மூன்று கண்களையும் பத்துக் கரங்களையும் வைத்திருக்கிறார். முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். இவரது ஐந்து வலது கைகளில் சுதர்ஸனம், திரிசூலம், அங்குசம், பாணம், மத்தகக்ஷ்ம் என்ற ஆயுதங்களையும், இடது ஐந்து கைகளில் சங்கு, பத்மம், பாசம், கோதண்டம், நவநீதம் என்ற ஆயுதங்களையும் ஏந்தி அருள்பாலிக்கிறார். இடம் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூருக்கும் தரங்கம்பாடிக்கு இடையில் உள்ள அனந்தமங்கலம் ராஜகோபால சாமி கோவில்.
எல்லை இல்லாத இறைவனை அளப்பவர்கள் யாருமில்லை என்று திருமூலர் அருளியிருக்கிறார். அளக்க முடியாத இறைவனை சிற்பி தன்னுடைய சிற்பத்தில் காண்பித்து கற்பனையில் இறைவனின் அளவை மனிதர்களின் அறிவுக்கேற்ப புரிந்து கொள்ளும்படி செதுக்கியிருக்கிறார்.
கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் இறைவன் சன்னதிக்கு வெளியே இருக்கும் துவாரபாலகரின் காலடியில் ஒரு மரம். மரத்தில் ஒரு பாம்பு இருக்கும். அந்த பாம்பின் வாயில் யானை இருக்கும். யானை மிகவும் பெரியது. பாம்பின் வாயில் யானை என்றால் அந்த யானையையே விழுங்கும் பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும். அந்த பாம்பு ஒரு மரத்தில் இருக்கும். அப்படி என்றால் அந்த மரம் எவ்வளவு பெரியதாக இருக்கும். அந்த மரம் துவாரபாலகர் காலடியில் இருக்கிறது. அப்படி என்றால் துவாரபாலகரின் பாதம் எவ்வளவு பெரியது. பாதமே இவ்வளவு பெரியதென்றால் துவாரபாலகரது உருவம் எவ்வளவு பெரியது. அந்த துவாரபாலகர் தனது கையை கோயிலின் உள்ளே காட்டுகிறார். கோயிலின் உள்ளே இறைவன் இருக்கின்றார். அப்படி என்றால் இறைவன் எத்தனை பெரியவராக இருப்பார்.
சுகலன் என்னும் வேளாளனின் புதல்வர்கள் பன்னிருவர். தேவகுரு பிரஹஸ்பதியின் கோபத்திற்கு ஆளாகி பன்றிக் குட்டிகளாக பிறந்தனர். காட்டுப்பகுதியில் பாண்டிய மன்னன் வேட்டையாடும் போது இப்பன்றிக்குட்டிகளின் பெற்றோர் இறந்தனர். தாயின்றி பசியால் வாடிய பன்றிக்குட்டிகளின் பசியைப் போக்க சிவபெருமான் தாய்ப்பன்றியாக வடிவெடுத்து பாலூட்டி அவர்களின் பசியைப் போக்கினார். பின்பு அவர்களுக்கு மனித உருவம் அளித்து பாண்டியன் அரசவையில் அமைச்சர்களாக ஆக்கி முக்தி அளித்தார். பெற்ற தாயை இழந்த பன்றிக்குட்டிகளுக்கு தாய்ப்பன்றி வடிவெடுத்து பாலூட்டிய சிவபெருமானின் பெருங்கருணை குறித்து பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணமாகப் பாடியருளியுள்ளார். திருவிளையாடல் புராணத்தில் 45 ஆவது படலமாக உள்ளது. இச்சிற்பம் உள்ள இடம் திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவில் மதுரை.
புத்தர் தனது சீடர் ஆனந்தாவுடன் காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆனந்தா புத்தரிடம் ஞானமடைவதற்கு எளிமையான வழி என்ன என்று கேட்டார். அதற்கு புத்தர் சுற்றி இருப்பவற்றை சும்மா கவனி என்றார். சும்மா கவனித்தால் எப்படி ஞானம் கிடைக்கும் என்றார். புத்தர் அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்தார். தாகம் அதிகமாக இருக்கிறது குடிக்க எங்காவது சென்று நீர் கொண்டு வா என்று கூறினார். ஆனந்தா தண்ணீர் தேடி அலைந்தார். எங்கும் கிடைக்கவில்லை. ஓரிடத்தில் யானைகள் உடலில் சேறோடு சென்று கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அருகில் ஏதோ நீர்நிலை இருக்கிறது என்றறிந்து தேடி ஒரு குட்டையைக் கண்டுபிடிக்கிறார். யானைகள் புரண்டு எழுந்து போனதால் நீர் முழுக்க சேறாகி குடிக்க தகுதியில்லாததாக ஆகிவிட்டது. வருத்தத்தோடு திரும்பி புத்தரிடம் விஷயத்தைச் சொல்கிறார். எனக்கு அதெல்லாம் தெரியாது. காரணமெல்லாம் சொல்லாதே. எனக்கு குடிக்க நீர் வேண்டும் என்று கேட்டார் புத்தர். ஆனந்தா வேறு வழியில்லாமல் மீண்டும் அந்த குட்டைக்குச் சென்றார். நீர் இப்போது கொஞ்சம் தெளிவானதைப் போலத் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் தெளியட்டும் என்று கரையில் காத்திருந்தார். குட்டைத் தண்ணீர் சிறிது சிறிதாகத் தெளிந்து கொண்டே இருந்தது. ஆனந்தா அந்த பண்பு மாற்றத்தை கவனித்துக் கொண்டே இருந்தார். சில நிமிடங்களில் மீண்டும் நீர் மிகவும் தெளிந்து தூய்மையானதாக மாறியது. இதைக் கண்ட ஆனந்தரின் கண்களில் அருவியென கண்ணீர் கொட்டியது. குடுவையில் நீர் பிடித்துக்கொண்டு புத்தரிடம் திரும்பியவர் அவரது கையில் தண்ணீரைக் கொடுத்துவிட்டு அப்படியே சாஷ்டாங்கமாக காலில் விழுந்தார். மனசுக்குள் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்கும்போது அது குழம்பிய குட்டையாகத்தான் இருக்கும். அமைதியாக அதை கவனித்துக்கொண்டே இருந்தால் அதுவாகவே தெளியும். என் மனதைத் தெளியவைக்கும் இந்த சூத்திரத்தை நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் என்றார். புத்தர் புன்னகைத்தார்.
பிரச்சனைகள் கவலையாகவோ கோபமாகவோ ஆத்திரமாகவோ அகங்காரமாகவோ எந்தவொரு ரூபத்தில் வந்து மனதை வாட்டி எடுத்தாலும் குழம்பிய குட்டை தெளிவதற்காகக் காத்திருப்பதைப் போல மனதில் உள்ள பிரச்சனை துன்பம் சோகம் கவலை என எதுவாக இருந்தாலும் அது தெளிவடையயும் வரை அமைதியாக மனதை கவனித்துக் கொண்டிருந்தால் போதும். மனதில் வந்த பிரச்சனை துன்பம் சோகம் கவலை அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி நிலை உண்டாகும்.
மிகப் பெரிய துறவியொருவர் தம்முடைய சீடரிடம் துறவு பற்றிய உணர்வு இல்லாமல் இருப்பதை அறிந்து கொண்டார். அதனை சீடர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாமன்னர் ஜனகரிடம் அனுப்பி வைத்தார். சீடருக்கோ வியப்பு ஏற்பட்டது. குருவே தாங்களோ மிகப் பெரிய துறவி சற்குரு. அவரோ நாடாளும் மன்னர் குடும்பஸ்தர். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? என்று கேட்டார். அந்தத் துறவி தமது சீடரிடம் நாம் சந்நியாசி அவர் குடும்பஸ்தர் என்பதையெல்லாம் தாண்டி அவரிடம் நீ கற்றுக் கொள்வதற்கு உனக்கு ஒன்று இருக்கிறது. பணிவுடன் தலைவணங்கி அவரிடம் அதைக் கற்றுக் கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார். விருப்பம் இல்லாவிட்டாலும் குருவின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு அந்த சீடர் மிதிலைக்கு சென்றார். அரசவைக்குள் மன்னர் ஜனகர் இருந்தார். அங்கே அழகான இளம்பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். ஆடல் பாடல் என்று களைகட்டியது. அவையில் இருந்தோர் அனைவரும் நடனத்தில் மயங்கி அவர்களும் ஆடிக் கொண்டிருந்தார்கள். மன்னர் ஜனகர் இந்தக் கூட்டத்தினரிடையே அமர்ந்திருந்தார். அந்தக் காட்சியைப் பார்க்கவே சீடருக்கு பிடிக்காமல் இருந்தது. ஜனகர் சிரித்துக் கொண்டே அந்த சீடரிடம் இங்கு காண்பதைக் கொண்டு தவறான முடிவுக்கு வந்து விடாதே. ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்வதற்காகத் தான் உனது குரு உன்னை இங்கே அனுப்பி வைத்துள்ளார். அதை மட்டும் கற்றுக் கொள்ள ஒரு நாள் இந்த அரண்மனையில் தங்கியிருந்து விட்டு பின் நீ புறப்பட்டு செல்லலாம் என்றார்.
அரண்மனையில் உள்ள ஒரு அறையில் சீடர் தங்கினார். அவர் தங்கியிருந்த அறை மிகவும் அழகானதாகவும் ஆடம்பரமாகவும் இருந்தது. விருந்து முடிந்ததும் தூங்குவதற்கு படுக்கையில் சாய்ந்தார். மேலே பார்த்த போது திடுக்கிட்டார். அந்த அறை முழுவதும் மேல் பகுதியில் சீடரின் தலைக்கு மேலே ஒரு கூர்மையான வாள்கள் வெறுமனே மெல்லிய நூலில் கட்டித் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். எந்த நேரத்திலும் நூல் அறுந்து ஏதோஒரு வாள் தனது கழுத்தில் விழும் ஆபத்தான நிலையில் இருந்ததைக் கண்டு அன்று இரவு முழுவதும் விழித்துக் கொண்டு அந்தக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த வாளைக் கவனித்துக் கொண்டு இருந்தார். பொழுது விடிந்ததும் ஐனகர் வந்தார். அவரிடம் இந்த அறை வசதியாக இருந்ததா? படுக்கை சுகமாக இருந்ததா? இரவு நன்றாக உறங்கினீர்களா? என விசாரித்தார். அதற்கு அந்த சீடர் எல்லாமே வசதியாகத் தான் இருந்தது. ஆனால் தலைக்கு மேலே மெல்லிய நூலில் உறையில்லாத வாள் தொங்கிக் கொண்டிருக்க எப்படி நான் அமைதியாக உறங்க முடியும்? என்று பதில் அளித்தார். அரசர் அவரிடம் நீங்கள் இங்கே வரும் போது மிகவும் களைப்பாக இருந்தீர்கள். எனவே படுத்ததும் அசதியில் தூங்கிக் போயிருக்கலாம். ஆனால் ஏன் தூங்க முடிய வில்லை. தூங்கினால் வாள் அறுந்து நமது மீது விழுந்தால் என்னாகும் என்ற சிந்தனையில் பயத்தில் தூக்கம் இல்லாமல் இரவு முழுவதும் தூக்கமில்லாமல் உங்கள் சிந்தனை ஓடியது. இதனால் நீங்கள் தூங்காமல் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையுடன் இருந்தீர்கள். இந்த எச்சரிக்கைக்கு நடுவில் இந்த உலகம் மற்றும் இதில் இருக்கும் சுகதுக்கங்கள் ஒன்றையும் நீங்கள் சிந்தித்திருக்க மாட்டீர்கள். இந்த சிந்தனை இல்லாத மனம் தான் துறவு. இதுதான் எனது போதனை.
நான் எனது அரசவையில் அமர்ந்து கொண்டிருந்தாலும் அங்கே அழகான இளம்பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தாலும் இந்த சுகபோகங்களுக்கிடையே நான் எனது தலைக்கு மேலே மெல்லிய நூலில் கட்டித் தொங்கிக் கொண்டிருக்கும் உறையில்லாத மரணம் என்ற வாளைப் பற்றிய கவனத்தில்தான் எப்போதும் இருக்கிறேன். வாழ்க்கை என்பது ஒரு நீர்க்குமிழி போன்றது. ஒரு நொடிப்பொழுதில் எப்போது வேண்டுமானாலும் உடையலாம். அதுபோல் மரணம் எந்த நேரத்திலும் நிகழலாம். வாழ்க்கையின் நிலையற்ற தன்மை குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள். எந்த நேரத்திலும் வரக்கூடிய அந்த மரணம் குறித்து நான் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கிறேன். எனவே நான் இந்த அரண்மனையில் வாழ்ந்தாலும் கூட நானும் ஒரு துறவி தான் என்று சொல்லி சீடரை அனுப்பி வைத்தார்.
அன்னை சிரசங்கி காளிகாதேவி விஸ்வகர்மா சமூகத்தின் முக்கிய தெய்வமாகும். விஸ்வகர்மா சமூகத்தினர் இவரை காளம்மா என்று அன்புடன் அழைக்கின்றனர். கோவாவின் மபூசாவில் உள்ள ஸ்ரீ விஸ்வகர்மா கோவிலில் இந்த 3 அடி உயர காளி சிற்பம் உள்ளது. 10 – 11 ஆம் நூற்றாண்டு கல்யாண சாளுக்கியர்கள் காலத்தை சேர்ந்த சிறந்த சிற்பங்களில் ஒன்றான சிரசங்கி காளிகாம்பாவை பிரதியெடுத்து இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பிரம்ம புராணத்தில் ஆபஸ்தம்பரின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். வேதங்களை நன்கு கற்ற பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் சிரார்த்த கர்மங்களில் சிரத்தை உடையவராக இருந்து அவற்றை நல்ல முறையில் அனுஷ்டித்து வந்தார். சிரார்த்த காலங்களில் வேதங்களை நன்கு உணர்ந்த உத்தமமான அந்தணர்களை மட்டுமே அவர் அழைப்பது வழக்கம். வேறு யாருக்கும் உணவு கொடுக்க மாட்டார். ஒரு சமயம் சிரார்த்தம் செய்யும் போது உணவு கொடுக்க அவர் எண்ணியபடி ஒரு அந்தணர் கூட அவருக்குக் கிடைக்கவில்லை. ஆகவே சகடம் என்று சொல்லப்பட்ட ஒரு விதியைக் கடைப்பிடிக்க எண்ணினார். அந்த விதியின் படி கூர்ச்சத்தில் அந்தணர்களை ஆவாஹனம் செய்து சிரார்த்தம் செய்ய எண்ணினார். கூர்ச்சம் என்பது தர்ப்பைப் புல்லால் செய்யப்படும் ஒரு பொருள். தர்ப்பைப் புல்லால் ஆன இந்த பொருளை அந்தணராக பாவித்து அந்த பொருள் மீது உணவை வைத்து தனது சிரார்த்ததை முடிக்க அவர் எண்ணினார். அவரது இந்த எண்ணத்தை மகரிஷி ஆபஸ்தம்பர் அறிந்தார். இந்த பிராமணர் வேதங்களைக் கற்று மிகுந்த அறிவைக் கொண்டிருந்தாலும் அதன் உட்பொருளை உணரவில்லையே என்று அவருக்கு உணர்த்த வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். தானே ஒரு அந்தணர் வேடம் பூண்டு பிராமணர் வீட்டுக்கு வந்தார்.
அந்தணரை அமர வைத்து தானே பரிமாறினார் பிராமணர். வந்தவர் சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டார். நல்ல பசியோடு இருக்கிறார் என்று எண்ணி பிராமணரும் கேட்கக் கேட்க உணவை இலையில் வைத்துக் கொண்டே இருந்தார். உணவை வைத்த நொடியில் காலி செய்தார் துறவி. பிராமணரின் மனதில் முதலில் இருந்த கணிவு மறைந்து இப்போது ஏளனம் குடிகொண்டது. அதைத் தன் செயல்களில் காட்டினார். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாத துறவி இன்னும் சாப்பாடு போடு இன்னும் போடு என்று கேட்டார். அபரிதமாக சாப்பிட்டும் திருப்தி அடையாதவரைப் பார்த்த பிராமணர் மனதில் இருந்த ஏளனம் மறைந்து தொல்லை கொடுக்கிறாரே என்று வெறுப்புடன் பார்க்க ஆரம்பித்தார். சமைத்தவை எல்லாம் காலியாகிவிட்டன. இன்னும் வேண்டும் கொண்டு வா என்று துறவி கேட்கவே பிராமணரின் மனதில் இருந்த வெறுப்பு மறைந்து கோபம் தலை தூக்கியது. காலியான சமையல் பாத்திரத்தைக் கொண்டுவந்து இலையின் மேல் கவிழ்த்து திருப்தி ஆயிற்றா என்று கேட்டார்.
உணவை தானம் செய்கின்றவர் எப்போதும் சாப்பிட்டு முடித்ததும் திருப்தியா என்று கேட்கவேண்டும். சாப்பிட்டவர் திருப்தி என்று மூன்று முறை சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் சிரார்த்தம் நல்ல முறையில் பூர்ணமடைந்தது என்று பொருள். துறவி இப்போது ந என்ற ஒரு எழுத்தை சொன்னார். ந என்றால் பூர்ணமாகவில்லை என்று பொருள். பிராமணருக்கு கோபம் தலைக்கேறியது. நீங்கள் கேட்கக் கேட்க உணவை கொண்டுவந்து கொட்டினேனே. மலை போல உணவுப் பண்டங்களைத் தின்றுவிட்டு பூர்ணமாகவில்லை என்று சொல்லி என்னை அவமானப்படுத்தி நான் செய்த சிரார்த்தத்தையும் கெடுத்து விட்டாரே என்று கோபத்துடன் கத்தினார். கோபத்தில் துறவிக்கு சாபம் கொடுக்க கையில் நீரை எடுத்து மந்திரத்தை சொன்ன பிராமணர் வந்தவரின் தலையில் அந்த தண்ணீரை எறிந்தார். வந்தவர் தன் கையை அசைக்க பிராமணர் மந்தரித்து எறிந்த நீரானது அந்தரத்தில் அப்படியே நின்றது. பிராமணர் இதைப் பார்த்து பிரமித்து நின்றார். தான் எறிந்த நீரை அந்தரத்தில் நிறுத்திய அவர் சாதாரண மனிதர் அல்ல தன்னை விட உயர்ந்தவர் என்பதை அறிந்து சுவாமி நீங்கள் யார்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்? என்று பயத்தோடு கேட்டார் பிராமணர்.
நான் ஒரு முனிவன். நான் அதிகம் உண்டதால் என்னை ஏளனம் செய்தாய். உன் பார்வைகளாலும் செயல்களாலும் என்னை அவமதித்தாய். ஒவ்வொரு முறை நீ சிரார்த்தம் செய்யும் போதும் அந்தணர்களுக்கு மட்டுமே உணவு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாய். அது தவறு. உணவு கொடுக்க நினைக்கும் போது யாராக இருந்தாலும் பசியோடு இருக்கிறார்களா என்று பார்த்து உணவு கொடுப்பதே சிறப்பு. சிரார்த்தத்திற்கு சாப்பிட வருபவர்களிடம் உன் மூதாதையர்களின் ஒரு அம்சத்தை சாப்பிட வருபவர்களிடன் வைத்து இறைவன் உன்னிடம் அனுப்புகிறான் என்பதை மறந்து நீ நடந்து கொள்கிறாய். உனக்குப் புத்தி புகட்டவே நான் இப்படி நடந்து கொண்டேன். சிரார்த்தத்தை பய பக்தியுடன் கோப தாபங்களை விட்டுச் செய்ய வேண்டும் அப்போதுதான் சிரார்த்தம் முழுமையாக பித்ருக்களுக்கும் சென்று சேரும். உனக்கும் பலனைத் தரும். அதனை விட்டு கடமைக்காக செய்தால் யாருக்கும் பலன் இல்லை. மாறாக உனக்கு பாவம் வந்து சேர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு என்பதைத் தெரிந்து கொள் என்றார். அதற்கு பிராமணர் சுவாமி என் தவறை நான் உணர்ந்து கொண்டேன் மன்னியுங்கள். இனி இம்மாதிரி தவறுகளைச் செய்யமாட்டேன். இப்போது நான் செய்த சிரார்த்தம் பூர்ணமாகவில்லையே அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு முனிவர் நான் ‘ந’ என்று மட்டும்தான் கூறினேன். அப்படி என்றால் சிரார்த்தம் பூர்ணமாகாமல் நிற்கிறது என்று மட்டுமே பொருள். பூர்ணமாகாமல் போய் விட்டது என்று பொருள் அல்ல. ஆகவே அடுத்து உணவிற்கு வருபவர்களை உனது முதாதையராக கருதி சேவை செய்து உணவு கொடு. அப்போது உனது சிரார்த்தம் பூரணமாகும் என்று சொல்லி அங்கிருந்து சென்றார். முனிவர் சொன்னபடியே உடனடியாக உணவு தயாரித்து வந்தவர்களுக்கு சிரத்தையும் உணவு பரிமாறி தனது சிரார்த்தத்தை முடித்தார் பிராமணர்.
நீரை அந்தரத்தில் நிறுத்தியதால் அதிதியாக வந்த முனிவர் ஆபஸ்தம்பர் என்று அழைக்கப்பட்டார். ஆப என்றால் நீர். நீரை அந்தரத்தில் நிற்க வைத்ததினால் அவர் ஆப ஸ்தம்பர் என்ற பெயரைப் பெற்றார். இவர் எழுதிய நூலுக்கு ஆபஸ்தம்ப தர்மசூத்திரம் என்று பெயர். இது கிருஷ்ண யசூர் வேதத்தின் தைத்திரியக் கிளையில் அமைந்த மூன்று தர்மசாத்திர நூல்களில் ஒன்றாகும். ஆபஸ்தம்ப தர்மசூத்திர நூலில் ஒரு பகுதியே கௌதம தர்ம சூத்திரம் ஆகும். இந்த நூல் ஆபஸ்தம்ப சிரௌதசூத்திரம் மற்றும் ஆபஸ்தம்ப கிரகாயசூத்திரம் என இரண்டு பகுதிகளைக் கொண்டது. தர்ம சாத்திர நூல்களில் ஆபஸ்தம்ப சூத்திரம் தற்போதும் இந்துக்களின் சமயம் மற்றும் திருமணச் சடங்குகளில் நடைமுறையில் உள்ளது.
ஹரிஹரன் என்பது சைவ வைணவ நெறிகளுக்கிடையிலான ஒற்றுமைக்கு சான்றாக உள்ள இறைவனின் திருவுருவம். இந்தத் திருவுருவம் சங்கரநாராயணன் என்றும் அழைக்கப்படுகின்றது. வலப்புறம் சிவனின் அம்சங்களும் இடப்புறம் திருமாலின் அம்சங்களும் இத்திருமேனியில் காணப்படும். 4 அடி உயரமுள்ள இந்த சிற்பம் உள்ள இடம் கோவா ஸ்ரீ மஹாலசா நாராயணி கோயில்.
இராமரை விருந்தினராக இலங்கைக்குள் அழைக்க வேண்டும் என்று இலங்கைக்கு அரசனான பின் விபீஷணன் விரும்பினார். அப்போது அவருக்கு ஒரு சந்தேகமும் அவனுக்குள் எழுந்தது. தன்னையும் மனைவியையும் பிரித்த இராவணனின் நாட்டுக்குள் நுழைய இராமர் சம்மதிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது. இருந்தாலும் தன்னை மன்னனாக ஆக்கிய ஆற்றல் மிக்க தலைவனுக்கு மரியாதை செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். தயக்கத்துடன் தனது விருப்பத்தை இராமரிடம் தெரிவித்தார். எனக்கும் உன் நாட்டைப் பார்க்க விருப்பம் தான் விபீஷணா என்று இராமர் உடனே வர சம்மதித்தார். அனுமன் அங்கதன் இலட்சுமணன் ஆகியோர் உன் நாட்டின் வனப்பையும் எழிலையும் வர்ணித்தபோது எனக்கும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது என்றார் ராமன். விபீஷணன் நெகிழ்ந்து இராமனுக்கு வழிகாட்டியபடி முன்னே சென்றார். இராமருடன் மற்றவர்களும் பின்தொடர்ந்தார்கள்.
இராமர் இலங்கையின் அவல நிலை கண்டு தன்னால்தானே இப்படி நேர்ந்தது என வருத்தத்துடன் நடந்து சென்றார். பிரமாண்டமான மாளிகைகள் பொலிவு குறைந்து காணப்பட்டன. ஆள் அரவம் இல்லாத அரண்மனைகள் வருத்தப்பட வைத்தன. அந்தப் பகுதியில் உள்ள மக்கள் சிலர் தம்மை கண்டதும் வணங்குவதை கவனித்த ராமர் சற்றுத் தொலைவில் யாரோ ஒரு பெண் ஓடி ஒளிவதையும் கண்டார். தன்னைக் கண்டதும் ஒருவர் மறைய முயற்சிப்பதைக் கண்டு திடுக்கிட்டான். இதனை கவனித்த விபீஷணன் இராமரிடம் இப்போது ஓடியது எங்கள் தாயார் என்றான். இதனைக் கேட்ட இராமர் அவர்கள் ஏன் பயந்தோட வேண்டும்? நான் அந்த அளவுக்கு இந்தப் போரில் உயிர்ச்சேதம் புரிந்து விட்டேனா? என்று குரல் தழுதழுத்தவாறு கூறினார். இதற்குள் விபீஷணனைச் சேர்ந்த சிலர் அவரது தாயாரை அழைத்து வந்து ராமன் முன் நிறுத்தினார்கள். அம்மா மன்னியுங்கள். போர் தர்மப்படி பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் உடல்குறை உள்ளவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். நிராயுதபாணியாக நின்ற இராவணனைத் தாக்குவதும் தர்மம் அல்ல என்று உணர்ந்து நாளை போரிட வருமாறு வாய்ப்பு கொடுத்தேன். அப்படிப்பட்ட நான் உங்களுக்குத் துன்பம் தரமாட்டேன் என்னை நம்புங்கள் என்றான் ராமர்.
இராமா உனக்கு அளவு கடந்த துன்பத்தைக் கொடுத்த இராவணனின் தாயார் என்ற குற்ற உணர்வால்தான் சந்திக்க முடியாமல் மறைந்து கொள்ள முயற்சித்தேன் என்பது ஒரு காரணம். உன் வீர தீரம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்ணாகப் பிறந்ததாலும் அரண்மனையிலிருந்து வெளியே வரமுடியாத பாரம்பரியம் கட்டுப்பாட்டாலும் உன் மகிமையை நேரில் காணும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனாலும் உன் வீரச்செயல்கள் என் காதுகளை எட்டத்தான் செய்தன. அதே சமயம் என் மகன் இராவணன் உனக்கு துன்பம் இழைத்ததையும் நன்கறிவேன். ஆணவம் மிகுந்த அவனைப் பெற்றதற்காக அவமானப்படுகிறேன். இது ஒரு புறம் இருந்தாலும் நான் உன்னுடைய அடுத்தடுத்த வீர தீர பராக்கிரமங்களை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் கேட்டாவது இன்புற வேண்டும் என்பதற்காக நான் நீடித்து வாழ விரும்பினேன். உன் போர் தர்மத்தைப் புரிந்து கொள்ளாத உன் படையினர் யாராவது என்னைக் கொன்றுவிடக் கூடாது அல்லவா? அதனால் ஓடி ஒளிந்தேன் என்றார். இவரது பதில் அனைவருக்கும் திகைப்பைத் தந்தது. இராமர் அவளுடைய கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றி விட்டு அம்மா விதி நிர்ணயித்த காலம்வரை நீங்கள் நிம்மதியாக வாழலாம். கவலை வேண்டாம் என ஆறுதல் கூறினார். விபீஷணா நீ ராவணனுக்கு அறிவுரை சொன்னபோது கேட்காத இராவணன் ஒருவேளை தாயார் சொல்லியிருந்தால் கேட்டிருக்கலாம். இவரை இனி நீதான் மிகுந்த பரிவு அக்கறையுடன் பாதுகாத்து வர வேண்டும் தாய்மையைப் போற்ற வேண்டும் என்றார் இராமர்.
இராமர் காலில் விழுந்த விபீஷணன் மாற்றாந்தாய் சொன்னார் என்பதற்காக காட்டுக்குப் புறப்பட்ட பண்பாளன் நீங்கள். தாய்க்கு உரிய மரியாதையையும் மதிப்பையும் அளிக்கத் தயங்காத அற்புத மகன் நீங்கள். உன்னுடன் இணைந்திருக்கும் நான் அந்த நற்பண்பை இழக்க மாட்டேன். இராவணனை எங்கள் தாயார் திருத்தவில்லையே என நான் இதுவரை ஆதங்கப்பட்டதில்லை. ஏனெனில் எனக்கு இராவணனின் முரட்டு குணம் தெரியும். என் தாயின் அன்புள்ளமும் தெரியும். அதனால் இராமா நீங்கள் எமது தாயாரைப் பற்றிய கவலை வேண்டாம். நான் அவரை கண்ணின் இமைபோலக் காப்பேன் என்றார். இராமரும் அவரைத் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.
பாண்டவர்மார்கள் திரௌபதியுடன் வனவாச காலத்தில் காம்யகவனம் என்கிற வனத்தில் தங்கியிருந்தனர். பாண்டவர்களுக்கு தங்களப் போல் துன்பத்தை அனுபவித்தவர்கள் யாரும் இல்லை. துன்பத்தின் உச்சத்தை தாங்கள் அனுபவிக்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். அப்போது சிவனிடம் வரம்பெற்று என்றும் சிரஞ்சீவி ஆக என்றென்றும் பதினாறு வயது என்ற வரத்தைப் பெற்ற பதினாறு வயதிலேயே இருக்கும் மார்கண்டேயர் அங்கே வந்தார். பாண்டவர்களை ஆசிர்வாதம் செய்தார். அப்போது யுதிஷ்டிரர் அவரை பார்த்து எங்களைபோல் இந்த உலகத்தில் துக்கங்களை அனுபவிப்பர்கள் யாராவது உண்டா? என்று கேட்டார். அதற்கு மார்கண்டேயரோ சிரித்துகொண்டே பேச ஆரம்பித்தார். ஒரு புறாவிற்காக தன்னுடைய உடல் பாகங்களை அறுத்தெடுத்து கொடுத்தவர் சிபிசக்கரவர்த்தி. அவரின் புத்திரன் அஜன் அவரின் புத்திரன் பத்து குதிரைகளையும் ஒரே நேரத்தில் பூட்டிகொண்டு தேரை செலுத்தும் அயோத்தி மகாராஜா தசரதன். அவரின் புத்திரனாகிய இராமர் தனது வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களை பார்க்கும்போது உங்களின் துன்பங்கள் மிகவும் குறைவுதான் என்று சொல்லி முழு இராமயணத்தையும் பாண்டவர்களிடம் சொன்னார். இராமாயணம் முழுமையாக கேட்ட பாண்டவர்கள் முன்னோர்கள் அனுபவித்த துன்பத்தை பார்க்கும்போது தாங்கள் அனுபவிக்கும் துன்பமெல்லாம் ஒன்றும் இல்லை என்ற மனத் தெளிவில் துவைதவனம் என்கிற வனத்தில் வனவாசத்தை தொடர தங்களின் பயணத்தை தொடர்ந்தார்கள்.