பங்களாதேஷத்தில் உள்ள சீதா தேவி கோயில் குளத்தில் உள்ள நீரில் நெருப்பு ஆண்டு முழுவதும் எரிந்து கொண்டே இருக்கிறது. இந்த தீயையே மக்கள் சீதா தேவியாக வணங்கி வருகின்றனர். இதை சீதா குண்டம் என்று அழைக்கின்றனர். இயற்கை எரிவாயு காரணமாக நீர் மேல் இந்த நெருப்பு எரிகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த எரிவாயு எப்படி இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து இந்த இடத்தில் இருந்து வெளி வருகிறது என்று ஆய்வாளர்களால் சொல்ல முடியவில்லை.
Year: 2025
புனித நீராடல்
ஒரு ஞானியிடம் சென்ற சிலர் நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள். ஞானியோ இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை. எனக்காக ஒரு உதவி செய்யுங்கள் என்று சொல்லி அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் தண்ணீரில் மூழ்க வைத்து எடுத்து என்னிடம் திரும்ப கொண்டு வந்து என்னிடம் கொடுங்கள் என்றார்.
ஞானி சொன்னது போலவே அவர்களும் செய்து திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தார்கள். அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அனைவருக்கும் ஒரு துண்டை கொடுத்தார். புனித நதியில் முழுகி வந்த பாகற்காய். இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார். ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது. தித்திக்கும்னு சொன்னீங்க ஆனா கசக்குதே என்றார்கள்.
ஞானி பார்த்தீர்களா பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும் அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதைப் போலவே நாம் நமது தவறான செயல்களையும் தீய பழக்கங்களையும் துர் குணங்களை மாற்றிக் கொள்ளாமலோ அல்லது இந்த தீய குணங்களை விட்டு விடுகிறேன் என்று பிரார்த்தனை செய்துவிட்டு அதனை கடைபிடிக்காமல் தீய குணங்களிலேயே இருந்து எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் எந்த கோயிலுக்கோ குளத்துக்கோ புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து விழுந்து வணங்கினாலும் எந்த பயனும் வந்து விடப் போவதில்லை. மனங்களிலும் குணங்களிலும் அன்பு வந்தால் தான் வாழ்க்கை இனிமையாகும். புனிய நீராடல் என்பது தனக்குள் இருக்கும் தீய குணங்களை நல்ல எண்ணங்களால் நீராடி நமது உள்ளத்தை புனிதப்படுத்துவது ஆகும் என்றார்.

அஷ்ட சிரஞ்சீவிகள்
அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், கிருபாச்சாரியார், அசுவத்தாமன் ஆகியோர் அஷ்ட சிரஞ்சீவிகள் ஆவார்கள்.
அனுமன்: எந்த எதிர்பார்ப்புமின்றி ராமருக்கு தொண்டு செய்வது மட்டுமே தன் பிறவிக் கடன் என வாழ்ந்தவர். ராமரால் சிரஞ்சீவி பட்டம் அனுமனுக்கு வழங்கப்பட்டது. ராமாயணம் மட்டுமின்றி மஹாபாரதத்திலும் அனுமன் வருவதைப் பார்க்கலாம். இன்றளவும் அவர் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். எங்கெல்லாம் ராமநாமம் சொல்லப்படுகிறதோ அங்கு அனுமன் இருப்பேன் என்று அருள்வாக்கு கொடுத்திருக்கிறார்.
வியாசர்: வியாசர் சொல்ல சொல்ல விநாயகர் எழுதியது மகாபாரதம். படிப்போரின் பாவங்களைப் போக்கும் மகாபாரதம் படைத்த வியாசர் என்றென்றும் சிரஞ்சீவியா வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.
விபீஷணன்: இராவணனின் தப்பியும் இலங்கையை ஆட்சி செய்தவருமான விபீஷணனும் சிரஞ்சீவிதான். அண்ணன் என்றாலும் அதர்மத்தின் பக்கம் நிற்காமல் ராமருடன் நியாயத்தின் பக்கம் நின்றதால் அவர் சிரஞ்சீவி பட்டம் பெற்றார்.
மகாபலி: அசுரக் குலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி செய்தவர் மகாபலி. அதனால் தங்கள் தேவர் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று தேவர்கள் அஞ்சினர். வாமன அவதாரத்தின் மூலம் மகாபலியை அழித்து பாதாள உலகத்துக்கு அவரை அனுப்பினார் விஷ்ணு. அவரும் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். ஆண்டுக்கு ஒரு முறை தன்னுடைய நாட்டு மக்களை சந்திக்க அவர் வருகிறார். அதையே கேரள மக்கள் ஓணம் என்று கொண்டாடுகின்றனர்.
பரசுராமர்: பீஷ்மர் துரோணச்சாரியார் கர்ணன் ஆகியோரின் குரு. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு இவரே எடுத்துக்காட்டு. தந்தை ஆணைக்குக் கட்டுப்பட்டு தன் பெற்ற தாயையே கொன்றார். மீண்டும் தவ வலிமையால் தாயை உயிர்ப்பித்தார். ராமாயணம் மகாபாரதம் என இரண்டு காவியங்களும் இவரை சிரஞ்சீவி என்று போற்றுகின்றன.
மார்க்கண்டேயன்: மிருகண்ட முனிவர் மருத்துவதி (மானஸ்வினி) தம்பதிகள் குழந்தைப் பேற்றுக்காக சிவனை நோக்கி தவம் இருந்ததின் பலனாக பிறந்தவர் மார்க்கண்டேயன். இவரது ஆயுள் 16 வயது என்று பெற்றோர்களுக்கும் தெரியும். அதன்படி 16வது வயதில் சிவபூஜை செய்த போது மார்க்கண்டேயனின் ஆயுளை முடித்து வைக்க எமன் பாசக்கயிற்றை வீசினார். அது சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால் வெகுண்டெழுந்த சிவன் எமனை எட்டி உதைத்தார். மேலும் மார்கண்டேயனுக்கு என்றும் 16 என்ற சிரஞ்சீவி பட்டத்தை வழங்கினார்.
கிருபாச்சாரியார்: பாண்டு வம்சத்தினருக்கு குலகுருவாக இருந்தவர். ஏட்டுக் கல்வி மற்றும் போர்த்திறனைப் பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு கற்பித்தவர். மகாபாரதப் போரில் கௌரவ சேனையிலிருந்து போரிட்டாலும் நடுநிலை தவறாதவர் என்று அறியப்பட்டவர். போரின் முடிவில் பரீட்சித்து மாமன்னரின் அரசகுருவாக பணியாற்றினார்.
அஸ்வத்தாமன்: மகாபாராதத்தில் வரும் துரோணாச்சாரியரின் மகன் அஸ்வத்தாமன். குருச்சேத்திரப் போரில் உயிர் பிழைத்த சிலரில் இவனும் ஒருவர். தன்னுடைய தந்தை வஞ்சகமாகக் கொல்லப்பட்டது மற்றும் நண்பன் துரியோதனன் அதர்ம வழியில் தாக்கப்பட்டதால் கோபம் கொண்ட அவன் பாண்டவர்களின் வம்சத்தை அழிப்பேன் என்று சபதம் ஏற்றுப் பாண்டவர்களின் புதல்வர்களை கொலை செய்தான். மேலும் பிரம்மாஸ்திரம் மூலமாக உத்தரயைின் கருவில் இருக்கும் குழந்தையைக் கொள்ள முயற்சி செய்தான். அதனால் அவனுக்கு சாவை விட கொடிய தண்டனையாக ஆறாத ரத்தம் வழிந்தோடும் காயங்களுடன் மரணமின்றி உலகை சுற்றி வரக் கூடிய தண்டனையை சாபமாக வழங்கினார் கிருஷ்ணன். அதனால் அவனும் சிரஞ்சீவியாக உலகைச் சுற்றி வருகிறான்.
இந்த அஷ்ட சிரஞ்சீவிகள் உள்ள சிற்பம் உள்ள இடம் நக்சல் பகவதி கோயில் காத்மாண்டு நேபாளம்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 43 திருவியலூர்
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 43 வது தேவாரத்தலம் திருவியலூர். திருவிசநல்லூர் திருவிசலூர் என்று வேறு பெயர்களும் உள்ளது. மூலவர் யோகானந்தீஸ்வரர். வேறு பெயர்கள் புராதனேஸ்வரர் வில்வாரண்யேசுவரர். இறைவன் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். சித்திரை 1 2 மற்றும் 3 தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது. அம்பாள் சாந்தநாயகி சௌந்தரநாயகி. தல மரம் வில்வம். தீர்த்தம் மொத்தம் 8 தீர்த்தங்கள் உள்ளது. முக்கியமான தீர்த்தம் சடாயுதீர்த்தம். கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அரை வட்ட கோளம் அமைக்கப்பட்டு அதைச்சுற்றிலும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவே பித்தளையால் ஆன ஆணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் ஒளி இந்த ஆணியில் பட்டு அதன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம் ஆகும். இத்தலம் நான்கு யுகம் கண்ட தலமாக புராணம் கூறுகிறது. கிருதயுகத்தில் புராதனேஸ்வரர் திரேதாயுகத்தில் வில்வாரண்யேஸ்வரர் துவாபரயுகத்தில் யோகநந்தீஸ்வரர் கலியுகத்தில் சிவயோகிநாதர் என்ற பெயர்களில் இறைவன் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறார். சிவராத்திரி தோறும் அகத்தியர் இத்தலத்தில் பூஜை செய்கிறார். சில சிவாலயங்களில் பெருமாள் தனித்து இருந்தாலும் இங்கே லட்சுமியுடன் சேர்ந்து லட்சுமி நாரயணனாக அருள்பாலிக்கிறார். ராமாயண காலத்தில் ஜடாயுவின் இறக்கை இத்தலத்தில் விழுந்ததாகவும் அந்த இடத்தில் ஜடாயு தீர்த்தம் இருப்பதாகவும் தல புராணம் கூறுகிறது. இங்குள்ள பைரவர் சதுர்கால பைரவர் என அழைக்கப்படுகிறார். யுகத்திற்கு ஒரு பைரவராக தோன்றி இங்கு அருள்பாலிக்கின்றனர். ஞானகால பைரவர் அருகில் தட்சிணாமூர்த்தியும் சொர்ணாகர்ஷன பைரவர் அருகில் மகாலட்சுமியும் உன்மத்த பைரவர் அருகில் பாலசனியும் உள்ளனர். யோக பைரவர் அருகில் உத்திரகைலாய லிங்கம் இருக்கிறது.
படைப்புக்கடவுளான பிரம்மதேவர் விஷ்ணு சர்மா என்பவருக்கு புத்திரனாகப் பிறந்தார். இவர் தன்னுடன் பிறந்த ஆறு யோகிகளுடன் சிவனை வேண்டி தவம் புரிந்தார். சிவராத்திரி தினத்தில் சிவன் தரிசனம் கொடுத்து இவர்களை ஏழு ஜோதியாக்கி தன்னுடன் ஐக்கியப்படுத்தினார். எனவே இத்தல இறைவன் சிவயோகிநாதர் ஆனார். இந்த வரலாற்றை விளக்கும் விதத்தில் சிவலிங்க திருமேனியில் ஏழு முடிக்கற்றைகள் இன்றும் இருக்கின்றன. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர அய்யாவாள் என்பவர் தன் வீட்டில் திவசம் கொடுத்து கொண்டிருக்கும் போது பசியால் ஒருவன் யாசகம் கேட்டான். திவசம் முடியாமல் யாருக்கும் எதுவும் கொடுக்க கூடாது என்பது மரபு. மரபையும் மீறி பசியுடன் வந்த அவனுக்கு இவர் உணவளித்தார். இதனால் அவ்வூர் மக்கள் இவரை ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர். இதற்கான பரிகாரம் அவர்களிடம் கேட்க நீ தூய்மையானவன் என்பதை நிரூபிக்க விரும்பினால் கங்கை நதியை இங்கே வரவழைத்து அதில் நீ நீராட வேண்டும். இதுதான் பரிகாரம் என்று கட்டளை இட்டனர். ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம் என்பதே ஐயாவாளின் கொள்கை. பக்தியில் சிறந்த ஸ்ரீதர ஐயாவாள் இறைவனை உருகி வேண்ட அவர் வீட்டுக் கிணற்றில் கங்கை கொப்பளித்து வந்தது. கிணற்றின் நீர்மட்டம் விறுவிறுவென ஏறி வழிந்து அந்தத் தெரு முழுதும் கங்கை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்பொழுது தான் அந்த தெருவில் வாழ்ந்த அந்தணர்கள் ஐயாவாளின் மகிமையை அறிந்தனர். மன்னிப்பும் கேட்டனர். இப்பொழுதும் கார்த்திகை அமாவசை தினத்தில் ஐயாவாள் வசித்த வீட்டின் கிணற்றில் கங்கை எழுந்தருளுகிறாள்.
இந்த ஊரில் வாழ்ந்து வந்த சிவனடியார் ஒருவரின் உயிரைப் பறிக்க எமதர்மன் தன் எருமை வாகனத்தின் மீதேறி வந்தான். நந்திதேவர் எமனை எதிர்கொண்டு விரட்டி அடித்தார். அதன்பின் சிவனடியாரின் உயிரைப் பறிக்க வந்த தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு எமதர்மனே சிவயோகிநாதரையும் நந்திதேவரையும் வணங்கினார். கேரள நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவன் பல பெண்களுடன் கூட நட்பு கொண்டு பெரும் தவறிழைத்து வந்தான். ஏராளமான பெண்களை ஏமாற்றியும் வஞ்சித்தும் ஈன வாழ்க்கை வாழ்ந்து வந்தான். ஒரு கட்டத்தில் பாவ வாழ்க்கையில் இருந்து மீள வழி தேடிய இந்த அரசனுக்கு திருவிசநல்லூரின் பெருமைகள் பற்றி ஒரு மகான் கூறினார். அதன்படி இங்கு வந்த அரசன் காவிரியில் நீராடி இந்தத் தலத்தில் உறையும் இறைவனை தரிசித்து பெண் பாவங்கள் நீங்கப் பெற்றான் என்று தல வரலாறு கூறுகிறது. ஒரு காலத்தில் ஏராளமான பாவம் செய்த ஒருவன் தன் கடைசி காலத்தில் பிரதோஷ தினத்தில் இத்தல இறைவனை அழைத்தான். அப்போது சிவன் நந்தியிடம் அழைப்பது யார் என கேட்க நந்தி திரும்பி பார்த்தது. இத்தலத்தில் நந்தி சிலை திரும்பிப் பார்த்த நிலையிலேயே உள்ளது. நந்தியின் பார்வையால் அவனது பாவம் தொலைந்தது. அக்கணத்தில் அவனுக்கு விதி முடிய இருந்தது. எமன் அங்கு வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். எமனுக்கும் நந்திக்கும் சண்டை ஏற்பட்டது. நந்தி எமனை வென்று கோயில் கொடிமரத்திற்கு வெளியே அனுப்பியது. வழக்கமாக கொடிமரத்தின் உள்ளே நந்தி இருக்கும். ஆனால் இத்தலத்தில் கொடி மரத்தின் வெளியே நந்தி இருப்பதை இன்றும் காணலாம்.
சோழர் காலக் கல்வெட்டில் இத்தலம் வடகரை ராஜேந்திர சிம்ம சோழவளநாட்டு மண்ணிநாட்டு பிரமதேயமான வேப்பத்தூர் சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஊர் என்றும் இறைவன் பெயர் திருவிசலூர் தேவ பட்டாகரர் சிவயோகநாதர் எனவும் குறிக்கப்படுகிறது. இரண்டாம் பராந்தகன் காலக் கல்வெட்டில் விளக்கெரிக்க நிலமும் ஆடுகளும் அளித்த செய்தியையும் காவிரியிலிருந்து அபிஷேகத்திற்கு நீர் கொண்டுவர ஆட்களை நியமித்து ஊதியம் வழங்க நிலங்களை விட்ட செய்தியையும் தெரிவிக்கின்றன. இராசேந்திரன் காலக் கல்வெட்டில் அரசன் கோயிலுக்கு நிலமளித்த செய்தியையும் அவன் மனைவியான அரசி சுவாமிக்கு தங்க நகைகளும் அபிஷேகத்திற்கு வெள்ளிக் கவசமும் அளித்த செய்திகளையும் தெரிவிக்கின்றது. ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் மற்றும் திருவுந்தியார் எனும் சித்தாந்த சாஸ்திர நூலைப்பாடிய உய்யவந்த தேவநாயனார் இவ்வூரில் அவதரித்தவர்கள். அகத்தியர் ஜடாயு வழிபட்டிருக்கிறார்கள். சடாயு வழிபட்டு பேறு பெற்றத் தலம். திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள் பாடியுள்ளார்.










போதேந்திர சரஸ்வதி சுவாமிகள்
போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் போதேந்திராள் என்றும் அழைக்கப்பட்டார். கிபி 1610 இல் கன்வ கோத்திரத்தில் பிறந்தார். அவரது தந்தை கேசவ பாண்டுரங்க யோகி. தாய் ஸ்ரீமதி சுகுணா பாய். இவர் பிறந்ததும் புருஷோத்தமன் என்ற நாமத்தை வழங்கினார்கள். காஞ்சி காமகோடி மடத்தின் 58 வது பீடாதிபதியான விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் உதவியாக இருந்து வந்தார் பாண்டுரங்கன். ஒரு நாள் மடத்துக்கு பாண்டுரங்கன் புறப்படும் போது நானும் வருவேன் என்று புருஷோத்தமன் அடம் பிடித்தான். எனவே ஐந்தே வயதான புருஷோத்தமனை ஸ்ரீமடத்திற்கு அழைத்துச் சென்றார். பீடாதிபதியைக் கண்டவுடன் குழந்தை நமஸ்காரம் செய்தது. சுவாமிகளும் அதனுடைய தெய்வீகத் தன்மையைப் புரிந்துக் கொண்டு இந்தக் குழந்தை இங்கேயே இருந்து எல்லாம் படிக்கட்டும் என்று சொல்லிவிட்டார். அன்றுமுதல் புருஷோத்தமன் காஞ்சி மடத்திலேயே வளர்ந்து வந்தாலும் தினமும் பெற்றோர்களை சந்தித்து நமஸ்காரம் செய்து ஆசிகளை பெறுவார். உபநயனம் வேதம் வேதாந்தம் இவைகளை திறம்படக் கற்றார். அனைத்தும் கற்ற பிறகு ராம நாம ஜபம் சிறந்தது என்று அறிந்தார். அன்று முதல் 1,08,000 நாம நாமத்தை ஜெபிப்பதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டு தினமும் ஜெபித்தார்.
காஞ்சி காமகோடி பீடத்தின் 58 ஆவது பீடாதிபதி விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1638 ஆம் ஆண்டு புருஷோத்தமனுக்கு ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி என்று பெயர் கொடுத்து இளைய பீடாதிபதி ஆக்கினார். கபீர்தாஸ், துளசிதாஸ், மீரா பாய், ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு, ஸ்ரீ நாம தேவா, ஸ்ரீ ஏக்நாத் மற்றும் ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ராமா நாமத்தைப் பரப்பும்படி ஸ்ரீ போதேந்திராளுக்குக் கட்டளையிட்டார். போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி மடத்தின் 59 ஆவது பீடாதிபதி ஆனார். ஶ்ரீ ராம நாம பாராயணத்தின் பலனை சாதாரண மக்களும் அடைந்து உய்ய வேண்டும். அதுவே இந்த கலியுகத்தில் மோட்ச சாதனம் என்று மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக 1685 ஆம் ஆண்டில் காஞ்சி பீடத்தை தனது இளைய பீடாதிபதிக்கு விட்டுவிட்டு பீடத்தையும் துறந்து சந்நியாசியாக கிராமம் கிராமமாகச் சென்று நாம பிரசாரம் செய்து வந்தார். அவரது குருவின் ஆணையின்படி ராம நாம சித்தாந்தம் செய்து அது மோட்சத்தை கொடுக்கும் என்று சொல்லி அதற்கு ஆதாரமாக நாம பிரபாவத்தை நிரூபிக்கும் விதமாக எட்டு கிரந்தங்களை அவர் செய்துள்ளார். தஞ்சாவூரின் அருகே பல கிராமங்களை ராம நாம ஜெபம் செய்யும் கிராமங்களாகவும் மாற்றியிருந்தார்.
ஒரு சமயம் மன்னார் குடியின் அருகே உள்ள பெரம்பூர் என்ற கிராமத்தில் தங்கி இருந்தார் போதேந்திரர். அப்போது ஒருவர் இவரது தேஜசையும் காம்பீரத்தையும் கண்டு இவர் ஒரு உண்மையான மகாத்மா என்று உணர்ந்து வணங்கி நின்றார். நிமிர்ந்து பார்த்தார் சுவாமிகள். சுவாமிகள் எமது இல்லத்தில் உணவி சாப்பிட வேண்டும் என்றான். சுவாமிகள் அவரை ஏற இறங்கப் பார்த்தார். நான் எங்கும் உணவு சாப்பிட செல்வதில்லை. எமக்கு என்று விதிமுறைகளை வைத்திருக்கிறேன் என்றார். நீங்கள் உணவுவு சாப்பிட உறுதியாக வர வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமோ சொல்லுங்கள் அப்படியே செய்கிறேன் என்றான். அதற்கு சுவாமிகள் நான் ராம நாம உணவுக்குத்தான் வருவேன் என்றார். புரியவில்லையே சுவாமி என்றான். ராமநாம ஜபத்தை செய்பவர்கள் வீட்டில் மட்டுமே உணவு சாப்பிட வேண்டும் என்று விதிமுறை வைத்திருக்கிறேன். நீ செய்வாயா என்றார். சுவாமிகள் நீங்கள் எனக்கு அந்த மந்திரத்தை உபதேசம் செய்யுங்கள் உறுதியாக ஜபம் செய்ய ஆரம்பித்து விடுகிறேன் என்றான்.
ராமநாம உபதேசம் அவருக்கு செய்துவிட்டு நாளை உனது வீட்டிற்கு உணவிற்கு வருகிறேன் என்று வாக்கு கொடுத்தார் சுவாமிகள். மறுநாள் ஒரு பெரிய சந்நியாசி உணவிற்கு வருகிறார் என்று உறவினர்கள் நண்பர்கள் என்று வீடு திருவிழா போல் காணப்பட்டது. சுவாமிகள் வந்ததும் பூர்ண கும்பம் கொடுத்து பூஜைகள் செய்தனர். பிறகு உணவிற்கு இலை போடப்பட்டது. சுவாமிகள் அமர்ந்ததும் அங்குள்ளவர்களை கவனித்தார். 3 வயது நிரம்பிய ஒரு சிறு குழந்தை தாயின் பின்னால் நின்று கொண்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. சுவாமிகள் குழந்தைக்கும் ஒரு இலை போடுங்கள் குழந்தையும் எம்மோடு சாப்பிடட்டும் என்று சொல்லி விட்டுக் குழந்தையை இங்கே வா குழந்தாய் என்று அழைத்தார். குழந்தை எந்தச் சலனமும் இன்றி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒன்று வர வேண்டும் அல்லது வரமாட்டேன் என்று சொல்ல வேண்டும். தலையையாவது அசைக்க வேண்டும். சலனமே இன்றிப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை ஒன்றும் புரியாமல் பார்த்துவிட்டு மீண்டும் இங்கே வா குழந்தாய் என்றழைத்தார் சுவாமிகள். அழைத்தவர் சுவாமிகளை வணங்கிவிட்டுச் சொன்னார். சுவாமி அவனுக்குக் காதும் கேக்காது. வாயும் பேசமாட்டான் அவனுக்கு தாங்கள் சொல்வது எதுவும் புரியாது என்றார். சுவாமிகள் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. அதைக் கண்டதும் அழைத்தவர் சுவாமி நீங்கள் மகா ஞானி அனைத்தும் தெரிந்தவர் உங்களது கண்களில் இருந்து கண்ணீர் வரக் கூடாது. சந்நியாசி கண்ணீர் பூமியில் விழுந்தா பூமிக்கே ஆகாது. எங்க வினை நாங்க அனுபவிக்கறோம். தயவு செய்து உணவை சாப்பிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
சுவாமிகள் அன்று காலைதான் ஒருவன் நாம நாமத்தைச் சொன்னாலும் கேட்டாலும் ஒரே பலன். எனவே நாமம் வாயில் வரா விட்டாலும் கூட பரவாயில்லை. யாராவது சொல்வதைக் கேட்டாலும் போதும். அந்த ஜீவனுக்கு நற்கதி நிச்சயம். காதுகளை பகவான் மூடி வைக்கவில்லை. எனவே யாரோ சொல்லும் நாமம் தானாய்க் காதில் விழுந்தாலும் போதும் என்று உபன்யாசம் செய்திருந்தார் சுவாமிகள். காதும் கேட்காது வாயும் பேசாது என்றால் தனது சித்தாந்தத்திலிருந்து இவனைப் போன்ற ஜீவன்கள் தப்பி விடுவார்களே அவர்களுக்கு நற்கதி கிட்டாமல் போய்விடுமோ என்று மிகவும் வருந்தி அந்த குழந்தைக்காக மானசீகமாக பிரார்த்தனை செய்தார் சுவாமிகள். அவருக்குள்ள நியமப்படி உணவை ஏழு கைப்படி மட்டும் சாப்பிட்டு கிளம்பிவிட்டார் சுவாமிகள். சுவாமிகளை வழி அனுப்புவதற்காக அவரோடு வீட்டிலிருந்தோர் அனைவரும் வீதி முனை வரை சென்றார்கள். வீட்டில் அந்தக் குழந்தை தனியாக விடப்பட்டான். குழந்தைக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது. காலையிலிருந்து சந்நியாசி உணவருந்த வருவதால் வேலைப்பணியில் அவனுக்கு யாரும் உணவு கொடுக்கவில்லை. சுவாமிகள் உணவு சாப்பிட்ட இலையில் அவர் 7 கைப்பிடி சாப்பிட்டது போக மீதி அத்தனையும் அப்படியே இருந்தன. பசியினால் குழந்தை இலையிலிருந்த பதார்த்தங்களை எடுத்து உண்ண ஆரம்பித்தான். சுவாமிகளை வழியனுப்பிவிட்டு வந்த பார்த்தவர்களுக்கு தாங்கள் பார்ப்பது கனவா நினைவா என்று ஒன்றும் புரியவில்லை. அவர்கள் கண்ட அந்த அற்புத காட்சி. வீட்டின் கூடத்தில் அந்தக் குழந்தை இரண்டு கைகளையும் உயரத் தூக்கிக் கொண்டு நர்த்தனம் செய்து கொண்டே மதுரமான குரலில் ராம நாமத்தை இசைத்துக் கொண்டிருந்தான். இந்த சம்பவம் 1662 ஆம் ஆண்டில் நடந்தது. ஒரு உண்மையான ஞானி உண்ட அமுது அவரது ஸ்பரிசம் அவரது பிரார்த்தனை வாக்கு பார்வை அனைத்துமே மிகவும் புனிதமானவை. ஒருவருக்கு ஞானத்தை வழங்கவும் கர்ம வினைகளை முற்றிலும் அழித்து அகற்றவும் ஞானிகளுக்கு மகான்களுக்கும் சாத்தியம்.
போதேந்திரருக்குக் குழந்தைகள் என்றால் அளவில்லாத மகிழ்ச்சி. கோவிந்தபுரத்திற்கு அருகிலுள்ள காவேரியில் தினமும் நீச்சல் அடித்து சாகசங்களைச் செய்து காட்டிக் குழந்தைகளை மகிழ்விப்பார். ஒரு கோடைக்காலத்தில் 1692 ஆம் ஆண்டு பிரஜோத்பதி ஆண்டு புரட்டாசி மாத முழு நிலவு நாளில் போதேந்திரர் தஞ்சாவூர் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் காவேரி நதிக்கரையில் போதேந்திரர் ஆற்று மணலிலே ஒரு குழியைத் தோண்டி அதிலே அமர்ந்து கொண்டு சிறுவர்களைப் பார்த்து இதை மண்ணால் மூடிவிட்டு செல்லுங்கள். நாளை வந்து தோண்டிப் பாருங்கள். பிறகு நான் வருகிறேன் என்றார். குழந்தைகளும் விபரீதம் தெரியாமல் மண்ணைப் போட்டு மூடிவிட்டு சென்று விட்டார்கள். போதேந்திரரைக் காணவில்லை என்று ஊர் மக்கள் சொன்ன பிறகு தான் குழந்தைகள் அவர்களிடம் நடந்ததைச் சொன்னார்கள். குழந்தைகள் காட்டிய இடத்தை தேடி தோண்ட ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு அசரீரீ கேட்டது. நான் இங்குதான் மண்ணிலே ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். என்னைத் தொந்தரவு செய்ய வெண்டாம். இதற்கு மேலே ஒரு பிருந்தாவனம் அமைத்து ஆராதனை செய்யுங்கள் என்று ராம நாமத்திலே ஐக்கியமாகி விட்டார். இது அவருடைய ஜீவசமாதியாகும். சிறிது வருடத்தில் காவேரி வெள்ளத்தில் பராமரிப்பு இன்றி இந்த இடம் மறந்து மறைந்து போனது. 1803 ஆம் ஆண்டில் மருதநல்லூர் சத்குரு சுவாமிகள் இங்குள்ள நீரில் இருந்து ராம நாமம் ஒலிப்பதைக் கேட்டு தனது சீடரான சரபோஜி மன்னரிடம் சொல்லி நதியைத் திசை திருப்பச் செய்து அந்த இடத்தைக் கண்டுபிடித்தார். இன்றும் இந்த ஜீவசமாதிக்கு ஆராதனை நடந்து கொண்டிருக்கிறது. இப்போதும் ஸ்ரீ போதேந்திராள் அதிஷ்டானத்தில் சுவாமிகளின் ராம நாமம் தகுதியானவர்களுக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது. இவர் எழுதிய பகவன்நாம ரசோதயம், பகவன்நாம ரஸார்ணவம், பகவன்நாம ரஸாயனம் போன்ற நூல்கள் புகழ் பெற்றவை.




வராக நரசிம்மர்
வடக்கு ஆந்திர மாநில கடற்கரைப் பிரதேசமான விசாகப்பட்டினத்திலிருந்து 15 கிமீ தூரத்தில் 244 மீட்டர் உயரமுள்ள சிம்மாசலம் என்ற குன்று உள்ளது. இந்த குன்றின் மீது பெரிய அளவில் வராக நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. மடக்கிய கால்கள் காட்டுப் பன்றி முகம் சிங்க வால் மனித உடலுடன் காட்சியளிக்கும் இவர் இரணியனை மடக்கிய முன்காலில் கிடத்தி அவன் வயிற்றைத் தன் இரு கரங்களால் கிழிக்கும் நிலையிலும் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும் உள்ளார். இக்கோயில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவர் வராக நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது. இவரும் மூலவரைப் போலவே அமைந்திருக்கிறார். மூலவர் வராக நரசிம்மர் வருடம் முழுவதும் கெட்டியான சந்தனத்தால் காப்பிடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவர் உக்கிர நரசிம்மராக இருப்பதால் வருடம் முழுவதும் சந்தனக் காப்பு சாற்றப்படுகிறது. ஒரு நாள் தவிர வருடம் முழுவதும் சந்தனத்துக்குள் இருக்கிறார். பார்க்க சிவலிங்கம் போலவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அட்சய திரிதியை அன்று ஒருநாள் மட்டும் மூலவர் மீதுள்ள சந்தனக் காப்பு முழுவதும் அகற்றப்பட்டு நிஜ ஸ்வரூபத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் வராக நரசிம்மர். அன்றைய தினம் இத்தலத்திற்கு வரும் ஏராளமான பக்தர்கள் இங்குள்ள காந்தாரா நீர் வீழ்ச்சியுடன் கூடிய புஷ்கரணியில் நீராடி விட்டு கோயிலுக்கு வந்து வராக நரசிம்மரைத் தரிசிக்கிறார்கள். ஆந்திர மாநில திவ்ய ஷேத்திரங்களில் இந்தக் கோயிலும் ஒன்று.






குரு பக்தி
திருப்பதியில் அடிவாரத்தில் சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராமானுஜர். அப்போது மோர் விற்றுக் கொண்டிருந்த ஒரு பெண்மணி அந்த வழியாக சென்றாள். சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்று ஆசை தோன்றியது. ஆனால் குருநாதர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில் மோர் விற்பவளைக் கூப்பிட்டால் பாடத்தின் மேல் கவனம் இல்லாதது போல் ஆகிவிடும் என்பதால் மோர் ஆசையைத் துறந்து பாடத்தில் கருத்தாக இருந்தார்கள். சீடர்களின் கூட்டத்தை பார்த்ததும் நல்ல வியாபாரம் ஆகிவிடும் என்று தீர்மானித்து மோர்க்காரப் பெண்மணி இந்த இடத்தில் பானையை இறக்கி வைத்து ராமானுஜருக்கு வணக்கத்தை செலுத்தினாள். ராமானுஜர் சீடர்களின் ஆசையை பார்த்து கண்ணசைக்க ஆசையில் இருந்த சீடர்களுக்கு மோர் பானையைப் பார்த்ததும் எனக்கு எனக்கு என்று கேட்டு வாங்கிக் குடித்தனர். எல்லோருக்கும் மோர் கொடுத்து முடித்ததும் நிறைந்த மனத்துடன் ராமானுஜரை பார்த்தாள். குரு பக்தியின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட காரணத்தால் மோருக்கான காசை கேட்டுப்பெற வேண்டும் என்பதையும் மறந்து நின்றாள். ராமானுஜர் அந்தப் பெண்மணியைப் பார்த்து அம்மா நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன? என்று கேட்டார். ராமானுஜரை நமஸ்கரித்த அந்தப் பெண் மோருக்கு பணம் வேண்டாம் சாமி. அதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போறேன்? அதற்கு பதிலாக பெருமாள் இருக்கக் கூடிய பரமபதத்தை அடையணும் மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க. மகிழ்ச்சியுடன் செல்வேன் என்றாள்.
ராமானுஜர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஆசார நியமங்களோ சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள் மோட்சம் வேண்டும் என்கிற ஆசை தோன்றியது ஆச்சரியம். இப்படி ஒரு கோரிக்கையை அவள் வைப்பாள் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஒரு சில நிமிட இடைவெளிக்குப் பிறகு கவலைப்படாதம்மா உன்னோட நல்ல குணத்துக்கு நிச்சயம் மோட்சம்தான் கிடைக்கும். மகழ்ச்சியுடன் சென்று வா என்றார். அந்தப் பெண்மணி விடவில்லை. உங்கள் வாக்கு அப்படியே பலிக்கட்டும் சாமி. ஆனா அந்த மோட்சம் எனக்குக் கிடைக்கறதுக்கு ஒரு வழியைக் காட்டுங்க. நான் அந்த வழியில் செல்கிறேன் என்றாள். ராமானுஜர் சிரித்தார். அம்மா நீ நினைப்பதுபோல் மோட்சத்துக்கு ஒரு வழியைக் காட்டுவதோ மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ எனக்கோ இங்கு கூடி இருக்கின்ற சீடர்களுக்கோ இல்லை. மேலே திருமலையில் ஏழுமலைக்குச் சொந்தக்காரன் ஒருவர் இருக்கிறார் அவரிடம் போய்க் கேள். உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவருக்குத் தான் உண்டு என்றார். இதற்குப் பிறகும் அந்த மோர்க்காரப் பெண்மணி நகர்கிற வழியாக இல்லை. சாமி மேலே இருக்கிற ஏழுமலையான் கிட்ட போய் எத்தனையோ தடவை மோட்சம் வேணும் மோட்சம் வேணும்னு கேட்டுப் பாத்துட்டேன். ஆனா அங்கே இருக்கிற பெருமாள் வாயைத் திறந்து எதுவும் பதில் சொல்லவில்லையே என்றாள்.
பெருமாளுக்கு நிறைய வேலை இருக்கும். அதனால் இதை ஒரு குறையா சொல்லிக் கொண்டு இருக்காதே. உன் மனதில் படுவதை நீ கேட்க வேண்டும் என்று நினைப்பதை அவரிடம் கேட்டுக் கொண்டே இரு. ஒருநாள் நிச்சயம் உனது பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார் என்றார் ராமானுஜர். ராமானுஜரின் வார்த்தையை கேட்டதும் உங்களை நம்புகிறேன். உங்களது வார்த்தையை நம்பகிறேன். உங்களைப் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை வந்திருக்கிறது என்று உற்சாகத்துடன் கூறிவிட்டு சாமி எனக்கு மோட்சம் தர வேண்டும் என்று சொல்லி பெருமாள்கிட்ட சிபாரிசு செய்து நீங்கள் ஒரு ஓலை எழுதிக் கொடுங்கள் என்றாள். உங்களை மாதிரி பெரியவங்க ஓலை கொடுத்தா இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டு பெருமாள் எனக்குப் பதில் சொல்வார் என்று நம்புகிறேன் ஆகவே கொடுங்கள் என்று கேட்டாள். அவள் அபரிமிதமான நம்பிக்கையோடு கேட்பதால் அவள் கேட்பதை மறுக்க இயலாது என்று உணர்ந்த ராமானுஜர் ஒரு சீடரிடம் ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். அதைக் கேட்டதும் சீடர்களுக்கு வியப்பு தாங்க முடியவில்லை என்றாலும் அவர் கேட்டதை எடுத்துக் கொண்டு வந்து தந்தனர். உண்மையாகவே திருமலை பெருமாளுக்கு சிபாரிசு செய்து குருநாதர் ஓலை எழுதப் போகிறாரா இல்லை அந்தப் பெண்மணியை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஏதேனும் செய்கிறாரா? என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாகி ராமானுஜரைச் சுற்றி அமர்ந்து கவனிக்கலானார்கள். மேலே அண்ணாந்து திருமலையைப் பார்த்து இருகரம் கூப்பிவிட்டு ஓலையில் பெறுநர் முகவரியை எழுதும் இடத்தில் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் திருமலை என்று குறிப்பிட்டுவிட்டு பெண்மணியின் கோரிக்கையை எழுதத் தொடங்கினார் ராமானுஜர். எழுதி முடித்த பின் ஓலையின் கீழே தன் கையெழுத்தையும் போட்டு அதை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார்.
ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலையில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை சீடர்களும் படித்துப் பார்த்தனர். மோர் விற்பனை செய்யும் பெண்ணுக்கு மோட்சம் கிடைக்க அனுக்ரகம் செய் என்று சிபாரிசு செய்து ஓலையில் எழுதப்பட்டிருந்தது. ஓலையை வாங்கிய அடுத்த விநாடி அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலையை நோக்கிப் புறப்பட்டாள். மலை ஏறி பெருமாள் சன்னிதிக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் கொடுத்தாள். பெண்மணியை மேலும் கீழும் பார்த்து இது என்ன ஓலை? என்று குழப்பத்துடன் கேட்டனர் அர்ச்சகர்கள். அவர்களிடம் முழு விவரத்தையும் சொன்னாள் அவள். ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலை என்று அறிந்ததும் மறுப்பு ஏதும் சொல்லாமல் அதைக்கொண்டு போய் பெருமாளின் முன்னால் நீட்டினர் அர்ச்சகர். உடனே தம் வலக் கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டார் பெருமாள். பிறகு உனக்கு மோட்சம் தந்தேன் என்று அந்தப் பெண்ணைப் பார்த்துப் பெருமாள் அசிரீரீயாக அருளினார். அடுத்த கணம் வானில் இருந்து பிரகாசமாக ஒரு புஷ்பக விமானம் வந்தது. அதில் இருந்து விஷ்ணு தூதர்கள் இறங்கினர்கள். மோர் விற்கும் பெண்மனியை தங்களுடன் ஏற்றிக் கொண்டு வைகுந்தம் புறப்பட்டார்கள்.
தெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும்.

அர்த்தநாரீஸ்வரர்
முதல் படம்: அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் 400 ஆண்டுகளுக்கு முன்பு கையால் வரையப்பட்ட ஓவியம். அருகில் பிருங்கிரிஷி முனிவர். இரண்டாவது படம்: AI மூலம் உருவாக்கப்பட்ட படம்.
பிருங்கிரிஷி முனிவர் சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபட மாட்டேன் என்கிற கொள்கை கொண்டவர். இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள். நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அர்த்தநாரீஸ்வரராய் நின்றனர். அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து சிவனை மட்டும் வலம் வந்தார். இதை கண்ட சக்தி பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். சிவபெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திர்ப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்றார். அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்று அர்த்தநாரீஸ்வரர் கோலத்தை பிருங்கிரிஷி முனிவர் வழிபடும் காட்சி. ஊர் திருச்செங்கோடு.

அரசாட்சி முறை
பாடல் #247: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)
தத்தம் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண்ட மும்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே.
விளக்கம்: உயிர்கள் அவரவர்கள் ஏற்றுக்கொண்ட சமய வழிகளின் நெறிமுறைகளின் படியும் ஒழுக்கத்தின் படியும் நடக்கத் தவறியவர்களை அனைத்து சமய வழிகளின் தலைவனாகவும் அனைத்து உயிர்களின் தந்தையாகவும் இருக்கும் சிவபெருமான் தாம் வழங்கிய சிவாகமத்தில் கொடுத்துள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப எந்தவித தண்டைனையானாலும் அவர்களின் ஆன்மாவிற்கு தண்டனைகளை தாங்கும் பக்குவத்தை கொடுத்து பின் தண்டனைகளையும் கொடுத்து மீண்டும் அவர்கள் அந்த தவறை செய்யாதபடி அவர்களை சீர் படுத்துவான். ஆனாலும் அவர்கள் எடுத்திருக்கும் இந்தப் பிறவியில் இருக்கும் உடலுக்கு வேண்டிய தண்டனைகளைக் கொடுத்து அவர்களைத் திருத்துவது ஒரு நாட்டை ஆளும் அரசனது கடமையாகும்.
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. – திருக்குறள்
விளக்கம்: குற்றத்தை ஆராய்ந்து மீண்டும் அது நிகழாதவாறு தகுந்த தண்டனை வழங்குவதே அரசனின் கடமை ஆகும்ஆகும்
கோர்ட்டில் ஒரு திருடன் திருட்டு வழக்கிற்கான நிறுத்தப்பட்டான். அவனிடம் நீதிபதி திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வருகிறாயே நீ திருந்தவே மாட்டியா? என்று கேட்டார். எத்தனை தடவை திருடினாலும் அதே தண்டனையே கொடுக்கறீர்கள் நீங்கள் சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா? என்றான் திருடன். நீதிபதி யோசித்தார். அவனின் கேள்வி நியாயமாகப்பட்டது. திருடனை சிறைச்சாலைக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்த நீதிபதி அவருக்கு சில கட்டளைகளை கொடுத்தார்.
நீதிபதியின் கட்டளைப்படி ஜெயிலர் பிக்பாக்கெட் அடித்த பத்துப் பேரை திருடனின் ஜெயில் அறையில் வைத்தார். திருடனிடம் வந்த ஜெயிலர் இந்த அறையில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த அறைக்கு அருகில் ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு என்றார். திருடன் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான். ஜெயிலர் மற்ற பத்து பேரைத் தனியாக அழைத்தார். திருடன் வேலை செய்துவிட்டு கூலியை வாங்கிக் கொண்டு சாப்பிட கேண்டின் செல்லும் வழியில் அவனிடம் உள்ள பணத்தை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினமும் இந்த வேலையைச் செய்யணும். யார் எப்ப எப்படி பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது என்றார். அவர்கள் ஜெயிலரின் கட்டளையை ஏற்றார்கள். முதல் நாளே திருடன் பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் உணவு தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் சிறிதளவு உணவு சாப்பிடக் கொடுத்தார்கள். அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டு பரிதாபப்பட்டாலும் வேறு வழியில்லை. அவனின் பணத்தை திருடா விட்டால் ஒன்பது பேருக்கும் உணவு கிடைக்காது. பத்து பேர் பட்டினியில் கிடப்பதை விட ஒருத்தன் பட்டினி கிடப்பது பரவாயில்லை என்று அனைவரும் அமைதியாக இருந்து விட்டார்கள். தினமும் இப்படியே நாள் கடந்தது. தினமும் அவர் எவ்வளவு வேலை பார்த்து சம்பாதித்தாலும் அவனுக்கு கிடைத்தது உயிர் வாழத் தேவையான ஒரு வேளை சிறிதளவு உணவு மட்டும். அவன் விடுதலை ஆகும் நாள் வந்தது.
நீதிபதி அன்று திருடன் இருக்குமிடம் வந்தார். நீ கேள்வி கேட்டபடி சட்டத்தையோ தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது? என்றார். ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு வினாடியில் திருடிக்கொண்டு செல்வது எவ்வளவு அக்கிரமம்னு இப்போது புரிகிறது. இனி திருட எனக்கு மனசு வராது என்றான் திருடன். மற்ற பத்து திருடர்களும் திருடன் பசியில துடிப்பதைப் பார்க்க சகிக்கவில்லை. செத்தாலும் இனிமேல் திருட மாட்டோம் என்றார்கள்
நீதிபதி திருமந்திரம் மற்றும் திருக்குறளில் வள்ளுவர் சொன்னதை இங்கு செய்தார்.
குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.

யாத்ரா தானம்
இராமர் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற கோட்பாட்டை மேற்கொண்டு கானகம் செல்ல தயாரானார். கானகம் சென்று விடுவதால் தன்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் தேவைப்படுபவர்களுக்கு தானம் கொடுக்க முடிவு செய்து அனைத்தையும் தானமாக கொடுத்தார். யாத்திரை செல்வதற்கு முன்பு தன்னிடம் உள்ள பொருட்களை தேவைப்படுபவர்களுக்கு கொடுப்பதினால் இதற்கு யாத்ரா தானம் என்று பெயர் வந்தது. அன்று முதல் வந்ததுதான் யாத்ராதானம். யாத்ரா என்ற வார்த்தை வடசொல். தமிழில் யாத்திரை என்று பெயர். யாத்திரை செல்லும் சமயம் நாம் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு பயணம் செய்கிறோம். அப்போது பயணத்தில் தேவைப்படுகின்ற பொருட்களை மட்டுமே கொண்டு செல்கிறோம். மீதி பொருட்களை வீட்டில் பூட்டி விட்டுத்தான் செல்கிறோம். வீட்டில் பூட்டி வைத்திருக்கும் பொருட்கள் பயணத்திற்கு பயன்படாது. அது போலவே இறைவன் இருக்கும் இடத்திற்கு பயணம் செய்ய புண்ணியம் மட்டுமே தேவை. நம்மிடம் இருக்கும் எந்த பொருட்களும் இறைவன் இருக்கும் இடத்திற்கு செல்லும் பயணத்திற்கு உதவாது. நம்முடைய இறுதி காலத்திற்கு பின்னும் இந்த பொருட்கள் நம்முடன் வருவதுமில்லை. ஆகவே தானங்கள் செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொண்டல் அந்த புண்ணியம் நம்மை இறைவனிடத்தில் அழைத்துச் செல்லும்.
இராமர் தன்னை பார்க்க வரும் அனைவருக்கும் அவர்கள் விரும்பிய பொருட்களையும் தான் அணிந்திருந்த உடை உட்பட தன்னிடம் உள்ள எந்த பொருளை கேட்டாலும் அனைத்தையும் வாரி வழங்கினார். அயோத்தி வாசிகள் பலரும் தானம் பெற்றனர். தானத்தை முடிக்கும் தருவாயில் வயது முதிர்ந்த ஒரு அந்தணன் வந்தார். அவன் பெயர் திரிசடன். அவருக்கு ஒரு மனைவியும் சில பிள்ளைகளும் இருந்தனர். அன்றாடம் வயல்வெளியில் வரப்பில் சிந்தி இருக்கும் நெல் மணிகளை எடுத்து அதிலே ஜீவனம் செய்து வந்தார். இராமர் கானகம் செல்லும் முன் தனது உடைமைகளை எல்லாம் யாத்ரா தானம் செய்வதை கேள்விபட்ட அவரது மனைவி ஓடோடி கணவனிடம் சென்று இராமர் கானகம் செல்லும் முன் தனது பொருள்களை எல்லாம் யாத்ரா தானம் செய்கிறார். நீங்களும் அவர் இருக்குமிடம் என்று ஏதாவது பொருள் தானமாக வாங்கி வாருங்கள். நிச்சயம் தருமமே வடிவம் தாங்கி வந்திருக்கும் அந்த அண்ணல் நம் துன்பங்களை எல்லாம் தீர்ப்பார். ஆகவே சென்று வாருங்கள் என்றாள். அதற்கு அந்தணனும் ஒப்புக் கொண்டு வேக வேகமாக அரண்மனையை சென்றடைந்தான். அங்கே தான தர்மங்களை வழங்கிக் கொண்டிருந்த இராமரை கண்டார். இராமரை பணிந்து தங்களின் புகழ் இப்புவி முழுவதும் பரவியுள்ளது. நான் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவன். நானும் என் குடும்பமும் தங்களது ராஜ்ஜியத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் வயல் வரப்பில் தானே விழும் நெல்லை நம்பியே வாழ்ந்து வருகிறோம். என்மீது கருணைக் கொண்டு உதவ வேண்டும் என வேண்டி நின்றான். உடனே ராமர் அன்பரே சற்று முன் வந்திருக்க கூடாதா? என்னுடைய விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் அனேகருக்கு முதலிலேயே கொடுத்து விட்டேன். தற்பொழுது என்னிடம் மிஞ்சி இருப்பது இந்த பசுக்கள் மட்டுமே. உங்களுக்கு எவ்வளவு பசுக்கள் வேண்டும் என்று கேட்டார்.
இராமரின் கேட்டதும் நூறு பசுக்கள் கேட்கலாமா? இருநூறு பசுக்கள் கேட்கலாமா? அல்லது அதற்கும் மேலும் கேட்கலாமா? என்று அந்தணன் யோசித்தான். பின் புத்திசாலிதனமாக எனது வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியுடன் வாழ எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு நீங்களே கொடுங்கள் என்று இராமரின் விருப்பத்திற்கு விட்டு விட்டான். இரமரும் அந்தணரே உமது கையில் உள்ள கொம்பை வீசி எறியுங்கள். அது எவ்வளவு தூரம் செல்கின்றதோ அது வரை உள்ள பசுக்களை அனைத்தையும் உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள் என்றார். இதை கேட்ட அந்தணன் விழிகள் மலர்ந்தன. நடக்கவும் சக்தியற்ற நிலையிலிருந்த அவன் நிமிர்ந்து நின்றான். தன் இடுப்பில் இருந்த வஸ்திரத்தை அவிழ்த்து அதை வரிந்து கட்டிக் கொண்டான். தனது முழு பலத்தையும் திரட்டி ஒரு சுற்று சுற்றி தனது கையில் இருந்த கொம்பை வீசி எறிந்தான். அது சரயு நதி கரைக்கு அருகில் சென்று விழுந்தது. அவனுடைய பேராசையை எண்ணி இராமர் சிரித்துக் கொண்டார். பொருளாசை தான் மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது? சக்தியற்ற மனிதனையும் பொருளானது எத்தகைய சக்தி வாய்ந்தவனாக மாற்றுகிறது என்பதை தெரிந்துக் கொண்டார். உமது கொம்பு விழுந்த இடம் வரை உள்ள பசுக்களை எல்லாம் உங்களுக்கே வழங்குகிறேன் பெற்று செல்லுங்கள் என்றார். அந்த திரிசடன் என்ற அந்தணன் ராமரை பலவாறாக போற்றி புகழ்ந்து பாராட்டினான். யாத்திரை இனிதே முடிய வாழ்த்தினான். அவரிடம் விடை பெற்றுக் கொண்டு இராமர் வழங்கிய பசு கூட்டங்களுடன் தனது வீட்டை அடைந்தான். பின் மனைவி மக்களுடன் சுகமாக வாழ்ந்தான்.
இதன் அடிப்படையில் நம் முன்னோர்கள் வெளியூர் பயணம் அல்லது கோயில்களுக்கான யாத்திரை அல்லது நல்ல காரியங்களுக்கோ செல்லும் முன் தங்களால் முடிந்த பொருள்களை பழ வகைகளை யாத்ரா தானம் செய்து விட்டு யாத்திரை மேற்கொள்வார்கள். அதனால் எந்த ஒரு துன்பமும் இல்லாமல் பயணம் இனிதே முடிந்து ஊர் திரும்புவர்கள். அந்தணரிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால் இவராக கேட்டிருந்தால் 100 அல்லது 200 பசுக்கள் மட்டுதே கேட்டிருப்பார். அவை மட்டுமே அவருக்கு கிடைத்திருக்கும். ஆனால் இராமரிடமே எனக்கு என்ன வேண்டுமோ நீங்களே கொடுங்கள் என்று கேட்டதினால் அவனுடைய சக்திக்கு ஏற்றார்போல் அதிகமான பசுக்களையே கொடுத்தார். அதுபோல் நாமும் இறைவனிடம் பிரார்த்திக்கும் போது அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்பதை விட எனக்கு மகிழ்ச்சி கொடுக்க கூடியது எதுவோ நன்மை கொடுக்க கூடியது எதுவோ அதனை எனக்கு கொடுங்கள் என்று பிரார்த்தனை செய்வது சிறப்பு. குழந்தைக்கு எது நல்லது என்று தாய்க்கு மட்டுமே தெரியும். அதுபோல் நமக்கு எது நன்மை தரும் எது மகிழ்ச்சி கொடுக்கக் கூடியது கூடியது அனைவருக்கும் தாயாக இருக்கும் இறைவனுக்கு மட்டுமே என்று தெரியும்.
