குருநாதர் கருத்துக்கள் #77

கேள்வி: ஆன்மீகத்தில் விடுவது பெறுவது முக்கியமானது என கூறுவோறும் உண்டு. அது எவ்விதம் விடுவது பெறுவது?

ஆன்மீகத்தில் விடுதல் என கூறினால் முதன்மையில் தீயவை யாவையும் விடுதல் வேண்டும் என்கின்ற சட்டம் உண்டு. இதில் எவ்வித விதிவிலக்கும் இல்லை. இரண்டாவதாக சர்வ ஆசைகளையும் விடுதல் வேண்டும். இதற்கு விதிவிலக்கு ஒன்று இறை நாட்டம். மூன்றாவது ஐம்புலன்களினால் நேரிடக்கூடிய கோபதாபங்கள் எண்ணங்கள் என்பதெல்லாம் விடுதல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. இதற்கு விதிவிலக்கு சிறு அளவு ஆகாரமும் நீரும் ஆகும். பெறுதல் என்பது என்ன என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை. முதன்மையில் அறிவு, அறிவை தொடர்வது ஞானம், ஞானத்தை தொடர்வது அருள், அருளை தொடர்வது முக்தி என்கின்ற வரிசையில் செல்லும். மனதில் முன்கூறிய விடுதல்கள் எற்பட அந்த உடலில் இடம் வெறுமையாக இருக்க அந்த வெறுமையான இடத்தில் பெறுதலுக்கூரிய நற்குணங்கள் சென்று நிரம்பிட உடலில் ஓர் விசேஷ ஆனந்தம் காணக்கூடும். இப்பேரானந்தம் அடைந்திட பொலிவு என்கின்ற அத்தேஜசை அடையலாம். மனம் ஓர் நிலைப்பட்டு என்றும் ஆனந்த நிலையில் இருக்கும் இது தான் விடுதல் பெறுதல்.

குருநாதர் கருத்துக்கள் #76

கேள்வி: பல மகான்களின் அருள் கிடைத்தும் ஏன் கடினங்கள் பல வருகின்றன?

துக்கங்கள் துயரங்கள் என தனியாக எடுத்துக் கொண்டால் இது கர்ம விதிகளாகும் இதனை தீர்த்தல் வேண்டும். மகான் என்கின்ற போதிலும் அவரின் கர்மங்களை அவர் தீர்த்தாக வேண்டும் என்பது விதி. இது மட்டுமல்லாமல் நாட்டின் கர்மங்கள் என்று ஒன்றும் உண்டு. இதன் விளைவாக நாட்டில் சேதங்கள், துக்கங்கள், துயரங்கள், இயற்கையின் சீற்றங்கள், மனிதர்களின் கொடுமைகள் என்பதெல்லாம் காணக்கூடும். இதுவே இக்காலத்தில் நடைபெறுகின்றது. இந்நாட்டின் குறிப்பினை கண்டு கொண்டால் இந்நாடு தன் கர்ம நிலைகளை தீர்த்துக் கொள்கின்றது. இத்தகைய நிலையில் ஆங்காங்கு வருங்காலங்களில் நாடுகள் சீர்கெட்டு மறைந்து விடும் என்கின்ற நிலைகளும் உண்டு. இவை அனைத்தும் கர்ம நிலைகளே. இதற்கும் மேலாக யுகத்தின் கர்மம் என்று ஒன்றும் உண்டு. இதுவும் சீராக மீண்டும் சத்திய யுகத்திற்கும் செல்லக்கூடும். இத்தகைய நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் இயன்றளவு நல்லதே செய்தல் வேண்டும். இயன்றளவு கெடுதல் செய்யாது இருத்தல் வேண்டும். இதுவே நாம் கடைபிடிக்க வேண்டியது.

குருநாதர் கருத்துக்கள் #75

கேள்வி: தெய்வங்களை பெருமளவில் நம்பிட காரியங்கள் தடையாகி வீணாக சங்கடம் தருவதேன்?

தெய்வத்தின் கருணை பெரியதாம். சமயங்களில் நாம் ஏற்படுத்திக் கொண்ட ஏற்பாடுகள் நமக்கு தகாததாகவும் சங்கடப் படுத்துவதாகவும் பிற்காலத்தில் துன்பத்தை விளைவிக்க கூடியதாகவும் இருக்க இதனை தவிர்த்திடவே இறைவன் கருணையால் தற்காலிக வருத்தம் தந்தும் பிற்காலம் சிறப்பாக அமைக்கவும் வழி வகுக்கின்றான். மாறாக சிலருக்கு பல வகையில் வாய்ப்புகள் அளித்த போதிலும் அதனை சீராக உபயோகிக்காமல் தாம் நினைப்பதே நடத்தல் வேண்டும் என்கின்ற மனப்பான்மை நிலைத்திட பெரும் வருத்தத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய நிலையில் எது நடந்த போதிலும் அது இறையருள் என்று எடுத்துக் கொண்டால் சிறப்பாகவே அனைத்தும் நடைபெறும்.

உயிரோட்டமுள்ள நந்தி

சிவசைலம் பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் கோவில் திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நந்தி சிலையின் முதுகில் உளியால் ஏற்பட்ட ஒரு தழும்புள்ளது.

ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு விமோசனமாக சிவசைலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு எதிராக ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படி இந்திரன் தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து நந்தி விக்கிரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறினான். சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும் சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான். சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று அங்கிருந்து செல்ல எழ முயற்சித்தது. மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியது. இதனால் நந்தியின் வலது கால் சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும் மற்ற மூன்று கால்கள் வளைந்திருக்கிறது. உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும் இந்த நந்தியின் மீது பார்க்க முடியும். இந்த நந்தியின் உடம்பில் இருக்கும் அணிகலன்களும் அது தன் வாலை பின்னங்கால் வழியாக வளைத்து வைத்திருப்பதும் அதன் அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன.

குருநாதர் கருத்துக்கள் #74

கேள்வி: ஆன்மீக பாதையில் செல்ல குருவிடம் சரணாகதி ஆன பின்பும் ஏன் வெறுமை நிலை ஏற்படுகிறது?

பொதுவாக சரணாகதி நிலையும் குரு அருளும் குருவின் மீது விடா சிந்தனையும் நிலைத்திட அங்கு வெறுமைக்கு இடமில்லை. ஏனென்றால் அத்தகைய நிலை பேரானந்தம் கொடுக்க வேண்டும். இவ்விதம் ஆனந்தம் கொடுக்கும் நிலையில் வெறுமைக்கு அங்கு இடம் இல்லை. அவ்விதம் வெறுமை கொண்டு விட்டால் தவறு உன்னுடையதே. ஏனெனில் இன்னும் முழுமையாக ஆசாபாசங்களை விடாநிலையில் இமயம் ஏறுதல் வேண்டும் என எண்ணம் படைத்தாய். இதனை மாற்றிக் கொண்டு சரணாகதி முழுவதாகவும் பக்திதனை வளர்த்தல் வேண்டும்.

குருநாதர் கருத்துக்கள் #73

கேள்வி: காலம் என்பது என்ன?

இதனை கூறுவது மிகவும் கடினமாகும். மானிட அளவில் ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள் என்றெல்லாம் பிரித்து வைத்துள்ளனர். இருப்பினும் எக்காரியம் எக்காலத்தில் சாதித்தல் வேண்டும் என்பது ஓர் கேள்விக்குறியாகவே எப்பொழுதும் உண்டு. இந்நிலையில் கால வரம்பினை நாம் நிர்ணயிக்க இயலாது. இக்கால வழிகளில் இப்பணிகள் அப்பணிகள் என்று பிரித்து குறிப்பிட்ட காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கணக்கிடுகின்றார்கள். இக்குறிப்பிட்ட காலத்தில் இப் பணி புரிதல் செய்ய வேண்டும் என்றால் அக்காலத்திற்கு ஓர் சக்தி தானாக பெறுதல் வேண்டும். அச்சக்தி இறையருள் ஆகும். இத்தகைய நிலையில் காலத்தை வீணாக்குதல் என்பது ஓர் மாபெரும் குற்றமாகும். குறிப்பாக ஆன்மீக பாதையில் செல்வோர் அங்கும் இங்கும் அலைந்து இருக்கும் இடத்தை விட்டும் ஓடி அலைந்தும் காலத்தை வீணாக்கிட்டால் அப்பொன் போன்ற காலங்கள் மீண்டும் கிடைக்காது என்பதை உணர வேண்டும். இதை யாம் மட்டும் கூறுவது அல்ல. ஆன்மீக நிலையில் உயர்ந்தோரின் கருத்தும் ஆகும். இதனை மனமதில் வைத்து செயல்படுவது நன்றே.

குருநாதர் கருத்துக்கள் #72

கேள்வி: ஆன்மீகத்தில் செல்லும் போது எதில் ஒழுக்கம் வேண்டும்?

ஆன்மீக பாதையில் ஒழுக்கமே அச்சாணி என்பதை மறந்து விட்டீர்கள். ஒழுக்கம் என்பது மன அளவில் வாக்கு அளவில் செயல் அளவில் சிந்தனையில் என்பதெல்லாம் உண்டு என்பதனால் அதிக அளவில் அசையாது அதிக அளவில் பேசாது அதிக அளவில் தகாதோர் உறவு இல்லாமல் இயன்ற அளவில் தனிமை காண மனசுத்தி தானாக ஆகும். மற்ற சுத்திகள் தொடர்ந்து வரும் இருப்பினும் இதற்கு மேலான அர்த்தம் உண்டு. ஒழுக்கம் என்பதற்கு மறு அர்த்தம் என்னவென்றால் ஒழுகி வருவது என்பதும் அர்த்தமாகின்றது. இதனை ஆங்கிலமதில் கூறினால் UNINTERRUPTED FLOW என்றும் கூறுவர். மனமதில் இடைவிடாது இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இது முடியுமா என்று கேட்டால் இதற்கு உதவியாக மந்திரங்கள் சதா மனமதில் உச்சாடனம் (ஜெபிக்க) செய்ய இறை சிந்தனை எக்காலமும் நம்மை விட்டு நீங்காது. அவ்விதம் மனமதில் இறைவனை நீக்கி விட்டால் மனசுத்தம் இல்லை என்பதே பொருளாகின்றது.

குருநாதர் கருத்துக்கள் #71

கேள்வி: நவகிரகங்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்க வழி என்ன?

பரிபூரண சரணாகதி அடைந்தோர்க்கு கிரகங்களை விட்டு செல்ல இயலும். (நவகிரகங்களின் பாதிப்பு வராது) அனைத்து தியானம் ஜபம் என்கின்றவை செய்தலோடு சரணாகதியும் காண எவ்வித பாதிப்புகளும் வராது.

குருநாதர் கருத்துக்கள் #70

கேள்வி: தந்திரம், மந்திரம் எந்த முறை பூஜை சிறப்பானது?

பூஜைகள் மூன்று வகை உண்டு. மந்திரம், தந்திரம் இதற்கு மேலானது மானசீக பூஜை. மனதிற்குள் சொல்லும் மந்திரம் சிறந்தது என்றும் அவ்வழியில் பூஜைகளும் மானசீகமாய் செய்வதே சிறந்தது. இரண்டாவது வழி தாந்திரிக பூஜை. இது மந்திரமது மனதிற்குள்ளும் முத்திரை வழி அதாவது செய்கையின் வழி உணர்த்தும் பூஜையாம். மூன்றாவது மந்திர உச்சாடனம் இரண்டாவது கற்பது சிறிது கடினம் என்றும் செய்யும் முத்திரைகள் சீரில்லையேல் பலனும் குறையும் இந்நிலையில் ஆரம்ப காலத்தில் மந்திரம் பின்பு தந்திரம் பின்பும் மானசீகம் என்ற விதிமுறையே வேண்டும்.

குருநாதர் கருத்துக்கள் #69

கேள்வி: மனிதனுக்கு விடுதலை கிட்டாமல் தடுப்பது எப்பொருள்?

இதில் பெரும் சிந்தனை தேவையற்றதாகின்றது. ஏனெனில் பெரும் சொத்தானது மனிதனுக்கு தன் உயிர் ஒன்றே. இதற்கு பின்பே மற்றவை அனைத்தும் ஏனெனில் வெள்ளி (பணம்) செல்வங்கள் உண்ண இயலாது எதற்கும் உதவாது. கடினமான காலங்கள் தோன்றும் போது உயிர் என்பதே கடைசியாக பிரியும் சொத்தாக இருக்கின்றதால் அதற்கு மேல்தான் மனிதனுக்கு பற்று. அப்பற்றினை நீக்கிட முயற்சிகள் செய்திட வேண்டும்.