நரசிம்மர் 16 திருக்கரங்களுடன்

மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். இதர அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்மம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது. கிருதயுகத்தில் பிரகலாதனுக்காக திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். நரசிம்ம அவதாரத்தை மீண்டும் காண காசியப முனிவர் நாரதர் வருணன் சுகோசன் முனிவர் போன்றோர் விருப்பம் கொண்டார்கள். இதற்காக அகத்தியர் ஏற்படுத்திய மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடிப்பின் அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் பல ஆண்டுகள் கடும் தவம் மேற்கொண்டனர். அந்த தவத்தில் மகிழ்ந்த மகாவிஷ்ணு தான் முன்பு எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி பூதேவிகளுடன் மகா உக்ர மூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் காட்சியளித்தார். கர்ஜனையுடன் காட்சியளித்த பகவானைக் கண்ட முனிவர்களும் தேவர்களும் மெய்மறந்து நரசிம்மரை தரிசித்தனர். திருமால் இந்த அவதாரக் கோலத்திலேயே இவ்விடத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டார். அந்த இடம் சோழர்கள் காலத்தில் சத்திரிய சிகாமணி என்று அழைக்கப்பட்ட தற்போதைய கீழப்பாவூர் ஆகும். இத்தலம் சுமார் 1100 ஆண்டுகள் புராதனச் சிறப்புமிக்கதாகும்.

சுமார் 300 வருடங்களுக்கு முன் இந்த கோவிலில் மாலை வேளைகளில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்கும் என்றும் பிற்காலத்தில் நரசிம்மருக்கு இளநீர் பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்த பிறகு சாந்த சொரூபமாக மாறி விட்டார் என்றும் வரலாற்று செய்தி இருக்கிறது. இடம் தென்காசியில் இருந்து கிழக்கில் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாவூர்சத்திரம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து சுரண்டை செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ள கீழப்பாவூர் உள்ளது.

விஷ்ணுதுர்க்கை

20 கரங்களில் எண்ணற்ற ஆயுதங்களுடன் சம்ஹாரம் செய்யப்பட மகிஷனின் தலை மீது நிற்கும் விஷ்ணுதுர்க்கை. இடம்: ஸ்ரீவனதுர்கை பீடம் இறைவன்காடு வேலூர் மாவட்டம்.

ஏகமுகலிங்கம்

வெள்ளை சலவை கல்லினால் செதுக்கப்பட்ட ஏகமுகலிங்கம். 9 ஆம் நூற்றான்டில் ஆப்கானிஸ்தானில் இருந்த ஷாஹி சாம்ராஜ்யத்தினால் செதுக்கப்பட்டது. ஷாஹி குடும்பம் குஷான் பேரரசின் வீழ்ச்சியுக்குப் பிறகு காபூல் பள்ளத்தாக்கு மற்றும் காந்தாராவின் பழைய மாகாணத்தை ஆட்சி செய்தது.

கூர்ம அவதாரம்

ராஜஸ்தான் மாநிலம் பூந்தி என்னும் ஊரிலுள்ள ராணிஜி கி பௌரி கிணற்றில் இறங்குவதற்கு மேலே உள்ள சுவரில் விஷ்ணு பகவானின் இரண்டாவது அவதாரமான கூர்ம அவதார சிற்பம் உள்ளது.

காளி

இராஜேந்திரசோழர் தனது கலிங்கப் போரின் வெற்றியின் அடையாளமாய் கொண்டு வந்த நிசும்பசூதனியின் அரிய சிற்பம். உதட்டு சாயம் போல தெரிவது குங்கும பூச்சு. இடுப்பில் உள்ளது தற்காலச் சங்கிலி. காலடியில் சும்பன் மற்றும் நிசும்பன். இடம்: செங்கல்மேடு அரியலூர் மாவட்டம்.