வராக நரசிம்மர்

வடக்கு ஆந்திர மாநில கடற்கரைப் பிரதேசமான விசாகப்பட்டினத்திலிருந்து 15 கிமீ தூரத்தில் 244 மீட்டர் உயரமுள்ள சிம்மாசலம் என்ற குன்று உள்ளது. இந்த குன்றின் மீது பெரிய அளவில் வராக நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. மடக்கிய கால்கள் காட்டுப் பன்றி முகம் சிங்க வால் மனித உடலுடன் காட்சியளிக்கும் இவர் இரணியனை மடக்கிய முன்காலில் கிடத்தி அவன் வயிற்றைத் தன் இரு கரங்களால் கிழிக்கும் நிலையிலும் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும் உள்ளார். இக்கோயில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவர் வராக நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது. இவரும் மூலவரைப் போலவே அமைந்திருக்கிறார். மூலவர் வராக நரசிம்மர் வருடம் முழுவதும் கெட்டியான சந்தனத்தால் காப்பிடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவர் உக்கிர நரசிம்மராக இருப்பதால் வருடம் முழுவதும் சந்தனக் காப்பு சாற்றப்படுகிறது. ஒரு நாள் தவிர வருடம் முழுவதும் சந்தனத்துக்குள் இருக்கிறார். பார்க்க சிவலிங்கம் போலவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அட்சய திரிதியை அன்று ஒருநாள் மட்டும் மூலவர் மீதுள்ள சந்தனக் காப்பு முழுவதும் அகற்றப்பட்டு நிஜ ஸ்வரூபத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் வராக நரசிம்மர். அன்றைய தினம் இத்தலத்திற்கு வரும் ஏராளமான பக்தர்கள் இங்குள்ள காந்தாரா நீர் வீழ்ச்சியுடன் கூடிய புஷ்கரணியில் நீராடி விட்டு கோயிலுக்கு வந்து வராக நரசிம்மரைத் தரிசிக்கிறார்கள். ஆந்திர மாநில திவ்ய ஷேத்திரங்களில் இந்தக் கோயிலும் ஒன்று.

குரு பக்தி

திருப்பதியில் அடிவாரத்தில் சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராமானுஜர். அப்போது மோர் விற்றுக் கொண்டிருந்த ஒரு பெண்மணி அந்த வழியாக சென்றாள். சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்று ஆசை தோன்றியது. ஆனால் குருநாதர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில் மோர் விற்பவளைக் கூப்பிட்டால் பாடத்தின் மேல் கவனம் இல்லாதது போல் ஆகிவிடும் என்பதால் மோர் ஆசையைத் துறந்து பாடத்தில் கருத்தாக இருந்தார்கள். சீடர்களின் கூட்டத்தை பார்த்ததும் நல்ல வியாபாரம் ஆகிவிடும் என்று தீர்மானித்து மோர்க்காரப் பெண்மணி இந்த இடத்தில் பானையை இறக்கி வைத்து ராமானுஜருக்கு வணக்கத்தை செலுத்தினாள். ராமானுஜர் சீடர்களின் ஆசையை பார்த்து கண்ணசைக்க ஆசையில் இருந்த சீடர்களுக்கு மோர் பானையைப் பார்த்ததும் எனக்கு எனக்கு என்று கேட்டு வாங்கிக் குடித்தனர். எல்லோருக்கும் மோர் கொடுத்து முடித்ததும் நிறைந்த மனத்துடன் ராமானுஜரை பார்த்தாள். குரு பக்தியின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட காரணத்தால் மோருக்கான காசை கேட்டுப்பெற வேண்டும் என்பதையும் மறந்து நின்றாள். ராமானுஜர் அந்தப் பெண்மணியைப் பார்த்து அம்மா நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன? என்று கேட்டார். ராமானுஜரை நமஸ்கரித்த அந்தப் பெண் மோருக்கு பணம் வேண்டாம் சாமி. அதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போறேன்? அதற்கு பதிலாக பெருமாள் இருக்கக் கூடிய பரமபதத்தை அடையணும் மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க. மகிழ்ச்சியுடன் செல்வேன் என்றாள்.

ராமானுஜர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஆசார நியமங்களோ சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள் மோட்சம் வேண்டும் என்கிற ஆசை தோன்றியது ஆச்சரியம். இப்படி ஒரு கோரிக்கையை அவள் வைப்பாள் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஒரு சில நிமிட இடைவெளிக்குப் பிறகு கவலைப்படாதம்மா உன்னோட நல்ல குணத்துக்கு நிச்சயம் மோட்சம்தான் கிடைக்கும். மகழ்ச்சியுடன் சென்று வா என்றார். அந்தப் பெண்மணி விடவில்லை. உங்கள் வாக்கு அப்படியே பலிக்கட்டும் சாமி. ஆனா அந்த மோட்சம் எனக்குக் கிடைக்கறதுக்கு ஒரு வழியைக் காட்டுங்க. நான் அந்த வழியில் செல்கிறேன் என்றாள். ராமானுஜர் சிரித்தார். அம்மா நீ நினைப்பதுபோல் மோட்சத்துக்கு ஒரு வழியைக் காட்டுவதோ மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ எனக்கோ இங்கு கூடி இருக்கின்ற சீடர்களுக்கோ இல்லை. மேலே திருமலையில் ஏழுமலைக்குச் சொந்தக்காரன் ஒருவர் இருக்கிறார் அவரிடம் போய்க் கேள். உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவருக்குத் தான் உண்டு என்றார். இதற்குப் பிறகும் அந்த மோர்க்காரப் பெண்மணி நகர்கிற வழியாக இல்லை. சாமி மேலே இருக்கிற ஏழுமலையான் கிட்ட போய் எத்தனையோ தடவை மோட்சம் வேணும் மோட்சம் வேணும்னு கேட்டுப் பாத்துட்டேன். ஆனா அங்கே இருக்கிற பெருமாள் வாயைத் திறந்து எதுவும் பதில் சொல்லவில்லையே என்றாள்.

பெருமாளுக்கு நிறைய வேலை இருக்கும். அதனால் இதை ஒரு குறையா சொல்லிக் கொண்டு இருக்காதே. உன் மனதில் படுவதை நீ கேட்க வேண்டும் என்று நினைப்பதை அவரிடம் கேட்டுக் கொண்டே இரு. ஒருநாள் நிச்சயம் உனது பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார் என்றார் ராமானுஜர். ராமானுஜரின் வார்த்தையை கேட்டதும் உங்களை நம்புகிறேன். உங்களது வார்த்தையை நம்பகிறேன். உங்களைப் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை வந்திருக்கிறது என்று உற்சாகத்துடன் கூறிவிட்டு சாமி எனக்கு மோட்சம் தர வேண்டும் என்று சொல்லி பெருமாள்கிட்ட சிபாரிசு செய்து நீங்கள் ஒரு ஓலை எழுதிக் கொடுங்கள் என்றாள். உங்களை மாதிரி பெரியவங்க ஓலை கொடுத்தா இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டு பெருமாள் எனக்குப் பதில் சொல்வார் என்று நம்புகிறேன் ஆகவே கொடுங்கள் என்று கேட்டாள். அவள் அபரிமிதமான நம்பிக்கையோடு கேட்பதால் அவள் கேட்பதை மறுக்க இயலாது என்று உணர்ந்த ராமானுஜர் ஒரு சீடரிடம் ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். அதைக் கேட்டதும் சீடர்களுக்கு வியப்பு தாங்க முடியவில்லை என்றாலும் அவர் கேட்டதை எடுத்துக் கொண்டு வந்து தந்தனர். உண்மையாகவே திருமலை பெருமாளுக்கு சிபாரிசு செய்து குருநாதர் ஓலை எழுதப் போகிறாரா இல்லை அந்தப் பெண்மணியை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஏதேனும் செய்கிறாரா? என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாகி ராமானுஜரைச் சுற்றி அமர்ந்து கவனிக்கலானார்கள். மேலே அண்ணாந்து திருமலையைப் பார்த்து இருகரம் கூப்பிவிட்டு ஓலையில் பெறுநர் முகவரியை எழுதும் இடத்தில் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் திருமலை என்று குறிப்பிட்டுவிட்டு பெண்மணியின் கோரிக்கையை எழுதத் தொடங்கினார் ராமானுஜர். எழுதி முடித்த பின் ஓலையின் கீழே தன் கையெழுத்தையும் போட்டு அதை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார்.

ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலையில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை சீடர்களும் படித்துப் பார்த்தனர். மோர் விற்பனை செய்யும் பெண்ணுக்கு மோட்சம் கிடைக்க அனுக்ரகம் செய் என்று சிபாரிசு செய்து ஓலையில் எழுதப்பட்டிருந்தது. ஓலையை வாங்கிய அடுத்த விநாடி அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலையை நோக்கிப் புறப்பட்டாள். மலை ஏறி பெருமாள் சன்னிதிக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் கொடுத்தாள். பெண்மணியை மேலும் கீழும் பார்த்து இது என்ன ஓலை? என்று குழப்பத்துடன் கேட்டனர் அர்ச்சகர்கள். அவர்களிடம் முழு விவரத்தையும் சொன்னாள் அவள். ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலை என்று அறிந்ததும் மறுப்பு ஏதும் சொல்லாமல் அதைக்கொண்டு போய் பெருமாளின் முன்னால் நீட்டினர் அர்ச்சகர். உடனே தம் வலக் கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டார் பெருமாள். பிறகு உனக்கு மோட்சம் தந்தேன் என்று அந்தப் பெண்ணைப் பார்த்துப் பெருமாள் அசிரீரீயாக அருளினார். அடுத்த கணம் வானில் இருந்து பிரகாசமாக ஒரு புஷ்பக விமானம் வந்தது. அதில் இருந்து விஷ்ணு தூதர்கள் இறங்கினர்கள். மோர் விற்கும் பெண்மனியை தங்களுடன் ஏற்றிக் கொண்டு வைகுந்தம் புறப்பட்டார்கள்.

தெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும்.

அர்த்தநாரீஸ்வரர்

முதல் படம்: அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் 400 ஆண்டுகளுக்கு முன்பு கையால் வரையப்பட்ட ஓவியம். அருகில் பிருங்கிரிஷி முனிவர். இரண்டாவது படம்: AI மூலம் உருவாக்கப்பட்ட படம்.

பிருங்கிரிஷி முனிவர் சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபட மாட்டேன் என்கிற கொள்கை கொண்டவர். இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள். நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அர்த்தநாரீஸ்வரராய் நின்றனர். அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து சிவனை மட்டும் வலம் வந்தார். இதை கண்ட சக்தி பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். சிவபெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திர்ப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்றார். அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்று அர்த்தநாரீஸ்வரர் கோலத்தை பிருங்கிரிஷி முனிவர் வழிபடும் காட்சி. ஊர் திருச்செங்கோடு.

அரசாட்சி முறை

பாடல் #247: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

தத்தம் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண்ட மும்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே.

விளக்கம்: உயிர்கள் அவரவர்கள் ஏற்றுக்கொண்ட சமய வழிகளின் நெறிமுறைகளின் படியும் ஒழுக்கத்தின் படியும் நடக்கத் தவறியவர்களை அனைத்து சமய வழிகளின் தலைவனாகவும் அனைத்து உயிர்களின் தந்தையாகவும் இருக்கும் சிவபெருமான் தாம் வழங்கிய சிவாகமத்தில் கொடுத்துள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப எந்தவித தண்டைனையானாலும் அவர்களின் ஆன்மாவிற்கு தண்டனைகளை தாங்கும் பக்குவத்தை கொடுத்து பின் தண்டனைகளையும் கொடுத்து மீண்டும் அவர்கள் அந்த தவறை செய்யாதபடி அவர்களை சீர் படுத்துவான். ஆனாலும் அவர்கள் எடுத்திருக்கும் இந்தப் பிறவியில் இருக்கும் உடலுக்கு வேண்டிய தண்டனைகளைக் கொடுத்து அவர்களைத் திருத்துவது ஒரு நாட்டை ஆளும் அரசனது கடமையாகும்.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. – திருக்குறள்

விளக்கம்: குற்றத்தை ஆராய்ந்து மீண்டும் அது நிகழாதவாறு தகுந்த தண்டனை வழங்குவதே அரசனின் கடமை ஆகும்ஆகும்

கோர்ட்டில் ஒரு திருடன் திருட்டு வழக்கிற்கான நிறுத்தப்பட்டான். அவனிடம் நீதிபதி திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வருகிறாயே நீ திருந்தவே மாட்டியா? என்று கேட்டார். எத்தனை தடவை திருடினாலும் அதே தண்டனையே கொடுக்கறீர்கள் நீங்கள் சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா? என்றான் திருடன். நீதிபதி யோசித்தார். அவனின் கேள்வி நியாயமாகப்பட்டது. திருடனை சிறைச்சாலைக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்த நீதிபதி அவருக்கு சில கட்டளைகளை கொடுத்தார்.

நீதிபதியின் கட்டளைப்படி ஜெயிலர் பிக்பாக்கெட் அடித்த பத்துப் பேரை திருடனின் ஜெயில் அறையில் வைத்தார். திருடனிடம் வந்த ஜெயிலர் இந்த அறையில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த அறைக்கு அருகில் ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு என்றார். திருடன் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான். ஜெயிலர் மற்ற பத்து பேரைத் தனியாக அழைத்தார். திருடன் வேலை செய்துவிட்டு கூலியை வாங்கிக் கொண்டு சாப்பிட கேண்டின் செல்லும் வழியில் அவனிடம் உள்ள பணத்தை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினமும் இந்த வேலையைச் செய்யணும். யார் எப்ப எப்படி பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது என்றார். அவர்கள் ஜெயிலரின் கட்டளையை ஏற்றார்கள். முதல் நாளே திருடன் பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் உணவு தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் சிறிதளவு உணவு சாப்பிடக் கொடுத்தார்கள். அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டு பரிதாபப்பட்டாலும் வேறு வழியில்லை. அவனின் பணத்தை திருடா விட்டால் ஒன்பது பேருக்கும் உணவு கிடைக்காது. பத்து பேர் பட்டினியில் கிடப்பதை விட ஒருத்தன் பட்டினி கிடப்பது பரவாயில்லை என்று அனைவரும் அமைதியாக இருந்து விட்டார்கள். தினமும் இப்படியே நாள் கடந்தது. தினமும் அவர் எவ்வளவு வேலை பார்த்து சம்பாதித்தாலும் அவனுக்கு கிடைத்தது உயிர் வாழத் தேவையான ஒரு வேளை சிறிதளவு உணவு மட்டும். அவன் விடுதலை ஆகும் நாள் வந்தது.

நீதிபதி அன்று திருடன் இருக்குமிடம் வந்தார். நீ கேள்வி கேட்டபடி சட்டத்தையோ தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது? என்றார். ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு வினாடியில் திருடிக்கொண்டு செல்வது எவ்வளவு அக்கிரமம்னு இப்போது புரிகிறது. இனி திருட எனக்கு மனசு வராது என்றான் திருடன். மற்ற பத்து திருடர்களும் திருடன் பசியில துடிப்பதைப் பார்க்க சகிக்கவில்லை. செத்தாலும் இனிமேல் திருட மாட்டோம் என்றார்கள்

நீதிபதி திருமந்திரம் மற்றும் திருக்குறளில் வள்ளுவர் சொன்னதை இங்கு செய்தார்.

குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.

யாத்ரா தானம்

இராமர் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற கோட்பாட்டை மேற்கொண்டு கானகம் செல்ல தயாரானார். கானகம் சென்று விடுவதால் தன்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் தேவைப்படுபவர்களுக்கு தானம் கொடுக்க முடிவு செய்து அனைத்தையும் தானமாக கொடுத்தார். யாத்திரை செல்வதற்கு முன்பு தன்னிடம் உள்ள பொருட்களை தேவைப்படுபவர்களுக்கு கொடுப்பதினால் இதற்கு யாத்ரா தானம் என்று பெயர் வந்தது. அன்று முதல் வந்ததுதான் யாத்ராதானம். யாத்ரா என்ற வார்த்தை வடசொல். தமிழில் யாத்திரை என்று பெயர். யாத்திரை செல்லும் சமயம் நாம் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு பயணம் செய்கிறோம். அப்போது பயணத்தில் தேவைப்படுகின்ற பொருட்களை மட்டுமே கொண்டு செல்கிறோம். மீதி பொருட்களை வீட்டில் பூட்டி விட்டுத்தான் செல்கிறோம். வீட்டில் பூட்டி வைத்திருக்கும் பொருட்கள் பயணத்திற்கு பயன்படாது. அது போலவே இறைவன் இருக்கும் இடத்திற்கு பயணம் செய்ய புண்ணியம் மட்டுமே தேவை. நம்மிடம் இருக்கும் எந்த பொருட்களும் இறைவன் இருக்கும் இடத்திற்கு செல்லும் பயணத்திற்கு உதவாது. நம்முடைய இறுதி காலத்திற்கு பின்னும் இந்த பொருட்கள் நம்முடன் வருவதுமில்லை. ஆகவே தானங்கள் செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொண்டல் அந்த புண்ணியம் நம்மை இறைவனிடத்தில் அழைத்துச் செல்லும்.

இராமர் தன்னை பார்க்க வரும் அனைவருக்கும் அவர்கள் விரும்பிய பொருட்களையும் தான் அணிந்திருந்த உடை உட்பட தன்னிடம் உள்ள எந்த பொருளை கேட்டாலும் அனைத்தையும் வாரி வழங்கினார். அயோத்தி வாசிகள் பலரும் தானம் பெற்றனர். தானத்தை முடிக்கும் தருவாயில் வயது முதிர்ந்த ஒரு அந்தணன் வந்தார். அவன் பெயர் திரிசடன். அவருக்கு ஒரு மனைவியும் சில பிள்ளைகளும் இருந்தனர். அன்றாடம் வயல்வெளியில் வரப்பில் சிந்தி இருக்கும் நெல் மணிகளை எடுத்து அதிலே ஜீவனம் செய்து வந்தார். இராமர் கானகம் செல்லும் முன் தனது உடைமைகளை எல்லாம் யாத்ரா தானம் செய்வதை கேள்விபட்ட அவரது மனைவி ஓடோடி கணவனிடம் சென்று இராமர் கானகம் செல்லும் முன் தனது பொருள்களை எல்லாம் யாத்ரா தானம் செய்கிறார். நீங்களும் அவர் இருக்குமிடம் என்று ஏதாவது பொருள் தானமாக வாங்கி வாருங்கள். நிச்சயம் தருமமே வடிவம் தாங்கி வந்திருக்கும் அந்த அண்ணல் நம் துன்பங்களை எல்லாம் தீர்ப்பார். ஆகவே சென்று வாருங்கள் என்றாள். அதற்கு அந்தணனும் ஒப்புக் கொண்டு வேக வேகமாக அரண்மனையை சென்றடைந்தான். அங்கே தான தர்மங்களை வழங்கிக் கொண்டிருந்த இராமரை கண்டார். இராமரை பணிந்து தங்களின் புகழ் இப்புவி முழுவதும் பரவியுள்ளது. நான் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவன். நானும் என் குடும்பமும் தங்களது ராஜ்ஜியத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் வயல் வரப்பில் தானே விழும் நெல்லை நம்பியே வாழ்ந்து வருகிறோம். என்மீது கருணைக் கொண்டு உதவ வேண்டும் என வேண்டி நின்றான். உடனே ராமர் அன்பரே சற்று முன் வந்திருக்க கூடாதா? என்னுடைய விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் அனேகருக்கு முதலிலேயே கொடுத்து விட்டேன். தற்பொழுது என்னிடம் மிஞ்சி இருப்பது இந்த பசுக்கள் மட்டுமே. உங்களுக்கு எவ்வளவு பசுக்கள் வேண்டும் என்று கேட்டார்.

இராமரின் கேட்டதும் நூறு பசுக்கள் கேட்கலாமா? இருநூறு பசுக்கள் கேட்கலாமா? அல்லது அதற்கும் மேலும் கேட்கலாமா? என்று அந்தணன் யோசித்தான். பின் புத்திசாலிதனமாக எனது வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியுடன் வாழ எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு நீங்களே கொடுங்கள் என்று இராமரின் விருப்பத்திற்கு விட்டு விட்டான். இரமரும் அந்தணரே உமது கையில் உள்ள கொம்பை வீசி எறியுங்கள். அது எவ்வளவு தூரம் செல்கின்றதோ அது வரை உள்ள பசுக்களை அனைத்தையும் உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள் என்றார். இதை கேட்ட அந்தணன் விழிகள் மலர்ந்தன. நடக்கவும் சக்தியற்ற நிலையிலிருந்த அவன் நிமிர்ந்து நின்றான். தன் இடுப்பில் இருந்த வஸ்திரத்தை அவிழ்த்து அதை வரிந்து கட்டிக் கொண்டான். தனது முழு பலத்தையும் திரட்டி ஒரு சுற்று சுற்றி தனது கையில் இருந்த கொம்பை வீசி எறிந்தான். அது சரயு நதி கரைக்கு அருகில் சென்று விழுந்தது. அவனுடைய பேராசையை எண்ணி இராமர் சிரித்துக் கொண்டார். பொருளாசை தான் மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது? சக்தியற்ற மனிதனையும் பொருளானது எத்தகைய சக்தி வாய்ந்தவனாக மாற்றுகிறது என்பதை தெரிந்துக் கொண்டார். உமது கொம்பு விழுந்த இடம் வரை உள்ள பசுக்களை எல்லாம் உங்களுக்கே வழங்குகிறேன் பெற்று செல்லுங்கள் என்றார். அந்த திரிசடன் என்ற அந்தணன் ராமரை பலவாறாக போற்றி புகழ்ந்து பாராட்டினான். யாத்திரை இனிதே முடிய வாழ்த்தினான். அவரிடம் விடை பெற்றுக் கொண்டு இராமர் வழங்கிய பசு கூட்டங்களுடன் தனது வீட்டை அடைந்தான். பின் மனைவி மக்களுடன் சுகமாக வாழ்ந்தான்.

இதன் அடிப்படையில் நம் முன்னோர்கள் வெளியூர் பயணம் அல்லது கோயில்களுக்கான யாத்திரை அல்லது நல்ல காரியங்களுக்கோ செல்லும் முன் தங்களால் முடிந்த பொருள்களை பழ வகைகளை யாத்ரா தானம் செய்து விட்டு யாத்திரை மேற்கொள்வார்கள். அதனால் எந்த ஒரு துன்பமும் இல்லாமல் பயணம் இனிதே முடிந்து ஊர் திரும்புவர்கள். அந்தணரிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால் இவராக கேட்டிருந்தால் 100 அல்லது 200 பசுக்கள் மட்டுதே கேட்டிருப்பார். அவை மட்டுமே அவருக்கு கிடைத்திருக்கும். ஆனால் இராமரிடமே எனக்கு என்ன வேண்டுமோ நீங்களே கொடுங்கள் என்று கேட்டதினால் அவனுடைய சக்திக்கு ஏற்றார்போல் அதிகமான பசுக்களையே கொடுத்தார். அதுபோல் நாமும் இறைவனிடம் பிரார்த்திக்கும் போது அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்பதை விட எனக்கு மகிழ்ச்சி கொடுக்க கூடியது எதுவோ நன்மை கொடுக்க கூடியது எதுவோ அதனை எனக்கு கொடுங்கள் என்று பிரார்த்தனை செய்வது சிறப்பு. குழந்தைக்கு எது நல்லது என்று தாய்க்கு மட்டுமே தெரியும். அதுபோல் நமக்கு எது நன்மை தரும் எது மகிழ்ச்சி கொடுக்கக் கூடியது கூடியது அனைவருக்கும் தாயாக இருக்கும் இறைவனுக்கு மட்டுமே என்று தெரியும்.

சித்திகள்

முனிவர் ஒருவர் தனது கடும் தவத்தின் காரணமாக பல சித்திகள் கைவரப்பெற்றார். அதனால் அவருக்கு தன்னால் இயலாத காரியம் ஒன்றும் இல்லை என்ற கர்வம் வந்தது. நல்ல குணங்களும் தவ வலிமையும் கொண்ட முனிவரின் கர்வத்தை நீக்க திருவுள்ளம் கொண்டார் இறைவன். சன்னியாசி உருவத்தில் முனிவர் இருக்கும் இடத்திற்கு வந்தார் இறைவன். முனிவரிடம் சுவாமி தாங்கள் செய்த தவ வலிமையால் பல சித்திகளைப் பெற்றிருப்பதாக அறிந்தேன். அப்படிப்பட்ட தங்களை காண வேண்டியே இங்கு வந்துள்ளேன் என்றார் சன்னியாசி. சன்னியாசியை வரவேற்று அமரும்படி கேட்டுக் கொண்டார் முனிவர். அச்சமயத்தில் அந்த வழியாக ஒரு யானை சென்று கொண்டிருந்தது. சுவாமி தங்களால் இந்த யானையையும் கொல்ல முடியும் அல்லவா எனக் கேட்டார் சன்னியாசி. ஏன் முடியாது இப்போது பாருங்கள் என்று நீரை கையில் எடுத்து மந்திரித்து யானையை நோக்கி வீசினார் முனிவர். உடனே அந்த யானை அதே இடத்தில் துடிதுடித்து செத்து வீழ்ந்தது. என்ன ஆச்சரியம் உள்ளபடியே தங்கள் மந்திர சக்தியை புரிந்து கொண்டேன். தாங்கள் மந்திர பிரயோகத்தால் யானையை எளிதாக வீழ்த்தி விட்டீர்களே என பாராட்டினார் சன்னியாசி. சன்னியாசியின் புகழுரைகள் சாதுவுக்கு பெருமகிழ்ச்சியை உண்டாக்கியது. மீண்டும் சுவாமி இப்போது தங்களால் இறந்து போன யானையை மீண்டும் பிழைக்க வைக்க முடியுமா? எனக் கேட்டார் சன்னியாசி. என்னால் எதையும் செய்ய முடியும். இப்போது பாருங்கள் என்று முன் போலவே நீரை கையில் எடுத்து மந்திரித்து கீழே சாய்ந்து கிடந்த யானையின் மீது வீசினார் முனிவர். யானைக்கு உயிர் வந்தது.

முனிவரிடம் சுவாமி உங்கள் அபார சக்தியை புரிந்து கொண்டேன். தாங்கள் அனுமதித்தால் தங்களிடம் ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன். தாங்கள் பதில் சொல்ல வேண்டும் என்ன எனக் கேட்டார் சன்னியாசி. தாராளமாக கேட்கலாம். அதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை என்றார் முனிவர். சுவாமி தாங்கள் யானையை முதலில் கொன்றீர்கள். பின்பு அதை உயிர் பிழைக்க செய்தீர்கள். இதனால் தாங்கள் பெற்ற பலன் என்ன? இறைவனை கண்டீர்களா? தங்களுக்கு எப்படிப்பட்ட ஆன்மிக வளர்ச்சி கிடைத்தது? தங்களின் சித்து விளையாட்டு இறைவனை எளிதாக அடைய தங்களுக்கு உதவியக இருந்ததா? என்று கேட்டார் சன்னியாசி வடிவில் இருந்த இறைவன். இந்த சித்திகள் எதற்கும் பயன்படாது என்பதை உணர்ந்த முனிவர் கர்வம் அழிந்த நிலையில் சன்னியாசியின் கால்களில் விழுந்தார். இறைவன் அவருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.

இறைவனின் அருளை பெற்ற பக்தன் இறைவனிடம் விலை மதிக்க முடியாத ஞானம் வைராக்கியம் பக்தி இவைகளை மட்டுமே கேட்டு பெற்றால் ஆனந்தமாக வாழலாம். கர்மாக்கள் விரைவாக அழிந்து இறைவனிடம் செல்லலாம். அதனை விடுத்து இறைவனே விட சித்திகளே பெரிது சித்திகள் வேண்டும் என்று அதன் பின்னால் சென்றால் எந்த பலனும் இல்லை. கர்வம் மிகுந்து மேலும் பிறவிகளே அதிகரிக்கும்.