இறைவனின் அருளாற்றல்

ஒரு முறை கிருஷ்ண பகவான் உதங்க முனிவரிடம் என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். ஒன்றும் வேண்டாம் என்றார் முனிவர். கிருஷ்ணர் வற்புறுத்தினார் நான் சுற்றிக் கொண்டே இருப்பவன். சில சமயம் தாகத்துக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. அதற்கு ஏற்பாடு செய்தால் நல்லது என்றார் உதங்கர் கிருஷ்ணர் அதை ஒப்புக்கொண்டார். அதே சமயம் ஒரு நிபந்தனையும் விதித்தார். தாகம் எடுக்கும்போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் கிடைக்கும். ஆனால் நான் எப்படித் தண்ணீரை அனுப்பினாலும் நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார் கிருஷ்ணர். உதங்கர் ஒப்புக் கொண்டார். நாட்கள் கடந்தன. உதங்கர் ஒரு முறை பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அவருக்குத் தாகம் எடுத்தது. பக்கத்தில் தண்ணீர் கிடைக்க வழி இல்லை. அப்போது கிருஷ்ணனை நினைத்தார்.

கிருஷ்ணரின் திருவுள்ளம் தொலை தூரத்தில் இருந்தாலும் உதங்கரின் எண்ணத்தை உணர்ந்த கிருஷ்ணர் உடனே தேவேந்திரனைத் தொடர்பு கொண்டார். உதங்கருக்கு தேவாமிர்தம் தரும்படி சொன்னார். தேவேந்திரன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை மனித ரூபத்தில் உள்ளவர்களுக்கு தேவாமிர்தம் தருவதில்லை. நீங்கள் சொன்னபடியால் கொடுக்கிறோம். ஆனால் என் விருப்பப்படிதான் செல்வேன் என்றான். கிருஷ்ணர் ஒப்புக் கொண்டார். இந்திரன் ஒரு புலையரின் வடிவத்தில் உதங்கரிடம் சென்றான். அழுக்கான உடல் அதைவிட அழுக்கான ஒற்றை ஆடை பஞ்சடைந்த தாடி மீசை கையில் அழுக்குப் பிடித்த ஒரு தகரக் குவளை பக்கத்தில் சொறி பிடித்த நாய் இந்தக் கோலத்தில் சென்றான். உதங்கரிடம் சென்று தகரக் குவளையை நீட்டினான். அருவருப்படைந்த முனிவர் அவனை விரட்டினார். மாற்றுருவில் வந்த இந்திரன் நீரைக் குடிக்கும்படி வற்புறுத்தினான் முனிவர் கேட்கவில்லை. இந்திரன் சென்றுவிட்டான். தனக்கு வாக்களித்தபடி கிருஷ்ணர் நீரைக் கொடுக்கவில்லை என்று உதங்கருக்கு கிருஷ்ணர் மீது மகா கோபம் வந்தது. எப்படியோ சமாளித்துச் சற்றுத் தொலைவில் உள்ள ஊருக்குச் சென்று தாகத்தைத் தணித்துக் கொண்டார். கிருஷ்ணரை வேறொரு நாளில் மீண்டும் சந்தித்தார் உதங்கர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். புன் சிரிப்போடு நெருங்கிய கிருஷ்ணர் என்ன முனிவரே உங்களுக்காக இந்திரனிடம் தேவாமிர்தம் கொடுத்து அனுப்பினேன் நீங்கள் அவனை விரட்டிவிட்டீர்களே என்றார். உதங்கருக்குத் தன் தவறு புரிந்தது.

உதங்கர் பெரிய தவயோகி. ஆனால் ஏன் அவரால் கிருஷ்ணர் அனுப்பிய அமிர்தத்தைக் குடிக்க முடியவில்லை. விஸ்வரூபம் காட்டிய பரந்தாமனே அனுப்பிய நீர் என்றால் யோசிக்காமல் எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே? அப்படிச் செய்ய விடாமல் உதங்கரைத் தடுத்தது எது? உயிர்களிடத்தில் உயர்வு தாழ்வு பேதம் பார்க்கும் அவரது குணம் காரணம். ஒருவர் எவ்வளவு தவம் செய்கிறார் என்பது முக்கியமல்ல. எவ்வளவு சாஸ்திரங்களைப் படித்துக் கரைத்துக் குடிக்கிறார் என்பதும் முக்கியமல்ல. புறத் தோற்றம் முக்கியமல்ல. தோற்றத்துக்குப் பின் என்ன இருக்கிறது என்பதை உணர்வதே முக்கியம். பார்த்தல் கேட்டல் நுகருதல் உணர்தல் சுவைத்தல் என்று ஐந்து புலன்களினால் எதனை அனுபவித்தாலும் அதில் இறைவன் இருக்கிறார் என்பதை கிருஷ்ணர் உதங்கருக்கு உணர்த்தினார். உதங்கர் எவ்வளவுதான் ஞானியாக இருந்தாலும் அவருக்கு மனிதர்களிடத்தில் பேதம் பாராட்டும் தன்மை இருந்தது. தோற்றத்தை வைத்து ஒருவரை எடைபோடும் தன்மை இருந்தது. அது இருக்கும்வரை ஒருவர் கடவுளை நெருங்க முடியாது. ஆகவே தனது மாய விளையாட்டால் இதனை உதங்க முனிவருக்கு உணர்த்தி அவரது குணத்தை மாற்றினார் கிருஷ்ணர்.

பார்த்தல் கேட்டல் நுகருதல் உணர்தல் சுவைத்தல் என்று ஐந்து புலன்களினால் எதனை அனுபவித்தாலும் அதில் இறைவன் இருக்கிறார். இறைவனின் அருளாற்றல் இருக்கிறது என்பதை நாமும் உணர்வோம். இறைவனடி சேர்வோம்.

உத்குடி ஆசனத்தில் அய்யனார்

கருவறையில் அய்யனார் வடக்கு நோக்கிய நிலையில் உத்குடி ஆசனத்தில் ஜடாமுடியுடன் மாலை மற்றும் யக்ஞோபவீதம் கால்களில் சலங்கை அணிந்து அமர்ந்துள்ளார். சுற்றி காவல் தெய்வங்கள் உள்ளார்கள். உள்ளூர் மக்கள் இந்த அய்யனாரை சாஸ்தா என்றும் அழைக்கிறார்கள். இங்கு இவரது வாகன யானை பீடத்தின் முன் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. இடம்: விஷ்ணு கோவில் இடங்கிமங்கலம் லால்குடி திருச்சி மாவட்டம்.

குருநாதர் கருத்துக்கள் #1.82

கேள்வி: ஆனமிக நிலையை வைத்து இன்றைய இளைஞர்களிடம் குழப்பங்கள் அதிகமாக உள்ளது ஏன்?

குழப்பத்திற்கு அடிப்படையே முதல் காரணமாகும் முதலில் இறைவன் வெளியே இல்லாதவன் என்று உணர வேண்டும். இரண்டாவதாக அவன் நமக்குள் இருக்கின்றான் என்பதை உணர வேண்டும். மூன்றாவதாக அவன் நம்மை விட்டு பிரியாமல் இருக்கின்றான் என்பதை உணர வேண்டும். நான்காவதாக அவன் தேவையற்றவன் என்பதை உணர வேண்டும். அன்புடன் அவனை பார்த்தால் அன்பு அது பக்தியாய் மாறி பக்தியது பெரும் வெள்ளமாய் பெருகி அந்த பரவசத்தில் நாமும் அமர இறைவனை உறுதியாக காண முடியும். அடிப்படையில் இறைவனை வெளியில் பார்ப்பதை விட வேண்டும் என்பது விதியாகும். ஏனெனில் இறைவன் நம்மை விட்டு பிரிந்ததில்லை இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்பதை நாம் உணர்வதில்லை. இதனை அப்அப்பொழுது சிந்தனையில் வைக்க வேண்டும். ரூபம் இல்லாத இறைவன் நம்முடைய இயலாமையால் ரூபத்தை கொடுக்கின்றான். ரூபமாய் இருக்கும் இறைவனை சிறிது தூரத்தில் பார்த்து நாம் வேறு இறைவன் வேறு என தவறாகப் புரிந்து நமக்கும் இறைவனுக்கும் உள்ள தூரத்தை அதிகரித்ததால் இக்காலத்தில் வேதனை காண்கின்றோம் என்பதே உண்மையான நிலை இதை தவிர்க்க வேண்டும் என்றால் எமக்குள் இருக்கும் இறைவா என்கின்ற வாக்கியத்தை எப்பொழுதும் உங்கள் வழிபாட்டில் சேர்த்துக் கொண்டால் இது நாளடைவில் பெருகி உண்மையாக மாறி அந்த உண்மையை உணரச்செய்யும். இன்று முழுமையாக தவம் செய்தோம் இறைவனை காணவில்லை என எண்ண வேண்டாம். ஏனெனில் நீங்கள் தியானம் செய்தது வெளியில் இருக்கும் இறைவனை உள்ளிருக்கும் இறைவனை அல்ல. உள் சென்று ஹிருதய ஸ்தானத்தில் இறைவன் இருப்பதாக எண்ணி அந்த இடத்தை சுத்தமாக வைத்து இறைனுக்கு பாத நமஸ்காரங்கள் செய்வது ஒன்றே போதுமானது. இங்கு இறைவனுக்கு ரூபம் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஜோதி ஸ்வருபனை ஜோதி ஸ்வருபமாக காண்பீர்களாக இவ்விதம் செய்திட குறையின்றி இறையருள் கைகூடும்.

குருநாதர் கருத்துக்கள் #1.81

கேள்வி: மன சக்தியால் எதையும் சாதிக்க இயலுமா? பின்பு ஏன் பல காரியங்கள் தோல்வி அடைகின்றது?

உறுதியாக மன சக்தியால் அனைத்தையும் சாதிக்க இயலும். பின்பு காரியங்கள் நடைபெறவில்லை என்றால் அதற்கு காரணம் மனஉறுதி குறைவாக உள்ளதை ஆகும். மனதில் ஒன்றை வைத்து ஒன்று என்றால் ஒன்றை மட்டும் வைத்து மாற்றாமல் அசைக்காமல் அது நடைபெறும் என எண்ணம் கொண்டால் உறுதியாக நடைபெறும் என அனுபவரீதியாகவும் யாம் கண்டதும் அனைவரும் கண்டதாகும். தவறு எங்கிருக்கிறது என்றால் என்ன வேண்டும் என்பதில் முதலில் உறுதியில்லை. இரண்டாவதாக அப்படம்தனை மனதில் வைத்து மாற்றி மாற்றி கலர் கலராகவும் பல விதங்களாகவும் மாற்றிக் காண ஓர் புதுமையான படம் மனதில் காணும் நிலை உண்டாகும். பின்பு வெற்றி எவ்வாறு உண்டாகும். இதன் அடைப்படை என்னவென்றால் முதலில் என்ன வேண்டும் என்பதை முழுமையாக அறிய வேண்டும். இரண்டு அது எவ்விதம் வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். இதற்கு பின்பே மனதில் வைக்க வேண்டும். உதாரணமாக நான்கு சக்கர வாகனம் ஒன்று வேண்டும் என்றால் அது எந்த வாகனம்? அதன் பெயர் என்ன? அதன் கலர் என்ன? அதை எங்கு வைக்க வேண்டும்? என்பதில் முதலில் தெளிவு வேண்டும். இது தான் விதி மாறாக இன்று ஓர் விதமான வாகனமும் நாளை வேறு வாகனம் கலர் வேறு நிறுத்தும் இடம் வேறு என மாற்றிக் கொண்டிருந்தால் உறுதியாக அக்காரியம் நடைபெறாது. ஆங்கிலத்தில் POWER OF THOUGHT (எண்ணகளின் சக்தி) என்பதை கடைபிடித்தால் வெற்றி உறுதியாக கிடைக்கும்.

குருநாதர் கருத்துக்கள் #1.80

ஒன்று செய் அதை நன்றாக செய் என்பது இக்கலியுகத்தில் குறையாக உள்ளது. பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்யும் முயற்சியில் அனைத்து காரியங்களும் முக்கால்வாசி பலனே தருகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஒரு காரியம் முடிந்தபின் மற்றொரு காரியத்திற்குச் செல்வதே சிறந்ததாகும். முயற்சித்தால் இதுவும் கைகூடும். ஒரு வேளை செய்யும் பணி இன்று முடியாமல் அதற்குள் வேறொரு முக்கியமான பணி வந்துவிட்டால் பயப்பட வேண்டாம். அப்பணியை மறுநாள் முழுமையாகத் தொடருதல் வேண்டும். அப்பணியை முடித்தப் பிறகே புதிதாக வரும் பணிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்தையும் தொடர்கதையாகச் செய்வது சரியாகாது. இதைக் கூறுவதற்குக் காரணமும் உண்டு. பலர் இங்கு இஷ்ட தெய்வத்தை காலத்திற்கு ஏற்றார் போல மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இது பலன் அளிக்காது. இஷ்ட தெய்வம் என்பது ஓர் ஆடையல்ல அடிக்கடி மாற்றிக்கொள்வதற்கு. முழுமையான பலன் வேண்டுமெனில் ஒன்றில் நிற்கக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். அந்த ஒன்றிலிருந்து விலக விலக மன சஞ்சலங்களே மிஞ்சும். ஒன்றில் நின்று வெல்வாய் என்பதே எமது அறிவுரையாகும்.

குருநாதர் கருத்துக்கள் #1.79

நமக்கு பிற உயிர்களிடம் அன்பு இல்லாமல் இருந்தாலும் அன்பாக இருப்பது போல் நடித்தல் வேண்டும். ஏனென்றால் இந்த நடிப்பு செல்ல செல்ல நாளடைவில் நிஜமான அன்பாக மாறிவிடும். ஒருவர்க்கு தானம் செய்யும் எண்ணம் இல்லையென்றால் தானம் செய்தால் புகழ் கிடைக்கும் என்ற எண்ணம் கொண்டு தானம் செய்தல் வேண்டும். இத்தானம் செய்வது பழக்கமாகி விடும் பின்பு அதன் வழியாக அகங்காரம் தோணாது. நல் குணங்கள் ஒன்றும் இல்லா போதிலும் அது இருப்பது போல் பாவனை செய்து காரியங்கள் நடத்தி விட நாட்கள் செல்ல செல்ல அத்தகைய அன்பு பாசம் தானதர்ம சீலனாக மாறி பெருமளவிற்கு முன்னேற்றம் அடைய இயலும். தானம் என்பது வெறும் பணத்தால் அன்னத்தால் மட்டுமல்ல நல்வார்த்தைகளும் நம் அறிவை பங்கிடுவதும் தானமே ஆகும். இயன்றளவிற்கு நம் கையில் வசதிகள் இல்லா போதிலும் நம் அறிவை பகிர்ந்து கொள்வதும் ஓர் பெரும் தானமாகின்றது. இதனையும் மனதில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

குருநாதர் கருத்துக்கள் #1.78

கேள்வி: பலர் தமக்குள் இருக்கும் குறைகள் தெரியாத நிலையில் இருக்கின்றனர். இத்தகைய குறைகளை மூடி மறைப்பதற்காக பெருமளவில் கோபம் கொண்டு சீறி எழுகின்றனர். இது அவர்களுடைய கீழ் நிலையை மறைப்பதற்கான ஓர் முயற்சியாகும். இத்தகைய நபர்கள் எவ்வாறு இதிலிருந்து மீள்வது?

முதலில் தம் குறைகளை உணர வேண்டும். குறைகளை உணர்ந்த பின் அக்குறைகளை நீக்கி குறையின்றி வாழ கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திட கோபங்கள் குறைவதோடு உண்மையான நிலையை உணர்ந்து பெருமளவில் அமைதி கிடைக்கும். ஆன்மீக பாதையில் செல்கின்ற பலருக்கும் குறிப்பாக சக்தி உபாசனையில் (அம்மனை வழிபடுபவர்கள்) ஈடுபடுகின்றவர்க்கும் தன்னை விட சிறந்த பக்தர் இல்லை என்கின்ற ஆணவம் அதிகமாக வரும். இது அகங்காரத்தை வளர்க்கும். தன் குறைகளை மறைத்து கோபப்படுவார்கள். ஆத்திரம் கொண்டு அங்கும் இங்கும் ஓடுவார்கள். சம்பந்தப்படாத மற்றவர்களையும் வார்த்தையால் தாக்கி பேசுவார்கள் இதனை தவிர்த்திடவே முதலில் நாம் நமக்குள் இருக்கும் குறைகளை அறிந்து கொள்ள வேண்டும். இவ்விதம் செய்தால் மட்டுமே முன்னேற்றங்கள் கிடைக்கும். குறைகளை கண்டால் என்ன செய்வது? அதை வளர விடக்கூடாது. அதை நீக்கும் வழியை தேட வேண்டும். இது ஒரு நாளில் முடியாத செயல். பல காலங்கள் செல்ல வேண்டும் என்ற விதி இருந்த போதிலும் படிப்படியாக குறைகளை நீக்குதல் வேண்டும். இல்லை என்றால் ஓர் விஷக் கொடியாக இது வளர்ந்து பின்பு இறைவனை நெருங்கும் தகுதியற்றவனாக மாற்றி விடும். ஏனெனில் அகங்காரத்திற்கும் கோபத்திற்கும் அப்பாற்பட்டவனாக நிற்கின்றான் அத்தெய்வம். பாசம் அன்பு இரண்டும் இரண்டு கால்களாக வைத்து நடமாடும் அந்த இறைவனை நாம் வணங்க வேண்டுமென்றால் பாசம் அன்பு என்ற இரண்டு தன்மைகளை நாம் வளர்த்தல் வேண்டும். அத்தன்மைகளை வளக்க வேண்டுமென்றால் அகங்காரமும் கோபமும் ஆகாது என்பதை நன்கு உணர வேண்டும். இது எவரையும் சுட்டிக்காட்டாமல் பொதுவாக ஆன்மீக பாதையில் செல்வோர்க்கு நேரிடக்கூடிய ஓர் கடினம் ஆகும். இது ஆன்மீக பருவத்தில் ஏற்படக்கூடிய ஓர் நிலை.

குருநாதர் கருத்துக்கள் #1.77

கேள்வி: மகான்களின் சமாதிகளுக்கு செல்வதின் பயன் என்ன?

மகான்களின் சமாதிக்கும் சென்று அமர்ந்து வருவதில் எவ்வித லாபமும் இல்லை. லாபம் என கணக்கிட்டால் ஆத்ம ஞானம் பெருகுதல் வேண்டுமென்றால் அங்கு அமர்ந்து செய்ய வேண்டியதை செய்தல் வேண்டும். இதற்கு தேவையானது 1. விசுவாசம் (நம்பிக்கை) 2. ஆன்மீக விருப்பம் 3. பெரும் தெய்வ சிந்தனை 4. மனஉறுதி 5. மனஒருமைப்பாடு இவை இல்லையென்றால் அங்கு அமர்ந்து அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்து என்ன எதிர்பார்க்கிறிர்கள்? பொதுவாக இக்காலத்தில் பௌர்ணமி நேரங்களில் சமாதிகளுக்கு சென்று வட்டமிட்டு அங்கு தின்பண்டங்கள் உண்டு மகிழ்வதும் கொண்டாடுவதும் இப்போது உள்ளது. இதில் ஆன்மிக ரீதியாக எவ்வித வளர்ச்சியும் இல்லை. உடல் ஆரோக்யம் சிறிது காணலாம். இறை நாட்டத்தில் எவ்வித வளர்ச்சியும் இருக்காது. இதற்கு சமாதிக்கு ஏன் செல்ல வேண்டும். வீட்டிலேயை இருந்து செய்யலாமே? அங்கு அமர்ந்து அங்கு உள்ள மகான்களை நினைத்து தியானம் செய்தல் வேண்டும். அவரிடம் அருளைக் கேட்டு பெறுதல் வேண்டும். இக்காலத்தில் பலர் மகான்களின் சமாதிக்கு சென்றால் அனைத்தும் கிடைக்கும் என்ற ஓர் மூடநம்பிக்கை வைத்துள்ளனர். உங்களை காப்பது அந்த மகான்கள் அல்ல. உமது விசுவாசமே என மனதில் உணர வேண்டும். மகான்கள் அனைவரும் கூறுவது உன் விசுவாசம் உன்னை காக்கும் என்பது தான். நான் உன்னை காக்கின்றேன் என்று யாரும் கூறியதில்லை. இதனை முழுமையாக மனதில் வைத்து முறையாக செயல்பட்டால் நன்மைகள் உண்டாகும் இல்லையேல் வெறும் பொழுது போக்காகும்.

குருநாதர் கருத்துக்கள் #1.76

கேள்வி: கலியுகத்தில் சிறு சிறு பொய்கள் கூற வேண்டிய ஓர் நிலை உள்ளது இதிலிருந்து நாம் எவ்விதம் மீள்வது?

வார்த்தை என்பது நம்முடையதாகும். இது மற்றவர்களுடையது அல்ல. இவ்வார்த்தையை நாமே கூறி அதனை நாமே பொய்யாக்கி வாழ்வதன் அவசியம் என்ன? இருப்பதை இருக்கும்படி கூறினால் துவக்கத்தில் சிறிது கஷ்டமாக இருக்கும் என்ற போதிலும் அனைவர்களிடமும் இது ஒரு பெரும் விசுவாசத்தை (நம்பிக்கை) ஏற்படுத்தும் அல்லவா? இதனை சிந்தித்து ஆரம்ப காலத்தில் பொய்மையை தவிர்த்தல் வேண்டும். பொய்யானது ஒன்று கூறிட அதனை மூடி மறைக்க பல பொய்களை கூற வேண்டிய நிலையும் காண்பீர்கள். இத்தகைய நிலையில் வாழ்க்கை பொய்யாகி விடும் என்பதை மனதில் வைத்து திருத்தங்கள் செய்வீர்களாக.

குருநாதர் கருத்துக்கள் #1.75

கேள்வி: வெளிச்சத்தின் தன்மை என்ன? அதன் நிலை என்ன?

இரவு நேரங்களில் நாம் எதையும் காண்பதில்லை. சூரியனின் வெளிச்சம் வந்த பிறகே அனைத்தும் தெளிவாகின்றது அல்லவா? இதனை வைத்து ஒன்றை உணர வேண்டும். வெளிச்சம் தெளிவாக்குகின்றது என்பதே பொருள். காயத்ரியின் தன்மையும் இதுவே. காயத்திரி மந்திர ஜெபத்தின் முக்கியமான அம்சம் எனக்கு வெளிச்சத்தை கொடு என்பதாகும். வெளிச்சம் என்பது இக்காலத்தில் எவ்விதமான மின்சார உபகரணங்கள் இருந்த போதிலும் சூரியனின் வெளிச்சத்திற்கு ஈடாகாது என்பது போல் சத்தியத்தின் வெளிச்சத்திற்கு எதுவும் ஈடாகாது. சத்தியம் என்பது இறைவன் ஒருவனே என்பதாகும். மற்ற சத்தியங்கள் அனைத்தும் நிலையற்றவை என்று அறிய வேண்டும். சத்தியத்தின் வெளிச்சத்தை நோக்கி நாம் செல்ல தெளிவு பெறுகின்றோம். தேவையற்ற எண்ணங்கள் சிந்தனைகள் தேவையற்ற மனநிலைகள் மாறுகின்றதை உணருதல் வேண்டும். இதுவே உண்மையான வெளிச்ச நிலை. இறைவனை தேடுதல் இறைவனை நாடுதல் இது ஒன்றே நம்மை வெளிச்சமாக்க முடியும் என்பதை நாம் அறிய வேண்டும். அந்த வெளிச்சத்தை நாம் அடையும் காலத்தில் கண்களை மூடிக்கொள்கிறோம். அந்த இருட்டிலிருந்து வெளிச்சம் தானாக தென்படுகிறது என்றால் அவ்வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என உணர்தல் வேண்டும் சிந்தித்தல் வேண்டும். சிந்தித்தால் வெளிச்சம் நமக்கு உள்ளிருந்து வருகிறது என்பதை உணர முடியும். அப்போது சத்தியம் எங்கு வசிக்கின்றது என நாம் சிந்தித்தால் நமக்குள்ளே இறைவன் இருக்கின்றான் என்பதை உணர முடியும். இதனை மூடி மறைத்துள்ளது நமது மானசீக அவஸ்தைகள் ஆகும். காம குரோத ரோகங்கள் தேவையற்ற எண்ணங்கள் தேவையற்ற அகங்காரங்கள் அனைத்தும் இருட்டைப் போல் சூழ்ந்து கொண்டு சத்தியத்தை மறைக்கும். தேவையற்ற அனைத்தையும் நீக்கிக்கொள்ள அழகான சத்தியம் வெளியாகி முழு தெளிவோடு வாழ்ந்திட இயலும்.