பஞ்சாட்சரம்

பஞ்ச அட்சரம் பஞ்சாட்சரம் ஆகும். பஞ்ச என்பதும் அட்சரம் என்பதும் சம்ஸ்கிருத சொல்லாகும். பஞ்சாட்சரம் இந்த சமஸ்கிருத வார்த்தையை தமிழில் ஐந்தெழுத்து மந்திரம் என்று சொல்கின்றோம்.

ஐந்தெழுத்து மந்திரம் என்பது என்ன?

நமசிவய ஐந்தெழுத்து மந்திரமாகும்.

உயிர்மெய் எழுத்துக்களை வல்லினம் மெல்லினம் இடையினம் என பிரிக்கலாம்.

கசடதபற வல்லினம்
ஙஞணநமன மெல்லினம்
யரலவழள இடையினம்.

ந ம சி வ ய எழுத்துக்களில் முதல் இரண்டு எழுத்துக்கள் மெல்லினம். மத்தியில் உள்ள ஒரேழுத்து வல்லினம். இறுதி இரண்டு எழுத்தும் இடையினம். ஐந்து எழுத்துக்களும் ஐந்து பூதங்களை குறிக்கும்.

ந – நிலம்
ம – நீர்
சி – நெருப்பு
வ – காற்று
ய – வானம்

மண் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற இந்த ஐந்து பூதங்களின் ஆற்றலும் இந்த நமசிவய மந்திரத்தில் உள்ளது என்பதை ஞானிகள் அறிந்து கொண்டார்கள். அவ்வளவு எளிதில் யாராலும் உணர முடியாத இறைவனை நமசிவய என்று உணர்ந்து சொன்னால் இந்த ஒரு சொல் இறைவனை உணர வைப்பதை ஞானிகள் உணர்ந்து வெளிப்படுத்தினார்கள். இதனை ஆழ்ந்து தியானித்து கவனித்தால் புரியும். மேலும் இந்த ஐந்து எழுத்துக்களின் உயிர்த் தன்மையை இறைவனின் அருளால் உணர்ந்து கொண்ட ஞானிகள் நமசிவய எனும் திரு ஐந்தெழுத்து மந்திரத்தை தனது சீடர்களுக்கு உபதேசம் செய்தும் பல பாடல்களின் வழியாக மக்களுக்கும் உபதேசித்தார்கள்.

நிலமும் நீரும் எப்போதும் ஒன்றாக இருக்கிறது. வானமும் காற்றும் எப்போதும் ஒன்றாக இருக்கிறது. நெருப்பு இந்த நான்கின் நடுவிலும் இயற்கைக்கு ஏற்றவாறு தனித்தன்மையாக குறைந்த வெப்பமான குளிர்ச்சியாகவும் அதிகபட்ச வெப்பமாகவும் இருக்கிறது. ஆகாயம் காற்று நெருப்பு நீர் மண் இவைகளின் சக்தியை அளவிட முடியாது. இவைகள் தனித்தனியே இந்த உலகத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை. ஐந்தும் ஒன்று சேர்ந்தால் அழிவின் விளைவை சொல்லவும் இயலாது. இதனை அறிந்த ஞானிகள் இதனை பஞ்ச பூதங்கள் என்று வகுத்து வைத்தார்கள்

மனிதர்கள் அனைவருக்குள்ளும் சரிவிகிதத்தில் பஞ்சபூதம் எனப்படும் இவை இருப்பதில்லை. மனிதர்களின் ஆசைகள் கர்மாக்களுக்கு ஏற்ப ஒன்று அதிகமாகவும் ஒன்று குறைவாகவும் இருக்கும். இதனால்தான் மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான குணங்கள் இருப்பதில்லை. சிலர் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள். சிலர் கோபத்தின் உச்சியிலேயே இருப்பார்கள். சிலர் மோசமான சிந்தனையாளராக இருப்பார்கள். சிலர் மிக உயர்ந்த ஞானத்தினை இயல்பாக பெற்றிருப்பார்கள். காரணம் இந்த பஞ்சபூதங்களின் சேர்க்கை விகிதாசாரம் கூட்டியோ குறைத்தோ சமமாகவோ அமையும் போது மனிதன் அதற்கேற்ப பிறக்கின்றான். அது மனிதனின் கர்மாவை பொறுத்தே அமைகின்றது

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கும் மனிதனின் மூலக்கூறுகளில் உள்ள குறைகள் நீங்குகிறது. அவனது உடம்பில் உள்ள பஞ்சபூத ஆற்றல் அதிகரிகிறது. பஞ்ச பூதங்களின் ஆற்றல் அதிகமான மனிதன் மிக ஆற்றல் மிக்க உணர்வுகளால் தூண்டப்பட்டு மேன்மை கொண்டவனாக மாற்றம் காணுகின்றான். அவனுக்கு உலகின் இயக்கமும் அந்த இயக்கத்தின் காரணமும் புரிகின்றது. தான் யார் என அறிகின்றான். தான் யார் என அறிந்தவன் இறைவனை அறிந்தவனாகின்றான். இறைவனை அறிந்தபின் உலகில் அறிவதற்கு ஏதுமில்லை. அவன் தாம் கண்டதை உலகிற்கு எடுத்து சொல்கின்றான். அவர்களைத்தான் சாதாரண மக்கள் ஞானிகள் என்கிறார்கள். ஆகவே நமசிவய மந்திரத்தை சொல்வோம். ஞானம் பெறுவோம். இறைவனை உணர்வோம்.

ஞான குரு

கேள்வி: ஒருவனுக்கு உண்மையான ஆன்மிக தேடல் இருந்தால் அதற்கான குரு நாதர் அவனைத் தேடி ஒரு நாள் வருவார் என்று சொல்வதெல்லாம் உண்மையா? ஆன்மிக தேடல் கொண்ட ஒருவனை வேறு ஒரு இடத்தில் இருக்கும் ஞான குருவால் உணர முடியுமா?

புத்தர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு

புத்தர் ஒரு கிராமத்திற்கு உபதேசம் கொடுக்க ஒருநாள் மாலை நேரத்தில் வந்திருந்தார். கிராமத்து மக்கள் அனைவரும் கூடி விட்டனர். புத்தர் அந்த சின்ன கிராமத்திற்கு வருவார் என்று அந்த கிராமத்து மக்கள் எவருமே எதிர்பார்க்கவில்லை. அதனால் கிராமத்தில் உள்ள அனைவரும் அங்கு கூடியிருந்தார்கள். இருப்பினும் புத்தர் யாருக்காகவோ காத்திருந்தார். அங்கிருந்த செல்வந்தர் ஒருவர் புத்தரின் அருகில் வந்து ஐயா நீங்கள் யாருக்காக காத்திருக்கிறீர்கள்? இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் இங்கு வந்து விட்டார்கள். இனி வருவதற்கு எவருமில்லை. உங்களது உபதேசத்தை ஆரம்பிக்கலாமே என்றார். புத்தர் புன்னகைத்தார். பிறகு அனைவருக்கும் கேட்கும்படி சொன்னார். இந்த இடத்திற்கு உபதேசம் செய்ய யாருக்காக வந்தேனோ அவர் இன்னும் வரவில்லை. நான் அவருக்காக காத்துக் கொண்டிருக்கத்தான் வேண்டும். எனக்கான கடமை இது. நீங்கள் அனைவரும் எனது உபதேசத்தை கேட்பீர்கள். ஆனால் அதில் உள்ள உண்மையை தேடுவீர்களா என்றால் அது கேள்விக் குறிதான். ஒரு ஜீவன் ஞானத்தேடலில் இந்த ஊரில் இருக்கிறது. அதன் உயிர் அலை இன்னும் இங்கு வரவில்லை ஆகவே காத்திருக்கிறேன் என்றார். அவர் சொன்னதை கேட்டதும் அங்கிருந்தோர் சங்கடப்பட்டனர். ஏனெனில் அந்த கிராமத்தில் உள்ள பணக்காரர்கள் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பக்திமான்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தாகள். பிறகு யாருக்காக புத்தர் காத்திருக்கிறார்? என்று வருபவரை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அவசர அவசரமாக ஒரு ஏழை குடும்பத்துப் பெண் வந்து அந்த கூட்டத்திற்குள் அமர்ந்து கொண்டாள். அவளது எஜமான் அந்த செல்வந்தர் கூட்டத்தின் முன் வரிசையில் தான் அமர்ந்திருந்தார். புத்தரை பார்க்க போக வேண்டும் என்று அவள் அவரிடம் அனுமதி கேட்டதும் நான் சொன்ன வேலையை முடித்து விட்டு பிறகு எங்கு வேண்டுமானாலும் போ என்று அலட்சியமாக சொல்லி விட்டார். வேலையை முடித்து விட்டு இப்போதுதான் வந்திருக்கிறாள். அந்தப் பெண்ணை பார்த்து ஒரு புன்னகை புரிந்து விட்டு புத்தர் தனது உபதேசத்தை ஆரம்பித்தார். உடனே அந்த செல்வந்தர் புத்தரிடம் இவளுக்காகவா இத்தனை நேரம் காத்துக் கொண்டு இருந்தீர்கள்? இவள் எனது வயலில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி என்றார் அலட்சியமாக. அதற்கு புத்தர் தனது புன்னகை மாறாமல் பதிலளித்தார். இவள் படிக்காதவள் ஒரு ஏழை கூலித் தொழிலாளி என்பதை யாம் அறிவோம். நான் பக்கத்து கிராமத்தில் இருக்கும்போது யாரோ என்னை அழைப்பதை போல உணர்ந்தேன். இனம் புரியாத ஒரு ஆன்மிகத் தேடல் அந்த அழைப்பில் மறைந்திருப்பதையும் உணர்ந்து கொண்டேன். இந்த கிராமத்தில் இவள் மட்டுமே எனது உபதேசத்தை கேட்டு கடைபிடித்து அதை உணர்ந்து கொள்ளும் தன்மையில் இருக்கிறாள். இவளுக்காகத்தான் நான் இந்த கிராமத்திற்கே வந்தேன். இந்த பெண்ணினுடைய ஞானத்தேடல் என்னை இங்கே வரவழைத்து விட்டது என்றார் புத்தர். பிறகு தனது உபதேசத்தை அந்த பெண்ணை பார்த்தபடியே ஆரம்பித்தார். அந்த பெண்ணும் கும்பிட்ட கரத்துடன் கண்கள் கசிய புத்தரை பார்த்தபடியே அவர் சொல்வதை கேட்டு அதன் ஆழ்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொண்டாள்.

ஆன்மிக ஞானத்தேடலுக்கு ஆண் பெண் அல்லது உயர்வு தாழ்வு அல்லது வயது என்ற எந்த விதமான வேறுபாடுகளும் இல்லை. ஞானத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் திறந்த அமைதியான மன நிலையே வேண்டும். அவரே சிறந்த சீடர். ஞான குருநாதர் என்பவர் எப்போதுமே ஆன்மிக தேடல் உள்ளவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை தேடி அவர்களுக்குத் தேவையானதை கொடுத்துக் கொண்டே இருப்பார் அவரே ஞான குரு.

சிவலிங்கத்தை கார்க்கோடகன் பூஜிக்கும் சிற்பம்

அர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் மகனுமான பரீட்சித்து மகாராஜா ஒருமுறை வேட்டையாடக் காட்டுக்குச் சென்றபோது மரத்தடியில் தவம் புரிந்துகொண்டிருந்த முனிவரின் கழுத்தில் இறந்து கிடந்த பாம்பு ஒன்றை எடுத்துப் போட்டான். இதை ஆசிரமத்திலிருந்த முனிவரின் மகன் கண்டுவிட்டார். தன் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பை மாலையாகப் போட்ட பரீட்சித்திடம் கோபம் கொண்டு என் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பை மாலையாகப் போட்ட நீ இன்னும் ஏழுநாளில் பாம்பு கடித்து இறப்பாய் என்று சபித்துவிடுகிறார். அதன்படியே பரீட்சித்து மகாராஜா ஏழாவது நாளில் கார்க்கோடகன் என்னும் பாம்பு கடித்து இறந்து விட்டார். அஷ்ட நாகங்களில் ஒருவனும் நாகங்களின் தலைவனுமான கத்துருவின் மகன்தான் கார்க்கோடகன்.

முனிவரின் மகன் இட்ட சாபத்தின் காரணமாக தன் தந்தை இறந்துவிட்ட தகவல் பரீட்சித்து மகாராஜாவின் மகன் ஜனமேஜயனுக்குத் தெரிய வந்தது. எனவே அவன் ஒரு யாகம் செய்து உலகத்திலுள்ள அனைத்து வகைப் பாம்புகளும் யாக அக்னியில் விழுந்து பொசுங்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டான். அந்த யாக அக்னியில் விழாமல் கார்க்கோடகன் பாம்பு மட்டும் எப்படியோ தப்பித்து விட்டது. தப்பிச் சென்ற கார்க்கோடகனால் தனக்கு ஆபத்து எதுவும் வரக் கூடாது என்பதற்காக ஜனமேஜயன் மகா விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்தான். அவன் பிரார்த்தனைக்கு இரங்கிய மகாவிஷ்ணு சோழ மண்டலத்திலுள்ள காமரசவல்லி என்னும் தலத்தில் கார்க்கோடகனால் வழிபடப்பெற்ற அருள்மிகு பாலாம்பிகா சமேத அருள்மிகு சௌந்தரேஸ்வரரை வழிபட்டால் கார்க்கோடகனால் உனக்கு எந்த ஆபத்தும் வராது என்று கூறினார். அதன்படியே ஜனமேஜயன் காமரசவல்லிக்கு வந்து அருள்மிகு சௌந்தரேஸ்வரரை பக்தியுடன் வழிபட்டான். ஜனமேஜயனின் பக்தியில் மகிழ்ந்த ஈசன் இனி உன் வம்சத்துக்குக் கார்க்கோடகனால் எந்த ஆபத்தும் நேராது என்று வரம் கொடுத்ததுடன் அந்தத் தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு சகல விதமான சர்ப்ப தோஷங்களும் நீங்கும் என்றும் அருள்புரிந்தார். ஜனமேஜயன் பூஜித்த இந்த ஈசனை கார்க்கோடகனும் பூஜித்ததால் ஈசனுக்கு கார்க்கோடகன் என்ற திருப்பெயரும் பெற்றது. இந்த சிற்பம் உள்ள இடம் சௌந்தரேஸ்வரர் திருக்கோயில் காமரசவல்லி அரியலூர்.

அறிந்து கொள்வோம்

  1. சொல்வதனால் குறைந்து போகும் பொருள்கள் இரண்டு அவை புண்ணியமும் பாவமுமாகும் ஆகும்.

ஒருவர் தான் செய்த தான தருமங்கள் தான் சேர்த்து வைத்திருக்கும் புண்ணியங்களை தானே அடுத்தவர்களிடம் எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறையும். ஒருவர் தான் செய்த பாவங்களை தானே பிறரிடம் கூறுவதனால் பாவம் குறையும். குறைய வேண்டியது பாவம் நிறைய வேண்டியது புண்ணியம். ஆகவே செய்த தானதர்மங்களை சொல்லக் கூடாது. பாவத்தைக் சொல்ல வேண்டும்.

  1. இறைவனுடைய கருணையையும் அன்பையும் பெற வேண்டுமானால் அதற்கு வழி ஒன்று உண்டு.

துன்பத்தில் துடிக்கிற உயிர்களிடம் அன்பு செய்து கருணையோடு அவற்றின் துன்பத்தை போக்குவதற்கான தன்னால் இயன்ற செயலை செய்தால் இறைவனும் அவர்களின் மேல் அன்பு செலுத்தி கருணையோடு இருப்பார். அன்பால் அன்பையும் கருணையால் கருணையையும் பெறலாம்.

  1. 1. மன அழுக்கு 2. வாயழுக்கு 3. மெய்யழுக்கு என்று அழுக்குகள் மூன்று வகைப்படும்

1 பொறாமை ஆசை கோபம் ஆகியவை மன அழுக்கு ஆகும். இந்த மன அழுக்கை தியானம் என்ற நீரால் கழுவி தூய்மை செய்யலாம்.

2 பொய் புறங்கூறல் அடுத்தவர் மனதை காயப்படுத்தும் வார்த்தைகள் பேசுதல் ஆகியவை வாயழுக்கு ஆகும். வாயால் இறைவனை போற்றித் துதித்துப் பாடி இந்த வாயழுக்கை சுத்தம் செய்து நீக்கலாம்.

3 மெய் என்றால் உடல் என்று பொருள். போதைப் பொருள்கள் உபயோகித்தல் கொலை புலால் உண்ணுதல் களவு ஆகிய இவை மெய்யழுக்கு ஆகும். இந்த மெய்யழுக்கை உடலால் இறைவனுக்கு உழவாரப்பணி செய்து அர்ச்சனை என்னும் நீரால் கழுவி சுத்தம் செய்யலாம்.

சீதா குண்டம்

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நைமிசாரண்யத்தில் சீதா குண்ட் என்று ஒரு பிரபலமான குளம் உள்ளது. சீதா தேவி நீராடிய இடம் என்று நம்பப்படுகிறது. புகழ்பெற்ற ஆன்மிக புனித தலமாக உள்ளது.

சீதா குண்டம்

பங்களாதேஷத்தில் உள்ள சீதா தேவி கோயில் குளத்தில் உள்ள நீரில் நெருப்பு ஆண்டு முழுவதும் எரிந்து கொண்டே இருக்கிறது. இந்த தீயையே மக்கள் சீதா தேவியாக வணங்கி வருகின்றனர். இதை சீதா குண்டம் என்று அழைக்கின்றனர். இயற்கை எரிவாயு காரணமாக நீர் மேல் இந்த நெருப்பு எரிகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த எரிவாயு எப்படி இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து இந்த இடத்தில் இருந்து வெளி வருகிறது என்று ஆய்வாளர்களால் சொல்ல முடியவில்லை.

புனித நீராடல்

ஒரு ஞானியிடம் சென்ற சிலர் நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள். ஞானியோ இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை. எனக்காக ஒரு உதவி செய்யுங்கள் என்று சொல்லி அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் தண்ணீரில் மூழ்க வைத்து எடுத்து என்னிடம் திரும்ப கொண்டு வந்து என்னிடம் கொடுங்கள் என்றார்.

ஞானி சொன்னது போலவே அவர்களும் செய்து திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தார்கள். அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அனைவருக்கும் ஒரு துண்டை கொடுத்தார். புனித நதியில் முழுகி வந்த பாகற்காய். இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார். ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது. தித்திக்கும்னு சொன்னீங்க ஆனா கசக்குதே என்றார்கள்.

ஞானி பார்த்தீர்களா பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும் அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதைப் போலவே நாம் நமது தவறான செயல்களையும் தீய பழக்கங்களையும் துர் குணங்களை மாற்றிக் கொள்ளாமலோ அல்லது இந்த தீய குணங்களை விட்டு விடுகிறேன் என்று பிரார்த்தனை செய்துவிட்டு அதனை கடைபிடிக்காமல் தீய குணங்களிலேயே இருந்து எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் எந்த கோயிலுக்கோ குளத்துக்கோ புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து விழுந்து வணங்கினாலும் எந்த பயனும் வந்து விடப் போவதில்லை. மனங்களிலும் குணங்களிலும் அன்பு வந்தால் தான் வாழ்க்கை இனிமையாகும். புனிய நீராடல் என்பது தனக்குள் இருக்கும் தீய குணங்களை நல்ல எண்ணங்களால் நீராடி நமது உள்ளத்தை புனிதப்படுத்துவது ஆகும் என்றார்.

அஷ்ட சிரஞ்சீவிகள்

அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், கிருபாச்சாரியார், அசுவத்தாமன் ஆகியோர் அஷ்ட சிரஞ்சீவிகள் ஆவார்கள்.

அனுமன்: எந்த எதிர்பார்ப்புமின்றி ராமருக்கு தொண்டு செய்வது மட்டுமே தன் பிறவிக் கடன் என வாழ்ந்தவர். ராமரால் சிரஞ்சீவி பட்டம் அனுமனுக்கு வழங்கப்பட்டது. ராமாயணம் மட்டுமின்றி மஹாபாரதத்திலும் அனுமன் வருவதைப் பார்க்கலாம். இன்றளவும் அவர் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். எங்கெல்லாம் ராமநாமம் சொல்லப்படுகிறதோ அங்கு அனுமன் இருப்பேன் என்று அருள்வாக்கு கொடுத்திருக்கிறார்.

வியாசர்: வியாசர் சொல்ல சொல்ல விநாயகர் எழுதியது மகாபாரதம். படிப்போரின் பாவங்களைப் போக்கும் மகாபாரதம் படைத்த வியாசர் என்றென்றும் சிரஞ்சீவியா வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

விபீஷணன்: இராவணனின் தப்பியும் இலங்கையை ஆட்சி செய்தவருமான விபீஷணனும் சிரஞ்சீவிதான். அண்ணன் என்றாலும் அதர்மத்தின் பக்கம் நிற்காமல் ராமருடன் நியாயத்தின் பக்கம் நின்றதால் அவர் சிரஞ்சீவி பட்டம் பெற்றார்.

மகாபலி: அசுரக் குலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி செய்தவர் மகாபலி. அதனால் தங்கள் தேவர் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று தேவர்கள் அஞ்சினர். வாமன அவதாரத்தின் மூலம் மகாபலியை அழித்து பாதாள உலகத்துக்கு அவரை அனுப்பினார் விஷ்ணு. அவரும் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். ஆண்டுக்கு ஒரு முறை தன்னுடைய நாட்டு மக்களை சந்திக்க அவர் வருகிறார். அதையே கேரள மக்கள் ஓணம் என்று கொண்டாடுகின்றனர்.

பரசுராமர்: பீஷ்மர் துரோணச்சாரியார் கர்ணன் ஆகியோரின் குரு. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு இவரே எடுத்துக்காட்டு. தந்தை ஆணைக்குக் கட்டுப்பட்டு தன் பெற்ற தாயையே கொன்றார். மீண்டும் தவ வலிமையால் தாயை உயிர்ப்பித்தார். ராமாயணம் மகாபாரதம் என இரண்டு காவியங்களும் இவரை சிரஞ்சீவி என்று போற்றுகின்றன.

மார்க்கண்டேயன்: மிருகண்ட முனிவர் மருத்துவதி (மானஸ்வினி) தம்பதிகள் குழந்தைப் பேற்றுக்காக சிவனை நோக்கி தவம் இருந்ததின் பலனாக பிறந்தவர் மார்க்கண்டேயன். இவரது ஆயுள் 16 வயது என்று பெற்றோர்களுக்கும் தெரியும். அதன்படி 16வது வயதில் சிவபூஜை செய்த போது மார்க்கண்டேயனின் ஆயுளை முடித்து வைக்க எமன் பாசக்கயிற்றை வீசினார். அது சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால் வெகுண்டெழுந்த சிவன் எமனை எட்டி உதைத்தார். மேலும் மார்கண்டேயனுக்கு என்றும் 16 என்ற சிரஞ்சீவி பட்டத்தை வழங்கினார்.

கிருபாச்சாரியார்: பாண்டு வம்சத்தினருக்கு குலகுருவாக இருந்தவர். ஏட்டுக் கல்வி மற்றும் போர்த்திறனைப் பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு கற்பித்தவர். மகாபாரதப் போரில் கௌரவ சேனையிலிருந்து போரிட்டாலும் நடுநிலை தவறாதவர் என்று அறியப்பட்டவர். போரின் முடிவில் பரீட்சித்து மாமன்னரின் அரசகுருவாக பணியாற்றினார்.

அஸ்வத்தாமன்: மகாபாராதத்தில் வரும் துரோணாச்சாரியரின் மகன் அஸ்வத்தாமன். குருச்சேத்திரப் போரில் உயிர் பிழைத்த சிலரில் இவனும் ஒருவர். தன்னுடைய தந்தை வஞ்சகமாகக் கொல்லப்பட்டது மற்றும் நண்பன் துரியோதனன் அதர்ம வழியில் தாக்கப்பட்டதால் கோபம் கொண்ட அவன் பாண்டவர்களின் வம்சத்தை அழிப்பேன் என்று சபதம் ஏற்றுப் பாண்டவர்களின் புதல்வர்களை கொலை செய்தான். மேலும் பிரம்மாஸ்திரம் மூலமாக உத்தரயைின் கருவில் இருக்கும் குழந்தையைக் கொள்ள முயற்சி செய்தான். அதனால் அவனுக்கு சாவை விட கொடிய தண்டனையாக ஆறாத ரத்தம் வழிந்தோடும் காயங்களுடன் மரணமின்றி உலகை சுற்றி வரக் கூடிய தண்டனையை சாபமாக வழங்கினார் கிருஷ்ணன். அதனால் அவனும் சிரஞ்சீவியாக உலகைச் சுற்றி வருகிறான்.

இந்த அஷ்ட சிரஞ்சீவிகள் உள்ள சிற்பம் உள்ள இடம் நக்சல் பகவதி கோயில் காத்மாண்டு நேபாளம்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 43 திருவியலூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 43 வது தேவாரத்தலம் திருவியலூர். திருவிசநல்லூர் திருவிசலூர் என்று வேறு பெயர்களும் உள்ளது. மூலவர் யோகானந்தீஸ்வரர். வேறு பெயர்கள் புராதனேஸ்வரர் வில்வாரண்யேசுவரர். இறைவன் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். சித்திரை 1 2 மற்றும் 3 தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது. அம்பாள் சாந்தநாயகி சௌந்தரநாயகி. தல மரம் வில்வம். தீர்த்தம் மொத்தம் 8 தீர்த்தங்கள் உள்ளது. முக்கியமான தீர்த்தம் சடாயுதீர்த்தம். கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அரை வட்ட கோளம் அமைக்கப்பட்டு அதைச்சுற்றிலும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவே பித்தளையால் ஆன ஆணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் ஒளி இந்த ஆணியில் பட்டு அதன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம் ஆகும். இத்தலம் நான்கு யுகம் கண்ட தலமாக புராணம் கூறுகிறது. கிருதயுகத்தில் புராதனேஸ்வரர் திரேதாயுகத்தில் வில்வாரண்யேஸ்வரர் துவாபரயுகத்தில் யோகநந்தீஸ்வரர் கலியுகத்தில் சிவயோகிநாதர் என்ற பெயர்களில் இறைவன் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறார். சிவராத்திரி தோறும் அகத்தியர் இத்தலத்தில் பூஜை செய்கிறார். சில சிவாலயங்களில் பெருமாள் தனித்து இருந்தாலும் இங்கே லட்சுமியுடன் சேர்ந்து லட்சுமி நாரயணனாக அருள்பாலிக்கிறார். ராமாயண காலத்தில் ஜடாயுவின் இறக்கை இத்தலத்தில் விழுந்ததாகவும் அந்த இடத்தில் ஜடாயு தீர்த்தம் இருப்பதாகவும் தல புராணம் கூறுகிறது. இங்குள்ள பைரவர் சதுர்கால பைரவர் என அழைக்கப்படுகிறார். யுகத்திற்கு ஒரு பைரவராக தோன்றி இங்கு அருள்பாலிக்கின்றனர். ஞானகால பைரவர் அருகில் தட்சிணாமூர்த்தியும் சொர்ணாகர்ஷன பைரவர் அருகில் மகாலட்சுமியும் உன்மத்த பைரவர் அருகில் பாலசனியும் உள்ளனர். யோக பைரவர் அருகில் உத்திரகைலாய லிங்கம் இருக்கிறது.

படைப்புக்கடவுளான பிரம்மதேவர் விஷ்ணு சர்மா என்பவருக்கு புத்திரனாகப் பிறந்தார். இவர் தன்னுடன் பிறந்த ஆறு யோகிகளுடன் சிவனை வேண்டி தவம் புரிந்தார். சிவராத்திரி தினத்தில் சிவன் தரிசனம் கொடுத்து இவர்களை ஏழு ஜோதியாக்கி தன்னுடன் ஐக்கியப்படுத்தினார். எனவே இத்தல இறைவன் சிவயோகிநாதர் ஆனார். இந்த வரலாற்றை விளக்கும் விதத்தில் சிவலிங்க திருமேனியில் ஏழு முடிக்கற்றைகள் இன்றும் இருக்கின்றன. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர அய்யாவாள் என்பவர் தன் வீட்டில் திவசம் கொடுத்து கொண்டிருக்கும் போது பசியால் ஒருவன் யாசகம் கேட்டான். திவசம் முடியாமல் யாருக்கும் எதுவும் கொடுக்க கூடாது என்பது மரபு. மரபையும் மீறி பசியுடன் வந்த அவனுக்கு இவர் உணவளித்தார். இதனால் அவ்வூர் மக்கள் இவரை ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர். இதற்கான பரிகாரம் அவர்களிடம் கேட்க நீ தூய்மையானவன் என்பதை நிரூபிக்க விரும்பினால் கங்கை நதியை இங்கே வரவழைத்து அதில் நீ நீராட வேண்டும். இதுதான் பரிகாரம் என்று கட்டளை இட்டனர். ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம் என்பதே ஐயாவாளின் கொள்கை. பக்தியில் சிறந்த ஸ்ரீதர ஐயாவாள் இறைவனை உருகி வேண்ட அவர் வீட்டுக் கிணற்றில் கங்கை கொப்பளித்து வந்தது. கிணற்றின் நீர்மட்டம் விறுவிறுவென ஏறி வழிந்து அந்தத் தெரு முழுதும் கங்கை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்பொழுது தான் அந்த தெருவில் வாழ்ந்த அந்தணர்கள் ஐயாவாளின் மகிமையை அறிந்தனர். மன்னிப்பும் கேட்டனர். இப்பொழுதும் கார்த்திகை அமாவசை தினத்தில் ஐயாவாள் வசித்த வீட்டின் கிணற்றில் கங்கை எழுந்தருளுகிறாள்.

இந்த ஊரில் வாழ்ந்து வந்த சிவனடியார் ஒருவரின் உயிரைப் பறிக்க எமதர்மன் தன் எருமை வாகனத்தின் மீதேறி வந்தான். நந்திதேவர் எமனை எதிர்கொண்டு விரட்டி அடித்தார். அதன்பின் சிவனடியாரின் உயிரைப் பறிக்க வந்த தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு எமதர்மனே சிவயோகிநாதரையும் நந்திதேவரையும் வணங்கினார். கேரள நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவன் பல பெண்களுடன் கூட நட்பு கொண்டு பெரும் தவறிழைத்து வந்தான். ஏராளமான பெண்களை ஏமாற்றியும் வஞ்சித்தும் ஈன வாழ்க்கை வாழ்ந்து வந்தான். ஒரு கட்டத்தில் பாவ வாழ்க்கையில் இருந்து மீள வழி தேடிய இந்த அரசனுக்கு திருவிசநல்லூரின் பெருமைகள் பற்றி ஒரு மகான் கூறினார். அதன்படி இங்கு வந்த அரசன் காவிரியில் நீராடி இந்தத் தலத்தில் உறையும் இறைவனை தரிசித்து பெண் பாவங்கள் நீங்கப் பெற்றான் என்று தல வரலாறு கூறுகிறது. ஒரு காலத்தில் ஏராளமான பாவம் செய்த ஒருவன் தன் கடைசி காலத்தில் பிரதோஷ தினத்தில் இத்தல இறைவனை அழைத்தான். அப்போது சிவன் நந்தியிடம் அழைப்பது யார் என கேட்க நந்தி திரும்பி பார்த்தது. இத்தலத்தில் நந்தி சிலை திரும்பிப் பார்த்த நிலையிலேயே உள்ளது. நந்தியின் பார்வையால் அவனது பாவம் தொலைந்தது. அக்கணத்தில் அவனுக்கு விதி முடிய இருந்தது. எமன் அங்கு வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். எமனுக்கும் நந்திக்கும் சண்டை ஏற்பட்டது. நந்தி எமனை வென்று கோயில் கொடிமரத்திற்கு வெளியே அனுப்பியது. வழக்கமாக கொடிமரத்தின் உள்ளே நந்தி இருக்கும். ஆனால் இத்தலத்தில் கொடி மரத்தின் வெளியே நந்தி இருப்பதை இன்றும் காணலாம்.

சோழர் காலக் கல்வெட்டில் இத்தலம் வடகரை ராஜேந்திர சிம்ம சோழவளநாட்டு மண்ணிநாட்டு பிரமதேயமான வேப்பத்தூர் சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஊர் என்றும் இறைவன் பெயர் திருவிசலூர் தேவ பட்டாகரர் சிவயோகநாதர் எனவும் குறிக்கப்படுகிறது. இரண்டாம் பராந்தகன் காலக் கல்வெட்டில் விளக்கெரிக்க நிலமும் ஆடுகளும் அளித்த செய்தியையும் காவிரியிலிருந்து அபிஷேகத்திற்கு நீர் கொண்டுவர ஆட்களை நியமித்து ஊதியம் வழங்க நிலங்களை விட்ட செய்தியையும் தெரிவிக்கின்றன. இராசேந்திரன் காலக் கல்வெட்டில் அரசன் கோயிலுக்கு நிலமளித்த செய்தியையும் அவன் மனைவியான அரசி சுவாமிக்கு தங்க நகைகளும் அபிஷேகத்திற்கு வெள்ளிக் கவசமும் அளித்த செய்திகளையும் தெரிவிக்கின்றது. ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் மற்றும் திருவுந்தியார் எனும் சித்தாந்த சாஸ்திர நூலைப்பாடிய உய்யவந்த தேவநாயனார் இவ்வூரில் அவதரித்தவர்கள். அகத்தியர் ஜடாயு வழிபட்டிருக்கிறார்கள். சடாயு வழிபட்டு பேறு பெற்றத் தலம். திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள் பாடியுள்ளார்.

போதேந்திர சரஸ்வதி சுவாமிகள்

போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் போதேந்திராள் என்றும் அழைக்கப்பட்டார். கிபி 1610 இல் கன்வ கோத்திரத்தில் பிறந்தார். அவரது தந்தை கேசவ பாண்டுரங்க யோகி. தாய் ஸ்ரீமதி சுகுணா பாய். இவர் பிறந்ததும் புருஷோத்தமன் என்ற நாமத்தை வழங்கினார்கள். காஞ்சி காமகோடி மடத்தின் 58 வது பீடாதிபதியான விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் உதவியாக இருந்து வந்தார் பாண்டுரங்கன். ஒரு நாள் மடத்துக்கு பாண்டுரங்கன் புறப்படும் போது நானும் வருவேன் என்று புருஷோத்தமன் அடம் பிடித்தான். எனவே ஐந்தே வயதான புருஷோத்தமனை ஸ்ரீமடத்திற்கு அழைத்துச் சென்றார். பீடாதிபதியைக் கண்டவுடன் குழந்தை நமஸ்காரம் செய்தது. சுவாமிகளும் அதனுடைய தெய்வீகத் தன்மையைப் புரிந்துக் கொண்டு இந்தக் குழந்தை இங்கேயே இருந்து எல்லாம் படிக்கட்டும் என்று சொல்லிவிட்டார். அன்றுமுதல் புருஷோத்தமன் காஞ்சி மடத்திலேயே வளர்ந்து வந்தாலும் தினமும் பெற்றோர்களை சந்தித்து நமஸ்காரம் செய்து ஆசிகளை பெறுவார். உபநயனம் வேதம் வேதாந்தம் இவைகளை திறம்படக் கற்றார். அனைத்தும் கற்ற பிறகு ராம நாம ஜபம் சிறந்தது என்று அறிந்தார். அன்று முதல் 1,08,000 நாம நாமத்தை ஜெபிப்பதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டு தினமும் ஜெபித்தார்.

காஞ்சி காமகோடி பீடத்தின் 58 ஆவது பீடாதிபதி விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1638 ஆம் ஆண்டு புருஷோத்தமனுக்கு ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி என்று பெயர் கொடுத்து இளைய பீடாதிபதி ஆக்கினார். கபீர்தாஸ், துளசிதாஸ், மீரா பாய், ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு, ஸ்ரீ நாம தேவா, ஸ்ரீ ஏக்நாத் மற்றும் ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ராமா நாமத்தைப் பரப்பும்படி ஸ்ரீ போதேந்திராளுக்குக் கட்டளையிட்டார். போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி மடத்தின் 59 ஆவது பீடாதிபதி ஆனார். ஶ்ரீ ராம நாம பாராயணத்தின் பலனை சாதாரண மக்களும் அடைந்து உய்ய வேண்டும். அதுவே இந்த கலியுகத்தில் மோட்ச சாதனம் என்று மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக 1685 ஆம் ஆண்டில் காஞ்சி பீடத்தை தனது இளைய பீடாதிபதிக்கு விட்டுவிட்டு பீடத்தையும் துறந்து சந்நியாசியாக கிராமம் கிராமமாகச் சென்று நாம பிரசாரம் செய்து வந்தார். அவரது குருவின் ஆணையின்படி ராம நாம சித்தாந்தம் செய்து அது மோட்சத்தை கொடுக்கும் என்று சொல்லி அதற்கு ஆதாரமாக நாம பிரபாவத்தை நிரூபிக்கும் விதமாக எட்டு கிரந்தங்களை அவர் செய்துள்ளார். தஞ்சாவூரின் அருகே பல கிராமங்களை ராம நாம ஜெபம் செய்யும் கிராமங்களாகவும் மாற்றியிருந்தார்.

ஒரு சமயம் மன்னார் குடியின் அருகே உள்ள பெரம்பூர் என்ற கிராமத்தில் தங்கி இருந்தார் போதேந்திரர். அப்போது ஒருவர் இவரது தேஜசையும் காம்பீரத்தையும் கண்டு இவர் ஒரு உண்மையான மகாத்மா என்று உணர்ந்து வணங்கி நின்றார். நிமிர்ந்து பார்த்தார் சுவாமிகள். சுவாமிகள் எமது இல்லத்தில் உணவி சாப்பிட வேண்டும் என்றான். சுவாமிகள் அவரை ஏற இறங்கப் பார்த்தார். நான் எங்கும் உணவு சாப்பிட செல்வதில்லை. எமக்கு என்று விதிமுறைகளை வைத்திருக்கிறேன் என்றார். நீங்கள் உணவுவு சாப்பிட உறுதியாக வர வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமோ சொல்லுங்கள் அப்படியே செய்கிறேன் என்றான். அதற்கு சுவாமிகள் நான் ராம நாம உணவுக்குத்தான் வருவேன் என்றார். புரியவில்லையே சுவாமி என்றான். ராமநாம ஜபத்தை செய்பவர்கள் வீட்டில் மட்டுமே உணவு சாப்பிட வேண்டும் என்று விதிமுறை வைத்திருக்கிறேன். நீ செய்வாயா என்றார். சுவாமிகள் நீங்கள் எனக்கு அந்த மந்திரத்தை உபதேசம் செய்யுங்கள் உறுதியாக ஜபம் செய்ய ஆரம்பித்து விடுகிறேன் என்றான்.

ராமநாம உபதேசம் அவருக்கு செய்துவிட்டு நாளை உனது வீட்டிற்கு உணவிற்கு வருகிறேன் என்று வாக்கு கொடுத்தார் சுவாமிகள். மறுநாள் ஒரு பெரிய சந்நியாசி உணவிற்கு வருகிறார் என்று உறவினர்கள் நண்பர்கள் என்று வீடு திருவிழா போல் காணப்பட்டது. சுவாமிகள் வந்ததும் பூர்ண கும்பம் கொடுத்து பூஜைகள் செய்தனர். பிறகு உணவிற்கு இலை போடப்பட்டது. சுவாமிகள் அமர்ந்ததும் அங்குள்ளவர்களை கவனித்தார். 3 வயது நிரம்பிய ஒரு சிறு குழந்தை தாயின் பின்னால் நின்று கொண்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. சுவாமிகள் குழந்தைக்கும் ஒரு இலை போடுங்கள் குழந்தையும் எம்மோடு சாப்பிடட்டும் என்று சொல்லி விட்டுக் குழந்தையை இங்கே வா குழந்தாய் என்று அழைத்தார். குழந்தை எந்தச் சலனமும் இன்றி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒன்று வர வேண்டும் அல்லது வரமாட்டேன் என்று சொல்ல வேண்டும். தலையையாவது அசைக்க வேண்டும். சலனமே இன்றிப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை ஒன்றும் புரியாமல் பார்த்துவிட்டு மீண்டும் இங்கே வா குழந்தாய் என்றழைத்தார் சுவாமிகள். அழைத்தவர் சுவாமிகளை வணங்கிவிட்டுச் சொன்னார். சுவாமி அவனுக்குக் காதும் கேக்காது. வாயும் பேசமாட்டான் அவனுக்கு தாங்கள் சொல்வது எதுவும் புரியாது என்றார். சுவாமிகள் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. அதைக் கண்டதும் அழைத்தவர் சுவாமி நீங்கள் மகா ஞானி அனைத்தும் தெரிந்தவர் உங்களது கண்களில் இருந்து கண்ணீர் வரக் கூடாது. சந்நியாசி கண்ணீர் பூமியில் விழுந்தா பூமிக்கே ஆகாது. எங்க வினை நாங்க அனுபவிக்கறோம். தயவு செய்து உணவை சாப்பிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

சுவாமிகள் அன்று காலைதான் ஒருவன் நாம நாமத்தைச் சொன்னாலும் கேட்டாலும் ஒரே பலன். எனவே நாமம் வாயில் வரா விட்டாலும் கூட பரவாயில்லை. யாராவது சொல்வதைக் கேட்டாலும் போதும். அந்த ஜீவனுக்கு நற்கதி நிச்சயம். காதுகளை பகவான் மூடி வைக்கவில்லை. எனவே யாரோ சொல்லும் நாமம் தானாய்க் காதில் விழுந்தாலும் போதும் என்று உபன்யாசம் செய்திருந்தார் சுவாமிகள். காதும் கேட்காது வாயும் பேசாது என்றால் தனது சித்தாந்தத்திலிருந்து இவனைப் போன்ற ஜீவன்கள் தப்பி விடுவார்களே அவர்களுக்கு நற்கதி கிட்டாமல் போய்விடுமோ என்று மிகவும் வருந்தி அந்த குழந்தைக்காக மானசீகமாக பிரார்த்தனை செய்தார் சுவாமிகள். அவருக்குள்ள நியமப்படி உணவை ஏழு கைப்படி மட்டும் சாப்பிட்டு கிளம்பிவிட்டார் சுவாமிகள். சுவாமிகளை வழி அனுப்புவதற்காக அவரோடு வீட்டிலிருந்தோர் அனைவரும் வீதி முனை வரை சென்றார்கள். வீட்டில் அந்தக் குழந்தை தனியாக விடப்பட்டான். குழந்தைக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது. காலையிலிருந்து சந்நியாசி உணவருந்த வருவதால் வேலைப்பணியில் அவனுக்கு யாரும் உணவு கொடுக்கவில்லை. சுவாமிகள் உணவு சாப்பிட்ட இலையில் அவர் 7 கைப்பிடி சாப்பிட்டது போக மீதி அத்தனையும் அப்படியே இருந்தன. பசியினால் குழந்தை இலையிலிருந்த பதார்த்தங்களை எடுத்து உண்ண ஆரம்பித்தான். சுவாமிகளை வழியனுப்பிவிட்டு வந்த பார்த்தவர்களுக்கு தாங்கள் பார்ப்பது கனவா நினைவா என்று ஒன்றும்‌ புரியவில்லை. அவர்கள் கண்ட அந்த அற்புத காட்சி. வீட்டின் கூடத்தில் அந்தக் குழந்தை இரண்டு கைகளையும் உயரத் தூக்கிக் கொண்டு நர்த்தனம் செய்து கொண்டே மதுரமான குரலில் ராம நாமத்தை இசைத்துக் கொண்டிருந்தான். இந்த சம்பவம் 1662 ஆம் ஆண்டில் நடந்தது. ஒரு உண்மையான ஞானி உண்ட அமுது அவரது ஸ்பரிசம் அவரது பிரார்த்தனை வாக்கு பார்வை அனைத்துமே மிகவும் புனிதமானவை. ஒருவருக்கு ஞானத்தை வழங்கவும் கர்ம வினைகளை முற்றிலும் அழித்து அகற்றவும் ஞானிகளுக்கு மகான்களுக்கும் சாத்தியம்.

போதேந்திரருக்குக் குழந்தைகள் என்றால் அளவில்லாத மகிழ்ச்சி. கோவிந்தபுரத்திற்கு அருகிலுள்ள காவேரியில் தினமும் நீச்சல் அடித்து சாகசங்களைச் செய்து காட்டிக் குழந்தைகளை மகிழ்விப்பார். ஒரு கோடைக்காலத்தில் 1692 ஆம் ஆண்டு பிரஜோத்பதி ஆண்டு புரட்டாசி மாத முழு நிலவு நாளில் போதேந்திரர் தஞ்சாவூர் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் காவேரி நதிக்கரையில் போதேந்திரர் ஆற்று மணலிலே ஒரு குழியைத் தோண்டி அதிலே அமர்ந்து கொண்டு சிறுவர்களைப் பார்த்து இதை மண்ணால் மூடிவிட்டு செல்லுங்கள். நாளை வந்து தோண்டிப் பாருங்கள். பிறகு நான் வருகிறேன் என்றார். குழந்தைகளும் விபரீதம் தெரியாமல் மண்ணைப் போட்டு மூடிவிட்டு சென்று விட்டார்கள். போதேந்திரரைக் காணவில்லை என்று ஊர் மக்கள் சொன்ன பிறகு தான் குழந்தைகள் அவர்களிடம் நடந்ததைச் சொன்னார்கள். குழந்தைகள் காட்டிய இடத்தை தேடி தோண்ட ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு அசரீரீ கேட்டது. நான் இங்குதான் மண்ணிலே ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். என்னைத் தொந்தரவு செய்ய வெண்டாம். இதற்கு மேலே ஒரு பிருந்தாவனம் அமைத்து ஆராதனை செய்யுங்கள் என்று ராம நாமத்திலே ஐக்கியமாகி விட்டார். இது அவருடைய ஜீவசமாதியாகும். சிறிது வருடத்தில் காவேரி வெள்ளத்தில் பராமரிப்பு இன்றி இந்த இடம் மறந்து மறைந்து போனது. 1803 ஆம் ஆண்டில் மருதநல்லூர் சத்குரு சுவாமிகள் இங்குள்ள நீரில் இருந்து ராம நாமம் ஒலிப்பதைக் கேட்டு தனது சீடரான சரபோஜி மன்னரிடம் சொல்லி நதியைத் திசை திருப்பச் செய்து அந்த இடத்தைக் கண்டுபிடித்தார். இன்றும் இந்த ஜீவசமாதிக்கு ஆராதனை நடந்து கொண்டிருக்கிறது. இப்போதும் ஸ்ரீ போதேந்திராள் அதிஷ்டானத்தில் சுவாமிகளின் ராம நாமம் தகுதியானவர்களுக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது. இவர் எழுதிய பகவன்நாம ரசோதயம், பகவன்நாம ரஸார்ணவம், பகவன்நாம ரஸாயனம் போன்ற நூல்கள் புகழ் பெற்றவை.