“நேர்த்திக் கடன்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 23-08-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
Author: Saravanan Thirumoolar
அட்டாங்க யோகம் சாதக முறைகள் பற்றிய சில கருத்துக்கள்
“அட்டாங்க யோகம் சாதக முறைகள் பற்றிய சில கருத்துக்கள்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 18-05-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
திருமூலர் வர்க்க வேடம்
“திருமூலர் வர்க்க வேடம்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 27-09-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
அகத்தியர்
“அகத்தியர் – சிந்தனைகள்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 11-05-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
திருமந்திரம் நற்சிந்தனைகள்
“திருமந்திரம் நற்சிந்தனை” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” குழுவில் Zoom நேரலையில் 26-07-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்
அறிவு என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் பாடம் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது? என்று கேள்வி கேட்டனர். பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களை அழைத்து இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார். அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்து அமர்ந்தார். முதல் மாணவனைப் பார்த்து அந்த அறையினுள் மூன்று குவளையில் பால் உள்ளது. அதில் நீ ஒரு குவளை பாலை பருகிவிட்டு வா என்றார். அவன் உள்ளே சென்றான். தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய மூன்று குவளைகளில் பால் இருந்தது. தங்க குவளையில் இருந்த பாலை எடுத்து மிகுந்த மகிழ்ச்சியோடு பருகினான். பிறகு வெளியே வந்தான். அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில் பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆதங்கமுற்றான். ஆயினும் அதற்கடுத்த மதிப்பினைக் கொண்ட வெள்ளி குவளையில் இருந்த பாலை எடுத்துக் குடித்துவிட்டு ஓரளவு நிறைவோடு வெளியே வந்தான். மூன்றாவது மாணவன் உள்ளே சென்றதும் காலியாகக் கிடந்த தங்க வெள்ளி குவளைகளைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. எனக்கு வெண்கல குவளை பாலா? யாருக்கு வேண்டும் இது? நான் என்ன அவ்வளவு தாழ்ந்தவனா? எந்த விதத்தில் நான் தாழ்ந்தவனாகி விட்டேன்? என்று அவன் மனதில் எண்ணங்கள் ஓடின. ஆயினும் குரு பாலைக் குடித்து வா என்றதை நினைவில் கொண்டு வருத்தத்தோடு குடித்துவிட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் கவலை நிலைகொண்டிருந்தது.
பகவான் ராமகிருஷ்ணர் மூவரையும் பார்த்து பாலைக் குடித்தீர்களா என்றார். முதல் மாணவன் மகிழ்ச்சிப் பூரிப்புடன் தங்கத் குவளையில் பால் குடித்தேன். நான் மிகவும் கொடுத்து வைத்தவன் குருவே என்றான். இரண்டாவது மாணவன் எனக்கு தங்க குவளையில் பால் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் இருந்தாலும் வெள்ளி குவளையிலாவது கிடைத்ததே என்கிற மகிழ்ச்சி ஓரளவு இருக்கிறது குருவே என்றான். மூன்றாவது மாணவன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அழுகை வந்துவிட்டது. மூன்று பேர்களில் மிகவும் துரதிர்ஷ்டக்காரன் நானே குருவே. எனக்கு வெண்கலக் குவளையில் பால் கிடைத்தது என்றான். மூவரும் பேசியவற்றை அமைதியாக கேட்ட பகவான் ராமகிருஷ்ணர் பேச ஆரம்பித்தார். மாணவர்களே தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய மூன்று குவளைகளிலும் ஏலக்காய் குங்குமப்பூ சேர்த்து சுண்டக் காய்ச்சிய சுவையான பசும் பால் ஒரே அளவில் இருந்தது. அதில் எந்த வேறுபாடும் இல்லை. பாலை பருகப் போகிற மூவருக்குமே அதிலிருந்து ஒரே மாதிரியான சுவையும் சத்துவ குணமும்தான் கிடைக்கப் போகிறது. அதிலும் வேறுபாடில்லை. ஆனால் நீங்கள் மூவருமே நினைத்தது வேறு. பால் ஊற்றி வைத்திருக்கும் குவளைகளின் மதிப்பைப் பற்றியே உங்கள் மனம் யோசித்தது. பாலின் குணம் சுவை ருசி ஆகிய அனைத்தும் ஒரேமாதிரிதான் இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை. ஆகவே நீங்கள் பண்டத்தை விட்டு விட்டு பாத்திரத்தையே பார்த்துள்ளீர்கள் பாத்திரத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது அறிவு. அதில் உள்ள பண்டத்தை நுகர்ந்து அனுபவித்து இன்புறுவது ஞானம். நீங்கள் அறிவைக் கொண்டு புறத்தோற்றத்தைப் பார்த்தபடியால் அது எதனால் ஆனது? மதிப்பானதா? மதிப்பு குறைவானதா? என்று சிந்தித்து அதில் உங்களின் கவனம் முழுமையாக சென்றது. பாலில் உள்ள சுவையை அனுபவிக்காமல் விட்டு விட்டீர்கள். நீங்கள் அறிவு கொண்டு பார்க்காமல் ஞானம் கொண்டு பார்த்திருந்தால் அதில் உள்ள சுவையை அனுபவித்து மூவருமே ஒரே மாதிரியான மன நிலையை கொண்டு ஒரே மாதிரியான அனுபவத்தை பெற்றிருப்பீர்கள்..
ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள். பாத்திரங்களுக்கு மதிப்பு தர மாட்டார்கள். மண் சட்டியில் ஊற்றிக் கொடுத்தால் கூட ஆனந்தமாக பருகிச் செல்வார்கள். ஏனேனில் ஞானிகள் அனைத்திலும் உள்ள இறைவனை நுகர்ந்து அனுபவித்து ஆனந்தமடைவார்கள். இதுவே ஞானத்தின் உச்சம் என்று பகவான் ராமகிருஷ்ணர் சொல்லி முடித்ததும் மூன்று பேர்களுக்கும் அறிவிற்கும் ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளங்கியது.

சம்மோகன கிருஷ்ணர்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயிலில் மோகனூரில் லலிதையும் கிருஷ்ணனும் இணைந்த கோலமான சம்மோகன கிருஷ்ணர் உருவம் உள்ளது. கிருஷ்ணர் தனது பாதி உடலை ராதைக்கு அளித்து அர்த்தநாரீ கிருஷ்ணராக காட்சியளிக்கிறார்.
மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர். சுயம்பு மூர்த்தியாக வலது புறம் ஸ்ரீதேவியுடனும் இடதுபுறம் பூமா தேவியுடனும் நின்ற திருக்கோலத்தில் வேதஸ்ருகங்க விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். உற்சவர் சீனிவாசர் பொதுவாக உற்சவமூர்த்தியின் மார்பில் மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்படடிருக்கும். ஆனால் இங்குள்ள உற்சவர் சீனிவாசரின் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும் அதன் மத்தியில் மகாலட்சுமி ரேகையும் உள்ளது. அம்மன்/தாயார் பத்மாவதி. மகா மண்டபத்தின் வலதுபுற விளிம்பில் தனிச்சன்னதியில் சிவ பார்வதியின் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தைப் போல லலிதையும் கிருஷ்ணரும் இணைந்து கோபால சுந்தரி எனும் சம்மோகன கிருஷ்ணராக அருள்பாலித்து வருகின்றார். தல விருட்சம் வில்வம். தீர்த்தம் காவிரி. புராணபெயர் மோகினியூர். காவிரியின் கரையில் அமைந்த கோயில் இது. காவிரி இங்கு வடக்கிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. காவிரியம்மனுக்கும் தனிசன்னதி இருக்கிறது. ஆடிப்பெருக்கு மற்றும் ஐப்பசி மாதத்தில் இவளுக்கு காவிரி தீர்த்தத்தால் அபிஷேகம் நடக்கிறது. சுவாமி சன்னதிக்கு பின்புறம் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது. தன்வந்திரிக்கு மூலிகைகள் கலந்த சூர்ணம் பிரதான நைவேத்யமாக படைக்கப்பட்டு சுக்குப்பொடி நாட்டுச்சர்க்கரை நல்லெண்ணெய் மற்றும் மூலிகைள் சேர்ந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இச்சன்னதியின் முன் மண்டப மேற்கூரையில் நவக்கிரகங்கள் மரச்சிற்பமாக இருக்கிறது. எதிரே கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். சுவாமி கோஷ்டத்தில் லட்சுமி ஹயக்ரீவர் இருக்கிறார். பௌர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவருக்கு எதிரே மேதா சரஸ்வதி காட்சி தருகிறாள். இவளிடம் வீணை கிடையாது.
கோயில் முன் மண்டபத்தில் நவநீதகிருஷ்ணர் இரு கரங்களிலும் வெண்ணெய் வைத்தபடி காட்சி தருகிறார். உடன் பாமா ருக்மணி உள்ளனர். ஆண்டாள் சக்கரத்தாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. கோயிலின் அக்னி மூலையில் கிழக்கு நோக்கி பதினாறு திருக்கரங்களுடன் ஸ்ரீசக்கரத்தாழ்வார் காட்சி கொடுக்கிறார். கோயில் வளாகத்தில் வன்னி மரத்தடியில் விநாயகரும் ஆஞ்சநேயரும் இருக்கின்றனர். கோயிலுக்கு எதிரே ஆஞ்சநேயருக்கு மற்றொரு சன்னதி இருக்கிறது. கருடாழ்வார் அமைந்திருக்கும் சோபன மண்டபத்தின் வடபுறம் பரமபத வாசல். அதன் நேர் எதிரே திருப்பதி வேங்கடவனின் சுதைச் சிற்ப உருவம் தாங்கிய உற்சவர் அலங்கார மண்டபம் உள்ளது. முதல் பிராகார மண்டபத் தூண்களில் ஆழ்வார்களின் உருவங்கள் சுதைச் சிற்ப வடிவில் உள்ளது. அதன் கீழே அவரவர் பாடிய பாசுரங்களில் நான்கு வரிகள் எழுதப்பட்டுள்ளது.
இந்த ஊரில் வசித்த பக்தர் ஒருவர் திருப்பதி வெங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். வருடம் தவறாமல் திருப்பதி கோயிலுக்கு சென்று வருவார். ஒரு சமயம் அவருக்கு வாத நோய் ஏற்பட்டதால் திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. வருத்தமடைந்த அவர் காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்தார். தள்ளாடியபடி நடந்து சென்று காவிரிக் கரையை அடைந்தார். அப்போது கரையில் இருந்த ஒரு புற்றில் இருந்து நாகம் வெளிவந்தது. பாம்பைக் பார்த்த பக்தர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய திருமால் பாம்பு வெளிப்பட்ட புற்றுக்குள் சிலை வடிவில் இருப்பதாக கூறினார். காலை எழுந்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பக்தர் உடனே அங்கு சென்று புற்றை உடைத்து பார்த்த போது உள்ளே சுவாமி சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக மணக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுவாமிக்கு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் என்று பெயர் சூட்டப்பட்டது. இதுதவிர பத்மாவதி தாயாருக்கு தனி சன்னதி கட்டப்பட்டது.
திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் கோயில் உருவாக்கப்பட்டதால் நவராத்திரியின்போது வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் திருப்பதியில் ஓர் நாள் என்னும் உற்சவம் நடக்கிறது. அன்று அதிகாலை நடை திறக்கப்படுவதில் இருந்து இரவு வரையில் அனைத்து பூஜைகளும் திருப்பதியில் நடக்கும் முறையிலேயே செய்யப்படுகிறது. திருப்பதியில் வெங்கடாஜபதிக்கு அலங்காரம் செய்யப்படுவது போலவே அன்று சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு திருவோண நட்சத்தர தினத்தன்று மாலையில் சத்யநாராயண பூஜை நடக்கிறது. அப்போது சுவாமிக்கு மட்டைத்தேங்காய் படைத்து வழிபடப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளுகிறார்.









ஸ்ரீயோக காலபைரவர்
அருள்மிகு தாண்டேஸ்வரர் கோயில் மேல்மலையனூர்.


பேளுக்குறிச்சி முருகன்
வேலவன் குறிச்சி கொல்லிமலையின் அடிவாரத்தில் உள்ளது. முருகனின் பெயர்களில் ஒன்று வேலவன். வேல் + அவன் = வேலவன். வேலே அவன்தான். முருகனின் ரூபமே வேல்தான் என்பதை இப்பெயர் குறிக்கும். ஒரு காலத்தில் இந்த கோயில் பழனியப்பர் கோயில் என்றும் கூகை மலை என்றும் அழைக்கப்பட்டது. படைப்புக்குரிய மூல மந்திரமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மாவிடம் முருகப்பெருமான் கேட்டார். பிரம்மாவால் சரியாக பதில் கூறமுடியவில்லை. இதனால் பிரம்மாவை தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன் பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்தார். கொல்லிமலை அடிவாரத்திலுள்ள கூவைமலை என்னும் குன்றில் தங்கினார். கூவை என்றால் பருந்து. கொல்லிமலையின் மேலிருந்து கூவை மலையைப் பார்த்தால் கழுகு சிறகை விரித்திருப்பது போன்ற தோற்றம் இருக்கும். எனவே இப்பெயர் ஏற்பட்டது.
மூலவர் பழனியாண்டவர். பழனி மூல விக்ரஹத்தை உருவாக்கிய சித்தரான போகர் பழனி விக்ரஹத்தை உருவாக்குவதற்கு முன்பு கொல்லி மலையின் மூலிகைகளைக் கொண்டு ஒரு முருகரின் மூர்த்தியை உருவாக்கி இங்கு பிரதிஷ்டை செய்தார். எனவே இக்கோயில் பழனியை விட பழமையானது. இதனால் முருகர் பழனி அப்பா என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் நுழைவாயிலில் ஒரு சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தில் இரண்டு பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுங்க முயற்சிப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்புகளுக்குக் கீழே ஒரு பச்சை கல் உள்ளது. மேலும் இந்தக் கல்லில் அமர்ந்து தியானம் செய்பவர் தனது பிரார்த்தனைகளில் நினைத்ததைப் பெறுவார்கள். பழனி யாண்டவர் சன்னதியின் இடதுபுறம் விஷ்ணு சன்னதியும் எதிரில் கருடாழ்வாரும் உள்ளனர். வலதுபுறம் நவக்கிரகம் சனீஸ்வரர் சன்னதி உள்ளது. தீர்த்தம் யானைப்பாழி தீர்த்தம். மலையடிவாரத்தில் பாறைகளுக்கு இடையே யானை வடிவிலான வற்றாத சுனை உள்ளது. இதற்கு யானைப்பாழி தீர்த்தம் என்று பெயர். இந்த சுனையில் ஆண்டு முழுவதும் இரும்புச் சத்துடன் கூடிய தண்ணீர் ஊறுகிறது.
முருகன் வள்ளியைத் துரத்திச் சென்று திருமணம் செய்ய வேட்டைக்காரனின் வடிவத்தில் வரும் இடம் இது. மூலஸ்தானத்தில் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிய திசையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தலையில் கொண்டை போல் முடி முடிச்சு போடப்பட்டிருக்கிறது. தலையில் கொன்றை மலர்கள் உள்ளன. அவர் தனது கால்களில் காலணிகளை அணிந்துள்ளார். அவரது இடது கை இடுப்பில் இருந்தாலும் ஒரு சேவல் இருக்கிறது. பத்மாசுரன் முருகனால் வதம் செய்யப்பட்டதும் அவனை முருகர் சேவலாகவும் மயிலாகவும் மாற்றினார். இந்தச் சேவலை தனது கையில் வைத்திருக்கிறார். மற்ற முருகன் கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளார். அவரது வலது கை வஜ்ர வேல் வைத்திருக்கிறார். வேலின் உயரம் மூர்த்தியை விட உயரமாக இருக்கிறது. பௌர்ணமி நாட்களில் நள்ளிரவு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. அந்த நள்ளிரவு நேரத்தில் சித்தர்கள் இங்கு பூஜைகள் செய்ய வருவதால் இரவு 11:50 மணிக்கு அபிஷேகம் பின் அலங்காரம் முடிந்ததும் சன்னதியின் கதவுகள் மூடப்படுகிறது. அனைத்து பக்தர்களும் வெளியே காத்திருப்பார்கள். சிறிது நேரத்திற்கு பின் நள்ளிரவில் கதவுகள் திறக்கப்படும் போது சித்தர்கள் பூஜை செய்த சான்றுகளாக அலங்காரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் இருக்கும். இது இன்றும் நடக்கிறது. அபிஷேகம் முடிந்ததும் இறைவனின் மூக்கு கன்னம் மற்றும் மார்பின் நுனியிலிருந்து வியர்வை வெளிப்படுகிறது.
கடையேழு வள்ளல்களில் ஒருவராக விளங்கியவர் ஓரி. ஒரே அம்பில் பல மிருகங்களை வீழ்த்தும் வலிமை பெற்றவறாக விளங்கினார். இவரது ஆட்சிக்குட்பட்ட சேர்ந்தமங்கலம், அறப்பள்ளி, சிங்களாந்தபுரம், ராசிபுரம், கல்குறிச்சி என பல இடங்களில் சிவாலயங்களில் கட்டியிருக்கிறார். பேளுக்குறிச்சியில் முருகன் கோயிலையும் அவர்தான் கட்டினார். ஔவையார் இங்கு பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். ஔவையார் தனது எந்தவொரு பயணத்திற்கும் முன் இங்கு பிரார்த்தனை செய்ததாகக் குறிப்புகள் உள்ளது. இந்த முருகப்பெருதான் மீது அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார். அகத்தியர் பூஜை செய்துள்ளார். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது.







துக்காராம்
துக்காராம் 16 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் உள்ள புனேவிற்கு அருகில் உள்ள தேகு என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் பாண்டுரங்கனின் தீவிர பக்தர். இவரது மனைவி பெயர் கமலாபாய். இவர் ஒரு சம்சார துறவி. மராத்திய கவிஞர் மற்றும் சமய சீர்திருத்தவாதி ஆவார். சமூக சமத்துவம் அன்பு மற்றும் மனித நேயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பக்தி பாடல்களை இயற்றினார். அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் சத்ரபதி சிவாஜி கோயிலுக்கு வந்த போது அவரை சிறைபிடிக்க அவுரங்கசீப் சுற்றி வளைத்தார். அப்போது துக்காராம் இறைவனை வேண்டிப் பாடல்கள் பாட இறைவனே சிவாஜியைப் போல குதிரையில் வந்து எதிரிகளுடன் சண்டை போட்டு அவர்களை ஓட வைத்தார். துக்காராமின் போதனைகள் மற்றும் பாடல்கள் மகாராஷ்டிராவில் பக்தி இயக்கத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகக் கருதப்பட்டார். துக்காராமின் படைப்பு நூல்களில் ஒன்று துக்காராம் கீதை ஆகும். அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தில் ஒன்று.
கமலாபாய் தெரிந்தவர் ஒருவரிடம் சொல்லி தனது கணவருக்கு சோளக்கொல்லை ஒன்றைக் காவல் காக்கும் பணியை வாங்கிக் கொடுத்தாள். வேலை நேரத்தில் பரண்மேல் ஏறி ஆனந்தமாக பஜனைப் பாடல்களைப் பாட பறவைகள் ஆனந்தமாக வந்து அத்தனை சோளத்தையும் கொத்திச் சென்று விட்டன. சோளக் கொல்லையின் உரிமையாளர் அவரை உடனடியாக வேலையை விட்டு நீக்கிவிட்டார். வருமானத்திற்கு வழியும் இல்லை. துக்காராம் உயர்ஜாதி அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ளாமல் கீழ் ஜாதியினரையும் சமமாக வைத்து அவர்கள் முன்பாகவும் கீர்த்தனை பாடுவார். இதை உயர் ஜாதிக்காரர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இவரை திட்டிக் கொண்டே இருப்பார்கள். சம்பாதிக்கா விட்டால் போகிறது. ஆனால் ஜாதி ஆசாரம் இல்லாமல் இருக்கிறாரே? கூடியிருந்த ரசிகர்களில் பலர் கீழ் ஜாதிக்காரர்கள் தான். என்ன இப்படிச் செய்கிறீர்களே என்று கேட்டாள். அதற்கு அனைவரும் ஒரே மனித ஜாதிதான் என்று சிரித்தார். ஊரில் நல்ல பெயரும் இல்லை. வருமானமும் இல்லை. ஒரு நாள் கோயிலுக்கு மாலை செல்ல வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தார்கள். நல்ல புடவையாக கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஒருவர் துக்காராமின் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைகளின் தீவிர ரசிகர். அன்பளிப்பாகக் கொடுத்த புடவை ஒன்று இருந்தது. ஒருமுறை மட்டுமே கட்டிய அந்த புடவையை துவைத்து வீட்டின் பின்புறம் காய வைத்திருந்தாள்.
துக்காராம் வழக்கம் போல் திண்ணையில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தார் அவர். பலர் அந்த தேவகானத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் குரலின் இனிமையும் பக்தியின் ஆழமும் கமலாபாயையும் உருக்கத்தான் செய்தது. இலட்சணமான ஒரு பெண் சிறிது தள்ளி நின்று பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கிழிசல் புடவை சிரமப்பட்டு அவள் மானத்தை மறைத்துக் கொண்டிருந்தது. பார்க்கும் போதே கீழ் ஜாதி பெண் என்று தெரிந்தது. அவளை பார்த்த துக்காராம் ஏன் அம்மா தள்ளி நிற்கிறாய்? இங்கே வந்து உட்கார் என்று அன்போடு அவளை உபசரித்தார். இதனைப் பார்த்த கமலாபாய் அந்தக் கிழிந்த புடவை கட்டியிருக்கும் கீழ்ஜாதிப் பெண்ணை நன்றாக சிம்மாசனம் போட்டு உட்கார வையுங்கள் என்று எரிச்சலோடு நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள். கச்சேரி தொடர்ந்தது. எல்லோரும் உருகினார்கள். கீழ்ஜாதிப் பெண்ணும் உருகினாள். ஜாதி வேறுபாடெல்லாம் கிருஷ்ணரிடம் கிடையாது. அனைவரும் கிருஷ்ணரைப் பக்தி செய்து வைகுண்டம் செல்ல வழி தேடுங்கள் என்று அறிவுறுத்திவிட்டு அன்றைய பக்தி இசையை முடித்துக் கொண்டார் துக்காராம். ஒவ்வொருவராக விடைபெற்றார்கள். கீழ்ஜாதிப் பெண் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஏன் அம்மா நீ புறப்படவில்லையா? என்று கேட்டார்.
அனைவரும் போகட்டும் சாமி. நான் கடைசியில் போகிறேன். முதலிலேயே போனால் என் பின்னால் வருபவர்கள் என் கிழிந்த புடவையை விமர்சித்துக் கொண்டே வருவார்கள் என்றாள். உன்னிடம் வேறு புடவை இல்லையா அம்மா? என்று கேட்டார். நிறையப் புடவை இருந்தது சாமி. ஆனால் யாரோ ஒரு பெண் மானத்தைக் காப்பாற்றப் புடவை தா என்று இக்கட்டான ஒரு சந்தர்ப்பத்தில் என் கணவரிடம் கேட்டாள். என் கணவரோ தர்மப்பிரபு. என் புடவைகள் அனைத்தையும் வாரி வழங்கிவிட்டார். எனக்கு மிஞ்சியது இந்தக் கிழிசல் புடவை தான் என் கணவர் சின்ன வயதில் விளையாட்டாகப் புடவை திருடுவாராம். பெண்கள் குளிக்கும் இடங்களில் புடவையைத் திருடி வைத்துக் கொண்டு அவர்கள் கெஞ்சினால் தான் தருவாராம். அப்படிப் பெண்கள் மனத்தை நோக வைத்தார் இல்லையா? அதனால் அவர் பெண்டாட்டிக்குக் கிழிசல் சேலைதான் என்று விதித்திருக்கிறது போலிருக்கிறது என்று கவலையுடன் சொன்னாள். இதனைக் கேட்ட துக்காராம் வேகமாக கொல்லைப்புறம் சென்றார். கமலாபாய் உலர்த்தியிருந்த சேலையைக் கொடியிலிருந்து உருவினார். வாசலுக்கு வந்தார். அம்மா இனி இந்தச் சேலையைக் கட்டிக்கொள். இதில் கிழிசல் இருக்காது. பெண்கள் கிழிசல் சேலையை உடுத்தக் கூடாது என்று சேலையை அவள் கையில் கொடுத்தார். அவரையே கனிவுடன் பார்த்த அவள் ஐயா நீங்கள் எனக்குப் புடவை கொடுத்தது பற்றி உங்கள் மனைவி கோபித்துக் கொள்ள மாட்டாரா? என்று கேட்டாள். அவள் கோபம் சிறிது நேரம் இருக்கும். பிறகு சமாதானமாகி விடுவாள். அவளிடம் கிழியாத இன்னொரு புடவை இருக்கிறது. ஆகவே நீ யோசிக்க வேண்டாம் இப்போது உனக்குத்தான் இந்த சேலை அவசியம் தேவை என்றார். துக்காராமின் பதிலைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே அவள் புடவையோடு விடை பெற்றாள்.
துக்காராம் ஒன்றும் தெரியாதவர் போல் அமர்ந்து கொண்டார். மாலைநேரம் வந்தது. கணவரோடு கோயிலுக்குப் புறப்பட்ட கமலாபாய் உலர்த்தியிருந்த புடவையை உடுத்திக் கொள்ளலாம் என்று கொல்லைப்புறம் போய்க் கொடியைப் பார்த்தாள். புடவையைக் காணவில்லை. கோபத்தோடு துக்காராமிடம் வந்தாள். புடவை எங்கே? என்று கேட்டாள். கிழிந்த புடவையோடு ஒருபெண் என் பாட்டைக் கேட்க வந்தாள். அவளிடம் அந்தப் புடவையைக் கொடுத்து விட்டேன். உனக்குத்தான் கிழியாத இன்னொரு புடவை இருக்கிறதே? என்று குழந்தைபோல் பேசும் துக்காராமைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. சோற்றுக்கே திண்டாட்டம். ஆனால் இவரோ வள்ளல் ஒரு சோளக்கொல்லை காவல்கார வேலையைக் கூடச் செய்யத் தெரியாத மனிதர் என்று கண்ணில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட அவள் வீட்டைப் பூட்டிக் கொண்டு கணவரோடு புறப்பட்டாள். அழாதே கமலா நமக்குத் தேவையானவற்றைக் கிருஷ்ணர் கொடுப்பான் என்றார். கணவரிடம் ஏதொன்றும் பேசாமல் பெருமூச்சோடு கோயிலை நோக்கி நடந்தாள். கர்ப்பகிரகம் நோக்கிச் சென்றார்கள் இருவரும். என் கணவரை ஏன் இப்படிப் படைத்தாய்? என்ற கேள்வியுடன் கண்மூடிக் கண்ணீர் வழிய நின்றாள் கமலாபாய். இடுப்பில் கைவைத்து நின்றிருந்த பாண்டுரங்கனும் ருக்மிணியும் நகைத்துக் கொண்டார்கள். கமலாபாய் கண் திறந்து ருக்மிணி சிலையைப் பார்த்தாள். அவளுக்கு அதிர்ச்சியில் தூக்கிவாரிப் போட்டது. ருக்மிணியின் சிலை கட்டிக் கொண்டிருந்தது அவள் கொடியில் உலர்த்தியிருந்த அதே புடவை தான். கண்ணைக் கசக்கிக் கொண்டு திரும்பத் திரும்பப் பார்த்தாள். சந்தேகமே இல்லை. அவள் புடவையே தான் அது. அப்படியானால் கீழ் ஜாதிப் பெண்ணாக வந்தது என் தாயார் ருக்மிணியா? தேவி என்னை மன்னித்துவிடு. என் கணவரது மகிமை தெரியாமல் ஏதேதோ பேசிவிட்டேன். வறுமை என்னை அப்படியெல்லாம் பேசச் செய்துவிட்டது அம்மா கீழ்ஜாதிப் பெண்கள் உள்பட எல்லாப் பெண்களுமே உன் வடிவம் என்று என் கணவர் சொல்லும் உண்மையை இன்று உணர்ந்துகொண்டேன் என்று ஆனந்தக் கண்ணீருடன் வழிபட்டாள்.
கிருஷ்ணரையும் ருக்மிணியையும் விழுந்து வணங்கிய அவள் வாருங்கள் வீட்டுக்குப் போகலாம் என்று கணவரோடு பக்திக் கண்ணீர் வழிய வீடுநோக்கி நடந்தாள். வீட்டு வாசலில் ஒரு மாட்டுவண்டி நின்றிருந்தது. அதிலிருந்த இறங்கிய ஒருவர் அவர்களை நமஸ்கரித்தார். பிறகு கமலாபாயிடம் சொன்னார். அம்மா என்னை மறந்துவிட்டீர்களா? நான்தான் என் சோளக்கொல்லையைக் காவல் காக்கிற வேலையை இவருக்குக் கொடுத்தேன். வேலையை இவர் சரியாகச் செய்யவில்லை என்று இவரை வேலையை விட்டு நீக்கினேன். ஆனால் என்ன ஆச்சரியம் என் சோளக்கொல்லை முன் எப்போதும் இல்லாத அளவு பத்துமடங்கு விளைச்சல் கண்டிருக்கிறது. இவர் சாதாரண ஆள் இல்லை அம்மா. அதற்காக அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தனை தானியங்களையும் கொஞ்சம் தங்க நாணயங்களையும் காணிக்கையாக அளிக்க வந்தேன் என்றார். கமலாபாய் திகைத்துப் போனாள். கமலா நாம் கொடுத்த புடவையைக் கட்டிக்கொண்டாளே ருக்மிணி. அவளைக் கட்டிக் கொண்ட அந்த கிருஷ்ணன் அந்த புடவைக்கு விலையாக என்னவெல்லாம் அனுப்பியிருக்கிறான் பார்த்தாயா? என்று துக்காராம் சிரித்த போது கமலாபாயின் ஆனந்தமான சிரிப்பும் சேர்ந்து கொண்டது.
துக்காராம் நாற்பத்தைந்து ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்த துக்காராம் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு மரத்தடியில் நின்று கொண்டு நான் போய் வருகிறேன் என்று கூறினார். அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே விஷ்ணு ரதவிமானத்தை அனுப்ப அதில் ராம் ராம் என்று சொல்லிக் கொண்டே இந்தப் பூத உடலுடன் வைகுண்டம் கிளம்பினார்.
