தர்மம்

ஒரு குடும்பம் காசிக்குச் சென்று அங்கேயே தங்க நேரிடுகிறது. வேதம் ஓதுவதும் குழந்தைகளுக்கு தர்மத்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். தன் ஒரே மகளை நிறைய தர்ம சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தை கற்றுத் தருகிறார் மகளும் வளர்கிறாள். மகள் வளர இவளுக்கு ஒரு திருமணத்தை செய்ய எண்ணுகிறார். மகளோ பிடிவாதமாக நான் இறை சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம் காசி விஸ்வநாதர் மீது ஆணை என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி ஒதுங்கி விடுகிறாள்.

தந்தை போதித்தவற்றை செயல்படுத்தினால் என்ன என்று மகளுக்கு ஒரு ஆசை. எனவே பல ஊர்களில் இருந்து காசிக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும் உணவு தருவதும் என்று ஒரு அறப் பணியைத் துவங்க காலம் செல்லச் செல்ல இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார் என்று அறிந்து பலர் மருத்துவ உதவி கல்வி உதவி வேண்டும் என்று கேட்க இவளும் செய்து கொண்டே வருகிறாள். அந்தக் காசி மாநகரம் முழுவதும் இவள் புகழ் பரவத் தொடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து ஒரு கட்டத்தில் வறுமை இவளை சூழ்ந்து கொண்டது. இப்பொழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க வேறு வழியில்லாமல் அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சிறு தொகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள். ஒரு கட்டத்திலே அவர்களும் இவளுக்குக் கடன் தர மறுத்து விடுகிறார்கள். அது மட்டும் அல்லாமல் முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் கொடு என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள். இந்த வேதனையோடு காசி விஸ்வநாதரை வணங்கி இறைவா நான் செய்தது சரியோ? தவறோ? தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருந்ததால் என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன். ஊரைச் சுற்றி கடன் வாங்கி விட்டேன். எல்லோரும் கடனை திரும்பக் கேட்கிறார்கள். என்னால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை. அந்த கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை கொடு என்று மனம் உருகி இறைவனை வணங்கி வேண்டுகிறாள்.

ஒரு நாள் ஒரு பழுத்த மகான் இவளைத் தேடி வருகிறார். மகளே கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார் அவரைச் சென்று பார். உனக்கு உதவி கிடைக்கும் என்று அந்த மகான் கூறுகிறார். எனக்கு அவரை அறிமுகம் இல்லை. நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா?” என்ற அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது. என்றாலும் துறவி கூறியதால் அன்று மாலை அந்த செல்வந்தர் இல்லத்திற்குச் செல்கிறாள்.

அவரைச் சுற்றி ஊர்ப்பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையிலே பெண்ணே உனக்கு என்ன வேண்டும் எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய் என்று செல்வந்தன் கேட்க இவள் தயங்கி ஒரு துறவி தான் தன்னை இங்கு அனுப்பினார் என்றும் தனக்கு ஏற்பட்டுள்ள கடன் மற்ற பிரச்சினைகளைப் பற்றிக் கூறி ஐந்து லட்சம் கடன் ஆகிவிட்டது. நீங்கள் ஐந்து லட்சம் தந்தால் காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது பணி செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன் என்றாள். அந்த செல்வந்தர் யோசிக்கிறார். இவள் மிகப் பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது. ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லட்சம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். தர முடியாது என்றால் நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும் என்று எண்ணி அந்த செல்வந்தர் மிக சாமர்த்தியமாகப் பேசுகிறார்.

உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார். நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும் நீர்த்தடங்களை அமைப்பதும் கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய். பாராட்டுகிறேன். உனக்கென்று கொஞ்சம் செல்வத்தை வைத்துக் கொள்ள வேண்டாமா? உன் செல்வத்தை தர்மம் செய்தாய். ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி தர்மம் செய்தாய்? நீயே நடு வீதிக்கு வந்து விட்டாய். எப்படி உன்னால் என்னிடம் வாங்கிய கடனை திருப்பித் தர முடியும்? அடுத்ததாக நான் கடன் கொடுத்தால் அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய். எதை நம்பி நீ கேட்கின்ற அந்த பெரிய தொகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது என்று அந்த செல்வந்தர் கேட்கிறார்.

இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி அய்யா நீங்கள் கூறுவது உண்மைதான். காசி விஸ்வநாதர் மீது ஆணை. எப்படியாவது சிறுக சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள் என்று கேட்கிறாள். மன்னித்து விடு பெண்ணே அடமானம் இல்லாமல் நான் எதுவும் தருவதற்கு இல்லை என்று செல்வந்தர் கூற அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு அய்யா உங்களுக்கே தெரியும். உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நான் ஆங்காங்கே பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று. தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பொதுக்குளம் கூட அடியேன் கட்டியது தான். இந்த நீரை தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன. இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இந்தத் திருக்குளத்திலே நாளை காலை சூரிய உதயத்தில் இருந்து யாரெல்லாம் நீர் பருகிறார்களோ அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன்.

ஐந்து லட்சத்திற்கு உண்டான அசல் வட்டிக்கு சமமான புண்ணியம் எப்பொழுது உங்களிடம் வந்து சேருகிறதோ அப்பொழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன் என்றாள். செல்வந்தர் பெண்ணே புண்ணியம் அரூபமானது. கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து புண்ணியம் என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்கிறார். அய்யா அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள் என்று அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.அங்கே குளக்கரையிலே கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி எம்பிரானே அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக்காட்டக் கூடாது. என்றாலும் கடனிலிருந்து தப்பிக்க இந்த அபவாதத்தை செய்கிறேன். ஈசனே இந்த திருக்குளத்தின் அடியில் நீ இருக்க வேண்டும். எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து அசலும் வட்டியுமான புண்ணியம் இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும் ஈஸ்வரா என்று கூறி பஞ்சாக்ஷரம் கூறி வணங்கி அடியவர்களின் துணை கொண்டு அந்த சிவலிங்கத்தை தூக்கி திருக்குளத்தின் நடுவே இடுகிறாள்.

சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது. பிறகு அந்த செல்வந்தரைப் பார்த்து அய்யா நீரின் உள்ளே இருப்பது வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சிவபெருமான் தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். யாரெல்லாம் நீரைப் பயன்படுத்துவார்களோ எத்தனை காலம் ஆகுமோ? எனக்குத் தெரியாது. ஆனால் எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ அப்பொழுதே இந்த சிவலிங்கம் மேலே வந்து மிதக்கும் என்று கூறுகிறாள். அம்மா சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே என்றார். இளம் பெண்ணோ நம்புங்கள். சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும் என்றாள்.

செல்வந்தர் யோசிக்கிறார். இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து பணம் தர மாட்டேன் என்றால் நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும். இவள் கேட்பது மிகச் சிறிய தொகை. அது மட்டுமல்லாது இவள் கூறுவது மெய்யா? பொய்யா? என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம். ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால் இவள் புண்ணியவதி என்பதை நானும் ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும். மாறாக நடந்தால் இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும் என்று எண்ணி அவள் கேட்ட தொகையைத் தருகிறார். அதைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று யார் யாருக்கு தர வேண்டுமோ அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு இறைவா உன்னை நம்பித்தான் இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே என்று வேண்டிக் கொண்டு நிம்மதியாக சிவனை நினைத்து உறங்கச் செல்கிறாள்.

செல்வந்தர் காலையில் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன? என்று குறித்துக் கொண்டே வாருங்கள். எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்து விட்டு வீட்டில் அமர்ந்து கொண்டு குளக்கரையை பார்வையிட துவங்குகிறார். முதலில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று குளத்து நீரை அருந்தி விட்டு மறுபக்கம் செல்கிறது. அவ்வளவுதான். குபுகுபுவென தூப தீப சாம்பிராணி சந்தன மணத்தோடு மேளத்தாளத்தோடு உடுக்கை ஒலிக்க சிவலிங்கம் மேலே வந்து மிதக்கிறார். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கி நிலைகுழைந்து விட்டார். ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே ஐந்து லட்சத்திற்கு சமம் என்றால் அந்த புண்ணியவதி செய்த அறப்பணிகளுக்கு முன்னால் என் செல்வம் அத்தனையும் வீண் என்பதை புரிந்து கொண்டு என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே செல்வம் தான் நிலையானது என்று இருந்தேன். அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள். என்று கூற ஊரே சென்று பார்த்தது. அதன் பிறகு தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து அந்த பெண்ணை தன் பெண்ணாக தத்து எடுத்து கொண்டு தானும் கடைசிவரை தர்மம் செய்து வாழ்ந்தார்.

This image has an empty alt attribute; its file name is Untitled-4-660x320.jpg

மகாபாரதம் முன்னுரை

மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. மகாபாரதம் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்ட இதில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது. நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. சந்திர குலத்தைச் சேர்ந்தவன் துஷ்யந்த மன்னன். இவனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவன் பரதன். இந்தப் பரதனது வம்சத்தைப் பாடுவதால் பாரதம் என்று இந்நூல் அழைக்கப்பட்டது. தொடக்கத்தில் இது 24000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே பாரதம் எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது மகாபாரதம் என அழைக்கப்பட்டது. பரதனது வம்சத்தைச் சேர்ந்தவர்களே பாண்டவர்களும் கௌரவர்களும் ஆவர். இவர்கள் வாழ்க்கையையும், இவர்கள் தமக்குள்ளே நடத்திய போரினையும் மகாபாரதம் விரிவாக விவரித்துள்ளது. பரத வம்சத்தினரைப் போரில் வல்லவர்கள் என்று ரிக் வேதம் கூறுகிறது. பரதனைக் குறித்த செய்திகளைச் சில பிராம்மணங்கள் என்னும் வடமொழி நூல் கூறியுள்ளது. இவர்களுடைய நாடு குரு நாடு என்று பெயர் பெற்றது. இந்த நாட்டைப் பற்றிய குறிப்பை யஜீர் வேதம் வழங்கி உள்ளது.

மகாபாரதம் இயற்றிய வியாசரைப் பற்றி

சத்தியவதி என்பவள் ஓர் பரிசல் ஓட்டுபவள் ஓர் முறை நதியின் அக்கரையிலிருந்து இக்கரைக்குப் பரிசலை ஓட்டிவர முயன்ற போது வஷிஷ்டரின் மகன் சக்தி. சக்தியின் மகன் பராசரர் ரிஷி அவளது பரிசலில் வந்து ஏறினார். பெண்ணே நான் அக்கரைக்கு செல்ல வேண்டும. பரிசலில் என்னை அக்கரைக்கு அழைத்துச் செல்வாயா? என்று கேட்டார். அந்த முனிவரின் முகத்தைப் பார்த்தபோது சத்தியவதியின் உள்ளத்தில் இனம் புரியாத அன்பும், மரியாதையும், பக்தியும் உண்டாயிற்று. பரிசலில் ஏறுவதற்கு வேறு பயணிகள் யாரும் இல்லாதபோதும் அந்த ஒரு பயணிக்காக அவள் பரிசலை ஓட்டினாள்.

பரிசலில் ஏறி அமர்ந்த பராசரர் ரிஷி சத்தியவதியின் முகத்தைப்பார்த்தார். பின்னர் வானத்தைப் பார்த்தார். நான்கு திசைகளையும் பார்த்தார். கை விரல்களால் ஏதேதோ கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு சத்தியவதி என்று அன்புடன் அழைத்தார் சத்தியவதி ஒருகணம் திகைத்து நின்றாள். ஐயா ஏன் பெயர் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள். பெண்ணே உன் பெயர் மட்டுமல்ல உன் இந்தப்பிறவியின் வரலாறு மட்டுமல்ல உன் முந்திய பிறவியின் உண்மைகளையும் கூட நான் நன்கு அறிவேன். உன் உண்மையான தந்தையின் பெயரையும் உன் வளர்ப்புத்தந்தையின் பெயரையும் நான் அறிவேன் என்றார் பராசரர் ரிஷி. மேலே பேச முடியாமல் சத்தியவதி ஆச்சர்யத்தில் வாயடைத்து நின்று அந்த முனிவரை வணங்கினாள். பெண்ணே இந்த மீனவர் கிராமத்தின் தலைவன் உச்சைச்ரவஸ் உன் வளர்ப்புத் தந்தைதான். உன் உண்மையான தந்தை இந்த நாட்டின் அரசனாகிய உபசரிவசு. முந்திய பிறவியில் நீ சொர்க்கலோகத்தில் பித்ருக்களின் மானச கன்னியாக இருந்தாய். ஒருமுறை நீ அறியாமல் செய்த தவற்றின் பயனாக அவர்களின் சாபத்தால் ஒரு மீனின் வயிற்றில் மகளாகப் பிறந்தாய் என்றார்.

இன்று இந்த நேரம் மிகவும் சுபமான சர்வ முகூர்த்த நேரம். இவ்வாறு சர்வ லட்சணங்களும் நிறைந்த ஒரு பெண்ணுடன் நான் இந்தச் சர்வ முகூர்த்த வேளையில் இன்பம் கொண்டால் உலகுக்கெல்லாம் ஒளியாக விளங்கக்கூடிய ஒரு உத்தமமான குமாரன் பிறப்பான். நீ அதற்கு உடன்படுகின்றாயா? என்று கேட்டார். சுவாமி நான் என் தந்தையின் பாதுகாப்பில் வளரும் இளம் பெண். நீங்கள் சொல்வது எனக்குப் பொருந்துமா? என்று கேட்டாள். சத்தியவதி என் பெயர் பராசரன். பராசர முனிவர் என்று எல்லாரும் என்னை அழைப்பார்கள். நீயும் நானும் இன்று இந்த நதியின் நடுவில் சந்திக்க வேண்டுமென்பது இறைவன் வகுத்த விதி. அதேபோல் உனக்கும் எனக்கும் பிறக்கப்போகும் அருந்தவப் புதல்வன் உலகம் போற்றும் உத்தம மகா முனிவராக விளங்குவான் என்பதும் இறைவனின் சித்தம் என்றார். மேலும் இந்த சர்வ முகூர்த்த வேளையில் நாம் இருக்கும் இந்த இடம் முழுவதும் மூடுபனியால் மூடப்பட்டு விடும். யாருமே நம்மைப் பார்க்க மாட்டார்கள் என்று கூறினார். அவர் இவ்வாறு கூறியதும் சத்தியவதி அவரது விருப்பத்துக்குச் சம்மதித்தாள். அடர்ந்த மூடுபனிக்கு நடுவே பராசர முனிவரின் விருப்பத்துக்கு இணங்கினாள். அப்போது ஒரு அழகிய குழந்தை அவதாரம் செய்தது. குழந்தைக்கு துவைபாயணர் என்று பெயர் சூட்டனார். துவைபாயணர் தான் வியாசர்.

வியாசர் என்பது பெயரல்ல. அது ஒரு பதவி. ஜோதிடம் சொல்பவர்களை ஜோதிடர் என்ற பொதுப் பெயரால் அழைப்பது போல யாரெல்லாம் வேதங்களை பகுத்துப் பிரிக்கின்றனரோ அவர்கள் அனைவருமே வியாசர் தான். அந்தப் பதவியை அதற்கு முன் பலர் வகித்திருந்தனர். பராசர முனிவரின் மகனான துவைபாயனர் அதில் முக்கியப் பங்கு வகித்தார். மகாபாரதத்தில் அவரே வியாசர் என அழைக்கப்படுகின்றார். குழந்தை பிறப்பிலேயே அதிசய சக்திகள் வாய்க்கபெற்ற அவதார புருஷர் என்பதால் அவர் தன் தாயின் வயிற்றில் பத்து மாதம் வாசம் செய்யவில்லை. பராசர முனிவரின் அருளால் குழந்தை பிறந்த மறுகணமே சத்தியவதி மீண்டும் கன்னிப் பெண்ணாகவே மாறினாள். தன் தாயிடம் தான் துறவறம் பூண்டு செல்வதாகக் கூறினார். மகனைப் பிரியும் போது தாய் சத்தியவதி, எதாவது ஒரு இக்கட்டான நிலை வந்தால் நான் உன்னை நினைப்பேன். அப்போது நீ வந்து எனக்கு உதவ வேண்டும் என்றாள். துவைபாயணர் ஒப்புக் கொண்டார். யுகங்கள் நான்கு. கிருது, த்ரேதா, த்வாபர, கலி ஆகிய நான்கு யுகங்களையும் சேர்த்து சதுர் யுகம் என்று அழைக்கின்றோம். இவற்றில் மூன்றாவதான த்வாபர யுகத்தின் முடிவுக்காலத்தில் வேத வியாசர் அவதரித்தார்.

முன்காலத்தில் வேதங்களிலுள்ள பல ஸ்லோகங்கள் வெவ்வேறு இடத்திலுள்ள ரிஷிகளிடம் இருந்து வந்தன. வேத வியாசர் அனைத்து ஸ்லோகங்களையும் ஒன்றாகத் திரட்டி வேதங்களை நான்கு வகைகளாக பிரித்து அவைகளை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் என்று வகைப்படுத்தினார். பரமாத்மாவான இறைவனை ஜீவாத்மாவான மனிதன் எப்படி கண்டறியவேண்டும் என்பதை விளக்குவது தான் வேதம். இறைவனை மந்திரங்களாக துதித்து வழிபடும்படி வழிகாட்டுவது ரிக்வேதம். மனிதன் தன் ஆயுளில் செய்ய வேண்டிய சடங்குகள், அதற்கு தேவையான உபகரணங்கள், ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய யாகங்கள் ஆகியவை பற்றி தெரிவிப்பது யஜுர் வேதமாகும். பாடல்களால் இறைவனை துதிப்பது சாம வேதம் ஆகும். மந்திர தந்திரம், மருத்துவம், சக்தி, வழிபாடு ஆகியவை பற்றி விளக்குவது அதர்வண வேதம். இவற்றை தொகுத்தார்.

துவைபாயன வியாசர் விரதங்களும் தவத்தாலும் வேதங்களை 4 வகையாக பிரித்த பின் அவற்றை அலசி ஆராய்ந்து அதில் உள்ள தர்மத்தை மகாபாரதம் என்னும் புனித வரலாறாக ஒருங்கிணைத்தார். சாதாரண மக்களுக்கு வேதம் புரியாது என்பதாலும் கலியுகத்தில் வேதம் அழியும் நிலைக்கு வந்துவிடும் என்பதாலும் அவற்றை சாதாரண மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதாலும் வேதத்தின் சாரமான தர்மத்தை மகாபாரதம் எனும் இதிகாசமாக படைத்தார். மகாபாரதத்தை எப்படி தன் சீடர்களுக்கு கற்பிப்பது என்று சிந்தித்தார்.

வியாசரின் சிந்தனையை அறிந்த பிரம்மா அவரது இருப்பிடத்திற்கு சென்றார். வியாசர் பிரம்மாவை பார்த்து கை கூப்பி வணங்கி அவரை ஆசனம் அமர வைத்தார். பிரம்மாவைப் பார்த்து வியாசர் சில சுலோகங்கள் ஏற்றியுள்ளேன். இதில் வேதங்களின் சூட்சுமங்கள். உபநிஷதங்களை வரும் சடங்குகள், அதன் அங்கங்கள், புராணங்கள் வரலாறு, ஆன்மீகம், சூரிய சந்திரனின் பரிமாணங்கள், காலங்கள், அறிவு, பயம், நோய், வாழ்வியல் வகைகள், நான்கு வர்ணங்களுக்கான விதிகள், கிரகங்கள், நட்சத்திரங்கள், யுகங்கள், ரிக், யஜூர், வேத சாத்திரம், உச்சரிப்பு சாத்திரம், மருத்துவ சாத்திரம், தர்மசாஸ்திரம், வானவர், மனிதர் பிறப்பு, புண்ணிய நதிகள், புனிதமான இடங்கள், மலைகள், காடுகள், சமுத்திரம், வானவர், நகரங்கள், கல்பங்கள், போர்கலை பலவிதமான நாடுகள், மொழிகள், மனிதர்களின் நாகரிகங்கள் எல்லாவற்றையும் பிரதிபலிக்கின்ற சுலோகங்களை இயற்றியிருக்கின்றேன். இவற்றை எழுத இந்த உலகத்தில் ஒருவரையும் காணவில்லை என்றார். இதற்கு பிரம்மா வியாசரிடம் இவற்றை எழுதுவதற்கு நீங்கள் வினாயகரை தியானிப்பீர்களாக என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். வியாசர் வினாயகரை தியானித்தார். வினாயகர் வியாசர் முன் தோன்றினார். வியாசர் விநாயகரை வணங்கி தாம் இற்றிய சுலோகத்தை நீங்கள் எழுத வேண்டும் என்றார் இதைக்கேட்ட வினாயகர் எனது எழுத்தாணி ஒருகணமும் நிற்காது நீங்கள் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்வதாக இருந்தால் அந்த சுலோகங்களை எழுதித் தருவதாக சொல்கிறார். வியாசரும் எழுதும் முன் தன் பாடல் வரிகளைப் பிள்ளையார் புரிந்து கொண்டு எழுதினால் அந் நிபந்தனைக்கு உடன்படுவதாகக் கூறினார். விநாயகர் ஓம் என்று சொல்லி விட்டு எழுத ஆரம்பித்தார் வியாசரும் சொல்லத் துவங்கினார். இடையிடையே புரிந்து கொள்வதற்கு கடினமான சொற்களையும் கடினமான கருத்துகளையும் சேர்த்து அந்த வரலாற்றை தனது ஒப்பந்தத்திற்கு ஏற்ப வியாசர் சொல்ல விநாயகர் எழுதினார்.

பாரதத்தையும் அதன் பெரும் கிளைகளையும் 24000 அடிகளைக் கொண்ட சுலோகங்களை படைத்தார். அதன்பிறகு 150 அடிகளைக் கொண்ட சுருக்கத்தையும் படைத்தார். அதன் இன்னொரு படைப்பாக மொத்தம் 60 லட்சம் செய்யுள் அடிகளைக் கொண்ட சுலோகங்களை படைத்தார் அதில் 30 லட்சம் செய்யுள் அடிகள் தேவலோகத்தில் இருப்பவர்களால் அறியப்பட்டுள்ளது. 15 லட்சம் செய்யுள் அடிகள் பித்ரு உலகத்தில் இருப்பவர்களால் அறியப்பட்டுள்ளது. 14 லட்சம் கந்தர்வ லோகத்தில் இருப்பவர்களால் அறியப்பட்டுள்ளது. 1 லட்சம் இப்போது இருக்கும் இந்த மானுட உலகத்தில் அறியப்பட்டுள்ளது. இவற்றை முதலில் தனது மகனுக்கு கற்றுக் கொடுத்தார் அதன்பிறகு தனது சீடர்களுக்கு கற்றுக் கொடுத்தார். வியாசரால் மகாபாரதம் எழுதப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய சீடரான வைசம்பாயனர் என்பவரால் சனமேசயன் என்னும் அரசனுக்குச் சொல்லப்பட்டது. இது மேலும் பல ஆண்டுகள் கடந்த பின்னர் கதை சொல்லுபவரான உக்கிரசிரவஸ் என்பவரால் நைமிசாரண்யம் எனும் காட்டில் வாழும் முனிவர்கள் குழுவொன்றுக்குச் சொல்லப்பட்டது.

குரு வம்சத்தினருக்கு வியாசர் பாட்டனார் ஆகின்றார். நல்லவர்கள் சிலவேளைகளில் அறியாமல் தீய நெறியில் சென்று அகப்பட்டுக் கொள்வார்கள் அப்போது வியாசர் தங்குதடையின்றி அவர்கள் முன்னிலையில் தோன்றி அவர்களை நல்வழியில் நடத்துவார். மகாபாரதத்தில் ஒரு பாத்திரமாகவும் வியாசர் வருகிறார். தர்மர் நாடிழந்து, துன்பப்பட்டு, நம்பிக்கை இழந்திருந்த காலத்தில் அவரையும் விட கஷ்டப்பட்ட நளதமயந்தி அரிச்சந்திரன் கதைகளை எடுத்துச் சொல்லி நம்பிக்கையூட்டினார் வியாசர். சத்தியவான் சாவித்திரியின் கதையை எடுத்துச் சொல்லி ஒரு பெண்ணே எமனை எதிர்த்து ஜெயித்திருக்கும் போது உன்னால் கவுரவர்களை வெல்ல முடியாதா? என்று கேட்டார். துன்பங்களை எதிர்த்து வெல்ல நமக்கு நம்பிக்கையூட்டும் கருத்துக்களை அளித்திருக்கின்றார்.

மகாபாரதம் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஆத்ய பஞ்சகம்: ஆதி, சபா, ஆர்ண்ய, விராட மற்றும் உத்யோக ஆகிய 5 பர்வங்கள்.

யுத்த பஞ்சகம்: பீஷ்ம, துரோண, கர்ண, சல்ய மற்றும் செளப்திக ஆகிய போர் நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள்.

சாந்தி த்ரையம்: ஸ்த்ரீ, சாந்தி மற்றும் அனுசாஸன் ஆகிய அமைதி திரும்பியதை விவரிக்கும் 3 பர்வங்கள்.

அந்த்ய பஞ்சகம்: அஸ்வமேதிக, ஆச்ரமவாஸிக, மெளஸல, மஹாப்ரஸ்தானிக மற்றும் ஸ்வர்க்காரோஹண ஆகிய இறுதி நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள்.

மகாபாரதத்தின் 4 பாகங்கள் 18 பர்வங்களாக பிரிக்கப்பட்டுள்ளது

  1. ஆதி பருவம்: நைமிசக் காட்டில் முனிவர்களுக்கு சௌதி மகாபாரதத்தைச் சொல்லியது பற்றியும், வைசம்பாயனரால் முன்னர் இக்கதை சனமேசயனுக்குச் சொல்லப்பட்டது பற்றியும் இப் பருவத்தில் விளக்கப்படுகிறது. பரத இனத்தின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறும் இப்பருவம், பிருகு இனத்தின் வரலாற்றையும் கூறுகிறது. குரு இளவரசர்களின் பிறப்பு அவர்களது இளமைக்காலம் என்பனவும் இப் பருவத்தில் கூறப்பட்டுள்ளது.
  2. சபா பருவம்: இந்திரப்பிரஸ்தத்தில் மயன் மாளிகை அமைத்தல், அரண்மனை வாழ்க்கை, தருமன் இராஜசூய யாகம் செய்தல் என்பன இப் பருவத்தில் சொல்லப்படுகின்றன. அத்துடன், தருமன் சூதுவிளையாட்டில் ஈடுபட்டு இறுதியில் நாடிழந்து காட்டில் வாழச் செல்வதும் இப் பருவத்தில் அடங்குகின்றன.
  3. ஆரண்யக பருவம்: பாண்டவர்களின் 12 ஆண்டுக்காலக் காட்டு வாழ்கை பற்றிய விபரங்களைத் தருகிறது.
  4. விராட பருவம்: பாண்டவர்கள், மறைந்து விராட நாட்டில் வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது.
  5. உத்யோக பருவம்: கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளையும் அம்முயற்சிகள் தோல்வியுற்ற பின்னர் இடம்பெற்ற போருக்கான நடவடிக்கைகள் பற்றியும் எடுத்தாள்கிறது.
  6. பீஷ்ம பருவம்: இப்பருவத்தில் தான் பகவத் கீதை கிருஷ்ணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது. பீஷ்மர் கௌரவர்களின் தளபதியாக இருந்து நடத்திய போரின் முதற்பகுதியையும் அவர் அம்புப் படுக்கையில் விழுவதையும் இது விவரிக்கிறது.
  7. துரோண பருவம்: துரோணரின் தலைமையில் போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.
  8. கர்ண பருவம்: கர்ணனைத் தளபதியாகக் கொண்டு போர் தொடர்வது விவரிக்கப்படுகின்றது.
  9. சல்லிய பருவம்: சல்லியனைத் தளபதியாகக் கொண்டு இடம் பெற்ற இறுதிநாள் போர் இப் பர்வத்தில் கூறப்படுகின்றது. இதில் சரஸ்வதி நதிக்கரையில் பலராமனின் யாத்திரையையும் போரில் துரியோதனனுக்கும் பீமனுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போரும் விளக்கப்படுகின்றது.
  10. சௌப்திக பருவம்: அசுவத்தாமனும், கிருபனும், கிருதவர்மனும், போரில் எஞ்சிய பாண்டவப் படைகளில் பலரை அவர்கள் தூக்கத்தில் இருந்த போது கொன்றது பற்றி இப் பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர் பக்கத்தில் எழுவரும், கௌரவர் பக்கத்தில் மூவரும் மட்டுமே போரின் இறுதியில் எஞ்சினர்.
  11. ஸ்திரீ பருவம்: காந்தாரி, குந்தி முதலிய குரு மற்றும் பாண்டவர் பக்கங்களைச் சேர்ந்த பெண்கள் துயரப் படுவது கூறப்படுகின்றது.
  12. சாந்தி பருவம்: அஸ்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும் புதிய அரசனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் ஆகியவை தொடர்பில் பீஷ்மர் வழங்கிய அறிவுரைகளும் இப் பர்வத்தில் அடங்கியுள்ளன. மகாபாரதத்தின் மிகவும் நீளமான பர்வம் இது.
  13. அனுசாசன பருவம்: பீஷ்மரின் இறுதி அறிவுரைகள்.
  14. அசுவமேத பருவம்: தருமர் அசுவமேத யாகம் செய்வதையும் அருச்சுனன் உலகைக் கைப்பற்றுவதையும் இது உள்ளடக்குகிறது. கண்ணனால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட கீதையும் இதில் அடங்குகிறது.
  15. ஆசிரமவாசிக பருவம்: திருதராட்டிரன், காந்தாரி, குந்திமற்றும் விதுரன் ஆகியோர் இமயமலையில் வனப்பிரஸ்தம்ஆச்சிரமத்தில் வாழ்ந்தபோது காட்டுத் தீக்கு இரையானது இப்பர்வத்தில் கூறப்படுகின்றது.
  16. மௌசல பருவம்: யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய சண்டையில் அவர்கள் அழிந்து போனதை இப்பர்வம் கூறுகிறது.
  17. மகாபிரஸ்தானிக பருவம்: தருமரும் அவரது உடன்பிறந்தோரும் நாடு முழுதும் பயணம் செய்து இறுதியில் இமயமலைக்குச் சென்றது அங்கே தருமர் தவிர்த்த ஏனையோர் இறந்து வீழ்வது ஆகிய நிகழ்ச்சிகள் இப் பர்வத்தில் இடம்பெறுகின்றன.
  18. சுவர்க்க ஆரோஹன பருவம்: தருமரின் இறுதிப் பரீட்சையும் பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதும் இதில் சொல்லப்படுகின்றன.

மகாபாரதம் தொடர்பான பல குறிப்புக்கள் கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அட்டாத்தியாயி என்னும் இலக்கண நூலிலும், அசுவலாயன கிருகசூத்திரம் என்னும் நூலிலும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் சங்க காலத்திலேயே மகாபாரதம் செல்வாக்குச் செலுத்தி இருந்தது. பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர் எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் பாரதத்தை தமிழ்ப்படுத்தினார். இவரின் காலமும் உறுதியாகத் தெரியாகவில்லை. இவர் தமிழ் மொழிப்படுத்திய பாரதமும் கிடைக்கவில்லை. பின்னர் தொண்டைமண்டலத்து திருமுனைப்பாடி நாட்டு சனியூரைச் சேர்ந்த வில்லிப்புத்தூரார் தனது புரவலரான வக்கபாகை வரபதியாட்கொண்டான் வேண்டிக் கொண்டதற்கு இணங்க பாரதத்தைப் பாடினார். வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதத்தில் பத்துப் பருவங்களே (மொத்தப்பாடல்கள் 4350) இருக்கின்றன. மகாபாரதத்தின் பதினெட்டாம் நாள் போரின் இறுதியுடன் தர்மன் முடி சூட்டுதல், பாண்டவர் அரசாட்சி என்று முடித்து விடுகிறார். 14ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராரால் உருவாக்கப்பட்ட வில்லிபாரதமும் 18ஆம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளையால் உருவாக்கப்பட்ட நல்லாப்பிள்ளை பாரதமும் மட்டுமே முழுமையாகக் கிடைத்த பிரதிகள். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். இதன் பின்னர் மகாபாரதத்தை வேறு சிலரும் உரைநடையில் மொழியாக்கம் செய்துள்ளனர். 1903 லிருந்து இருபத்தைந்து ஆண்டு காலம் தொடர்ந்து ம. வீ. இராமானுஜச்சாரியார் தலைமையில் பல வடமொழி தமிழ் மொழி வித்வான்களால் மொழிபெயர்க்கப்பட்டது. அதில் மகாபாரதம் 9000 பக்கங்களைக் கொண்ட நூல் 1930 களிலும் 1950 களிலும் 2008 லும் பதிப்பிக்கப்பட்டன. இராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் வியாசரைத் தழுவி மகாபாரதம் எழுதியுள்ளார்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி – 1

தாய்நாடு பண்டைய காலத்தில் ஆரியவர்த்தம் என்னும் பெயருடன் இருந்தது. நல்லவர்கள் உடைய நாடு என்பது அதன் பொருள் ஆரியன் என்னும் சொல் ஒரு இனத்தையோ சாதியையோ குறிக்காது. பண்பட்டவன் என்பது அதன் பொருள். அய்யன் ஐயா ஐயர் ஆரியன் ஆகிய சொற்கள் ஒரே கருத்திற்கு உரியவையாகும் இன்றைக்கு ஆரியவர்த்தம் என்னும் சொல் இலக்கியத்தில் மட்டுமே கையாளப்படுகிறது பேச்சுவார்த்தையில் பின்னுக்குப் போய் விட்டது. இந்த ஆர்ய வர்த்தத்திலே பண்டை காலத்தில் சூரிய வம்சம் சந்திர வம்சம் என்னும் இரண்டு வம்சத்தவர்கள் தலைசிறந்த பாங்கிலே நாட்டை ஆண்டு வந்தார்கள் மகாபாரதம் நூல் சந்திர வம்சத்தை பற்றியதாகும்.

பரதன் என்னும் பெயர் தாங்கிய பேரரசன் ஒருவன் இருந்தான். இவன் துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் பிள்ளையாகப் பிறந்தவன் பண்புகள் பலவும் வாய்க்கப் பெற்றவனாக இருந்த காரணத்தை முன்னிட்டே இந்த நாடு நாளடைவில் பாரதம் என்னும் பெயர் பெற்றது. பரதனுடைய சந்ததியினர் அனைவரும் பாரதர்கள் என அழைக்கப்பட்டார்கள் அந்த வழி முறையிலேயே குரு என்னும் பெயர் தாங்கிய மற்றொரு பேரரசன் இருந்தான். அவனுடைய வம்சத்தை சேர்ந்தவர்கள் நாளடைவில் குருக்கள் என அழைக்கப்பட்டனர். கௌரவர்கள் என்னும் பெயரும் அதே அடிச் சொல்லிலிருந்து வந்தது குருசேத்திரம் என்னும் இடமும் குரு என்னும் இந்த கோமகனை முன்னிட்டு வந்தது.

குரு வம்சத்தில் வந்த வேந்தர்களில் சந்தனு என்பவன் மிகத் திறமை வாய்க்கப் பெற்றவன். தன்னுடைய முற்பிறப்பிலே இவன் சூரிய வம்சத்தை சேர்ந்த இக்ஷ்வாகு வம்சத்திற்குரியவனாய் இருந்தான். அதே வம்சத்தில் தான் ஸ்ரீராமனும் பிறப்பெடுத்து இருந்தான். சந்தனு தனது பழைய பிறவியிலே அவனுக்கு பெயர் மகாபிஷன் என்பதாகும். சொர்க்கத்திலே மகாபிஷன் நெடுநாள் வாழ்ந்திருந்தான் அங்கு அப்போது நிகழ்ச்சி ஒன்று நடந்தது. தேவர்கள் பலர் ஒன்று கூடி விருந்து ஒன்று வைத்திருந்தார்கள் அந்த விருந்தில் மகாபிஷனும் கங்காதேவியும் இடம் பெற்றிருந்தனர் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது காற்றடித்து கங்காதேவியின் மேலாடை அப்புறப்படுத்தியது. இந்த சந்தர்ப்பத்தில் பண்பை அடிப்படையாகக் கொண்டிருந்த தேவர்கள் எல்லோரும் தங்களுடைய கண் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்கள் ஆனால் மகாபிஷன் மட்டும் அப்படிச் செய்யவில்லை இந்த இக்கட்டில் அவன் கங்காதேவியை பார்த்த வண்ணம் இருந்தான் இருந்தான் அவன் அப்படி செய்தது பெரும் பிழையாகும். சிருஷ்டி கர்த்தாவாகிய பிரம்மதேவன் அப்பிழைக்கு ஏற்ப சாபம் ஒன்றை கொடுத்தார். கங்காதேவியும் மகாபிஷனும் மண்ணுலகில் மானிடராகப் பிறந்து அக்கர்மத்தை முடித்தாக வேண்டும் என்பது அச்சாபமாகும். இதுவே சந்தனு மன்னனின் பூர்வஜென்ம வரலாறு இதை பற்றி அவனுக்கு இப்பிறவியில் ஒன்றும் தெரியாது.

குரு வம்சத்தை சேர்ந்த சந்தனு மன்னன் தன் நாட்டை நன்கு ஆண்டு வந்தான் ஒரு நாள் அவன் கங்கா நதி கரையில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது அழகான பெண்ணொருத்தியை அங்கு கண்டான். அப்போதே அங்கு அவள் மீது காதல் கொண்டான். சிறிதேனும் தயங்காது உன்னை மணந்து கொள்கின்றேன் என்று தன் கருத்தை அவளிடம் தெரிவித்தான். அவளை மணந்து கொள்வதற்கு அவள் என்ன நிபந்தனை விதித்தாலும் அதற்கு உட்பட்டு நடப்பதாக அரசன் உறுதி கூறினான். தன்னை மணப்பதற்கு நிபந்தனைகள் என்னென்ன என்று அந்தப் பெண் கூறினாள். அப்பெண்ணின் பெற்றோர் யார் என்று கேட்கக் கூடாது என்பது முதல் நிபந்தனை. நல்லதோ கெட்டதோ அவளுடைய செயல் எதுவாக இருந்தாலும் அது குறித்து அவன் பேசக்கூடாது என்பது இரண்டாவது நிபந்தனை. எக்காரணத்தை கொண்டும் அவள் மீது கோபித்துக் கொள்ளக்கூடாது என்பது மூன்றாவது நிபந்தனை. அவளுக்கு அதிருப்தி உண்டாகும் படியான செயல் எதையும் செய்ய கூடாது என்பது நான்காவது நிபந்தனை. இந்த நான்கு நிபந்தனைகள் ஏதேனும் ஒன்றை அவன் மீறினால் அக்கணமே அவள் அவரிடமிருந்து விலகிக் கொள்வாள். நிறைவேற்றுவதற்கு மிகக் கடினமான இந்த நிபந்தனைகளை காதலில் மயங்கி போன சந்தனு மன்னன் ஏற்றுக்கொண்டான். அவர்கள் இவ்விருவரும் மணந்துகொண்டு இன்புற்று வாழ்ந்து வந்தார்கள்.

சுழலும் லிங்கம்

ஒருசமயம் அவ்வைப்பிராட்டி சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றார். நீண்டதூரம் நடந்து வந்ததால் களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார். இதைக்கண்ட பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது. அவ்வையிடம் வந்த பார்வதி அவ்வையே உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான் அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே இது அவரை அவமரியாதை செய்வது போலல்லவா உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள் என்றாள். இதைக்கேட்ட அவ்வை சிரித்தார். அம்பிகையிடம் தாயே என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து காலை நீட்டுவதா? அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே சொல்லுங்கள் அத்திசை நோக்கி என் காலை நீட்டிக்கொள்கிறேன் என்றார். அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது.

இவ்வாறு இறைவன் எங்கும் இருப்பதை உணர்த்தும் விதமான சிவலிங்க ஓவியம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரையப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் செல்லும் சிவன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் (முக்குறுணி விநாயகர் சன்னதி அருகில்) மேற்கூரையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. பேரொளியுடன் கூடிய ஒரு வட்டத்தின் மத்தியில், சிவலிங்கம் இருக்கும்படியாக இந்த ஓவியம் வரைப்பட்டுள்ளது. லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது. இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும் சிவலிங்கத்தின் ஆவுடை(பீடம்) நம்மை நோக்கியிருப்பது போல இருக்கும் என்பது தான் அதிசயம். கிழக்கு நோக்கி நீங்கள் நின்றால் உங்கள் பக்கம் ஆவுடை திரும்பி விடும். மேற்கே சென்றால் அங்கு வந்து விடும். குறுக்காக நின்று பார்த்தால் அந்தப் பக்கமாக வந்துவிடும். இப்படி ஒரு அதிசய ஓவியம் இது. சிவன் எங்குமிருக்கிறார் என்பதை இந்த ஓவியம் சுட்டிக்காட்டுகிறது. இந்த சிவலிங்க ஓவியத்துக்கு மானசீகமாக அபிஷேகம் செய்வதாக கற்பனை செய்தபடியே வழிபட்டால் அபிஷேக நீர் நம் மீது விழுவது போலவே இந்த அமைப்பு உள்ளது. சுற்றிச்சுற்றி எந்த திசையிலிருந்து பார்த்தாலும், நம்மை நோக்கி சுழன்றபடி காட்சியளிப்பதால் இதற்கு சுழலும் லிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர்.

பதஞ்சலி முனிவர்

பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும் ஒருவர். தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர்

நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம். என்கிறார்.

இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றி வரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும் மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார். இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்து வந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.

தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண சூத்திரத்தை உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர். வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது. குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்றார் ஒரு சீடர். உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம் துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம் என்றார். குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா? என்று கேட்டார் இன்னொரு சீடர். பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம் என்றார் பதஞ்சலி முனிவர்.

பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர். முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே என்று கண்ணீர் வடித்தார். குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனை நாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும் என்றார் பதஞ்சலி. படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்.

பதஞ்சலி இன்று உலகெங்கும் பிரபலமாகக் பின்பற்றப் படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் பதஞ்சலி ஆவார். இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இவர் எழுதிய மூன்று நூல்கள்: யோகத்தினை விளக்கும் யோக சாஸ்திரம், மொழி இலக்கணமான மஹாபாஷ்யம், ஆயுர் வேத்மாகிய சரகம் என்ற ஆத்திரேய சம்ஹிதை. மனம், வாக்கு, உடலு(மெய்)க்கான மூன்று நூல்களைச் செய்திருக்கின்றார். இராமேஸ்வரம் 12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்று. இந்த ஆலயத்திற்குள் தான் இருக்கிறது பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதி மூலவரை தரிசித்துவிட்டு அவரின் சன்னிதானத்தை கடந்து பர்வதவர்தினி அம்மனை தரிசித்து விட்டு சுற்றி வரும்போது அடுத்த பிரகாரத்தில் வலது பக்கத்தில் ஒரு சந்நிதி இருக்கும். அதற்குள் ருத்ராட்ச மாலைகள் நிறைந்திருக்கும் மிகவும் அமைதியான சூழல் இருக்கும். ருத்ராட்சத்தால் ஒரு சமாதி முழுதும் நிறைந்திருக்கும். அதுதான் பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி.

சோமசுந்தரப் பெருமான்

சிற்றரசர்களால் வணங்கப்பட்டு நீதிநெறியுடன் குபேரனைப் போல் அரசாட்சி செய்து வந்தான் பாண்டிய நாட்டை ஆண்ட விக்கிரமபாண்டியன். தன் தந்தையின் உத்தரவுப்படி கோயில் கட்டி வெகு சிறப்பாக தினந்தோறும் பூஜை செய்து வந்தான். நாடும் பிணியற்று சுபீட்சமாக இருந்து வந்தது. எங்கும் மகிழ்ச்சியும் திருவிழா பூஜையும் தொடர்ந்த வண்ணமிருந்தது. அப்போது காஞ்சியை சோழன் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பாண்டியன் மீது ஏகப்பட்ட பொறாமை. பாண்டியனை எப்படியாவது வென்றாக வேண்டும் என்றே அவன் மூளை சிந்தித்த வண்ணம் இருந்தது. இதற்காக சக்கியம், கோவர்த்தனம், கிரெளஞ்சம், திரிகூடம், அஞ்சனம், விந்தியம், ஹேமகூடம், காஞ்சி குஞ்சரம் என எட்டு மலைகளிலுமுள்ள எட்டாயிரம் சமணர்களுக்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பி வரச்செய்தான். அவர்கள் காஞ்சிபுரம் வந்து மன்னனைச் சந்தித்தனர். மன்னன் தலையை மயில்முடி தோகையால் தொட்டு வருடி வாழ்த்தினார்கள். அப்போது அவர்களிடம் நான் பாண்டிய நாட்டை ஜெயிக்க விரும்புகிறேன். விக்கிரம பாண்டியனைப் போரினால் வெல்ல முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆதலால் ஆபிசாரப் பிரயோகம் செய்வித்துத் தான் விக்கிரமனை வீழ்த்த வேண்டும் என எண்ணியுள்ளேன். பாண்டியனை அழிக்க கைங்கரியம் செய்து உதவீனீர்களானால் நாட்டில் சரி பாதி இராஜ்ஜியத்தை உங்களுக்கு தருகிறேன் என ஆசை வார்த்தைகளால் உயர்த்தினான் சோழன்.

சமணர்கள் சைவர்களின் விரோதிகள். சோழ மன்னன் இவ்வாறு சொன்னதும் அவர்கள் பாலாற்றின் கரையில் கூடி பெரிய பெரிய ஓம சாலைகளையும் ஹோமகுண்டங்களையும் அமைத்தனர். ஹோம குண்டத்தில் நச்சு மரங்களின் கட்டைகளை வார்த்தனர். தீ வளர்த்து வேம்பு எண்ணெயில் தோய்த்த உப்பாலும் நல்லெண்ணெயில் ஊறச்செய்த மிளகாய்களையும் இட்டனர். விலங்குகள் பறவைகள் இவற்றின் ஊனாலும் ஹோமங்களை செய்தனர். யாகத்தின் பலனாய் மேகங்கள் கூடி இடி இடித்தது, இடி புறப்பட்ட இடைவெளியினுல் துதிக்கையில் ஒரு உலக்கையைத் ஏந்திகிக் கொண்டு பெருத்த யானையொன்று பெரும் பிளிறலுடன் தோன்றி வந்தது. யானை அடியெடுத்து நடந்து வந்தபோது பூமியின் பரப்பளவு நடுங்கியது. அது அதன் காதுகளை சிலிர்த்த போது மேகங்கள் கலைந்து அலைந்து விலகின. தந்தங்களால் மலையைப் பிளந்து கொண்ட வண்ணம் யாகசாலையில் ஹோமம் செய்து கொண்டிருந்த சமணர்களின் அருகே வந்து நின்றது. நீ சென்று மதுரையையும் அதன் அரசனையையும் அழித்துவிட்டு வருவாயாக என யானையிடம் ஏவினார்கள் சமணர்கள். மீண்டும் பேரொலியை பிளிறிய வண்ணம் புறப்பட்டது. இச்சத்தத்தினைக் கேட்ட மற்ற மிருகங்கள் மிரண்டு விலகியோட யானை தென் திசை நோக்கி விரைவாக ஓடியது. செய்தியறிந்தான் விக்கிரமன். உடனே ஆலயத்திற்கு ஓடிச் சென்றான். ஈசனிடம் முறைசெய்து வேண்டினான். மகா மேருவை வில்லாக ஆக்கினாய், மகாவிஷ்ணுவை அம்பாக தேர்வு செய்தாய், பூமியைத் தேராக உருக்கிருக்கிக் கொண்டாய், வாசுகியை நாணாக்கினாய், வேதங்கள் நான்கினையும் குதிரைகளாக்கினாய், பிரம்ம தேவனைத் தேர்ப்பாகனாகக் கொண்டாய், இப்படியெல்லாம் செய்து முப்புரத்தையும் எரிக்கப் புறப்பட்ட மகாதேவனே, இத்தனையுடன் புறப்பட்ட உனக்கு சமணர் அனுப்பிய யானை உனக்கொரு பொருட்டா, என்னையும் மதுரை மக்களையும் நீயின்றி எவர் காப்பார்? எனப் பலவாறு வேண்டி தொழுது முறையிட்டழுதான்.

மன்னா என அசரீரி ஒலித்தது. வெளிச்சுவரின் உட்புறம் கீழ் பக்கமாக பதினாறு கால் கொண்ட அட்டாள மண்டபமொன்றை அதிவிரைவில் கட்டி முடி. வில் வீரனாக வந்து நீ கட்டிய அம்மண்டபத்தின் மேலமர்ந்து கொண்டு யாம் யானையை வதை செய்வோம் என அசரீரி கூறக் கேட்கவும் மன்னன் அகமகிழ்ந்தான். உடனடியாக போர்க்கால அடிப்படையில் மண்டபத்தை கட்டி முடித்தான். அதன் மேல்தளத்தில் இரத்தினத்தால் இழைத்த பொற் பீடமொன்றையும் நிறுவி வைத்தான். கருமை நிறத்துடன் சிவப்பு பட்டுடுத்தி பதினாறு வயதோனவனாய் இடுப்பில் கத்தியுடனும் இடக்கையில் நாணேற்றிய வில்லுடனும் வலக்கையில் கூரான அம்பைத் தாங்கியவாறும் காதுகளில் சங்குக் குண்டலங்களுடனும் கழுத்தில் முத்தாரமுமாய் பீட உச்சியில் ஒரு வில் வீரனாகத் தோன்றி நின்றார் இறைவன். எதிரே யானை நெருங்கி வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட சுவாமி விட்ட அம்பு விர்ரென பாய்ந்து யானையின் உயிரை ஒரு நொடியில் மாய்த்தழித்து விட்டது. அந்த இடமே ஆனைமலை எனப் பெயர் பெற்றது. பிரகலாதன் தவம் செய்து சித்தி பெற்ற இடமும் கூட இதுதான். பாண்டியன் வீரன் உருவிலிருந்த ஈசனைப் பலவாறு துதித்து விட்டுப் பட்டென்று ஈசனது இரு கால்களையும் சிக்கென்று பற்றிக் கொண்டான் பாண்டிய மன்னன். எப்பேற்பட்ட சங்கடங்களையும் சட்டென நீக்க இங்கேயே எழுந்தருள வேண்டும் எனவும் விண்ணப்பித்தான். இறைவனும் அப்படியே இருப்பதாக வாக்களித்தார். விக்கிரமபாண்டியன் வேண்டுகோளுக்கிணங்க பதினாறு கால அட்டாள மண்டபத்தில் அட்டாள வீர மூர்த்தியாய் காட்சி கொடுக்கின்றார் சோமசுந்தரப் பெருமான்.]

இல்லறம் நல்லறம்

செல்வந்தன் ஒருவன் தன் மாளிகையில் உறவுகளை எல்லாம் உதறிவிட்டு தாசிப் பெண்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தான். அவ்வழியே வந்த ஞானி அவனை எதிரில் சந்தித்தார். ஞானி செல்வந்தரிடம் உனது மனைவி மக்கள் உறவுகள் அனைவரையும் விட்டு இங்கு ஏன் இருக்கிறாய் என கேட்டார் சுவாமி என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. விளை நிலங்களும் ஏராளமாக உள்ளது. உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது. நான் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. எவரிடமிருந்தும் எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை எனப் பெருமையடித்துக் கொண்டான்.

புன்சிரிப்போடு அதைக் கேட்ட ஞானி வா சற்று தூரம் நடந்துவிட்டு வரலாம் என்றார். கடுமையான வெயிலில் போக வேண்டுமா என தயங்கினாலும் ஞானி கூப்பிடும்போது மறுப்பது நன்றாக இருக்காது என்பதால் கிளம்பினான். சிறிது தூரம் சென்றதுமே வெப்பம் தாங்காமல் தவித்த செல்வந்தன் ஏதாவது நிழல் இருந்தால் சற்று ஒதுங்கலாமே என எண்ணி சுற்றும் முற்றும் பார்த்தான். எந்த நிழலும் தென்படவில்லை. ஞானி கேட்டார் என்ன தேடுகிறாய்? நாம் சற்று இளைப்பாற ஏதாவது நிழல் இருக்கிறதா எனப் பார்த்தேன். ஏன் உன் நிழல் உள்ளதே அதில் நீ ஒதுங்கிக்கலாமே? சுவாமி என் நிழலில் நான் எப்படி இளைப்பாற முடியும்? என்னப்பா இது நீ யாரையும் எதையும் சார்ந்து வாழத் தேவையில்லை உன் செல்வங்களே உன்னைக் காப்பாற்றும் என்று சற்று முன்புதானே கூறினாய்? இப்போது உன் நிழலே உனக்கு உதவவில்லை என்கிறாயே? என்றார். ஏராளமான செல்வம் இருக்குன்னு கர்வத்தில் யாரையும் உதாசினபடுத்தாதே. இருக்கும் பொழதும் இறக்கும் பொழுதும் நம் நலம் விரும்பிகள் நாலு பேர் நிச்சயம் நமக்கு தேவை. வெறும் செல்வத்தால் மட்டும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. உறவுகளையும் நல்ல நட்புகளையும் மதித்து இணைத்து வாழ கற்றுக்கொள் என்றார். செல்வந்தன் உண்மையை உணர்ந்தான். மனைவி மக்களுடன் இணைந்தான்.

Image result for ஞானி செல்வந்தன்

திருமூலர்

திருக்கயிலாயத்தில் திருமூலருடைய பெயர் சுத்த சதாசிவர். சுந்தரநாதர் என்ற பெயரும் இவருக்கு உள்ளது. திருமால் பிரம்மா இந்திரன் முதலிய தேவர்க்கு நெறி அருளும் அசையா சக்தியாக இருக்கும் இறைவனேயே குருவாகப் பெற்றவர் இவர். இறைவனின் திருவருளால் அவரின் திருவடியில் இருந்த எட்டு யோகிகளுள் ஒருவராக இருந்தார். அவர்களது பெயர்கள் 1. சனகர் 2. சனந்தனர் 3. சனாதனர் 4. சனற்குமாரர் 5. சிவயோக மாமுனிவர் 6. பதஞ்சலி 7. வியாக்கிரமர் 8. திருமூலர் பாடல் 67 இல் இதற்கான குறிப்பு உள்ளது. இவர் அட்டமா சித்திகளை கைவரப்பெற்றவர் ஆவார். இவருக்கு 7 சீடர்கள் உள்ளார்கள். அவர்களது பெயர்கள் 1. மாலாங்கன் 2. இந்திரன் 3. சோமன் 4. பிரமன் 5. உருத்திரன் 6. காலாங்கி நாதன் 7. கஞ்ச மலையன் பாடல் 69 இல் குறிப்பு உள்ளது. எண்ணில் அடங்காத கோடிக்கணக்கான ஆண்டுகள் உடலுடன் இறைவனின் திருவடிக்குக் கீழே இரவு பகல் இல்லாத இடத்தில் (சூட்சும வெளி) அமர்ந்திருக்கிறார். (பாடல் 80 இல் காண்க) தன்னுடைய அமிர்தபாலால் 9 கோடி யுகங்கள் இறைவனுக்கு அர்ச்சனை செய்திருக்கிறார். (பாடல் 82 இல் காண்க) 70 கோடி 100 ஆயிரம் ஆகமங்கள் மொத்தம் உள்ளது. (பாடல் 60 இல் காண்க) இந்த ஆகமங்களை 9 பகுதியாக பிரிந்து இறைவன் இவருக்கு உபதேசித்தார். (பாடல் 62 63 இல் காண்க) அப்போது இறைவனின் திருநடனத்தை கண்டு அந்த பேரின்பத்திலேயே 1 கோடி யுகங்கள் பேரின்பத்தில் திளைத்திருக்கிறார். (பாடல் 74 இல் காண்க)

திருமூலர் தான் 1 கோடி யுகங்கள் பேரின்பத்தில் எப்படி இருந்தேன் என்று பின்வருமாறு விளக்குகின்றார். இறைவனின் திருவடிகளை தொழுத போது இறைவனின் மீது காட்டிய பக்தியினால் இறைவனே தன்னோடு இருந்ததினால் 1 கோடி ஆண்டுகள் தன்னால் பேரின்பத்தில் இருக்க முடிந்தது என்று கூறுகின்றார். (பாடல் 75 இல் காண்க) 1 கோடி ஆண்டுகள் பேரின்பத்தில் இருந்த பின் இறைவனே திருமூலரை எழுப்பி நீ பெற்ற ஆகமங்களை உலகில் உள்ளோர் உய்வவதற்காக இதனை எடுத்துச் சொல் என்று உணர்த்தினார். (பாடல் 76 இல் காண்க) இதனை தமிழில் எடுத்துச் சொல் என்று கட்டளையிட்டார். (பாடல் 81 இல் காண்க) 1. இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காகவும் 2. யான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவும் (பாடல் 85 இல் காண்க). 3. இந்த உலகம் உய்வதற்காகவும் இறைவன் உலகத்தில் வைத்திருக்கும் ரூபங்களை பார்க்க எண்ணம் கொண்டும் 4. அகத்தியரை காணவுமே இந்த உலகத்திற்கு திருமூலர் வந்தார். இறைவன் இருக்கும் இடத்திற்கும் இந்த உலகத்திற்கும் நடுவில் சூட்சும வழி ஒன்று இருக்கிறது அதன் வழியாக இந்த உலகத்திற்குள் தனது உடலுடன் வந்தேன் என்று திருமூலர் சொல்கிறார். (பாடல் 83 இல் காண்க)

திருமூலர் பசுபதிநாத் திருக்கேதாரம் கங்கைக் கரை வழியாக தென்னாட்டிற்கு காளஹஸ்திக்கு வந்தார். அங்கிருந்து திருவாலங்காடு பின்பு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை தரிசித்து விட்டு அங்கிருக்கும் முனிவர்களோடு கலந்துரையாடினார். அங்கிருந்து திருவதிகை வந்து அங்கிருக்கும் இறைவனை தரிசனம் செய்கிறார். அங்கிருந்து திருப்புலியூரில் இறைவனின் ஆனந்த நடன தரிதனத்தை கண்டு சில நாட்கள் அங்கே தங்குகிறார். அங்கிருந்து காவிரி நதிக்கரைக்கு வந்தார். அங்கிருந்து திருவாவடுதிறை வந்து இறைவனை வணங்கி சிறிது நாட்கள் தங்குகிறார். பின்பு அகத்தியரை பார்க்க வேண்டும் என்று அகத்தியர் இருக்குமிடம் நோக்கி கிளம்புகிறார்.

திருமூலர் பொன்னி நதிக்கரை வழியாக சென்று கொண்டிருக்கும் போது ஆடு மற்றும் பசுக்களின் கதறல் சத்தம் கேட்கிறது. சத்தத்தைக் கேட்ட திசை நோக்கி சென்றார். மூலன் என்ற பெயர் கொண்ட இடையன் அப்போது தான் தனது வினை முடிந்த காரணத்தினால் இறந்து கிடக்கிறான். அவனது உடலை காண்கிறார். அவனது உடலை சூற்றி வருத்தத்துடன் சுற்றி நிற்கும் பசுக்களையும் ஆடுகளையும் காண்டார். பசுக்களும் ஆடுகளும் கண்ணீர் விட்டபடி அந்த உடலைச் சுற்றி சுற்றி வந்து அவனை நக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த இடையன் எழுந்தால் தான் பசுக்கள் ஆடுகளின் வருத்தம் போகும் என்று எண்ணிய அவர் அதன் வருத்தத்தை போக்கும் வகையில் அட்டமா சித்தியில் ஒன்றான கூடு விட்டு கூடு பாயும் வித்தையை பயன்படுத்தி தன் உடலை ஓர் இடத்தில் பத்திரமாக ஒளித்து வைத்து விட்டு மூலனின் உடலில் சென்றார். பசுக்கள் ஆனந்தமடைவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த சுத்த சதாசிவர் திருமூலர் என்னும் பெயரைப் பெற்று பசுக்களையும் ஆடுகளையும் மேய்த்து விட்டு மாலை ஆனதும் பசுக்கள் இருக்கும் ஊரான சாத்தனூருக்கு அனைத்து ஆடுகளையும் பசுக்களையும் அழைத்து செல்கிறார்.

திருமூலர் சாத்தனூர் வந்ததும் பசுக்களும் ஆடுகளும் தங்களது இல்லத்திற்கு தானாகவே சென்று சேர்ந்து விடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார். பசுக்களும் ஆடுகளும் ஊருக்குள் வந்து விட்டது இன்னும் தனது கணவர் வீட்டிற்கு வரவில்லையே என்று தன் கணவரைத் வெளியே வந்து தேடுகிறார். தன்னுடைய கணவர் வெளியிலேயே நின்று பசுக்கள் ஆடுகள் செல்வதை பார்த்துக் கொண்டே இருக்கிறார். இதனைக் கண்ட மூலனின் மனைவி வீட்டிற்குள் வாருங்கள் என்று திருமூலரின் கையை பிடித்து அழைக்க முயற்சித்தாள். அப்போது திருமூலர் நான் உனது கணவன் இல்லை. உனது கணவன் உடலில் இருக்கும் சிவயோகி நான். உனக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றார். திருமூலரின் வார்த்தைகளை கேட்ட மனைவி அவரது வார்த்தைக்கு கட்டப்பட்டார் போல் தனியாக தனது வீட்டிற்குள் வந்தாள். திருமூலர் அந்த ஊரில் இருக்கும் ஒரு மடத்தில் தங்கி விட்டார். மூலனின் மனைவிக்கு இரவு முழுவதும் தூங்காமல் வருந்தத்துடன் இருந்தாள். காலை விடிந்ததும் ஊரில் உள்ள அந்தணர்களிடம் செய்தியை சொல்லி தன் கணவனை வீட்டிற்கு வரச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டாள். சாத்தனூர் இறைவனை அறிந்த அந்தணர்கள் அதிகமாக வாழும் ஊராக இருந்தது. அந்தணர்கள் பலர் ஒன்று சேர்ந்து மூலன் இருப்பிடத்திற்கு வந்து மூலனை வீட்டிற்கு ஏன் செல்ல மறுக்கிறாய் என்று கேட்டார்கள். அதற்கு அவர் நான் மூலன் இல்லை. மூலன் நேற்றே இறந்து விட்டான். அவனது உடலில் இருக்கும் சித்தயோகி நான். கூடு விட்டு கூடு பாய்ந்து இந்த உடலில் இருக்கிறேன். வருத்தத்துடன் இருந்த பசுக்கள் ஆடுகளுக்காக இந்த மூலனின் உடலுக்குள் வந்தேன். விரைவில் இந்த உடலையும் விட்டு எனது உடலுக்குள் சென்று விடுவேன் என்றார். இதனை அந்த ஊர் அந்தணர்கள் நம்ப மறுத்தார்கள். தன் சொல்லை மெய்ப்பிக்கிறேன் என்று கூறி அருகாமையில் பார்த்தார். அங்கு இறந்த ஒரு ஆடு இருந்தது. உடனே இந்த உடலை விட்டு ஆட்டின் உடலுக்கு சென்ற திருமூலர் மீண்டும் மூலனின் உடலுக்கு வந்தார். இதனைக் கண்ட அந்தணர்கள் வந்திருப்பவர் மூலன் இல்லை சித்த யோகி என்பதை உணர்ந்து மூலனின் மனைவிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி விட்டார்கள். பின்பு வந்திருப்பவர் சித்த யோகி என்பதை அறிந்து கொண்ட அந்தணர்கள் அவரிடம் பல கேள்விகள் கேட்டு தங்களின் சந்தேகங்களை நிவர்ந்தி செய்து கொண்டார்கள்.

திருமூலர் சாத்தனூரில் இருந்து கிளம்பி மீண்டும் பொன்னி நதிக்கரைக்கு வந்து தன் உடல் மறைத்து வைத்த இடத்திற்கு வந்து பார்த்தார். அங்கு தன் உடலைக் காணவில்லை. தன் உடலைத் தேடிய திருமூலர் தன் உடல் கிடைக்காததால் தன்னுடைய ஞான திருஷ்டியில் என்ன நடந்தது என்று பார்க்கிறார். இந்த உடலிலேயே இருந்து வேதங்களையும் ஆகமங்களையும் தமிழில் தொகுத்து அளிப்பதற்காக இறைவன் தன்னுடைய உடலை மறைத்து வைத்திருக்கிறார் என்று உணர்ந்து இறைவனின் எண்ணத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார்.

திருமூலர் இறைவனின் திருவடியில் தன் எண்ணத்தை வைத்து அங்கிருந்து கிளம்பி செருக்கை அழிக்கும் திருவாவடுதுறை இறைவன் இருக்கும் இடத்திற்கு வருகிறார். கோவிலில் இருக்கும் பரந்து விரிந்த படர் அரசு மரத்தின் கீழே இறைவனின் நாமத்தை ஓதிக்கொண்டே தியானத்தில் அமர்ந்தார். (பாடல் 79 இல் காண்க). வருடத்திற்கு ஒரு முறை விழித்து தான் தியானத்தில் உணர்ந்ததை பாடலாக எழுதினார். இப்பாடலுக்கு மந்திர மாலை என பெயரும் கொடுத்தார். (பாடல் 86 இல் காண்க). இது போல 3000 வருடங்கள் தியானம் இருந்து வருடத்திற்கு ஒரு பாடல் வீதம் 3000 பாடல்களை எழுதினார். இறைவனைப் பற்றியும் இறைவன் அருள் புரியும் விதத்தையும் உலகம் செயல்படும் விதத்தையும் இந்த உலகத்தில் உயிர்கள் இருக்கும் பிறவியை அறுத்து இறைவனிடம் எப்படி சேரலாம் என்பது பற்றியும் நான்கு வேதங்களில் உள்ளவற்றையும் தியானத்தில் உணர்ந்து அதனை தமிழில் பாடல்களாக எழுதினார். பல சூட்சுமமான செய்திகளை மறைமுகமாக தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் பல பாடல்களில் அருளியிருக்கிறார். இப்பாடல்களை மாலையாக கோர்த்து இறைவனுக்கு மாலையாக திருமூலர் சாற்றினார். இதற்கான குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது. திருமூலர் திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடவில்லை. யாரும் அறியாதவாறு தாம் யோக நிலையில் அமர்ந்திருந்த திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் ஆலயத்தின் கொடி மரத்தின் அடியில் புதைத்து வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சிதம்பரம் வந்தடைந்து தன் குருவான இறைவனுடன் கலந்து விட்டார்.

திருமூலரின் காலம் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தியது (கி.மு. 5000). திருமூலர் திருமந்திரம் எழுத எடுத்துக் கொண்டது 3000 வருடங்கள். அதன் பிறகு தற்கால ஏழாம் நூற்றாண்டில் (கி.பி. 637 முதல் 653) அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவ சமயக் குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர்களில் ஒருவருமான திருஞானசம்பந்தர் உதித்தார். அவர் தென்னாட்டிலுள்ள சைவ ஆலயங்கள் அனைத்தையும் சென்று வழிபட்டு அதில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடிச் சென்ற காலங்களில் திருவாவடுதுறை திருத்தலத்திற்கும் வந்திருந்தார். அப்போது கோயிலுக்குள் நுழைந்தவுடன் இறைவனின் திருவருளால் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் அற்புதமான தமிழ் வாசனை அவரை வந்தடைந்தது. அதனால் ஈர்க்கப்பட்டுத் தன்னுடன் வந்தவர்களிடம் இங்கே அருமையான தமிழ் வாசனை வருகின்றது என்ன என்று பாருங்கள் என்று கூறி மண்ணைத் தோண்டச் செய்தார். அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளைக் கண்டு எடுத்தார். அவற்றை படித்து உணர்ந்து அதன் அருமை பெருமைகளை உலகோர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று அதை வெளியிட்டு அருளிச் செய்தார். அவருக்கு பின்பு வந்த சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் திருமூலரின் வரலாற்றை அருளியிருக்கிறார். அவருக்குப்பின் வந்த சேக்கிழார் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றித் தான் எழுதிய பெரிய புராணத்தில் திருமூலரை முப்பத்து ஒன்றாவதாகச் சேர்த்து திருமூலரின் வாழ்க்கை வரலாற்றையும் திருமந்திரப் பாடல்களின் குறிப்பையும் எழுதி வைத்தார். அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியில் திருமூலரின் வரலாற்றை அருளியிருக்கிறார். சைவ சான்றோர்கள் பலர் அருளியிருந்த சைவத் திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி ஒன்றாகத் தொகுத்த போது திருமூலர் அருளிய திருமந்திரத்தையும் பத்தாவது திருமுறையாகத் தொகுத்து அருளினார்.

திருமூலர் எழுதிய திருமந்திர மாலை பாடல்களை உலகத்தவர்களால் முதலில் தமிழ் மூவாயிரம் என்ற பெயரிலேயே அழைத்தார்கள். பிற்காலத்தில் வந்த சான்றோர்கள் திருமந்திரத்தில் நிரம்பியிருந்த மந்திரங்களும் தந்திரங்களும் மனித சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால் அதை திருமூலர் அருளிய திருமந்திரம் என்று மாற்றி வைத்தாரகள். திருமூலர் பரம்பொருளாகிய இறைவனைப் போற்றிப் பாடியருளிய திருமந்திரத்தில் பாயிரம் தலைப்பு தவிர்த்து ஒன்பது தந்திரங்கள் அமைந்துள்ளது. இந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களையும் அதிகாலையில் எழுந்து அவற்றின் பொருள் உணர்ந்து ஓதுவோர் பிறவிப் பாசம் நீங்கி இறைவனை அடைவர்கள் என்பது திருமூலரின் திருவாக்கு.

சர்வ மங்கள குருதேவா
சிவப்ப்ரியா மகாதேவா
ஞானரூபா அருள் தேவா
சத்குருவே நமோநமக

திருமூலர் திருவடிகளே சரணம்

முக்தி

நாரதர் மிகப்பெரிய யோகி. அவர் எங்கும் சஞ்சரிப்பார். ஒரு நாள் அவர் ஒரு காட்டின் வழியாகச் செல்லும்போது ஒருவனைக் கண்டார். வெகுகாலம் ஓரிடத்திலேயே அமர்ந்து தவம் செய்ததால், அவனது உடலைச் சுற்றிக் கறையான்கள் புற்று கட்டிவிட்டன. அவன் நாரதர் அந்த வழியாகப் போவதைப் பார்த்ததும் நாரதரிடம் எங்கே செல்கிறீர்கள் என்றான். நான் சொர்கத்திற்குச் செல்கிறேன் என்றார் நாரதர். அப்படியானால் ஆண்டவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான் அவன். நாரதர் சிறிது தூரம் சென்றார். அங்கே ஒருவன் பாடிக் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் நாரதரைக் கண்டு நாரதரே எங்கே செல்கிறீர் என்று கேட்டான். நாரதரோ நான் சொர்கத்திற்குச் செல்கிறேன் என்றார். அப்படியானால் ஆண்டவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வரவேண்டும் என்று அவனும் கேட்டுக்கொண்டான். நாரதர் சென்றுவிட்டார்.

சிறிது காலத்திற்குப் பின் நாரதர் அந்தக் காட்டின் வழியாகத் திரும்பி வந்தார். உடலைச் சுற்றிப் புற்று வளர்ந்திருந்த மனிதன், நாரதரே என்னைப் பற்றி பகவானிடம் கேட்டீரா என்றான். ஆம் என்றார் நாரதர். பகவான் என்ன சொன்னார் என்று கேட்டான் அவன். நீ இன்னும் நான்கு பிறவிகளுக்குப் பின்னர் முக்தி அடைவாய் என்று பகவான் கூறினார் என்றார் நாரதர். அதைக் கேட்டதும் அவன் அழுது புலம்பி என்னைச் சுற்றிப் புற்று மூடும்வரை இவ்வளவு காலம் தியானித்தேன் இன்னும் நான்கு பிறவிகளா எல்லாம் வீணாகிப் போனதே என்று கூறி புற்றை உடைத்து எழுந்து சென்றுவிட்டான். நாரதர் அடுத்த மனிதனிடம் சென்றார். பகவானிடம் கேட்டீரா நாரதரே என்றான் அவன். ஆம் கேட்டேன் அந்தப் புளியமரத்தைப் பார் அதில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகளுக்குப் பின்பு உனக்கு முக்தி கிட்டும் என்றார் பகவான் என்று நாரதர் கூறினார். அதைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியால் குதித்தபடியே இவ்வளவு விரைவாக எனக்கு முக்தி கிடைக்கப் போகிறதே என்று கூறினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது மகனே இந்தக் கணமே உனக்கு முக்தி அளிக்கிறேன் என்று கூறியது. அவனது விடா முயற்சிக்குக் கிடைத்த வெகுமதி அது. அத்தனைப் பிறவிகளிலும் பாடுபட அவன் தயாராக இருந்தான். எதுவும் அவனைத் தளரச் செய்யவில்லை. அந்த வைராக்கியமே அவனை முக்திக்கு அழைத்துச் சென்றது. தினம் கடவுளை வணங்குவேன் எத்தனை துயர் வந்தாலும் கடவுளை நாம ஜபம் செய்யாமல் இருக்க மாட்டேன். கோவிலுக்கு செல்லாமல் இருக்க மாட்டேன் என வைராக்கியத்தோடு ஆண்டவனிடம் சரண் அடைய வேண்டும்.

ராவணன் கேட்ட தட்சணை

ராமனின் பாதம் பட காத்திருந்த சேது பாலத்தை துவக்கி வைக்க சிவ பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், வேண்டியனவற்றை தயார் செய்ய பணித்தார். ராமனின் விருப்பமறிந்த ஜாம்பவான் இத்தகைய சேதுவை துவக்கி சிவ பூஜை செய்து வைக்க மிகச்சிறந்த பண்டிதர் அவசியம் என்றுரைத்தார். அப்படி யாரேனும் அருகே உள்ளனரா என்ற ராமனின் கேள்விக்கு ராவணன் ஒருவனே என்று தயக்கத்துடன் பதிலளித்தார் ஜாம்பவான். பதிலைக் கேட்ட ராமனின் பிறகென்ன நமது வேண்டுகோளுடன் அனுமனை அனுப்புங்கள். இப்பூஜையை சிறப்புற நடத்தி தர அப்பண்டிதரையே வேண்டி வரவழைத்து வாருங்கள் என்றார்.

விரோதியின் தேசத்தை அடையும் வழிக்கு அவனை வைத்தே பூஜையா? இது நடக்குமா!? அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் சுக்ரீவனும் அவனின் சேனைகளும் ராமனின் விருப்பமறிந்த வாயு மைந்தன் இமைப்பொழுதில் இலங்கை அரண்மனையில் நின்றார் அஞ்சனை மைந்தன். அரக்கர்கள் சூழ்ந்தனர், அரக்கர்களே சண்டையிட வரவில்லை. நான் சிவ பூஜை செய்து வைக்க உத்தமமான சிவ பக்தன் ராவணனை நாடி வந்துள்ளேன். தன் முன்னால் நிற்கும் அனுமனின் கோரிக்கையை கேட்டு வியந்தது ராவணனோடு அவனது சபையும் இது சூழ்ச்சி என்றனர் சபையோர். சூழ்ச்சியால் தங்களை வெல்ல இயலுமோ? தயை கூர்ந்து எங்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றார் அனுமன். அச்சமும் ஆவேசமும் திகைப்பும் கூடி எழுந்து நின்று அனுமனை நோக்கி கூச்சலிட்டவர்களை கையமரச்செய்து இந்த வேள்வியை நடத்தித்தர ஒப்புக் கொண்டான் சிறந்த சிவ பக்தனான ராவணன்.

பூஜை நடத்தி தர வந்த ராவணன் ராமரைப் பார்த்து சங்கு சக்கரங்கள் மட்டும் இவனது கரங்களில் இருந்தால் விஷ்ணுவாகத்தான் இவன் தோன்றுவான் என ராவணனும் எண்ணினர். பூஜை ஏற்பாட்டில் ஏதேனும் குறை இருந்தால் பகிரவும் என்ற ராமனின் கோரிக்கைக்கு தசரத மைந்தா ஏற்பாடுகள் நேர்த்தியாக உள்ளது. ஆனால் துணைவியின்று கிரஹஸ்த்தன் செய்யும் எந்தக் காரியத்தையும் சாஸ்திரங்கள் அங்கீகரிப்பதில்லை என்று பதிலளித்தார் இலங்கேஸ்வரன். தாங்கள்தான் வேள்வியை சிறிதும் குறைவின்றி நடத்தி தர வேண்டும் என்றார் ராமன். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த ராவணன் பூஜைக்காக சீதாவை பூஜை முடியும் வரை உங்கள் இருவருக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் கூடாது. மேலும் பூஜை முடிந்த மறுகணமே சீதையை அழைத்து சென்று விடுவேன் என்ற நிபந்தனையுடன் வரவழைத்தார். இப்பூஜையை நடத்திக் கொடுத்தற்காக தட்சணையை தயைக்கூர்ந்து தெரியப்படுத்த வேண்டும் என்று கைக்கூப்பியவண்ணம் பண்டிதரான ராவணனிடம் வினவினார் ராமன். அதற்கு தணிந்த குரலில் ராம பிராணுக்கு மட்டுமே கேட்கும் படி ராவணன் பதில் அளித்தான். என்னை பண்டிதராய் மதித்து சிவ பூஜை செய்ததற்கு நன்றி மேலும் சிவ பூஜைக்கு நான் தட்சணை வாங்குவதில்லை. தட்சணை தராததால் பலன் கிட்டாது என்று நீ எண்ணக்கூடும். யுத்தத்தில் ஒருவேளை நான் தோல்வியுற்று என் உயிர் பிரிய நேர்ந்தால் அத்தருணத்தில் நீ என் அருகில் இருக்க வேண்டும். இது மட்டும்தான் நான் எதிர்பார்க்கும் தட்சணை என்றான் சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த இலங்கேஸ்வரன். (மூலம்: வேதவியாசர் ராமாயணம்)

Image result for ராமன் செய்த சிவபூஜை