்களுக்கும் துன்பம் அவர்களின் இரத்த சம்பந்தங்களுக்கும் துன்பம். இதற்கு யார் காரணம்? அவர்களா? அல்லது இவர்களா?

இறைவனின் கருணையாலே இது குறித்து வெளிப்படையாகப் பேசினால் மனிதர்கள் மனம் வேதனைதான் அடையுமப்பா. பொதுவாகப் பாரத்தால் அகவை (வயது) அதிகமானவர்கள் பல இல்லங்களில் புறக்கணிக்கப்படுவதும் அவர்கள் மனம் வேதனைப்படும் வண்ணம் இளையவர்கள் நடந்து கொள்வதும் பொதுவான விஷயமாக இருந்தாலும் கூட ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நன்றும் தீதும் பிறர் தர வாரா. ஒரு மனிதன் தன் பால்ய பருவத்திலே எதையெல்லாம் விதைக்கிறானோ அதனை அடுத்தடுத்து அறுவடை செய்துதான் ஆக வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது. தனக்கு நடக்கும் துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் யார் காரணம்? தான் எந்தெந்த சந்தர்ப்பத்தில் சூழலில் எப்படியெல்லாம் நடந்து கொண்டோம்? என்று அவனவன் மனதிற்குத் தெரியும். வெளிப்படையாக அதை அவன் கூறினால் அவனின் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் பலருக்கும் புரியும். எனவே ஒவ்வொரு மனிதனும் நேர்மையாக யார் மனதையும் புண்படுத்தாமல் ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் அவனுடைய வாழ்க்கையும் நன்றாகவே செல்லும்.

விதிவிலக்காக மிக மிக உத்தமமான அன்பர்களுக்கும் கடைகாலத்திலோ அல்லது இடைகாலத்திலோ கடுமையான துன்பங்கள் பிணியாகவோ பொருளாதார நெருக்கடியாகவோ அல்லது உறவு சிக்கல்களாகவோ ஏற்படலாம். அது போன்ற நல்ல ஆத்மாக்களுக்கு வினைக் கழிவாக அது ஏற்படுகிறது. அந்த வினை கழிந்தவுடன் அவன் மீண்டும் நலம் பெற்று விடுவான். ஆனால் சிறு வயதில் செய்த பிழைக்காக தவறுக்காக மத்திய காலத்திலும் அந்திம காலத்திலும் இடர்படுகின்ற ஆத்மாக்கள் அந்த இடர்களை நுகர்ந்துதான் ஆக வேண்டும். ஏன்? தன் இளமைக் காலத்திலே தன் பெற்றோர்களைப் புறக்கணித்தவர்கள் தன் கணவனின் பெற்றோரைப் புறக்கணித்தவர்கள் இன்று மட்டும் தனக்குப் பிறர் ஆதரவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? என்பதை அவனவன் மனசாட்சிப்படி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இருந்தாலும் கூட துன்பப்படுவதற்கு நீதான் காரணம் என்று கூறுவது அநாகரீகம் என்பது எமக்கும் தெரியும். எனவே இது போன்ற துன்பஙகளில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வோடு பிறருக்கு முடிந்தவரை நலம் செய்து வாழ வேண்டும். தன்னைச் சார்ந்தோர்களுக்கு இயன்ற நன்மைகளை செய்ய வேண்டும். அகவை(வயது) அதிகமானவர்கள் மன ரீதியாக வாய் வழியாக மதித்தால் மட்டும் போதாது. மனதிற்குள் நல்ல மரியாதை செய்து வாழ்த்தினால் அவர்களை வணங்கினால் அப்படி வணங்குகின்றவர்களின் அந்திம காலம் (கடைசி காலம்) சிறப்பாகவே இருக்கும். எனவே இது போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்கள் மனதளவிலே இறைவனை எண்ணி வணங்கினால் இறைவன் கருணையாலே கட்டாயம் மாற்றங்கள் நேரிடும்.

தேகம் நலிவு பெறுவதும் அகவை (வயது) அதிகமாவதும் ஒவ்வொரு மனிதனுக்கும் நடக்கக் கூடியதுதான் என்பதை வாலிப காலத்தில் ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும். அப்பொழுதுதான் தனக்கும் அந்திமம் (கடைசி காலம்) இருக்கிறது. அப்பொழுது பிறர் உதவியை எதிர்பார்த்து வாழ வேண்டும். அப்பொழுது யாராவது தன்னைப் புறக்கணித்தால் தன் மனம் வேதனைப்படும் என்கிற அந்த உணர்வு வரும். இவையெல்லாம் வெறும் பால பாடங்கள்தான். இன்னும் எத்தனையோ சூட்சுமங்கள் இருக்கிறது. ஆனால் வாழ்வியலும் அவசர கதியிலும் வாழ்கின்ற மனிதன் இதையெல்லாம் கவனிக்க எங்கே நேரமிருக்கிறது? என்று கூறினால் அவனையும் பிறர் கவனிக்க நேரமில்லாமல் போய் விடுமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 243

கேள்வி: மதுரையில் மீண்டும் மோட்ச தீபம் ஏற்ற குருநாதர் அனுமதி அளிக்க வேண்டும்:

இறைவன் கருணையாலே பல்வேறுவிதமான பூஜைகளை இன்னும் எம் சேய்களுக்கு (பிள்ளைகளுக்கு) யாங்கள் அருளாணையிட்டு செயல்படுத்த வேண்டுமென்ற அவா (விருப்பம்) எமக்கு நிறைய இருக்கிறதப்பா. இப்பொழுது நீயும் உன்னொத்து அன்பர்களும் செய்துவரும் அறப்பணிகளே எமக்கு மிகவும் நெகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. இந்த நிலையிலே இன்னும் பல்வேறு விதமான பூஜைகளையும் யாங்கள் இறைவன் அனுமதித்த பிறகு கூறுவோம். அதே சமயம் எமக்கு வருத்தம் என்று கூற இயலா விட்டாலும் மனிதர்களுக்குப் புரிகின்ற வார்த்தைக்காக அதைக் கூறுகிறோம். இத்தனை ஆண்டுகள் எம்மிடம் வாக்கைக் கேட்டாலும் தமக்குள் பிணக்கு கொண்டு பிரிந்திருக்கின்ற மனிதர்கள் என்று ஒன்று சேருவார்கள்? அவர்கள் ஒன்று சேர்ந்தால் இன்னும் ஊர் கூடி தேர் இழுக்கலாம். ஆனால் எமது வாக்கு என்று அறிந்தாலும் கூட அதையும் கேட்க மறுக்கின்ற விதியமைப்பு கொண்ட மனிதர்கள் நிறைய நிறைய அன்பர்கள் இருப்பதால் சற்று கால அவகாசத்திற்குப் பிறகு இறைவன் அருளாணையிட்ட பிறகு யாம் நீ வினவிய வினாவிற்கு விடை கூறுகிறோம். அதுவரை செய்கின்ற பணியை மேலும் சிறப்பாக மேலும் ஒற்றுமையோடு செய்ய நல்லாசிகள்.

கேள்வி: யார் கேட்டாலும் கருணை செய்வீர்களா? அல்லது மனமார பிராத்தனை செய்பவர்களுக்குத்தான் கருணை காட்டுவீர்களா?

இறைவனின் கருணையாலே கேட்கின்ற விஷயமல்ல. கேட்கின்ற மனிதனல்ல. அவன் வினைப் பயன்களின் தொகுப்பை வைத்து தானப்பா நாங்கள் எதையும் செயலாற்ற முடியும். நல்ல விஷயங்களை பொதுவாக உபதேசம் செய்யலாம். ஆனால் இன்றே என் கஷ்டத்தையெல்லாம் நீக்கு. இல்லையென்றால் நீ இருப்பது பொய் என்று ஒருவன் வந்தால் நாங்கள் மெளனத்தைத் தவிர வேறு எதையும் கடைபிடிக்க இயலாது. இருந்தாலும் மெய்யாக மெய்யாக மனமார இறைவனையோ எம்மையோ ஒருவன் துதித்து ஒரு செயலில் இறங்கினால் கட்டாயம் நாங்கள் இறைவனருளால் வழி காட்டுவோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 242

கேள்வி: ஒருவர் கண்டிப்பாக தர்ப்பணம் செய்ய வேண்டுமா? அதனால் என்ன பயன்?

அர்ப்பணத்தோடு செய்தால் அது தர்ப்பணம். செய்து தீர வேண்டியிருக்கிறதே என்று செய்தால் அது அவலம். எனவே இது போன்ற பூஜைகள் எதற்காக ஏற்படுத்தப்பட்டன? என்று ஊன்றி கவனித்தால் ஒருவிதமான பொருளாதார சுழற்சி தெரியும். ஒரு தனி மனிதனைப் பார்த்து இயல்பாகவே பிறருக்கு உதவு என்றால் உதவ மாட்டான். அவனை போன்றவர்களுக்கு புரிய வைத்து இது போன்ற பூஜைகள் மூலம் சில தர்ம காரியங்களையும் சில மந்திரங்களை உருவேற்றி அதன் மூலம் அவன் பூர்வீக தோஷங்களைக் குறைப்பதற்குண்டான யுக்தி. கட்டாயம் அவரவர்களால் இயன்ற அளவு செய்து வருவது சிறப்பு. பூர்வீக தோஷத்தையும் எந்த குடும்பத்தில் ஒரு மனிதன் பிறந்திருக்கிறானோ அந்தக் குடும்பத்தில் உள்ள பூர்வீக தோஷமும் அந்த மனிதன் எத்தனை பிறவிகளில் சேர்த்த பாவத்தை நீக்குவதற்கு இது ஓரளவு உதவும். ஏன் என்றால் பெயரளவிற்குதான் இத்தருணம் இது நடந்து கொண்டிருக்கிறது. மீதியைக் குறைப்பதற்கு என்ன வழியென்றால் யாங்கள் (சித்தர்கள்) கூறுவது போல போதுவாக பக்தியும் தர்மமும் இருந்தாலும் இறைவனை பைரவர் வடிவத்திலே வணங்கி பைரவருக்கு இயன்ற வழிபாடுகளை தொடர்ந்து செய்து வர நன்மையுண்டாம்.

கேள்வி: லட்சுமி நரசிம்மர் காயத்ரி மந்திரம்:

அப்பனே இக்கலிகாலத்தில் எது கிடைக்கிறதோ அதை உள்ளன்போடு ஓது. கட்டாயம் இறைவனருள் உண்டு. மந்திரத்திலே தவறும் பிழையும் இருக்கலாம். அது தெரிந்த பிறகு திருத்திக் கொள்ளலாம். தெரியாத நிலையிலே தவறாக உச்சரிப்பதால் இறைவன் ஒன்றும் சினம் கொள்ளப் போவதில்லை. எனவே மந்திரத்தைத் தவறாக உச்சரிப்பதால் குற்றம் வந்துவிடப் போவதில்லை. ஆனால் மனதிலே தவறான எண்ணங்கள் இருந்தால்தான் அது பாவமாக மாறும். மனம் சுத்தமாக பரிசுத்தமாக இருக்கும் நிலையில் இறைவன் எப்படி அழைத்தாலும் இறைவனுக்கு மகிழ்ச்சியே.

திருவருட்பிரகாச வள்ளலார் இயற்றிய குடும்பக் கோரம்

திருவருட் பிரகாச வள்ளலாரை முத்துசாமி என்பவர் தன் திருணமத்திற்கு அழைத்திருந்தார். வள்ளற்பெருமான் திருமணத்திற்கு செல்லவில்லை. வள்ளற்பெருமான் வராததை எண்ணி வருத்தம் கொண்டார் முத்துசாமி அவர்கள். அவர் வருந்துவதை உணர்ந்த வள்ளற்பெருமான் தன்னுடைய மூன்று மனைவிகள் 8 பிள்ளைகள் படுத்தும் பாட்டால் திருமணத்திற்கு வர இயலவில்லை என்று குறிப்பிட்டு பாடல் வடிவில் ஒரு கடிதம் எழுதினார். அந்தப் பாடல்களே குடும்பக் கோரம். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட மிக உயர்ந்த உபதேசம் இது. தத்துவக் குடும்பத்தில் அகப்பட்டுத் தடுமாறும் கோர நிலையைக் கூறுவதால் இது குடும்பகோரம் எனப்பெயர் பெற்றது.

பாடலின் கருத்து:

குடும்பத் தலைவன் பெயர் – ஏழை அவனுக்கு மூன்று மனைவிகள்:
முதல் மனைவி – ஆணவம்
இரண்டாம் மனைவி – மாயை
மூன்றாம் மனைவி – கன்மம்.

முதல் மனைவியாகிய ஆணவத்திற்கு ஒரே மகன் – அவன் பெயர் அஞ்ஞானம். இரண்டாம் மனைவியாகிய மாயைக்கு நான்கு பிள்ளைகள் – 1. மனம் 2. புத்தி 3.சித்தம் 4.அகங்காரம். மூன்றாம் மனைவியாகிய கன்மத்திற்கு மூன்று பிள்ளைகள் – 1.சத்துவம் 2.இராசசம் 3.தாமசம்

மூன்று மனைவியரோடும் எட்டுப் பிள்ளைகளோடும் ஏழைத் தலைவன் வாழ்வதோ வாடகை வீட்டில். வாடகை வீடு ஒருவருக்கு சொந்தமானது இல்லை. வீடு மூன்று பேருக்கு சொந்தமானது. அந்த மூன்று பேர் 1.வாதம் 2.பித்தம் 3.சிலேத்துமம்.
வீட்டுக்காரர்கள் மூவரும் வீட்டிற்கு ஒவ்வொரு மாதமாக வாடகை வாங்குவது இல்லை. தினந்தோறும் வாடகையை வசூலிக்கின்றனர். வீடு – உடம்பு. வாடகை – உணவு.

இவ்வாறு துன்புறும் குடும்பத் தலைவனுக்கு எத்தனையோ வெளி விவகாரம் உள்விவகாரம் உள்ளது. அவை வேதாந்தம் பேச வருவோர்கள் சித்தாந்தம் பேச வருவோர்கள் இதிகாசம் கூற வருவோர்கள் இலக்கணம் இயம்ப வருவோர்கள் மத தூஷணம் செய்ய வருவோர்கள் விவகாரம் பேச வருவோர்கள் வீண் கதைகள் பேச வருவோர்கள் இப்படி எத்தனையோ வெளி விவகாரங்கள்.

மலங்கழித்தல் பல்துலக்குதல் ஆடை துவைத்தல் நீராடல் சிவ சின்னம் அணிதல் பூசனை யோகம் என எத்தனையோ உள் விவகாரங்கள். இத்தனை விவகாரங்களுக்கும் பகல் பொழுது சரியாகப் போகிறது.

இரவு வந்தது இனிப் பரத்தை வீட்டுக்குச் செல்ல வேண்டும். பரத்தை யார்? நித்திரை. நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும் பொழுதும் சரியாய்ப் போகின்றது என்று வள்ளலாரின் குடும்ப கோரம் நிறைவு பெருகின்றது.

இவ்வாறு பாடல்களை அருளி இத்தடைகளால் திருமணத்திற்கு வரவில்லை என முத்துசாமி அவர்களுக்கு இக்குடும்ப கோரத்தை வள்ளலார் கொடுத்து அனுப்பினார். பெருமானிடமிருந்து குடும்பகோரக் கடிதத்தை முத்துசாமியிடம் கொண்டு சென்றவர் கொந்தமூர் வரதாசாரியார். முத்துசாமி இந்த அகவலை மனப்பாடம் செய்து வைத்திருந்தார். மனப்பாடமாக அவர் சொல்லக் கேட்டு அதனை மோசூர் கந்தசாமி அவர்கள் எழுதி வைத்தார். அது சித்தந்த சரபம் கலியாண சுந்தரனார் (அட்டாவதானம் பூவை கலியான சுந்தரனார்) பார்வையிட்டு காஞ்சி நாகலிங்கனார் நடத்தி வந்த தொழிற்கல்வி இதழில் 1914 ஜூலை ஒரு பாதியும் ஆகஸ்டு இதழில் மறுபாதியுமாக வெளிவந்தது. அனைத்து திருஅருட்பா பதிப்புகளிலும் குடும்ப கோரம் பிற்சேர்க்கை பகுதியில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் இதுவே மிக நீண்ட செய்யுள் கடிதம் ஆகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 241

கேள்வி: ஒரு மனிதன் மற்றவர்களால் பாதிக்கப்பட்டால்?

இறைவன் கருணையால் இவன் சுற்றி வளைத்துக் கேட்பதே செய்வினை குறித்துதான். இந்த செய்வினையால் (வினாவைக் கேட்டவனல்ல வினாவை கேட்பித்தவனைப் பற்றி யாங்கள் கூறுகிறோம்) தன் குடும்பம் பாதிக்கப்பட்டு இருப்பதாக எண்ணுகிறான். எம்மிடமும் முன்பு வந்து வாக்கை(ஜீவநாடி) அறிந்திருக்கிறான். இதழ் (ஜீவநாடி) ஓதுபவனிடம் சில பூஜைகளை செய்ய யாம் (அகத்திய மாமுனிவர்) அருளாணை இட்டிருந்தோம். ஆனால் பல்வேறு காரணங்களால் அது பூர்த்தியடையவில்லை. அது பூர்த்தியடைந்த பிறகு அன்னவனுக்கு வாக்கு உண்டு என்றாலும் இதுபோல தொடர்ந்து ஒரு மனிதன் எண்ணுவது போல உண்மையானது என்றே வைத்துக் கொள்வோம். அந்த அதர்வண வேதத்தால் ஒரு மனிதன் பாதிக்கப்பட வேண்டும் என்று அவன் விதியில் இருந்தால் அந்த பாதிப்பு வரத்தான் செய்யும். இருந்தாலும் தடைபடாத பக்தியும் தாராளமான தர்மமும் இருந்தால் இதிலிருந்து ஒரு மனிதன் வெளியே வந்து விடலாம். சுக்ர வாரமும் (வாய்ப்பு இல்லாதவர்கள்) அனலி வாரம் (ஞாயிறு) உக்கிரமான அன்னையை வணங்கி வர இது போன்ற பிரச்சினைகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபடலாம்.

கேள்வி: ஆதித்ய ஹ்ருதயம் சொல்லுவதன் மூலம் பிறவியைப் பற்றி அறிந்து கொள்ள முடியுமா?

ஆதித்ய ஹ்ருதயம் ஓது என்று கூறினால் ஒருவன் வினவுவான் (கேட்பான்). ஏன் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்று இளங்கோ கூறியிருக்கிறானே? அதைக் கூறக்கூடாதா? என்று. அதைக் கூறு என்று கூறினால் இல்லையில்லை வடமொழியில்தான் சக்தி அதிகமாக இருக்கிறது. வடமொழியில் உள்ள காயத்ரி மந்திரத்தை சொல்லலாமா? என்று கேட்பான். முன்பு கூறியதுதான் இதற்கும். தாராளமாக ஆதித்ய ஹ்ருதயமும் கூறலாம். வேறு வகை அவரவர்கள் அறிந்த எந்த மொழியாக இருந்தாலும் அந்த மொழி மந்திரங்களையும் கூறலாம். நல்ல ஆத்ம பலம் பிறக்குமப்பா.

பூதநாதா கோவில்

கர்நாடகாவில் உள்ள பாதாமியில் பழமையான 7 ஆம் நூற்றாண்டு கோவில். பூதநாதர் கோயில் உயர்ந்த விமானத்துடன் உள்ளது. பூதநாதர் என்னும் பெயர் பூதகணங்களின் தலைவன் என்று பொருள்பட்டு சிவனைக் குறிக்கும். இது 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. சாளுக்கியர்கள் இந்த இடத்தில் கட்டிய கோயில்களில் இறுதியானதாக இக்கோவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது ஏனெனில் இக்கோவிலைச் சுற்றியுள்ள கோயில்கள் ராஷ்டிரகூடர் காலத்தவையாக உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 240

கேள்வி: இராம ரக்ஷா ஸ்தோத்ரம் பற்றி:

மிக மிக உயர்வு. அந்த உயர்வைக் காட்டிலும் எதாவது ஒரு வார்த்தை இருந்தால் அந்த வார்த்தைகளை இங்கே பயன்படுத்திக் கொள்ளலாம். அதைத் தவிர வேறு கூற யாது இருக்கிறது அப்பனே?

கேள்வி: பரணி கிருத்திகை அஷ்டமி நவமிகளில் தாங்கள் வாக்கை (ஜீவநாடி வாக்கு) அளிப்பதில்லை என்பது உண்மையா?

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் பரணியோ அட்டமியோ நவமியோ கிருத்திகையோ சந்திராஷ்டமமோ எமக்கு (அகத்திய மாமுனிவர்) ஏதும் இல்லையப்பா. எம்மைப் பொருத்தவரை புரிதல் உள்ள மனிதன் வந்து அமர்ந்தால் (ஜீவநாடி முன் அமர்ந்தால்) அதே போதும். நாங்கள் (சித்தர்கள்) அல்லும் பகலும் அறுபது நாழிகையும் (ஒரு நாள்) வாக்கு உரைக்கத் தயார் இறைவன் அனுமதித்தால். ஆயினும் சுருக்கமாக வெளிப்படையாகக் கூற வேண்டுமென்றால் வருகின்ற மனிதனின் பூர்வீக பாவங்கள் கடுமையாக இருக்க அவன் வினவுவதும் லோகாய விஷயமாக இருக்க ஏற்கனவே பாவங்கள் அவனை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டு இருக்க வேதனையில் வந்து அமரும் அவனுக்கு எதாவது ஒரு வழியைக் காட்ட வேண்டுமென்றால் விதி வழிவிட வேண்டும். ஆனால் லோகாய விஷயமாக அவன் கேட்கின்ற வினாவிற்கு யாம் இறைவன் கருணையால் விடையைக் கூறி அதை அவன் பின்பற்றி மேலேறி வர வேண்டத்தான் நாங்கள் காலத்தைப் பார்க்கிறோமே தவிர பொதுவாக ஞானத்தை அறிந்து கொள்வதற்கு எக்காலமும் தடையல்ல.

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 95

சுலோகம் -132

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-13

வேள்வியில் மீதமான எஞ்சிய உணவை உண்கின்ற சான்றோர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். ஆனால் எந்தப் பாவிகள் தம் உடலைப் பேணுவதற்காகவே உணவை சமைக்கிறார்களோ அவர்கள் பாவத்தை உண்கிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து தன்னலம் கருதாமல் கடமை ஆற்றும் ஒழுக்கங்களில் சிறந்த அறிவார்ந்தவன் இறைவனுக்காக என்றே சமைத்து அதனை இறைவனுக்கு சமர்ப்பித்து விட்டு அதனை இறைவனின் பிரசாதமாக உண்பவன் தனது எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். ஆனால் ஐம்புலன்களின் ஆசை வழியாக சென்று பார்ப்பது நுகர்வது கேட்பது ருசிப்பது உணர்வது ஆகிய ஏதேனும் ஒன்றினால் ஒரு உணவை சாப்பிட ஆசைப்பட்டோ அல்லது தனது உடல் அழகாக வேண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆசையின் வழியாக சென்று உணவை சமைத்து உண்கிறார்கள் பாவத்தை உண்பவர்கள் ஆகிறார்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சமைக்கும் போது ஐந்து வகையான கருவிகளால் பாவம் ஏற்படுவதாக ஆதிசங்கரர் தனது உரையில் கூறிப்பிட்டுள்ளார். அவை 1. அடுப்பு 2. நீர்த்தொட்டி 3. வெட்டும் கருவிகள் 4. அரைக்கும் கருவிகள் மற்றும் துடப்பம். இந்த கருவிகளை உபயோகித்து சமைக்கும் போது நம்மை அறிந்தோ அறியாமலோ கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் இறந்து அதனால் பாவம் சேர்கிறது.