இராமர் சீதையுடன் பட்டாபிஷேகம் காட்சி. இராமரின் அருகில் இலட்சுணன் வணங்கியபடி நிற்கிறார். சீதையின் அருகில் பரதன் இராமர் சீதைக்கு குடைபிடிக்க சத்ருக்கனன் வெண்சாமரம் வீசுகிறார். இராமரின் காலருகே அனுமன். இடம் ஸ்ரீரங்கபுரம் ஸ்ரீரங்கநாயக சுவாமி ஆலயம். தெலங்கானா மாவட்டம். கிபி 1540 ஆம் ஆண்டில் வனபர்த்தி சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டது.
கேள்வி: ஆன்மீகப் பாதையில் செல்லும் போது சுய உடமைகள் (பொருட்கள்) இருப்பது தேவையற்றதா? அவ்வாறு சுய உடமைகள் இருப்பது தவறாகுமா?
கலிகாலத்தில் உடமைகள் இல்லாமல் வாழ்வது கடினம். இருப்பினும் நாம் ஒரு பொருளை நம் தேவைக்காக என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அப்பொருள் இருந்தால்தான் நம்மால் இருக்க முடியும் என்று இருக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சொத்துக்கள் இருந்தால் தவறாகாது. சொத்துக்கள் தான் அனைத்தும் என்கின்ற மனப்பான்மை இருக்கக்கூடாது. ஏனெனில் எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் உடம்பை விட்டுச் செல்லும் போது அனைத்தையும் விட்டு விட்டே செல்ல வேண்டும். ஆத்மாவின் விடுதலைக்கும் ஆத்மாவின் முக்திக்கும் சொத்துக்கள் தேவையற்றது. இந்நிலையில் சொத்துக்களை அனுபவித்துச் செல்ல வேண்டும் என்கின்ற எண்ணமே இருக்க வேண்டும். பிற்காலத்தில் இதை விட்டுச் செல்ல வேண்டுமே என்று வருத்தமாக இருக்கக்கூடாது. உடமைகள் இருப்பது தவறில்லை. ஆனால் உடமைகள் இல்லாமல் வாழ முடியும் என்பதை மனதில் வைத்து ஆன்மீகப் பாதையில் சென்றால் எவ்விதத் தவறும் இல்லை. உதாரணமாக ஆன்மீகப் பாதையில் செல்வோர் தொலைபேசி உபயோகிப்பது தொலைக்காட்சி காண்பது தவறாகாது. இருப்பினும் அதனை அனுபவித்து விட்டு அது இல்லாமல் இருக்கும் போது அதனை நினைத்துக் கவலைப்படக்கூடாது என்பதே எமது அறிவுரை.
கேள்வி: இறைவனின் அருளானது ஏன் அனைவரின் மீதும் விழவில்லை?
இறையருள் அனைவரின் மீதும் சமமாக விழுகிறது. இதை பலர் உணர்வதில்லை. வெளிச்சம் விழும் காலத்தில் நல்ல கண்ணாடி வழியாக சிறப்பாக வெளிச்சம் உண்டாகும். அழுக்காக உள்ள கண்ணாடியில் வெளிச்சம் சிறிது குறைவாக விழும். கறுப்பாக உள்ள கண்ணாடியில் வெளிச்சமே வராது. இவ்விதமே மனிதரின் நிலைமை ஆத்மா எந்த அளவிற்கு சுத்தமாக உள்ளதோ அந்த அளவிற்கே இறைவன் அருளை அவர்களால் உணர முடியும். இறைவனுக்குப் பேதங்கள் இல்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இறைவன் படைத்தது என்கின்ற போது அனைவரும் அவரின் குழந்தைகள். இத்தகைய நிலையில் ஒருவருக்கு நலம் தருவதும் மற்றவருக்குத் துன்பம் தருவதும் இல்லை. பின் ஏன் சிலருக்கு கடினம் என்றால் அவரவர் கொண்டு வந்த கர்ம மூட்டைகளின் நிலைகளே ஆகும். இந்நிலையில் ஒன்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை நாம் தியானத்தின் வழியாகவும் வழிபாட்டின் வழியாகவும் தயார் செய்து கொண்டால் அருளைப் பெறுவதை உணர்வதையும் உணராமல் இருப்பதையும் பெரும் அளவில் அறிந்து கொள்ள முடியும்.