திருமந்திரம் நற்சிந்தனைகள்

“திருமந்திரம் நற்சிந்தனை” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” குழுவில் Zoom நேரலையில் 26-07-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்

அறிவு என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் பாடம் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது? என்று கேள்வி கேட்டனர். பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களை அழைத்து இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார். அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்து அமர்ந்தார். முதல் மாணவனைப் பார்த்து அந்த அறையினுள் மூன்று குவளையில் பால் உள்ளது. அதில் நீ ஒரு குவளை பாலை பருகிவிட்டு வா என்றார். அவன் உள்ளே சென்றான். தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய மூன்று குவளைகளில் பால் இருந்தது. தங்க குவளையில் இருந்த பாலை எடுத்து மிகுந்த மகிழ்ச்சியோடு பருகினான். பிறகு வெளியே வந்தான். அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில் பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆதங்கமுற்றான். ஆயினும் அதற்கடுத்த மதிப்பினைக் கொண்ட வெள்ளி குவளையில் இருந்த பாலை எடுத்துக் குடித்துவிட்டு ஓரளவு நிறைவோடு வெளியே வந்தான். மூன்றாவது மாணவன் உள்ளே சென்றதும் காலியாகக் கிடந்த தங்க வெள்ளி குவளைகளைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. எனக்கு வெண்கல குவளை பாலா? யாருக்கு வேண்டும் இது? நான் என்ன அவ்வளவு தாழ்ந்தவனா? எந்த விதத்தில் நான் தாழ்ந்தவனாகி விட்டேன்? என்று அவன் மனதில் எண்ணங்கள் ஓடின. ஆயினும் குரு பாலைக் குடித்து வா என்றதை நினைவில் கொண்டு வருத்தத்தோடு குடித்துவிட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் கவலை நிலைகொண்டிருந்தது.

பகவான் ராமகிருஷ்ணர் மூவரையும் பார்த்து பாலைக் குடித்தீர்களா என்றார். முதல் மாணவன் மகிழ்ச்சிப் பூரிப்புடன் தங்கத் குவளையில் பால் குடித்தேன். நான் மிகவும் கொடுத்து வைத்தவன் குருவே என்றான். இரண்டாவது மாணவன் எனக்கு தங்க குவளையில் பால் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் இருந்தாலும் வெள்ளி குவளையிலாவது கிடைத்ததே என்கிற மகிழ்ச்சி ஓரளவு இருக்கிறது குருவே என்றான். மூன்றாவது மாணவன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அழுகை வந்துவிட்டது. மூன்று பேர்களில் மிகவும் துரதிர்ஷ்டக்காரன் நானே குருவே. எனக்கு வெண்கலக் குவளையில் பால் கிடைத்தது என்றான். மூவரும் பேசியவற்றை அமைதியாக கேட்ட பகவான் ராமகிருஷ்ணர் பேச ஆரம்பித்தார். மாணவர்களே தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய மூன்று குவளைகளிலும் ஏலக்காய் குங்குமப்பூ சேர்த்து சுண்டக் காய்ச்சிய சுவையான பசும் பால் ஒரே அளவில் இருந்தது. அதில் எந்த வேறுபாடும் இல்லை. பாலை பருகப் போகிற மூவருக்குமே அதிலிருந்து ஒரே மாதிரியான சுவையும் சத்துவ குணமும்தான் கிடைக்கப் போகிறது. அதிலும் வேறுபாடில்லை. ஆனால் நீங்கள் மூவருமே நினைத்தது வேறு. பால் ஊற்றி வைத்திருக்கும் குவளைகளின் மதிப்பைப் பற்றியே உங்கள் மனம் யோசித்தது. பாலின் குணம் சுவை ருசி ஆகிய அனைத்தும் ஒரேமாதிரிதான் இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை. ஆகவே நீங்கள் பண்டத்தை விட்டு விட்டு பாத்திரத்தையே பார்த்துள்ளீர்கள் பாத்திரத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது அறிவு. அதில் உள்ள பண்டத்தை நுகர்ந்து அனுபவித்து இன்புறுவது ஞானம். நீங்கள் அறிவைக் கொண்டு புறத்தோற்றத்தைப் பார்த்தபடியால் அது எதனால் ஆனது? மதிப்பானதா? மதிப்பு குறைவானதா? என்று சிந்தித்து அதில் உங்களின் கவனம் முழுமையாக சென்றது. பாலில் உள்ள சுவையை அனுபவிக்காமல் விட்டு விட்டீர்கள். நீங்கள் அறிவு கொண்டு பார்க்காமல் ஞானம் கொண்டு பார்த்திருந்தால் அதில் உள்ள சுவையை அனுபவித்து மூவருமே ஒரே மாதிரியான மன நிலையை கொண்டு ஒரே மாதிரியான அனுபவத்தை பெற்றிருப்பீர்கள்..

ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள். பாத்திரங்களுக்கு மதிப்பு தர மாட்டார்கள். மண் சட்டியில் ஊற்றிக் கொடுத்தால் கூட ஆனந்தமாக பருகிச் செல்வார்கள். ஏனேனில் ஞானிகள் அனைத்திலும் உள்ள இறைவனை நுகர்ந்து அனுபவித்து ஆனந்தமடைவார்கள். இதுவே ஞானத்தின் உச்சம் என்று பகவான் ராமகிருஷ்ணர் சொல்லி முடித்ததும் மூன்று பேர்களுக்கும் அறிவிற்கும் ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளங்கியது.

சம்மோகன கிருஷ்ணர்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயிலில் மோகனூரில் லலிதையும் கிருஷ்ணனும் இணைந்த கோலமான சம்மோகன கிருஷ்ணர் உருவம் உள்ளது. கிருஷ்ணர் தனது பாதி உடலை ராதைக்கு அளித்து அர்த்தநாரீ கிருஷ்ணராக காட்சியளிக்கிறார்.

மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர். சுயம்பு மூர்த்தியாக வலது புறம் ஸ்ரீதேவியுடனும் இடதுபுறம் பூமா தேவியுடனும் நின்ற திருக்கோலத்தில் வேதஸ்ருகங்க விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். உற்சவர் சீனிவாசர் பொதுவாக உற்சவமூர்த்தியின் மார்பில் மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்படடிருக்கும். ஆனால் இங்குள்ள உற்சவர் சீனிவாசரின் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும் அதன் மத்தியில் மகாலட்சுமி ரேகையும் உள்ளது. அம்மன்/தாயார் பத்மாவதி. மகா மண்டபத்தின் வலதுபுற விளிம்பில் தனிச்சன்னதியில் சிவ பார்வதியின் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தைப் போல லலிதையும் கிருஷ்ணரும் இணைந்து கோபால சுந்தரி எனும் சம்மோகன கிருஷ்ணராக அருள்பாலித்து வருகின்றார். தல விருட்சம் வில்வம். தீர்த்தம் காவிரி. புராணபெயர் மோகினியூர். காவிரியின் கரையில் அமைந்த கோயில் இது. காவிரி இங்கு வடக்கிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. காவிரியம்மனுக்கும் தனிசன்னதி இருக்கிறது. ஆடிப்பெருக்கு மற்றும் ஐப்பசி மாதத்தில் இவளுக்கு காவிரி தீர்த்தத்தால் அபிஷேகம் நடக்கிறது. சுவாமி சன்னதிக்கு பின்புறம் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது. தன்வந்திரிக்கு மூலிகைகள் கலந்த சூர்ணம் பிரதான நைவேத்யமாக படைக்கப்பட்டு சுக்குப்பொடி நாட்டுச்சர்க்கரை நல்லெண்ணெய் மற்றும் மூலிகைள் சேர்ந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இச்சன்னதியின் முன் மண்டப மேற்கூரையில் நவக்கிரகங்கள் மரச்சிற்பமாக இருக்கிறது. எதிரே கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். சுவாமி கோஷ்டத்தில் லட்சுமி ஹயக்ரீவர் இருக்கிறார். பௌர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவருக்கு எதிரே மேதா சரஸ்வதி காட்சி தருகிறாள். இவளிடம் வீணை கிடையாது.

கோயில் முன் மண்டபத்தில் நவநீதகிருஷ்ணர் இரு கரங்களிலும் வெண்ணெய் வைத்தபடி காட்சி தருகிறார். உடன் பாமா ருக்மணி உள்ளனர். ஆண்டாள் சக்கரத்தாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. கோயிலின் அக்னி மூலையில் கிழக்கு நோக்கி பதினாறு திருக்கரங்களுடன் ஸ்ரீசக்கரத்தாழ்வார் காட்சி கொடுக்கிறார். கோயில் வளாகத்தில் வன்னி மரத்தடியில் விநாயகரும் ஆஞ்சநேயரும் இருக்கின்றனர். கோயிலுக்கு எதிரே ஆஞ்சநேயருக்கு மற்றொரு சன்னதி இருக்கிறது. கருடாழ்வார் அமைந்திருக்கும் சோபன மண்டபத்தின் வடபுறம் பரமபத வாசல். அதன் நேர் எதிரே திருப்பதி வேங்கடவனின் சுதைச் சிற்ப உருவம் தாங்கிய உற்சவர் அலங்கார மண்டபம் உள்ளது. முதல் பிராகார மண்டபத் தூண்களில் ஆழ்வார்களின் உருவங்கள் சுதைச் சிற்ப வடிவில் உள்ளது. அதன் கீழே அவரவர் பாடிய பாசுரங்களில் நான்கு வரிகள் எழுதப்பட்டுள்ளது.

இந்த ஊரில் வசித்த பக்தர் ஒருவர் திருப்பதி வெங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். வருடம் தவறாமல் திருப்பதி கோயிலுக்கு சென்று வருவார். ஒரு சமயம் அவருக்கு வாத நோய் ஏற்பட்டதால் திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. வருத்தமடைந்த அவர் காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்தார். தள்ளாடியபடி நடந்து சென்று காவிரிக் கரையை அடைந்தார். அப்போது கரையில் இருந்த ஒரு புற்றில் இருந்து நாகம் வெளிவந்தது. பாம்பைக் பார்த்த பக்தர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய திருமால் பாம்பு வெளிப்பட்ட புற்றுக்குள் சிலை வடிவில் இருப்பதாக கூறினார். காலை எழுந்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பக்தர் உடனே அங்கு சென்று புற்றை உடைத்து பார்த்த போது உள்ளே சுவாமி சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக மணக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுவாமிக்கு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் என்று பெயர் சூட்டப்பட்டது. இதுதவிர பத்மாவதி தாயாருக்கு தனி சன்னதி கட்டப்பட்டது.

திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் கோயில் உருவாக்கப்பட்டதால் நவராத்திரியின்போது வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் திருப்பதியில் ஓர் நாள் என்னும் உற்சவம் நடக்கிறது. அன்று அதிகாலை நடை திறக்கப்படுவதில் இருந்து இரவு வரையில் அனைத்து பூஜைகளும் திருப்பதியில் நடக்கும் முறையிலேயே செய்யப்படுகிறது. திருப்பதியில் வெங்கடாஜபதிக்கு அலங்காரம் செய்யப்படுவது போலவே அன்று சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு திருவோண நட்சத்தர தினத்தன்று மாலையில் சத்யநாராயண பூஜை நடக்கிறது. அப்போது சுவாமிக்கு மட்டைத்தேங்காய் படைத்து வழிபடப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளுகிறார்.

பேளுக்குறிச்சி முருகன்

வேலவன் குறிச்சி கொல்லிமலையின் அடிவாரத்தில் உள்ளது. முருகனின் பெயர்களில் ஒன்று வேலவன். வேல் + அவன் = வேலவன். வேலே அவன்தான். முருகனின் ரூபமே வேல்தான் என்பதை இப்பெயர் குறிக்கும். ஒரு காலத்தில் இந்த கோயில் பழனியப்பர் கோயில் என்றும் கூகை மலை என்றும் அழைக்கப்பட்டது. படைப்புக்குரிய மூல மந்திரமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மாவிடம் முருகப்பெருமான் கேட்டார். பிரம்மாவால் சரியாக பதில் கூறமுடியவில்லை. இதனால் பிரம்மாவை தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன் பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்தார். கொல்லிமலை அடிவாரத்திலுள்ள கூவைமலை என்னும் குன்றில் தங்கினார். கூவை என்றால் பருந்து. கொல்லிமலையின் மேலிருந்து கூவை மலையைப் பார்த்தால் கழுகு சிறகை விரித்திருப்பது போன்ற தோற்றம் இருக்கும். எனவே இப்பெயர் ஏற்பட்டது.

மூலவர் பழனியாண்டவர். பழனி மூல விக்ரஹத்தை உருவாக்கிய சித்தரான போகர் பழனி விக்ரஹத்தை உருவாக்குவதற்கு முன்பு கொல்லி மலையின் மூலிகைகளைக் கொண்டு ஒரு முருகரின் மூர்த்தியை உருவாக்கி இங்கு பிரதிஷ்டை செய்தார். எனவே இக்கோயில் பழனியை விட பழமையானது. இதனால் முருகர் பழனி அப்பா என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் நுழைவாயிலில் ஒரு சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தில் இரண்டு பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுங்க முயற்சிப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்புகளுக்குக் கீழே ஒரு பச்சை கல் உள்ளது. மேலும் இந்தக் கல்லில் அமர்ந்து தியானம் செய்பவர் தனது பிரார்த்தனைகளில் நினைத்ததைப் பெறுவார்கள். பழனி யாண்டவர் சன்னதியின் இடதுபுறம் விஷ்ணு சன்னதியும் எதிரில் கருடாழ்வாரும் உள்ளனர். வலதுபுறம் நவக்கிரகம் சனீஸ்வரர் சன்னதி உள்ளது. தீர்த்தம் யானைப்பாழி தீர்த்தம். மலையடிவாரத்தில் பாறைகளுக்கு இடையே யானை வடிவிலான வற்றாத சுனை உள்ளது. இதற்கு யானைப்பாழி தீர்த்தம் என்று பெயர். இந்த சுனையில் ஆண்டு முழுவதும் இரும்புச் சத்துடன் கூடிய தண்ணீர் ஊறுகிறது.

முருகன் வள்ளியைத் துரத்திச் சென்று திருமணம் செய்ய வேட்டைக்காரனின் வடிவத்தில் வரும் இடம் இது. மூலஸ்தானத்தில் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிய திசையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தலையில் கொண்டை போல் முடி முடிச்சு போடப்பட்டிருக்கிறது. தலையில் கொன்றை மலர்கள் உள்ளன. அவர் தனது கால்களில் காலணிகளை அணிந்துள்ளார். அவரது இடது கை இடுப்பில் இருந்தாலும் ஒரு சேவல் இருக்கிறது. பத்மாசுரன் முருகனால் வதம் செய்யப்பட்டதும் அவனை முருகர் சேவலாகவும் மயிலாகவும் மாற்றினார். இந்தச் சேவலை தனது கையில் வைத்திருக்கிறார். மற்ற முருகன் கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளார். அவரது வலது கை வஜ்ர வேல் வைத்திருக்கிறார். வேலின் உயரம் மூர்த்தியை விட உயரமாக இருக்கிறது. பௌர்ணமி நாட்களில் நள்ளிரவு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. அந்த நள்ளிரவு நேரத்தில் சித்தர்கள் இங்கு பூஜைகள் செய்ய வருவதால் இரவு 11:50 மணிக்கு அபிஷேகம் பின் அலங்காரம் முடிந்ததும் சன்னதியின் கதவுகள் மூடப்படுகிறது. அனைத்து பக்தர்களும் வெளியே காத்திருப்பார்கள். சிறிது நேரத்திற்கு பின் நள்ளிரவில் கதவுகள் திறக்கப்படும் போது சித்தர்கள் பூஜை செய்த சான்றுகளாக அலங்காரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் இருக்கும். இது இன்றும் நடக்கிறது. அபிஷேகம் முடிந்ததும் இறைவனின் மூக்கு கன்னம் மற்றும் மார்பின் நுனியிலிருந்து வியர்வை வெளிப்படுகிறது.

கடையேழு வள்ளல்களில் ஒருவராக விளங்கியவர் ஓரி. ஒரே அம்பில் பல மிருகங்களை வீழ்த்தும் வலிமை பெற்றவறாக விளங்கினார். இவரது ஆட்சிக்குட்பட்ட சேர்ந்தமங்கலம், அறப்பள்ளி, சிங்களாந்தபுரம், ராசிபுரம், கல்குறிச்சி என பல இடங்களில் சிவாலயங்களில் கட்டியிருக்கிறார். பேளுக்குறிச்சியில் முருகன் கோயிலையும் அவர்தான் கட்டினார். ஔவையார் இங்கு பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். ஔவையார் தனது எந்தவொரு பயணத்திற்கும் முன் இங்கு பிரார்த்தனை செய்ததாகக் குறிப்புகள் உள்ளது. இந்த முருகப்பெருதான் மீது அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார். அகத்தியர் பூஜை செய்துள்ளார். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது.

துக்காராம்

துக்காராம் 16 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் உள்ள புனேவிற்கு அருகில் உள்ள தேகு என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் பாண்டுரங்கனின் தீவிர பக்தர். இவரது மனைவி பெயர் கமலாபாய். இவர் ஒரு சம்சார துறவி. மராத்திய கவிஞர் மற்றும் சமய சீர்திருத்தவாதி ஆவார். சமூக சமத்துவம் அன்பு மற்றும் மனித நேயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பக்தி பாடல்களை இயற்றினார். அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் சத்ரபதி சிவாஜி கோயிலுக்கு வந்த போது அவரை சிறைபிடிக்க அவுரங்கசீப் சுற்றி வளைத்தார். அப்போது துக்காராம் இறைவனை வேண்டிப் பாடல்கள் பாட இறைவனே சிவாஜியைப் போல குதிரையில் வந்து எதிரிகளுடன் சண்டை போட்டு அவர்களை ஓட வைத்தார். துக்காராமின் போதனைகள் மற்றும் பாடல்கள் மகாராஷ்டிராவில் பக்தி இயக்கத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகக் கருதப்பட்டார். துக்காராமின் படைப்பு நூல்களில் ஒன்று துக்காராம் கீதை ஆகும். அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தில் ஒன்று.

கமலாபாய் தெரிந்தவர் ஒருவரிடம் சொல்லி தனது கணவருக்கு சோளக்கொல்லை ஒன்றைக் காவல் காக்கும் பணியை வாங்கிக் கொடுத்தாள். வேலை நேரத்தில் பரண்மேல் ஏறி ஆனந்தமாக பஜனைப் பாடல்களைப் பாட பறவைகள் ஆனந்தமாக வந்து அத்தனை சோளத்தையும் கொத்திச் சென்று விட்டன. சோளக் கொல்லையின் உரிமையாளர் அவரை உடனடியாக வேலையை விட்டு நீக்கிவிட்டார். வருமானத்திற்கு வழியும் இல்லை. துக்காராம் உயர்ஜாதி அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ளாமல் கீழ் ஜாதியினரையும் சமமாக வைத்து அவர்கள் முன்பாகவும் கீர்த்தனை பாடுவார். இதை உயர் ஜாதிக்காரர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இவரை திட்டிக் கொண்டே இருப்பார்கள். சம்பாதிக்கா விட்டால் போகிறது. ஆனால் ஜாதி ஆசாரம் இல்லாமல் இருக்கிறாரே? கூடியிருந்த ரசிகர்களில் பலர் கீழ் ஜாதிக்காரர்கள் தான். என்ன இப்படிச் செய்கிறீர்களே என்று கேட்டாள். அதற்கு அனைவரும் ஒரே மனித ஜாதிதான் என்று சிரித்தார். ஊரில் நல்ல பெயரும் இல்லை. வருமானமும் இல்லை. ஒரு நாள் கோயிலுக்கு மாலை செல்ல வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தார்கள். நல்ல புடவையாக கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஒருவர் துக்காராமின் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைகளின் தீவிர ரசிகர். அன்பளிப்பாகக் கொடுத்த புடவை ஒன்று இருந்தது. ஒருமுறை மட்டுமே கட்டிய அந்த புடவையை துவைத்து வீட்டின் பின்புறம் காய வைத்திருந்தாள்.

துக்காராம் வழக்கம் போல் திண்ணையில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தார் அவர். பலர் அந்த தேவகானத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் குரலின் இனிமையும் பக்தியின் ஆழமும் கமலாபாயையும் உருக்கத்தான் செய்தது. இலட்சணமான ஒரு பெண் சிறிது தள்ளி நின்று பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கிழிசல் புடவை சிரமப்பட்டு அவள் மானத்தை மறைத்துக் கொண்டிருந்தது. பார்க்கும் போதே கீழ் ஜாதி பெண் என்று தெரிந்தது. அவளை பார்த்த துக்காராம் ஏன் அம்மா தள்ளி நிற்கிறாய்? இங்கே வந்து உட்கார் என்று அன்போடு அவளை உபசரித்தார். இதனைப் பார்த்த கமலாபாய் அந்தக் கிழிந்த புடவை கட்டியிருக்கும் கீழ்ஜாதிப் பெண்ணை நன்றாக சிம்மாசனம் போட்டு உட்கார வையுங்கள் என்று எரிச்சலோடு நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள். கச்சேரி தொடர்ந்தது. எல்லோரும் உருகினார்கள். கீழ்ஜாதிப் பெண்ணும் உருகினாள். ஜாதி வேறுபாடெல்லாம் கிருஷ்ணரிடம் கிடையாது. அனைவரும் கிருஷ்ணரைப் பக்தி செய்து வைகுண்டம் செல்ல வழி தேடுங்கள் என்று அறிவுறுத்திவிட்டு அன்றைய பக்தி இசையை முடித்துக் கொண்டார் துக்காராம். ஒவ்வொருவராக விடைபெற்றார்கள். கீழ்ஜாதிப் பெண் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஏன் அம்மா நீ புறப்படவில்லையா? என்று கேட்டார்.

அனைவரும் போகட்டும் சாமி. நான் கடைசியில் போகிறேன். முதலிலேயே போனால் என் பின்னால் வருபவர்கள் என் கிழிந்த புடவையை விமர்சித்துக் கொண்டே வருவார்கள் என்றாள். உன்னிடம் வேறு புடவை இல்லையா அம்மா? என்று கேட்டார். நிறையப் புடவை இருந்தது சாமி. ஆனால் யாரோ ஒரு பெண் மானத்தைக் காப்பாற்றப் புடவை தா என்று இக்கட்டான ஒரு சந்தர்ப்பத்தில் என் கணவரிடம் கேட்டாள். என் கணவரோ தர்மப்பிரபு. என் புடவைகள் அனைத்தையும் வாரி வழங்கிவிட்டார். எனக்கு மிஞ்சியது இந்தக் கிழிசல் புடவை தான் என் கணவர் சின்ன வயதில் விளையாட்டாகப் புடவை திருடுவாராம். பெண்கள் குளிக்கும் இடங்களில் புடவையைத் திருடி வைத்துக் கொண்டு அவர்கள் கெஞ்சினால் தான் தருவாராம். அப்படிப் பெண்கள் மனத்தை நோக வைத்தார் இல்லையா? அதனால் அவர் பெண்டாட்டிக்குக் கிழிசல் சேலைதான் என்று விதித்திருக்கிறது போலிருக்கிறது என்று கவலையுடன் சொன்னாள். இதனைக் கேட்ட துக்காராம் வேகமாக கொல்லைப்புறம் சென்றார். கமலாபாய் உலர்த்தியிருந்த சேலையைக் கொடியிலிருந்து உருவினார். வாசலுக்கு வந்தார். அம்மா இனி இந்தச் சேலையைக் கட்டிக்கொள். இதில் கிழிசல் இருக்காது. பெண்கள் கிழிசல் சேலையை உடுத்தக் கூடாது என்று சேலையை அவள் கையில் கொடுத்தார். அவரையே கனிவுடன் பார்த்த அவள் ஐயா நீங்கள் எனக்குப் புடவை கொடுத்தது பற்றி உங்கள் மனைவி கோபித்துக் கொள்ள மாட்டாரா? என்று கேட்டாள். அவள் கோபம் சிறிது நேரம் இருக்கும். பிறகு சமாதானமாகி விடுவாள். அவளிடம் கிழியாத இன்னொரு புடவை இருக்கிறது. ஆகவே நீ யோசிக்க வேண்டாம் இப்போது உனக்குத்தான் இந்த சேலை அவசியம் தேவை என்றார். துக்காராமின் பதிலைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே அவள் புடவையோடு விடை பெற்றாள்.

துக்காராம் ஒன்றும் தெரியாதவர் போல் அமர்ந்து கொண்டார். மாலைநேரம் வந்தது. கணவரோடு கோயிலுக்குப் புறப்பட்ட கமலாபாய் உலர்த்தியிருந்த புடவையை உடுத்திக் கொள்ளலாம் என்று கொல்லைப்புறம் போய்க் கொடியைப் பார்த்தாள். புடவையைக் காணவில்லை. கோபத்தோடு துக்காராமிடம் வந்தாள். புடவை எங்கே? என்று கேட்டாள். கிழிந்த புடவையோடு ஒருபெண் என் பாட்டைக் கேட்க வந்தாள். அவளிடம் அந்தப் புடவையைக் கொடுத்து விட்டேன். உனக்குத்தான் கிழியாத இன்னொரு புடவை இருக்கிறதே? என்று குழந்தைபோல் பேசும் துக்காராமைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. சோற்றுக்கே திண்டாட்டம். ஆனால் இவரோ வள்ளல் ஒரு சோளக்கொல்லை காவல்கார வேலையைக் கூடச் செய்யத் தெரியாத மனிதர் என்று கண்ணில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட அவள் வீட்டைப் பூட்டிக் கொண்டு கணவரோடு புறப்பட்டாள். அழாதே கமலா நமக்குத் தேவையானவற்றைக் கிருஷ்ணர் கொடுப்பான் என்றார். கணவரிடம் ஏதொன்றும் பேசாமல் பெருமூச்சோடு கோயிலை நோக்கி நடந்தாள். கர்ப்பகிரகம் நோக்கிச் சென்றார்கள் இருவரும். என் கணவரை ஏன் இப்படிப் படைத்தாய்? என்ற கேள்வியுடன் கண்மூடிக் கண்ணீர் வழிய நின்றாள் கமலாபாய். இடுப்பில் கைவைத்து நின்றிருந்த பாண்டுரங்கனும் ருக்மிணியும் நகைத்துக் கொண்டார்கள். கமலாபாய் கண் திறந்து ருக்மிணி சிலையைப் பார்த்தாள். அவளுக்கு அதிர்ச்சியில் தூக்கிவாரிப் போட்டது. ருக்மிணியின் சிலை கட்டிக் கொண்டிருந்தது அவள் கொடியில் உலர்த்தியிருந்த அதே புடவை தான். கண்ணைக் கசக்கிக் கொண்டு திரும்பத் திரும்பப் பார்த்தாள். சந்தேகமே இல்லை. அவள் புடவையே தான் அது. அப்படியானால் கீழ் ஜாதிப் பெண்ணாக வந்தது என் தாயார் ருக்மிணியா? தேவி என்னை மன்னித்துவிடு. என் கணவரது மகிமை தெரியாமல் ஏதேதோ பேசிவிட்டேன். வறுமை என்னை அப்படியெல்லாம் பேசச் செய்துவிட்டது அம்மா கீழ்ஜாதிப் பெண்கள் உள்பட எல்லாப் பெண்களுமே உன் வடிவம் என்று என் கணவர் சொல்லும் உண்மையை இன்று உணர்ந்துகொண்டேன் என்று ஆனந்தக் கண்ணீருடன் வழிபட்டாள்.

கிருஷ்ணரையும் ருக்மிணியையும் விழுந்து வணங்கிய அவள் வாருங்கள் வீட்டுக்குப் போகலாம் என்று கணவரோடு பக்திக் கண்ணீர் வழிய வீடுநோக்கி நடந்தாள். வீட்டு வாசலில் ஒரு மாட்டுவண்டி நின்றிருந்தது. அதிலிருந்த இறங்கிய ஒருவர் அவர்களை நமஸ்கரித்தார். பிறகு கமலாபாயிடம் சொன்னார். அம்மா என்னை மறந்துவிட்டீர்களா? நான்தான் என் சோளக்கொல்லையைக் காவல் காக்கிற வேலையை இவருக்குக் கொடுத்தேன். வேலையை இவர் சரியாகச் செய்யவில்லை என்று இவரை வேலையை விட்டு நீக்கினேன். ஆனால் என்ன ஆச்சரியம் என் சோளக்கொல்லை முன் எப்போதும் இல்லாத அளவு பத்துமடங்கு விளைச்சல் கண்டிருக்கிறது. இவர் சாதாரண ஆள் இல்லை அம்மா. அதற்காக அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தனை தானியங்களையும் கொஞ்சம் தங்க நாணயங்களையும் காணிக்கையாக அளிக்க வந்தேன் என்றார். கமலாபாய் திகைத்துப் போனாள். கமலா நாம் கொடுத்த புடவையைக் கட்டிக்கொண்டாளே ருக்மிணி. அவளைக் கட்டிக் கொண்ட அந்த கிருஷ்ணன் அந்த புடவைக்கு விலையாக என்னவெல்லாம் அனுப்பியிருக்கிறான் பார்த்தாயா? என்று துக்காராம் சிரித்த போது கமலாபாயின் ஆனந்தமான சிரிப்பும் சேர்ந்து கொண்டது.

துக்காராம் நாற்பத்தைந்து ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்த துக்காராம் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு மரத்தடியில் நின்று கொண்டு நான் போய் வருகிறேன் என்று கூறினார். அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே விஷ்ணு ரதவிமானத்தை அனுப்ப அதில் ராம் ராம் என்று சொல்லிக் கொண்டே இந்தப் பூத உடலுடன் வைகுண்டம் கிளம்பினார்.

பத்திரகிரியார்

பத்திரகிரியார் என்ற பெயரில் பட்டினத்தாரின் சீடராக இருந்தவரின் இயற்பெயர் பர்த்ருஹரி. உஜ்ஜனியின் மாகாளம் என்ற பகுதியின் அரசராக இருந்தவர். அரசராக இருந்தாலும் சிவபக்தியில் சிறந்தவர். பட்டினத்தாரின் ஞானத்தை அறிந்த அந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர். இவருடைய மெய்ஞானப்புலம்பல் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. இந்த சிற்பம் உள்ள இடம் அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில் தெற்கு மாட வீதி மயிலாப்பூர்.

துக்காராம்

பக்த துக்காராம் 1608 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் பூனா மாவட்டத்தில் உள்ள தேஹு என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது குல தெய்வம் பந்தர்பூரின் விதோபா. பின்னாளில் இவர் சாந்த் துக்காராம் மகாராஜ் என்று அழைக்கப்பட்டார். இவர் அபாங்கா எனப்படும் 4500 பக்தி பாடல்களை இயற்றினார். விட்டலருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடல்கள் அபங்கா பாடல்கள் ஆகும். கீர்த்தனைகள் மூலம் சமூகம் சார்ந்த வழிபாட்டையும் பிரபலப்படுத்தினார். மகாராஷ்டிராவில் கிருஷ்ணர் வழிபடும் வடிவம் விட்டல ஆகும். வேறு பெயர்கள் பாண்டுரங்கன் விதோபா மற்றும் பண்டரிநாதர் ஆகும். துக்காராம் பல வணிக முயற்சிகளில் ஈடுபட்டார். தனது வாடிக்கையாளர்களிடம் மிகவும் அன்பாகவும் நேர்மையாகவும் இருந்தார். கடன் வாங்கிய பணம் உட்பட தன்னிடம் இருந்த அனைத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்தார். அதனால் ஆரம்பித்த அனைத்து வியாபாரத்திலும் தோல்வி அடைந்தார். 1629 1630 ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தின் போது ​​அவரது முதல் மனைவி மகன் மற்றும் மீதமுள்ள சில கால்நடைகள் இறந்தன. இவரது குடும்பத்திடம் கடன் பெற்ற கடனாளிகள் அவருக்குக் கொடுக்க வேண்டிய பணம் பொருள் எதையும் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றினார்கள். மேலும் கடன் கொடுத்தவர்கள் தங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டு அவரை வற்புறுத்தினார்கள். துக்காராமைக் கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கி இறைவன் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டார். துக்கராமின் வாழ்க்கையில் உண்மையான பணி இந்தக் கட்டத்தில் தொடங்கியது.

துக்காராம் வாழ்க்கையின் வெறுமையில் அமைதியை நோக்கிய பயணத்தில் தனது வீட்டையும் கிராமத்தையும் விட்டு வெளியேறி அருகிலுள்ள பாம்நாத் காட்டில் மறைந்தார். 15 நாட்கள் உணவு தண்ணீர் இல்லாமல் விட்டலரை நினைத்துக் கொண்டு அங்கேயே இருந்தார். 15 வது நாளுக்குப் பிறகு அமைதியின் உணர்வை உணர்ந்தார். அப்போது பகவான் விதோபா அவருக்கு காட்சி கொடுத்து தனது அருளாசியை வழங்கினார். இதற்குப் பிறகு பக்த துக்கராமுக்கு தனது குடும்பத்தினர் மனைவி அல்லது உறவினர்கள் மீது எந்த பாசமும் இல்லாமல் போனது. வீட்டில் இருந்த வியாபாரம் சம்பந்தமான அனைத்து பொருள்கள் கடன் பத்திரங்கள் மற்றும் கணக்கு புத்தகங்கள் அனைத்தையும் சேகரித்து இந்திராயணி நதியில் வீசினார். பின்னர் தனது சொந்தக் கைகளால் பாழடைந்த குடும்பக் கோயிலை மீண்டும் கட்டியெழுப்பினார். அவரது மனதில் நான் கடவுளே உன்னை ஒருபோதும் மறக்கக் கூடாது. இந்த உடல் இறைவனின் பஞ்ச பூதம் என்னும் 5 கூறுகளால் ஆனது. இறைவனைத் தவிர எனக்கு அடைய வேண்டியது ஒன்றும் இல்லை என்ற சிந்தனை ஆழமாகப் பதிந்தது. பின் தனது வாழ்க்கையை இறைவனை சிந்திப்பதிலும் பூஜைகள் செய்வதிலுமே செலவிட்டார். இதன் பலனாக ஒரு நாள் அவரது குரு அவரது கனவில் தோன்றி உபதேசம் வழங்கினார். இதனை துக்காராம் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வாக விவரிக்கிறார். தகுதியான எதையும் தான் செய்யவில்லை என்றாலும் சத்குரு ஒரு கனவில் என்னிடம் வந்து மிகவும் கருணை காட்டினார். நான் ஆற்றில் குளிக்கச் சென்ற போது அவர் என்னைச் சந்தித்து என் தலையில் கை வைத்து என்னை ஆசீர்வதித்தார். அவர் தனது பெயர் பாபாஜி சைதன்யா என்று கூறினார். (பாபாஜி சைதன்யா சாந்த் ஞானதேவின் நான்காவது தலைமுறை சீடர் ஆவார்.) மேலும் தனது இரண்டு முந்தைய குருக்களின் பெயர்களை ராகவ சைதன்யா மற்றும் கேசவ சைதன்யா என்று கூறினார். ராமகிருஷ்ண ஹரியின் ஜபத்தைச் செய்ய அவர் எனக்கு அறிவுறுத்தினார் என்றார். இது ஜனவரி 1632 இல் நடந்தது.

துக்காராம் இப்போது தனது வாழ்க்கையை பக்திப் பயிற்சிகளில் அதிகளவில் செலவிடத் தொடங்கினார். ஞானதேவ் நாம்தேவ் மற்றும் ஏக்நாத் போன்ற சிறந்த துறவிகளின் கவிதைகள் மற்றும் படைப்புகளைப் படிப்பது பகவத் கீதை ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றைப் படிக்கத் தொடங்கினார். பின்னர் ஒரு நாள் அவர் ஒரு கனவில் பாண்டுரங்கன் தோன்றி அவரை எழுப்பி பக்திப் பாடல்களைப் பாடுமாறு அறிவுறுத்தினார். பாண்டுரங்கனின் அருளால் கவிதைகள் படைக்கும் தெய்வீகக் கலை துக்காராமுக்கு இயல்பாகவே வந்தது. இவரது பாடல்களில் மக்கள் ஈர்க்கத் தொடங்கினர்கள். அவரது புகழைப் பார்த்து சிலர் பொறாமையடைந்தனர். அக்காலத்தைச் சேர்ந்த கற்றறிந்த பிராமணரான ராமேஸ்வர் சாஸ்திரிக்கு இவருக்கு எதிராக ஒரு புகாரை அனுப்பினர்கள். துக்கராமிடம் வந்த ராமேஸ்வர் இவரது கவிதைகள் மற்றும் ஷ்ருதிகளின் கொள்கைகளை விளக்கிச் சொல்லுமாறு கேட்டார். சாஸ்திரி துக்கராமிடம் தனது கவிதைகளில் கொள்கைகளில் அனைத்து மனிதர்களும் சமம். பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்று விளக்கத்தில் பொருள் கூறினார். இதனை ஏற்றுக் கொள்ளாத ராமேஸ்வர் இனி துக்காராம் பாடல்கள் பாட எந்த உரிமையும் இல்லை. எனவே அவர் கவிதைகள் எழுதுவதை நிறுத்த வேண்டும். இவர் ஏற்கனவே எழுதிய கவிதைகளை இந்திராயினி நதியில் மூழ்கடிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். அனைத்தும் விட்டலரின் லீலை என்று உணர்ந்த துக்காராம் உடனடியாக தனது வீட்டிலிருந்த அனைத்து கவிதைகளையும் வெளியே கொண்டு வந்து அவற்றை ஒன்றாகக் கட்டி ஒரு பெரிய கல்லை அதனுடன் சேர்த்து மூட்டையாக கட்டி ஆற்றில் எறிந்தார். பாண்டுரங்க பகவானே பாடல்கள் மூலம் மக்களிடையே பக்தியைப் பரப்பும்படி அவருக்குக் கட்டளையிட்டிருந்த படியால் துக்காராம் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் தனிமையில் தனது கவிதைகளில் கடவுளின் புகழைப் பாடிக்கொண்டிருந்தார். இவ்வாறு தொடர்ந்து 13 நாட்கள் அவர் தண்ணீர் உணவு இல்லாமல் இருந்தார். 14 ஆம் நாளில் துக்கராமின் சீடர்களில் ஒருவரின் கனவில் தோன்றிய பாண்டுரங்கர் ஆற்றுக்குச் செல்லுங்கள். அங்கே துக்கராமின் கவிதைகள் மேற்பரப்பில் மிதப்பதைக் காண்பீர்கள் என்று கூறினார். உடனே அந்த சீடர் தீர்ப்பு கூறிய ராமேஸ்வரரையும் அழைத்துச் சென்று ஆற்றுக்குச் சென்று பார்த்தார். அங்கு கல்லோடு கட்டிய கவிதை மூட்டைகள் மிதந்து கொண்டிருந்தது. அதனை கரைக்குக் கொண்டு வந்தார் சீடர். துக்காராமின் மகிமையை உணர்ந்த ராமேஸ்வர் எத்தனை சிறப்பு வாய்ந்த பாடல்களாக இருந்திருந்தால் இறைவன் துக்காராம் கவிதைகளை 13 நாட்கள் தண்ணீரில் பாதுகாத்திருக்கிறார் என்று எண்ணி துக்காராமை சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டு தொடர்ந்து பாடல்கள் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் அவரது மனதில் துக்காராமின் மீது வெறுப்பு இருந்தது. இதனை உணர்ந்த துக்காராம் ராமேஸ்வரின் வார்த்தையை மரியாதைக்குரியதாக கருதி தொடர்ந்து கவிதைகளை எழுதவில்லை.

ஒரு நாள் ராமேஷ்வர் ஒரு முஸ்லிம் பக்கீர் பக்கிரின் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்தபோது ​​அவர் உடல் முழுவதும் எரியும் உணர்வை உணரத் தொடங்கினார். இந்த நோயின் விரக்தியில் அவர் சாந்த் ஞானேஷ்வரின் சமாதி முன் அமர்ந்து உடல் எரியும் உணர்வு துன்பத்தைப் போக்குமாறு பிரார்த்தனை செய்தார். அன்று இரவில் அவரது கனவில் ஞானேஷ்வர் வந்து விதோபாவின் மிகப் பெரிய பக்தரான துக்காராம் மீது உன் மனதில் வெறுப்பு இருக்கிறது. வெறுப்பை விட்டுவிட்டப் போய் துக்கராமிடம் சரணடை. உன் உடல் துன்பங்கள் அனைத்தும் போய் விடும் என்று அறிவுருத்தினார். காலையில் எழுந்த ராமேஸ்வர் துக்கராமிடம் சென்றால் அவர் தன்னை சபித்துவிடுவாரோ என்று பயந்தார். எனவே அவர் துக்கராமுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு கடிதம் அனுப்பினார். துக்காராம் அந்த கடிதத்தைப் படித்ததும் ராமேஷ்வருக்கு ஒரு பதிலை அனுப்பினார். மனம் தூய்மையாக இருந்தால் உங்கள் எதிரிகள் கூட உங்கள் நண்பர்களாகி விடுவார்கள். புலிகள் அல்லது பாம்புகள் போன்ற கொடூரமான விலங்குகளால் உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. விஷம் கூட சொர்க்கத்தின் அமிர்தத்தைப் போல உங்களுக்கு நன்மை பயக்கும். அனைத்து துரதிர்ஷ்டங்களும் மகிழ்ச்சியாக மாறும். மேலும் உடல் எரிவதால் ஏற்படும் துன்பம் கூட மறைந்துவிடும். நீங்கள் உங்களை நேசிப்பது போல் அனைத்து உயிரினங்களையும் நேசிப்பீர்கள். அனைவரிடமும் சமமான பார்வையைப் பெறுவீர்கள். நாராயணன் என் மீது இந்த கருணை காட்டியுள்ளார். அதனால்தான் நான் அனைத்து உயிரினங்களிடமும் இப்படி உணர்கிறேன் என்று பதில் எழுதினார். துக்காராமின் கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது உடல் எரிவதால் ஏற்படும் துன்பம் கூட மறைந்துவிடும் என்ற வார்த்தைகளை ராமேஷ்வர் படித்த போது ​​அவரது உடல் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டது. இதனால் துக்கராமுக்கு அவர் மிகப்பெரிய அநீதி இழைத்துவிட்டார் என்பது அவருக்கு உறுதியாகப் பதிந்தது. அன்றிலிருந்து ராமேஷ்வர் சாந்த் துக்காராம் மகாராஜின் சிறந்த அபிமானியாகவும் தீவிர சீடராகவும் ஆனார். துக்காராமை சந்தேகித்ததால் தன்னைத்தானே குற்றம் சாட்டி 5 கவிதைகளை எழுதினார் ராமேஸ்வர். இந்த சம்பவத்திற்குப் பிறகு துக்கராமின் பெயரும் புகழும் எங்கும் பரவியது.

மராட்டியத் தலைவர் சிவாஜி மகாராஜ் துக்கராமைச் சந்திக்க வந்து அவருடன் பல நாட்கள் தங்கினார். துக்கராமின் பஜனைகளால் சிவாஜி மகாராஜ் மிகவும் ஈர்க்கப்பட்டு நெகிழ்ச்சியடைந்தார். சிவாஜி தனது ராஜ்யத்தை துறந்து விட்டு பஜனை செய்து துக்கராமைப் பின்பற்ற விரும்பினார். ஆனால் துக்காராம் அவரை அவ்வாறு செய்வதிலிருந்து தடுத்தார். சிவாஜிக்கு தனது குடிமக்களுக்கான கடமையை நினைவூட்டி அறிவுறுத்தினார். கடவுளை உணர உணவையோ தண்ணீரையோ விட்டுவிட்டு காட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உலக இன்பங்கள் தாங்களாகவே உங்களிடம் வந்தால் அவற்றை எல்லா வழிகளிலும் அனுபவிக்கவும் ஆனால் நம் அனைவரிடமும் வசிக்கும் கடவுளின் பெயரால் மட்டுமே. எதையும் விரும்பாதீர்கள் எதையும் விட்டுவிடாதீர்கள். இது உங்களுக்கு எனது எளிய மற்றும் ஒரே அறிவுரை என்றார். சிவாஜி தனது அரசவைக்கு மகிழ்ச்சியான மற்றும் திருப்தியான மனிதராகத் திரும்பினார். சமர்த் சுவாமி ராம்தாஸ் சிவாஜி மகாராஜின் குருவாக இருப்பார் என்பதை பக்த துக்காராம் உள்ளுணர்வாக அறிந்திருந்தார். இதனால் சுவாமி ராம்தாஸை சிவாஜிக்கு அறிமுகப்படுத்தினார் துக்காராம்.

துக்காராம் ஒருமுறை தேஹுவுக்கு அருகிலுள்ள லோஹாகான் என்ற கிராமத்தில் கீர்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் பஜனை செய்யும் ஒரு பெரிய கூட்டம் இருந்தது. அவர்களில் ஜோஷி என்ற பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் தனது இறக்கும் நிலையில் இருந்த ஒரே குழந்தையை அதன் தாயிடம் விட்டுவிட்டு பஜனைக்கு வந்தார். குழந்தை இறந்து விட்டது. தாய் மிகவும் துயரமடைந்தாள். அவள் துக்காராம் பஜனையின் போது அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து இறக்கும் நிலையில் இருந்த குழந்தையைப் பற்றி கூறி தனது கணவர் அலட்சியமாக இருந்தபடியால் குழந்தையின் மரணத்திற்கு அவர்தான் காரணம் என்றும் அவரைக் கடிந்து கொண்டாள். துக்காராம் உடனடியாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து ஒரு பாடலைப் பாடினார். துக்காராம் பாடி முடிக்கும் போது குழந்தை உயிர் பெற்று எழுந்தது. துக்காராம் எப்போதும் பஜனை மற்றும் கீர்த்தனைகளைச் செய்து வந்தார். எதையும் சம்பாதிக்கவில்லை. தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரிக்கும் பொறுப்பு அவரது மனைவியின் மீது விழுந்தது. துக்காராம் தனது பஜனையில் மிகவும் மூழ்கியிருந்ததால் அவர் தனது உணவை மறந்துவிடுவார். அவரது மனைவி அவரைத் தேடிச் சென்று அவருக்கு உணவை பரிமாறினாள். பெரும்பாலும் அவர் பாம்கிரி மலையில் காணப்பட்டார். துக்கராமின் மனைவி குடும்பத்தை பராமரிப்பதில் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. துக்கராமே அவரது பக்தியையும் தூய்மையையும் பாராட்டியிருக்கிறார்.

துக்கராமின் இறுதி காலத்தில் தனது நண்பர்களிடம் சில நாட்களில் தான் இங்கிருந்து விரைவில் புறப்படுவதாகக் கூறினார். புறப்படுவதற்கு முந்தைய இரவு அவர் ஹரிகதை என்ற ஒரு கீர்த்தனை செய்தார். அதில் ஹரிகதை என்பது மூன்று புனித நதிகள் போன்றது. கடவுள் பக்தர் மற்றும் இறைவனது பெயர் ஆகியவற்றின் சங்கமம் போன்றது. அதைக் கேட்பதன் மூலம் ஒருவரின் அனைத்து பாவங்களும் எரிந்து ஒருவர் சுத்திகரிக்கப்படுகிறார். சுற்றி கிடக்கும் கூழாங்கற்கள் கூட புனிதமாகவும் வழிபாட்டிற்கு தகுதியாகவும் மாறும் என்று பாடியிருந்தார். அவரது இறுதிநாள் நெருங்கி வருவதைக் கேள்விப்பட்டவுடன் முழு கிராம மக்களும் அவரைச் சுற்றி கூடினார்கள். அவர்களிடம் நீங்கள் அனைவரும் குடும்ப வாழ்க்கையின் பொறுப்புகளைச் சுமந்தாலும் பாண்டுரங்கனை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். பந்தர்புரம் உங்களுக்கு மிக அருகில் உள்ளது. அது இந்த பூமியில் உள்ள வைகுண்டம். அங்கு சென்று இறைவனை வணங்குங்கள். மரண நேரத்தில் இறைவனின் நாமம் மட்டுமே உங்களைக் காப்பாற்றும் என்பது எனது அனுபவம். நான் உங்கள் முன் சாஷ்டாங்கமாக விழுந்து இறைவனின் நாமத்தை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்று கண்ணீருடன் மன்றாடுகிறேன். எப்போதும் பகவான் நாராயணனின் கீர்த்தனை மற்றும் பஜனை செய்யுங்கள். உங்கள் பொருள் நலனைப் பற்றி கவலைப்படாதீர்கள். இறைவன் அதைப் பார்த்துக் கொள்வார். இவை அனைத்தும் நிலையற்றவை. இறைவனின் நாமம் நித்தியமானது. ராமகிருஷ்ண ஹரியின் ஜபத்தைச் செய்யுங்கள் என்ற போதனையைக் கொடுத்தார். துக்கராமை அழைத்துச் செல்ல விஷ்ணு பகவான் ரதத்தை அனுப்பினார். இந்த ரதத்தில் துக்காராமை வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இடம் இப்போது வைகுந்தநாதன் ஸ்தானக் கோயில் உள்ளது.

ஞானம்

கௌரவர்களின் தலைநகராக இருந்த அஸ்தினாபுரம் நகருக்கு கிருஷ்ணர் வந்தார். பலர் தங்களுடைய வீட்டிற்கு அழைத்தும் அங்கெல்லாம் போகாமல் விதுரனின் வீட்டுக்குச் சென்றார் கிருஷ்ணர். தன்னுடைய வீட்டிற்கெல்லாம் கிருஷ்ணர் வரமாட்டார் என்றிருந்த விதுரரின் வீட்டிற்கு திடீரென்று வந்த கிருஷ்ணரைப் பார்த்ததும் நிலை தடுமாறினார் விதுரர். இங்கும் அங்குமாக ஓடி என்ன செய்வது என்று தெரியாமல் பரபரத்தார். கிருஷ்ணரை இப்படியா நிற்க வைத்து உபசரிப்பது? என்று எண்ணிய விதுரர் ஓடிப் போய் ஓர் ஆசனத்தை எடுத்து வந்து அவருக்கு அருகில் வைத்து விட்டு அந்த ஆசனத்தை நன்றாக தடவித் தடவிப் பார்த்துக் கொண்டே அதில் அமரச் சொன்னார். கிருஷ்ணர் சிரித்தபடியே நின்றார். ஏதேனும் சாப்பிடக் கொடுக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே அடுப்படிக்கு ஓடினார். கண்ணில் பழங்கள் தென்பட்டன. அப்படியே அள்ளியெடுத்துக் கொண்டு கிருஷ்ணரிடம் வந்து கிருஷ்ணா இப்போது என்னிடம் இருப்பது இவை மட்டுமே மறுக்காமல் சாப்பிடுவாயாக என்று கேட்டுக் கொண்டார்.

விதுரர் படபடப்போடேயே காணப்பட்டார். அவரது சிந்தனையில் தான் துரியோதனனின் உப்பைச் சாப்பிடுகிறோம். அவன்தான் தனக்குச் சோறு போடுகிறான். பாண்டவர்களுக்காக கிருஷ்ணர் தூது வந்தபோது மிகப்பெரிய பள்ளம் தோண்டி அதன் மேல் கம்பளம் விரித்து அந்தக் கம்பளத்தின் மீது ஆசனத்தை வைத்திருந்தான் துரியோதனன். கிருஷ்ணர் அந்த ஆசனத்தில் அமர்ந்ததும் கீழே விழுவார். அவரை சிறை பிடிக்கலாம் என்று திட்டம் வைத்திருந்தான் துரியோதனன். இப்படிப்பட்ட கீழ்மையான எண்ண் கொண்ட துரியோதனனின் சாப்பாட்டில் வளர்ந்த நாம் அவனைப் போலவே சிந்தனை கொண்டு சுயநினைவின்றி கிருஷ்ணரை அவமானப்படுத்தும் வகையில் ஏதேனும் பள்ளம் தோண்டி வைத்திருக்கிறோமோ அந்த ஆசனத்தில் ஊசியைச் செருகி வைத்து இம்சிக்கச் செய்திருக்கிறோமோ துரியோதனின் சாப்பாட்டை சாப்பிட்ட எனக்கு அவன் புத்தியானது நம்மையும் அறியாமல் வந்திருக்குமோ எனப் பதைபதைத்தார் விதுரர். விதுரருக்கு எவ்வளவு பெரிய ஞானம். இந்த ஞானியின் கலக்கத்தைக் கண்டு ரசித்த கிருஷ்ணர் விதுரா என்னைக் கண்டதும் நீ படுகின்ற உன் கலக்கமே என் பசியை ஆற்றிவிட்டது என்றார்.

இறைவனுக்காக பூஜை செயல்களில் ஈடுபடும் போது தன்னையும் அறியாமல் தவறு ஏதேனும் செய்து விடுவோமோ நடந்து விடுமோ என்று எண்ணத்தில் இறைவனைத் தவிர வேறு சிந்தனையில்லமால் சிரத்தையுடன் இருக்க வேண்டும். இப்படி இருப்பவர்களே ஞானியாகத் திகழ்கிறார்கள். இறைவன் இவர்களுக்கே முதன்மையில் அருள்கிறார் அரவணைக்கிறார் ஆட்கொள்கிறார் என மகாபாரதத்தில் அற்புதமாக விளக்குகிறார் வேதவியாசர்.