அருள்மிகு தாண்டேஸ்வரர் கோயில் மேல்மலையனூர்.


அருள்மிகு தாண்டேஸ்வரர் கோயில் மேல்மலையனூர்.
பத்திரகிரியார் என்ற பெயரில் பட்டினத்தாரின் சீடராக இருந்தவரின் இயற்பெயர் பர்த்ருஹரி. உஜ்ஜனியின் மாகாளம் என்ற பகுதியின் அரசராக இருந்தவர். அரசராக இருந்தாலும் சிவபக்தியில் சிறந்தவர். பட்டினத்தாரின் ஞானத்தை அறிந்த அந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர். இவருடைய மெய்ஞானப்புலம்பல் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. இந்த சிற்பம் உள்ள இடம் அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில் தெற்கு மாட வீதி மயிலாப்பூர்.
பக்த துக்காராம் 1608 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் பூனா மாவட்டத்தில் உள்ள தேஹு என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது குல தெய்வம் பந்தர்பூரின் விதோபா. பின்னாளில் இவர் சாந்த் துக்காராம் மகாராஜ் என்று அழைக்கப்பட்டார். இவர் அபாங்கா எனப்படும் 4500 பக்தி பாடல்களை இயற்றினார். விட்டலருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடல்கள் அபங்கா பாடல்கள் ஆகும். கீர்த்தனைகள் மூலம் சமூகம் சார்ந்த வழிபாட்டையும் பிரபலப்படுத்தினார். மகாராஷ்டிராவில் கிருஷ்ணர் வழிபடும் வடிவம் விட்டல ஆகும். வேறு பெயர்கள் பாண்டுரங்கன் விதோபா மற்றும் பண்டரிநாதர் ஆகும். துக்காராம் பல வணிக முயற்சிகளில் ஈடுபட்டார். தனது வாடிக்கையாளர்களிடம் மிகவும் அன்பாகவும் நேர்மையாகவும் இருந்தார். கடன் வாங்கிய பணம் உட்பட தன்னிடம் இருந்த அனைத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்தார். அதனால் ஆரம்பித்த அனைத்து வியாபாரத்திலும் தோல்வி அடைந்தார். 1629 1630 ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தின் போது அவரது முதல் மனைவி மகன் மற்றும் மீதமுள்ள சில கால்நடைகள் இறந்தன. இவரது குடும்பத்திடம் கடன் பெற்ற கடனாளிகள் அவருக்குக் கொடுக்க வேண்டிய பணம் பொருள் எதையும் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றினார்கள். மேலும் கடன் கொடுத்தவர்கள் தங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டு அவரை வற்புறுத்தினார்கள். துக்காராமைக் கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கி இறைவன் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டார். துக்கராமின் வாழ்க்கையில் உண்மையான பணி இந்தக் கட்டத்தில் தொடங்கியது.
துக்காராம் வாழ்க்கையின் வெறுமையில் அமைதியை நோக்கிய பயணத்தில் தனது வீட்டையும் கிராமத்தையும் விட்டு வெளியேறி அருகிலுள்ள பாம்நாத் காட்டில் மறைந்தார். 15 நாட்கள் உணவு தண்ணீர் இல்லாமல் விட்டலரை நினைத்துக் கொண்டு அங்கேயே இருந்தார். 15 வது நாளுக்குப் பிறகு அமைதியின் உணர்வை உணர்ந்தார். அப்போது பகவான் விதோபா அவருக்கு காட்சி கொடுத்து தனது அருளாசியை வழங்கினார். இதற்குப் பிறகு பக்த துக்கராமுக்கு தனது குடும்பத்தினர் மனைவி அல்லது உறவினர்கள் மீது எந்த பாசமும் இல்லாமல் போனது. வீட்டில் இருந்த வியாபாரம் சம்பந்தமான அனைத்து பொருள்கள் கடன் பத்திரங்கள் மற்றும் கணக்கு புத்தகங்கள் அனைத்தையும் சேகரித்து இந்திராயணி நதியில் வீசினார். பின்னர் தனது சொந்தக் கைகளால் பாழடைந்த குடும்பக் கோயிலை மீண்டும் கட்டியெழுப்பினார். அவரது மனதில் நான் கடவுளே உன்னை ஒருபோதும் மறக்கக் கூடாது. இந்த உடல் இறைவனின் பஞ்ச பூதம் என்னும் 5 கூறுகளால் ஆனது. இறைவனைத் தவிர எனக்கு அடைய வேண்டியது ஒன்றும் இல்லை என்ற சிந்தனை ஆழமாகப் பதிந்தது. பின் தனது வாழ்க்கையை இறைவனை சிந்திப்பதிலும் பூஜைகள் செய்வதிலுமே செலவிட்டார். இதன் பலனாக ஒரு நாள் அவரது குரு அவரது கனவில் தோன்றி உபதேசம் வழங்கினார். இதனை துக்காராம் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வாக விவரிக்கிறார். தகுதியான எதையும் தான் செய்யவில்லை என்றாலும் சத்குரு ஒரு கனவில் என்னிடம் வந்து மிகவும் கருணை காட்டினார். நான் ஆற்றில் குளிக்கச் சென்ற போது அவர் என்னைச் சந்தித்து என் தலையில் கை வைத்து என்னை ஆசீர்வதித்தார். அவர் தனது பெயர் பாபாஜி சைதன்யா என்று கூறினார். (பாபாஜி சைதன்யா சாந்த் ஞானதேவின் நான்காவது தலைமுறை சீடர் ஆவார்.) மேலும் தனது இரண்டு முந்தைய குருக்களின் பெயர்களை ராகவ சைதன்யா மற்றும் கேசவ சைதன்யா என்று கூறினார். ராமகிருஷ்ண ஹரியின் ஜபத்தைச் செய்ய அவர் எனக்கு அறிவுறுத்தினார் என்றார். இது ஜனவரி 1632 இல் நடந்தது.
துக்காராம் இப்போது தனது வாழ்க்கையை பக்திப் பயிற்சிகளில் அதிகளவில் செலவிடத் தொடங்கினார். ஞானதேவ் நாம்தேவ் மற்றும் ஏக்நாத் போன்ற சிறந்த துறவிகளின் கவிதைகள் மற்றும் படைப்புகளைப் படிப்பது பகவத் கீதை ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றைப் படிக்கத் தொடங்கினார். பின்னர் ஒரு நாள் அவர் ஒரு கனவில் பாண்டுரங்கன் தோன்றி அவரை எழுப்பி பக்திப் பாடல்களைப் பாடுமாறு அறிவுறுத்தினார். பாண்டுரங்கனின் அருளால் கவிதைகள் படைக்கும் தெய்வீகக் கலை துக்காராமுக்கு இயல்பாகவே வந்தது. இவரது பாடல்களில் மக்கள் ஈர்க்கத் தொடங்கினர்கள். அவரது புகழைப் பார்த்து சிலர் பொறாமையடைந்தனர். அக்காலத்தைச் சேர்ந்த கற்றறிந்த பிராமணரான ராமேஸ்வர் சாஸ்திரிக்கு இவருக்கு எதிராக ஒரு புகாரை அனுப்பினர்கள். துக்கராமிடம் வந்த ராமேஸ்வர் இவரது கவிதைகள் மற்றும் ஷ்ருதிகளின் கொள்கைகளை விளக்கிச் சொல்லுமாறு கேட்டார். சாஸ்திரி துக்கராமிடம் தனது கவிதைகளில் கொள்கைகளில் அனைத்து மனிதர்களும் சமம். பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்று விளக்கத்தில் பொருள் கூறினார். இதனை ஏற்றுக் கொள்ளாத ராமேஸ்வர் இனி துக்காராம் பாடல்கள் பாட எந்த உரிமையும் இல்லை. எனவே அவர் கவிதைகள் எழுதுவதை நிறுத்த வேண்டும். இவர் ஏற்கனவே எழுதிய கவிதைகளை இந்திராயினி நதியில் மூழ்கடிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். அனைத்தும் விட்டலரின் லீலை என்று உணர்ந்த துக்காராம் உடனடியாக தனது வீட்டிலிருந்த அனைத்து கவிதைகளையும் வெளியே கொண்டு வந்து அவற்றை ஒன்றாகக் கட்டி ஒரு பெரிய கல்லை அதனுடன் சேர்த்து மூட்டையாக கட்டி ஆற்றில் எறிந்தார். பாண்டுரங்க பகவானே பாடல்கள் மூலம் மக்களிடையே பக்தியைப் பரப்பும்படி அவருக்குக் கட்டளையிட்டிருந்த படியால் துக்காராம் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் தனிமையில் தனது கவிதைகளில் கடவுளின் புகழைப் பாடிக்கொண்டிருந்தார். இவ்வாறு தொடர்ந்து 13 நாட்கள் அவர் தண்ணீர் உணவு இல்லாமல் இருந்தார். 14 ஆம் நாளில் துக்கராமின் சீடர்களில் ஒருவரின் கனவில் தோன்றிய பாண்டுரங்கர் ஆற்றுக்குச் செல்லுங்கள். அங்கே துக்கராமின் கவிதைகள் மேற்பரப்பில் மிதப்பதைக் காண்பீர்கள் என்று கூறினார். உடனே அந்த சீடர் தீர்ப்பு கூறிய ராமேஸ்வரரையும் அழைத்துச் சென்று ஆற்றுக்குச் சென்று பார்த்தார். அங்கு கல்லோடு கட்டிய கவிதை மூட்டைகள் மிதந்து கொண்டிருந்தது. அதனை கரைக்குக் கொண்டு வந்தார் சீடர். துக்காராமின் மகிமையை உணர்ந்த ராமேஸ்வர் எத்தனை சிறப்பு வாய்ந்த பாடல்களாக இருந்திருந்தால் இறைவன் துக்காராம் கவிதைகளை 13 நாட்கள் தண்ணீரில் பாதுகாத்திருக்கிறார் என்று எண்ணி துக்காராமை சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டு தொடர்ந்து பாடல்கள் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் அவரது மனதில் துக்காராமின் மீது வெறுப்பு இருந்தது. இதனை உணர்ந்த துக்காராம் ராமேஸ்வரின் வார்த்தையை மரியாதைக்குரியதாக கருதி தொடர்ந்து கவிதைகளை எழுதவில்லை.
ஒரு நாள் ராமேஷ்வர் ஒரு முஸ்லிம் பக்கீர் பக்கிரின் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்தபோது அவர் உடல் முழுவதும் எரியும் உணர்வை உணரத் தொடங்கினார். இந்த நோயின் விரக்தியில் அவர் சாந்த் ஞானேஷ்வரின் சமாதி முன் அமர்ந்து உடல் எரியும் உணர்வு துன்பத்தைப் போக்குமாறு பிரார்த்தனை செய்தார். அன்று இரவில் அவரது கனவில் ஞானேஷ்வர் வந்து விதோபாவின் மிகப் பெரிய பக்தரான துக்காராம் மீது உன் மனதில் வெறுப்பு இருக்கிறது. வெறுப்பை விட்டுவிட்டப் போய் துக்கராமிடம் சரணடை. உன் உடல் துன்பங்கள் அனைத்தும் போய் விடும் என்று அறிவுருத்தினார். காலையில் எழுந்த ராமேஸ்வர் துக்கராமிடம் சென்றால் அவர் தன்னை சபித்துவிடுவாரோ என்று பயந்தார். எனவே அவர் துக்கராமுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு கடிதம் அனுப்பினார். துக்காராம் அந்த கடிதத்தைப் படித்ததும் ராமேஷ்வருக்கு ஒரு பதிலை அனுப்பினார். மனம் தூய்மையாக இருந்தால் உங்கள் எதிரிகள் கூட உங்கள் நண்பர்களாகி விடுவார்கள். புலிகள் அல்லது பாம்புகள் போன்ற கொடூரமான விலங்குகளால் உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. விஷம் கூட சொர்க்கத்தின் அமிர்தத்தைப் போல உங்களுக்கு நன்மை பயக்கும். அனைத்து துரதிர்ஷ்டங்களும் மகிழ்ச்சியாக மாறும். மேலும் உடல் எரிவதால் ஏற்படும் துன்பம் கூட மறைந்துவிடும். நீங்கள் உங்களை நேசிப்பது போல் அனைத்து உயிரினங்களையும் நேசிப்பீர்கள். அனைவரிடமும் சமமான பார்வையைப் பெறுவீர்கள். நாராயணன் என் மீது இந்த கருணை காட்டியுள்ளார். அதனால்தான் நான் அனைத்து உயிரினங்களிடமும் இப்படி உணர்கிறேன் என்று பதில் எழுதினார். துக்காராமின் கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது உடல் எரிவதால் ஏற்படும் துன்பம் கூட மறைந்துவிடும் என்ற வார்த்தைகளை ராமேஷ்வர் படித்த போது அவரது உடல் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டது. இதனால் துக்கராமுக்கு அவர் மிகப்பெரிய அநீதி இழைத்துவிட்டார் என்பது அவருக்கு உறுதியாகப் பதிந்தது. அன்றிலிருந்து ராமேஷ்வர் சாந்த் துக்காராம் மகாராஜின் சிறந்த அபிமானியாகவும் தீவிர சீடராகவும் ஆனார். துக்காராமை சந்தேகித்ததால் தன்னைத்தானே குற்றம் சாட்டி 5 கவிதைகளை எழுதினார் ராமேஸ்வர். இந்த சம்பவத்திற்குப் பிறகு துக்கராமின் பெயரும் புகழும் எங்கும் பரவியது.
மராட்டியத் தலைவர் சிவாஜி மகாராஜ் துக்கராமைச் சந்திக்க வந்து அவருடன் பல நாட்கள் தங்கினார். துக்கராமின் பஜனைகளால் சிவாஜி மகாராஜ் மிகவும் ஈர்க்கப்பட்டு நெகிழ்ச்சியடைந்தார். சிவாஜி தனது ராஜ்யத்தை துறந்து விட்டு பஜனை செய்து துக்கராமைப் பின்பற்ற விரும்பினார். ஆனால் துக்காராம் அவரை அவ்வாறு செய்வதிலிருந்து தடுத்தார். சிவாஜிக்கு தனது குடிமக்களுக்கான கடமையை நினைவூட்டி அறிவுறுத்தினார். கடவுளை உணர உணவையோ தண்ணீரையோ விட்டுவிட்டு காட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உலக இன்பங்கள் தாங்களாகவே உங்களிடம் வந்தால் அவற்றை எல்லா வழிகளிலும் அனுபவிக்கவும் ஆனால் நம் அனைவரிடமும் வசிக்கும் கடவுளின் பெயரால் மட்டுமே. எதையும் விரும்பாதீர்கள் எதையும் விட்டுவிடாதீர்கள். இது உங்களுக்கு எனது எளிய மற்றும் ஒரே அறிவுரை என்றார். சிவாஜி தனது அரசவைக்கு மகிழ்ச்சியான மற்றும் திருப்தியான மனிதராகத் திரும்பினார். சமர்த் சுவாமி ராம்தாஸ் சிவாஜி மகாராஜின் குருவாக இருப்பார் என்பதை பக்த துக்காராம் உள்ளுணர்வாக அறிந்திருந்தார். இதனால் சுவாமி ராம்தாஸை சிவாஜிக்கு அறிமுகப்படுத்தினார் துக்காராம்.
துக்காராம் ஒருமுறை தேஹுவுக்கு அருகிலுள்ள லோஹாகான் என்ற கிராமத்தில் கீர்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் பஜனை செய்யும் ஒரு பெரிய கூட்டம் இருந்தது. அவர்களில் ஜோஷி என்ற பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் தனது இறக்கும் நிலையில் இருந்த ஒரே குழந்தையை அதன் தாயிடம் விட்டுவிட்டு பஜனைக்கு வந்தார். குழந்தை இறந்து விட்டது. தாய் மிகவும் துயரமடைந்தாள். அவள் துக்காராம் பஜனையின் போது அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து இறக்கும் நிலையில் இருந்த குழந்தையைப் பற்றி கூறி தனது கணவர் அலட்சியமாக இருந்தபடியால் குழந்தையின் மரணத்திற்கு அவர்தான் காரணம் என்றும் அவரைக் கடிந்து கொண்டாள். துக்காராம் உடனடியாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து ஒரு பாடலைப் பாடினார். துக்காராம் பாடி முடிக்கும் போது குழந்தை உயிர் பெற்று எழுந்தது. துக்காராம் எப்போதும் பஜனை மற்றும் கீர்த்தனைகளைச் செய்து வந்தார். எதையும் சம்பாதிக்கவில்லை. தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரிக்கும் பொறுப்பு அவரது மனைவியின் மீது விழுந்தது. துக்காராம் தனது பஜனையில் மிகவும் மூழ்கியிருந்ததால் அவர் தனது உணவை மறந்துவிடுவார். அவரது மனைவி அவரைத் தேடிச் சென்று அவருக்கு உணவை பரிமாறினாள். பெரும்பாலும் அவர் பாம்கிரி மலையில் காணப்பட்டார். துக்கராமின் மனைவி குடும்பத்தை பராமரிப்பதில் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. துக்கராமே அவரது பக்தியையும் தூய்மையையும் பாராட்டியிருக்கிறார்.
துக்கராமின் இறுதி காலத்தில் தனது நண்பர்களிடம் சில நாட்களில் தான் இங்கிருந்து விரைவில் புறப்படுவதாகக் கூறினார். புறப்படுவதற்கு முந்தைய இரவு அவர் ஹரிகதை என்ற ஒரு கீர்த்தனை செய்தார். அதில் ஹரிகதை என்பது மூன்று புனித நதிகள் போன்றது. கடவுள் பக்தர் மற்றும் இறைவனது பெயர் ஆகியவற்றின் சங்கமம் போன்றது. அதைக் கேட்பதன் மூலம் ஒருவரின் அனைத்து பாவங்களும் எரிந்து ஒருவர் சுத்திகரிக்கப்படுகிறார். சுற்றி கிடக்கும் கூழாங்கற்கள் கூட புனிதமாகவும் வழிபாட்டிற்கு தகுதியாகவும் மாறும் என்று பாடியிருந்தார். அவரது இறுதிநாள் நெருங்கி வருவதைக் கேள்விப்பட்டவுடன் முழு கிராம மக்களும் அவரைச் சுற்றி கூடினார்கள். அவர்களிடம் நீங்கள் அனைவரும் குடும்ப வாழ்க்கையின் பொறுப்புகளைச் சுமந்தாலும் பாண்டுரங்கனை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். பந்தர்புரம் உங்களுக்கு மிக அருகில் உள்ளது. அது இந்த பூமியில் உள்ள வைகுண்டம். அங்கு சென்று இறைவனை வணங்குங்கள். மரண நேரத்தில் இறைவனின் நாமம் மட்டுமே உங்களைக் காப்பாற்றும் என்பது எனது அனுபவம். நான் உங்கள் முன் சாஷ்டாங்கமாக விழுந்து இறைவனின் நாமத்தை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்று கண்ணீருடன் மன்றாடுகிறேன். எப்போதும் பகவான் நாராயணனின் கீர்த்தனை மற்றும் பஜனை செய்யுங்கள். உங்கள் பொருள் நலனைப் பற்றி கவலைப்படாதீர்கள். இறைவன் அதைப் பார்த்துக் கொள்வார். இவை அனைத்தும் நிலையற்றவை. இறைவனின் நாமம் நித்தியமானது. ராமகிருஷ்ண ஹரியின் ஜபத்தைச் செய்யுங்கள் என்ற போதனையைக் கொடுத்தார். துக்கராமை அழைத்துச் செல்ல விஷ்ணு பகவான் ரதத்தை அனுப்பினார். இந்த ரதத்தில் துக்காராமை வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இடம் இப்போது வைகுந்தநாதன் ஸ்தானக் கோயில் உள்ளது.
கௌரவர்களின் தலைநகராக இருந்த அஸ்தினாபுரம் நகருக்கு கிருஷ்ணர் வந்தார். பலர் தங்களுடைய வீட்டிற்கு அழைத்தும் அங்கெல்லாம் போகாமல் விதுரனின் வீட்டுக்குச் சென்றார் கிருஷ்ணர். தன்னுடைய வீட்டிற்கெல்லாம் கிருஷ்ணர் வரமாட்டார் என்றிருந்த விதுரரின் வீட்டிற்கு திடீரென்று வந்த கிருஷ்ணரைப் பார்த்ததும் நிலை தடுமாறினார் விதுரர். இங்கும் அங்குமாக ஓடி என்ன செய்வது என்று தெரியாமல் பரபரத்தார். கிருஷ்ணரை இப்படியா நிற்க வைத்து உபசரிப்பது? என்று எண்ணிய விதுரர் ஓடிப் போய் ஓர் ஆசனத்தை எடுத்து வந்து அவருக்கு அருகில் வைத்து விட்டு அந்த ஆசனத்தை நன்றாக தடவித் தடவிப் பார்த்துக் கொண்டே அதில் அமரச் சொன்னார். கிருஷ்ணர் சிரித்தபடியே நின்றார். ஏதேனும் சாப்பிடக் கொடுக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே அடுப்படிக்கு ஓடினார். கண்ணில் பழங்கள் தென்பட்டன. அப்படியே அள்ளியெடுத்துக் கொண்டு கிருஷ்ணரிடம் வந்து கிருஷ்ணா இப்போது என்னிடம் இருப்பது இவை மட்டுமே மறுக்காமல் சாப்பிடுவாயாக என்று கேட்டுக் கொண்டார்.
விதுரர் படபடப்போடேயே காணப்பட்டார். அவரது சிந்தனையில் தான் துரியோதனனின் உப்பைச் சாப்பிடுகிறோம். அவன்தான் தனக்குச் சோறு போடுகிறான். பாண்டவர்களுக்காக கிருஷ்ணர் தூது வந்தபோது மிகப்பெரிய பள்ளம் தோண்டி அதன் மேல் கம்பளம் விரித்து அந்தக் கம்பளத்தின் மீது ஆசனத்தை வைத்திருந்தான் துரியோதனன். கிருஷ்ணர் அந்த ஆசனத்தில் அமர்ந்ததும் கீழே விழுவார். அவரை சிறை பிடிக்கலாம் என்று திட்டம் வைத்திருந்தான் துரியோதனன். இப்படிப்பட்ட கீழ்மையான எண்ண் கொண்ட துரியோதனனின் சாப்பாட்டில் வளர்ந்த நாம் அவனைப் போலவே சிந்தனை கொண்டு சுயநினைவின்றி கிருஷ்ணரை அவமானப்படுத்தும் வகையில் ஏதேனும் பள்ளம் தோண்டி வைத்திருக்கிறோமோ அந்த ஆசனத்தில் ஊசியைச் செருகி வைத்து இம்சிக்கச் செய்திருக்கிறோமோ துரியோதனின் சாப்பாட்டை சாப்பிட்ட எனக்கு அவன் புத்தியானது நம்மையும் அறியாமல் வந்திருக்குமோ எனப் பதைபதைத்தார் விதுரர். விதுரருக்கு எவ்வளவு பெரிய ஞானம். இந்த ஞானியின் கலக்கத்தைக் கண்டு ரசித்த கிருஷ்ணர் விதுரா என்னைக் கண்டதும் நீ படுகின்ற உன் கலக்கமே என் பசியை ஆற்றிவிட்டது என்றார்.
இறைவனுக்காக பூஜை செயல்களில் ஈடுபடும் போது தன்னையும் அறியாமல் தவறு ஏதேனும் செய்து விடுவோமோ நடந்து விடுமோ என்று எண்ணத்தில் இறைவனைத் தவிர வேறு சிந்தனையில்லமால் சிரத்தையுடன் இருக்க வேண்டும். இப்படி இருப்பவர்களே ஞானியாகத் திகழ்கிறார்கள். இறைவன் இவர்களுக்கே முதன்மையில் அருள்கிறார் அரவணைக்கிறார் ஆட்கொள்கிறார் என மகாபாரதத்தில் அற்புதமாக விளக்குகிறார் வேதவியாசர்.
உலகில் முதலில் சிராத்தம் எப்போது உண்டானது?
பிரம்மாவிடமிருந்து அத்ரி என்னும் ஒரு மகரிஷி தோன்றினார். அந்த மகரிஷிக்கு தத்தாத்ரேயர் என்னும் ஒரு பிள்ளை பிறந்தார். அவருக்கு நிமி என்னும் ஒரு புத்ரனுண்டானார். அவர் மிகவும் தபஸ்வி. அவருக்கு ஸ்ரீமான் என்று ஒரு புத்திரர் பிறந்தான். அவன் ஒரு ஆயிரம் வருடம் தவம் செய்து கொண்டிருக்கையில் ஒரு நாள் தனது உடலை விட்டார். இதனால் நிமி புத்ர சோகத்தால் மிகவும் வருத்தமடைந்தார். அந்த உடலுக்கு செய்ய வேண்டிய கிரியைகளை சரியாக செய்து எரித்தார். அடுத்த நாள் அமாவாசை தினம். விடியற்காலையில் எழுந்து இறந்த தனது புத்திரன் மேன்மை நிலையை அடைய என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினார். அப்பொழுது அவர் மனதில் சில சிந்தனை உண்டானது. அதன்படி பிராமணர்களை அழைத்து தனது இல்லத்தில் உணவு சாப்பிடுமாறு கேட்டுக் கொண்டார். அவர்கள் உணவு சாப்பிட அமர்ந்ததும் அவர்களுக்குப் பக்கத்தில் தர்ப்பையை தெற்கு நுனியாக வைத்தார். அவர்களுக்கு திருப்தியாக உணவு பரிமாறினார். அவர்கள் சாப்பிட்டு சென்றதும் அந்த இடத்தில் தன் புத்திரனின் கோத்ரத்தையும் பெயரையும் சொல்லி உணவு தானம் செய்த அதன் பலன் தனது புத்திரனுக்கு போகுமாறு நீரை தரையில் விட்டு பிரார்த்தனை செய்தார். இப்படி செய்ததால் தன் புத்திரனின் ஆத்மாவுக்குத் திருப்தி உண்டாகி விட்டதாக அவருக்கு திருப்தி வந்தது. அடுத்த நாள் அவருக்கு யாரும் இதுவரை செய்யாத தவறான காரியத்தை ஏதும் செய்து விட்டோமோ என்று சிறிது பயம் உண்டானது. இதனை அறிந்தால் ரிஷிகள் ஏதும் சாபம் கொடுத்தது விடுவார்களோ என்று பயந்தார். உடனே தனது வம்சத்தைச் சேர்ந்த அத்ரி மகரிஷியை தியானம் செய்தார். அவரது வருத்தத்தை அறிந்த அத்ரிமகரிஷியும் உடனே அங்கு வந்தார்.
நீ செய்த இந்த கர்மமானது பித்ருக்களுக்குச் செய்த யாகம் ஆகும். ஆகவே நீ பயப்படாதே. நீ ஒரு தவஸ்வி. இறந்து போனவர்களுக்கு இவ்விதம் கர்மங்கள் செய்யவேண்டுமென்று உன் மனதில் தோன்றி பிறகு நீ இதனை செய்திருக்கிறாய். இறந்து போனவர்களுக்கு இவ்விதம் கர்மங்கள் இந்த யுக காலத்தில் செய்ய வேண்டுமென்றும் அதனைத் தொடர்ந்து மக்கள் செய்து அதன் பலனாக பல நன்மைகளை அவர்கள் அடைவார்கள் என்று பிரம்மாவாலேயே வெகுகாலத்துக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. உனது தவ பலத்தினால் உனது மனதில் இது தோன்றும்படி பிரம்மா அருள் செய்தார். சிரத்தையுடன் செய்கிற கர்மமானதால் இதற்கு சிரார்த்தம் என்று பெயர் பெறும் என்று சொல்லி உபதேசித்துவிட்டு பிரம்மலோகம் போய்ச்சேர்ந்தார். பிறகு நிமி அதேமாதிரி மாத மாதம் அமாவாசை அன்று அனுஷ்டிக்க ஆரம்பித்தார். இவரைப் பார்த்து அனைவரும் செய்யத் தொடங்கினார்கள். அப்போது முதல் சிரார்த்தம் உலகத்தில் செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
நிமி ஏற்படுத்திய சிரார்த்த முறைகளை அனைவரும் செய்ய ஆரம்பித்ததால் பித்ருக்களுக்கு ஏராளமான உணவு கிடைத்துக் கொண்டே இருந்தது. அதனை எடுத்துக் கொண்ட பித்ருக்கள் அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப சில துன்பங்களை அனுபவித்தார்கள். இதனை சந்திர பகவானிடம் முறையிட்டார்கள். அவர் பிரம்மாவிடம் போகும்படி சொல்ல பித்ருக்கள் பிரம்மாவிடம் போய்த் தங்களுடைய துன்பத்தை போக்கும்படி வேண்டிக் கொண்டார்கள். பிரம்மா அக்னி பகவான் உங்கள் குறையை நிவர்த்திப்பார் என்று ஆசி கூறினார். பிறகு பித்ருக்கள் அக்னியை வேண்ட அவரும் இனி உங்களிடம் வரும் உணவுகளை என்னுடன் கொடுங்கள் அதிகமான பாகங்களை நான் சாப்பிட்டு எரித்து அழித்து விடுகின்றேன் என்று சொன்னார். அன்று முதல் சிரார்த்தம் செய்யும் போது ஹோமம் செய்யப்பட்டு வருகிறது.
சிரார்த்தம் என்பது ஆதிகாலத்திலேயே வேதங்களில் இருந்தவற்றை ரிஷிகள் தவம் செய்து அறிந்து கொண்டு அதனை பிரம்மாவினால் அறியப்பட்டு செய்யப்படுகிறது. சிரார்த்தம் செய்யும் போது செய்யப்படும் ஹோம அக்னியில் போடப்படும் திரவியங்கள் எல்லாம் பித்ரு கணங்களென்று சொல்லப்படும் தேவதைகளின் வழியாக இறந்து போன ஜீவாத்மாக்களுக்கு கிடைக்கிறது. இந்த ஜீவாத்மாக்ககள் இதனால் ஏதேனும் ஒரு வகையில் நன்மை அடைந்து மேன்மை நிலையை அடைகிறார்கள். அவர்களுக்கு மேன்மை நிலையை கொடுத்த பலனை சிரார்த்தம் செய்தவர்களும் பெற்று தங்களது துன்பத்தை போக்கி மகிழ்ச்சி அடைகிறார்கள்.
பிரம்மா தேவர்களை படைத்து அவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து நீங்கள் யாகங்கள் செய்து என்னை ஆராதித்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். இவர்கள் பிரம்மாவின் கட்டளைப்படி செய்யாமல் தங்களின் ஆசைகளுக்கு ஏற்ப அங்கிருந்த சுகங்களை அனுபவித்துக் கொண்டு பிரம்மா யாகம் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த ஞானம் அனைத்தும் மறந்து போனார்கள். இவர்களுடைய செயலைப் பார்த்த பிரம்மா நீங்கள் எந்த விதமான ஞானமும் இல்லாமல் போவீர்கள் என்று சபித்துவிட்டார். அவர்களிருந்த லோகமும் இவர்களைப்போல் ஞானமில்லாமல் ஆகிவிட்டது. இதனால் பல துன்பங்களை தேவர்கள் அனுபவித்தார்கள். பின் தேவர்கள் பிரம்மாவைச் சரணாகதி அடைந்து தாங்கள் செய்த தவறுக்கு பிராயத்சித்தம் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். நீங்கள் உங்களது சுகங்களினால் உருவான உங்களுடைய பிள்ளைகளிடம் போய் பிராயச்சித்தம் செய்து கொள்ளுங்கள் என்றார். தேவர்களும் அவர்களுடைய பிள்ளைகளிடம் சென்று பிரம்மா சொன்னதுபோல் செய்யும்படி வேண்டிக்கொள்ள அவர்கள் தங்களுடைய தகப்பனார்களான தேவர்களுக்கு பிராயச்சித்தம் செய்து இழந்த ஞானத்தை மீண்டும் கொடுத்து பிள்ளைகளே போங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். தங்களுடைய பிள்ளைகள் தங்களைப் பிள்ளைகள் என்று சொன்னதால் கோபம் கொண்டு இதனை பிரம்மாவிடம் தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட பிரம்மா அவர்கள் செய்ததும் சரிதான். நீங்கள் உங்களுடைய சுகத்தினால் அவர்களுடைய சரீரத்தை உண்டாக்கினீர்கள். அதனால் நீங்கள் அவர்களுக்கு தந்தை ஆனீர்கள். அதுபோல் அவர்கள் உங்களுக்கு பிராயச்சித்தம் செய்து உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்ததால் அவர்கள் உங்களுக்கு தந்தை ஆனார்கள். ஆகையால் அவர்கள் சொன்னது சரிதான். ஞானம் கொடுத்த அவர்கள் பித்ருக்கள் என்று வழங்கப்படட்டும். ஞானம் பெற்ற நீங்கள் தேவர்களென்று வழங்கப்படுவீர்கள் என்று ஆணையிட்டார். அதுமுதல் அவர்கள் பித்ருக்களானார்கள்.
பித்ருக்கள் ஏழு விதமானவர்கள் ஆவார்கள். அவர்களில் ஸுகாலர்கள், ஆங்கிரஸர்கள், ஸுஸ்வதர்கள், ஸோமபர்கள் என்று நாலு வகையினர்களும் உருவத்தை கொண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்கு பித்ரு லோகம் என்றும் பெயர். வைராஜர்கள், அக்னிஷ்வரத்தர்கள், பர்ஹிஷதர்கள் என்ற மூன்று வகையினர்கள் உருவம் இல்லாதவர்கள். தங்களுடைய தர்ம புன்ய பலன் மற்றும் ஞானத்தால் எங்குமிருக்கும் தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள். அணுவிலும் பிரவேசிக்கச் சக்தி உள்ளவர்கள். தங்களுக்கு விருப்பமான ரூபங்களை எடுத்துக்கொண்டு வருவார்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்கு சநாதன லோகம் என்று பெயர். இவர்களுக்குப் பித்ருகணங்கள் என்று பெயர். நம்முடைய இறந்து போன முன்னொர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்கள் இறந்து போனவர்களுக்கு நேரடியாகப் போவதில்லை. அவைகள் நேரடியாக பித்ரு கணங்களுக்கு அல்லது பித்ருக்களுக்குப் போகின்றன. அவர்கள் தங்களுடைய யோக பலத்தால் மூன்று லோகங்களிலிருக்கும் தேவ கந்தர்வ மனுடர்கள் முதலிய எல்லாப் பூதங்களுக்கும் அவர்கள் எந்த இடத்தில் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவர்களுக்குச் சேரும்படி செய்கிறார்கள்.
பீஷ்மர் அவருடைய தகப்பனாருடைய சிராத்தம் செய்து பிண்ட தானம் செய்யும் போது பூமியைப் பிளந்து கொண்டு ஒருகை வெளியில் வந்து பிண்டத்தைக் கொடு என்று கேட்டது. அதில் அநேக ஆபரணங்கள் அணியப்பட்டிருந்தன. அந்தக் கை அவருடைய தகப்பனாருடையது. அவர் இறந்து போவதற்கு முன்னிருந்தது போலவே இருந்தது. பீஷ்மரும் பிதா கையில் பிண்ட தானத்தைச் செய்வது சரியில்லையென்று நினைத்து பூமியில் போட்டு சிரார்த்தம் செய்தார். சிரார்த்தம் பித்ருக்களுக்கு செல்ல வேண்டும் என்ற தர்மம் தெரிந்து நடந்ததற்கு அவர் தகப்பனார் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு வரம் கொடுத்து மறைந்து விட்டார். ஆகையால் நாம் செய்யும் சிரார்த்தம் பித்ரு தேவதைகளுக்குப் போய் பின் அவர்களால் இறந்து போன ஜீவாத்மாக்கள் எங்கு எந்த ரூபத்தில் இருந்தாலும் அங்கு அவர்களுக்கு சேர்ப்பிக்கப் படுகின்றன. இந்த ரகஸ்யம் மார்க்கண்டேயருக்கு சனத்குமாரரால் சொல்லப்பட்டது என்று ஹரிவம்சம் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
தான் வாசித்த இந்தப் பண் எப்படியிருக்கிறது என்ற பார்வையுடன் வீணாதர சிவன். இறைவனின் கை தனது தலையில் வைத்து ஆசி பெற்ற மகிழ்ச்சிப் பூரிப்பில் துள்ளலுடன் அடியவர் நிற்கிறார். வீணாதரசிவன் கையிலுள்ள வீணையில் குடமோ தந்திகளோ இல்லை. இடம் தர்மராஜ ரதம் மாமல்லபுரம்.
துளசி தாசர் இயற்றிய நூல் இராம சரித மானஸம் ஆகும். இராமசரிதமானசா என்பதற்கு இராமர் வாழ்க்கையின் குளம் என்று பொருள்படும். இந்நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்நூலில் துளசிதாசர் இராமரைப் பற்றிய சில கூடுதல் கதைகளையும் சேர்த்துள்ளார். துளசிதாசர் 1511-1623 காலத்தில் வாழ்ந்த ஒரு துறவியும் கவிஞரும் ஆவார். இவர் இராம பக்தியில் சிறந்து விளங்கினார். இந்நூலை அவாதி மொழியில் துளசிதாசர் எழுதினார். அவாதி மொழியைத் தவிர போஜ்புரி மற்றும் பிராஜ்பாஷா மொழிகளிலும் எழுதினார். வால்மீகி இராமாயணம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதால் பலருக்கும் அதனை முழுமையாக புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. துளசிதாசர் எழுதிய இராம சரித மானசா மூலம் பலரால் இராமாயணத்தை எளிதாக படித்து புரிந்து கொள்ள முடிந்தது. துளசிதாசர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் கழித்தார். வாரணாசியில் உள்ள கங்கையில் உள்ள துளசி படித்துறை இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் வாரணாசியில் அனுமனை தரிசித்த இடத்தில் சங்கட மோட்ச அனுமன் கோயிலை நிறுவினார்.
மகாபுராணங்களில் ஒன்பதாவது புராணமான பவிஷ்ய புராணத்தில் சிவன் தனது மனைவி பார்வதியிடம் கூறுவது போல் ஒரு காட்சி உள்ளது. அதில் இராமனின் புகழைப் பாடுவதற்கு கலி யுகத்தில் அவதாரம் எடுப்பதற்காக அனுமனிடமிருந்து வால்மீகி ஒரு வரத்தைப் பெற்றார் என்று சிவன் தனது மனைவி பார்வதியிடம் கூறுகிறார். நாபதாசர் என்ற சான்றோர் ஒருவர் தனது பக்தமாலை என்ற நூலில் கலியுகத்தில் வால்மீகியே மீண்டும் துளசிதாசராக அவதாரம் எடுத்ததாக எழுதியிருக்கிறார். இதனை சான்றாக வைத்து வட இந்தியாவில் பலர் துளசிதாசரை வால்மீகியின் மறு அவதாரம் என்று நம்புகிறார்கள். துளசிதாசரின் இராம சரித மானஸம் என்ற இராமாயணத்தில் இராமர் காட்டுக்கு வனவாசம் செல்ல சரஸ்வதிதேவி காரணம் என்று எழுதியிருக்கிறார். அந்நூலில் உள்ளபடி
ஒரு சமயம் இந்திரலோகத்தில் தேவர்கள் அனைவரும் இந்திரனின் வருகைக்காகக் காத்திருந்தனர். சற்று நேரத்தில் இந்திரன் அந்த அவைக்குள் பிரவேசித்தான். தேவர்கள் அனைவரும் சோகத்தில் இருப்பதைக் கண்டு அனைவருக்கும் என்னவாயிற்று? என்று இந்திரன் விசாரித்தான். அதற்கு தேவர்கள் அயோத்தி நகரம் முழுவதும் விழா கொண்டாட்டத்தில் திளைக்கிறது. அயோத்தி மக்களும் மிகுந்த மகிழ்ச்சியில் மிதக்கின்றனர். தசரதன் மகன் இராமனுக்கு பட்டாபிஷேத்துக்கான நாள் குறித்து விட்டார்கள். இராமன் பட்டாபிஷேகம் செய்து கொண்டு அயோத்தியின் மன்னனாகி விட்டால் அரக்கன் இராவணனையும் மற்ற அரக்கர்களையும் வதைப்பது எப்படி? இராமரின் அவதார நோக்கம்தான் என்னாவது? என்று வருத்தத்துடன் கேட்டனர் தேவர்கள். இதற்கு நாம் என்ன செய்யலாம்? என்று அதிர்ச்சியோடு கேட்டான் இந்திரன். நெடுநேரம் அனைவரும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர்களாய் தேவர்கள் அனைவரும் சேர்ந்து பிரம்ம தேவரை சந்தித்து தங்கள் நிலையை அவரிடம் எடுத்துக் கூறி அவரின் உதவியைக் கோரினர். பிரம்ம தேவர் அவர்கள் அனைவரையும் சரஸ்வதி தேவியை சந்தித்து வேண்டும்படியும் சரஸ்வதி தேவி என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆலோசனையாகக் கூறினார். அதன்படியே தேவர்கள் அனைவரும் சரஸ்வதி தேவியைச் சந்தித்து நிலைமையை அவரிடம் எடுத்துக் கூறி தங்களுக்கு உதவும்படி வேண்டி நின்றனர். அதைக் கேட்ட சரஸ்வதி தேவி மிகவும் வருத்தத்துடன் நீங்கள் சொல்லும்படி நான் நடந்தால் உலகமே என்னை தூற்றுமே இதை என்னால் செய்ய முடியாது என்று மறுத்துக் கூறினாள். ஆனாலும் உலக நலனுக்காக இதை அவசியம் நீங்கள் செய்யத்தான் வேண்டும். தங்களை விட்டால் எங்களுக்காக இதை வேறு யாரும் செய்ய முடியாது என தேவர்கள் சரஸ்வதி தேவியிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர். இராமன் வனவாசம் செல்வதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று சரஸ்வதி தேவி மீண்டும் மறுத்துக் கூற தேவர்களோடு பிரம்மாவும் சேர்ந்து சரஸ்வதி தேவியிடம் வற்புறுத்தி வேண்டினர்.
இராமர் வனவாசம் சென்றால் அரக்கன் இராவணன் மற்றும் பல அரக்கர்கள் இராட்சஸர்கள் அழிவார்கள். இராமரின் பராக்கிரமம் இந்த உலகத்திற்கு தெரியவரும். இராமாயணம் எனும் புனிதக் காவியம் இப்பூமிக்குக் கிடைக்கும். இவை அனைத்தும் உன்னுடைய ஒரு செயலில் இருக்கிறது என்று சரஸ்வதி தேவியிடம் பிரம்மா எடுத்துச் சொல்லி சரஸ்வதி தேவியை சம்மதிக்க வைத்தார். பிரம்மாவின் ஆலோசனையின்படி கலைமகள் சரஸ்வதி தேவி மந்தரையின் ரூபத்தில் கைகேயின் மனதில் பரதன் நாடாள வேண்டும். இராமன் வனவாசம் செல்ல வேண்டும் எனும் நச்சு ஆலோசனை ஊட்டினாள். துளசி தாசர் இயற்றி இராம சரித மானஸம் என்னும் இராமாயணத்தில் இராமர் காட்டுக்கு வனவாசம் சென்றதற்கு இப்படி ஒரு புதிய கோணத்தில் விளக்கம் அளிக்கிறது.
சதுர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடும் 108 தாண்டவங்களுள் ஒன்று மற்றும் பரதநாட்டியத்தில் 39வது கரணம் ஆகும். இங்கு சிவன் எட்டு கைகளோடு சதுர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார். இடம் காமரசவல்லி உடனுறை கார்கோடேஸ்வரர் கோயில். அரியலூர் மாவட்டம்.
அரசன் ஒருவன் தனது படை வீரர்களுடன் காட்டுக் சென்று வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது பசி வந்தது. சுற்றுமுற்றும் பார்த்த போது ஒரு குடிசை தென்பட்டது. அங்கே சென்று நான் பசியோடு இருக்கிறேன். எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று கேட்டன். அங்கிருந்த முனிவர் அரசனைப் பார்த்து யார் நீ என்று கேட்டார். நான் இந்நாட்டின் அரசன் என்று பதிலளித்தான். அதற்கு முனிவர் நீ யார் என்று தான் கேட்டேனே தவிர உனது பதவி பற்றி கேட்கவில்லை. வேறொரு நாட்டு அரசன் உன்னை வென்று இந்த நாட்டை கைப்பற்றிவிட்டால் நீ அரசன் இல்லை. இது உனக்கு தெரியுமா? இப்போது மீண்டும் அதே கேள்வியை கேட்கிறேன். உண்மையில் நீ யார் என்று கேட்டார். அரசனின் மனதில் உண்மையில் நீ யார்? என்ற கேள்வி லேசான சலனத்தை உண்டு பண்ணியது. ஆனாலும் அரசனின் பசியின் காரணமாக சுவாமி பசியின் காரணமாக நான் களைப்பாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் ஏதோ தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றான். இந்த வேளையில் முனிவரின் சீடன் ஒருவன் முனிவருக்கு பழ வகைளை கொண்டு வந்து முனிவரை வணங்கி பழக்கூடையை கொடுத்துச் சென்றான். அரசனை கண்டு கொள்ளவே இல்லை. நாட்டுக்கே அரசனாக இருக்கிறேன். இவன் தன்னை வணங்காமல் செல்கிறானே என்று எண்ணி அரசனின் முகம் இறுகியது. முனிவரும் அவன் கொண்டு வந்த பழத்தில் ஒன்றைக் கூட அரசனிடம் கொடுக்கவில்லை.
முனிவருக்கு தனக்கு பழங்கள் கொடுக்க மனமில்லை போலும் என்றெண்ணி அரசன் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான். முனிவர் அரசனே பார்த்து எனது சீடனுக்கு உன்னைப் பற்றித் தெரியாது. அதனால் உன்னை வணங்காமல் சென்று விட்டான். உண்மையில் யார் நீ என்பதை தெரிந்து கொள்வது நல்லது என்று சொல்லி விட்டு பழங்களை சாப்பிடக் கொடுத்தார். அந்த நேரத்தில் அங்கு ஒரு வீரன் அவசரமாக குதிரையில் வந்தான். அரசே நம் கோட்டையை பகை மன்னர்கள் சூழ்ந்து கொண்டு விட்டனர். தலைநகரில் போர் நடந்து கொண்டிருக்கிறது. வாருங்கள் என்றான் பதைபதைப்புடன். அரசனுக்கு இப்போது பசி காணாமல் போனது. குதிரையை நோக்கி ஓடினான். முனிவர் அவனைத் தடுத்து பழங்களைச் சாப்பிடும்படி கூறினார். சுவாமி நான் இப்போது அமைதி இழந்து தவிக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள் என்று கிளம்ப முயற்சித்தான். முனிவர் அரசனை தடுத்து நிறுத்தி முதலில் சாப்பிடு. களைப்பைப் போக்க சிறிது நேரம் ஓய்வெடு. கொஞ்சம் பொறுமையாக இரு என்று முனிவர் அறிவுரை சொன்னார். முனிவரின் கனிவான வார்த்தைகள் கட்டளை போல் அவனை தடுத்து நிறுத்தியது. அரசனும் பழங்களை சாப்பிட்டு பதட்டம் நீங்கி அமைதியானான். களைப்பின் காரணமாக மரநிழலில் உறங்கி விட்டான். திடீரென்று கண் விழித்ததும் வேகமாக எழுந்து நின்றான். சுவாமி எப்படியோ என்னையும் அறியாமல் நான் தூங்கிவிட்டேன் இப்போது நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். எனது நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றான்.
முனிவர் அரசனிடம் நான் இந்நாட்டின் அரசன். நான் பசியோடு இருக்கிறேன். நான் அமைதியை இழந்து தவிக்கிறேன். நான் அறியாமல் தூங்கிவிட்டேன். இப்போது நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். இப்படி எத்தனையோ விதத்தில் நான் நான் என்று பதில் கொடுத்துக் கொண்டே இருக்கிறாய். இத்தனை நான் சொன்னாயே இதில் எந்த நான் உண்மை. உண்மையில் யார் நீ என்பதை அறிந்தாயா? என்று கேட்டார். அமைதியாக நின்ற அரசனிடம் உடலோ உள்ளமோ உணர்வோ நான் அல்ல. நான் என்பது உண்மையில் ஆன்மா மட்டும் தான். உனது வாழ்வின் அன்றாட விஷயங்களான மக்கள் நாடு போர் வெற்றி தோல்வி என்பதெல்லாம் தற்காலிகமானதே. உயிர் உள்ளவரை மட்டுமே அதற்கு பயன். நீ யார் என்று அறிந்து கொண்டு ஆன்மிக வாழ்வில் வெற்றியடைவதை வாழ்வின் குறிக்கோளாகக் கொள் என்று அறிவுரை கூறினார். முனிவர் சொன்னபடி வாழ்வில் வந்து போகும் பொருட்கள் எதுவும் நிரந்தரமல்ல. நிரந்தரமானது உள்ளே இருக்கக் கூடிய இறைவன் தான் என்று உள்ளத் தெளிவுடன் அரசன் கிளம்பினான். முனிவரின் வார்த்தைகள் அரசனின் உள்ளத்தின் உள்ளே தான் யார் என்று தேட ஆரம்பித்தது.