துவாரகையில் கிருஷ்ணாவின் அலங்காரம் செய்யும் போது திரை போடப்படுவது இல்லை. நெய்வேதியம் செய்யும் போது மட்டும் திரை போடப்படும்.
Year: 2024
அக்னி கிரீடத்துடன் ஓடி வரும் சக்கரத்தாழ்வார்
மதுரை திருமோகூர் காளமேகபெருமாள் திருத்தலத்தில் புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கான உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும் மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர் அக்னி கிரீடத்துடன் ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார்.

வசந்தன்
இலங்கையில் உள்ள வானரப் படைகள் ராவண வதம் முடித்ததும் அங்கிருந்து புறப்படத் தயாராயின. அப்போது வானரப் படைவீரர்கள் அனைவரும் இருக்கிறார்களா என்று சரிபார்க்கும் படி சேனாதிபதியிடம் உத்தரவிட்டார் ராமர். கணக்கெடுப்பு பணி முடிந்தது. வசந்தன் என்ற வானரம் காணாமல் போனது தெரிந்தது. சுவாமி வசந்தன் என்னும் வானரம் மட்டும் எங்கு சென்றது என்று தெரியவில்லையே என்றார் சேனாதிபதி. அனுமனை அழைத்து காணாமல் போன வசந்தனைக் கண்டுபிடித்து அழைத்து வா என்று கட்டளையிட்டார் ராமர்.
அனுமன் வசந்தனை இலங்கை முழுவதும் தேடினார். எங்கு தேடியும் வசந்தன் தென்படவில்லை. இறுதியாக எமலோகத்தில் வசந்தன் இருப்பது தெரிய வந்தது. எமலோகம் சென்ற அனுமன் வசந்தன் இங்கே எப்படி வந்தான்? என்று எமதர்மரிடம் கேட்டார். அதற்கு எமதர்மர் சுவாமி கோபம் கொள்ளாதீர்கள். பூலோகத்தில் உள்ள அனைவரும் உமது புகழைக் கேட்டு மகிழ்கிறார்கள். அதைக் கேட்கும் ஆசை எனக்கும் வந்தது. நான் பூலோகம் வந்தால் என் பார்வை பலத்தால் பலரும் எமலோகம் வர வேண்டிய சூழல் உண்டாகும். அதனால் வசந்தனை வரவழைத்து உமது பெருமைகளைக் கேட்டு மகிழ்ந்தேன் என்றான். அதன்பின் வசந்தனுடன் பூலோகம் வந்து சேர்ந்தார் அனுமன். அவர்களின் வருகையைக் கண்ட வானரங்கள் துள்ளிக் குதித்தன.

கொல்லூர் மூகாம்பிகை
சிவனை வழிபடும் கிளி
திருவாருரில் உள்ள திருவீழிமிழலை சிவத்தலத்தில் இன்றும் கிளி சுவாமியை வழிபட்டு செல்வதற்காக அக்காலத்திலேயே தனியாக கட்டுமானத்தில் ஒரு ஓட்டை வைத்திருக்கிறார்கள். இப்பொதும் இந்த ஓட்டை வழியாக கிளி வந்து வழிபட்டு செல்கிறது.

இராமானுஜரின் குருவான பெரிய நம்பிகள்
ஒரு சமயம் இராமானுஜரின் குருவான பெரிய நம்பிகள் பிராமணர் அல்லாத ஒருவருக்கு ஈமக் கடன்களைச் செய்தார். அதனால் அவ்வூரில் இருந்த பிராமணர்களும் அவரது உறவினர்களும் அவரை வெறுத்து ஒதுக்கினர். இதைக் கேட்ட இராமானுஜர் குரு காரணம் இல்லாமல் எதனையும் செய்ய மாட்டார். ஆகவே அந்த காரணத்தை தெரிந்து கொள்ள அவர் இல்லம் சென்றார். இராமானுஜர் வந்த காரணத்தை அறிந்து கொண்ட குரு பெரிய நம்பிகள் அதற்கான காரணத்தை கூறினார்.
பிராமணர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட முறைப்படி பிராமணன் ஒருவன் பிராமணன் அல்லாதவனுக்கு ஈமக் கடன்கள் செய்வது என்பது பொருத்தமற்ற செயல் தான். இதனை பிராமணர்கள் வகுத்த விதிகள் ஏற்றுக் கொண்டாலும் அதனை அற நூல்கள் ஏற்றுக் கொள்ளாது. அறம் என்பது என்ன என்று தெரியுமா? சான்றோர்கள் உலகியலில் எவ்வாறு தர்மத்திற்குக்கு ஏற்ப நடந்து கொண்டார்களோ அதுவேதான் அறம் எனப்படும். பறவை குலத்தில் பிறந்த ஜடாயுவுக்கு இராமன் இறுதிச் சடங்கினைச் செய்தான். சத்ரிய குலத்தில் பிறந்த தர்மர் நான்காம் வருணத்தில் பிறந்த விதுரரைப் போற்றி வழிபட்டார். உண்மை பக்தனுக்கு சாதி ஏது? மதம் ஏது? என்னால் ஈமக் கடன்கள் செய்து தீயில் இடப்பட்டவன் என்னை விட பக்தியில் பல மடங்கு சிறந்தவன். அவனுக்கு இறுதிக் கடன் செய்து நான் பெரிய பேற்றினை பெற்றுள்ளேன் என்றார். பெரிய நம்பிகளின் பதிலைக் கேட்டு இராமானுஜர் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று அவரை விழுந்து வணங்கினார்.

லலிதாசனத்தில் சிவனும் பார்வதியும்
புதுக்கோட்டை மாவட்டம் 7ஆம் நூற்றாண்டில் மன்னன் நந்திவா்ம பல்லவன் காலத்தில் குன்றாண்டார் கோவில் குடைவரைக் கோவிலாக கட்டப்பட்டது. இக்கோயில் திருக்குன்றக்குடி என்றும் அழைக்கப்படும். கோவிலின் வலதுபுறத்தில் உள்ள அடிவாரத்தில் சிவபெருமானும் உமையம்மையும் லலிதாசனத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள்.

சிந்தித்து பேச வேண்டும்
அஸ்தினாபுரம் அரண்மனை மாடத்தில் இருந்து அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் திரௌபதி. ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர். விதவைகள் அதிகமாக இருந்தனர். அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்டாள் திரௌபதி. இவை அனைத்திற்கும் தானே காரணம் என்று அவளது மனம் சொல்லியது. அப்போது கிருஷ்ணர் அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும் அழத் தொடங்கினாள். அவளிடம் என்ன நடந்தது? என்று கேட்டார் கிருஷ்ணர். திரௌபதி அமைதியுடன் இருந்தாள். அவளின் எண்ணத்தை அறிந்த கிருஷ்ணர் பேச ஆரம்பித்தார்.
திரௌபதி விதி மிகவும் கொடூரமானது. நாம் நினைப்பது போல் வேலை செய்யாது. நம்முடைய செயல்கள் பேச்சுகள் சிந்தனைகளுக்கு ஏற்ப அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது. முடிவுகளையும் மாற்றுகிறது. நீ பழிவாங்க நினைத்தாய் வெற்றி பெற்றாய். துரியோதனனும் துச்சாதனனும் மட்டுமல்ல. அவர்களை சார்ந்திருந்த கௌரவர்கள் அனைவரும் மடிந்து விட்டனர். இப்போது என் வருத்ததுடன் இருக்கிறாய். நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றார். அதற்கு திரௌபதி என் காயங்களைத் ஆற்ற வந்தீர்களா அல்லது அதன்மீது உப்பு தூவ வந்தீர்களா? என்றாள். அதற்கு கிருஷ்ணர் திரௌபதி உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்துள்ளேன். உனது தொலை நோக்கு பார்வையற்ற செயல்களின் விளைவு என்பதை உணர்த்த வந்தேன் என்றார். இந்தப் போருக்கு நான்தான் முழுப் பொறுப்பா என்று கேட்டாள். இல்லை திரௌபதி நீ மட்டுமே காரணம் என்று கருதாதே. ஆனால் நீயும் ஒரு காரணம் என்றார். உன் செயல்களில் நீ கொஞ்சம் தொலை நோக்கு பார்வையைக் கொண்டிருந்தால் நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டாய் என்றார்.
நான் என்ன செய்திருக்க முடியும் கிருஷ்ணா என்று கேட்டாள். நீ நிறைய செய்திருக்க முடியும். உனது சுயம்வரம் நடந்த போது கர்ணனை அவமானப்படுத்தாமல் போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பளித்திருந்தால் ஒருவேளை முடிவு வேறு ஏதாவதாக இருந்திருக்க கூடும். அதற்குப் பிறகு குந்தி உன்னை ஐந்து கணவர்களுக்கு மனைவியாக்கும்படி கட்டளையிட்டதை அப்போது நீ ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். அதற்கு பிறகு உன் அரண்மனையில் பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள் என்று துரியோதனனை அவமானப்படுத்தினாய். அவ்வாறு நீ சொல்லாதிருந்திருந்தால் நீ மானபங்கப்பட்டிருக்க மாட்டாய். அப்போதும் ஒருவேளை சூழ்நிலைகள் வேறு விதமாக இருந்திருக்கும். நம் வார்த்தைகள் கூட பல நேரங்களில் பல விளைவுகளுக்கு காரணமாகி விடும் திரௌபதி. பேசுவதற்கு முன் உன் ஒவ்வொரு யோசித்து சிந்தித்து யாருடைய மனமும் காயம் அடைந்து விடுகிறதா என்று பார்த்து பேசுதல் வேண்டும். இல்லையெனில் அதன் தீய விளைவுகள் உன்னை மட்டு மல்ல உனது சுற்றுப் புறத்தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும் என்றார். திரௌபதியின் மனம் தனது தவறை சிந்தித்தது. சிறிது ஆறுதல் அடைந்து அமைதியானாள்.
மனிதனின் பற்களில் விஷமில்லை. ஆனால் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே விலங்கு இவ்வுலகில் மனிதன் மட்டுமே. எனவே வார்த்தைகளை அறத்துடன் பயன்படுத்த வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தாதபடி சிந்தித்து பேச வேண்டும். நல்லதை நினைத்து நல்லதை பேசி நல்லதை செய்தால் விதி நல்லதை நடந்திக் கொடுக்கும். இந்த கருத்து மகாபாரதம் கதைக்குள் மறைந்திருக்கிறது.

வீராசன தட்சிணாமூர்த்தி
ஒரு காலை மடித்தும் மற்றொரு காலை தொங்கவிட்டும் இருக்கும் தட்சிணாமூர்த்தி இந்த சிற்பத்தில் வலது காலை முயலகன் மீது ஊன்றி தனது இடது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். இக்கோலத்திற்கு வீராசன தட்சிணாமூர்த்தி என்று பெயர். வலது செவியில் மகர குண்டலமும் இடது செவியில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்திக்கு கீழே அமர்ந்துள்ள சீடர்கள் வழக்கமான அஞ்சலி முத்திரையுடன் அமர்ந்திருப்பார்கள். இந்த சிற்பத்தில் சின்முத்திரை காட்டியபடி இருக்கின்றனர். இடம்: திரிசூலநாதர் கோவில். திரிசூலம் சென்னை.

ஏலவார்குழலி
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்சுவரர் கோவில் வரலாற்றை விளக்கும் தூணில் உள்ள சிற்பம். ஒரு முறை சிவபெருமான் கைலாசத்தில் யோகத்தில் இருந்த போது பார்வதி தேவி ஈசனின் இரண்டு கண்களை விளையாட்டாக மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியன் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. நிலைமையைக் கண்ட பார்வதிதேவி தான் பெரும் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு வேண்டினாள். ஈசனோ செய்த தவறுக்குத் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறி பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து தன்னை நோக்கிக் கடுந்தவம் செய்தால் விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தைக் கேட்க ஈசன் காஞ்சிபுரம் ஸ்தலத்திற்குப் பார்வதிதேவியை அனுப்பினார். ஏலவார்குழலி என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் வந்து மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தைப் பிடித்து வைத்து அக்னியின் நடுவில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தின் வலிமையைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் தன் தலையில் சூடிக் கொண்டிருக்கும் கங்கையை தேவி தவம் செய்யும் இடத்தில் பாயுமாறு செய்தார். கங்கை வெள்ளமாகப் பாய்ந்து வர தான் பிடித்து வைத்திருந்த லிங்கம் கரைந்து விடும் என்று அஞ்சிய தேவி லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவ பெருமான் தேவிக்குக் காட்சி தந்து அவள் பாவத்தை மன்னித்து அருளி திருமணம் செய்து கொண்டார். இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்.
