தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 20 திருப்புன்கூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 20 வது தேவாரத்தலம் திருப்புன்கூர். மூலவர் சிவலோகநாதர். மூலவர் சற்று குட்டையான பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கம் மண் புற்றினால் ஆன சுயம்பு மூர்த்தியாகும். சுயம்பு லிங்கத்தின் மீது குவளை சார்த்தியே காணப்படுகிறார். புணுகு சட்டம் சார்த்தும் நாளில் மட்டும் கவசமின்றி மூலவரை தரிசிக்கலாம். அம்பாள் சொக்கநாயகி, சௌந்தர நாயகி. இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் அம்பாள சொக்கநாயகியின் சந்நிதி தனிக்கோவிலாக ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது. தலமரம் புங்க மரம். இந்த ஊர் புங்க மரம் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்ததால் திருப்புன்கூர் என்றும் புங்க மரத்தடியின் கீழே சிவபெருமான் தரிசனம் கொடுப்பதால் திருப்புன்கூர் என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது. தீர்த்தம் ரிஷப தீர்த்தம். தேவேந்திர தீர்த்தம், நந்தனார் தீர்த்தம், கணபதி தீர்த்தம். இந்த கணபதி தீர்த்தம் விநாயகர் நந்தனாருக்காக வெட்டியதாகும்.

கோவில் 5 நிலை ராஜகோபுரத்துடனும் 2 பிராகாரங்களுடனும் காட்சி அளிக்கிறது. வெளிப்பிராகாரத்தில் குளம் வெட்டிய விநாயகர் சந்நிதியும் சுப்பிரமணியர் சந்நிதியும் தலமரமும் பிரம்மலிங்கமும் உள்ளன. கவசமிட்ட கொடிமரத்தையும் சற்று விலகியுள்ள பெரிய நந்தியை கடந்து சென்றால் உள் வாயிலை அடையலாம். உள்வாயிலின் மேற்புறத்தில் வண்ணச்சுதையில் பஞ்சமூர்த்திகள் காட்சி தருகின்றனர். துவார விநாயகரை வணங்கி உள்வாயிலைக் கடந்தால் உள்பிராகாரத்தில் இடப்பால் சூரியன், நால்வருடன் கலிக்காமரும் சேர்ந்த சந்நிதி. சுந்தரவிநாயகர் சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர் பெரிய திருமேனியுடன் உள்ளார். அடுத்து சூரியன், அக்கினி வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. புங்க மரக்காட்டுப் பகுதியில் இறைவன் புற்று வடிவமாக இருப்பதால் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மாலை 8.30 மணிக்கு குவளை எடுத்துவிட்டு புனுகு சட்டம் சாத்தி வழிபடுகிறார்கள். சுவாமியை திருக்குவளை சாத்தியுள்ள நிலையில்தான் தினசரி பக்தர்களால் காணமுடியும். எல்லாக் கோயில்களிலும் நந்திக்கு நாக்கு இருக்கும். ஆனால் இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு இருக்காது.

துவார பாலகர்கள் எல்லாக் கோயில்களிலும் நேராக இருப்பர். இங்கு தலை சாய்த்து இருக்கின்றார்கள். சுவாமியிடம் தரிசிக்க நந்தனார் என்ற பக்தன் வந்துள்ளார் என்று இறைவனிடம் கூறியதால் இவ்வாறு அமைந்துள்ளளது. குளம் வெட்டிய பிள்ளையார் என்பவர் இங்கு பிரசித்தம். நந்தனாருக்காக அவர் சிவபெருமானை தரிசிக்கும் முன் குளித்து விட்டு வர வசதியாக இந்த பிள்ளையார் ஒரே இரவில் பூதங்களை கொண்டு குளம் வெட்டினார் என்பது வரலாறு.

மேல ஆதனூர் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் நந்தனார் மிகச் சிறந்த சிவபக்தர். இவர் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜப்பெருமானை தரிசிக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் அவரால் உடனடியாக சிதம்பரம் செல்லமுடியவில்லை. அவர் வேலை செய்யும் இடத்திலும் அனுமதி கிடைக்கவில்லை. நாளை போகலாம் நாளை போகலாம் என்றே இருந்தார். அதனால் அவருக்கு திருநாளைப்போவார் என்ற பெயர் ஏற்பட்டது. ஒருநாள் சிதம்பரம் செல்கையில் திருப்புன்கூர் தலத்திற்கு வருகிறார். அப்போது அவர் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது. கோயில் வாசலில் இருந்தபடியே எட்டி எட்டி உள்ளே பார்க்கிறார். சுவாமி தெரியவில்லை. முன்னால் இருக்கும் பெரிய நந்தி மறைத்துக் கொண்டிருந்தது. என்ன செய்வேன் இறைவா என்று மனமுருகுகிறார். மலைபோல் நந்தி படுத்திருக்கே என்று பாடுகிறார். துவார பாலகர்கள் மூலவரிடம் நந்தனார் வந்திருக்கிறார் என்று கூற சிவபெருமான் நந்தானாரின் பக்தியை மெச்சி தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நந்தியை சற்றே விலகி இருக்குமாறு பணித்தார். இறைவன் சொல்படி நந்தி விலக இறைவன் நந்தனாருக்கு காட்சி தந்தார்.

சுவாமிக்கும் அம்பாளுக்கும் அழகில் யார் சிறந்தவர் என்ற போட்டி வந்து விடுகிறது. போட்டி வரும் போது பூலோகத்தில் ஒரு தர்ப்பை புல்லை எடுத்து மூன்று முடிச்சு போட்டு கீழே போடுகிறேன். அது எங்கு எந்த இடத்தில் கீழே விழுகிறதோ அங்கு இருவரில் யார் உருவம் தோன்றுகினதோ அவரே அழகில் சிறந்தவர் என்று சுவாமி சொல்ல அதற்கு அம்பாள் சம்மதிக்கிறாள். அதன்படி சுவாமி தர்ப்பையை கீழே போட தர்ப்பை இந்த இடத்தில் கீழே விழுந்து பஞ்சலிங்கமாக ஆகிவிடுகிறது. அந்த பஞ்ச லிங்கங்கள் இங்கு உள்ளது.

ராசேந்திரசோழன் தன் நாட்டில் மழை இல்லாமல் பஞ்சம் நிலவியதால் எல்லாச் சிவாலயங்களிலும் பூசைகளைச் செய்தான். அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புன்கூர் சிவலோக நாதரை வழிபட்டால் மழை உண்டாகும் என்று கூறினார். மன்னனும் திருப்புன்கூர் வந்து சுவாமியை வழிபட்டான். அப்போது சுந்தரர் அங்கு வந்தார். அரசன் அவரை வணங்கி மழை வர செய்யுமாறு வேண்டினான். சுந்தரரும் மழை வரவழைத்தால் சுவாமிக்குப் பன்னிரு வேலி நிலமளிக்க வேண்டும் என்று மன்னனுக்கு கட்டளையிட்டு விட்டுப் பாடினார். மழை பெய்தது. எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை அதிமகா பெய்வதை கண்ட மன்னன் அதை நிறுத்தாவிடில் பெருஞ்சேதம் உண்டாகும் என்றெண்ணிச் சுந்தரரைப் பார்த்து மழை போதும் என்று கூறினார். சுந்தரர் கோவிலுக்கு பன்னிருவேலி நிலம் கேட்டார். மன்னனும் உடனே தர சுந்தரரும் இறைவனை பாடினார் மழையும் நின்றது. ராஜேந்திர சோழன் கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளான். சுந்தரர் கோவிலுக்கு வந்த போது ஏயர்கோன் கலிக்காமர் நாயனாரும் உடன் வந்து இறைவனை வழிபட்டுள்ளார். இந்த வரலாற்றை சுந்தரர் தனது பதிகத்தில் பாடியுள்ளார்.

சிவபெருமான் திரிபுரத்தை எரித்தபோது அழியாமல் பிழைத்த அசுரர்கள் மூவரில் இருவரை தனது திருக்கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தார். மற்றொருவனை தான் நடனம் ஆடும்பொது அழகிய மத்தளத்தை இசைக்கும்படி அருள் செய்தார் என்ற வரலாற்றை சுந்தரர் தனது பாடலில் பாடி திரிபுர அசுரர்களுக்கு அருள் செய்ததை அறிந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன் என்னை ஏற்றுக் கொண்டருள் என்று தனது பாடலில் இறைவனை வேண்டுகிறார். சுந்தரரின் பாடலில் உள்ள வரலாற்றுப்படி இக்கோவிலில் உள்ள நடராஜ சபையில் உள்ள நடராஜரின் பாதத்தில் தேவர் ஒருவர் தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்யத்தை அடித்து இசை எழுப்புகின்றபடி அமர்ந்துள்ளார்.

இத்தலத்துக் கல்வெட்டுக்களில் இறைவனுடைய திருமஞ்சனத்திற்கும் திருப்பள்ளியெழுச்சிக்கும் பூமாலைகள் கட்டிச்சார்த்துதற்கும் நிலம் விடப்பட்ட செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில் இவ்விறைவன் சிவலோகமுடைய நாயனார் என்று குறிக்கப்படுகின்றார். பிரமன், இந்திரன், அகத்தியர், சந்திரன், சூரியன், அக்கினி, பதஞ்சலி, வியாக்ரபாதர், சப்தகன்னியர், ஏயர்கோன் கலிக்காமர், ராசேந்திர சோழன் வழிபட்டுள்ளனர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 19 திருநின்றியூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 19 வது தேவாரத்தலம் திருநின்றியூர். புராண பெயர் திரிநின்றவூர். மூலவர் மகாலட்சுமீசர், லக்ஷிமிபுரீஸ்வரர். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் லோகநாயகி, உலகநாயகி. தலமரம் விளாமரம், வில்வம். தீர்த்தம் லட்சுமி தீர்த்தம், நீலப்பொய்கை.

கோவில் 3 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான முற்றவெளி உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தியும், கொடிமரத்து விநாயகரும் உள்ளார். வெளிப் பிராகாரத்தில் செல்வப் பிள்ளையார் சந்நிதியுள்ளது. அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. அடுத்து பரசுராமர் வழிபட்ட லிங்கமும், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் சுப்பிரமணியர், நால்வர், மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. அடுத்து நவக்கிரக சந்நிதியும், பைரவர், சந்திரன் உருவங்கள் ஒரு சந்நிதியிலும் உள்ளன. பிரகார வலம் முடித்து துவார விநாயகரையும் தண்டபாணியையும் வழிபட்டு துவாரபாலகர்களைத் தொழுது உட்சென்றால் நேரே சுவாமி சந்நிதியும் வலதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளன. தட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது புறமாக திரும்பி கையில் நாகத்துடன் இருக்கிறான். சுவாமி தன் இடது கையால் அவனுக்கு அருள் செய்யும் கோலத்தில் இருக்கிறார்.

சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வந்த சோழ மன்னன் ஒருவன் இத்தலம் இருக்கும் ஊர் வழியாகவே சென்று திரும்புவான். ஒருசமயம் அவன் சிதம்பரம் சென்ற போது காவலாளிகள் கொண்டு வந்த விளக்கு திரி அணைந்து விட்டது. அதனை மீண்டும் எரிய வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தை கடந்தபோது திரி தானாகவே எரியத்துவங்கியது. இதைப் போலவே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இதற்கான காரணத்தை அவனால் கண்டறிய முடியவில்லை. ஒருசமயம் இப்பகுதியில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இடையனிடம் இத்தலத்தில் மகிமையான நிகழ்ச்சிகள் ஏதேனும் நிகழுமா எனக்கேட்டான். அவர் ஓரிடத்தில் சுயம்புவாக இருக்கும் லிங்கத்தில் பசு பால் சொரிவதாக கூறினான். மன்னனும் அவ்விடம் சென்றபோது சிவலிங்கத்தை கண்டார். அதனை வேறு இடத்தில் வைத்து கோயில் கட்டுவதற்காக தோண்டியபோது ரத்தம் வெளிப்பட்டது. பின் இங்கேயே கோயில் எழுப்பி வழிபட்டார். இன்றும் சிவலிங்கத்தின் மீது உச்சியில் கோடரி வெட்டிய தழும்பு இருப்பதைக் காணலாம். திரி அணைந்த தலம் என்பதால் திரிநின்றியூர் என்று பெயர் பெற்றது. நவக்கிரகத்தில் உள்ள சூரியனும் சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி உள்ளார்கள்.

பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக இருக்கிறார். அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரராக சிறிய பாண வடிவிலும் பரிக்கேஸ்வரர் பெரிய பாண வடிவிலும் அருகில் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர். மகரிஷியான ஜமதக்னியின் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை நீரில் கண்டு வியந்ததால் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமரிடம் கூறினார். பரசுராமனும் தாயை வெட்டினான். அதன்பின் தந்தையிடம் வரம் பெற்று அவளை உயிர்ப்பித்தான். தாயைக்கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் அவன் வழிபட்டு மன அமைதி பெற்றான். ஜமதக்னியும் தான் அவசரத்தில் செய்த செயலுக்கு வருந்தி இங்கு சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார். மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இக்கோவில் கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாக விளங்கியது. நூறு ஆண்டுகளுக்கு முன் நகரத்தார் திருப்பணி செய்தபோது இதை இப்போதுள்ள அமைப்பில் மாற்றிக் கட்டிவிட்டனர். லட்சுமி, பரசுராமர், அகத்தியர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

சுந்தரரின் இரண்டு பதிகங்களில் 1 முதல் 7 பாடல்களே நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. 8, 9, 10 பாடல்கள் சிதைந்து போய் விட்டன. இப்பதிகத்தின் முதல் பாடலில் சிலந்திக்கு அருள் செய்து மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாக பிறக்க அருள் செய்ததைக் குறிப்பிடுகிறார்.

2 வது பாடலில் 4900 பதிகங்கள் பாடிய திருநாவுக்கரசருக்கும், சண்டேசுர நாயனாருக்கும், கண்ணப்ப நாயனாருக்கும் அருள் செய்ததை குறிப்பிடுகிறார்.

3 வது பாடலில் இத்தலத்தின் புராணத்தைக் குறிப்பிடுகிறார். பரசுராமர் தனக்கு காட்சி கொடுத்தருளிய இறைவனுக்கு 300 வேதியர் சூழ 340 வேலி நிலத்தைக் கொடுத்து திருநின்றியூர் என்று பெயரிட்டு பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க அவருக்கு தன் திருவடியை அளித்த இறைவன் என்று குறிப்பிடுகிறார்.

4 வது பாடலில் பசு ஒன்று தன் மடியாகிய கலசத்திலிருந்து பாலைச் சொரிந்து வழிபட்டு இறைவன் திருவடியை அடைந்ததைக் குறிப்பிடுகிறார்.

5 வது பாடலில் இத்தலத்திலுள்ள இறைவனை இந்திரன் வழிபட அவனுக்கு வான நாட்டை ஆட்சி செய்யும் உரிமையை வழங்கியதையும் அகத்தியருக்கு பொதியமலையில் வீற்றிருக்க அருள் புரிந்ததையும் குறிப்பிடுகிறார்.

7 வது பாடலில் துர்வாசர் சாபத்தால் காட்டு யானையாகி திரிந்த தேவலோக யானை ஐராவதம் இறைவனை வழிபட அதற்கு முன்பு இருந்த வடிவத்தையும் விண்ணலகம் அடையும் பேற்றையும் வழங்கியதைக் குறிப்பிடுகிறார்.

இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல மூன்று குளங்கள் உள்ளது. இத்தலத்து தீர்த்தத்தை நீலமலர் பொய்கை என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். மேலும் இங்கு வழிபடுவோர் பயம் பாவம் மற்றும் நோய்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் எனவும் தனது பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 18 கீழையூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 18 வது தேவாரத்தலம் கீழையூர். புராணபெயர் திருக்கடைமுடி, கிளுவையூர், கீழூர். மூலவர் கடைமுடிநாதர் அந்திசம்ரக்ஷணீஸ்வரர். அம்பாள் அபிராமி என்ற பெயருடன் தெற்கு நோக்கி அருள் காட்சி தருகிறாள். தீர்த்தம் கருணாதீர்த்தம், தலமரம் கிளுவை. பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ் கிளுவைநாதர் இருக்கிறார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக சற்று உயர்ந்த பாணத்துடன் அருள்பாலிக்கிறார். இவர் பதினாறு பட்டைகளுடன் சோடஷ லிங்க அமைப்பில் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார். இவருக்கு எதிரே நந்தியும் இருக்கிறது. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இத்தலவிநாயகர் கடைமுடிவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தல கடைமுடிநாதர் பெயர் வடமொழியில் அந்தஸம்ரக்ஷணேஸ்வரர் என்று பெயர். கடைமுடிநாதரை நாம் நமது ஆயுளின் கடைசி காலத்தில் அவரைப் பற்ற வேண்டும் என்றும் அந்தஸம்ரக்ஷணேஸ்வரர் என்ற பெயர் நமது இறுதிக் காலத்தில் நம்மைக் காப்பவர் என்றும் பொருள். உலகம் அழியும் இறுதிக்காலத்திலும் காப்பாற்றுபவராக இங்கு சிவபெருமான் அருளுகிறார். எனவே இவருக்கு கடைமுடிநாதர் என்று பெயர்

கோவில் ஒரு முகப்பு வாயிலுடன் காட்சி தருகிறது .ராஜகோபுரமில்லை. இறைவனின் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. ஏழு ஊர்கள் சேர்ந்து மிகப் பெரிய ஊராண இவ்வூர் ஏழூர் என்று பெயர் பெற்றிருந்தது. பின் மருவி கீழூர் ஆனது. மேற்கு பார்த்து அமைந்த சிவதலம் இது. இத்தலத்தில் காவிரி நதி வடக்கு முகமாக வந்து மேற்கு நோக்கி ஓடுகிறது. வந்தது. பிரகாரத்தில் உள்ள நவக்கிரகம் வலது புறம் திரும்பிய ஆவுடையார் மீது அமைந்திருக்கின்றன. எண்கோண வடிவில் உள்ள ஆவுடையாரில் கிரகங்கள் ஒவ்வொன்றும் நேர்வரிசையில் இல்லாமல் முன்னும் பின்னுமாகவும் அமைந்திருக்கின்றது. இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி இடது காதில் வளையம் அணிந்தும் வலது காதில் வளையம் இல்லாமலும் காட்சி தருகிறார். இவரைப்போலவே பைரவரும் வலது காதில் வளையம் இல்லாமல் இருக்கிறார். இங்கு அம்பாள் வரப்பிரசாதியாக இருக்கிறாள். தெற்கு நோக்கியிருக்கும் இவளது சன்னதி எதிரேயும் ஒரு வாசல் இருக்கிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு வித்தியாசமான பிரார்த்தனை செய்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இவளுக்கு தாலி கட்டி வேண்டிக்கொள்கின்றனர். வரன் அமைந்த பிறகு மீண்டும் அம்பாள் கழுத்திலிருக்கும் தாலியை தங்களது கழுத்தில் கட்டி அம்பாளை வணங்கிவிட்டு மீண்டும் அதனை அம்பாளுக்கே கட்டிவிடுகின்றனர்.

ஆணவம் கொண்டதால் சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மா பூலோகத்தில் பல இடங்களில் சிவபூஜை செய்து வழிபட்டார். அவர் இத்தலத்தில் இறைவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி இறைவனைப் போற்றி வணங்கி வந்தார். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு பிரம்ம தீர்த்தம் எனப் பெயரிட்டு அப்புனித நீரால் இறைவனை வழிபட்டார். இந்த பிரம்ம தீர்த்தம் ஆலயத்தின் நேர் எதிரில் அழகுற விசாலமாக அமைந்துள்ளது. மகிழ்ந்த சிவன் அவருக்கு ஒரு கிளுவை மரத்தின் அடியில் காட்சி தந்தார். பிரம்மா தனக்கு விமோசனம் கேட்டபோது தகுந்த காலத்தில் விமோசனம் கிடைக்கப்பெறும் என்று ஆறுதல் கூறினார். பின் பிரம்மாவின் வேண்டுதல்படியே அவர் இத்தலத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். சகுந்தலையின் வளர்ப்புத்தந்தை கண்வ மகரிஷி இத்தல இறைவனை வழிபட்டு தன் புண்ணிய பலன்களைப் பெருக்கிக் கொண்டார். இவர் காவிரியில் நீராடி வழிபட்ட இடம் இன்று கண்வமஹான் துறை என்ற காரணப் பெயர் கொண்டு விளங்குகிறது. பிரமன், கண்வமகரிஷி ஆகியோர் வழிபட்டுள்ளனர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 17 குறுமாணக்குடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 17 வது தேவாரத்தலம் குறுமாணக்குடி. புராண பெயர் திருக்கண்ணார்கோயில். கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர், சஹஸ்ரநேத்ரேஸ்வரர். இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பாணம் சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன. அம்பாள் முருகுவளர்கோதை, சுகந்தகுந்தளாம்பிகை. தெற்கு நோக்கிய சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் தரிசனம் தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்களும் உரிய கட்டமைப்பில் வடிக்கப்பட்டுள்ளன. தலமரம் சரக்கொன்றை. தீர்த்தம் இந்திர தீர்த்தம். மூலவர் மண்டபத்தில் சந்திரசேகர் திருமேனி உள்ளது. சுவாமிக்குத் தீபாராதனை செய்து அடுத்து அம்பாளுக்கும் தீபாராதனை செய்து அதற்குப்பிறகே திருநீறு குங்குமம் வழங்கும் மரபு இக்கோயிலில் இருந்து வருகின்றது.

கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்திற்கு ராஜகோபுரமில்லை. ஒரு கட்டைக்கோபுர வாயிலும் இரண்டு பிராகாரங்களும் உள்ளது. கோவிலுக்கு வெளியே எதிரில் இந்திர தீர்த்தம் உள்ளது. தீர்த்தக் கரையில் விநாயகர் முருகன் சந்நிதிகள் உள்ளன. கட்டைக்கோபுர வாயிலின் முகப்பின் மேல் ரிஷபாரூடர், விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் உருவங்கள் சுதை வடிவில் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. உள்நுழைந்ததும் நீண்ட கல் மண்டபம் உள்ளது. வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. 2 வது வாயில் வழியே உள்ளே சென்றால் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர், நந்தி பலிபீடங்கள் உள்ளன. உள்மண்டபத்தில் கோஷ்ட தட்சிணாமூர்த்தியை அடுத்தாற்போல் சித்திவிநாயகர் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. பிராகாரத்தில் நால்வரையடுத்து கன்னி விநாயகர் உள்ளார். ஆறுமுக சுவாமி இடத்தில் கஜலட்சுமி சந்நிதி உள்ளது. அதனால் எதிர் மண்டபத்தில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. பிராகாரத்தில் தொடர்ந்து பைரவர், சனிபகவான், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள் மண்டபத்தின் வலதுபுறம் பள்ளியறையும் பக்கத்தில் அம்பாள் சந்நிதியும் உள்ளன.

மகாபலி என்ற மன்னனை வெல்லுமாறு தேவர்கள் வேண்ட திருமால் வாமன அவதாரம் எடுத்தார். குறு மாண் (குள்ளமான பிரமச்சாரி) வடிவில் தோன்றி மாபலியிடம் சென்று மூன்றடி மண் கேட்டார். தனது குருவான சுக்கிராச்சாரியார் தடுத்தும் கேளாமல் மூன்றடி மண் தருவதாக வாக்களித்தான். அப்போது வாமனர் திரிவிக்கிரம வடிவெடுத்து மண்ணை ஓர் அடியாலும் விண்ணை ஓர் அடியாலும் அளந்தார். மூன்றாவது அடியாக மாவலியின் முடி மீது வைத்தார். இவ்வாறு குறு மாண் வடிவில் வந்த திருமால் வழிபட்ட தலம் இக்கண்ணார் கோயிலாகும். அதனால் தான் இத்தலத்திற்குக் குறு மாணக்குடி என்று பெயர் வந்தது.

தேவர்களின் தலைவனான இந்திரன் கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை வெளியே சென்ற சமயம் அகலிகையுடன் சந்தோஷமாக இருப்பதற்காக சூழ்ச்சி செய்தான். இந்திரன் முனிவரின் வடிவம் எடுத்து அகலிகையை பார்க்க சென்றான். இதற்குள் முனிவர் திரும்பி வர இந்திரன் பூனை வடிவமெடுத்தான். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு இந்திரன் உடல் முழுவதும் ஆயிரம் பெண்களுக்கான பெண் உறுப்பு உண்டாகும் படி சபித்தார். அதன் பின் அகலிகையை கல்லாகும் படி சபித்து விட்டார். தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க ராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார் முனிவர். இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மனிடம் சென்றான். அதற்கு பிரம்மன் சில கோவில்களில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். அக்கோவில்களில் குறுமாணக்குடி ஒன்று. இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட அவனது ஆயிரம் குறிகளும் ஆயிரம் கண்களாக மாறி இறைவன் ஏற்றுக்கொண்டார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. எனவே இத்தல இறைவன் கண்ணாயிரமுடையார் ஆனார்.

திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் அணுகாது. நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் வந்தடையும். இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு எமனால் வரும் துன்பங்கள் இல்லை. இத்தல இறைவனை வழிபடுபவர்கள் தம் உள்ளத்தில் மலம் நீங்கப் பெற்றவராய் வானுலகில் இனிது உறைபவராவர். இத்தல பதிகப் பாடல்கள் பத்தினாலும் இறைவனை போற்றி வழிபடுபவர்கள் தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் கூறியுள்ளார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 16 வைத்தீஸ்வரன் கோவில்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 16 வது தேவாரத்தலம் வைத்தீஸ்வரன் கோவில். புராணபெயர் திருப்புள்ளிருக்குவேளூர். புள் – சடாயு என்ற பறவையும், இருக்கு – ரிக் என்ற வேதமும் வேள் – முருகப்பெருமானும், ஊர் – சூரியனும் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற காரணத்தால் இத்தலப்பெயர் புள்ளிருக்குவேளூர் என்று பெயர் வந்தது என்று புராண வரலாறு உள்ளது. மூலவர் வைத்தியநாதர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் தையல்நாயகி, தைல நாயகி. தலமரம் வேம்பு. தீர்த்தம் சித்தாமிர்த குளம். இத்தலத்தீர்த்தம் நோய் நீக்கும் ஆற்றல் உடையது. வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.

நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ கிழக்கிலும் மேற்கிலும் ராஜகோபுரங்களுடனும் ஐந்து பிராகாரங்களுடனும் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. கிழக்கில் உள்ள 7 நிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் அங்கு காணப்படும் வேப்பமரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும். இந்த மரத்தினடியில் ஆதி வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு உள்ளார். எதிரில் வீரபத்திரர் சந்நிதி உள்ளது. உள்வாயிலைக் கடந்ததும் தண்டபாணி சந்நிதி. அடுத்து இடப்பால் சித்தாமிர்தகுளம் உள்ளது. மேற்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மூலவர் வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு காட்சி தருகிறார். இவரை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவன் கோவிலை தரிசித்த பலன் கிடைக்கும். மேற்கு பார்த்த சிவன் சன்னதியை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளை தரிசித்த பலனைத் தரும் என்கிறது புராணம். பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோவிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன் மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார். பிறவிப்பிணி வைத்தியராகிய வைத்தியநாதப்பெருமான் தையல் நாயகி திருக்கரத்தில் தைலபாத்திரமும் அமிர்தசஞ்சீவியும் வில்வத்தடி மண்ணும் வைத்து 4448 வியாதிகளையும் தீர்க்கின்றார். இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது.

மூலவருக்கு முன் தங்கம் வெள்ளியால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் பத்திரகாளியம்மன் சந்நிதி உள்ளது. வீரபத்திரர், அண்ணபூரணி, தட்சினாமூர்த்தி, கஜலக்ஷ்மி, அஷ்டலக்ஷ்மி, நடராஜர் மற்றும் துர்க்கை சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. நடராச சபையில் சிவகாமியுடன் மாணிக்கவாசகரும், காரைக்காலம்மையாரும் உள்ளனர். ரிக் முதலிய நான்கு வேதங்கள், அமராவதி, கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசுவநாதர் பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தங்களும் சஹஸ்ரலிங்கமும் வரிசையாகவுள்ளன. முருகப் பெருமான் செல்வமுத்துக் குமாரசுவாமி என்னும் நாமத்துடன் அருள்கின்றார், சூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார். குமரகுருபர சுவாமிகள் இத்தலத்து முத்துக்குமராசுவாமியின் மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். அருணகிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார். கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு விசேச பூஜைகள் சந்தன அபிஷேகம் நடைபெறும். அர்த்தசாம பூஜையில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே சுவாமிக்கு வழிபாடு நடைபெறும். பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம் ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குகின்றார்கள். மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது. அங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயிலின் கிழக்கே பைரவர் மேற்கே வீரபத்திரர் தெற்கே விநாயகர் வடக்கே காளி ஆகியோர் இத்தலத்திற்கு காவல் புரிகின்றனர்.

தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு வருபவர்கள் உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர். 4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு திருச்சாந்து எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும், செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் அர்த்தசாமபூஜையில் முருகனின் திருவடிகளில் சாத்தப்பெறும் நேத்திரப்படி சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது. இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் குணமாகும். இதில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன. சதானந்த முனிவர் இங்குள்ள தீர்த்த கரையில் தவம் இருந்த போது தவளையை பாம்பு விழுங்க முயற்சித்து இவரது தவத்திற்கு இடையூறு செய்தது. கோபத்தில் இவர் விடுத்த சாபத்தினால் இந்த தீர்த்தத்தில் பாம்பு தவளை இருப்பதில்லை.

முருகப்பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம். ராமர் வழிபட்டு அருள் நலமுற்ற தலம். இத்தலத்தில் சம்பாதி சடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். சடாயுவின் வேண்டுகோளின்படி ராமபிரான் இத்தலத்தில் சிதையடுக்கிச் சாடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் சடாயு குண்டம் எனப்பட்டது. வீரசேனன் என்ற அரசன் சயரோத்தி என்ற வியாதியினால் பீடிக்கப்பெற்ற சித்திரசேனன் என்ற தன் மகனுடன் இத்தலத்திற்கு வந்து நீராடி இக்குண்டத்திற்கு அதிரசம் வடை முதலியன நிவேதனம் செய்து வேதிகையையும் பொன்னால் திருப்பணி செய்து குண்டத்திலுள்ள நீற்றை அள்ளி எடுத்துத் தானும் அணிந்து தன் புதல்வனுக்கும் அணிவித்து நோய் நீங்கப்பெற்று நலமுற்றான். நவகிரக தலங்களில் அங்காரகன் தலமாகும் அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. வைத்தீசுவரன் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது. செவ்வாய் கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரகமூர்த்தி எழுந்தருள்வார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. முருகர், சூரியன், ரிக் வேதம், அங்காரகன்(செவ்வாய்), ராமர், லட்சுமணன், அநுமான், ஜடாயு, சம்பாதி, பிரம்மன், சரஸ்வதி, லட்சுமி, துர்கை, பரசர், துருவாசர், சிவசன்மன் வணங்கியுள்ளனர், திருஞானசம்பந்தர், அப்பர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 15 திருக்கோலக்கா

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 15 வது தேவாரத்தலம் திருக்கோலக்கா. புராணபெயர் சப்தபுரி, திருத்தாளமுடையார் கோவில். மூலவர் சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் ஓசை கொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள். அம்பாள் சன்னதி தனிக்கோயிலாக உள்ளது. தலமரம் கொன்றை. தீர்த்தம் ஆனந்த தீர்த்தம், சூரிய தீர்த்தம்.

கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயத்திறகு கோபுரம் இல்லை. முகப்பு வாயிலுக்கு எதிரே திருக்குளம் ஆனந்ததீர்த்தம் உள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் தருகிளார். கிழக்கு நோக்கி இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுனையில் ரிஷபாரூடர் தரிசனம் உள்நுழைந்ததும் வலப்பால் வாகன மண்டபம் நுழையும் போது நால்வர், அதிகார நந்தி சன்னதிகள் உள்ளன. பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன. உள்மண்டபத்தில் வலப்பால் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன, நடராஜ சபை உள்ளது. திருஞானசம்பந்தர் பொன் தாளத்தை இரு கைகளிலும் ஏந்தி நிற்கும் உற்சவத் திருமேனி உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கோயிலின் நுழைவு வாயிலிலேயே திருஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும் ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர். திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் திருக்கோலக்கா எனப்பட்டது.

சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா அல்லது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான் தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார். சீர்காழியில் ஞானப்பாலுண்டு பதிகம் பாடத் தொடங்கிய சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது முதல் தல யாத்திரையாக சென்றது இத்தலத்திற்குத் தான். தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இத்தலத்தில் இறைவனைத் துதித்து பதிகம் பாடினார். கைகள் வலிக்குமே என்று திருஞானசம்பந்தருக்காக இத்தலத்து இறைவன் திருஞானசம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் என்ற தாளங்களை கொடுத்து அருளினார். எனவே தான் இங்குள்ள மூலவர் தாளபுரீஸ்வரர் என பெயர் பெற்றார். இறைவன் கொடுத்த தாளங்களை தட்டிப்பார்த்தார் திருஞானசம்பந்தர். அதிலிருந்து ஓசை வரவில்லை. உடனே இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆகையால் இத்தலத்து அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர். திருஞானசம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனை சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். திருவைந்தெழுத்து பொறித்த தாளத்தை இறைவன் அருள அதற்கு தெய்வீக ஓசையை இறைவி தந்து அருள் செய்த தலம் இதன்பொருட்டே இக்கோயில் திருத்தாளமுடையார் கோயில் என்றழைக்கப்படுகிறது.

பிற்காலத்தில் இப்பகுதியில் தன் ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்ட தாய் ஒருத்தி அவ்வாறே இறையருளால் தன் மகன் பேசும் வல்லமை வெற மகிழ்ந்து கோயிலுக்குத் தன் காணிக்கையாகச் செய்து தந்துள்ள பொற்றாளம் கோயிலில் உள்ளது. அகத்தியர் கண்வர் வழிபட்டுள்ளனர், திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

Sapthapureeswarar Temple,Thirukolakka,Nagapattinam district ...

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 14 சீர்காழி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 14 வது தேவாரத்தலம் சீர்காழி. புராணபெயர் திருக்காழி. மூலவர் சட்டைநாதர், பிரமபுரீஸ்வரர், தோணியப்பர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இரண்யனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து அதன் தோலைச் சட்டையாகப் போர்த்துக் கொண்டதால் சுவாமித் இத்திருநாமத்தைக் கொண்டார். அம்பாள் பெரிய நாயகி, திருநிலைநாயகி. தலமரம் பாரிஜாதம், பவளமல்லி. தீர்த்தம் பிரம தீர்த்தம், காளி தீர்த்தம், சூல தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், வைணவ தீர்த்தம், இராகு தீர்த்தம், ஆழி தீர்த்தம், சங்க தீர்த்தம், சுக்கிர தீர்த்தம், பராசர தீர்த்தம், அகத்திய தீர்த்தம், கௌதம தீர்த்தம், வன்னி தீர்த்தம், குமார தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கேது தீர்த்தம், அண்ட தீர்த்தம், பதினெண்புராண தீர்த்தம், புறவ நதி, கழுமல நதி, விநாயக நதி என்று 22 தீர்த்தங்கள் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான். இக்கோயிலுக்குள்ளேயே திருஞானசம்பந்தருக்கு தனி சன்னதி உள்ளது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், வெளியே தனியாக உள்ளனர். சுவாமி சன்னதிக்கும் அம்பாள் சன்னதிக்கும் நடுவே திருஞானசம்பந்தர் சன்னதி உள்ளது. மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இத்தல விநாயகர் ரொணம் தீர்த்த விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கணநாத நாயனார் அவதரித்த தலம். கோவில் வளாகத்தில் கணநாத நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது
இத்தலத்திற்குப் பன்னிரண்டுத் திருப்பெயர்கள் உண்டு.

1, பிரம்மபுரம் – பிரம்மன் வழிபட்டதால் இப்பெயர்.

2, வேணுபுரம் – இறைவன் மூங்கில் வடிவில் தோன்றினான்.

3, புகலி – சூரனுக்குப் பயந்த தேவர்களின் புகலிடமாய் விளங்கியது.

4, வெங்குரு – குரு பகவான் வழிபட்டது.

5, தோணிபுரம் – பிரளய காலத்தில் இறைவன் தோணியில் காட்சி தந்ததால் இப்பெயர்.

6, பூந்தராய் – பூமியைப் பிளந்து சென்று இரணியாக்கதனைக் கொன்ற வராகமூர்த்தி (திருமால்) வழிபட்டது.

7, சிரபுரம் – சிரசின் (தலை) கூறாய் உள்ள இராகுக் கிரகம் பூசித்தது.

8, புறவம் – புறா வடிவத்தில் வந்த அக்கினியால் சிபிச் சக்கரவர்த்தி பேறு பெற்றது.

9, சண்பை – சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த தம் குலத்தவர்களால் நேர்ந்த பழி தீரக் கண்ணபிரான் வழிபட்டது.

10, சீகாளி (ஸ்ரீகாளி) – காளிதேவி சிதம்பரத்தில் நடராசப்பெருமானோடு வாதாடிய குற்றம் நீங்க வழிபட்டது.

11, கொச்சைவயம் – மச்சகந்தியைக் கூடிய பழிச்சொல் நீங்கப் பராசரர் வழிபட்டது.

12, கழுமலம் – மலத் தொகுதி நீங்குமாறு உரோமசமுனிவர் வழிபட்டது.

சீர்காழியில் உள்ள இவ்வாலயம் மிகவும் பெரியதாக ஊரின் நடுவே நான்கு கோபுர வாயில்களுடன் அமைந்துள்ளது. கிழக்கு திசையிலுள்ள ராஜகோபுரம் தான் ஆலயத்தின் பிரதான வாயில். இத்தலத்தில் இறைவனுக்கு மூன்று சந்நிதிகள் இருக்கின்றன. கோவிலில் நுழைந்ததும் ஆஸ்தான மண்டபத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தினுள் சென்றால் பிரம்மபுரீஸ்வரரின் சந்நிதி கிழக்கு நோக்கி கோவிலின் குளத்தருகே அமைந்துள்ளது. இவருக்கு வலப்பக்கம் திருஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக உள்ளார். சின்னஞ்சிறிய குழந்தை வடிவில் இடது கையில் சிறு கிண்ணம் இருக்கும். இறைவி ஞானத்தைப் பாலில் குழைத்து கிண்னத்தில் கொடுத்ததின் அடையாளமாக கிண்ணம் உள்ளது. கோவிலின் வடபகுதியில் திருநிலைநாயகியின் கோவிலும் இதன் முன்னே பிரம்மதீர்த்தமும் உள்ளன. இந்த பிரம்ம தீர்த்தக்கரையில் தான் இறைவி திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தருளினார். கோவிலின் உள்ளே ஒரு கட்டுமலை மீது தோணியப்பர் பெரியநாயகி சமேதராகக் காட்சி தருகின்றார். தோணியப்பர் மற்றும் பெரியநாயகியின் திரு உருவங்கள் சுதையாலானவை. இச்சந்நிதியின் மேல் தளத்திற்கு சில படிகள் ஏறிச் சென்றால் கட்டுமலை உச்சியில் தெற்கு நொக்கியவாறு சட்டைநாதர் சந்நிதி உள்ளது. சட்டைநாதர் பெயரிலேயே தேவஸ்தானம் விளங்குகிறது. குறுகலான வழியே நுழைந்து மரப்படிகளேறித் தரிசிக்க வேண்டும்.

ஊழிக்காலத்தில் உலகம் அழிந்த பின் சிவபெருமான் 64 கலைகளையும் ஆடையாக தரித்து ஓம் என்ற பிரணவமந்திரத்தை தோணியாக்கி உமா மகேஸ்வரராக வருகையில் ஊழிக்காலத்திலும் அழியாத இந்த சீர்காழி தலத்தை பார்த்தார். மூல க்ஷேத்திரம் என்று தோணியுடன் இத்தலத்தில் எழுந்தருளி தோணியப்பர் என பெயர் பெற்றார். அம்பாள் திருநிலை நாயகி எனப்பட்டாள். இங்கு சிவனை பிரம்மா பூஜித்ததால் பிரம்மபுரீசுவரராக லிங்க வடிவிலும் ஆணவங்களை அழிப்பவராக சட்டை நாதராகவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார். இவர்கள் திருஞானசம்பந்தருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்திருக்கின்றார்கள். இக்கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக உள்ளது. உச்சியில் உள்ள அடுக்கில் சட்டைநாதர் அருள்பாலிக்கிறார். நடு அடுக்கில் உமாமகேஸ்வரர் உள்ளனர். இவரை தோணியப்பர் என அழைக்கிறார்கள். கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இவர் சிவனின் அம்சங்களில் பைரவ அம்சமாக திகழ்கிறார். மகாபலி சக்கரவர்த்தியை அழித்த தோஷம் விஷ்ணுவிற்கு பிடித்து கொண்டது. விஷ்ணு வேறு தான் வேறு இல்லை என்பதால் அவரது தோலை சிவன் சட்டையாக அணிந்து கொண்டார். ஆனால் விஷ்ணுவை சிவன் அழித்து விட்டதாக நினைத்து மகாலட்சுமி தலையில் பூ வைத்து கொள்ளாமல் ஆழ்ந்த கவலையில் இருந்தாள். இப்போதும் கூட இவரது சன்னதிக்கு வரும் பெண்களை பூ வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. ஆண்கள் சட்டை அணியக்கூடாது. பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம். பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம். இத்தல அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக சக்தி பீடத்தில் 11வது பீடமாக அமர்ந்துள்ளார்.

காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம். இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர். 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோயில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டைநாதரை தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சாத்தி வடை மாலை அணிவித்து பாசி பருப்பு பாயசம் நைவேத்யம் செய்யப் படுகிறது. உரோமச முனிவர் கயிலை சென்று சிவனை நோக்கி தவம் செய்து இறைவா பக்தர்களின் குறை தீர்க்க தென்திசையில் தேவியுடன் எழுந்தருளி கயிலை தரிசனம் தரவேண்டும் என வேண்டினார்.

ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் கயிலையை மூடிக்கொண்டார். வாயுவால் மலையை அசைக்க கூட முடியவில்லை. தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் ஒரு தலையை மட்டும் தூக்க வாயுவின் வேகத்தினால் சிறு பகுதி பெயர்ந்தது. இறைவனின் அருளால் இந்த சிறு மலையை 20 பறவைகள் சீர்காழிக்கு கொண்டு வந்து சேர்த்தன. படைக்கும் தொழிலைச் செய்த பிரம்மா தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான் பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.

சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர் பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும் இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர். திருஞானசம்பந்தர் பிறந்து நடந்து மொழி பயின்ற அவரது வீடு திருஞானசம்பந்தர் தெருவில் உள்ளது. தற்போது அது தேவாரப் பாடசாலையாக இயங்குகின்றது. பிற்கால சோழ, பல்லவ, விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகள் மொத்தம் நாற்பத்தாறு உள்ளன, இரண்டாம் மூன்றாம் குலோத்துங்கச் சோழன், வீரராஜேந்திரன், இராசகேசரி வர்மன், கிருஷ்ணதேவராயர் காலத்திய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சீர்காழி அருணாச்சலக்கவிராயர் இத்திருக்கோயிலுக்கு தலபுராணம் பாடியுள்ளார். பிரமன், குருபகவான், திருமால், சிபிச்சக்கரவர்த்தி, காளி, பராசர முனிவர், உரோமசமுனிவர், இராகு, கேது, சூரியன், அக்னி, ஆதிசேடன், வியாசமுனிவர், முருகப் பெருமான் வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தரின் நட்பைப் பெற்று அப்பர் எனப் பெயர் பெற்ற தலம். சுந்தரர் இங்கு வந்தபோது திருஞானசம்பந்தப்பெருமான் அவதரித்த இடம் என்று மிதிப்பதற்கு அஞ்சி ஊர் எல்லையில் நின்று பாட சுந்தரருக்கு அங்கேயே இறைவன் காட்சி தந்த தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #13 திருக்குருகாவூர் வெள்ளடை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 13 வது தேவாரத்தலம் திருக்குருகாவூர் வெள்ளடை. புராண பெயர் குருகாவூர். கோவிலின் பெயர் வெள்ளடை. தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் திருக்குருகாவூர் வெள்ளடை என்று அறியப்பட்ட இத்தலம் இப்போது திருக்கடாவூர் என்று அழைக்கப்படுகிறது. மூலவர் சுவேதரிஷபேஸ்வரர், வெள்ளடையீஸ்வரர், வெள்ளடைநாதர். மூலஸ்தானத்தில் வெள்ளடைநாதர் சதுர பீடத்தில் சிறிய பாணலிங்கமாக சுயம்பு மூர்த்தியாக காட்சிதருகிறார். அம்பாள் நீலோத்பலவிசாலாட்சி, காவியங்கண்ணி. தீர்த்தம் பால் கிணறு. தலவிருட்சம் வில்வம். இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் இவருக்கு மேலே குடையும் இரண்டு சாமரங்களும் இருக்கிறது. முருகன் தெற்கு திசை நோக்கி வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென் திசையை பார்த்திருப்பதால் இவர் இங்கு குரு அம்சமாக வீற்றிருக்கின்றார். இவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோஷ்டத்தில் சட்டைநாதர் துர்க்கையம்மன் உள்ளனர். துர்க்கை எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள் . ஒரு பிரகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. நவக்கிரக சன்னதி கிடையாது. பிரகாரத்தில் துர்வாசர் சாந்த கோலத்தில் சிரித்தபடி காட்சி தருகிறார். இவர் இடது கையில் ஏடு வைத்து வலக்கையில் அருள் செய்தபடி காட்சி தருகிறார். சிவலோக நாதர், பூலோகநாதர், பைரவர், சூரியன், சந்திரன், மாவடி விநாயகர் ஆகியோரும் உள்ளனர்.

சுந்தரர் தனது தொண்டர் கூட்டத்துடன் சீர்காழியிலிருந்து யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. அவரால் இக்கோவிலை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இத்தலத்து சிவனை தரிசிக்காமல் சென்றுவிட்டார். வழியில் அவருக்கும் அவர் தொண்டர் கூட்டத்தினருக்கும் பசியெடுத்தது. அப்போது ஒரு முதியவர் அவர் முன்பு சென்றார். சுந்தரரிடம் அவர் அருகில் ஓரிடத்தை சுட்டிக்காட்டி தான் அவ்விடத்தில் சிவனடியார்களுக்கு அன்னம் பரிமாறுவதாகவும் அங்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்படியும் கூறினார். அதன்படி சுந்தரரும் அவருடன் சென்ற அடியார்களும் சாப்பிடச் சென்றனர். அவர்களை முதியவர் உபசரித்தார். அதன் பின்பு சாப்பிட்ட களைப்பில் அன்னப்பந்தலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார் சுந்தரர். சற்றுநேரம் கழித்து அவர் விழித்தபோது அங்கு அன்னதான பந்தலோ சாப்பாடு பரிமாறியதற்கான தடமோ தெரியவில்லை. வியந்த சுந்தரர் தனக்கு அன்னம் பரிமாற வந்தது சிவன் தான் என அறிந்து கொண்டார். பின்பு சிவனை வேண்டவே அவர் இத்தலத்தை அடையாளம் காட்டினார். அதன்பின்பு இங்கு வந்த சுந்தரர் சிவனை வேண்டி பதிகம் பாடினார். சுந்தரருக்கு சிவன் அன்னம் பறிமாறிய விழா சித்ராபவுர்ணமியன்று நடக்கிறது. இங்குள்ள காவியங்கண்ணி அம்பிகைக்கு சுகப்பிரசவ நாயகி என்ற பெயர் உண்டு. அம்பிகைக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதையே பிரசாதமாக எடுத்துச்செல்கிறார்கள். இதனால் சுகப்பிரசவம் ஆகும்.

சைவ சமயம் தழைக்க பாடுபட்ட திருஞானசம்பந்தர் மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க திருஞானசம்பந்தர் காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார். தான் காசிக்கு செல்ல அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார். திருஞானசம்பந்தருக்கு காட்சி தந்த சிவன் அவரை சீர்காழிக்கு செல்ல வேண்டாமென்றும் இத்தலத்தில் அவருக்கு கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்கு வந்த திருஞானசம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன் இங்கிருந்த கிணற்றில் கங்கையை பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர் பாவம் நீங்கப்பெற்றார். இவ்வாலயத்தின் தீர்த்தமான இக்கிணறு பால்கிணறு என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனிச்சுற்று மதிலுடன் உள்ளது. தை அமாவாசை நாளன்று இறைவன் தீர்த்தம் கொடுக்கும் சமயத்தில் இக்கிணற்று நீர் பால் நிறமாக மாறுகிறது. திருஞானசம்பந்தருக்காக இங்கு தை மாத அமாவாசையன்று கங்கை நதி கிணற்றில் பொங்கியது. இதன் அடிப்படையில் தற்போதும் தை அமாவாசையன்று ஒருநாள் மட்டும் இந்த தீர்த்தம் திறக்கப்படுகிறது. அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள். மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது. பிற்காலத்தில் இத்தலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. கோயிலில் முதலாம் குலோத்துங்கன், முதலாம் இராசேந்திரன், விக்கிரமசோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. திருஞானசம்பந்தர். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #12 கீழைத்திருக்காட்டுப்பள்ளி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 12 வது தேவாரத்தலம் கீழைத்திருக்காட்டுப்பள்ளி. மூலவர் ஆரண்யேஸ்வரர், ஆரண்யசுந்தரர். அம்பாள் அகிலாண்டநாயகி. அம்பாள் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறார். தலமரம் பன்னீர் மரம். தீர்த்தம் அமிர்த தீர்த்தம். இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காட்டழகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. மூலவர் மேல் உள்ள விமானம் துவைதளம் என்று அழைக்கப்படுகிறது. பிரகாரத்தில் தசலிங்கம் சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் உள்ளது. இந்த அமைப்பை திருஞானசம்பந்தர் தன்னருகே தசலிங்கம் கொண்ட உடையார் என பாடியிருக்கின்றார். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி கிடையாது. இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீபிரம்மேஸ்வர லிங்கத்தை வழி படுவோர் 100 அஸ்வமேத யாகங்கள் செய்த பலனைப் பெறுவார்கள் என்று புராண வரலாறு சொல்கிறது.

இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் பிரம்மேசர், முனியீசர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன. சுப்பிரமணியர், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கருவறைச் சுவரில் வெளிப்புறத்தில் ஓரிடத்தில் மன்னன் ஒருவன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற சிற்பமுள்ளது. பிரகார வலம் முடித்து வாயில் நுழைந்தால் மண்டபத்தில் மேற்கு நோக்கிய சுவாமி சந்நிதியும் இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் ஒரு சேரத் தரிசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளனர். சுவாமி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி ஆறு பேருடன் காட்சி தருகிறார். இவர் ராஜயோக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வனால் வழிபடப்பட்ட இத்தலத்திலுள்ள விநாயகர் நண்டு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருக்கின்றது. பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூசிக வாகனம் இங்கு இல்லை. நண்டு இவருக்கு வாகனமாக இருப்பதால் மூசிக வாகனம் இல்லை. ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது. அவரது பெயரால் சுவாமி ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுவதாவும் வரலாறு உள்ளது. கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது.

பிரம்மாவிடம் வரம் பெற்ற விருத்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். ததீசி முனிவரின் முதுகுத் தண்டை ஆயுதமாகப் பெற்ற இந்திரன் விருத்திராசுரன் அசுரனை அழித்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோக தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க குருவிடம் ஆலோசனை செய்தான். பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன் இத்தலம் வந்தான். அடர்ந்த வனத்தின் மத்தியில் சிவன் சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக்கண்ட அவன் சிவபூஜை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன் அருள் செய்தார். இவரே இங்கு ஆரண்யேஸ்வரராக காட்சி தருகிறார். இக்கோயிலுள் பிரம்மேசர் முனியீசர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன. இந்திரன், நண்டு ஆகியோர் வழிபட்டுள்ளனர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #11 திருவெண்காடு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 11 வது தேவாரத்தலம் திருவெண்காடு. மூலவர் சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர், திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். அம்பாள் பிரமவித்யாநாயகி. மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து சுவேதாரண்யரை கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள். நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ வலது மேற்கரத்தில் அக்கமாலை உள்ளது. 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் ஆகும். தலமரம் வடஆலமரம், கொன்றை, வில்வம். தீர்த்தம் சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள். நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் தல விருட்சத்தின் கீழ் உள்ளது. பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும் மெய்கண்டார் அவதரித்ததும் இங்கு தான்.

ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்னி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர் மெய்கண்டார் சன்னதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரியதீர்த்தமுள்ளது. இத்தலத்தில் சந்திரன் வழிபட்ட லிங்கம் உள்ளது. கரையில் சூரிய தீர்த்த லிங்கம் உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சன்னதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சன்னதி தனிக் கோயிலாகவுள்ளது. இத்தல விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு. இத்தலத்தில் சுவேதாரண்யர், அகோரர், நடராசர் என 3 மூர்த்திகள் உள்ளனர். பிரம்மவித்யாநாயகி, துர்க்கை, காளி என 3 அம்பாள் உள்ளனர். சூரிய, சந்திர, அக்கினி என 3 தீர்த்தங்கள் உள்ளது. வடஆலமரம், கொன்றை, வில்வம் என 3 தலவிருட்சம் என்று எல்லாமே மூன்றாக உள்ளது.

சிவபெருமான் பக்தர்களுக்காக 64 வித உருவங்களில் காட்சியளித்துள்ளார். இவர் 43 வது உருவம் ஆகும். சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தி இத்தலத்தில் மட்டுமே உள்ளார். இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம். பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது. இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. இவர் இங்கு நவதாண்டவம் புரிந்தார். எனவே ஆதி சிதம்பரம் என்றும் பெயர் உள்ளது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை உள்ளது. ஸ்படிக லிங்கமும் சிதம்பர ரகசியம் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது. இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். சரணடைந்தவர்களைக் காப்பதில் இவருக்கு நிகர் இவரே என்பதால் அகோரமூர்த்தி எனப்படுகிறார். மூலவர் அகோரமூர்த்தியும் உற்சவ அகோரமூர்த்தியும் இருவருமே இடது காலை முன் வைத்து வலக்காலை அடியெடுத்து வைப்பது போல் தன் நடையழகைக் காட்டும் விதமாக சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஞாயிறு இரவு 12:00 மணிக்கும் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு. இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார். திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். புதன் சந்நிதிக்குப் பக்கத்தில் முள் இல்லாத வில்வமரம் உள்ளது. இத்தலம் காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது. காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.

திருஞானசம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும் மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து அம்மா என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். திருஞானசம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்பாள் சன்னதியின் பிரகாரத்தில் உள்ளது. சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது. பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்த கோயில் இது.

பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று நந்தி தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்தது. நந்திதேவர் சிவனிடம் முறையிட சிவன் அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சுவேதாரண்யவரர் சன்னதி மண்டபத்தில் இருக்கும் நந்தியின் உடம்பில் அசுரன் தாக்கிய காயங்களாக ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. மூலவர் உட்புறச் சுவரில் தலப்பதிக கல்வெட்டுகள் உள்ளன. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், என்னும் முக்குளங்களிலும் முறையே நீராடி மூலவர் சுவேதாரண்யேஸ்வரை வழிபட்டால் பெரும் பலனும் நன்மக்கட்பேறும் இறைவன் அருளால் கிடைக்கும். பிரம்மா, விஷ்ணு, இந்திரன், ஐராவதம் வெள்ளையானை, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். இக்கோயிலில் சோழ,பாண்டிய,விஜய நகர அரசர்களின் கல்வெட்டுக்கள் நிறைய உள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.