அறியாமை மனம்

சிவாலய வளாகத்துக்கு அருகே ஒரு நாய் எப்போதுமே சுற்றிக் கொண்டே இருக்கும். கோயிலை சுற்றி உள்ள வீடுகளில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்தது. அப்போது அந்த ஊரின் சிவாலயத்தில் 11 நாட்கள் தொடர் திருவிழா தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அந்த ஊரில் அனைவருமே தாங்கள் சாப்பிடும் உணவை இறைவனுக்கு படைத்து விட்டு சாப்பிட்டார்கள். இறைவனுக்கு படைத்தது என்பதால் கீழே போடக்கூடாது என்று மீதம் இல்லாமல் சாப்பிட்டார்கள். யார் வீட்டிலுமே எச்சில் இலைகளை தூக்கி வெளியே போடவில்லை. நாய்க்கு எச்சில் இலை உணவு கிடைக்காததால் பசி தாங்க முடியாமல் கோயிலின் ஓரத்தில் வந்து படுத்து கிடந்தது. அப்போது அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பேச்சாளர் ஒருவர் பிரசங்கம் செய்தார். ராமர் பூஜை பிரதிஷ்டை செய்த லிங்கம் உள்ள இராமேஸ்வரம் தல மகிமையை விளக்கமாக பேசினார். அனைத்தையும் அந்த நாயும் காது கொடுத்து கேட்டது. இராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் உள்ள சிறப்பை கேட்டதும் மக்கள் அனைவரும் திருவிழா முடிந்ததும் அக்கோயிலுக்கு செல்ல வேண்டும் புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். நாய் சிந்தித்தது. நாமும் இப்படியே எச்சில் இலையை பொறுக்கித் தின்றே காலத்தை கழித்து விடக் கூடாது. இராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தது. திருவிழா முடியும் வரை கோயிலின் அருகே இருந்து இவரது சொற்பொழிவுகள் அனைத்தையும் கேட்டு மேலும் இறைவனைப் பற்றி தெரிந்து கொள்வோம். பின் கிளம்பலாம் என்று நாய் முடிவு செய்து திருவிழா முடியும் நாளுக்காக காத்திருந்தது. கோயிலில் நடக்கும் பிரசங்கங்களை தினமும் கேட்டு நாளடைவில் அதற்கு இராமேஸ் வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானது. சாப்பிடாமல் விரதம் இருந்ததால் வைராக்கியம் அதிகரித்தது. திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரம் போயே தீருவது என்று உறுதியாக இருந்தது,

கோயிலில் திருவிழா முறைப்படி நிறைவாகி கொடியை இறக்கினார்கள். நாயும் இராமேஸ்வரம் புறப்படத் தயாராகி நடை பயணத்தை தொடங்கியது. முதல் அடி எடுத்த வைத்தது. அப்போது ஒரு வீட்டின் பின் பக்கத்தில் இருந்து பொத் என்று ஒரு சத்தம் கேட்டது. நாய் திரும்பிப் பார்த்தது. எச்சில் இலையில் நிறைய உணவு இருந்தது. அதனைப் பார்த்ததும் பசியுடன் இருந்த நாயின் வாயில் எச்சில் ஊறியது. என்ன மணம் நல்ல கறி விருந்தாக இருக்கிறது என்று சாப்பிட்டது. நல்ல வேளை இந்நேரம் இராமேஸ்வரம் போயிருந்தால் இந்த கறி விருந்து கிடைத்திருக்காது என்று நினைத்து அடுத்த எந்த வீட்டில் இலை விழும் என்று பார்க்க தொடங்கி இராமேஸ்வரத்தை மறந்தது.

இந்த நாயின் மனம் போலத்தான் ஒரு மனிதனின் மனம். இந்த மனம் இருக்கிறதே மகிழ்ச்சியில் அனுபவிக்க எது கிடைத்தாலும் நன்றாக அனுபவித்து ஆட்டம் போடும். மகிழ்ச்சிக்கு எதுவும் கிடைக்காத பொழுது ரொம்ப அடக்கமாகவும் சுவாமி மீது பக்தி பண்ணுவது போலவும் நம்மை போல பக்திமான் யாரும் இல்லை என்னைப் போல் நல்லவன் யாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டு நல்லவன் போலவே கபட வேஷம் போடும். ஆனால் பணம் சேர்க்க பொருள் சேர்க்க தவறு செய்யும் போதும் நாக்கு சுவை தேடி புலால் உண்ணவும் மது உண்ணவும் என்று வாய்ப்பு கிடைத்ததும் கோயிலாவது சாமியாவது புண்ணியமாவது அதுக்கெல்லாம் இன்னும் வயது இருக்கிறது. இப்பவே சாமியார் மாதிரி உத்திராட்சம் போட்டு திருநீறு பூசி காசி இராமேஸ்வரம்னு போகனுமா? வாழ்க்கையை இந்த வயதில்தான் அனுபவிக்க வேண்டும் என்று ஆட்டம் போட மனம் ஆரம்பித்து விடும். துக்கம் வந்தால் சாமி சாமி என்பதும் துக்கம் தொலைந்ததும் ஆட்டம் போடுவதும் மனிதனின் பிறவித் துன்பத்திற்கு மூல காரணமாகவே இருக்கிறது. இதனை அறியாத மனிதன் நான் எனது என்னுடையது என்று ஆட்டம் போட்டபடியே அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

சனிபகவான்

கொடுமுடி மகுடேசுவரர் கோயில் என்றும் திருப்பாண்டிக் கொடுமுடி கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற சிவன் கோயில் ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் கொடுமுடியில் உள்ளது. இத்தல சிவன் மீது திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மூவரும் பாடல்கள் பாடியுள்ளார்கள். இக்கோயிலில் சனிபகவான் காகத்தின் மேல் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்த கோலத்தில் வலது கையில் திரிசூலத்தை ஏந்திய நிலையில் எழுந்தருளி அருள்கிறார்.

குருநாதர் கருத்துக்கள் #54

இக்காலத்தில் காரியங்கள் நல்வழியில் செல்லும் காலங்களில் இறைவனுக்கு நன்றி கூறுவது குறையாக உள்ளது. இருப்பினும் காரியங்கள் நல்வழியில் செல்லா காலங்களில் ஏன் எமக்கு இறைவன் எதுவும் செய்வதில்லை என குறை காண்பது இயல்பானாது என்கின்ற போதிலும் ஆன்மிக பாதையில் வர வேண்டுவோர் அனைத்தும் அவன் செயல் என உறுதியாக எண்ணுதல் வேண்டும். இவ்விதம் இல்லை என்றால் ஆன்மிக பாதையில் நடப்பது கடினமாகும். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது உண்மையானால் நடப்பது அனைத்தும் அவன் விருப்பமே. ஏன் இப்பிரபஞ்சமே அவன் விருப்பத்தால் படைத்தான் என்பதே உண்மையாகின்றது. அதிலிருக்கும் ஜீவராசிகளும் அவன் விருப்பத்திற்கே இயங்குகிறது என்பதும் உண்மையானதே. இத்தகைய நிலையில் நமக்கு நடைபெறுகின்ற ஒவ்வொன்றும் அவன் விருப்பம் என்பது மட்டுமல்லாது நம் முன் ஜென்ம வினைகளை தீர்க்கும் வழிகளே என்றென மனதில் உறுதிப்படுத்த வேண்டும். இதனை யாம் மீண்டும் மீண்டும் இங்கு கூறுகிறோம். ஏன் என்றால் ஆன்மிக பாதையில் செல்லுதல் வேண்டுமென பலர் ஆர்வம் கண்டுள்ளனர். இருப்பினும் தியாகம் செய்திடும் நிலையில் இல்லை என்கின்றதே ஓர் பெரும் குறையாகின்றது. இக்குறையை தயவு செய்து நீக்கிடுவீர்களாக. அனைத்தும் அவன் செயல் என வாயால் கூறினால் போதுமானதல்ல நடைமுறையில் செயல்படுத்த வேண்டும், இதனைக் குறையாக கூறவில்லை அறிவுரையாக எடுத்துக் கொள்வீர்களாக. இல்லையென்றால் ஓர் ஆன்மிக தோற்றம் உண்டாகுமே ஒழிய முழுமையான ஆன்மிகமாகாது. இதனை ஆங்கிலத்தில் கூறினால் உறுதியாக உணர்வீர்கள் என்பதற்காக PSEUDO SPIRITUALITY என்றும் கூறுவோம். இதனை தவிர்த்தல் வேண்டும். கற்றது கைமண் அளவாக உள்ள போதிலும் அதனை முழுமையாக கற்றுக் கொண்டு செயல்படுங்கள் என்பதே எமது அறிவுரையாகும். இவ்வாழ்கையில் ஆன்மிகம் முழுமையாக அடைய இயலாது என்கின்ற போதிலும் அதற்கு வருத்தம் வேண்டாம். மீண்டும் மீண்டும் பிறவி உண்டு ஏதோ ஓர் ஜென்மத்தில் பிறவி இல்லா நிலை அடையக்கூடும். இது மனிதனின் விதி என்பதை எடுத்துரைக்கின்றோம்.

சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட 5 வகை குளியல்கள்

  1. வாருணம் – குளம் ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தல் வாருணம் ஆகும். இதில் கழுத்து மற்றும் இடுப்பு வரை குளித்தலுக்கு கௌணம் என்று பெயர்
  2. பஸ்மோத்தூளனம் – விபூதி பூசிக் கொள்வது. விபூதி குளியல் என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஆக்நேயம் என்று பெயர். அக்னி சம்பந்தமுடையது என்று பொருள். அக்னியின் வெப்பத்தால் கிடைக்கும் சாம்பலை பூசிக் கொள்வது.
  3. வாயவ்யம் – பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது அதன் கால் குளம்பு மண் புனிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு கோ தூளி என்று பெயர். ஸ்ரீகிருஷ்ணன் இந்தப் பசுக்களின் கால் குளம்பு பட்ட மண்ணை சந்தனப் பொடி தூவினதுபோல தனது உடம்பில் படிந்தபடி இருப்பாராம். இதனால் அவருக்கு கோதளி தூஸரிதன் என்ற பெயர் ஏற்பட்டது. காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால் இதன் பெயர் வாயவ்யம் எனப் பெயர்.
  4. திவ்யம் – திவ்யம் என்ற சொல்லுக்கு மேன்மைய்யானது தெய்வீகத் தன்மை கொண்டது என்று பொருள். பகலில் சில நேரங்களில் வெய்யில் அடிக்கும் போதே மழையும் பொழியும். இவ்வாறான மழை நீர் தேவலோகத்திலிருந்து வரும் தீர்த்தத்துக்கு சமம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் குளிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்பதால் திவ்யக் குளியல் என்று பெயர்.
  5. ப்ராஹ்ம ஸ்நானம் – ப்ரம்ஹம் என்றால் வேதம் மற்றம் வேத மந்திரம் என்று ஒரு பொருள். கலச நீர் வைத்து மந்திரம் சொல்லி யாகம் செய்தபின் அந்த கலசத்தில் உள்ள மந்திர நீரை தெளிப்பார்கள். வேத மந்திரத்தால் புனிதப் படுத்தப்பட்ட தீர்த்த நீரை தெளித்துக் கொள்ளுதலுக்கு ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர்.

குருநாதர் கருத்துக்கள் #53

கேள்வி: நகைச்சுவை தரும் வினா ஒன்றும் ஒருத்தர் வினாவிட்டார். உலகில் நாய் என்பது அவ்வளவிற்கு கேவலமானதா? அதில் ஈஸ்வரன் இல்லையா?

இக்கேள்விக்கு மூல காரணம் ஓர் பழமொழியே. நாயைக் கண்டால் கல்லை காணவில்லை கல்லை கண்டால் நாயை காணவில்லை என்பதே அப்பழமொழியாகும். நாயைக் கண்டவுடன் அடித்தல் வேண்டுமோ இது என்ன எண்ணம். அவ்விதமில்லை இதற்கு விளக்கமாவது ஓர் நல்ல கல்லால் உருவாக்கிய நாய் பொம்மை ஒன்றை குழந்தை கண்டால் அதனை நாயாகவே காணும். கல்லின் தரத்தை குழந்தை காண்பதில்லை. மாறாக சிற்பியோ கல்லின் தரமும் அதன் மெருகும் மட்டும் காண்கின்றான். சிற்பி நாயை காண்பதில்லை இதற்கு ஈடாகவே திருமந்திரத்தில் மரத்தில் மறைந்தது மாமதயானை என்னும் பாடல் உள்ளது. இதன் விளக்கம் இதுவேயன்றி கண்டவுடன் நாயை அடித்தல் வேண்டும் என்பதல்ல.

குருநாதர் கருத்துக்கள் #52

கேள்வி: ஆத்ம ஞானம் நாடும் பொழுது நிராகரிப்பு (எதுவும் வேண்டாம் என்பது) வேண்டுமோ?

எதார்த்த நிலையில் இறைவனை நாடி ஆத்ம நிலை உணர வேண்டும் என எண்ணுவோர் கட்டுப்பாட்டுடன் இருத்தல் வேண்டுமே ஒழிய நிராகரிப்பு அவசியமற்றதாகும். மாற்றாக முழுமையாக துறவம் கண்டோன் நிராகரிப்பு செய்தல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. ஆச்சார்யம் எனும் நிலை கண்டால் அங்கு முழுமையாக நிராகரிப்பு இல்லை என்பதே கருத்தாகின்றது. இதற்கு சான்றாக கோத்திர ரிஷிகள் இருந்தார்கள். இக்காலத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் குறித்தே இவ்வினா எழும்பி உள்ளது. எது எவ்விதம் இருந்த போதிலும் மற்றவர்களை வழி நடத்துவோர் தான் செல்லும் பாதை முதன்மையில் சீராக்குதல் வேண்டும் தாம் அடுத்தவர்க்கு கூறுவதை தாமே பின்பற்ற வேண்டும் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து ஆன்மீக பாதையில் செல்ல விரைவில் ஆத்ம ஞானங்கள் உண்டாகும்.

பிரேமா பாய்

ஸ்ரீரங்கநாதரின் சன்னிதியில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர். இவரது இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்த புரந்தரதாசர் கிருஷ்ண பட்டரின் மகள் பிரேமாவுக்கு இசையை கற்றுக் கொடுத்தார். இதன் பின்னர் கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கிய பிரேமா கோயிலில் ஆழ்வார் பாசுரங்களைப் பாடி வந்தாள். அவள் பாடுவதைக் கேட்கும் அனைவரும் மெய் மறப்பார்கள். இந்த நிலையில் ஏழ்மை நிலையில் இருந்த கிருஷ்ணபட்டர் தனது மகளை தூரத்து உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு திருமணம் முடித்துக் கொடுத்தார். அவன் நல்லவன் இல்லை என்பதை தாமதமாக உணர்ந்தார் பட்டர். இதனால் அவர் மனம் தவித்தார். பிரேமா மனம் தளராமல் ஸ்ரீகிருஷ்ணரிடம் அளவற்ற பக்தியுடன் ராமாயணம் பாகவதம் ஆகியவற்றைத் தொடர்ந்து படித்து வந்தாள். அவளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ராமகிருஷ்ணன் எனப்பெயரிட்டு வளர்த்தாள். இந்த நிலையில் மது போதையில் காவிரி வெள்ளத்தில் சிக்கி இறந்தான் அவன் கணவன். மகளின் நிலை குறித்த கவலையால் மனம் உடைந்து போன கிருஷ்ணபட்டர் இறந்து போனார். கணவனையும் தந்தையையும் இழந்த பிரேமா ஸ்ரீரங்கத்தில் இருக்கப் பிடிக்காமல் குழந்தையுடன் வாரணாசிக்குச் சென்றாள். அங்கு தர்மசத்திரம் ஒன்றில் தொண்டாற்றி வந்தாள்.

காசியில் அனைவரும் அவளை பிரேமா பாய் என்றே அழைத்தனர். அப்போது அவளின் மகன் ராமகிருஷ்ணனுக்கு வயது பத்து. தமிழ் இந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசுவதில் திறன் பெற்றிருந்தான் அவன். தனது தாயிடம் கர்நாடக சங்கீதமும் கற்று வந்த ராமகிருஷ்ணன் உபன்யாசம் கலாட்சேபம் போன்றவற்றைக் கேட்டு ஸ்ரீகிருஷ்ண பக்தனாகவும் விளங்கினான். ஒருநாள் சத்திரத்துக்கு அடியார்கள் சிலர் வந்தனர். அவர்களை பக்தியுடன் வரவேற்றாள் பிரேமா பாய். இவர்களுக்கு உணவளித்து உபசரித்தால் கங்கைக் கரையில் தினமும் நடக்கும் பாகவத உபன்யாசத்தைக் கேட்க முடியாது. உபன்யாசத்திற்கு சென்றால் அடிவர்களை உபசரிக்க முடியாது. என்ன செய்வது? என்று தவித்தாள். சிறிது நேரம் யோசித்தவள். அடியவர்களுக்கு தாம் உணவளிக்கலாம். பாகவதம் கேட்க மகன் ராமகிருஷ்ணனை அனுப்பி விடலாம். பிறகு அவனிடம் விவரமாய் தாம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி ராமகிருஷ்ணனை பாகவதம் கேட்க அனுப்பினாள்.

உபன்யாசம் முடிந்து வீடு திரும்பிய ராமகிருஷ்ணனிடம் உபன்யாசத்தில் இன்று பவுராணிகர் என்ன சொன்னார்? என்று ஆவலுடன் கேட்டாள். அம்மா கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பு வளர்ப்பு லீலைகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறும் தசம ஸ்கந்தம் பற்றி விளக்கினார். குழந்தை கண்ணன் புழுதியில் விளையாடியது வெண்ணெயைத் திருடி உண்டது யசோதா துரத்தியும் பிடிபடாமல் ஓடியது ஆகியவற்றை விவரித்தார். கோலைக் கையிலெடுத்து அடிக்கப் போவதாய் யசோதா பயமுறுத்துகிறாள். குழந்தைக் கண்ணன் அழத் தொடங்குகிறான். ஏதேனும் ஒரு வகையில் கண்ணனைத் தண்டிக்க எண்ணி அவனை உரலோடு பிணைத்துக் கட்டுகிறாள் யசோதா. ஆனால் குறும்புக்காரக் கண்ணனோ கட்டிய உரலையும் சேர்த்து இழுத்தபடி வீட்டின் பின்புறம் சென்று ரெட்டையாக நின்ற மருத மரங்களுக்கு இடையே புகுந்தான் என்று நிறுத்திவிட்டு உபன்யாசத்தில் இன்று இதைத்தான் சொன்னார் என்றான். இதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட பிரேமாபாய் மெய் மறந்தாள். தான் கண்ணனின் காலத்தில் இருப்பதாகவே எண்ணிக் கொண்டாள். கண்ணா உன்னையா உரலில் கட்டிப் போட்டார்கள்? கயிறு இறுக்கி உன் வயிறு வலிக்குமே நீ மர இடுக்குகளில் நுழைந்து செல்லும் போது ஏதாவது பூச்சிகள் உன்னைக் கடித்தால் என்னாவது? என்னால் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. இப்போதே கயிறை அவிழ்த்து விடுகிறேன் என்றவாறு கங்கையை நோக்கி ஓடினாள்.

அம்மா அம்மா என்று கூவியபடி சிறுவன் ராமகிருஷ்ணனும் அவளது பக்தியைக் கண்டு வியந்த அடியவர்களும் அவளைப் பின்தொடர்ந்தனர். பிரேமா பாய் கங்கை நதியில் குதித்தாள். அவள் விழுந்த இடத்தில் இருந்து ஓர் ஒளிப் பிழம்பு விண்ணை நோக்கிச் சென்றது. ஜோதி வடிவாகச் செல்லும் பிரேமா பாயை அனைவரும் வணங்கினர். தந்தையைக் காவிரியிலும் தாயை கங்கையிலும் இழந்த ராமகிருஷ்ணன் தான் பிறந்த பூமியான ஸ்ரீரங்கத்துக்கு வந்தான். அங்கு அரங்கன் சன்னிதியில் கிருஷ்ண சைதன்ய மகாபிரபு பக்தர்களுடன் ஆடிப்பாடி ஆனந்த நிலையில் இருப்பதைக் கண்டு பரவசமுற்றான். நாடெங்கும் போய் பக்தியைப் பரப்பிய மகானான சைதன்ய மகாபிரபுவுடன் இணைந்து அவரைப் பின்தொடர்ந்தான். மொகாலய படையெடுப்பின் போது பெர்ஷியா நாட்டுக்குச் சென்று மறைந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது பெர்ஷியன் சங்கீதத்தைக் கற்றுத் தேறிய ராமகிருஷ்ணன் திரும்பி வந்ததும் குருவின் ஆணைப்படி பிருந்தாவனத்தை அடைந்து ஸ்ரீகிருஷ்ண நாம சங்கீர்த்தனம் பாகவத சேவை என்று தனது வாழ்நாளைக் கழித்தான். இந்த ராமகிருஷ்ணனே பிற்காலத்தில் தீட்சை பெற்று ஸ்வாமி ஹரிதாஸ் என்ற பெயரில் புகழ்பெற்றார். இவர் உருவாக்கியதே ஹிந்துஸ்தானி சங்கீதம். அக்பர் சபையில் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்த தான்சேன் இவரிடம் தான் சங்கீதம் பயின்றார்.

குருநாதர் கருத்துக்கள் #51

கேள்வி: கொடுத்த வாக்கு காப்பாற்ற இயலாதவர் வாக்கானது நீரில் எழுதியது போல் என்பார்கள் இதன் பொருள் என்ன? இதற்கு உள் அர்த்தம் உண்டா?

பொது அறிவின் வழியில் இதை சிந்திக்க நீரில் எழுதியது அவ்வடிவத்தில் நிலைப்பதில்லை என்றும் உடனடியாக மறைந்து விடுவதாக நாம் அறிகின்றோம். அத்தகைய நிலை தான் பொய்யரின் வாக்கும் இந்த வினாவின் விளக்கம் எளிதாகின்ற போதிலும் மறு விளக்கம் ஒன்று அளிக்க உள்ளோம். இத்தகைய நீர் என்கின்ற போதிலும் திருவருள் என்பது அதனுடன் சேர திருநீரில் எழுதியது அனைத்தும் நற்பலனைத் தரும். உலகத்தில் லட்சக்கணக்கான பூஜ்யங்கள் இருந்த போதிலும் இறையருள் என்கின்ற ஒன்று அதனுடன் சேர்ந்திடவே எண்ணிக்கை உண்டாகின்றது. இதனை மனதில் நிறுத்தி சிந்தித்து செயல்படுவதும் நன்றே ஏனெனில் திருவருள் இன்றி எதுவும் இல்லை திருவருள் இன்றி அனைத்தும் சூன்யமே என்ன வடிவங்களில் இறைவனை நீங்கள் வணங்கிய போதிலும் முடிவானது அனைத்தும் பிரம்மமே என்பதாகின்றது.

பூதப்ருத் நம

திருவரங்கத்தில் ஓர் ஏழை வைணவர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பதினாறு குழந்தைகள். திருவரங்கநாதன் கோயிலில் பிரசாதம் வழங்கப்படும் போதெல்லாம் அதைப் பெற்றுக்கொள்ள முதல் ஆளாக வந்து நின்றுவிடுவார். தான் ஒருவனுக்கு மட்டுமின்றித் தன் குடும்பம் முழுமைக்கும் பிரசாதம் வேண்டுமெனக் கேட்பார். அரங்கனுக்கு அன்றாடம் தொண்டுசெய்யும் அடியார்களெல்லாம் அரங்கனின் பிரசாதத்தில் ஒரு துளி கிட்டுவதே பேரருள் என எண்ணிப் பெற்றுச் செல்ல இவர் எந்தத் தொண்டும் செய்யாமல் பிரசாதம் மட்டும் நிறைய வேண்டுமெனக் கேட்பதைக் கோயில் பணியாளர்கள் விரும்பவில்லை. உரத்தகுரலில் அர்ச்சகர்கள் இவரை விரட்டுவதால் தினமும் கோயிலில் கூச்சல் குழப்பம் ஏற்ப்படும். ஒருநாள் பிரசாதம் பெற்றுக்கொள்ளத் தன் பதினாறு மெலிந்த குழந்தைகளுடன் வரிசையில் வந்து நின்று விட்டார் அந்த வைணவர். கோயில் பணியாளர்கள் அந்த வைணவரை விரட்டிக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் அங்கே வந்த ராமாநுஜர் அக்காட்சியைக் கண்டார். அந்த வைணவரை அழைத்து நீர் கோயிலில் ஏதாவது தொண்டு செய்துவிட்டுப் பிரசாதம் பெற்றுச் சென்றால் யாரும் உம்மைக் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் நீர் பிரசாதம் பெற வேண்டும் என்பதற்காகவே இரவு பகலாக இங்கே கோயிலில் வந்து நின்றிருப்பதால் தானே இத்தகைய கூச்சல் குழப்பம் ஏற்படுகிறது? என்றார் ராமானுஜர். அதற்கு வைணவர் அடியேன் வேதம் கற்கவில்லை திவ்யப் பிரபந்தங்களும் கற்கவில்லை. எனவே பாராயண கோஷ்டியில் இணைய இயலாது. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் தான் ஓரிரு வரிகள் தெரியும். இப்படிப்பட்ட நான் என் பதினாறு குழந்தைகளுக்கு உணவளிக்க வேறென்ன வழி? என்று ராமானுஜரிடம் கேட்டார்.

ராமானுஜர் வைணவரைப் பார்த்து உமக்குத் தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் தெரியும் என்று சொல்கிறீர்களே அதைச் சொல்லுங்கள் கேட்கிறேன் என்றார். உடனே வைணவர் விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ என்று சொல்லத் தொடங்கி பூதப்ருத் என்ற ஆறாவது திருநாமத்தைத் தாண்டி அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. மீண்டும் விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ எனத் தொடங்கி பூதப்ருத் என்ற திருநாமத்துடன் நிறுத்தி அடியேனை மன்னிக்க வேண்டும் என்று ராமானுஜரின் திருவடிகளில் விழுந்தார். அந்த ஏழையின் மேல் கருணைகொண்ட ராமானுஜர் பூதப்ருத் நம என்ற ஆறாவது திருநாமத்தை அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? அதுவே போதும். பூதப்ருதே நம என்று தொடர்ந்து ஜபம் செய்து வாருங்கள். உணவைத் தேடி நீங்கள் வரவேண்டாம். உணவு உங்களைத் தேடிவரும் என்றார். அடுத்தநாள் முதல் அரங்கனின் கோயிலில் அந்த ஏழை வைணவரைக் காணவில்லை. அவர் எங்கு சென்றார் எனக் கோயில் பணியாளர்களிடம் ராமானுஜர் விசாரித்த போது வேறு எங்காவது அன்னதானம் வழங்கியிருப்பார்கள். அங்கு சென்றிருப்பார் என கூறினார்கள். அன்று முதல் கோயிலில் ஒரு விசித்திரமான திருட்டு நிகழத் தொடங்கியது. அரங்கனுக்குச் சமர்ப்பிக்கப்படும் பிரசாதத்தில் ஒரு பகுதி மட்டும் தினமும் காணாமல் போக ஆரம்பித்தது. இத்தனைப் பணியாளர்கள் இருக்கையில் யாருக்கும் தெரியாமல் உணவைத் திருடிச் செல்லும் அந்த மாயத்திருடன் யார் என யாருக்கும் புரியவில்லை. இச்செய்தி ராமானுஜருக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ராமானுஜர் எவ்வளவு நாட்களாக இது நடக்கிறது? என கேட்டார். நீங்கள் அந்த ஏழையைக் கோயிலுக்கு வரவேண்டாம் என்று சொன்ன நாள் தொடங்கி இது நடக்கிறது. வைணவரையும் அன்று முதல் காணவில்லை. எனவே அந்த வைணவருக்கும் இதற்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என்றார்கள் கோயில் பணியாளர்கள். அந்த வைணவர் இப்போது எங்கிருக்கிறார் எனத் தேடிக் கண்டறியுங்கள் என உத்தரவிட்டார் ராமாநுஜர். கோயில் பணியாளர்களும் அவரைத் தேடத் தொடங்கினார்கள்.

சிலநாட்கள் கழித்துக் கொள்ளிடத்தின் வடக்குக் கரைக்கு ராமானுஜர் சென்ற போது அந்த வைணவரும் அவரது பதினாறு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் அங்கே ஒரு மரத்தடியில் குடியிருப்பதைக் கண்டார். ராமானுஜரைக் கண்டதும் அந்த வைணவர் ஓடி வந்து அவர் திருவடிகளை வணங்கி சுவாமி அந்தப் பையன் தினமும் இருமுறை என்னைத் தேடிவந்துப் பிரசாதம் வழங்கிக் கொண்டிருக்கிறான். நானும் பூதப்ருதே நம என தினமும் ஜபம் செய்து வருகிறேன் என்றார். எந்தப் பையன்? என்று வியப்புடன் கேட்டார் ராமானுஜர். அவன் பெயர் அழகிய மணவாள ராமானுஜதாசன் என்று சொன்னான் என்றார் அந்த ஏழை. கோயிலுக்கு அருகில் இருந்து இறைவனுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று இவ்வளவு தூரம் தள்ளி வந்து இந்த மரத்தடியில் தங்கினேன். ஆனால் உங்களது தெய்வீகப் பார்வை என் இருப்பிடத்தைக் கண்டறிந்து விட்டது. தினமும் பிரசாதம் என்னைத் தேடி தினமும் வருகிறது என்றார். அழகிய மணவாளன் எனப் பெயர் பெற்ற அரங்கன் தான் சிறுவன் வடிவில் சென்று பிரசாதம் வழங்கியுள்ளான் என உணர்ந்து கொண்டார் ராமானுஜர். நான் உங்களுக்கு உணவு கொடுத்து விடவில்லை. பூதப்ருத் என்ற திருநாமத்துக்கு எல்லா உயிர்களுக்கும் உணவளிப்பவன் என்று பொருள். பூதப்ருத் நம என ஜபம் செய்த உமக்கு பூதப்ருத் ஆன அரங்கன் தானே வந்து சத்துள்ள உணவளித்து மெலிந்திருந்த உங்களை இன்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வைத்திருக்கிறான் என்று அந்த ஏழையிடம் சொல்லி அரங்கனின் லீலையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் ராமானுஜர்.

குருநாதர் கருத்துக்கள் #50

உறுதியாக எதுவும் நிலைப்பதில்லை என்பதை அனைவரும் அறிதல் வேண்டும். கர்ப்பவாசம் கண்ட அனைத்திற்கும் அழிவுண்டு என்பதையும் உறுதியாக மனதில் வைக்க வேண்டும். இதற்கு விதிவிலக்கு இல்லை என்றும் வந்தவர் செல்லுதல் வேண்டும் மத்தியில் ரோகங்கள் நோய்கள் என்பதெல்லாம் காணுதல் வேண்டும் என்பது இறைவனின் விதி மட்டுமல்லாது அவனின் லீலையும் ஆகும். ஏனெனில் கடினங்கள் கொடுத்து பிறவி அறுக்கும் சூட்சுமத்தை காட்டுகின்றான் என்பதை உணர வேண்டும். இவ்விதமிருக்க சென்றவர்களுக்கு நல்ல பிறவி கிடைக்க வேண்டும் என இறைவனை வேண்டுவீர்களாக.