மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -16

ராஜகுமாரன் உத்தரன் தந்தையின் முன்னிலையில் வந்து வணக்கம் செலுத்தினான். கனகன் யார் என்பதை இப்போது ராஜகுமாரன் அறிந்ததினால் கனகனுக்கு தக்க மரியாதை செலுத்தினான். கனகனின் முகத்தில் காயம் ஆகி இருப்பதை பார்த்த ராஜகுமாரனுக்கு வருத்தம் உண்டாயிற்று. இந்த சான்றோரை காயப்படுத்தியது யார் என்று அவன் அதிகார தோரணையுடன் கேட்டான். அதற்கு ஒரு சுருக்கமான விளக்கம் சொல்லி இது அவ்வளவு முக்கியமான நிகழ்ச்சி அல்ல என்று அரசன் அதை ஒதுக்கி வைத்தான். தந்தை இவர் யார் என்று உங்களுக்கு தெரியாது இவர் காலில் விழுந்து தயை கூர்ந்து அவருடைய மன்னிப்பை பணிந்து கேட்டுக்கொள்ளுங்கள் அப்படி செய்யாவிட்டால் நாம் அனைவரும் ஒழிந்துபட்டு போவோம் என்று அரசரிடம் வற்புறுத்தி கூறினான். அரசனும் ராஜகுமாரன் சொன்ன படியே நடந்து கொண்டான். ஏனென்றால் இது வரையில் சாதாரண ஆளாக தென்பட்ட ராஜகுமாரன் இப்போது திடீரென்று வெற்றிவீரனாக தென்பட்டான்.

அரசர் வெற்றிவிரனான உத்தரனை தழுவிக்கொண்டு அருமை செல்வா செயற்கரிய வீரச் செயலை நீ சாதித்ததை என்னால் நம்ப முடியவில்லை. அசைக்க முடியாத கௌரவ சேனையை எப்படி தோற்கடித்தாய். பசுக்களை எல்லாம் எவ்வாறு மீட்டெடுத்தாய் என்று விளக்கமாக கூறு அதை கேட்க ஆவலாக இருக்கின்றேன் என்றார். அதற்கு உத்தரன் இச்செயலை செய்தது நான் இல்லை. நானோ தயங்கிக்கொண்டிருந்தேன். அப்போது பராக்கிரமே வடிவான ராஜகுமாரன் ஒருவன் இந்த வீரச்செயலை சாதித்தான். விரைவில் அவன் இங்கு வந்து அனைத்து விஷயங்களையும் விளக்குவான் என்றான்.

ராஜகுமாரன் கௌரவர்களை எதிர்க்க புறப்பட்ட பொழுது ராஜகுமாரன் உத்தரனுடைய தங்கை உத்தரை தனது இசைகுருவான பிருஹன்நளாவிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தாள். போர்க்களத்தில் தனது சகோதரன் வெற்றி அடைந்த பின் எதிரிகளின் பட்டுத்துணிகள் சிலவற்றை பறிமுதல் செய்து தனக்கு கொண்டு வரவேண்டும் என்று அவள் வேண்டினாள். அவளுடைய சகோதரன் உத்தரனும் பிருஹன்நளாவின் செயலால் வெற்றி பெற்றான். பிருஹன்நளா கௌரவர்கள் மயக்கத்தில் இருக்கும் போது பறிமுதல் செய்த பட்டு துணிகளை வெற்றியின் சின்னமாக அவளுக்கு கொடுத்தாள். தன்னுடைய இசை ஆசிரியரிடமிருந்து அவைகளை பெற்று அவள் பெருமகிழ்ச்சி அடைந்தாள்.

மூன்று நாட்களுக்கு பிறகு பாண்டவ சகோதரர்களும் திரௌபதியும் நீராடிவிட்டு ராஜவீதியில் உடை அணிந்து கொண்டு ராஜ சபை மண்டபத்திற்கு போனார்கள். அங்கு அரசனுக்குரிய சிம்மாசனத்தின் மீது ஏறி யுதிஷ்டிரன் அமர்ந்து கொண்டான். ஏனைய சகோதரர்கள் அவரவர்கள் அந்தஸ்துக்கு உரிய ஆசனங்களில் அமர்ந்து கொண்டார்கள். வழக்கம் போல் விராட மன்னன் மந்திரி பிரதானிகள் புடைசூழ சபைக்கு வந்தான். வந்தவன் தான்னுடைய சிம்மாசனத்தின் மீது கனகன் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். கனகா என்னுடைய ராஜசபையில் பகடை விளையாடுபவனாக உன்னை வைத்து நேசித்து வந்தேன். இப்பொழுது ராஜரீதியில் உடையணிந்து கொண்டு என்னுடைய சிம்மாசனத்தின் மீது அமர்ந்து இருக்கின்றாய் இப்படி நடந்துகொள்வது உனக்குப் பொருந்தாது. உன்னுடைய உயிரை காப்பாற்ற விரும்பினால் ஏன் இப்படி நடந்து கொண்டாய் என்ற சரியான காரணத்தைக் கூறு என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் புன்னகை பூத்த பாங்கில் ஒன்றும் பேசாது அரசரை பார்த்துக் கொண்டிருந்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.